Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

26.1.12

மருளாடியின் மேலிறங்கியவர்கள்

கருப்பு நிலாக் கதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிற சிறுகதை.மீள்பதிவு.

முக்குலாந்தக்கல்லில் இருந்து சாத்தூர் பேருந்து நிலையத்துக்கு கடைசிப் பஸ்ஸைப்பிடிப்பது போல ஒரு அவசர நடை நடந்துவிட்டு, அதே வேகத்தில் திரும்பி முக்குலாந்தக்கல்லுக்கு வரும் அவளைக் கவனிக்க யாருக்கும் நேரமில்லை. முகத்தில் பறவி இருக்கும் மஞ்சள், நெற்றியில் பதிந்திருக்கும் செந்துருக்கப் பொட்டுக்கும்  சம்பந்த மில்லாத கிராப் தலை.  நாலு அடி ஐந்தங்குள உயரம். அவளின் வயது மிஞ்சி மிஞ்சிப்போனால் இருபத்து  எட்டிருக் கலாம். ஆனால் நூறு வயது வாழ்ந்து கடந்து விட்ட கால முதிர்ச்சி அவளின் முகத்தில்  ஒட்டிக் கொண்டிருக்கிறது. சுற்றியிருக்கும் உலகத்தை அலட்சியப் படுத்துகிற அந்த பார்வையில் ஆயிரம் ஞானிகளின்  ஒளி குடிகொண்டிருக்கிறது.கடந்துபோன ஒரு நவீன வாகனத்துக்கார முதலாளியின் பார்வை இவள் பக்கம் திரும்பவில்லை. அது குறித்து அவளுக்குக் கவலை இல்லை. அந்த முதலாளி மாதிரியே நகரத்துப் பிரதானச் சாலையில் பல ஆண்கள் அவளைக் கடந்து போகிறார்கள். வெயில் சுள்ளென்று சுட்டெரிக்கிறது. செருப்பிலாத காலில் சாலையோரத்து மணல் ஒட்டிச்சிதற்கிறது. எல்லோர் பாதங்களையும் பதற வைக்கிற அந்தச்சூடு அவளை ஒன்றும் செய்யத்திராணியற்றுப் போனது.


காவல் நிலைய வாசலில் உட்கார்ந்திருந்த செவத்த வள்ளி இவளைக்கூப்பிட்டு ரெண்டு வெத்திலையையும் உடைத்த பாதி பான்பராக்கும் சேர்த்துக்கொடுக்கிறாள்.

'' சீ கருமம், இதப்போயி '' என்று தட்டி விடுகிறாள்.
'' ம்ம்ம்ம்.. ரெம்பத்தா சுத்தக்காரி மாதிரி சிலுப்பிகிராத ''
'' ஏ... சொன்னாலுஞ் சொல்லாட்டாலு நா சுத்தக்காரி தா அந்த ஆத்தாவ செமக்கமில்ல ''
'' ஆமா இடிச்சிப்போட்ட பழய டேசன் கக்கூசக்கேட்டாச் சொல்லும் '' 
'' சீ நாத்தம் பிடிச்சவா ஓண்ட மனுசி பேசுவாளா ''
 
சுருக்கென்ற கோபத்தில் அங்கிருந்து நடையைக் கட்டினாள். ப்ரியா ஸ்டுடியோவுக்குள் நுழையும் போது யாரோ கேலி சொல்வது கேட்டும் கேட்காமலும் நுழைந்தாள். உள்ளே மாடன்,  அலங்காரிக்கப்பட்ட சின்னக்குழந்தையை மரப்பெஞ்சில் உட்கார வைத்து படம் பிடிக்க குனிந்து, குனிந்து வசம் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போதும் கூட அங்கிருக்கிற யாரும் அவளைக் கவனிக்கவில்லை. ஏதாவது பேச்சுக் கொடுத்தால் உட்கார்ந்துவிடும் அபாயம் உணர்ந்த, கம்ப்யூட்டர் முத்து, தீபா யாருமே அவளோடு பேசவில்லை எல்லோர் முகத்தையும்  பார்த்து விட்டு திரும்பவும் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். அந்தக்குறுகிய வாசலின் வழியே ஒருவாரத்திற்கு முன்னாள் படம் எடுத்த எஞ்சினியரிங் மாணவன் வர யோசித்து நின்றதைக் கவனித்த தீபா ''சச்சி கொஞ்சம் தள்ளிக்கோ'' சொல்லவும். அய்யய்யோ பிள்ளாண்டன் நிக்குதா உள்ளபோங்க சாமி என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தாள். அந்தக் கம்ப்யூட்டர் மாணவனும் எஞ்சினியரைவிடப் பெரிய பட்டம் கிடைத்த  சந்தோசத்தோடு சாமிப் பட்டத்தை ஏற்றுக்கொண்டு உள்ளே போனான்.

இது ஒரு அன்றாட  வாடிக்கை தான் என்றாலும் அந்த புகைப்பட நிலையத்தோடு சம்பந்தமில்லாத ஒரு பெண்  அங்கு வந்துபோகிற எல்லோரோடும் மிக இயல்பாகப் பேசுகிற லாவகம் கற்றுக் கொண்டதும், வியப்பானவை. இன்னும் சில சாவகாசமான பொழுதுகளில் புகைப்பட நிலையத்தின் நடுக்கூடத்தில் செந்தில், மாடன், சூரியா, இன்னும்சில இளவட்டங்கள் உட்கார்ந்திருக்க நடுவில் உட்கார்ந்து கொண்டு வலமை பேசிக்கொண்டிருப்பாள் சச்சி. அந்த சச்சி யார் என்கிற ஒரு கேள்வி புதிதாய் நுழைகிற எல்லோருக்குள்ளும் எழுந்து அடங்கும்.


சரஸ்வதி என்கிற சச்சி.


மேட்டமலையில் ஒரு ஒதுக்குப்புறத்தில் பத்து வீடுகளுக்கும் குறைவாக இருந்தது அந்தக் குடிசைகள். அதில் ஒரு குடிசையில்  நாள், பொழுது, நட்சத்திர தேதிகளுக்குள்ளும் பஞ்சாயத்து ஜனனப்பதிவேடுகளிலும் பிடிபடாமலும் பதிவாகாமலும் பிறந்த சரசுவுக்கு ஒரு குடும்பம் இருந்தது. ரெண்டு வேளைச்சோறு  சாப்பிடு வதற்கு ஊரின் ஒட்டு மொத்த அழுக்கைச் சரிசெய்ய வேண்டும்.  வெயிலோடும், புழுதியோடும், பசியோடும் கடந்துபோன பால்யப்பருவத்து பசுமை நினைவுகளில் மிக அறிதாக விளையாட்டும், மழையும், சில இனிப்பு களும் தவிர வேறு ஏதும் பிரமாதமாக இல்லை.  மானம் பார்த்த இந்த கந்தக பூமியில் விவசாயம் காய்ந்து போனது.  மத்தியில் ஆட்சி செய்த  ஜனதா அரசு தீப்பெட்டிக்கான உற்பத்தி வரியைக்குறைத்து, குடிசைத் தொழிலாக அறிவித்தது அந்த எழுபதுகளில்தான் பருத்தி, மிளகாய் விளைந்த கிராமங்களில் தீப்பெட்டிகள் முளைக்கத் தொடங்கியது. விவசாயம் செய்த பண்ணையார்கள் தீப்பெட்டி முதலாளிகளானார்கள். அபோது எல்லா பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பத்து குழந்தைகளைப் போலவே இலவசக்கல்வி, இலவச உணவு எலாவற்றையும் தாண்டிய வறுமையை எதிர்கொள்ள உழைக்கப்போகிறாள் சச்சி.


கட்டை அடுக்குவதற்கும், தீப்பெட்டி ஒட்டுவதற்கும் கச்சாப்பொருள்களை வீடுகளில் கொண்டுவந்து  கொடுத்து விட்டு, அதைத்தயாரித்து முடித்த பின்னால் எடுத்துக் கொள்வதற்குமான ஏற்பாடுகள் இருந்தது. ஆனால் அப்படி உட்கார்ந்து வேலை பார்க்கக்கூட இடவசதியில்லாத வீடுகளில் உள்ள பெண்களும், பெண் குழந்தைகளும் சிறிய, நடுத்தர, மற்றும் பெரிய தீபெட்டி ஆலைகளுக்கு உழைக்கப்போவார்கள். காமராஜர் மாவட்டத்து பெண்களின் சந்தோசம் துக்கம் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் கொட்டிக் குவிக்கப்பட்ட இடங்களாக தீப்பெட்டி ஆபீசுகள் மாறிக்கொண்டிருந்த காலம் அது.

ஒரே ஒரு ஆரம்பக் கல்வி நிலையம் இருக்கிற ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆபீசுகள் இருக்கிற வினோதம் உண்டு. புலர்ந்தும் புலராத இளங்காலையில் எழுந்து முகம் துடைத்து தீப்பெட்டி வாசத்துக்குள் நுழையும் அவர்கள் பொழுது சாயும் போதுதான் வீடு வரமுடியும். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை. அன்றுதான் ஓடுகிறகிற பம்ப்செட் தேடி அலைவார்கள். மொத்தமிருக்கிற ரெண்டு அல்லது மூன்று ஜோடி உடைகளை துவைப்பார்கள், குளிப்பார்கள். பாதி கந்தக வாசமும் பாதி சோப்பு வாசமுமாக திங்கள் கிழமை வந்துவிடும். வீடு என்பது தூங்குவதற்கும் உணவு தயாரிப்பதற்குமான இடம் மட்டும் தான். மற்றபடி கனவு, காதல் துக்கம், சந்தோசம், சண்டை எல்லாவற்றையும் உள்ளடக்கிய உலகமாக தீப்பெட்டி ஆபீஸ் மட்டும் தான் இருக்கும்.


ரெண்டு பெண்களின் துணையோடு மத்தியான வேலைகளில் ஒருத்தி வீடு திரும்பினால், ஒரு கந்தகப்பூ மலர்ந்து விட்டது என்பது கோனார் நோட்ஸ் இல்லாமல் புரிகிற விசயமாகும். இதுகூட புரியாத சச்சிக்கு ராக் ரூம் இருட்டே இரவாகியது. பொதுவாக ஊர் சுத்தம் செய்யும் குடும்பத்து குழந்தைகளும் சுத்தம்செய்கிற வேலைக்கு நிர்ப்பந்திக்கப் படுவார்கள்.  எல்லோரும் போன பிறகு ''ஏத்தா சச்சி நீ இரு'' என்று  முதலாளி அவளை இருக்கச் சொன்னதற்கு அதுதான் காரணம் என்று நினைத்தாள். போகும் போது அலாதியாக கொஞ்சம்பணம் கிடைக்கலாம் என்னும் எதிர்பார்ப்பிமேல் மண் விழுந்தது. ராக் ரூமில் அந்த கணத்த எண்பது கிலோ உருவம் அவள் மேல் கிடந்தபோது அது காமம் என்று அறியாத பருவத்திலிருந்தாள்.

எதிர்க்க வலுவற்ற சமூகத்தில் பிறந்த அவளுக்கு அந்தக்கொடுமை கூட முதலாளிகளுக்கு செய்கிற ஒரு ஊழியமென்று  நினைத்திருந்தாள். அது போலவே பல முறை அது நடந்தது.  சாக்கடை சுமக்கிற, மலம் அள்ளுகிற, பொறுமையோடு சகித்துக்கொண்டாள். அதன் பின்னாள் முதலாளி மிளகாய்த் தோட்டத்துக்கு வேலைக்கு வரச்சொன்னார் அங்கேயும் கூட அவளுக்காக காமவெறி காத்துக்கிடந்தது. கால மாற்றமும் உடல் மாற்றமும் அவளுக்கும் கூட இச்சைகளை உண்டுபண்ணு கிற வேலையைக்காட்டியது. இப்போது முதலாளி எப்போது கூப்பிடுவார் என்கிற எண்ணம் உருவானது. அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று கந்தக வாசமும், கழிவு, குப்பை வாசமும் சூழ வேலை பார்க்கிற நிர்ப்பந்தம்அவளுக் கில்லாமல் போனது. இரண்டு அந்த வேலைகள் இல்லாத போதும் கூட அவளுக்குத் தேவையான  எல்லாம் கிடைத்தது.  மகள் கெட்டுப்போன சேதியைக் கடைசியில் தெரிந்துகொள்கிறவர்கள் பெற்றோர்கள் தான் என்பது கிராமத்து சொலவடை. கடைசியாகத் தெரிந்த போது அவள் கருவுற்றிருந்தாள்.

அடுத்த சாதிக்காரன் கிண்டல் பண்ணினால் கூட போட்டுத் தள்ளுகிற சமூகக் கட்டமைப்புள்ள இந்த பூமியில் ஒரு பெரிய பாலியல் பலாத்காரம் அதுவும் அறியாத வயசில் நடந்திருக்கிறது அதுகுறித்துக் கோபப்பட வேண்டிய குடும்பம், மாற்று யோசனை மட்டுமே யோசிக்க முடிந்தது. கருவைக்கலைக்க சொந்தக்காரர்கள் ஊருக்கு அனுப்பினார்கள்.  அங்கேயும் ஆண்டைகளும், ஆதிக்கமும் குறைவில்லாமல் இருந்தது. எனவே மிகக்குறுகிய காலத்தில் அவள் அங்கேயும் ஆதிக்க சாதிப்பையன்களுக்கும் பெரியவர்களுக்கும் பொழுது போக்க கிடைத்த சாவடிபோல், பாஞ்சாம்புலி போலாகிப்போனாள். மீண்டும் பழைய ஊருக்கு வந்த போது இருந்த கொஞ்ச நஞ்ச மானமாவது மிஞ்சட்டும் என்று பெற்றோர்களே பிராது கொடுத்து விபச்சார வழக்கில் சிறைக்கு அணுப்பினார்கள். சட்டி சுடுகிறது என்று தப்பித்துக் குதித்து அடுப்பில் விழுந்த கதையாகியது சச்சியின் பொழப்பு. சிறைவாசம் எழுந்துவரமுடியாத புதைகுழியானது. அங்கிருந்து வெளி வரும்போது ஒரு புடம் போட்ட தங்கமாக வருவாள், மறு வாழ்வு வாழ வைக்கலாம் என்ற இன்னொரு மூட நம்பிக்கையும் தகர்ந்து பெற்றோருக்கு. மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பினாள்.


1985 வருசம் முதல் 1990 வரை ஒரு ஐந்தாண்டுகள் நகரத்தின் பிரபலங்களில் ஒன்றாகிப்போனாள்.அவளைப் பற்றியதான தகவல்கள் எந்த சுவரொட்டியிலும், எந்த ஊடகத்திலும் விளம்பரப் படுத்தப் படவில்லை  எல்லோ ருக்கும் அவளைப்பற்றித் தெரிந்திருந்தது. அவளைக்கடந்து போகிற யாரும் எளிதில் தவிர்க்க முடியாத வசீகர தோற்றம், இருபத்து நான்கு மணிநேரமும் வாடாத வரம் வாங்கியது போலவே அவள் சடையேறும்  மல்லி கைப்பூ, என வளைய வளைய வந்தாள். அந்தக்காலத்தில்தான்  எம்ஜியார் இறந்துபோனார். அப்போது மூன்று நாட்கள் தமிழகத்து நகரங்கள் சகஜ வாழ்கை இழந்து வெறிச்சோடிக் கிடந்தன. ஜனங்கள் போக்கிடமில்லாமல் வீடுகளுக்குள் அடைந்துகிடந்தார்கள். கடைகள்  மூடிக்கிடந்தன. மூடிய கடைகளின் முதலாளி நான்கு பேர் ஒரு காரில் அவளை எங்கெங்கோ கூட்டிக்கொண்டு போனார்கள். அவர்களில் மூன்றுபேர் நல்ல குடிகாரர்கள்  அப்படி யான நேரங்களில் அவளும் குடிப்பது தவிர்க்க இயலாததாகிவிடும்.


குடிப்பழக்கம் ஒரு புது அனுபவமாகவும், தாங்கும் சக்திக்கான மாற்று மருந்தாகவும் அவளுக்கு அறிமுகமாகியது. அதை அறிமுகப்படுத்திய மாரிக்கிழவி சரக்குச் சாப்பிடுவது பார்க்கப் பார்க்கப் பொறாமையாக இருக்கும். சும்மா பச்சத்தண்ணி குடிக்கிற மாதிரிக்குடித்துவிட்டு ஒரு செருமல் கூட இல்லாமல் இயல்பாகிவிடுவாள். குடித்த சரக்கின் வாசனை தவிர குடித்ததற்க்கான் எந்த தடயமும் அவளிடம் இருக்காது. முதலில் கொமட்டிக்கொண்டு வந்தாலும் பின்னர் கொஞ்சநாளில் சச்சியும் பழகிக்கொண்டாள். அப்போது கேட்ட சரக்கு கேட்ட துணிமணி,வாரி யிறைக்கிற பித்துப்பிடித்த பணக்காரர்களாக அவள் பின்னாலே அலைந்தார்கள். ஆனால்  யாரிடமும் பணம் கேட்டு வாங்க வேண்டும் என்கிற யோசனை அப்போது அவளுக்குத் தோன்றவேயில்லை. இந்த உடல், அதன் வசீகரம், அதன் மேலுள்ள ஈர்ப்பு எல்லாம் ஒரு காலத்தில் அழிந்துபோகும். அப்போது வயிறும் வாழ்கையும்  வழி மறிக்குமே என்கிற தூரத்து சிந்தனை இல்லாதவளாக காலம் கடத்தினாள்.

நகரத்து பிரமுகர்களும் அவர்களது மகன்களும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் அவளைத் தேடி வந்துபோகிற நாட்களில்  அவளுக்கு கர்வம் கலந்த புன்னகை குடிகொண்டிருக்கும். அதை மாரிக்கிழவியிடம் சொல்லிச் சிரித்திருப்பாள். தன்னைக்கடந்து போகிற யாரும் உற்றுப்பார்த்தாலோ அசடு வழிந்தாலோ ''இங்கஎன்னதொறந்தா கெடக்கு நாரக்கருவாட்ட பூன பாக்குற மாறி பாக்கான்'' என்று எடுத்தெறிந்து பேசுவாள். பார்த்தவன் தூரத்தில் போனதும் கெக்கலிட்டுச்சிரிப்பாள். அப்போது இந்த உலகம் தன் காலுக்கு கீழே கிடக்கும் ஆங்காரத் தோடு அலை வாள். குண்டு மஞ்சள் அறைத்துக் குளிக்கிற போதும் வாசனைச்சோப்புப் போடுக் குளிக்கிறபோதும் அவளே ரசிக்கிற இளமை மீது இன்னும் கூடுதல் கர்வம் மேலோங்கும்.தெருவுக்குள் யாரேனும் நடத்தை பற்றிப்பேசினால் காளியாட்டம் ஆடி எதிராளியை நிலைகுலையச் செய்வாள். அந்தச் சொல் மீண்டும் ஒரு முறை தன்னை நோக்கி வராதபடி வேலி போட்டுக்கொள்கிற உத்தி அது.

ஒரு நாள் திருச்செந்தூர் முருகன் கோவில் காட்டேஜுக்கு கூட்டிக்கொண்டு போயிருந்தார்கள். மூன்று நான்கு பிரமுகர்களோடு இரவு குடியும் கூத்துமாகக் கழிந்தது. விடிகிற நேரம் மிகையான போதையில் தூங்கிப்போய் விட்டாள் கண்விழித்தபோது மீண்டும் இருட்டியிருந்தது. எவ்வளவு குடித்தோம் யார் யார் கூட இருந்தார்கள் என்கிற எதுவும் மனசில் இல்லை. ஊரின் மிகப்பெரிய புள்ளி ஒருவரின் மூஞ்சியில் காரித்துப்பியது மட்டும் நினைவிலிருந்தது. உடல் முழுக்க அடிபட்ட காயமும், நகப்பிராண்டல்களுமாக வலித்தது. அதோடு தலை வலியும், பசியும் கலந்த கிரக்கத்தில் நீண்ட நேரம் காத்திருந்தாள். உடன்  வந்த யாரும் இல்லை. முதல் நாள் இரவோடு இரவாக அவர்கள் ஊர்போய்ச் சேர்ந்துவிட்டார்கள். நெடுநேரம் அழுகையும் வேதனையுமாக உட்கார்ந் திருந்தாள். கைபிடித்தபடியே நடந்து வரும் அய்யாவும், மடிக்குள் வைத்து பேன்பார்க்கிற அம்மாவும், காரணமில் லாமல்  நினைவில் வந்து மீண்டும் மீண்டும் கண்ணீர் வந்தது.  அங்கிருந்து பேருந்து நிறுத்தம் வந்து சில பேரிடம் சொல்லிப் பணம் கேட்டாள் பலனில்லை. பிறகு ஒரு குதிரை வண்டிக்காரர் எந்தப்பிரதி உபகாரமும் இல்லாமல் அவளுக்கு சாப்பாடும், பஸ் செலவுக்குப்பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார். திருச்செந்தூரிலிருந்து திரும்பி வருகிற போது இவ்வளவு நாள் தேக்கி வைத்த வீராப்பும் வைராக்கியமும் உடைந்தது. அப்போது ஒரு ஆண் துணை தேவை என்று உணர்ந்தாள். அதுவும் தாட்டிக்கமான ஆண் துணை.


அந்தக் காலங்களில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த அம்மாசி தான் அவளுக்கு துணையாளாகவந்தான். முதலாளி மார்கள் கூப்பிடும் இடத்துக்கு கூட்டிக்கொண்டு போவதற்கும். திரும்பக்கூப்பிட்டு வருவதற்கும் அவனுக்கு சரக்கும் சம்பளமும் உண்டு. அவள் வைக்காத விலை, அவள் கேட்காத பணம், இரண்டுமே மறை முகமாக அவனுக்குச் சாதகமாகியது. சச்சிக்கோ அது குறித்து  ஏதும் தெரியாது. ஆனால்  முதல் முதலில் அவளுக்காக ஒரு ஆண் மெனக்கிடுவதை, சாப்பாடு வாங்கித்தருவதை, டிக்கட் போட்டு கூட்டிப்போவதை. பயணங் களில் அருகிருந்து, தூங்கும் நேரங்களில் தோள் தருவதை ஒரு வித்தியாசமாக உணர்ந்தாள்.  காலம் கடந்து , காமம் கடந்து ஒரு சிநேகம் முளைக்கத் தொடங்கியது அப்போது தான் எல்லோருக்கும் வருகிற குடும்ப ஆசை அவளுக்கும் வந்து வந்து போனது. ஆனால் அம்மாசிக்கோ கல்யாணம் ஆகி வயசுக்கு வருகிற பருவத்தில் பெண்ணிருந்தது.

இந்தக்காலத்தில் பல முறை கருவேந்திக்கொண்டாள்,  அதைக்கலைக்க நாட்டு மருத்துவச்சிகளைத் தேடிப் போனாள். அப்போது மாரிக்கிழவிதான் அவளோடு கூட இருப்பாள்.எப்போதுமே துணையாக இருந்தவள் காசில்லாத நேரங்களில் ஒரு டீ வாங்கி பகிர்ந்து சாப்பிடுகிற ஒரே ஜீவன் அவளுக்கு மாரிக்கிழவிதான்.சில நேரம்  அம்மாசி வந்து செலவுக்கு பணம் தந்துவிட்டுப் போவான். அதிக கருக்கலைப்பினால் அதிக உதிரம் விரயமாகியது. அதிக உதிர விரயத்தால்  உடலில் பெலமில்லாமல் போனது. சாப்படும் சாராயமும், அம்மாசியின் தயவால் கிடைத்தது. ஒரு குற்ற வழக்கில் மூன்றுமாதம் சிறைக்குப்போன அம்மாசியில்லாத அந்த நாட்களில் தொழிலும் மந்தப்பட்டுப்போனது. அறைவயிற்றுக்கஞ்சிக்கு கூட அவதிப்பட்டாள். அப்போது நகரில் இவளுக்கு போட்டியாக இன்னும் சில பேர் அறிமுகமானர்கள்.

வேற்று ஊர்களில் இருந்து தருவிக்கப்பட்ட அவர்கள் தொழில் நிமித்தமாக இரவு வந்து  தங்கி பகல் திரும்புகிறவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு தனது போட்டிக்காரியைப் பார்க்க விடிய விடிய கிருஷ்ணன் கோயில் பஸ் நிறுத்தத்தில் காத்துக்கிடந்தாள். வாடிக்கையாகச் சவாரி செய்கிற ஆட்டோ  ஓட்டுநரிடம் அவள் எப்படியிருப்பாள் என்று கேட்டாள். நல்ல ஒசரம் நல்ல நெறம் என்று சொன்னதும் வதங்கிப்போனாள். மாரிக்கிழவியிடம் சொல்லிச் சொல்லி புளம்பிக்கொண்டேயிருந்தாள்.   வயித்துப்பாட்டுக்கு வேறு எதாவது செய்யென்று சொல்லிவிட்டு மாரிக்கிழவியும் செத்துப்போனாள். ''ஆமா அப்பனு ஆத்தாளு ரெண்டு தேட்டரு, ஒரு சாராயக்கடை, நாலு தீப்பெட்டியாபீசு உட்டுட்டு செத்துப்போனாகளாக்கு இந்தத்தொழில விட்டுட்டு வேற தொழில் பாக்க ?  திருப்பியு அந்தப் பீயள்ற பொழப்புத்தான  த்தூதூ....'' என்று காரித்துப்பி விட்டு விபச்சாரத்துக்குக் கிளம்பினாள்.

மிக உறுதியாக இனி சம்பாதிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினாள். ஆனால் அவளிடம் இருந்த ஒரே மூலதனமான அந்த இளமை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு கடந்து போய்க்கொண்டிருந்தது.  கிராக்கியில்லாத எந்தப்பொருளும் லாபம் சம்பாதிக்காது என்பதே வியாபார விதி. அந்த விதியின் பிரகாரம் அவள் மீண்டும் வயிற்றுப்பிழைப்புக்காக மட்டுமே சம்பாதிக்க முடிந்தது.  சீனி நாய்க்கர் புரோட்டாக்கடையில் காசைக்காட்டித்தான் சாப்பிட முடிந்தது. சில நாட்கள் அதுவும் இல்லாது பட்டினியாய்க் கழிந்தது. அம்மாசி வரும் வரை நாட்கள் நகருவது வேலிப்புதருக்குள் நடக்கிற மாதிரியே இருந்தது. அம்மாசி வந்தபிறகு மூன்று நாள் வீட்டில் சண்டை நாடந்ததாகவும் அங்கு அவனை வீட்டுக்குள் யாரும் சேர்க்க வில்லையென்றும்  சொல்லி  இவளிடம் வந்தான். ரெண்டு பேரும் சென்னைக்கு ரயிலேறிப்போனார்கள் அங்கு சரக்கு செல்லுபடியாகாமல், திரும்பி வந்து திருச்சியில் ஒரு புரோக்கர் மூலம் குறி சொல்லப் போவதாக விசா எடுத்து சிங்கப்பூர் அணுப்பி வைக்கப்பட்டாள்.

மூன்று மாதம் கழித்து கைநிறையப் பணத்தோடும் கொஞ்சம் உடல் தேறி மினு மினுப்பாகத் திரும்பி வந்தாள். சாத்தூரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு வாடகை வீடெடுத்து அங்கேயே அம்மாசியும் அவளும் வாழ்ந்தார்கள். பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட சேதியைச்சொல்லும் போது தான் அம்மாசி தன்னை அம்மனமாகக் காட்டினான்.  தனக்கு பிள்ளை பெறுவதற்கும் ரேசன் கார்டில் பேர் போடவும் ஊரில் ஏற்கனவே ஒரு குடும்பம் இருக்கிறது, நீ அதற்கு கிடையாது என்று சொல்லி விட்டான். அதற்குப்பிறகு  வாரிசு என்கிற வார்த்தை அவளை நிறையச் சிந்திக்க வைத்தது. ஆண்கள் சேத்தில் மிதித்து ஆத்தில் கால் கழுவுகிறவர்கள். அப்போதும் கூட மிதி படுகிற கேவலப் பொருளாகப் பெண்ணே இருக்கிறாள். இன்னுமொரு சேறு வேண்டாம் எனத்தீர்மானித்து ஒரு நாள் நடு இரவில் காட்டு வழியே இலக்கில்லாமல் நடந்துகொண்டிருந்தாள்  நடக்க எசக்கில்லாமல் கால்வலித்து இருக்கங்குடி மரியம்மாளே நீயே கதி என்று போய் கோயிலில் படுத்துவிட்டாள். 

மாசக்கணக்கில் அங்கேயே இருந்து கோயில் சோறு சாப்பிட்டு காலம் கழித்தாள். வெள்ளி செவ்வாய் விரத மிருந்து குறிசொல்ல ஆரம்பித்து விட்டாள். ஜனங்களின் முகங்களில் தெரிகிற சஞ்சலம் பார்த்து கொஞ்சம் போதாத காலம் என்றும், சந்தோசத்தைப்பார்த்து ஏறுகாலம் என்றும் அவளுக்குத் தெரிந்த வானசாஸ்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது தான் மனிதர்களின் முகத்தையும் கையையும் பார்க்கிறாள். இப்பொழுது தான் குடும்பம், உறவு விரிசல் பணம், வறுமை, ஆதிக்கம், சாதி எல்லாம் மெல்ல மெல்ல அறிமுகமாகிறது. அவளைக்கடந்து போகிற பத்து வயசுக்குழந்தை களைக் கூப்பிட்டுப் பேசவேண்டும் போல் சில நேரங்களில் ஆசை வருகிறது. பழைய இரவுகளில் பழக்கமான அந்த இளகிய ஆண் முகங்கள், இப்போதைய பகலில் மிக இறுக்கமாகத் தெரிகிறது. கோபம் தலைக்கேறி வாயில் கெட்டவார்த்தைகள் வருகிறது. ஆத்தா மேல் பாரத்தைப் போட்டுவிட்டு அடங்கிப்போகிறாள். முதலில் கொஞ்ச நாளாய்த் தூசன வார்த்தைகள் இல்லாத மொழி பழகு வதற்கு நிறையச் சங்கடப்பட்டாள். நெற்றி நிறைய திருநீரு பூசிக்கொண்ட முதல் நாள் திருநீரு ம்பக் கணமாகத் தெரிந்தது பழைய ரணங்களின் கணங்களை விட மிக மிக லேசாகிப்போனது. இப்போதும் கூட அவலைக்கடந்து போகிறவர்கள் பார்வை மையம் அவள் பக்கம் திரும்பிப் பின் கடந்து போகிறது.

அவளது வீடு எது, அவளது  குடும்பம் எது அவளது கனவு எது, எதிர்காலம் எது என்று தெரியவில்லை. இந்த உலகத்தில் ஜனங்கள் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகிற இடங்கலுக்குள் தன்னை இருத்திக்கொள்ள நடந்து கொண்டிருக்கிறாள். வெள்ளி செவ்வாய்க்கு கருப்பசாமி வந்து அவள் மேலிறங்குவதாகவும், அந்தக்கருப்பசாமி யின் வார்த்தைகள் தான் அவளுக்கு அருள் வாக்கு எனவும் உலகத்துக்குச் சொல்லிக்கொண்டு இருக்கிறாள். தானொரு மானுடப்பிறவியல்ல சாதாரண மனுஷியல்ல என்னும் பிம்பம் ஒன்றை தானே உருவாக்கி அதை அவளே சித்திரமாக்குகிறாள். தொலைந்து போன பால்யகாலம், தொலைந்து போன இளமை, காதல்  எல்லா வற்றுக்கும்  அவள் மேல் விழுந்த பாறாங்கல் போன்ற சமூகம் என்பது அறியாமல் கருப்பசாமி என்னும் கற்பனை யோடு வாழ்கிறாள்.  கடந்த காலம் மேலெழும்பி வரும்போதெல்லாம் பழைய நினைவுகள் மேலெழும்புகிற நேரமெல்லாம் கிளம்பி சாத்தூர் நகரத்துக்கு வருவதும்,  ப்ரியா ஸ்டுடியோவில் உட்கார்ந்து பேசிச்சிரிப்பதும். அப்படியே எழுந்து பேருந்து நிலையத்துக்கு அவசர நடை நடப்பதுவும் அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது.

( நன்றி. புதுவிசை ஏப்- 2007 ) 
சிறுகதை

27.11.11

நாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.

வலைநண்பர்கள் 
அணைவருக்கும் 
நன்றி. 
இது 500 வது பதிவு.


மேகம் கருத்து ஊதக்காத்து வீசியதும் தட்டான்கள் தாளப்பறக்கும். நெய்க் குருவிகள் எங்கிருந்தோ கிளம்பிவந்து ஊர்களுக்குள் குதியாளம் போடும். மாரிக்கிழவன் புருவத்துக்குமேலே கைவைத்து சலாம் போடுகிற பாவனையில் அண்ணாந்துபார்த்து ’ தெக்க எறக்கமா இருக்கு ஓடப்பட்டி காட்டுல ஊத்து, ஊத்துனு ஊத்துது’ என்று புளகாங் கிதப்படுவான்.உடனே கலப்பையில் பிஞ்சு கிடக்கும் கைப்பிடியை சரிசெய்ய அல்லிராஜ் ஆசாரியிடம் ஓடுவான். முத்திருளாயிச் சித்தி அண்டாவைத் தூக்கிவந்து ஊர்மடத்து மொட்டை மாடியின் குழாய்க்கு நேராக வரிசை போடுவாள். அஞ்சப்பெரியன் ஓடிப்போய் காட்டில் கட்டிப் போட்டிருக்கும் எருமையை இழுத்துக் கொண்டுவந்து ஆள் புழங்காத ஓட்டைவீட்டில் கட்டிப் போடுவான். எப்படியும் ஓடப்பட்டியில் பெய்யும் மழை ஊருக்கு வந்துவிடும் என்கிற சந்தோசத்தில் ஊர்பரபரக்கும்.  இப்படித்தான் அந்த முண்டாசுக்கவிஞனும் ஆஹாவென்றெழுந்தது யுகப்புரட்சியென்று  புளகாங்கிதப் பட்டிருப்பானோ?.

கொடியில் காயும் ஒற்றை மாற்று பழுப்புநிற வேட்டியை எடுத்து மடித்து பத்திரப்படுத்தும் சூரிக்கிழவனுக்கு கூரை முகட்டைப் பார்த்து பார்த்து கலக்கம் வரும். மச்சினன் வீட்டில் போய் ரெண்டு சருகத்தாள் ஊரியாச்சாக்கு கடன் கேட்பான்.எதோ ரெண்டேக்கர் கம்மாக்கரை பம்புசெட்டை எழுதிக்கொடுக்கிற மாதிரி நெடுநேரம் யோசிப்பான் மச்சினன் யோசியப்பு. பொண்டாட்டிக்காரி எடுத்துக்கொடுத்த பிறகு தருமப்பிரபு பட்டத்தை தானாகப் புடுங்கிப் போர்த்திக் கொள்வான்.அதில் அவனுக்கொன்றும் லாஞ்சனையில்லை. தாயாருந்தாலும் பிள்ளையாயிருந்தாலும் வாயி வகுறு வேற வேற என்பதே அவனது தாரகமந்திரம். தனக்குப்போகத்தான் தானம் என்கிற சொல்லில்  மறைந் திருக்கும்  நமுட்டுச்சிரிப்புத்தான். ஆனாலும் ஊர்- சமூகம் என்பது பகிர்தலின் ஆதிப்பொதுவிலிருந்தே ஒன்றுசேர்கிறது. அரைக்கிலோ கறியெடுத்துவந்து வதக்கி ஒத்தையாளா திண்ணு ஏப்பம் விடும் ஆசாமிகள் ’எலும்புக் கொழம்பில் தான் சத்து இருக்கு’ என்கிற மாதிரி எப்போதுமே ஒரு மந்திரச்சொல்  வைத்திருப் பார்கள். அல்லது சம்பாதிக்கிற எனக்கே அதை செலவழிக்கிற தகுதியும் திறமையும் இருக்கிறதென்கிற இருமாப்புத் தத்துவம் எழுதிவைத்துக் கொள்வான். அது வெள்ளந்தி தெருக்களில் குறைவாகவும் சமத்தர்களின் பகுதியில் அதிகமாகவும் விளைந்துகிடக்கும்.

கொட்டாரத்தில் குப்பையைக் கிளறிக்கொண்டிருக்கும் சாம்பக்கோழிக்கும் தெரிந்து போகும் இன்னும் கொஞ்சநேரத்தில் மழைவந்துவிடுமென்று. கொக்கொக் என்று குஞ்சுகளைக்கூப்பிட்டுக்கொண்டு தாழ்வாரங்கள் தேடிப்போகும். கூடடையும் கோழிக்குஞ்சுகளைப் பார்த்ததும் முத்தரசி மதினிக்கு மகன் ஞாபகம் வந்து  வீடு வீடாய்த் தேடுவாள். ’நடக்கத் தெரிஞ்சுக்கிட்டு இந்த கருவாப்பய ஒருநிமிஷம் வீடுதங்க மாட்டிக்கானே அவங்க அப்பனமாதிரி’ என்று முனுமுனுத்துக் கொண்டுபோய் தீப்பெட்டிக் கட்டு ஒட்டும் சரோஜாச்சித்தி  வீட்டி லிருந்து  கருவாப்பயமகனே என்று கன்னத்தைக் கடித்துக்கொண்டே  தூக்கிக்கொண்டு வருவாள். சின்னம்மாப் பாட்டி வெளியில் வந்து ’எலே ஏ வேலவரு எங்கே போய்த்தொலஞ்சான் இந்த மூத்த பய’ என்று மகனைத்தேடுவாள். அவள் கூப்பிட்ட சத்தம் தொடர் சத்தங்களால் ஓட்டைமடத்தில் உட்கார்ந்து  திருட்டுத் தனமாய் சிகரெட் குடிக்கிற வேலவருக்கு வந்துசேரும். உருப்பிடியா ஒரு சீரெட்டுக்குடிக்க  விட மாட்டாகளே என்று ராக்கெட் விடுவதை தடுத்தமாதிரி சலித்துக்கொண்டு கிளம்புவான். ’எய்யே எங்கய்யா போன மழ இருளோ மருளோன்னு வருது. களத்துல மொளகாப் பழங் காயுது. மாட்டுக்கு கூளம் உருவிப்போடனும் நீபாட்டுக்குல போயி ஓட்ட மடத்துல ஒங்காந்தா எப்புடி’ என்று  கெஞ்சுவாள். பின்னாடி வந்த  பவுலைப்  பார்த்துக் கொண்டே அந்த ஓட்ட மடத்துல  என்னாதான் இருக்கோ என்று புலம்புவாள்.

'ஏ.... வெளங்காதவனே  ஙொப்பஞ் சீரழிஞ்சது போதாதா நீயுமா இப்பிடி படிக்கிற காலத்துல  பீடிசீரெட்டுக்குடிச்சுக் கிட்டு அலைவ இந்தா இந்தக்கோணிச்சாக்க கொண்டு போ, புதுருக்கு கடக்கிபோன மனுசன் மழையில நனைஞ்சிட்டு வருவான் கொண்டு போய்க்குடு’ என்பாள் பவுலின் அம்மா குந்தாணிப்பாட்டி. கொட்டாரத்தில் வெட்டிப்போட்ட விறகுகளைக் கட்டித் தூக்கிவந்து மழை படாத இடம் பார்த்து திண்ணையில் அடுக்கி வைப்பார் கொண்டச்சுந்தரப்ப மாமன். இத்தினிக்கானு வீட்ல ஆளுகளுக்கு கால்நீட்ட எடமில்ல வெறகக்கொண்டுவந்து அடுக்குறதப்பரு கிறுக்குப்பிடிச்ச ஆளு என்று கிண்டல் பண்ணும் சீதேவி அத்தையை அடிக்க ஓங்கிக்கொண்டே ’அங்க பாரு அடச்சுக்கிட்டு வருது சாய்ங்கால மழ, லேசுக்குள்ள விடாது, வெறகுநனஞ்சு போனா கால நீட்டியா அடுப்பெறிப்ப அறிவுகெட்ட சிறுக்கி’ என்று கடிந்துகொள்வான்.

மழைக்காலம் தொடங்கி விட்டது.இனித் தெருக்களில் கால் நீட்டிப்படுக்க முடியாது.தெருவிளக்கில் உட்கார்ந்து சீட்டு விளையாட்டு நடக்காது. நிலவொளியில் சின்னஞ்சிறுசுகள் கண்டொழிப்பான்  விளையாடாதுகள். வழக்கத்துக்கு முன்னாடியே ஊரடங்கிப் போகும். தீப்பெட்டி யாபீசுகளில் வேலை நின்றுபோகும். மூனுமாசத்துக்கு கையில துட்டு இருக்காது. காலையில் சூடாகக் காப்பிகுடிக்க பாயாசக்கரண்ணனிடம் கடன் சொல்லி வசவுவாங்க வேண்டும். சிலுவாடு சேர்த்துவைத்த காசுகள் வெளியேறி கடைக்குபோகும்.முத்துமாரி மதினி இருக்கங்குடிக்கு முடிஞ்சுவச்ச காணிக்கைத் துட்டை எடுத்து கருவாடு மொளகா வாங்கிக்கொள்வாள். மஞ்சள் துணியிடம்  மன்னிப்புக் கேட்டால் கூட மனதிறங்கி மாரியாத்தா சும்மா வுட்டுருவா.சனங்கள் தீப்பெட்டியாபீசிலிருந்து கிளம்பி வயக்காட்டு வேலைகளுக்கு மாறிக் கொள்ளும். இனிக்கூலியாக தானிய தவசங்கள்தான் கிடைக்கும்  அதைசாப்பாடாக தயார் பண்ண சாயங்கால நேரங்களில் பூமி அதிர அதிர உரல்கள் இடிபடும்.

கனகமணிஅத்தையும் ஞானசுந்தரிச்சித்தியும் காலக்கம்மம்புல்லை உரலில் போட்டு இடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே நேரத்தில்  ரெண்டு பேர் ஜோடிபோட்டு உரலிடிப்பதை பார்க்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.ஒரு அடி விட்டமுள்ள உரல்வாயில் மேல் செருகியிருக்கிற உரப்பட்டியிலும் படாமல் ஒரு உலக்கையை இன்னொன்று உரசி விடாமல் நெஞ்சாங் குழியிலிருந்து ஹ்ர்ர்ம் ஹ்ர்ர்ம் என்று உருமல்குரல் கொடுத்துக்கொண்டு நடக்கிற ஒரு விளையாட்டுப் போட்டி போலத்தெரியும். நேரம் ஆக ஆக வேகமெடுக்கிற உலக்கைகளின் குத்து அந்த பிரதேசத்தயே அதிரச்செய்யும். சற்று நிறுத்தி முகம் முழுக்க ஓடித்திரியும் வியர்வையை சேலைத்தலைப்பை எடுத்து அழுத்தித் துடைத்துக்கொள்ளும் ஞானசுந்தரிச் சித்தியின் முகத்தில் ஆயிரமாயிரம் தேவதைகள் குடியிருப் பார்கள். உள்ளங்கையில் எச்சிலைத் துப்பி இரண்டு கையையும் உரசி ஈரப்படுத்திக்கொண்டு கனமணி அத்தை கேட்கும் ’என்னவிள அவ்வளவுதானா ஓ எசக்கு’ என்றதும் உலக்கையை எடுத்து உயர்த்துவாள். ஏ இருடி இருடி என்று சொல்லிக்கொண்டே குண்டாலச் செம்பெடுத்து கம்பரிசியில் கொஞ்சம் தண்ணீர் ஊத்திவிட்டு தனது தொண்டைக்குழியில் கொஞ்சம் ஊற்றிக்கொள்வாள் கனமணி அத்தை.

இந்த ஞாயித்துக்கெழம கம்மாய்க்கு குளிக்கப்போகனும்டி,நீச்சடிச்சு குழிச்சு எம்பூட்டு நாளாச்சு என்பாள். அந்த எம்பூட்டு என்கிற கால அளவின் ஊடே மாரிமுத்துவின் உருவம் வந்துபோகும்.பதினாலு வயசிருக்கும் தண்ணிக்குள்ள தொட்டுப்பிடிச்சி விளையாண்டார்கள்.அப்போதெல்லாம் கனகமணியை யாராலும் நீச்சலில் பின்தொடர முடியாது. அதே போல மாரிமுத்து இந்தக்கரையில் முங்கி அந்தக்கரையில்  எந்திரிப்பான். இரண்டு நீச்சல் எதிரிகளை அந்த சித்திரை மாசத்து ஞாயிற்றுக்கிழமை மதியம் போட்டிக்கு அழைத்தது. என்னத்தொட்டுரு ஒனக்கு உள்ளாங்கையில சோறுபொங்கி ப்பொட்றேன் என்றாள். அது பழமொழி.உள்ளபடி கனகமணிக்கு வெண்ணி வைக்கக்கூடத்தெரியாது.கூட வந்ததெல்லாம் நண்டும் நசுக்கும்.கரையில் உட்கார்ந்திருந்து துணிகளுக்கு காவலிருந்த ஏஞ்சல்தான் ரெப்ரீ.

பொம்பளப் பிள்ளதானே என்று நினைத்து பின்தொடர்ந்த மாரிமுத்து திணறிப்போனான்.குளிக்கிற படித்துறை யிலிருந்து நேராகப்போனால் அக்கறைவந்துவிடும்.பக்கவாட்டில் போனால் கண்மாய் வளைகிற இடத்தில் நாணல் புதர்களும் வேலிச்செடிகளும் இருக்கும் அதைக்கடந்து போனால் படித்துறையின் பார்வையில் இருந்து மறைந்து போய்விடலாம்.விரட்டிப்போன மாரிமுத்து மிக அருகில் மடேரென்று எழுந்தாள். பதறிப்போன மாரிமுத்து சுதாரிப்பதற்குள் மறுபடி முங்கி காணாமல் போனாள்.ரெண்டு நிமிசம் கழித்து தூரத்தில் மாரிமுத்து மாரிமுத்து என்கிற சத்தம் கேட்டது.வேகமாகப்போனான் கால்ல எதோ சுத்தி இருக்கு சாரப்பாம்பா பாரு என்றாள் முங்கி அவள் காலைப்பிடித்தான் அது எதோ செடியின் தண்டு.அங்கிருந்து ஒரு மேடான பகுதிக்குப் போனார்கள். அந்தப் புதரில் தொங்கிய தூக்கணாங் குருவிகள்,. நாணல் பூக்கள், நாணலுக்குள் சலப் சலப் என்று விளையாடும் குறவை மீன்கள் எல்லாம் ரம்மியமானதாகத்தெரிந்தது அவற்றோடு மாரிமுத்துவும். ஏபிள்ள இதென்ன உதட்டுக்கீழ என்று கம்மாய்த் தண்ணீரின் சிகப்பு படிந்திருந்த நாடியைத் தடவினான். சூடாக இருந்தது.ஏவின நா ஒனக்கு நா சித்திமொற என்றாள்.’சீரெங்கபுரத்து சமியாடிபொன்னையச்சின்னையன் ஒனக்கென்ன மொற’ ’அது எங்கம்மா கூடப்பிறந்த மாமா’.’எனக்குச்சித்தப்பா, இப்பச்சொல்லு’ என்றான்.’இங்கரு தொட்ட நீதாங்கட்டிக் கிறனும்’. இதமொதல்லயே சொல்லவேண்டியதுதான என்று தண்ணீரோடு நெருங்கினான்.

அவன் கண்களில் இருந்து பீச்சியடிக்கிற காந்தத்தில் உடல் முழுக்க சூடு பரவியது. வீட்டில் யாரும் வாய் வச்சு தண்ணீர் குடித்தால் அந்த டம்ளரில் அதுக்கப்புறம் தண்ணீர் குடிக்காத சுத்தக்காரிக்கு.தனக்கெனக் கோரம்பாய், தட்டு,சீப்பு என தனித்து பதவிசு பார்க்கும் மேட்டிமைக்காரிக்கு மாரிமுத்துவின் எச்சில் ருசித்தது.சித்திரைக் கண்மாய் வெளியே வெதுவெதுவெனவும் உள்ளே குளு குளுவெனவும் ரெண்டு குணங்களில் கிடக்கும்.எச்சில் பட்ட ஒரு அரைமணிநேரம் கழிந்து போனது. திரும்பி வரும்போது இவர்களிடம் இருந்த இயல்பு தொலைந்து போயிருந்தது. எஞ்சல் மட்டும் இருந்தாள் ரெண்டுபேர் கண்ணையும் உற்றுப்பார்த்தாள். போய்ட்டு வரட்டா சித்தி தொட்டுட்டேன் நீ பந்தயத்துல தோத்துட்ட என்றபடியே சைக்கிளை எடுத்து விருட்டென்று மறைந்து போனான்.

அதற்க்கப்புறமான நாட்களெல்லாமே ஞாயிற்றுக்கிழமையை குறிவைத்தே கழிந்தது.ஒருவாரம் அவன் ஊரில் இல்லை. அடுத்த வாரம் ஒரே பெரிய பொம்பளைகள் கூட்டம். ஏ ஆம்பளப்பயக தனியாப்போங்கடா என்று அதட்டி விரட்டி விட்டாள் பன்னீரக்கா. ஒரு வெள்ளிகிழமை தீப்பெட்டி ஆபீஸ் சோதனை என்று சொல்லி பிள்ளைகளை விரட்டி விட்டிருந்தார்கள் நேரே கண்மாய்க்குத்தான் ஓடிவந்தாள். நெடுநேரம் மாரிமுத்து வரவில்லை தலை துவட்டி  பட்டன் போடும்போது வந்தான். பேசாமல் விடுவிடுவென்று போய் விட்டாள். குளிப்பதா வேண்டாமா என்கிற சிந்தனையிலேயே உட்கார்ந் திருந்தான்.கரையில் கூழாங்கற்களை எடுத்து களுக் களுக் கெனச் சத்தம் வர போட்டுக்கொண்டிருந்தான். ஒரு சாரப்பாம்பு தலை தூக்கியது சிலீரென்றது உடம்பு.அப்புறம் கனகமணியின் நினைவு வந்தது. பின்னாடி இர்ந்து பெரிய கல் விழுந்தது. திரும்பிப்பார்த்தான் கனகமணி நின்றுகொண்டிருந்தாள். என்ன வென்று கேட்டான் ஏங்கூடப்பேசாத என்றாள். பின்னர் தண்ணீருக்குள் இறங்கினாள் ஏஞ்சல் மேட்டில்போய் உட்கார்ந்து கொண்டாள். இவன் திரும்பிக்கொண்டான்.மேட்டிலிருந்து ஏ மாரிமுத்து ஒங்காளு கம்மல் தண்ணிக்குள்ள விழுந்துருச்சாம் கொஞ்சம் தேடிக்குடு என்றாள்.  ரெண்டுபேரும் தேடினார்கள். அதற்கப்புறம் ரெண்டுமூனு வாரத்தில் தண்ணீர் காலியாகி முட்டளவுக்கு வற்றிப்போனது.நிறமும் மங்கி குளிப்பதற்கு ஏதுவானதில்லாமல் போனது.மீன்பிடிக்க ஆரம்பித்தார்கள்.

கனகமணியை ரெண்டுவாரம் குச்சலுக்குள் உட்காரவைத்தார்கள். ஜன்னல் வழியே பார்த்து பார்த்து  மாரிமுத்துவைக்காணாமல் துவண்டு போனாள்.சடங்குவைத்தார்கள்.மூன்றே மாதத்தில் எலவந்தூருக்கு  வாக்கப்பட்டுப் போய்விட்டாள்.மாரிமுத்து படிப்பை நிறுத்திவிட்டு தாம்பரத்துக்கு கல்லுடைக்கப்போய்விட்டான். நான்கைந்து வருடத்தில் கனகமணி புருசனோடு திரும்ப ஊருக்கே வந்துவிட்டாள்.மாரிமுத்துவும் அக்கா மகளைக்கல்யாணம் முடித்து தாம்பத்திலேயே தங்கிவிட்டான்.

அந்த வழியாக வந்த செல்லமுத்து கம்புகுத்த வரலாமா என்று கேட்டுவிட்டு நமுட்டுச்சிரிப்பு சிரிப்பான்.அதில் ரெட்டை அர்த்தமில்லை ஒற்றை அர்த்தம்மட்டுமே என்பதை புரிந்துகொண்ட ஞானசுந்தரிச் சித்தி சும்மா
வாய்ட்ட அளக்கக்கூடாது வந்து எங்கூட ஜோடி போட்டு இடிச்சிட்டு அப்புறம் பேசனும் என்றதும்  பாஞ்சாம் புலியாட நடையை கூட்டிவிடுவான் செல்லமுத்துச் சின்னையன். ஞானசுந்தரிச்சித்தி ஏதோ சொல்ல மொங்கு மொங்கென்று சிரித்து விட்டு சும்மா கெட பிள்ள அது எனக்கு தம்பி மொற என்பாள். அந்த வழியே அழுதுகொண்டு போகிற சின்னத்தாயின் மகனைக் கூப்பிட்டு மூக்கைப்பிடித்து துடைத்துவிட்டு,கையில் ஒருகைப்பிடி கம்பரிசியை உருண்டை பிடித்துக்கொடுப்பாள் கனகமணி அத்தை. அந்த நேரத்தில்  சொட்டு சொட்டாய் இறங்கும் மழையை முந்திக்கொள்ள வேகமாக இடிபடும் உரல்.இடித்த அரிசியை அள்ளி குத்துப் பெட்டியில் போட்டுக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாக ஓடினார்கள்.ஒவ்வொருமழையும்,எட்திர்ப்படுகிற
கண்மாய்களும் மாரிமுத்துவையே ஞாபகப்படுத்தியபடி கழிந்தது. இந்தமுறை கட்டாயம் கண்மாய்நிறையும் என்று ஆளாளுக்குச் சொல்லும் போதெல்லாம் நாணல்புதர் செழித்து வளருவதுப்போல் நினைவுகளும் வளரும்.   வீட்டுக்கு வந்தாள் அங்கே புருசன் கண்ணுச்சாமி உட்கார்ந்திருந்தான்.

ஏம்மா இந்த வருசம் ஒரு குண்டு வயக்காட்ட வாரத்துக்கு பிடிச்சி நெல்லுப்போடுவமா  என்றுகேட்டான்.  ஒத்துக் கொண்டாள். நாணல் புதருக்கு எதிர்த்தாப்போல வயக்காடு கிடைத்தது. சங்கிலியைக்கழட்டி அடகுவைத்து நெல் நட்டார்கள். மூணு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு அடிக்கடி வயக்காட்டுக்குப் போனாள். அந்த மாசிமாசம் மாரிமுத்து தங்கச்சி மகளுக்கு காது குத்துக்கு ஊருக்கு வந்திருந்தான். குளிப்பதற்கு வீட்டுக்காரியைக்  கூட்டிக் கொண்டு கம்மாக்கரைக்குப் போனான். கொண்டுவந்த துணிகளை எடுத்துக்கொண்டு நாணல்புதர் பக்கம் போனார்கள்.அங்கேயே ஒரு கல்லெடுத்துப் போட்டு துவைத்தார்கள். வயக்காட்டைப்பார்க்க வந்த கனகமணிக்கு நாணல்புதர் பக்கம் ஆள்சத்தம் கேட்டது. கம்மாக் கரையேறினாள்.அது மாரிமுத்துவின் சத்தமேதான். நானும் எம்பிரண்டும் போட்டிபோட்டு முங்குநீச்சடிச்சு இங்கவந்துதான் விளையாடுவோம் என்று மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவள் சுவாரஸ்யமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். நாணல்புதருக்குள் குறவைமீன்கள் சலப் சலப் என்று சத்தமிட்டுக்கொண்டு ஒன்றையொன்று விரட்டிக்கொண்டலைந்தன.

25.6.11

புற உலக அடையாளங்களை உதறிவிட்டு தோளில் விழும் கை. ( கருப்பு நிலாக்கதைகள்- தோழர் எஸ் ஏபியின் விமர்சனம்)


ஒரு கட்சியின் மாவட்டச்செயலாளர் டவுசர் போட்டுக்கொண்டு சமயல் செய்துகொண்டே ஆல்பர்ட் காம்யூ பற்றிப்பேச உடன் உட்கார்ந்து கீரையை ஆய்ந்துகொண்டே கதை கேட்கிற அனுபவம் அற்புதமானது. அப்போது விருதுநகர் கந்தபுரம் தெருவில் இருந்த எங்கள் தலைமை அலுவலகத்தில் வேலைபர்த்துக் கொண்டிருந்தேன்.அங்கிருந்து அரைபர்லாங்க் தூரத்தில்தான் சிபிஎம் கட்சியின் மவட்டக்குழு அலுவலகம் இருந்தது.  கிளம்பி ஆபீசுக்கு வா என்று தொலைபேசியில் அழைப்பார்.வேறு ஏதும் தொழிற்சங்க விவகாரமாக இருக்குமோ என்று   அங்கே போனால் ஒரு முண்டா பனியனும் டவுசரும் போட்டுக்கொண்டு சமயல் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். கூடவே தாமஸ்,சேகர்,மணிமாறன்,கண்ணன் இன்னும் பிஎஸென்எல் பெருமாள்சாமி போன்ற தோழர்கள் இருப்பார்கள்.

அன்று போனபோது வகைவகையான கீரைகளை கூடத்தில் பரத்திப்போட்டு கைபார்த்துக்கொண்டிருந்தார்கள்.அது புரட்டாசிமாதம் மழைபெய்து ஈரமாகிப்போன அந்த அலுவலக முற்றத்திலும் சுவரை ஒட்டிய பகுதிகளிலும் முளைத்துக்கிடந்த கீரைவகைகளெல்லாம் அங்கே கிடந்தது. வாங்க காம்சு நீங்களும் மாட்டிக்கிட்டிங்களா இன்னைக்கு நீங்கதான் ஸ்பெசல்.தோழர் சமையலை முதலில் சாப்பிடப்போகிற டெஸ்டர் நீங்கதான் என்று சொல்லவும் சுற்றியிருந்தவர்கள் கெக்கேபிக்கே என்று சிரிப்பார்கள். கூறுல்லாமச் சிரிக்காதிங்கப்பா கீரைகள்ள எவ்வளவு சத்து இருக்குன்னு தெரியுமா ?. இதுவரைக்கும் அப்படிஒரு புத்தகம் வரலயில்ல காம்ஸ் என்று தாமஸ் கேட்பதில் அர்த்தம் புரிந்துகொண்டு.ஆமப்பா ஒங்களமாதிரி ஸ்டைல் சாப்பாடு சாப்புடுறவங்களுக்கு புத்தகம் போட்டுத்தான் சொல்லிக்கொடுக்கணும் என்பார்.ஆடுகூட திங்காத இந்தக்கொழைகளுக்கு பேர்கூடத்தெரியாதே என்று சொல்லவும். மகிலி,தொகிலி, சாரநத்தி,பச்சை,பசலை,தூதுவளை என்று அடுக்கிக்கொண்டே போவார்.அப்போ இது நித்தியகல்யாணி இல்லையா என்று சேகர் ஒரு செடியைத்தூக்கி காண்பிப்பார்.

சரி சரி காம்ஸ் இருந்து ஒரு பிடிபிடிச்சுட்டுப்போங்க நெறிஞ்சிக்கீரையும் கூட இதுல இருக்கு என்று சொல்லிவிட்டு எல்லோரும் பயந்து கொண்டு கிளம்புவது போலக் கிளம்புவார்கள். திரும்பி வரும்போது கொறிக்க கொஞ்சம் காரச்சேவும் சிகரெட்டுகளும் வாங்கிவந்து போடுவார்கள்.அப்படிப்பட்ட தோழருக்கு அப்போதே நாற்பதுவயதுக்குமேல் இருக்கும்.நாங்கள் எல்லோரும் இருபது இருபத்தைந்து வயதுக்காரரகளாக இருந்தோம்.  ஒரு தலைமுறை இடைவெளியை துடைத்து விட்டு மிகநெருக்கமாக எங்களோடு இணைந்துகொள்ளும் அவர்மேல் எப்போதும் ஒரு பிரம்மிப்பு இருந்துகொண்டே இருக்கும்.அது அவரது அசாத்திய உயரம் காரணமாக மட்டுமல்ல பிரான்ஸ் காஃப்கா, ஆல்பர்ட்காம்யூ,கிருஷ்ணன் நம்பி,ஜி.நாகராஜன் ஆகியோரின் பெயர்களையும் அவகளின் படைப்புகளில் இருந்து சின்ன சின்ன கதைகளையும் பேசுவார்.அதே அவர்தான் தொழிற்சங்க செயல்குழுக்கூட்டங்களில் இறுக்கமான முகத்தோடு விமர்சனம் செய்தும், கண்டித்தும் வழிநடத்துகிற ஆசானாகவும் இருப்பார்.

மீந்து போனகட்டுரை நோட்டுகளில் எழுதிவைத்த பத்துப்பதினைந்து கதைகளோடு இதுவும் மக்கிப்போகுமோ என்று கொண்டுபோய் காண்பித்த கதையை தூக்கிவைத்துக்கொண்டாடினார். செம்மலரில் அதைப்பிரசுரிக்கவைத்து எனது முதல்கதையை எல்லோரிடமும் பெருமிதமாக அறிமுகப்படுத்தினார் தோழர் எஸ்.ஏ.பி,. அந்தகதை ’பூச்சிக்கிழவி’ மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்து நான்டீடெய்ல் பகுதியில் இணைந்தது. இன்னும் வெளியிடமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் எனது இரண்டவது சிறுகதைத்தொகுப்பை தயங்கித்தயங்கி  தோழர் எஸ் ஏ பி க்கு அனுப்பிவைத்தேன்.

ஜூன் மாத ‘செம்மலரில்’ அதற்கான விமர்சனம் எழுதியிருக்கிறார்.அதையும் அவரே அழைத்துச்சொன்னார்.ஒருகதை அதன் அடிநாதம் உணர்ந்து சிலாகிக்கப்படும்போது படைப்பாளனுக்கு அதைவிட வேறு ஏதும் தேவையில்லை. எனக்குப் புகழ்ச்சி பிடிக்காது என்று நிராகரிக்க முடியாத அன்பு அது. இதோ அந்த அன்புநிறைந்த பரிசில் எங்கள் ஆசான் எஸ் ஏ பி யின் வார்த்தைகளில்.

0

குறைந்த, அதி சிறந்த கதை சொல்லிகள் மனிதர்கள் பேசத் தெரிந்த காலத்திலிருந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஏற்றுதலும் போற்றுதலுமாய் அவர்கள் வரலாற்றில் பெருமையோடு நிலைத்திருக்கிறார்கள். பெருங் கதையாடல்களுக்கு மாற்றாக கணக்கிலடங்காக் கதைகளைக் கொண்டது சிறுகதையுலகம். மனித வாழ்விலிருந்து ஒரு நிகழ்வை ஒரு பொறியாய் எழுத்தில் வடிப்பது சிறுகதை ஆசிரியனின் பணியாகும். இதில் வல்லமை மிக்கவர்கள் ஒரு சிறுகதையிலேயே மனிதரின் முழு வாழ்வையும் சிருஷ்டித்து விடுகிறார்கள். காமராஜின் இந்தக் கருப்புநிலாக் கதைகள் வல்லமையோடு வடிக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்பில் வரும் கதைகள் அடையாளப்படுத்த முடியாத எளிய விளிம்புநிலை மாந்தர்களைப் பற்றியவையாகும். வறுமையும், அந்த வாழ்வின் கொடூரங்களும் அவர்களை என்ன பாடுபடுத்துகிறது என்பதை பழைய - புதிய பாணிகளை இணைத்து கருப்பு நிலாக் கதைகள் கூறுகின்றன. இன்றும் நமது கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் பேயாட்டம் போடுகின்றன. ஒரே மாதிரியான வறுமைப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும் சாதியின் பெயரால் மனிதர்கள் ஒடுக்கப்படுவது தொடர்கிறது. இந்த அபத்தங்களை வெல்வது கடினமாயிருக்கிறது. விடுதலையின் ஒத்திகையில் சிறந்த பாடகராய் கட்டபொம்மு நாடகத்தில் நடிக்கும் அருந்ததியரை ஏற்கமறுக்கும் சாதிவெறி கொடிகட்டிப் பறக்கிறது. வேரை விரட்டிய மண்ணில் சலவைத் தொழிலாளியின் மகன் கிராமத்துக் கொடுமையிலிருந்து தப்பி சென்னைக்கு ரயிலேறுகிறான். ரயிலிலேயே அவனது சாதி பறந்துவிடுகிறது.

மனிதரின் சிந்தனையை வடிவமைப்பதில் புனைகதை உத்தி நல்ல பலனளிக்கிறது. மருளாடியின் மேலிறங்கியவர்கள் கதையில் ஒரு வேசையின் வாழ்க்கை சாமியாடியாகி, அருள்வாக்குச் சொல்லும் மருளாடியாவது நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கதைகள் சாத்தூர் பகுதியில் வாழ்ந்த, வாழும் மனிதர்களையும் அவர்களது அவலமான வாழ்க்கையிலிருந்தும் தோன்றியவை. இந்த வாழ்வை அருகிலிருந்து பார்த்தாலும் அருமையான கதையாக்கிச் சொல்லுகிற திறமை கதை சொல்லிக்கு இருக்கவேண்டும். காமராஜுக்கு நிறையவே இருக்கிறது.

சம்பாரி மேளம் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நான் மெய்ம்மறந்து கேட்டு ரசித்த ஒன்றாகும். சம்பாரி நாயனமும், கனத்த தவில்களும் சுற்றி நிற்கும் ஆயிரம் ஜனக் கூட்டத்தையே ஆட்டுவிக்கும். இந்தக் கதையில் "குழந்தைகள் எப்போதும் மலர்களைக் குவித்து வைத்தது போல் தூங்குவார்கள். அவர்களுக்கு மட்டுமே நித்திரையின் போது சிரிக்கிற சிலாக்கியம் வாய்க்கும். அந்தக் குழந்தைகளோடு நிலவில் கடவுள் விளையாடுவதாய் கிராம்த்துத் தாய்மார்கள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்" என்பதில் அழகு சொட்டுகிறது. இந்தத் தொகுப்பிலேயே சிறந்த கதை கருப்பு நிலாக்களின் கதை தான். ஒடுக்கப்பட்டு வீழ்ந்து கிடந்த பெண் ஓங்காரமாய் எழுந்து ஆட்களையே சாய்த்து விடுகிறாள். இக்கதையின் நடை உயிரோட்டம் மிக்கதாகும். அல்லபர் காம்யு தனது காலி கூலா கதையின் பாத்திரம் மூலம் பேசுவது நினைவுக்கு வருகிறது. "விதியை அறிய முயற்சித்தேன். அது இயலாது என்பது புரிந்ததும் எனக்கான விதியை நானே உருவாக்கிக் கொள்வதெனத் தீர்மானித்தேன். "இந்த ஒடுக்கப்பட்ட பெண்ணும் விஷ மதுவாலும், அரிவாள் மனையாலும் பழி தீர்க்கிறாள்.

நாலைந்து பக்கங்களிலேயே நறுக்குத் தெறித்தாற் போல கரிசல்காட்டு மனித வாழ்வை நம் கண்முன்னே நிறுத்தி விடுகிறார் காமராஜ். ரயிலை போகும் போதும் வரும் போதும் பார்க்கிற மக்கள் அதில் ஏறிப் பார்த்ததில்லை. கிழவியைக் கிண்டல் செய்வது, சிரிக்க வைக்கிறது. டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்து பிடிபட்ட சிறுவனை நிலைய அதிகாரியே டிக்கெட் எடுத்துக் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைக்கும் மனிதாபிமானம் உலுக்குகிறது.

சர்ச்சுகளில் தரும் அப்பம் எப்படிப்பட்டது என்று தெரியாமல் அதை ஒரு பெரிய தின்பண்டமாய் நினைத்துக் கேட்கும் கன்னியப்பனைப் பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள். நாமும் சிரிக்கிறோம். கள்ளக் காதலர்களை அடித்துக் கொன்று போட்டுப் பேயடித்ததாய் கதைவிடும் கதை சிறப்பானது. முளைப்பாரிகள் வயலில், பாட்டுக்காரி தங்கலட்சுமி, மனநலக் காப்பகத்தில் மனநலமுள்ளவளையும் அடைத்துள்ள கொடுமையைக்கூறும் கதை அருமை. கதைகளுக்கு காமராஜ் தரும் தலைப்புகள் அற்புதமானவை. உதாரணமாக ஆனியன் தோசையும் அடங்காத லட்சியமும், பெரியார் பேரனுக்குப் பிடித்தமான பேய் போன்றவற்றைக் கூறலாம்.

இவன் நினைத்தால் ஏராளமாய் கதை எழுத முடியும். ஆனால் எழுதித் தொலைக்க மாட்டேங்கிறானே என்று காமராஜைப் பற்றி நான் நினைப்பதுண்டு. அற்புதமான கதைகளை ஏராளமாய் எழுதட்டும். கரிசல் இலக்கியம் செழிக்கட்டும் கருப்பு நிலாக் கதைகள் போல.

9.6.11

நினைவுகள் துளிர்க்கும் மேற்குத் தொடர்ச்சி நாட்கள்.


சிலு சிலுவென முகத்தைத் தடவும் அதிகாலைக் காற்று.தூரத்து ஊரில் நடக்கும் கல்யாணத்துக்கு கிளம்பும் பெண்களின் பட்டுச்சேலை சரசரப்பும் மல்லிகைப்பூவின் சுகந்த நெடியும்.மெல்லிய ஓசையில் எண்பதுகளின் தமிழ்சினிமாப்படலுமாக அந்தப் பயணம் அவளவு இனிதாக இருந்தது.ஏறும்போதே நடத்துநர் சிரித்துக்கொண்டு சும்மா ஏறுங்கசார் ஒண்ணேகால் மணிநேரத்துல ரிங்க் ரோட் போயிர்லாம் என்றார்.ஐநூறு ரூவா சில்றயில்ல என்று சொன்ன பிறகும் அதே சிரிப்புமாறாமல்,ஏறுங்க சார் ஐநூறு கலெக்சன் ஆகாமலா போகும் என்றார்.இப்படிச் சிரித்துக்கொண்டு பொதுத்துறையில் வேலை பார்க்கிறவர்கள் தேவதூதர்கள் போலத்தெரிவார்கள் அதுவும் பேருந்து நடத்துநர்கள் சிரித்தால் லாட்டரி அடிச்ச மாதிரித்தான்.

மொத்தம் அந்தவண்டியில் பத்துபேர்தன் இருந்தார்கள் விருதுநகருக்கு உள்ளே போகாது ஆத்துப் பாலத் துலதான் நிக்கும் என்று சொல்லிக்கொண்டே இன்னும் நான்கைந்து பயணிகளை ஏற்றிக்கொண்டார்.நான் சின்னப்பிள்ளையாய் இருக்கும்போதிலிருந்து விருதுநகர் ஊருக்குள் இருக்கும்சாலை அப்படியே தான் குட்டிக்குட்டிக் கம்மாய்கள் வழிமறிக்கும் சாலையாகவே இருக்கிறது.திர்மங்கலத்திலிருந்து விருதுநகருக்கு வர இருவது நிமிஷம்தான் ஆகும் விருதுநகருக்குள்ளேபோய் வெளியேற அதுக்குமேல நேரமாகிப்போகும்.ஊருக்கு வெளியே ஒரு புதிய பேருந்து நிலையம் கட்டினார்கள்.அங்கே பன்றிகள் கூட உள்ளே போவதில்லை.அது முன்னாள் எம் எல் ஏ ஒருவரின் சொந்த இடமாம்.பொதுச்சொத்துக்களை நாசமாக்குவதில் இந்தியாக்காரனுக்கு இணையாக எவனும் போட்டி போட முடியாது.அதில் மட்டும் எப்போதும் நாம் தான் ஜாம்பியன்.

தூரத்தில் அப்பாவின் டிவியெஸ்50 வண்டியில் அமர்ந்துகொண்டு வரும் கலூரிப்பெண்ணை கவனித்துவிட்டு நிக்கட்டும்ணே ஒரு டிக்கெட் வருது என்றார்.காமராஜ் காலேஜ் நிக்குமா என்றார் ஏறுங்க டைமாகுது நீங்க வரலயில்ல கம்பிலயிருந்து கையெடுங்க ரைட் என்றார். குளிர்ந்த்காற்று இன்னும் பொதுபொதுவென வர வண்டி வேகமெடுத்தது.வழக்கமாக காலையில் டீக்குடிக்கப்போகும் நைனா கடையில் அப்போதுதான்  வாசத்தெளித்துக்கொண்டிருந்தார்கள்.நடைப்பயிற்சிக்கரர்களில் ஓரிரு பெண்களும் கலந்து வந்தது கவனத்தை ஈர்த்தது.கார் ஓட்டினால்,சைக்கிள் ஓட்டினால்,போலிஸ் உடையணிந்திருந்தால்,புருவங்கள் தன்னாடி உயர்ந்துகொள்கிறது.அன்று அதிகாலை ராமநாதபுரம் வீதியில் மூன்று சக்கர சைக்கிளில் நான்கு பீப்பாய்களை வைத்துக்கொண்டு இழுக்கமுடியாமல் இழுத்துக்கொண்டு போன பெண் மட்டும் யார்கண்ணையும் உறுத்தவில்லை.தலைமுறை தலைமுரையாய் ஆப்பம் விக்கிற மணியம்மா,ஒரு அந்திக்கடையையும் ஊத்தவாயோடு உத்துப்ப்பார்த்துக்கொண்டு சாப்பிட வருகிற லாரிக்காரங்கலையும் சமாளிக்கிற கெங்கம்மா ஹோட்டல் பெண்ணையும் எந்த பத்திரிகையும் புதுமைப் பெண்ணாகப் பார்ப்பதில்லை.

சாத்தூர் தாண்டியது ஆளாளுக்கு ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டு நினைவுகளினோடு பயணித்துக்கொடிருந்தார்கள்.நடத்துநர் ஓட்டுநரின் இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்துகொண்டு டெப்போ மேனேஜர் செய்யும் அடாவடிகளை விமர்சித்துக்கொண்டு  வந்தார். நேத்துவரைக்கும் கம்முனுகெடந்த அந்த தொழிற்சங்கப்பேரவை க்காரய்ங்கெல்லாம் கரைவேட்டிகட்டிக்கிட்டு டெப்போக்குள்ள உக்காந்துட்டு டூட்டி பாக்காம போயிர்றாய்ங்கப்பா என்று சொல்லிக்கொண்டே வந்தார். எப்படித்தூக்கம் வந்ததோ தெரியவில்லை முழிக்கும் போது ஆத்துப்பாலத்திலிருந்து வண்டி கிளம்பிக்கொண்டிருந்தது.பக்கத்தில் ஒருவர் வந்து உட்கார்ந்தார் திரும்பிப்பார்த்தால் முருகேசனேதான். பேருந்தே திரும்பிப்பார்க்குகும்படிக்கு ரெண்டுபேரும் சத்தம்போட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டோம்.

முருகேசன் பள்ளியிலும் கல்லூரியிலும் ஒன்றாகப்படித்தவன். முருகேசனைப்பார்க்கும் போதெல்லாம் ஜட்டியைத் தலையில் போட்டுக் கொண்டு பொய்யாக ஒப்பாரி வைக்கும் அந்தச்சித்திரம் தான் நினைவுக்கு வரும். முருகேசன் அப்படி அழும்போது ஒட்டுமொத்த விடுதியே சிரித்துக் கொண்டிருக்கும். ஒருநாள் பிரின்ஸ்பல் வந்துவிட்டார்.அவர் இப்படித்தான் ஆகாத நேரத்திலெல்லாம் வந்து  தொலைத்து விடுவார். தம்மடிக்கும் போது பெட்டியில் தாளம்போட்டுக்கொண்டு பாட்டுப்படிக்கும்போது,மொட்டக்குண்டி கதைகள் பேசும்போதென்று நினையாத நேரத்தில் திடும்மெனப் பிரசன்னமாவார்.

முருகேசனைப்பார்க்கும்ப்போதெல்லாம் இந்தப்பாட்டு நினைவுக்கு வரும்.இல்லையானால் இந்தப்பாட்டைக்கேட்கும்போதெல்லாம் முருகேசன் நினைவும் சிரிப்பும் வரும். “காட்டன் டுக்கேயிலே மியே மெனிடேசு சீனக் கசின்”.அப்போது இந்தப்பாட்டு அவ்வளவுபிரபலம்.என்ன பாட்டுன்னு தெரியுதா. பருத்தி எடுக்கையிலே என்னப்பலநாளு பாத்த மச்சான்.முருகேசன் நல்ல சிவப்பு பெல்பாட்டம் பேண்ட் போட்டுக்கொண்டு அகலப்பட்டி, அகலகாலர் சட்டையை டக் பண்ணிக்கொண்டு வந்தால் ஆண்களே ஆசைப்படுவார்கள். அவனுக்கு ரகரகமான பென்தோழிகள் உண்டு. அவனுக்கு தினப்படிக்குத் தொழிலே காலையில் எழுந்து குளித்து திண்ணீறு வைத்துக்கொண்டு இன்பண்ணிவிட்டு நேரே சாத்தூர் பேருந்து நிலையத்துக்குப் போவதுதான்.

அங்கே ஒருநாள் பிரச்சினையாகி அவனுக்கு அடி விழுந்துவிட்டது.கிழிந்த சட்டையோடுவந்தான்.

29.4.11

ரயில் கோபம் 2


முருகேசன் அப்படி ஒண்ணும் பிரம்மாதமாகப் படித்துவிடவில்லை. ப்ளஸ்ட்டூ படித்துக் கொண்டிருக்கும் போது ரெண்டு அக்காமார்களுக்கு கல்யாணம் நடத்த வேண்டி இருந்தது.அதற்கு வாங்கிய கடனை அடைக்க ஆந்திராவுக்கு டவர் வேலைக்குபோனான். ஒரு ஆளுக்கு பத்தாயிரம் முன்பணம் தருகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் இருமிக்கொண்டே அய்யா நான் போகிறேன் என்றார். ’இந்த வயசுல அதும் கொடல்வெளியே வாரா மதிரி இருமிக்கிட்டு அந்த மனுஷன் போகனுங்காரே’ என்று அம்மா கண்ணைக்க சக்கினாள். புத்தகப் பையைத் தூக்கி பரண் மேல்போட்டு விட்டு ரயிலேறினான். பத்தாயிரம் கடனடைக்க ரெண்டு வருஷமானது. மின்சார கோபுரத்தில் ஏறி கயிற்றைக் கட்டிக்கொண்டு நிற்கிற வேலை.கயிறுவழியே மேலே வருகிற இரும்புத் துண்டுகளை இணைத்து இணைத்து கோபுரமாக்கவேண்டும். காலையில் சாப்பிட்டுவிட்டு மேலேறினல் மதியச்சாப்பாட்டுக் குத்தான் இறங்கனும். சிலநேரம் சாப்பாடும் கூட கயிறு வழியே மேலே வந்துவிடும்.

காக்கை பருந்து குருவிகள் அருகே பறந்து பெரிதாய் தெரிந்தது. கீழிருக்கும் ஆடுமாடு  மனிதர்கள் குட்டியூண்டாய்த் தெரிந்தார்கள். அவனுக்கு வேலை சொல்லிக் கொடுத்த பரமன்தான் சிகரெட்டுக் குடிக்கச் சொல்லிக் கொடுத்தான். ஒவ்வொரு தரமும் ஒண்ணுக்கிருக்க கீழிறங்கும்  அவனைக் கிண்டல் பண்ணி மேலிருந்தே கழிக்கக் கற்றுத் தந்தான்.அந்த உயரத்தில் இருந்துகொண்டு பரமனின் காமக் கதைகளைக் கேட்பது நடுவானில் ஊஞ்சல் ஆடுகிற மாதிரி இருந்தது. கடிதம் கொடுப்பது,சைக்கிளை எடுத்துக்கொண்டு அவள் பார்க்க அலைவது, கனவு காண்பது என்கிற முருகேசன் உடலாலும் நினைவுகளாலும் வேறு மனிதனாக மாறிப்போனான். சாயங்காலம் ஆனதும் சரக்கு அடிக்கச் சொல்லிக் கொடுத்தான். முதல் தரம் குடித்த போது கொமட்டிக்கிட்டு வந்தது அப்படியே கக்கிவிட்டான். ஆனாலும் ஒரு மாதிரியாக ராட்டினத்தில் போகிற மாதிரி இருந்தது.ரெண்டாவது தரம் குடித்தபோது கீழ வீட்டுசெல்வியின் முகம் பாண்ட்ஸ் பவுடர் வாசனையோடு மிக அருகில் தெரிந்தது.பரமனிடம் செல்போன் வாங்கி செல்வியின்பக்கத்துவீட்டு சின்னமணியக்காவிடம் பேசி செல்வியைப்பேசச்சொல்லும் தைர்யம் வந்தது. இதற்கிடையில் நாலுதரம் ஊருக்கு வந்தான் கூடப்படிச்ச பயலுகள் காலேஜுக்கும்,பாலிடெக்னிக்குக்கும் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து அழுகை அழுகையாய் வந்தது. அந்த நிராசையைச்சரிக்கட்ட அவனுக்கு செல்வியின் அருகாமை தேவையாய் இருந்தது.

அடிக்கடி செல்வியோடு பெசுவதைக்கேள்விப்பட்ட அவள் வீட்டார் முருகேசனின் வீட்டுக்குப்போனார்கள்.இரண்டு வீட்டுக்காரர்களும் சேர்ந்து ஜோசியக்காரரிடம் போனார்கள்.ஒரு நல்ல நாளில் ஊர்க்காரர்கள் எல்லோரும் முருகேசன் வீட்டுக்குவந்தார்கள்.எண்ணி ஒரு வருஷத்தில் செல்வியின் மடியில் ஒரு குழந்தைகிடந்தது.அந்த நேரத்தில் தான் சாத்தூர் மெரிட் மேச்கம்பெனிக்கு சீனாவில் இருந்து ஒரு தனியங்கி எந்திரம் வந்தது.அங்கு ஏஜெண்டாக குழந்தைகளை அனுப்பும் சாமியாடி பூச்சப்பெரியப்பாவிடம் பொறுப்பான ஹெல்பெர் வேண்டுமென்று கேட்க.பூச்சப்பெரியப்பா முருகேசனைக் கூட்டிக்கொண்டு போனார். குடியாத்தத்தில் இருந்து வந்திருந்த மூத்த மெக்கானிக்கிடம் உதவியாளராகச் சேர்ந்தான். மாசம் நாலாயிரம் ரூபாய் சம்பளமும் போக வர கட்டணச்செலவும் கொடுத்தார்கள்.

ரவ்வாப் பகலா மெஷினுக்கு அடியிலே கிடந்தான் முருகேசன்.சிவப்பு நிற முண்டா பனியனும் அரைக்கால் டவுசரும் கையில்  ரெண்டு ஸ்பானர்,ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் உடம்பு முழுக்க கிரீஸ் வாசனையோடு வலைய வலைய வந்தான்.ஒரு முனையில் பேப்பரும் மெழுகும் போட்டால் நடுவில் தீக்குச்சிகளாக வந்து விழும்.அங்கிருந்து கன்வேயர் வழியே கடந்துப்போய் தானே தன் தலையில் கருமருந்தை ஏந்திக்கொண்டு திரும்பிவரும். வரும்போதே காற்றாடியின் காற்றில் உலர்ந்து கீழே தீக்குச்சிகளாய் பொது பொதுவெனக் கீழே விழும். முருகேசனுக்கு ஒரே ஆசர்யமாக இருக்கும். இந்த வேலைகள் எல்லாம் நடக்க முன்னமெல்லாம் ஒரு வாரம் ஆகும். நூற்றுக் கணக்கான பெண்கள் தீக்குச்சிகளோடு கிடந்து மல்லுக் கட்டுவார்கள். தீப்பெட்டி யாபீசுக்குள் நுழைந்தால் சண்டைகள்,சிரிப்பு,பாட்டு இப்படிச் சலச் சலவென ஒரே மனித இரைச்சலாகாக் கேட்டுக் கொண்டே இருக்கும். அவற்றையெல்லாம் விழுங்கிச் செரித்தபடி அந்தச் சீனாவின் எந்திரம் பேரோசையோடு ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒருகாலத்தில் பிரதான தளவாடச் சாமான்களாக இருந்த பழய்ய கட்டைகள், ராக்குகள்,மெழுகு முக்கும் இரும்பு பிளேட்டுகள் எல்லாம் சுற்றுச்சுவரின் மூலையில் அம்பாரமாகக் குவிந்து கிடந்தது. தீப்பெட்டியாப்பிஸ் ராக் ரூமு களுக்கென்று தனிக்கதைகள் உண்டு.அவற்றோடு சேர்ந்து பழய்ய நினைவு களும் குவிந்து கிடந்தது.  

27.4.11

ரயில் கோபம்


இப்போதெல்லாம் சாத்தூர் ரயில்வே ஸ்டேசனில் தினம் தினம் சாயங்கால புகைவண்டிகளுக்கு கூட்டம் அலைமோதுகிறது.பயணம் செய்வோரும் வழியனுப்புவோருமாக தினம் தினம் திருவிழாக்கூட்டம்தான்.பிளாட்பாரத்தின் ஓரங்களுக்குப்போய் ரயில்வருகிறதா என்று எட்டிப்பார்க்கிற குழந்தைகளுக்குப் பின்னால் குதூகலம் துரத்துகிறது. அதட்டிக்கொண்டே ஓடிப்போய் கூட்டிவருகிற சாக்கில் தாய்தந்தையரும் குழந்தையாகின்றனர். ’ஐயெ பாத்துங்க,கையில சிந்திரப்போகுது வேண்டாண்ணு சொன்னாக்கேக்கீங்களா’ இந்தவார்த்தை இளம் மனைவிக்கும் சேர்த்து வாங்கிக்கொண்டுவருகிற தேநீர்க்குவளையின் சூட்டை இதமாக்குகிறது.

அப்பா அம்மாவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு செல்போனில் தோழியோடு பேசுவதாய்ப் பாவனை செய்கிற மகளின் கண்களில் தெறிக்கிறது காதல்.அதைக்கண்டும் காணாததுபோல் கோணங்கித்தனம் காட்டும் அப்பனின் நினைவுகள் பிந்தடமறியாததா. கொக்கோக் கோலாப் பாட்டிலுக்குள் கலந்து விட்ட  டாஸ்மாக் மதுவின் நிறம் கானாமல் போகலாம் மனம் சுழன்றடிக்கிறது அந்த கரைவேட்டிக் கூட்டத்தில்.சிலுசிலுவென முகத்திலடிக்கிற காற்றை ஏந்தியபடி கடைக்கோடி பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் நடைப் பயிற்சிக்கு வந்தவருக்கு இத்தனை காற்றும் இந்த ஊருக்குள்ளேதான் இருக்கிறதா என்கிற சந்தேகம் வருகிறது.

கொய்யாப் பழம் விற்கிற பாட்டியின் கண்களுக்கு பசியோடு பழவாசனையெடுத்துவரும் கண்கள் அரிதாகவே தென்படுகிறது. தேநீர்க் கேத்தலை ஓரங்கட்டி வைத்துவிட்டு பீடிகுடிக்கிற முத்துச்சாமியின் நினைவுகள் காலையில் வட்டித்துட்டு கேட்டுவரப்போகும்  மீசைக் காரனின் முகம் கலவரப்படுத்துகிறது. இல்லாத மார்புக்குமேல் மாரப்பை இழுத்துவிட்டு அழகு பார்த்துக் கொள்கிற திருநங்கையின் குரலில் அந்தபாடல் கொஞ்சம் இனிமையாகவும் இருக்கிறது.

”கெளம்பு போ ரயிலு வரத்தேரமாகும்,இப்ப போனாத்தான் கடைசி வண்டியப் பிடிக்கமுடியும், இந்தா இங்கரு, கண்ணக்கசக்காத எண்ணி ஆறுமாசம் கையில கொஞ்சம் துட்டோட வந்துரமாட்டேன்” முருகேசனின் வார்த்தைகளைக்காதில் வாங்காமல் இன்னும் நெருங்கி உட்கார்ந்தாள்.அதே வாசம் அதே கதகதப்பு.எழுந்து நடந்து கொண்டே திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு போகிற செல்வியை பார்க்கத் திராணியில்லாமல் கத்திரிச்சீரெட்டை எடுத்துப்பற்றவைத்தான் முருகேசன்.ரயில் வந்துவிடட்டும் இன்னும் தனியே உட்கார்ந்திருந்தால் மனசு மாறி பைத்தூக்கிக்கொண்டு போனவருசம் மாதிரி பின்னாலேயே கிளம்பினாலும் கிளம்பிவிடுவான்.

போனதரம் கிளம்பிப்போனவன் கொஞ்சநாள்  அமுக்கிக்கொண்டு மெட்ராசில் இருந்திருந்தால் இந்த மாதிரி ஆகியிருக்காது. அடிதடி ஆகி போலிஸ் ஸ்டேசன் வரை போகவேண்டியதிருந்திருக்காது. அந்த செவப்பு ஏட்டு கேட்ட கேள்வியை வேறெவனாவது கேட்டிருந்தாள் கொலப்பலி உளுந்திருக்கும்.

(மிச்சம் இன்னொரு நாளைக்கு)

17.4.11

எரி நட்சத்திரமும், பச்சை மரமும்.


நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்புகையில் நெல்லை துரித வண்டி வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தை ஒட்டிய வேலிச் செடிகளின் மறைவில் இருந்து சில பெண்கள் எழுந்து ரயிலுக்கு முதுகைக் காண்பித்துக் கொண்டு நின்றார்கள். இன்னும் கொஞ்சம் தள்ளி ஆண்கள் எழுந்து சலிப்புடன் ரயிலைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.மெல்லக்கடந்து போகிற முன்பதிவு செய்யாத பெட்டிகளின் வாசலில் இளைஞர்கள் நின்றுகொண்டு காலைக் காற்றை முகத்தில் ஏந்திக்கொண்டு சிலிர்ப்படைந்தார்கள்.பொதுப்பெட்டிகள் இறைச்சலுடனும்,முன்பதிவு செய்யப்பட்டவை மெலிதான ஓசையுடனும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் கள்ள மௌனத்தோடும் கடந்து போயின.

 இனி வீடு,ஒரு குவளைத் தேநீர்,கொஞ்சம் தீக்கதிர்,இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புகள்,அடுப்படியில் இருந்து அன்றாட பற்றாக்குறை அலுப்புகள் என் இந்தக்காலை கடந்து போகும்.மணிஅடித்தது  அந்த கைப் பேசியில்  வைத்திருக்கிற மாலையில் யாரோ மனதோடு பேச பாடல் சில நேரம்  இனிமையாகவும் பல நேரம் எரிச்சலாகவும் கேட்கும்.மாலை ஏழுமணிக்கு வருகிற அழைப்பில் கடைசி மூன்று எண்கள் இரண்டாக இருந்தால் பயமாக இருக்கும்.ஆமாம் அவர் இரண்டாவது குவளையைக்காலி செய்து ஒரு சிகரெட்டை குடித்து முடித்தவுடன் எனக்கோ அல்லது மணி அண்ணனுக்கோ பேசுவார்.வார்த்தைகள் இடறி இடறி விழும். அதிலிருந்து மூன்று வருடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இன்க்ரீமெண்டை சரிசெய்ய வேண்டுமென்கிற செய்தியை தெரிந்து கொள்ளச்சிரமம் இருக்காது.என்ன சிரமம் என்றால் அதே செய்தியைக்கிட்டத்தட்ட நான்காவது முறை சொல்லும்ப்போதும் முதல் தரம் சொல்கிற ஆர்வத்தில்லேயே சொல்லுவார்.

ஆனால் அண்ணன் சோலைமாணிக்கம் அழைப்பர் ஒரு ஐந்து நிமிடம் பேசுகிற பொருளை ஆரம்பிப்பார்.சரி போனக்கட் பண்ணு அப்புறம் கூப்பிடுகிறேன் என்பார்.ராகவனும்,பத்மாவும் அப்படியில்லை பாடச்சொல்லுவார்கள், கிடைக்காமலவர்களே பாடுவார்கள் அல்லது நல்லபாட்டைப் பற்றிப் பேசுவார்கள்.சில நேரம் நடுராத்திரி அழைப்புவரும் நல்ல கனவோ கெட்ட கனவோ தடைப்பட்டுப் போகும். கண் எரிச்சலோடும் நிறைய்யத் திகிலோடும் எடுக்கிற தருணங்கள் கொடியது. வயதான அம்மா,அப்பா நோய்வாய்ப்பட்டிருக்கும் நெருங்கின சொந்தம், இப்படி பல முகங்கள் நிழலாட எடுத்தால் ‘ என்ன இன்னும் செங்கல் லோடு வர்ல’ என்று குரல் வரும். தவறான அழைப்பபின் மீது ஏற்படுகிற கோபத்தைக் காட்டிலும் துர்செய்திகள் வரவில்லை என்கிற சந்தோஷம் தான் அதிகமாகும். ’அண்ணாச்சி ராங் நம்பர் அண்ணாச்சி’ என்று சொல்லிவிட்டு வைக்கும்போது தூக்கம் போயிருக்கும். அந்த பயம் கவ்விய ராத்திரியைச் சரிசெய்ய எனக்கு தெரிந்த ரெண்டு உபாயங்களில் ஒன்று வடிவேலுவின் காமெடியைப் பார்ப்பது.

அப்புறம் வீட்டுத் தொலைபேசியில் அடிக்கடி வந்த அந்த தவறான அழைப்பைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.இப்படித்தான் இரவு பதினோரு மணிக்குமேல் டெலிபோன் மணிபோல அலறும்.எடுத்தால் மறு முனையில் வெறகு லோடு அனுப்பச்சொல்லி ஆறு நாளாச்சு இன்னும் அனுப்பல என்று ஆறுநாளும் பேசினான்.முதல் நாள் இது நீங்க கேட்கிற நம்பர் 8இல்லை என்றும் மறுநாள் ஏரியா கோடை சரியாக அடிக்கச்சொல்லியும்,பேசாமல் திருப்பிவைத்தும் பார்த்தாகிவிட்டடது. கடைசியில் ஒருநாள் கோபப்பட்டு ”என்னய்யா தெனம் ராத்திரி பனிரெண்டு மணிக்குமேல ரொம்பாச்சரியா ராங் நம்பருக்கு அடிக்கியே நல்லாவா இருக்கு ”

19.3.11

குலசாமியும் தீராத பூசுபொடியின் வாசமும்.



இத்தோடு மூன்றாவது இது அழைப்பு. பேரப்பிள்ளைகளை விசாரித்துவிட்டு,ஒரு கழிப்பறை வேண்டுமென்கிற கோரிக்கையையும் கோடிட்டுக்காட்டிவிட்டு கடைசியில் அம்மா சொன்னாள்.’எப்பிடியாச்சும் லீவு போட்டுட்டு வந்துருப்பா,பங்காளிகள்லாம் ஒன்னத்தான் கெட்டாக’. சொல்லும் போது அதே உரத்த குரல்கேட்டது. செல்போனில் மெல்லப் பேசினால் கூடப்போதுமென்கிற நுனுக்கம் அவளுக்கு இன்னும்  கைவரவில்லை.பேசி முடித்த கையோடு சுற்றியிருப்பவர்களைப் பெருமிதமாக ஒரு பார்வை பார்த்திருப்பாள். கனகமணிப்பெரியம்மையும் ,கூல்பானை பொண்டாட்டியும் எதாச்சும் கேலி பேசியிருப்பார்கள். கண்மலரும் பூசுபொடியும் மறக்காம வாங்கியாரச் சொல்லுக்கா என்று ஆரிட்டாச்சித்தி சொல்லியிருப்பாள்.அவள் தான் அந்த மத்தியான வெயிலில் தங்கு தங்குன்னு குதிப்பாள் நாக்கை த்துருத்திக்கொண்டு எனக்கு முட்டை வேணும்,சாராயம் வேணும்,ஒரு கைப்பிடி வச்ச அருவா வேணும் என்று அருவாக்குச்சொல்லச் சாமியாடுவாள்.

ஒரு பத்துப்பதினைந்து வருடங்கள் ஓடிப்போனது,ஊரோடு உட்கார்ந்து நரிக்கொறத்தி ஆட்டம் பார்த்தது.ரெட்டைஅர்த்த வசனங்களைக் கேட்டுக் கொண்டே முறைப்பெண்களைப்பார்க்கிற குறுகுறுப்பு.கிழவன் கோவிலில் சாமிகும்பிடும்போது யாருக்காவது அருள்வந்து உடலை உலுக்கி நாக்கைத் துருத்துவது. தெருச்சண்டையில் ஆம்பளையைப் பொம்பளை மல்லுக்கட்டி ஜெயிப்பது.ஊர்ப்பஞ்சாயத்தில் நல்ல நாயம் பேசுனீக நாயம் வேண்டான்னு சொன்னா தீத்து உட்ருங்க,மனசுக்கு பிடிச்சவனோட காலந்தள்ளட்டும் என்கிற குரல்கேட்டு பத்துப்பதினைந்து வருடங்கள் ஓடிப்போனது. எலே, செம்பட்டையா,  இப்படி பேர்களோடும் இன்னும் சில கெட்ட வார்த்தைகளோடும் அறியப்பட்ட காலங்கள் மாறி “தம்பி எப்ப வந்துச்சி,வாங்க வாத்தியாரய்யா என்கிற மரியாதைகளில் கொஞ்சம் தூரம் அதிகமானது.

முன்னமெல்லாம் மாசி மாதம் ஒண்ணாந்தேதி குலசாமி கும்பிட பங்காளிகள் கூப்பிடுவார்கள். அப்போது ‘ஆமா பெரிய்ய ராஜராஜ சோழன் பரம்பரை’ ஒங்க சல்வார்பட்டியான் வளசலில் பெரிய்ய பணக்காரன் வள்ளிமுத்து பெரியப்பன் மட்டுந்தான். அவனுக்குத்தான் ஓடு போட்ட வீடு இருக்கு. மத்தபடி எல்லாருக்கும் கூர வீடு. அதும் பிரிஞ்ச.கூரைய சரிசெய்ய வக்கில்லாதவங்க வளசல். இதுல என்ன என்ன கொளம் குத்துக்கல்லு சாமின்னு இப்படி எதாச்சும் சொல்லிவிட வந்தவர்கள் அதிகப் பிடிச்சவன் என்று  முனகிக்கொண்டே அங்கிருந்து வெறுப்போடு போய்விடுவார்கள்.ஆனால் ஒரு அரைமுடித் தேங்காயும்,நெய் ஊத்தாத சக்கரைப் பொங்கலும் கட்டாயம் தழுகையாக வீடு வந்துசேரும்.

பங்காளி முருகேசன் அந்தோணி கூட சண்டைபோட்டு மண்டைய ஒடச்சி போலீஸ் ஸ்டேசனுக்கு அலைந்தார்கள்.அந்தோணி உயிர்ச்சிநேகிதன், அந்தோணிக்கு சப்போட்டா அலைஞ்சதும் பங்காளிகளின் கோபம் கருப்பசாமி பக்கம் திரும்பியது.ஊனு கம்பைத்தூக்கிக்கொண்டு அடிக்கஓடி வந்தான் முருகேசன். அப்போது ஆரிட்டாச்சித்திதான் மக்காடச்சேந்து அவனப்பிடிச்சி கம்பைப்புடுங்கி விட்டு வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனாள். ரோஷம் வந்து திருப்பி அடிக்க எத்தனித்த கருப்பாமியின் கண்ணுக்குள் பார்த்த ஆரிட்டாச்சித்தியின் பார்வை ஆத்திரத்தை தளரவைத்தது.

இருசக்கரவாகனத்தை நிறுத்தியவுடன் எல்லோரும் திரும்பிப்பார்த்தார்கள். நெடுநாள் பேசாமல் இருந்த நண்பனின் வீட்டுக்குள் போவதைப்போல கூச்சத்தோடு நடந்து போனான் கருப்பசாமி. காடுமுழுக்க விரவிக்கிடந்த வெயில் இனித்தது. குழந்தைகள் ஓடிப்போய் வண்டிமேல் ஏறி உட்கார்ந்து விளையாட ஆரம்பித்ததுகள்.அந்தக்கூட்டத்துக்குள்ளேதான் கருப்பசாமியின் பழய்ய நாட்கள் கிடந்தது. முருகேசச்சித்தப்பன் வந்து பையை வாங்கிக் கொண்டார்.பீடத்தைச்சுற்றி சாணி தெளிக்கப்பட்டிருந்தது.இலையில் தேங்காபழங்களை அடுக்கிவைத்துக் கொண்டிருந்த சாமிகொண்டாடி மோகன் ’பந்தல்ல ஒக்காருண்ணே, மயினி நீங்களும் போங்க’ என்றான். பொங்கல் சட்டியில் உலை கொதித்துக்கொண்டிருந்தது. ஆரிட்டாச்சித்திதான் பச்சரிசியை அரித்துக்கொண்டிருந்தாள். சட்டியை ஒருக்களித்து வைத்துக்கொண்டு அரைசி அரிப்பது அந்த லாவகத்தோடு பேசும் ஆரிட்டாச்சித்தி ஏ அரிசி வேணுமா என்று கேட்டாள்.நனைஞ்ச அரிசி திங்க எச்சிலூறியது.அரிசி,தேங்காச்சில்,வெல்லக்கட்டி சேத்து திங்கக்கொடுத்து வைக்கணும்.

பொங்கிய பொங்கலோடு குலவைச்சத்தம் காடெங்கும் ஒலித்தது.மோகன் தேங்காயை உடைத்தான்.சாம்பிராணி பத்தி சூடம்  கணத்தது. ஆளாளுக்கு அருள்வந்து சாமியாடினார்கள்.ஆரிட்டாச்சித்தி காடே அதிரும்படி கனைத்துக் கொண்டு திடீரெனக்கீழே விழுந்தாள்.எழுந்து சங்கு சங்கெனக்குதித்தாள். எல்லோருக்கும் திண்ணீறு போட்டாள். கூப்பிடு அவனை என்றாள்.கருப்பசாமி அருகே போனான் அவளுக்கு உடல் கூடுதலாய்க்குலுங்கியது.மார்புக்கு குறுக்கே இருந்த கருப்பாசாமியின் கையைப் பிடித்துக்கொண்டாள். நான் சொன்னதெல்லாம் செஞ்சயா எங்கடா பூசுபொடியென்றாள். கோதைநாச்சியார் புரத்தில் பாவாடை சட்டையோடு அலைந்த போதும் கருப்பசாமியிடம் பூசு பொடிதான் கேட்பாள். கருப்பசாமியின் கண்கள் திரண்டது. அவன் ஆத்திகனாகிக்கொண்டிருந்தான்.

6.3.11

எம்ஜிஆரும், எங்க ஊர் நாரணசாமியும்


அவன் நல்ல உழைப்பாளி.எப்படின்னா ஒரு வண்டி பாரத்தையும் ஒத்தாளா ஏத்தி,கொச்சக்கயிறு போட்டு இறுக்கி பத்திக்கொண்டுவந்து வீடு சேத்துரு வான்.மாடு ஒழவுக்கு போயிருச்சின்னா அசரமாட்டான். ரெண்டு ரெண்டு கெட்டா கெட்டி தலச்சுமையாகவே கொண்டுவந்து இறக்கிவிடும் ஒன்மேன் ஆர்மி.உழவடிக்க,பாத்திகட்ட,தண்ணீ பாய்ச்ச, களையெடுக்க, உரம்போட, மருந்தடிக்க கதிரறுக்க எல்லாவேலைகளையும்  செய்யக்கற்றுக் கொண்ட மாஸ்டர்ஆப் ஆல் சப்ஜெக்ட்ஸ்.

ஒண்ணரக்குறுக்கம் மொளகாச் செடியில் எந்தச்செடியில் எத்தனை காய் தொங்குகிறதென்பதை கேட்டால் துல்லியமாகச் சொல்லிவிடும் மனுசக் கம்ப்யூட்டர்.ஒரு கரட்டாண்டி பிஞ்சைக்குள்ள நுழஞ்சாலும் கண்டுபிடிக்கிற மொப்ப சக்திபடைத்தவன். ஒரு விவசாயி அப்படி இருந்தால் தான் வளத்து அறுத்து வீடுகொண்டுவந்து சேக்கமுடியும்.அப்படிப்பட்டவன் தான் நாரணசாமி. அவனுக்குத் தேவையெல்லாம் ஒருசட்டிக்கஞ்சி.ஒரு டவுசரும் தலத்துண்டும், ஒருகட்டுப்பீடி போதும்.

இப்படி இருவத்திநாலு மணிநேரமும் தோட்டமே கதியிண்ணு கெடக்குற கருக்கான பிள்ளைக்கு ஒரே ஒரு கிறுக்கு இருந்திச்சு.அது எம்ஜிஆரு.அவர் கதை கேட்பதும் அவர் பாட்டுப் பாடுவதும்,அவரோடு சேர்ந்து கனவு காண் பதுவும்  தான் அவனது பொழுது போக்கு.அப்படி இருந்துவிட்டால் கூட பரவாயில்லை.ஒரு நாள் நெற பிஞ்சையில  ஆளுயர சோளநாத்துகுள்ள புகுந்து மேட்டுப்பட்டிகாரன் களவாண்டுகொண்டிருந்தான்.அரவம் கேட்ட நாரணசமி ஓடிப்போய் மக்காடச் சேத்துப் பிடிச்சிக்கிட்டான்.ஒரு வப்பு வச்சி அவன முகத்த திருப்பி பாத்தான்.அப்படியே அடிக்கிற சோலிய விட்டுப்பிட்டு ’என்னண்ணே நீங்களே இப்படிச்செய்யலாமா’ என்று கேட்டான்.வந்தவனுக்கு பேயடிச்சமாதிரி ஆகிப்போச்சு.அடிச்சு காலக் கையக் கட்டி ஊர்க் கூட்டத்துல நிக்க வச்சுருவானேன்னு பயந்தா அண்ணம்மொற கொண்டாடுறானேன்னு தெகச்சுப்போயிட்டான். வேற ஒண்ணும் இல்ல களவாங்க வந்தவன் எம்ஜிஆரு படம்போட்ட பனியன் போட்டிருந்தான். எம்ஜிஆரும் எம்ஜியாரச்சேந்த எல்லாரும் நல்லவங்களாம்.அவருதானே திருடாதே பாப்பா திருடாதேன்னு பாட்டுப்படிச்சாரு.

ஊர்ல பொன்னுச்சாமி பொன்னுச்சமி ன்னு ஒருகதைசொல்லி இருந்தான். அவன் சொல்லுகிற சினிமா கதைகள்,கைதேர்ந்த டைரக்டரின் கதைகளை விடவும் அழகாக இருக்கும்.  இருக்காதா பின்ன.அவனே எம்ஜியார் டயாலாக், சரோஜாதேவி டயாலாக்,நம்பியார் டயாலாக் பேசனும். பாட்டுகளை படிக்கணும்.  பின்னணி  இசையில்லாமல் சோகத்தைக் கொண்டு வரணும்.கடலைமிட்டாய்,முறுக்கு, பட்டர் பன் இல்லாமல் இடைவேளை வேற உடணும்.அந்தப் பொன்னுச்சாமிக்கு துட்டுத் தட்டுப்பாடு வந்தாப்போதும் நேரே நாரணசாமி பிஞ்சைக்கு வந்துவிடுவான்.ஒரு எம்ஜியார் படத்தை விறு விறுண்ணு சொல்லிவிட்டு  கொஞ்சம் செலவுக்கு துட்டுவாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவான்.

அந்தக்காலத்தில் வருசத்துக்கு ஒரு எம்ஜியார் படம் வரும். அதுவும் மெட்ராஸ் மதுரையெனப் பெரு நகரங்களில் ஓடி நஞ்சி போய் சாத்தூர் வந்துசேர ஒண்ணரை வருசமாகும். போன்னுச்சாமிக்கு துட்டுத் தேவையாயிருக்கும் போதெல்லாம் கதை சொல்லனும்ணா புது புது கதை சொல்லணும். அதனாலே முத்துராமன்,ஜெய்சங்கர் படத்தையெல்லாம் எம்ஜியார் சரோஜாதேவி பேரப்போட்டு ஓட்டிவிடுவான். ஏண்ணா நாரண சாமி மொத்தத்துல ரெண்டு படம்தான் பாத்துருக்கான் பெரிய இடத்துப் பெண்ணும் நீதிக்குப்பின் பாசமும்.அதனாலேயே எம்ஜிஆரும் சரோஜாதேவியும் நெஜமாவே புருசம்பொண்டாட்டி  என்கிற எண்ணம் புளியமரத்து வேர்போல அவனுக்கு உள்ளே எறங்கிருச்சு.கிராமங்கள் அப்போது அப்படித்தான் இருந்தது.
எம்ஜியார் சாவித்திரி,சிவாஜி பத்மினி,ஜெய்சங்கர் ஜெய்சித்ரா,டிஎம்மெஸ் சுசீலா  எல்லாம் நிஜஜோடிகள் என்கிற கற்பிதம்.

இந்த பொன்னுச்சாமி வேற ஊர்ல இல்ல. வேலவெட்டியில்லாம கஷ்டப்பட்டு வயித்தக்கழுவ வெளியூர் வேலைக்குப்போய்விட்டான்.போனவன் எப்பவாச்சும் ரெண்டு மாசத்துக்கொருதரம் வருவதும்,அவன் குடும்பத்தோடு காலம்கழிப்பது திரும்பிப்போவதுவுமாக இருந்தான்.நார்ணசாமிக்கு சினிமா வெறி தலைக்கேறிப்போனது.எம்ஜிஆர் படம் வந்துருச்சா வந்துருச்சா எனக்கேட்டுக்கொண்டலைந்தான்.ஒரு நாள் தனலெச்சுமித்தேட்டரில் எம்ஜிஆர் படம் என்று சொன்னதும்.சண்டை பிடிச்சி பிஞ்சையப்பாக்க ஆள் மாத்தி வுட்டுட்டு பகலாட்டம் பாக்கப்போனான். போயிட்டுவந்து ரெண்டு நாளா ஒரே பொலம்பல்.

'அவரே இப்படிச்செஞ்சா எப்பிடி' என்றான்.
'எப்பிடி' என்றார்கள்
'ஊராம்பொண்டாட்டியக் கையப்பிடிச்சி இழுக்கலாமா ?'

கேட்டவனுக்கு தூக்கிவாரிப்போட்டுவிட்டது.

’இதென்ன கூத்து இந்த வாரம் ஊர்ப் பஞ்சாயத்து தானா, யாரப்பா அது’
’அந்தாளுதா எம்ஜியாரு’
‘என்னா செஞ்சாரு, அவரு யாருகையப்பிடிச்சி இழுத்தாரு’
‘ஜெமினிக்கணேசம்பொண்டாட்டிய’.

புரிந்து விட்டது ஊர்ச்சனக்களுக்கு.
’அப்ப சர்த்தான் கூப்பிடுங்க எம்ஜியார, இந்த சனிக்கெழம ராத்திரி ஊர்க்கூட்டம்தான்’ என்றார்கள்.

நாரணசாமி வேட்டைக்காரன் படம் பார்த்துவிட்டு பாதியில் எழுந்து வந்தகதை இதுதான்.அதுக்குப்பிறகு எம்ஜியார் படம்பார்ப்பதையே விட்டுவிட்டான்.

12.2.11

விழா மேடையில் நட்ட மரம்.


ஆலோசனைக்கூட்டத்தில் விநாயகமூர்த்தி அரை மணிநேரம் பேசினார். எதிரில் உட்கார்ந்தவர்கள்  தூரலில் நனைந்திருந்தார்கள்.துடைத்தால் தலைவர் மனம் புண்படுமே என்று சித்திரப்பாவையின் அத்தகவடங்கியிருந்தார்கள் ஆலோசனை கேட்க வந்தவர்கள்.பேச்சு முழுவதும் மரங்களைப்பற்றியே இருந்தது. மரங்களின் மகத்துவம் குறித்து அவர் படித்துக்குறிப்பெடுத்த புத்தகங்கள் ஆறு ஏழு இருக்கும்.மகளிடம் சொல்லி வலையில் தேடி தரவிறக்கம் செய்த ஆறுபக்க செய்திகளைத் தமிழ்படுத்தித் தர சிங்கமுத்துவிடம் கொடுத்திருந்தார். அவற்றையெல்லாம் படித்து ஒரு ஆகச்சிறந்த கவிதை போல,இதுவரை எழுத்தாத சிறுகதைபோல மனதுமயக்குகிற ஒரு பனைமரக்காடே என்கிற பாடல்போல படைத்துவிடவேண்டும் என்கிற ஆசையில்தான் எல்லாவற்றையும் தனது சூட்கேசுக்குள் வைத்திருந்தார். எனினும் அதில் இரண்டு பாராக்கள் கூட அவரால் படிக்க முடியவில்லை.

சின்ன ஓடைப்பட்டியில்  வாலிபன் ஒருவன் கொடுத்த வன்கொடுமைப் புகாரை சரிசெய்யப் போகவேண்டியதாயிருந்தது. பர்ஸ்ட் அக்யூஸ்டாக சேர்க்கப்பட்டிருந்த கிளைக்கழகச் செயலாளர் அரிஸ்ட்டாட்டில் என்கிற நராயணசாமி விளாத்திகுளத்துக்கு ஓடிப்போய் நான்குநாட்கள் ஆகியிருந்தது.அங்கிருந்து தலைவருக்கு மணிக்கொருதரம் தொலைபேசியில் அழைத்து எப்படியவது முடிச்சி வச்சிருங்க தலைவரே என்று கெஞ்சிக்கொண்டிருந்தார்.செவல் பட்டி எங்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மகள் டாடா வயர்லெஸ் இண்டெர்நெட் கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்தாள். அரிஸ்ட்டாட்டில்  மனைவியிடம் செலவுக்கு பணம் வாங்கிக்கொள்ளச் சொல்லியிருந்தது அப்போதைக்குப் போதுமானதாக இருந்தது.ஒரு டாட்டா சுமோ எடுத்துக்கொண்டு சின்ன ஒடைப்பட்டிக்குப்போய் காலனியில் இறங்கி சொம்பில் தண்ணீர் வாங்கிக்குடித்தார்.கம்மங்கஞ்சி இருக்குதாம்மா என்று கேட்டார்.சனம் பூரித்துப்போயிருந்தது.இப்பெல்லாம் ஒரு ரூவா அரிசிதான் சாமி என்று மாரிக்கிழவி சொன்னது அவருக்குச்சாதகமாக இருந்தது.

செருப்படி பட்ட கருப்பசாமிக்கு தனது அரசியல் அனுபவத்தையெல்லாம் திரட்டி ஒரு ஆலோசனை சொன்னார்.அவன் ஏற்றுக்கொள்ளவில்லை.கூட வந்த கருப்பசாமியின் தூரத்துச்சொந்தக்காரனான மேட்டமலை கருணாகரனுக்கு கோபம் என்றால் கடுங்கோபம்.தலைவர் சொல்லியும் கேட்காத கருப்பசாமியை அடிக்கப்போய்விட்டான்.மறுநாள் கருணாகரன் இல்லாமல் காவல் நிலையம் போய் ஆய்வாளரிடம் சொல்லி ஒரு பொய்வழக்கு ஜோடிக்கச்சொல்லி அவருக்கும் டாட்டா சுமோவுக்கான பணம் வாங்கிக்கொடுத்தார்.அவர் சின்ன ஓடைப்பட்டிக்குப்போய் மூனு பேரை அள்ளிக்கொண்டுவந்து அடைத்துவிட்டார். இப்போது அந்தக் காலனிச் சனங்கள் தலவர் வீட்டு வாசலில் தவங்கிடந்தார்கள்.மூன்றாவது நாள் சமாதானம் பேசி முடித்துவைத்ததில் அரிஸ்ட்டாட்டிலுக்கு  ஒரு பத்தாயிரம்  செலவாகியிருந்தது. காலனிசனங்கள் அஞ்சு நாள் வேலைவெட்டிக்குபோகாமல் பட்டினிகிடந்தார்கள்.இந்த குழப்பத்தில் தலைவர் சேகரித்து வைத்த பேசு பொருள் படிக்கப்படாமல் குப்பையாகிப் போய்விட்டது.

அதற்குள்ளே தான் தாதரா இலைகளின் மகத்துவம் கிடந்தது.இலை,பூ,காய்,பழம்,விதை,வேர்,பட்டை,பிசின் என தன்னுள் உருவான 27 பாகங்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு கேட்கிற நேரமெல்லாம் அதை மக்கள் பயண்பாட்டுக்குத் தரும் மோஹ்வா மரங்களின் கதையும் அந்தக்குப்பைக்குள்ளே தான் கிடந்தது. ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களின் எழுதப்படாத குறிப்பும்.மனிதர்களைச் சந்ததி சந்ததிகளாக பார்த்துகதை சொன்ன புளியமரத்தின் கதையும். தூக்கில் இடும்போது தானே முறிந்து காப்பாற்றிவிடமாட்டோமா என்று கதறி அழுத கயத்தாத்துப் புளியமரத்தின் கண்ணீரும்,வெள்ளைக்காரனை எதிர்க்க காரணமான மருதுசகோதரர்களின் மரங்களின் சுற்றளவும் மட்கிப்போகாமல் அதர்குள்ளேதான் கிடந்தது.இனி கொஞ்ச நாளில் வீட்டுப்பக்கம் வரும் பழய்ய பேப்பர்காரரிரிடம் வீசைக்கு போய்ச்சேர்ந்துவிடும்.

ஆகவே கூட்டத்தில் துனீசியாவின் எழுச்சியைப்பற்றியும்,விலைவாசியின் கொடூரம் பற்றியும் எதிர்க்கட்சியின் அராஜகம் பற்றியுமாகப் பேசி  உலக அனுபவத்தை ஊறுகாய் இல்லாமல் ஊட்டினார்.பேச்சின் திசை ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்த இடத்துக்கும்திரும்பியது.அங்கிருந்து காடுகளுக்கும்
காடுகளில் இருக்கும் மரங்களுக்குமாகத்தாவித்தாவி வந்து கடைசியில் மரங்களை நடுவதே கட்சியின் லட்சியம் என்று முடித்தார்.கூட்டத்தின் கடைசியில் உட்கார்ந்திருந்த பூகோளன் கேட்டான்.நமது இயக்கம் கல்தோன்றி மண் தோன்றாக்காலத்து முந்தோன்றிய இயக்கம் திடீரென்று ஏனிந்த
மரங்களின் கரிசனம்.தலைவரின் முகம் இறுகிய நேரத்திலா அந்த குழல் விளக்கு அணைந்து எரியவேண்டும்.அடிப்படை உறுப்பினரெல்லாம் பூகோளனை முறைத்தார்கள்.இதென்ன சின்னப்பிள்ளத்தனமான கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு அதா,ஆள் பாத்து சேருங்கன்னு சொன்னோம். ரெண்டு கவிதையெழுதினவனையெல்லா கச்சியில சேத்தா இந்தக்கதிதான் என்று சாமியாடினார் மூத்த தடித்த அடிப்படை உறுப்பினர்.

அதற்குள் தலைவரின் முகம் சாந்த சொரூபமானது.புத்தன் பிறந்த உடனே போதிமரத்தடியில் உட்காரவில்லையே,பெண்ணும் ஆணும் கண்டநேரத்தில் கல்யாணம் செய்துகொள்ளவில்லையே அததற்கான காலம் இருக்கிறது நண்பரே என்று தொடங்கினார்.பிறகு உலகின் மிகச்சிறந்த மேற்கோள்களெல்லாம் வரிசைப்படுத்தினார் ஆனால் அடியில் பூகோளனை அளந்துகொண்டேயிருந்தார். நமது மாவட்ட இலக்கு இரண்டாயிரம் மரங்கள் தொகுதி வாரியாக எத்தனை மரங்கள் நட்டலாம்யார் யாருக்கு எத்தனை மரம் என்று பங்கீடு நடந்தது.எனக்கு தோது இல்லையே தலவரே  காலங்காலமாக நாங்கள் காங்க்ரீட் வீட்டிலேயே குடியிருந்து வருகிறோம்,மரம் நடத்த தோதான மண்ணும் நிலமும் இல்லையே தலவரே என்றார் கலியமூர்த்தி.அப்போது அவர் கண்கள் கலங்கியிருந்தது. மரம் நடவேண்டும் என்கிற உங்கள் இந்த ஆதங்கமே விழாவின் வெற்றி வீட்டுத்தொட்டியில்  நாலைந்து நடுங்கள் என்று ஆலோசனை வந்தது. ஆஹா ஆஹா அடிச்சாம் பாரு சிக்சரு தலைவர்னா தலைவர்தான், இப்படியாப்பட்ட தலைவர்களால்தான் இந்த இயக்கம் செழுமையடைகிறது இல்லையா என்று புழகாங்கிதப்பட்டார் மனிதநேயன்.பூகோளனின் முறைவந்தது சொல்லுங்க பூகோளன் நீங்க தான் இதற்குச்சரியான போர்வாள் எத்தனை நட்டுவீர்கள்.இருப்பது ஒரே ஒரு ஓட்டுவீடு நடக்கிற சர்க்கார் ரோடுதான் சொந்த நிலம் வேறில்லையே என்றான்.

புறம்போக்கு நிலத்தில் நடுங்கள் உங்களுக்கு ஐநூறு விழா மேடையில் அதற்குறிய பாராட்டும் பத்திரமும் முறையே வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். கூட்டம் ஆம் ஆம் என்று ஆரவாரித்தது,மேகங்கள் முழங்கின மின்னல் வெட்டியது. கூட்டம் இனிதே முடிந்தது.மகன் கேட்ட ஜியாமண்ட்ரி பாக்ஸ் ஞாபகம் வந்தது.வெளியே வந்த பூகோளன் தனது டீவிஎஸ் 50 எடுத்து உதைத்தான்.மழை வலுத்திருந்தது பூகோளனைக்கடந்து போன காரில் உட்கார்ந்திருந்த தலைவர் கேட்டார் யாரிவன் கொண்டப்ப நாயக்கன் பட்டி நம்ம கேளப்பருக்குச் சொந்தக்காரனா இல்ல கீழத்தெரு அதற்குப்பிறகான உரையாடல்கள் மட்டறுத்தலில் சிக்கிக்கொண்டு சிதைந்து கீழே விழுந்து சிதறிக்கிடந்தது.

பூகோளன் காலையில் வீஏ ஒ வீட்டுக்குப்போனான்.புறம்போக்கு நிலங்களின் பட்டியல் கேட்டான்.அவை எல்லாமே காலைக்கடன் கழிக்க அவனது தெருக்காரர்கள் போகிற இடமான ஓடை குளம்.அங்கேயே இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மரங்கள் இருந்தன. மஞ்சனத்தி வேலி வேம்பு பூவரசு புளி எல்லாம் ஒரு ஐநூறு இருக்கும் மீதமெல்லாம் வேலிச்செடி. வேலி மரமா செடியா என்கிற கேள்வி எழுந்தது.சாயங்காலம் ஆப்பீசுக்கு போனான்
நிலைய அதிகாரி போல அமர்ந்து கணக்குப் பார்த்துக்கொண்டிருந்த பொறுப்பாளரிடம் விஷயத்தைச் சொன்னான்.அவர் அங்கிருந்து தலைவருக்கு போன்போட்டார் அவர் என்ன சொன்னாரோ தெரியவில்லை இவர் பதிலில் இருந்து அதைக்கணிக்க முடியவில்லை.பூகோளண்ட பேசுறீங்ளா தம்பி இந்தாங்க தலைவர் ஒங்ககிட்ட பேசனுமாம்.குசலம் விசாரித்து விட்டு வேலிச்செடிகள் பற்றிய தனது விரிவுரையை ஆரம்பித்தார்.அது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும், அது ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தது, அது அழிக்கப்படவேண்டியது என்று முடித்தார்.

ஊருக்குப்போய் பஞ்சாயத்து தலைவரிடம்  விஷயத்தைச்சொன்னான்.அவர் மோவாயைச்சொறிந்தார்.அவருக்கும் அந்த புறம்போக்கு நிலத்தின் மேல் ஒரு கண்.அவரது தாத்தா பஞ்சாயத்து தலைவராக இருந்த போது அதில் நெடுநின்ற நாராயணப்பெருமாள் கோவில் கட்டவேண்டும் என்கிற முயற்சியை
பாலாக்கினார் அப்போதைய ஆர்பிஐ கட்சியின் தென்மாநிலப் பிரதிநிதி சீனிவாசன்.அதற்கு பக்கபலமாக இருந்தார் திராவிடக்கட்சி ரெங்கசாமி .அப்போது நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.கழிப்பறை இல்லாத சனங்களுக்கு அதுதான் புகழிடம் அதையும் அபகரித்தால் அவர்கள் மூனு மைல் நடக்கவேண்டும் என்கிற கலவரக்குரல் சட்டமன்றம் வரை எட்டியது.தீர்ப்பு கோவிலுக்கு எதிராக வந்தது.அதோடு பெரியாரின் தொண்டர்களும்,ஆர்பிஐ யின் தொண்டர்களும் கிராமத்துக்கு வந்து வெற்றிவிழாக்கொண்டாடினார்கள்.அந்தக்கணக்கை நேர்செய்ய இது சரியான தருணமாக இருந்தது.ஆடு வலிய வந்து சிங்கத்திடம் செத்துப்போக தேதி கேட்டது.

பஞ்சாயத்து தலைவர் தனது சதுரங்க படுதாவை விரித்தார்.அதற்கு இணங்காதது போல நாடகம் ஆடினால் பூகோளன்  கட்சிக்காரர்களைக் கூப்பிட்டுக்கொண்டு வருவான் அவர்களிடமும் முரண்டுபிடித்து, பஞ்சாயத்தாகி  தோற்றுப்போவதுபோல ஜெயித்துவிடக் காய் நகர்த்தினார். அப்படியே நடந்தது.அன்றிரவு மரங்களை அப்புறப்படுத்த பஞ்சாயத்துச்செலவிலேயே எர்த்மூவர் கொண்டுவருவது,மறுநாள் வீட்டுக்கொரு ஆள் வந்து குழி பறிப்பது என முடிவானபோது.தங்களுக்குத் தாங்களே குழி பறிக்கிற இந்த விழா குறித்த சேதி காதுகேளாத மரத்திக்கிழவிக்கு எட்டவில்லை.அவள் மட்டுமே நெடுநின்ற பெருமாள் கோவில் கட்டுவது எடுத்த எடுப்பிலே நின்று போன வரலாறு தெரிந்தவள்.மறுநாள் கீழத்தெருவுக்குள் வந்த ரெங்கசாமியின் பேரன் வந்தார் இருக்கிற வேலி மறசலையும் தூர்வாரிவிட்டால் வெளிக்கிருக்க சாத்தூருக்கா போவீக என்று பத்தவைத்துவிட்டுப்போனார். பத்திக்கொண்டது,அதை ஊதிவிட அண்ணா திமுகவின் வார்டு மெம்பர் போதுமானவனாக இருந்தான்.இந்த பிரச்சினைகளை அறிந்த தலைவர் உடனடியாக தலையிட்டு அங்குமட்டும் மரம் நடவேண்டாமென்று உத்தரவுபோட்டுவிட்டார்.

விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தது பூகோளன் பல கட்சிக்காரர்களின் காங்க்ரீட் வீடுகளில் கிடைத்த கையகல நிலத்தில்  குழிதோண்டிக் கொடுத்தான். வசூலுக்குப்போன பரிவாரவாத்தோடு தானும் அதீதி என்கிற மோஸ்தரோடு அலைந்தான்.நடுநிசி தாண்டியே வீட்டுக்கு வந்து படுத்தான்.
உறக்கம் வராத நேரத்தில் சில கவிதைகள் எழுதினான்.கவிதைகள் வராத நேரங்களில் மனையின் தூக்கத்தைக்கலைத்தான். கண்விழிக்கிற நேரம் பைக்கட்டுடன் தயாரக நிற்கும் மகனின் பார்வையை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை.தீபாவளிக்கு ஊருக்குப்போக வெண்டும் என்கிற மனைவியின் வேண்டுதலை அது தமிழ்ப்பண்டிகை இல்லை என்று நிராகரித்தான்.நாங்கொண்டாடல சாமி எங்கம்மா அப்பாவப்பாக்கணும் என்றாள்.
சாப்பாடு என்றான் ஒருநாளைக்கு ஒருதரம் தான வீட்டுல கைநனைக்கீங்க அந்த ஒருதரமும் ஓட்டல்லயே தீத்துக்கங்க என்றான். சாப்பாடு ஓட்டல்ல எல்லாமே ஓட்டல்ல கெடைக்காதே என்றான்.பைக்கடோடு நின்ற பையன் முழித்தான்.அவள் முறைத்தாள்.

சாயங்காலம் வண்டி ஏற்றி விட்டுவிட்டு அப்படியே சைக்கிளை அழுத்தி வசூலுக்குப்போனான்.என்ன பூகோளன் நீங்க இல்லாம வச்சூலே மந்தமா இருக்கு என்றான் வளவராயன்.நிஜமென்று நம்பினான்.என்ன கவிஞரக்காணோமின்னு செங்கக்காலவாசல் ஓனர் திருப்பதி கேட்டார்னே என்றான்
விஸ்வாமித்திரன்.அப்போதுதான் லேசாக உறைத்தது.வல்லபதாஸ் அந்த நேரம் பார்த்து பேச்சை திசை திருப்பினான்.நாள் நெருங்கியது.வசூலும் திட்டமிட்டதற்குமேலே ஆகியது.வாங்கா வானவேடிக்கை,வரவேற்பு வளையம்,தென்னை இலைத்தோரணம் என்று ஊர்திமிலோகப்பட்டது.
கூட்டத்தின் தேவை கருதி ஊர் ஓரமாக ஒரு காலி இடம் அரங்கமாகத் தேர்வானது.அரங்கத்துக்கு பசுமை அரங்கம் எனப்பேரிடப்பட்டது. ஆனால் அங்கே  மஞ்சனத்தி மரங்களும் வேலிகளும்  வளர்ந்து கிடந்தது. பந்தல் பரமசிவம் வந்து புல்டோசர் அமர்த்தி அவற்றைப்பிடுங்கி எறிந்தார்.அதிலிருந்த குருவிகளும் காகங்களும் பூச்சிகளும் எறும்புகளும் இடம்பெயர்ந்தன.மேடை இதுவரை இல்லாத மாதிரி வடிவமைக்க மூளையக்கசக்கினார்கள்.
ஒரு மரத்தை வரைந்தால் அழகாக இருக்குமென்று சொன்னார்கள்.வேண்டாம் ப்ளக்ஸ் போர்டில் வடிவமைத்தால் இன்னும் அழகாக இருக்கும் என்றார்கள். ஏன் ஒரு மரத்தையே கொண்டு வந்து நிறுத்தினால் என்ன என்று வல்லபதாஸ் சொன்னதும் எல்லோரும் அவனைக்கட்டி ஆரத் தழுவிக்கொண்டார்கள். அப்படியே ஆனது.

விழா நடக்க ஆரம்பித்ததும் கூட்டம் கூடியது.சென்னையில் இருந்து வந்த சினிமாப்பாடகர் இந்தியா என்பது ஆலமரம் என்று பாடினார் கேட்டு நெக்குருகிக்கொண்டிருந்தது கூட்டம்.நடுக்கூட்டத்தில் இருந்து ஒரு சித்த சுவாதீனமில்லாதவன்  இந்தியா எனபது....... என்று கெட்டவார்த்தையில் பாடினான். பெண்கள் படித்தவர்கள் முகஞ்சுழித்தார்கள் அவனை அப்புறப் படுத்தி க்கொண்டுபோய் வெட்டப்பட்ட வேலி, மஞ்சனத்திச்செடிகளோடு
கீழே தள்ளிவிட்டார்கள். தலைவர் மேடையில் 2000 ஆவது மரத்தை ஆரவாரத்துக்கு ஊடே முறைப்படி நட்டினார்.

25.1.11

கீழே கிடந்த உளியின் சிற்பி.


ஷாஜஹான் மாமாவின் ’கருவேல மரங்கள்’ சிறுகதையை நினைவுபடுத்தியபடி அவர் வந்தார்.வசல் வரை வந்து கொஞ்சம் தயங்கி நின்றார் யாரோ ஊர்லருந்து வந்துருருக்காங்க சொல்லி எழுப்பிவிட்டாள். அவர்தான் பாக்கியத்தாத்தா.முப்பதுவருடமாகப்பார்த்த அதே தலைப்பாகை.குளிக்கும்போது கூட கழற்றமாட்டார்.சாப்பிடும்போது தலைத்துண்டை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு மரியாதை செய்வது பொதுவாக கிராமத்து வழக்கம். ஆனால் பாக்கியத்தாத்தா அப்போதும் கழற்ற மாட்டார்.
கவசகுண்டலம் போல கூடவே இருக்கும் ஒரு மஞ்சப்பை.இரண்டு உளி.
ஒரு சுத்தியல்.சாப்டுறீகளா என்றதும் தலைகவிழ்த்து மௌனம் காத்தார்.சாப்பாட்டு மேஜையில் வைத்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அந்த இடத்தில் மஞ்சப்பையை வைத்துவிட்டு கீழே உட்கார்ந்தார்.மிச்சமிருந்த மூன்று ஆப்பமும் கொஞ்சம் தேங்கய்ப்பாலும் வைத்தாள் கூட்டிப்பிடித்தால் ஒரு கவளத்துக்கு வராது.ஆனாலும் அவருக்கு பதவிசாய் நுனிக்குச்சாப்பிட வராது.மதியத்துக்கு ஆக்கி இறக்கிய சுடுச்சோத்தில் கொஞ்சம் வைத்தாள். பின்னும் வைத்தாள்.அவருக்கு வயிறு நிறைந்திருக்காது.ஆனாலும் மனசு நிறைந்திருந்தது.

விடு விடுவென்று க்ரைண்டரில் இருக்கிற கல்லை எடுத்துக்கொண்டு வாசலுக்குப்போய் வேப்பமரத்தடியில் உட்கார்ந்துகொண்டார். உளிச்சத்ததுக்கு பயந்து காகங்கள் மிரண்டு பறந்து ஓடியது.தெருவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த குழந்தைகள் ஓடிவந்து அருகிருந்து வேடிக்கை பார்த்தார்கள்.தாத்தா அவர்களோடு பழக்கம் பேசினார்.ஒரே சிரிப்புச் சத்தமாகக்கேட்டது. ’தாத்தா அது எள்ளுக்ஞ்சியில்ல எல் கே ஜீ.’ தென்னம்பட்டையில் நாலு இதழ் உருவி ஆளுக்கொரு பீப்பியும் பொம்மையும்
செய்துகொடுத்தார்.கடைக்கு வந்த எஞ்சீனியரின் மனைவி

’இந்தாப்பா க்ரைண்டர் கொத்த எவ்வளவு’

என்று கேட்டார். தாத்தா அவர் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் குழந்தைகளோடு பழமை பேச ஆரம்பித்தார்.

‘இந்தாப்பா ஒன்னியத்தான காதுல விழல கூலி எவ்வளவு’
’இல்ல தாயி கூலிக்கு கொத்துறதில்ல’
’பின்ன’
அதற்குள் வீட்டுக்குள்ளிருந்து பிரேமாவதி ஓடிவந்து
’ரமேஷம்மா அது எங்க வீட்டுக்காரரோட தாத்தா’
என்று சொன்னதும்
‘சாரி பெரியவரே’

என்று சொல்லிவிட்டு அவளை ஒரு முறை உற்றுப்பார்த்துவிட்டு நகர்ந்தார்.குழந்தைகளுக்கு இந்த சம்பாஷனையில் எந்த நாட்டமுமில்லை. அவர் கையில் படிந்திருந்த கருங்கல் தூசியைப் பார்த்தார்கள். குழவிக்கல்லில் மீது உதடு குவித்து தாத்தா ஊதியதும்  ஒரு பெரிய்ய பெருமூச்சின் சத்தம் கேட்டது. அதிலிருந்து கிளம்பிப் பறந்த துகள்களோடு சிறுவர்கள் காற்றில் பயணமானார்கள். தாத்தா எழுந்து கொல்லைப்பக்கம் போய் ஒரு பீடி பற்றவைத்துக் கொண்டு நின்றார். ரமேசு அந்த நேரம் கீழே கிடந்த உளியெடுத்து குழவிக்கல்லில் வைத்து அடித்துக்கொண்டிருந்தான். ’தம்பி சின்னவரே கீழ போடுங்க கையிலபட்டுச்சி ரத்த வந்துரும்’ கூட இருந்த குழந்தைகள் நான் நீயெனப்போட்டி போட்டுக்கொண்டு சுத்தியல் கேட்டன.இன்னொருவன் வெறும் உளியெடுத்து குழவிக்கல்லில் அடித்துக்கொண்டிருந்தான். பாதிப்பீடியை கீழே போட மனசில்லாமல் தூக்கியெறிந்துவிட்டு ஓடிவந்து குடுங்க சின்னவரே குடுங்க என்று கேட்டுக்கொண்டிருந்தார் பாக்கியத்தாத்தா.

திரும்பவந்த ரமேசம்மா  ’டாய் ரமேஷ்  இண்ட்டிசண்ட் ராஸ்கல் கிவ் த ஹாம்மர்’ என்று அரட்டிக்கொண்டே வந்தாள். கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போனாள். கையிலிருந்த பொம்மையும் பீப்பியும் கீழே விழுந்தது குனிந்து எடுக்கப்போனான். குனிய விடாத படிக்கு லாவகமாக கூட்டிக்கொண்டு போனாள். ரமேசு திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே போனான். பொம்மை பீப்பியும் அழுதுகொண்டே கீழேகிடந்தது.தாத்தா இன்னொரு பீடி பற்றவைத்து ஆழமாகப்புகை விட்டார்.

திங்கள் கிழமை காலையில் பள்ளி வாகனங்களும் ரிக்‌ஷாக்களும் ஆட்டோக்களுமாக குதூகலத்தை அடைத்துக்கொண்டு அந்த வீதி பரபரப்பாகிக் கொண்டிருந்தது.அந்த மஞ்சள் நிற பள்ளிவாகனம் நின்றது ரமேசு கீழே இறங்கினான்.கீழேகிடந்த பொம்மையையும் பீப்பியையும் எடுத்துக்கொண்டு அங்கிள் போகலாமென்றான். ப்பீப்பி சிரித்தது பொமை குதித்துக் குதித்து ஆடியது.

8.1.11

சென்னை புத்தகச்சந்தையில் ‘கருப்புநிலாக்கதைகள்’ சிறுகதைத்தொகுப்பு

நேற்றே தோழர் பவா அலைபேசியில் கூப்பிட்டுச்சொன்னார்.அந்தக்குரல்வழியே வரும் வழக்கமான உற்சாகம் இன்னும் பத்து மடங்கு கூடுதலாய் கேட்டது.அப்போதிலிருந்து ஒவ்வொரு நொடியும் அதை நோக்கியே நகர்கிறது. உடனே சென்னையில் இருக்கும் மகன் அஷோக்கை  அழைத்து கேட்டு வாங்கி குரியரில் அனுப்பச்சொன்னதும், அப்படியே செய்தான்.

வாங்கிய புத்துச்சட்டை ரெங்குப்பெட்டிக்குள் மடிந்து கிடக்க மனசெல்லாம்  ரெங்குப் பெட்டியைச் சுற்றிக்கொண்டிருக்குமே அந்தப் பிள்ளை நாட்கள் இன்னும் கூடவே வருகிறது. இந்நேரம் குரியர் வேன் மதுரையை நெருங்கிக் கொண்டிருக்குமா என்கிற கணிப்பு வாலிபநாட்களின் நினைவுகள் போலப் புதுக்கருக்கு மாறாமல் இருக்கிறது.

முதல் பிரதியை தொடுகிற தருணத்திற்காக காத்திருக்கிற படபடப்பு அதிகரிக்கிறது.சாத்தூர் வந்து எமெம்எஸ் ஸ்டோரில் பாடப்புத்தகங்களும் நோட்டுகளும் கூடவே ஒரு நேவி பேனாவும் பென்சில் அழிரப்பர் வாங்கி வீட்டுக்குக் கொண்டு போன நாட்களாய் அலைக்கழிக்கிறது.

கருப்பு நிலாக்கதைகள்.(சிறுகதைகள்)

ரெண்டாவது தொகுப்பு.

சென்னை புத்தகச்சந்தையில்
வம்சி புக்ஸ் வெளியீட்டகத்தின்
157 மற்றும் 158 வது கடைகளில்
இன்று முதல் கிடைக்கும்.



22.12.10

வறுமையின் வாசமும் சிகப்புத்தான்.

கோழிக் கடைக்கானால் ஆளில்லாத நேரமாகப் பார்த்துப்போவான் தங்கவேல்.ஓசி வாங்கவோ கடன் வாங்கவோ இல்லை. அந்த ஊதா நிற வெற்று பீப்பாய்க்குள் கிடந்து அறுபட்ட கோழிகள் துடிக்கிற சத்தம் கேட்கவே பயமாக இருக்கும்.கோதைநாச்சியார் புரத்து காளியம்மன் பொங்கலுக்கு போயிருந்தப்போ கோழியை அறுத்து பச்சை ரத்தம் குடிக்கிற காட்சியைப்பார்த்து விட்டு ரொம்ப நாள் கோழிக்கறியே திண்ணாது இருந்தான்.அதுவும் அந்த பூசாரி விறகுவெட்டும் போது கையில் அறிவாள் பட்டு ரத்தம் வரும்போது துடித்தார்,அந்தக்காயம் ஆறாமல் அவஸ்தைப்பட்டார் .அப்போதும் கூட அந்தக் கோழியின் ஞாபகம் வேறு வந்து தொலைத்து விட்டது.அயிரை மீனையும்  சாப்பிடமாட்டான். அது குழம்புக்குள் கிடப்பதும் கலங்கல் தண்ணீரில் உயிரோடு மிதக்கிற மாதிரியே இருக்கும்.சாப்பிடும் போது தொலைக்காட்சியில் செய்தி பார்க்கமாட்டான் எதாவது குலைபதறுகிற மாதிரி காட்சிகள் தெரிந்தால்,அத்தோடு கைக்கழுவி விடுவான்.

ஞாயிற்றுக்கிழமைகள் அந்த இடம் ஒரே ரத்தச்சிவப்பாக இருக்கும். இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கரவாகனங்கள் சைக்கிள், பாதசாரி  என மசாலா தடவிய ஏக்கங்களோடு குழுமியிருப்பார்கள்.கையில் வயர்க்கூடை,மஞ்சள் பை ஏந்திக்கொண்டு முதல் வளையம்.எனக்கு முதலில் நான் மேனேஜர்.நான் நான் இந்த ஏரியா கவுன்சிலர் எனக்குத்தான் முதல் கவிச்சை.நான் சட்டம் ஒழுங்கு. இப்படி சைலன்சர் மாட்டிய உருமல்களோடு காத்திருப்பார்கள். வாலைத் தூக்கிக் கொண்டு நாய்கள் இரண்டாவது வளையம்.வெளிப்படையாக குறைத்துக் கொண்டு,விரட்டிக்கொண்டும்.மூன்றாவது வளையம் காக்கைகள்.எல்லோருடைய சட்டைப்பைகளையும் குறிவைத்தபடி அந்த மாலா ப்ராய்லர் கடைக்கார கந்தசமி.

'வாங்க தலைவரே எத்தனை கிலோ'என்று கேட்பார்.வியாபார நெளிவு சுளிவு.

'கேள்வியை மாத்துங்க எத்தனை கிராம்'

'கவர்மெண்டு ஸ்டாப் இப்படிக் கஞ்சத்தனம் பண்றீங்களே சார்'.

'நாங்க ஸ்டாப் மாத்ரம் தான்,நீங்க அதுக்கும்மேலே.சனிக்கிழமை வரைக்கும் கவர்ண்மெண்டு தொழிலாளி.ஞாயிற்றுக் கிழமையானால் கறிக்கடை முதலாளி'.

சம்பளம் கொடுக்கிற அலுவலகத்தில் பகுதிநேரமும்,சம்பாத்யம் கொடுக்கிற கோழிக்கடையில் சதா சர்வகாலமும் கிடக்கிற அவர் ஒருகாலத்தில் பெரும் கோழிப்பண்ணையாரானால் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அடைமொழி போட்டுக்கொள்ளலாம்.எவன் கேட்கப்போகிறான்.சோலைச்சாமி மாதிரி வட்டிக்கு கொடுத்து வாங்காததால் கந்தசாமியை ஏற்றுக்கொள்ளலாம் பரவாயில்லை.ஊர் முழுவதும் மினரல் வாட்டர் விற்பனை நடக்கிறது.பானை பத்துரூபாய்க்கு குறைந்த விலையில் கொடுப்பவன் தானே தியாகி.

நான் ஒரு சேரிவீட்டில் சாப்பிட்டேன் அதனால் எனக்கு தியாகிப் பட்டம் வேண்டும் என்று ஆளுநருக்கு விண்ணப்பம் அனுப்பித்த குறுந்த மடம் கோவிந்தராஜைப் பற்றிப் பிறகு விலாவாரியாகப் பேசிக்கொள்ளலாம்.இப்போ கறிக்கடைக்கு வாங்க.கந்தசாமியைக் கண்டால் தங்கவேலுக்கு பிடிக்கவே பிடிக்காது.அவர் போட்டிருக்கிற  கோழி ரத்தத்தால் நெய்த சட்டையைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.அதை  அவர் வீட்டுக்கு கொண்டு போவாரா, துவைப்பாரா. இந்தச் சந்தேகத்தை எப்படித் தீர்த்துக்கொள்வது என்கிற உறுத்தல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தங்கவேலின் சாயங்காலம் வரை கூடவரும்.ரத்தப் பிசுக்கோடு விரல்களுக்கிடையில் புகையும் கத்திரிச் சிகரெட்டு.அதை ஒரு நிழற் படமாக எடுத்தால் கண்காட்சியில் வைக்கலாம். அதை அவர் உதட்டில் வைக்கும்போது ரத்தவாடை வருமா நிகோட்டின் கலந்த புகைவாடை வருமா. இப்படி விநோதமான பட்டிமன்றத் தலைப்புகள் நொரண்டிக்கொண்டே இருக்கும்.

பக்கத்து கடையிலிருந்து ஐந்து தேநீர் குவளை வரும்.கழுத்து அறுக்கிற வினோத்,துண்டு போடுகிற சதீஷ்,பக்கத்து ஆட்டுக்கறிக்கடை ராமர்,கந்தசாமியின் நண்பர் லட்சுமணன்  நாலுபேரும் மடமடவெனக் குடித்துவிடுவார்கள்.பணம் வாங்கிப்போட சில்லரை கொடுக்க கடனை நோட்டெடுத்து எழுதிவைக்க தேநீர் ஆறிப்போகும்.துக்கித்தண்ணீர் குடிக்கிறமாதிரிக் குடிப்பார்.பார்க்கிற தங்கவேலுவுக்கு அவர் பச்சை ரத்தம் குடிக்கிற மாதிரியே இருக்கும்.சில நேரம் இட்லி வாங்கிக் கூட அதே இடத்தில் வைத்துச் சாப்பிடுவார்.அப்பொழுதெல்லாம் மத்தியானம் வயக்காட்டில் சாப்பிட உட்காருகிற அய்யாவின் ஞாபகம் வந்து போகும்.குடிக்கப்போகிற கம்மங்கஞ்சியை ஏதோ எட்டுவகை காய்கறியோடு இலச்சாப்பாடு சாப்பிடுகிற முஸ்தீபுடன். பம்புசெட்டுத் தொட்டியில் கைகால் அலம்புவார்.தலைத் துண்டை எடுத்து ஈரம் துடைத்துக்கொண்டு சம்மணமிட்டு உட்கார்ந்து அந்த துண்டை மடியில் வைத்துக்கொள்வார்.

இந்தக் கந்தசாமியின் கல்லா முதல்,தொங்குகிற பெருமாள்சாமி படம் வரை ரத்தம் தோய்ந்ததாகவே  இருக்கும். ஆனால் அவரே ஒருநாள் டீயில் ஈ விழுந்துகிடந்ததென்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாரே பார்க்கலாம்.டீக்கடைக்காரர் கெக்கெக்கே எனக் கோழி கேறுவதுபோலச் சிரித்து விட்டு வேறு தேநீர் கொண்டு வைத்துவிடுப் போனார்.இந்த கலேபரசுவாரஸ்யத்தில் வண்டியில் மாட்டியிருந்த கோழிக்கறையைக்காணவில்லை.பதறிப்போய் சுற்றும் முற்றும் பார்த்தான். மீண்டும் கல்லாப்பாக்கம் வந்தான்.என்ன தலைவரே வண்டிச்சாவி மறந்துட்டிங்களா என்று கந்தசாமி கேட்டார்.விஷயத்தைச்சொன்னான். அந்த இடமே தங்கவேலைக் கவனிக்கத் தொடங்கியது.கந்தசாமி கல்லாவை விட்டு இறங்கிவந்து சுற்றுமுற்றும் நோட்டம் விட்டார்.அப்போது வண்டியில் வந்து இறங்கிய சுகுமார் வாத்தியார் என்னவெனக்கேட்டார்.ஓடைப்பக்கம் கையைக்காட்டி அங்கே ஒரு நாய் பாலித்தீன் பையைக் கவ்விக்கொண்டு ஓடுகிறதென்று சொன்னார்.

ஓடிப்போய் பார்த்தார்கள் சொறிப் பத்திப்போய் ஒரு செவலை நாய் தின்று கொண்டிருந்தது.போட்றா விநோத் என்றார் கந்தசாமி.வாலிபமும் கோபமும் கொண்ட விநோத் வெட்டுக் கத்தியை பலங்கொண்ட மட்டும் ஓங்கினான்.
வேண்டாந் தம்பி என்று தடுத்து நிறுத்தினான் தங்கவேல். ரெண்டுபேரும் விநோதமாகப் பார்த்தார்கள்.வண்டியை எடுத்துக்கொண்டு திரும்பவும் அந்தவழியே வந்தான்.இப்போது அங்கு நாயைக் காணவில்லை.சிதறிக்கிடந்த கறித்துண்டுகளை எடுத்து கிழியாத பாலித்தீன் பையில் சேகரித்துக் கொண்டிருந்தார் ஒரு நடுத்தர வயசுக்காரர். 

14.12.10

இரண்டு சிறுகதைகள். தீட்சண்யா, bk

தேடித்தேடிக்கதைகள் படித்த காலங்களை பாதாள கரண்டிபோட்டுத்துழாவ வேண்டியிருக்கிறது.பேச்சில் மற்றவர் வேல.ராமமூர்த்தியின் வேட்டையைச் சிலாகிக்கிறபோதே ஆசை விதை  விழுந்துவிடும்.செக்காவின், தமிழ்ச்செல்வனின்,மாமா ஷாஜியின் கதைகள் குறித்து  வாயாற பேசுவார்கள். அந்தப்பேச்சு புத்தகங்களைத்தேடி த்துரத்தும்.அப்படித்தான் இரும்புக்குதிரை படித்துவிட்டு மாதுவும் bk யும் பேசிக்கொண்டிருந்தார்கள்.'அதன் அழகே அதன் சமயமற்ற தன்மையில்தான் இருக்கிறது' என்று bk சொல்லுவதற்கு முன்னாடி அந்தக்கதையின் தெறிப்பான இடங்களைப்பேசினார்கள்.அன்று இரவே விடிய விடிய முழித்து இரும்புக்குதிரை படித்துவிட்டேன்.அது போல ஒரு புத்தகத்துக்கு முன்னுரை எழுதிய bk 'புரிந்துகொண்டு வாழும் ஆண்,பெண் உறவு ரெட்டை நாயனத்தின் சங்கீதமாக வழிந்து ஓடும்' என்று எழுதினார்.

அப்படியான ஒருவாழ்வைப்பற்றியது. அது முடிகிற நுனியில் கிடைக்கிற அடர்த்தியான சோகம் நிறைந்த சிறுகதை
அப்பத்தா.பேச்சின் சாமர்த்தியத்தை அப்படியே எழுதவும் முடிகிற வீச்சு.

//வீட்டுக் கோழிகளுக்கும், விருந்தாட வரும் காக்கைகளுக்கும், கொல்லையில் நிற்கும் காராம் பசுவுக்கும் கூடத்தெரியும், தாத்தா தூங்குகிறார் என்று. கொலுசு போட்டுக் கொண்டே, சத்தம் வராமல் நடந்து போகிற வித்தை அப்பத்தா மட்டுமே அறிந்த நளினம்.//

//பேரக் குழந்தைகள் விடுமுறைக்கு வந்தால், ஒவ்வொரு நாளும் விருந்து தான். கறிக்கடை தங்கராசு வீட்டுக்கு வந்து தனிக்கறியாக, வெள்ளாட்டங்கறியாக தந்து விட்டு போவான். குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நல்லி வெட்டி வைத்திருக்க வேண்டும். குழந்தைகளின் பட்டியலில் தாத்தா எப்போதும் உண்டு.//

இப்படிச் சிறுசு சிறுசாக அப்பத்தா தாத்தா இணையின் உறவைச் சொல்லிக்கொண்டே போய் அப்பத்தாவின் கதையை முடித்துவைக்கிறார் எழுத்தாளர்.கீற்றுவில் கிடைக்கும்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11876&Itemid=263

சுட்டிப்படிக்கும் வரை நான் சொல்வது அதிகமெனப்படும்.

0

இன்னொன்று ஆதவன் தீட்சண்யாவின் 'களவு' இந்த காலாண்டுக்கான புதுவிசையின் கடைசிப்பக்கத்தில்.மேலே சொன்ன கதை , வயிறாரச் சாப்பிடும் ஒரு குடும்பத்தின் உறவும், உலுக்குகிற பிரிவும் என்றால். இது ஒரு விளிம்பு மக்களின் வயிற்று இரைச்சல் கேட்கிற எழுத்து.முழுவதும் கேட்க முடியாத படிக்கு எழுந்து ஓட வைக்கும் வாழ்வின் கதை. ஒரு அடர் மழை நாளில் கிழங்கு திருட வந்து பிடிபட்டுக்கொண்ட பெண்ணின் வறுமை சுழற்றியடிக்கும் கதை. முழுக்க முழுக்க எள்ளல்வழியே நகரசுத்தி தொழிலின் கொடுமையைச் சொன்ன  அவரே எங்கும் விலகாத அடர்த்தியோடு இழுத்துக்கொண்டு போகிறார். ஒரு வேளை பசியமர்த்தும் கிழங்கைத் திருடப் போகிறவள் மின்சார வேலியில் சிக்கிச் செத்துப்போனவர்களின் பட்டியலை நினைத்துக் கொள்கிறாள்.  நிஜத்திலும் கதையிலும் அது கடக்க முடியாத துயரம்.உழைப்பு உன்னதம் தான்,களவு கேவலம் தான். இந்த இரண்டையும் விட இருத்தலும் உயிரும் இன்றி யமையாதது. இதோ இல்லாதவர்களை அலைக்கழிக்கும் இருத்தலின் வலி.

http://www.facebook.com/#!/notes/aadhavan-dheetchanya/kalavu-cirukatai-atavan-titcanya/180560295304249

4.12.10

நம்பி ஏன் அழுதான்.

அந்த புகைவண்டி நிலையத்தில் எங்குபார்த்தாலும் ஒரே சிகப்பாகத் தெரிந்தது.தூரத்திலிருந்து பார்க்க பெரிய்ய தீ நகர்ந்து வருகிற மாதிரித் தெரிந்தது.கணேசனுக்கு சிகப்பாய் எதைப்பார்த்தாலும் உடல் புல்லரிக்கும். அதன் அடர்த்தியினாலா,இல்லை உதிரவண்ணத் திலிருப்பதாலா, வேறு எதற்குமா என்று தெரியவில்லை.டெல்லி தர்ண்ணாவுக்கு போகும்போது வாராங்கல் பகுதியைக்கடக்கிற போதெல்லாம் காட்டுக்குள் செம்மண் பூமியில் தனியாக ஒரு சிகப்பு ஸ்தூபி நிற்கும். சுற்றிலும் சிகப்புக்கொடிகள் பறக்கிற அழகைப்பார்க்கும் போது பரவசமாகிப்போவான். ஊருக்கு வந்து  ராதாகிருஷ் ணனிடம் விசாரிப்பான் 'அங்கெல்லாம் நம்ம கட்சி சூப்பரா இருக்கே எப்படி' என்று. 'அது வேற கட்சி கணேசா நம்மளுது இல்ல'.அவனுக்குள் முளைக்கும் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லமாட்டார்  பிறகெங்கேயாவது  அரசியல் வகுப்புகளில் விடைகிடைக்கும்.அது அவனுக்கு பத்தாது.

நகர்ந்து வரும் சிகப்பு என்னவென தெரிந்து கொள்ள பயணச்சீட்டு எடுக்கிற வேலையை மறந்து கத்திருந்தான்.சிகப்புச்சேலை சீருடை அணிந்த மேல்மருவத்தூர் பக்தர்கள் வந்தார்கள்.பெருமூச்சு விட்டுக்கொண்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தான்.சகல வயதிலும் பெண்கள்.சுடிதார் அணிந்த நான்குபெண்களும் ஏதேதோ சிரித்துப்பேசியபடி கடந்து  போனார்கள். சுடிதாரும் சிகப்பு வண்ணத்திலே இருந்தது.எல்லோர் முகத்திலும் பக்தியை விட பயணக்களைப்பு மேலோங்கியிருந்தது.ஒரு வயதான பெண்மணி கொண்டுவந்த பையை கீழே வைத்துவிட்டு உட்கார்ந்து வாந்தியெடுத்தார்.  கூட்டம் அதிகமானது. அதற்குள்ளே தெரிந்த முகங்களும் வந்து போனது. முள்ளிச்செவல் டீச்சர் இவனை ஒரு கணம் பார்த்ததுப்பின் தலைகவிழ்த்தி விட்டுப்போனார்.

அந்த ஒரு கணப்பார்வை பத்துவருடங்களைப் பின்னிழுத்து கொண்டு போனது.எவ்வளவு உஷ்ணமான பார்வை.அகல விரித்து படபடக்கிற இமைகளுக்குள்ளிருந்து இனிப்புப் பறவைகள் பறந்து போகும்.டீச்சர் தான் முதன் முதலில் கணேசனுக்கு ஒரு பிட்டுப்பேப்பர் கொடுத்தது.'காலங் கலிகாலமாகிப் போச்சு சார் வாத்தீச்சிகளே பிட்டடிக்கிறாங்க' என்று மீரான்சாஹிபும்,இன்னும் தோழர்களும்அலுவலக மதியங்களில் கிண்டலடிப்பார்கள். இறுதியில் அதுவே ஒரு நீண்ட கடிதம் எழுதியது. மைப்பேனாவின் எழுத்து சில இடங்களில் தண்ணீர் பட்டழிந்திருந்தது.அது தண்ணீரல்லவாம் கண்ணீராம்.ஒரு சனிக்கிழமை மதியம் நாலைந்துபேரோடு வந்த டீச்சரின் அண்ணன் கடித்தங்களை எல்லாம் திருப்பிக் கொடுக்கும்படிக் கேட்டான்.எடுத்துக் கொடுத்துவிட்டு 'அவுங்க ஒராள் வந்திருந்தாப்போதுமே கொடுத்திருப்பேனே.எதுக்கு இப்டி அடியாளேல்லாம் கூப்பிட்டுக்கிட்டு'. கடிதங்களை என்ன செய்தார்களென்று தெரியாது.அதிலிருந்த நினைவுகளை காலத்தால் கூட அழிக்க முடியவில்லை.

ரெங்கலட்சுமி ஒரு நூறு அடி போய் பைகளை இறக்கிவைத்துவிட்டு யாரையோ எதிர்பார்க்கிற மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு திரும்பிப்பார்த்தாள்.அப்படிப்பார்க்கிற நேரமெலாம் கன்னத்தில் சொறிந்து விடுகிறமாதிரி பாவனை காட்டி ஆள்காட்டிவிரலால்  சமிக்ஞை செய்ய வேண்டும்.கணேசனுக்கும் ரெங்கலட்சுமிக்கும் மட்டுமேயான தனிச் சங்கேதங்களில் அதுவும் ஒன்று.கூட வந்த கணவன் ஏதோ கேட்டான் அதற்கு பதில் சொல்லாமல் யோசிக்கிற பாவனையில் கன்னத்தை சொறிந்து கொண்டிருந்தாள் ரெங்கலட்சுமி. இன்றிரவு கணேசன் மதுக்குடிப்பான் நண்பர்களோடு.அதற்கென ஒரு காரணம் தேடிக்கொள்வான். பாட்டு, அரசியல், விகடமென மதுவாடையில் நினைவுகளை அழிக்கப் பாடாய்ப்படுவான்.வீட்டில் வந்து தனியே அமர்ந்து அசைபோடுவான்.மனைவியின் கேள்விகளுக்கு அலுவலகத்தில் பிரச்சினை என்று கன்னத்தைச் சொறிவான்.அந்த  நம்பியை மட்டும் பார்த்திருக்காவிட்டால்.

நம்பியை அந்தக்கூட்டத்தில் பார்த்ததும் கணேசன் அதிர்ந்து போனான். ஒருவாரத்  தாடி, கழுத்தில் ருத்ராட்ச மாலை,கையில் சிகப்புத்துணியில் காப்பு,சிகப்பு வேஷ்டி,சிகப்பு சட்டையில் நம்பி. நம்பியும் அதிர்ந்திருக்க வெண்டும். கணேசனைப் பார்க்காத்தது போல முகத்தை திருப்பிக்கொண்டு ஐம்பது ரூபாய் கேட்ட ஆட்டோ வில் ஏறி உட்கார்ந்துவிட்டான்.'எறங்குங்க இருபது ரூபாய்க்கு அம்பது கேக்காங்க நீங்க பாட்டுக்கு ஏறி உக்காந்துட்டீங்க, கொஞ்சங்கூட..'.கடுமையான குரலில் நம்பியின் மனைவி சொன்னார். தன்னைப் பார்க்க சங்கோஜப் படுகிறான் என்று தெரிந்ததும் கணேசன் அங்கிருந்து நகர்ந்து போனான்.நம்பி கருப்பும் சிகப்புமில்லாத நிறத்தில் கமலஹசனைப்போலிருப்பான்.அடர் ஊதா நிறத்தில் கால்சராயும்,வெளிர் நீல நிறத்தில் முழுக்கை சட்டையும் அணிந்து கொண்டு சைக்கிளில் வருகிற அழகே அழகு.வங்கியில்  கூட வேலைபார்க்கும் பூர்ணிமாவிலிருந்து வாடிக்கையாளர்களாக வரும் டீச்சர்கள் எல்லாம் ஏங்குகிற அழகன்.அவன் மட்டுமல்ல அவனது எழுத்து குண்டு குண்டாக பிசிறில்லாமல் செதுக்கி அடுக்கி வைத்ததுபோல இருக்கும்.அவன் பாட்டு ஹஸ்கி வாய்சில் பொதிகைத் தென்றலாக இருக்கும்.அளவாகச்சிரிக்கிற போது அந்த சிங்கப்பல் சொக்கி இழுக்கும்.

தபால் தந்தி அலுவலகத்தில் வேலை பார்க்கும் கணேசனையும்,வங்கியில் வேலைபார்க்கும் நம்பியையும் சேர்த்து வைத்தது அந்த கலை இலக்கிய இரவுதான்.அங்கு பேசுகிற பேச்சு,பாடல்கள்,நாடகம் எல்லாம் காண்போரை உலுக்கிவிடும்.இவர்கள் இருவரையும் உலுக்கியது. நம்பி அழகாக ஓவியம் வரைவான்.கணேசன் அழகாக கவிதை எழுதுவான்.ரெண்டு பேரையும் கலை இலக்கிய இரவுக்கான வேலைகளில் இணைத்துக்கொண்டது இயக்கம்.
ஒரு படுதாவில் அடர் பச்சை வண்ண பின்னணியில் கருப்பாக ஒரு தூளி அதிலிருந்து ரெண்டு பிஞ்சுகால்கள் வெளி நீட்டிக்கொண்டு இப்படி ஒரு விளம்பர பதாகையை நம்பி வரைந்தான்.'விடிய விடிய பாட்டு மக்களை உசுப்பி விடுகிற தாலாட்டு' இப்படி அதற்கு கவிதை தலைப்பு எழுதிக்கொடுத்தான் கணேசன்.மாநிலத்தலைவர் வெகுவாகப்பாராட்டினார்.ரெண்டுபேரும் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்களானாரகள்.

நம்பியின் கல்யாணத்துக்கு இயக்கம்தான் எல்லா வேலைகளையும் செய்தது. கணேசன் மூன்றுநாள் விடுப்பெடுத்து கூடவே  இருந்தான். கணேசன் மனைவி சிசேரியன் பேறுகாலத்துக்கு நம்பி தான் ரத்தம் கொடுத்தான்.சின்ன சின்ன சந்தோஷங்களையும்,துக்கங்களையும் இயக்க நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.ரெண்டு வருடத்தில் இருவரும் கட்சி உறுப்பினர்களாகப்பதிவு செய்து கொண்டர்கள். முதல் பையனுக்கு கார்க்கி என்று பேர் சூட்டினான் நம்பி.ஊரிலிருந்து வந்த மாமனார் 'ஏழுமலையான் பேர் தான் தலப்பிள்ளைக்கு உடனும் நீங்கென்ன மாப்ள அதெல்லாம் ரோட்லயே விட்டுட்டு வந்திரனும் அடுப்படிவரைக்கும் வரக்கூடா'தென்றார்.சண்டையானது.நண்பர்கள் ஆலோசனைப்படி ரெங்கராஜன் கார்க்கி என்று நீட்டப்பட்டது.பின்னர் ஒரு வருடம் போக வர இருந்தார்கள் அடுத்த வருடத்தில் நம்பியின் மனைவிக்கு டீச்சர் வேலை கிடைத்தது.மாறுதல் வாங்கிக்கொண்டு அருப்புக்கோட்டைக்கு வீட்டைமாற்றிக்கொண்டு போய்விட்டான்.

பிறகான நாட்களில் கொஞ்சமாக நம்பியின் நினைவுகள் மங்கிப்போனது. அருப்புக்கோட்டைக்கு ஒரு ஊர்வலத்துக்காக வேனில் போயிருந்தபோது கணேசன் நம்பியைத்தேடினான். கிடைக்கவில்லை ஊர்வலம் போகிற பாதையில் ஒரு இரு சக்கரவாகனம் எதிரே வந்து திரும்பிப்போனது.அது நம்பியாக இருக்குமோ என்கிற சந்தேகம் வந்து காணாமல் போனது. அருப்புக் கோட்டை நண்பர்களிடம் விசாரித்து நம்பியின் அலுவலக நண்பரைடம் நம்பி பற்றிக் கேட்டான். 'அவர் நம்மாளா ஒன்னுந் தெரியலயே' என்று சொன்னார்.அதன் பிறகு ஒரு மாதங்கழித்து ஒரு ஞாயிறு இரவு கணேசனின் மனைவி '  ஏங்க ஒங்க ப்ரண்டு நம்பி வந்திருந்தாருங்க, ரொம்ப நேரம் காத்திருந்திட்டு போயிட்டார் '. என்று சொல்லிவிட்டு, 'ஏங்க அவர் குடிப்பாரா' என்று கேட்டாள்.அன்றைக்கு மாது வீட்டுக்கும் காம்ஸ் வீட்டுக்கும்  வந்திருந் ததாக தோழர்கள் சொன்னார்கள்.

வருடங்கள் ஓடிப்போய் ஒரு வெள்ளிக்கிழமை மேல்மருவத்தூர் வார வழிபட்டு மன்றக்கூட்டத்துக்குள் நம்பி தென்பட்டான்.மாற்றலாகி சாத்தூருக்கே வந்திருப்பதாகச்சொன்னார்கள். ஒரு நாள் வங்கிக்கிளைக்கு கணேசன் போன போது வேலை ஜாஸ்தியா இருக்கு சாயங்காலம் வீட்டுக்கு வரேன் என்று அனுப்பி வைத்தான்.ஆறுமாதங்களாகிப்போனது வரவில்லை .மறந்து போயிருந்த ஒரு காலை நேரத்தில் கணேசனின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது.
நம்பிதான்.

'வா நம்பி நல்லாருக்கயா'
'சட்டையப்போடு வா வெளியே'
'எங்கே'
'வா சொல்றேன்'
'ஏதும் பிரச்சினையா'
'கேக்காத வா'

ஒரே வண்டியில் போனார்கள்.பிரதான சாலை ஏறி  துலுக்கபட்டி பாலத்துக்கு அருகில் இருக்கிற அடர்ந்த மரங்களுக்கு நடுவே வண்டியை நிறுத்தினான்.ஒரு புட்டியும் ரெண்டு குவளைகளையும் எடுத்து வைத்தான்.குடித்தார்கள். பேசினான்,அழுதான்,துடைத்துவிடச் சொன்னான்.பெருமூச்சு விட்டான். தழுவிக்கொண்டான்.பாட்டுப்படித்தான். பொழுது நீண்டுகொண்டே போனது.

24.11.10

உலகமாதா எண் 2.

கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் முந்தி அறிவியல் இளங்கலை படித்துக்கொண்டிருந்தான்.ஒல்லியான ஒசரமானஉருவம்.கொஞ்சம் இலக்கிய ஆர்வம்,வெகு தீவிரமான பேச்சாளி.வழக்காடு மன்றங்களில் தனக்கு பிடித்த தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு அப்படியே அரசியல்வாதி மாதிரி உச்சஸ்தாயியில் பேசுவான்.அப்போதெல்லாம் கிலோக்கணக்கில் அவனுக்கு லந்து கொடுப்பேன்.அப்போது எனது நண்பன் முருகையா ஒரு புரட்சிகரப் பேச்சாளன் அவனோடு எல்லா இடங்களுக்கும் போவேன்.நான் நல்லாப் பாடுவேன் என்று அறிமுகம் செய்து பாட்டுப் போட்டியில் பேரும் கொடுத்து தள்ளிவிட்டு விடுவான்.மேடையில் எனக்கு முன்னாடிப் பாடியவர்கள் கொஞ்சம் முறைப்படி சங்கீதம் கற்றவகளாக வந்து ஒரு போடு போட்டு விட்டுப்  போனப் பிறகு, எனது சிவாஜி பாடல்கள் கரகரத்துவிடும்.

வேலை கிடைத்து ஒரு பகல் முழுக்க பயணம் செய்து கிளைக்குள் நுழையும் போது பெரிய அதிர்ச்சி காந்த்திருந்தது. அங்கே அவன் உட்கார்ந்திருந்தான். இரண்டு நாட்கள் என்னோடு தங்கி ரூம் பார்த்து விட்டு விட்டுப் போக வேண்டு மென்று வந்திருந்தார் எனது சித்தப்பா. ஆனால் அவன் இருக்கும் நிம்மதியில் சாயங்காலமே கிளம்பிவிட்டார்.அந்த வாலிபக் காலத்தில் பீறிட்டுக் கிளம்பிய உற்சாகம்,பெண்களைப் பார்க்கிறபோது ஏற்படுகிற குறு குறுப்பு,அந்யாயத்தைக் கண்டு வெடிக்கிற கோபம் இவற்றில் என்னோடு கூடவந்த தோழன் அவன். ஒருவருக்கொருவர் தோற்றுப்போன காதலைச் சொல்லி இறுக்கமானோம். பின்னர் குடும்பப் பின்னணியைச் சொல்லி இன்னும் நெருக்கமானோம்.அவன் குடும்பக் கதை சொல்லும்போது எனது வறுமை ரொம்பச் சிறியதாகத் தெரிந்தது.ஒரே ஒரு மாணாவரிக்காடு, மூன்று குழந்தைகள்,புகைப்படத்தில் கணவன் இவற்றோடு தன்னந்தனியே வாழ்வை எதிர்கொண்ட தாயின் பிம்பம் அரிச்சலாக இருந்தது.மாற்றலாகி ஊருக்கு வந்த சிலமாதங்களில் அவன் வீட்டுக்குப்போனேன். நானே வரைந்து கொண்ட தாயின் சித்திரம்  நேரில் பார்க்கும்போது கலைந்து நடக்கும் அமைதிக்கடல் மாதிரி இருந்தார்.

அப்புறம், எப்போது வீட்டுக்குப் போனாலும் அடுப்படியில், துவைகல்லில், முற்றத்தில் காயப்போட்ட கோதுமை இப்படித் தான் வெளிப்படுவார்கள். பர்த்ததும் சோபையாய் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு 'றாய்ய,டீ தாஹு' என்று சொல்லுவார்கள். உடலும், மனசும்,உடையும் வெண்மையான அந்தத்தாய். அவனுக்கு தெலுங்கு தெரியாது என்று சொன்னப்பிறகு அதைப் பொருட் படுத்தாமல் தமிழுக்கு மாறிவிடுவார்கள்.தேநீர் தானே வரப்போகிறது என்று பேசாமல்லிருந்தால்,கேட்காமலே சாப்பாடு போட்டு வைத்துவிடும் தாயுள்ளம் அவர்களுக்கு.ஒரு மாத இடைவெளியில் மீண்டும் வீட்டுக்குப் போகும்போது மறக்காமல் 'றாய்யா,கூச்சுண்டு' என்று சொல்லுவார்கள்.நான் சில நேரம் வலுக்கட்டாயமாகத் தமிழில் பேசுவேன்.ஆனால் பல நேரங்களில் எனக்குத் தெரிந்த தெலுங்கில் பதில்பேசிவிடுவேன்.

தன் மகனோடு நெருக்கமாகப் பழகுகிறவர்கள் தன் சுயஜாதிக்காரர்களாக மட்டுமே இருக்க முடியும் என்கிற நம்பிக்கை.அது ஒரு மாணாவாரிக் குடும்பத்தின் சொச்சம் என்கிற விமர்சனம் எனக்குள் இருந்தது.கொஞ்சம் நிதானமாக யோசித்தால் அது இந்த சமூக அழுக்கின் மிச்சம் என்பதை உணரலாம்.வீடு குழந்தைகள் வறுமை.காடு,பாடு,பற்றாக்குறை இதற்குள்ளிருந்தே மீளமுடியாத பெண்ணை வீட்டுக்குள்ளிருந்து கூட கைதுக்கிவிட முன் முயற்சி எடுக்காத சொந்த ஆதிக்கம்.அதைக் கலாச்சாரத்தின் பெயரால் சகித்துப்போகிற பெண்கள் பெரும்பாண்மை வகிக்கும் சமூகம்.ஒவ்வொரு ஊரிலும் கூட்டமாக  ஒரு ஜாதியை ஒதுக்கி வைத்திருப்பது மேக்ரோ ஆதிக்கம்.அது போல ஒவ்வொரு வீட்டு அடுப்படியிலும் ஒதுக்கி வைத்திருப்பது மைக்ரோ ஏற்பாடு. இந்த ரெண்டையும் எதிர்த்து குரல் எழுப்பியவர்களை ரொம்பச் சுளுவாக நாத்திகர்கள் என்று ஒதுக்கிவிவைத்து விட்டது எவ்வளவு பெரிய கொடுமை.

இதைப்புரிந்து கொள்ளும்போது அந்த வெள்ளை உள்ளம் கொண்ட தாய் என் மதிப்பில் வெகுவக உயர்ந்தார்.நான் அவரோடு  தெலுங்கு மட்டுமே பேசுவது என்கிற முடிவெடுத்தேன். எனது வக்கபுலேரியில் மேலும் அதிக தெலுங்கு வார்த்தைகளைச் சேர்த்துக்கொண்டேன்.அடுத்த முறை போகும்போது அவர்கள் இல்லை.கடைக்குப்போயிருந்தார்கள். வந்ததும்  'எப்பய்யா வந்தே, அண்ணன் ஊருக்கு போயிருக்கான்,வீட்டுக்காரியையும் பேரனையும் கூட்டிட்டு வரலாமில்லய்யா' என்றார்கள். ஏதேதோ இற்று இடிந்து விழும் சத்தம் கேட்டது.நான் குனிந்திருந்தேன்.நீட்டிய கையில் வரக்காப்பி இருந்தது. ஆனால் பால் வாடை அதிகமாக அடித்தது.