Showing posts with label சித்திரம். Show all posts
Showing posts with label சித்திரம். Show all posts

3.3.11

கேள்விகளை விதைக்கும் காடைக் குருவிகளின் தேடல்.


அருப்புக்கோட்டை தாண்டி திருச்சுழி வழியே பயணம்போனால் எங்கு பார்த்தாலும் வேலிக்கருவேல மரங்கள் அடர்ந்திருக்கும். விறகு வெட்டிச் சுமந்த லாரிகளும்,கரிமூட்டப் புகை மூக்குக்குள் கமறலும் எதிர்ப்படுகிற கோடை காலப்பயணம் அது.

எங்காவது  திட்டுத்திட்டாய் குண்டு  மிளகாய் விவசாயம் நடக்கும்.ஆங்காங்கே தட்டுப்படும் ஊர்களின் ஓட்டுவீடும் கூரை வீடுகளும் கூட வேலிக் கருவேல மரங்களுக்கு நடுவில்தான் ஒளிந்து கிடக்கும்.ஆறு பரிசல்,வயல்வெளி பசுமை எல்லாம் இல்லாத கிராமங்கள் அவை.

நீக்கமற நிறைந்திருக்கும் வெயிலும் நசநசப்புமாக ஒரு அமானுஷ்ய மௌனம்  வழிநெடுக நம்மோடு கூடவரும். குண்டுங் குழியுமான தார்ச்சாலை நீண்டு கொண்டே போகும். ஏகாந்தமாக நீண்டுகிடக்கும் சாலைகளின் நடுவில் விதம் விதமான பறவைகள் நடந்து இறைதேடும்.

வாகனத்துக்கு வழிவிட்டுப் பறந்து போகும் காடைகளும் குருவிகளும் நடுரோட்டில் உட்கார்ந்து எதைத் தேடும் என்கிற கேள்விகள் குடைச்சலைக் கொடுக்கும்.

உள்ளுர்ப் பயணிகளிடமிருந்து சிந்திய தானியங்களையா?.
உழைப்பவர்களிடமிருந்து சிந்திய வியர்வையையா?
வெளியூர்ப்பயணிகள் விட்டெறியும் காலிப்போடலங்களையா?

 இல்லை கனவுகளையா ?

31.1.11

நல்லதோர் வீணை செய்தே


வடபழனி முருகன் கோவிலுக்குப்போகும் தெரு நெடுக பக்தி,பக்தி சார்ந்த கடைகள். மெலிதான குரலில் பக்தர்களை அழைக்கும் கடைக்காரர்கள்.கார்களில் வந்திறங்கும் மேட்டுப்பக்தர்களுக்கென அழகுற நிர்மானிக்கப்பட்ட பக்தி ஸ்தாபனம்.பளிங்குத்தரை துருப்பிடிக்காத உலோகங்களிலான கிராதிகள் கொண்ட தடுப்புச்சுவர்கள்.அழுக்கு தூசி அதுசார்ந்த எதுவும் கண்ணில் படாத முருகனின் ஆலயம்.
அடித்தட்டு மக்கள் புழக்கமில்லாததால் முருகனுக்கு பெரிதாக வேண்டுதல்கள் ஏதுமற்ற பொழுதுபோக்கு தரிசனம் தருவது மட்டும் தான் பிரதான காரியம்.உருமிமேளம்,குலவைச்சத்தம்,அன்பென்றால் கூட ஆங்காரத்தோடு கூடிய அன்பு,சின்னச்சின்னச்சண்டைகள்,சிதறுகிற தேங்காய்,பூ பத்தி சந்தணமணத்தோடு பொங்குகிற சக்கரைப்பொங்கல் வாழ்நாள் முழுக்க இவைகள் தான் வழிபாட்டுத்தலமாகி இருந்ததால்.
வடபழனி கோவில் எதோ அறியாத பணக்காரப்பங்களாவுக்குள் நுழையும் உணர்வைக்கொடுத்தது.

அங்கே முழுக்கால்சராய் அணிந்த சேவைக்காரர்கள் இரண்டு மூன்று பேர் இருந்தார்கள்.கால் சரிவர இயங்காத,பேசவராத பார்வைப்புலன் இல்லாத அந்த மாற்றுத்திறனாளிகள் குங்குமம்,விபூதியை கீழே போடாமல் எடுத்துச்செல்ல காகிதங்கள் கொடுத்தும்,அவர்கள் தரும் சில்லறைகளை வாங்கிக்கொண்டும் கோவில் பிரகாரம் முழுக்க வியாபித்திருந்தார்கள்.அத்தோடு கூட சீர்காழியின் உயிர் உருக்கும் குரலும் அந்த கோவில் முழுக்க வியாபித்திருந்தது.தங்கச்சி சின்னப்பொன்னு தலை என்ன சாயுது,வஞ்சகன் கண்ணனடா கர்ர்ர்ர்ணா,சின்னஞ்சிறு பென்போலே சிற்றாடை இடையுடுத்தி இப்படிக்காலத்தோடு இனிப்புத்தடவிய கீதங்களை கேட்டுக்கொண்டே கிடக்கலாமெதுவும் ஒட்டாத போது அந்தக்குரல் மொத்தமாக வந்து ஒட்டிக் கொள்ளாதா.

வெளி வந்து டெரக்கோட்டாவில் வடிவமைக்கப்பட்ட இரண்டு குட்டிப் பாண்டங்கள் வாங்கினோம்.பளீரென்ற செம்மண்ணில் செய்த அந்த சாம்பிராணி குடுவையைக்கையில் வாங்கியதும் பேராசிரியர் ரவிச்சந்திரனின் சூரியச்சக்கரம் என்கிற கவிதையும்,எங்க ஊர் முத்துவேல் செட்டியாரும் நினைவுக்கு வந்தார்கள்.வண்டி நிறைய்ய மண்பானைகள் கவிழ்ந்திருக்கும்.மேக்காலின் நுனியில் செட்டியாரின் மனைவி செட்டியாரம்மா உட்கார்ந்திருப்பார்.செட்டியார் மாடுகளோடு கூட நடந்து ஊருக்குள் வருவது கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும். பானைகளின் மகத்துவம் சொல்லி அதைக்கவிழ்த்தி அட்காட்டி விரலை மடக்கி தட்டுகிற ஓசை கணீர் கணீரென்று கேட்கும். ’இந்தா தாயி
படக்குனு உருவாத கேட்டா எடுத்துத்தருவேனெ’ன்று புகை மணக்கும் மண்சட்டிகளை பிள்ளைகளிப் போல கவனித்துக்கொள்வார்.

கடையை விட்டு வெளிவந்த போது ஒரு பிச்சைக்காரக்கிழவியை ஒரு வேஷ்டி உடுத்திய ஆள் உருட்டுக்கட்டையால் அடித்து விரட்டிக்கொண்டிருந்தார்.அவள் சென்னைத்தமிழில் அர்ச்சனை பண்ணிக்கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடினாள்.வற போற சேவார்த்திககட்ட பைய இயுக்கா,துட்டுக்குடுக்கலேண்ணா பேஜார் பண்றா என்று சொல்லியபடி இன்னும் கெட்டவார்த்தைகள் சொன்னார்.
அவர் அங்கிருந்து போனதும் இவன நேத்து கடக்காரங்க அடியான அடி அடிச்சாங்க இன்னிக்கி பாருங்க இது பேஜார் பண்ணுது என்று கடைக்காரர் சொன்னார். கோவிலுக்கு வந்த பக்கத்து தெரு பெண்பக்தர் ஒருவர். இவுரு யார் தெர்தா நம்ப பாரதியாருக்கு பேரப்புள்ள,
பாவம் இப்படி ரோட்டுல அலையுது என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து கடந்து போனார்.கையில் வைத்திருந்த நினைவுகள் நொறுங்கிப்போக அங்கிருந்து உடனே காலிபண்ணிக்கொண்டு வீடு வரவேண்டியதாயிற்று.  

25.1.11

கீழே கிடந்த உளியின் சிற்பி.


ஷாஜஹான் மாமாவின் ’கருவேல மரங்கள்’ சிறுகதையை நினைவுபடுத்தியபடி அவர் வந்தார்.வசல் வரை வந்து கொஞ்சம் தயங்கி நின்றார் யாரோ ஊர்லருந்து வந்துருருக்காங்க சொல்லி எழுப்பிவிட்டாள். அவர்தான் பாக்கியத்தாத்தா.முப்பதுவருடமாகப்பார்த்த அதே தலைப்பாகை.குளிக்கும்போது கூட கழற்றமாட்டார்.சாப்பிடும்போது தலைத்துண்டை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு மரியாதை செய்வது பொதுவாக கிராமத்து வழக்கம். ஆனால் பாக்கியத்தாத்தா அப்போதும் கழற்ற மாட்டார்.
கவசகுண்டலம் போல கூடவே இருக்கும் ஒரு மஞ்சப்பை.இரண்டு உளி.
ஒரு சுத்தியல்.சாப்டுறீகளா என்றதும் தலைகவிழ்த்து மௌனம் காத்தார்.சாப்பாட்டு மேஜையில் வைத்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அந்த இடத்தில் மஞ்சப்பையை வைத்துவிட்டு கீழே உட்கார்ந்தார்.மிச்சமிருந்த மூன்று ஆப்பமும் கொஞ்சம் தேங்கய்ப்பாலும் வைத்தாள் கூட்டிப்பிடித்தால் ஒரு கவளத்துக்கு வராது.ஆனாலும் அவருக்கு பதவிசாய் நுனிக்குச்சாப்பிட வராது.மதியத்துக்கு ஆக்கி இறக்கிய சுடுச்சோத்தில் கொஞ்சம் வைத்தாள். பின்னும் வைத்தாள்.அவருக்கு வயிறு நிறைந்திருக்காது.ஆனாலும் மனசு நிறைந்திருந்தது.

விடு விடுவென்று க்ரைண்டரில் இருக்கிற கல்லை எடுத்துக்கொண்டு வாசலுக்குப்போய் வேப்பமரத்தடியில் உட்கார்ந்துகொண்டார். உளிச்சத்ததுக்கு பயந்து காகங்கள் மிரண்டு பறந்து ஓடியது.தெருவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த குழந்தைகள் ஓடிவந்து அருகிருந்து வேடிக்கை பார்த்தார்கள்.தாத்தா அவர்களோடு பழக்கம் பேசினார்.ஒரே சிரிப்புச் சத்தமாகக்கேட்டது. ’தாத்தா அது எள்ளுக்ஞ்சியில்ல எல் கே ஜீ.’ தென்னம்பட்டையில் நாலு இதழ் உருவி ஆளுக்கொரு பீப்பியும் பொம்மையும்
செய்துகொடுத்தார்.கடைக்கு வந்த எஞ்சீனியரின் மனைவி

’இந்தாப்பா க்ரைண்டர் கொத்த எவ்வளவு’

என்று கேட்டார். தாத்தா அவர் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் குழந்தைகளோடு பழமை பேச ஆரம்பித்தார்.

‘இந்தாப்பா ஒன்னியத்தான காதுல விழல கூலி எவ்வளவு’
’இல்ல தாயி கூலிக்கு கொத்துறதில்ல’
’பின்ன’
அதற்குள் வீட்டுக்குள்ளிருந்து பிரேமாவதி ஓடிவந்து
’ரமேஷம்மா அது எங்க வீட்டுக்காரரோட தாத்தா’
என்று சொன்னதும்
‘சாரி பெரியவரே’

என்று சொல்லிவிட்டு அவளை ஒரு முறை உற்றுப்பார்த்துவிட்டு நகர்ந்தார்.குழந்தைகளுக்கு இந்த சம்பாஷனையில் எந்த நாட்டமுமில்லை. அவர் கையில் படிந்திருந்த கருங்கல் தூசியைப் பார்த்தார்கள். குழவிக்கல்லில் மீது உதடு குவித்து தாத்தா ஊதியதும்  ஒரு பெரிய்ய பெருமூச்சின் சத்தம் கேட்டது. அதிலிருந்து கிளம்பிப் பறந்த துகள்களோடு சிறுவர்கள் காற்றில் பயணமானார்கள். தாத்தா எழுந்து கொல்லைப்பக்கம் போய் ஒரு பீடி பற்றவைத்துக் கொண்டு நின்றார். ரமேசு அந்த நேரம் கீழே கிடந்த உளியெடுத்து குழவிக்கல்லில் வைத்து அடித்துக்கொண்டிருந்தான். ’தம்பி சின்னவரே கீழ போடுங்க கையிலபட்டுச்சி ரத்த வந்துரும்’ கூட இருந்த குழந்தைகள் நான் நீயெனப்போட்டி போட்டுக்கொண்டு சுத்தியல் கேட்டன.இன்னொருவன் வெறும் உளியெடுத்து குழவிக்கல்லில் அடித்துக்கொண்டிருந்தான். பாதிப்பீடியை கீழே போட மனசில்லாமல் தூக்கியெறிந்துவிட்டு ஓடிவந்து குடுங்க சின்னவரே குடுங்க என்று கேட்டுக்கொண்டிருந்தார் பாக்கியத்தாத்தா.

திரும்பவந்த ரமேசம்மா  ’டாய் ரமேஷ்  இண்ட்டிசண்ட் ராஸ்கல் கிவ் த ஹாம்மர்’ என்று அரட்டிக்கொண்டே வந்தாள். கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போனாள். கையிலிருந்த பொம்மையும் பீப்பியும் கீழே விழுந்தது குனிந்து எடுக்கப்போனான். குனிய விடாத படிக்கு லாவகமாக கூட்டிக்கொண்டு போனாள். ரமேசு திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே போனான். பொம்மை பீப்பியும் அழுதுகொண்டே கீழேகிடந்தது.தாத்தா இன்னொரு பீடி பற்றவைத்து ஆழமாகப்புகை விட்டார்.

திங்கள் கிழமை காலையில் பள்ளி வாகனங்களும் ரிக்‌ஷாக்களும் ஆட்டோக்களுமாக குதூகலத்தை அடைத்துக்கொண்டு அந்த வீதி பரபரப்பாகிக் கொண்டிருந்தது.அந்த மஞ்சள் நிற பள்ளிவாகனம் நின்றது ரமேசு கீழே இறங்கினான்.கீழேகிடந்த பொம்மையையும் பீப்பியையும் எடுத்துக்கொண்டு அங்கிள் போகலாமென்றான். ப்பீப்பி சிரித்தது பொமை குதித்துக் குதித்து ஆடியது.

26.9.10

சிறியதன் ஆவி சிறிது.

இப்படித்தான் இவனுகள்ளாம் நல்ல நேரம் பாத்துக் கழுத்தறுப்பானுக.
ஞாயிற்றுக் கிழமை காலையில் மாடன் வராத கோபத்தில் அலுத்துக்கொண்டார் எஞ்சினியரின் மனைவி.

இப்படித்தான் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடிகாலையிலேயே ஒட்டைச் சைக்கிளில் வந்துவிடுவார்.
காத்திருந்த நாட்டுக் கோழியை கழுத்துத் திருகுவார்,மயிர் பறிப்பார் பிரதேசம் முழுக்க ரெக்கை பறக்கும்.
சுள்ளிகள் எடுத்து சூட்டாம் போடுவார் மஞ்சள் தடவித் துண்டம் போடுவார்.செத்த நேரத்தில் பிரதேசம் முழுக்க கோழி மணக்கும்.

வாருகால் சுத்தப் படுத்த வாட்டர் டேங்கை கழுவிவிட,தேங்காய் பிடுங்க தென்னம்பாளை சீவி விட
சேர்த்து வைத்துக் காத்திருந்த வேலையெல்லாம்,வீட்டைச்சுற்றிச் சுற்றிச் சுத்தமாகும்.ஒரு சொம்புத்தண்ணியை
வாங்கி மடக்கு மடக்கென்று குடிப்பார்.சட்டையை உதறும்போது கோழிச் சிறகுகள் பறக்கும்.சைக்கிளைத்திருப்பி புறப்படுகையில் பிள்ளைகளின் கோரிக்கையும்,பெண்டாட்டியின் கோபமும் மிதக்கும்.

இப்படித்தான் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் வந்து போனார் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாள் வேலு.இப்போது மாடன்.

இன்னைக்கும் கூட எல்லாம் காத்துக்கிடந்தது.எரிச்சலோடு கேட்டாள் மாடன் வீடு எங்கேயென்று.அப்போதும்கூட தோணவில்லை எல்லோருக்கும் ஒரே ஞாயிறு என்றும்.அவருக்கும் கூட கறித்திங்க எச்சூருமென்றும்.

24.9.10

கனியிருப்பக் காய்கவரும் சாகசம்.

ஜன்னல் வழிப் பார்க்கும் போது மாதுளை மரத்திலிருந்த அணில்களும்,குருவிகளும் வெருண்டோடியது. இயல்பாக ஓடிவிளையாடு வதற்கும் பயந்து ஓடுவதற்குமுள்ள வித்தியாசம்.  அசாதாரணம்.

ஒரு கலவர நாளில். சாத்தூர் நகரின் கடைகள் அணைத்தும் பத்து நிமிட நேரத்துக்குள் மூடியதும்,மனிதர்கள் அங்கும் இங்குமாய் சிதறியதுமான காட்சியைப் பார்க்க நேர்ந்ததோடு ஒப்பிடலாம். ஏழை, ஜாதி,மத பேதமிலாது எல்லோர் கண்ணிலும் பயம் தெரிந்த நேரம் அது.எல்லோரும் வீடு நோக்கி ஓடிய கூட்டத்துக்குள் ஒன்றிரண்டு  காக்கிச்சட்டைகளும் இருந்தது.

இப்படி அணில்,குருவிகள் கலைந்தோடுவது பாம்புகளின் வருகையை முன்னறிவிக்கும்.இன்னும் கூர்மையாய் கவனித்தபோது அப்படியேதும் இல்லை.சுற்றுச்சுவருக்குப் பின்னாலிருந்து அஞ்சு விரல்கள் மெல்ல ஊர்ந்து வந்தது.

கலவரம் போய் சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது.கைகள் ஊர்ந்த திசையில் இரண்டு மாதுளம் காய்கள் தொங்கிக்கொண்டிருந்தது.பின் வாசல்வழியே மாடிப்படிக்குப்போய் கவனிக்கக்கிடைத்த அனுபவம் அலாதியானது.
சுவரோடு ஒட்டியிருந்த இரண்டு உருவம் காய்களைப் பறித்துக்கொண்டு நழுவியது. ஏதும் நடக்காததுபோல முகத்தை வைத்துக் கொண்டதாய்  நினைத்துக் கொண்டு சில தப்படிகள் கடந்தது.தெருக்கோடி போனதும் ஒரே ஆரவாரம், கூச்சல் ரெண்டு சிறுவர்களும் நிலவுக்குபோய் வந்த சாகசக்காரர்களானார்கள்.

மறு நிமிசமே அணில்களும் குருவிகளும் திரும்பிவந்தன. மறுநாள் மரத்தைப் பார்த்த வீட்டுக்காரி வருந்தினாள். மரம் சிரித்தது.

23.9.10

சங்கிலித்தொடர் நினைவுகள்.

' ரெண்டுதரவெ போட்டேன் பிஸி பிஸின்னே வருது '
......

' என்ன பிள்ளைக ஒரு போன் பண்ணத் தேரமில்லாம என்னதான் படிப்போ'

வெங்காயம் உறிக்கும் போதும், வீடு கூட்டும் போதும் அங்களாய்த்தவாறே பொழுதுகடத்தும் தாய்க்காரி.இனிப்புக்கடையில், எதேச்சையாய்,மிக்சர் வாங்கப்போன போது கூட பால்கோவவைப் பார்த்ததும் நிழலடுகிறது பிள்ளை முகம்.விளம்பரத்தில் வரும் இளைஞனைப் பார்த்ததும் இதே கலரில் அவனுக்கொரு சட்டை எடுக்கவேணும் என்று குறிப்பெழுதிக்கொள்கிறாள்.

இதே தவிப்பு அங்கும் இருக்குமா ?.பெரு நகர வீதியில் எதிர்ப்படும் தாய்மார்களின் நடையில்,விடுதித்தேநீரில் இல்லாத சுவையில், அழுக்குத் துணியைத் துவைக்கிற பொழுதில் நிழலாடுமா தாயின் முகம்?.

இந்தக் கேள்விகளைத் தகப்பன் கேட்டான் தாயிடம்.

அவளும் ஒரு எதிர்க் கேள்வி வைத்திருந்தாள், பேருந்தில் பணியிடத்தில்  எதிர்ப்படும், மூதாட்டிகளை சேவிக்கிற கரிசனம் எதற்காகவென.

ஞாயிற்றுக் கிழமை காலையிலே கிளம்பிப் போனார்கள் ஊருக்கு.பேருந்துப் பயணத்தின் பாதியில் கனமழை கொட்டியது.ஓட்டுனர் அழைத்து எஞ்சினுக்கு அருகில் உட்காரச்சொன்னார்.குளிருக்கு இதமாக இருந்தது.ஓட்டுனரிடம் கொஞ்சம் அம்மாவின் சாயல் தெரிந்தது.அது கதகதப்பில உபசரிப்பிலா என்று பிரித்துப்பார்க்க முடியவில்லை அவனுக்கு. கைப்பையில் கனத்தது அம்மாவின் நினைவுகளும் அவள் பல்லுக்கு  இதமாக மெள்ள கொஞ்சம் இனிப்புகளும்.

இண்டு இடுக்கிலிருந்து கூடப் பூக்கும் உறவுகளின் நினைவுகள்.
எங்கு தோண்டினாலும் கூடத் தட்டுப்படும் ஈரம்.

12.9.10

அச்சிலேறாத பாடங்கள்

பெருமாளு, நூத்தி ஏழுக்கு யூரின் கேன் வை,
பெருமாளு, சிசேரியன் பேசண்டுக்கு துணிமாத்து,
நூத்திப்பண்ணண்டுல, டயோரியா பேசண்டு ரூம்ல லட்ரின் க்ளீன் பண்ணு,
அறிவே கிடயாதா, இங்க பாரு ஆரஞ்சு தோலு கெடக்கு,......
என்னத்தா எனக்கு இன்னுமா டிபன் வாங்கிட்டு வரல......

அந்த தனியார் மருத்துவமனையெங்கும் இந்தப் பெயர் அங்கும் இங்கும் இழுபட்டுக் கொண்டே இருக்கும். கூப்பிடுகிற திசையெங்கும் முனுமுனுத்துக்கொண்டும், பதில் குரல் கொடுத்துக்கொண்டும் ஒரு சின்னப்பெண்போல அலைகிற அந்தம்மாவுக்கு வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். வேலை ஓய்ந்த நேரங்களில் கார் ஷெட்டுக்குப்பக்கத்தில் வெத்திலை போட்டுக்கொண்டிருப்பார்கள். காய்ச்சல் தலை வலியென்றால் வரக்காப்பி வாங்கி அஞ்சால் அலுப்பு மருந்து கலந்துதான் குடிப்பார்கள்.  மாத்திரை, சிரிஞ்ச், ஊசி,  டானிக் பாட்டில், குளுக்கோஸ் பாட்டில் என்பதெல்லாம், அவர்களுக்கு குப்பையில் சேர்க்கிற பொருள் என்பதுதான் பொருள்.  

பேறுகாலத்துக்கு அனுமதிக்கப்பட்ட மனைவியோடு ஒருவார காலத்தில் தாதிப்பெண்களும், பெருமாளம்மாவும்  எங்களோடு ரொம்பவும் சிநேகமாகிப்போனார்கள். சீருடையோடு  சாயங்காலங்களில்  வரும் எல் கே ஜீ படிக்கிற முதல் பையனுக்கு பாடம் சொல்லித்தருமளவுக்கு தாதிப்பெண்கள் மிக அன்னியோன்னியமாயிருந்தார்கள். எடுபிடி வேலைகள் குறைந்திருக்கிற நேரங்களில் பெருமாளம்மா எங்கள் அறைக்கு வருவதும், துணைக்கிருக்கிற மாமியாரோடு வெத்திலையும் ஊர்க்கதைகளும் பகிர்ந்துகொள்வது வாடிக்கையானது. அப்போது பையனைச் ''சின்னவரே, சாமி..  ஒங்க குட்டித்தம்பிய நாந்தூக்கிட்டுப் போறேன் '' என்று கொஞ்சும். எல்லோரையும் போலவே அவனும் '' ஏ பெருமாளு '' என்று கூப்பிட்ட போது வலித்தது. ஆனாலும் பெருமாளம்மாவின் முகத்தில் ஏதும் சலனமில்லை. அதட்டி '' ஆண்டி '' என்று கூப்பிடச் சொன்ன போது 'ஆண்டி' என்பதுவும் பேர்தானே என்று சொன்னது. பிறகுதான் அத்தை என்று கூப்பிடச் சொன்னேன். அவனும் வாய்க்கு வாய் அத்தை என்று கொஞ்சினான். தாதிப்பெண்களையும் அப்படியே கூப்பிடச் சொன்னான். அப்போதெல்லாம் பெருமாளம்மா முகத்தில் மின்னல் வந்து குடிகொள்ளும்.

நாங்கள் ஆசைப்பட்ட அந்த நாள் வந்தது.டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்னால் பெருமாளம்மாவுக்கு ஐம்பது ரூபாய் சன்மானமாகத் தந்தோம்.பிடிவாதமாக வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டு, பிறகு வாங்கிக்கொண்டு கானாமல் போய்விட்டார்கள். அது செய்த உதவிக்கும் அன்புக்கும் பதிலாகப் பணம் தந்து விட்ட திருப்தியிருந்தது. கணக்கு நேர் செய்யப்பட்டதாக எண்ணிக்கொண்டு வீடு வந்தோம்.

ஆரத்தி தீபத்தோடு புதுக்குழந்தையின் வருகை வீடெங்கும் சந்தோச ஒளி வீசிக்கொண்டிருக்க, மூத்தவன் மட்டும் இது எதிலும் ஒட்டாமல் ஒரு குட்டியூண்டு சைனாக்காரின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தான். அது அவனுக்கு எப்படி வந்தது என்று தெரியாமல் நண்பர்கள் சொந்தங்கள் என ஒவ்வொருவராக அந்தச்சைனாக்காரோடு பொருத்திப் பார்த்தோம். யாருமே பொருந்தவில்லை. ஒரு வேளை பக்கத்திலிருக்கும் கடையில் திருடியிருக்கலாமோ என்ற சந்தேகப்பல் கூட வளர ஆரம்பித்தது. ஆனால் அவனோ, '' இது அத்தை கார் ''  சாவகாசமாகச்சொல்லி விட்டு விர்ரென்று அறைமுழுக்க அலைகிற அந்தக்காரின் பின்னால் போனான். வீடு மொத்தமும் திரும்பிப்பார்த்தது. குழந்தைகளைத்தவிர  எல்லோரும் குற்றவாளிக் கூண்டிலிருந்தோம்.  பெருமாளம்மாளின் குள்ள உருவம் அன்னாந்து பார்க்க முடியாத உயரத்தில் இன்னும் இருக்கிறது.


பரனிலிருந்து     

9.8.10

அங்குமிங்கும் - பராக்குபார்த்தல்.

சரவனா ஸ்டோர் நெரிசலில் இருந்து தெரித்து வெளியே வந்தபோது எதிர்த்த சாரியில் ஒரு கிண்ணம் பப்பாளி துண்டுகள் வாங்கிச்சுவைத்தது ஆசுவாசமாக இருந்தது.தின்றுகொண்டிருக்கும்போதே கடைக்காரம்மாவின் பையன் வந்தான் ' இந்த மதியானத்துல தூங்குது பாருபா கடயாண்ட குந்திகினா பொயப்ப பாக்லாம்,தூங்குனா இன்னா ஆவுறது'என்று என்னிடம் தன் மகனைப்பற்றி புகார் செய்தாள்.அதற்கு அவன் சொன்னபதில் பப்பாளியை கசப்பாக்கியது.போட்டுவிட்டு நடையைக்கட்டினேன்.இல்லை பிதுங்கி பிதுங்கி வெளியேறினேன்.நடைபாதையெங்கும் வியாபாரிகள் கோலியாத்தை எதிர்க்கிற தாவீதின் குரலோடு சரவனா ஸ்டோ ரொடு மல்லுக்கு நின்றார்கள்.புல்லாங்குழல் இசைத்து விற்றுக்கொண்டிருந்த வடநாட்டு பையன் என் சட்டைப்பையில் பிதுங்கிய ரூபாய்த்தாளை பாதுகாக்கச்சொன்னான்.என்னை விட அந்த இருபது ரூபாயின் மதிப்பு அவனுக்குத்தான் அதிகம் தெரியும்.

அங்கிருந்து புத்தகம் வாங்கவேண்டுமென்கிற தீர்மானத்தில் பாரதி புத்தகாலயம் போனேன்.சென்னை தேனாம்பேட்டை சிக்னலுக்கெதிரே போகும் இளங்கோ சாலையில் அந்த புத்தகக்கடை இருக்கிறது.அங்கே வாங்கிய புத்தகங்கள் சிலவும் சுட்ட புத்தகங்கள் பலவும் என்னோட கையிருப்பு.கடையில் ஆறு புத்தகங்கள் சுடச்சுடக்கிடந்தது. லதா ராமகிருஷ்ணனின் மொழியாக்கத்திலும் தொகுப்பிலும் வந்த கருப்புக்குரல்கள் கவிதைத்தொகுப்பு,இலாவிசெண்ட் எழுதிய தமிழ் நிலமும் இனமும்,அப்புறம் இரா.முருகவேள் மொழிபெயர்த்த ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மூன்றும் வாங்கினேன். சட்டைப்பயில் கணம் குறைந்தது.தெரிவுசெய்த மற்ற புத்தகங்களிடம் வாய்தா வாங்கிக்கொண்டு கிளம்பியாயிற்று.

அரசு விரைவுப்பேருந்தில் பயணம். வண்டி ஏறும்போது விக்கிரவாண்டி உணவு விடுதிக்கு போகக்கூடதென்று வேண்டிக்கொண்டேன்.அப்படியே உன்னால் முடியாது போனாலும் அந்தநேரம் பார்த்து உரக்கத்தையாவது கொடுத்துவிடு கடவுளே என்று துணைக்கோரிக்கையையும் வைத்தேன்.பலிக்கவில்லை.மூத்திர நெடியும்,கட்டாயக்குரலும் உலுக்கிப்போட எழுந்து கீழிறங்கிப்போனேன்.வயிறு இரைச்சல் தாங்க முடியவில்லை.ஒரு பட்டர் பண் போதுமென்று வாங்கினேன்.பரவாயில்லை எட்டுரூபாய்தான் தீட்டினான்.

வண்டி மீளக்கிளம்பியதும் அந்த தாய்லாந்துக்காரப் பயணி மீண்டும் சத்தமிட்டான்.'நீங்கள் இந்தியர்கள் எல்லோரும் மோசடிப்பேர்வழிகள்' என்று ஆங்கிலத்தில் உரக்கத் திட்டினான். பக்கத்து இருக்கையில் இருந்த ஐடி ஜோடி ஆங்கிலத்தையும் நாட்டுப்பற்றையும் எடுத்துக்கொண்டு எதிர் மல்லுக்குப் போனார்கள்.நீங்கள் இளைஞர்கள் பொறுப்பற்றவர்கள் அநீதியைக்கண்டு ஆத்திரம் கொள்ளத்தவறியவர்கள் என்று மீண்டும் கத்தினான்.'கூர்க்கா நல்ல மப்புல இருக்கான்' என்று பக்கத்துப்பயணி சொன்னார்.ஒருவேளை அவன் மதுக்கிறக்கத்தில் கூட இருக்கலாம்.
அவன் சொன்னதில் தவறேதும் இருப்பதாகப்படவில்லை.     

நேற்று களவானி படம் பார்த்தோம் திருட்டு விசிடியில் தான்.அது அயல் சினிமாவிடமிருந்து களவாங்காத மண்னின் கதை.ரெண்டு ஊர்.பகை. கொலை விழுகாத கதை.விமல் குழுவும்,கஞ்சாக் கருப்புவும் சேர்ந்து வயிற்றைப்புண்ணாக்குகிறார்கள்.எந்திரன்களை அடக்குகிற விசைப்பொத்தான்கள் இப்படியான நேர்மையான கதைகளில் தானிருக்கிறது என்று உரக்கச் சொல்லவேண்டும்.

15.3.10

தண்டவாளம் விட்டு இறங்காத ரயிலும், செவத்திக் கிழவியின் கனவும்.

ரயிலைப்பற்றிய அறிமுகச் சித்திரம், அபாயச்சங்கிலியின் பயமுறுத் தலோடும்,எட்டாத உயரத்திலிருக்கும் அதன் படிகளைப் போல் ஏக்கம்  நிறைந்த   இன்னொரு உலகமாகவும் இருந்தது. ஒண்ணாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முதல் முறையாகப்பார்த்தது. அதற்கு முன்னா செவி வழியேறிய சித்திரமாகத் தான் இருந்தது. சாத்தூருக்குப் போவதும் தனலட்சுமித் தியேட்டரில் சிவாஜி படம் பார்ப்பதுமே லட்சியக்கனவாக இருந்தகாலம்.

பகலில் ஒரு முறையும்  இரவில் ஒரு முறையும் வந்து போகும் கொடைக் கானல் பஸ்ஸில் நாங்கள் பயணம் செய்யலாம் என்பதே நம்ப முடியாத விசயமாக இருந்த காலம். நிறுத்தி வைத்திருக்கிற மாட்டு வண்டியின் மேக்காலில் எறிக்கொண்டு  கற்பனை ரயில் பஸ்ஸில் பறந்து போவதைத்தவிர, வாகனப் பிராயாணம் ஏக்கமாக மட்டுமே இருந்தது.

ஊருக்குள் குப்பையள்ள வருகிற கம்மாப்பட்டி நாயக்கமார் மாட்டு வண்டிகள் பளப் பளவென கண்ணைப்பறிக்கும், காளை மாடுகள் அவர்களைப் போலவே மினு மினுப்பாயிருக்கும். வண்டியோட்டிகள் மிகச் சிறந்த வித்தைக் காரர் களாகத் தெரிவார்கள். அவர்களைச் சினேகம் பிடித்துக்கொண்டு  திரும்ப வருகிற வெத்து வண்டியில் ஏறி ஊனு கம்பைப்பிடித்து நின்ற படி பயணம் செய்கிற அந்த தருணத்திற்காக ஏங்கிக்கிடந்ம். பார வண்டியின் பின்னால்  நீட்டிக் கொண்டிருக்கிற உத்திரத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டே போவதும் வண்டிக்காரர் இறங்கி வந்து சாட்டைக்கம்போடு விரட்டும் போது தெறித்து ஓடுவதும் சாகசமாக இருந்தது. 

மதுரைப்பக்கம் கல்லுடைக்கப் போனவர்கள், சம்பளமில்லாமல் கஞ்சித் தண்ணியில்லாமல், ராவோடு ராவாகத்  தப்பித்து நடந்தே திருமங்கலம் வந்து அங்கிருந்து கள்ள ரயிலேறி வீடு வந்தார்கள். அவர்களை ஊர்ச்சனம் ஆம்ஸ்ற்றாங்கைப் போலப் பார்த்தார்கள். ஓய்வு நேரங்களில் அவர்களை உட்கார வைத்து ரயில் பயண சாகசங்களைப் பற்றிக் கேட்டார்கள். அவரவர் புரிதலில் ரயில் பிம்பங்கள் விவரிக்கப்பட்டது, ஆச்சரியம் மேலோங்கக் கேள்விகளில்லாமல் பிரமித்துப் போனார்கள்.

''ஏய்யா எங்கள மாதிரிக் குருட்டுக் கிழவியெல்லாம் ரயில்ல ஏறலாமா''
செவத்திப்பெரியம்மை அப்பாவியாக் கேட்பாள்,

''குறுக்க கூடிப்போயி கொல்லபட்டிக்கிட்ட தண்டவாளம் இருக்கு நடுவில நில்லு, துட்டு வாங்காம ரயிலு ஒன்னிய ஏத்திரும்''.

கதை கேட்கிற செல்லையாப் பெரியன் சொல்லவும், சனங்கள் சிரிக்கும் அதுக்கு பெறகும் அவளுக்குப்புரியாது. அவள் அப்படியொன்றும் குருடியில்லை, படிக்காதவள். விவரந்தெரிந்தவர்கள், படித்தவர்கள் எல்லோரிடத்திலும் தன்னை அப்படித்தான் அறிமுகப்படுத்திக் கொள்வாள். சாகுமாட்டும் அவளுக்கு ஐம்பது பைசா, எழுபத்தைந்து பைசா எனச்சொல்லத் தெரியாது. ரெண்டு கால் ரூவா, மூனு கால் ரூவா என்று தான் சொல்வாள். அவள் கடைக்கு வந்தாளென்றால் மாரியப்ப நாடார் கதிகலங்கிப்போவார்.

'' ஒரு பொடி மட்ட யாவரஞ்செய்ய ஒரு மணி நேரங்கணக்குச் சொல்லனும், ஏத்தா தாயி, மஹராசி ஆளில்லாத நேரமாப் பாத்து கடைக்கு வாயேன்''
பயந்து சொல்லுவார்,

 ''ஏம்புருசங்கிட்டச் சொல்லனுமா''

என்று வேறு மாதிரிப் பயமுறுத்துவாள். ஒரு நூறு ரூபாயை, சில்லறையாக மாற்றி எல்லாம் அஞ்சு ரூபாயாகக் கையில் கொடுத்தாள் போதும் அவளுக்கு ஒரு மாதப்பொழுது கழிந்து விடும்.

ரயில் கதையெல்லாம் கேட்டு முடித்து விட்டு

''அத்தாம்பெரிய ரயில் எத்தனை கூட  சாணி போடும்''

என்று கேட்டார்கள்.அதுக்குப்பின்னர் '' சாணிச்செவத்தி '' யாகிப்போனார்கள்.


ஊர் தாண்டிய எல்லை கடந்து சாத்தூர்கூட அறியாத அவர்கள் ரயிலை நேரில் பார்த்திருப்பார்களா ?

13.3.10

புரிதல்

இரு சக்கர வாகனத்தில் இருந்து இடறி விழுந்துவிட்டார்.காலில் பலத்த காயம். கூட்டம் கூடிவிட்டது. காயத்திலிருந்து குருதி வழிந்து கொண்டிருந்தது.நடக்க இயலாமல் இருந்தார்.

அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான யோசனைகள் நடந்தது. மருத்துவமனைப் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டது. அந்த மருத்துவமனைதான் பக்கத்தில் இருக்கிறது போகலாம் என்று முடிவானதும். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டபடி மயங்கிப்போனார்.

கண்விழித்தவுடன் 'என்ன இங்க கொண்டுவந்தது யாருன்னு' கேட்டார்.கொண்டுவந்தவர் சங்கோஜத்தோடு அவர் வாழ்த்து மாலையை ஏற்கவந்தார். 'இன்னு ஒரு நிமிசம் எம்முன்ன நின்ன ஒன்ன கொன்னுருவன் ஓடிப்போ' என்று விரட்டினார்.ஆளாளுக்கு என்னவென்று கேட்டார்கள்.

 ''......''.மருத்துவமனைக்கு கொண்டுபோகாமல் காப்பாற்றுங்கள் என்று சொன்னதையும் மீறி அதே மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்ததை அந்த மருத்துவர் முன்னிலையிலே எப்படிச்சொல்லுவார்.

29.12.09

இன்னொரு கோயிலும், இன்னொரு தாயும்.

திருச்செந்தூரில் இறங்கும்போது கடல் காற்று சில்லென்று முகத்திலடித்தது. நிறைய சலிச்ச வாசம் வீசுகிற காற்றில் மீன்களின் வாசமும் அடங்கியிருந்தது. எதிர்ப்படுகிற பேருந்தின் பெயர்ப் பலகையினையெல்லாம் உற்றுப்
பார்த்தான்.பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிக்கொண்டிருந்த.அவன் அடுத்த பஸ் வர இன்னும் அரைமணி   இருக்கு  வா  தம்மடிப்போம் என்று சொன்னான். யாரோ  உற்றுப்பார்த்து விட்டுபோனார்கள். இந்தப்பெட்டிக்கடையில தான் சிகரெட் வாங்கி ஒளிஞ்சு ஒளிஞ்சு தம்மடிப்போம். அப்ப ரஞ்சன் ஒரு சிகரெட் அடிச்சுட்டு நாலு அசோகாபாக்குப் போடுவான். அவங்க க்றிச்டியன்ஸ், ரஞ்சன் தெரியும்லா. இந்தப் பஸ்டாண்ட், கடக்கரை, ரைல்வே ஸ்டேசன், எல்லாம் எங்க ஆளுகைìகுள் இருந்த பகுதிகள்.அவன் கண்ணுக்குள் எண்பதுகளின் கல்லூரிக்காலம் மினுங்கியது.   ஒரு வலத்தியான பெரியவர் 'எப்ப வந்தெ எப்பிடிப்பூ இருக்கா, நேத்தே வருவேன்னு அம்மா வாசல்லயே உக்காந்திருந்தாங்க' என்று சொல்லிவிட்டு கிளம்பிப் போனார். முதிர்ச்சி வந்தால் போதும் ஊர்ப் பெரியவர்கள் எப்போதும் எல்லோரையும் தன் பிள்ளை, தன் பேரனாக்கிப் பாவிப்பார்கள்.


இன்னும்  ஒரு மணி நேரத்தில்   அம்மவைப் பார்க்கப்போகிறோம் என்கிற நினைப்பு வந்ததும் தைப்பொங்கலை, பங்குனிப்பொங்கலை, எதிர்னோக்குகிற அவஸ்தை இருந்தது. கூடவே இன்னொரு சஞ்சலமும் இருந்தது. அதை அப்புறம் சொல்லலாம்.  பால்ய கால நன்பண் இங்க தான் இருக்கான் வா பாப்பொம்'' என்று சொல்லி விட்டு முன்னல் நடந்தான். கோவில் வாசல் போகிற அலங்கார வலைவுக்கு அருகில் சைக்கில் ரிக்சாக்கள் நின்றிருந்த பகுதியில் நின்றான். ரெண்டு மூணு பேர் வந்து கோயிலுக்கா என்று கேட்டார்கள் இல்லை என்று சொல்லிவிட்டு திரும்பி வந்து விட்டான். வீடு ரொம்ப தூரமா என்று கேட்டேன் இல்ல என்று சொல்லிவிட்டு சிரித்தான்.செரி வா பஸ் வந்துருக்கும் திரும்ப நடந்தவேகத்துக்கு ஈடு கொடுக்க நான் ஓடும்படி ஆனது அவன் ரொம்ப உயரம் நான் கொஞ்சம் கம்மி. நகரப்பேருந்தில் மொத்தம் இருபது நபர்கள் மட்டும் இருந்தார்கள். நாங்கள் இருவரும் உட்கார்ந்து கொண்டோ ம். இரண்டு கிலோ மீட்டர் கடந்தவுடன் வாழையும் நெல்லும் சாலையின் இரண்டு புறமும் பொறாமைய்யொடு செழித்துக்கிடந்தது.


நெல்வயல்களைக் கடந்து வந்த காற்று பசிய வாசத்தோடு வந்தது. வாசங்கள் உள்ளூர நினைவுகளை எழுப்பிவிடும். வயல் காற்று வீசும் போதெல்லாம், செல்லிமுத்துநாடார் கிணற்றில் மல்லாக்கமிதந்த ரத்தினத்தாயென்னும் பேரழகின் உருவமும், அந்தச்சாவில், சாதீய வன்மத்தின் கொடூரம் முதன்முதலாய்  உணர்ந்த  ஞாபகங்கள் தவிர்க்கமுடியாது வந்துசேரும். எப்போதுமே இந்தக்காற்று இப்படித்தான் அது பூக்களுக்கென்றும், பீயாங் காட்டுக்கென்றும் விருப்பு வெறுப்பு சுமந்து வீசுவதில்லை.சாலையோரம் ஒரு வாய்க்கால் செருக்கோடு தண்ணீரைக் கடத்திக் கொண்டிருந்தது. ஓடைகளில் சம்பு அடர்த்தியாக முழைத்துக்கிடந்தது அதன் பூக்கள் ஏதோ வேற்று பிரதேசத்து நிலப்பரப்பைப்போல பரவசம் உண்டாக்கியது. இதுக்குள்ள தான் தூக்கனாங்குருவிகள் கூடுகட்டியிருக்கும். உள்ளே போனா கொத்து கொத்தா தொங்கும். முட்டையெடுத்து அவிச்சுத்திம்போம் அப்போ மாரப்பன் எப்போதும் கூடவே இருப்பான்.குரவ மீனெல்லாம் ரொம்ப அனாயசமா பிடிப்பான். குரவ மீன் முள்ளு குத்துச்சுன்னா ரெண்டு நாளைக்கு கடுக்கும்.

இப்படிக்கதைகள் சொல்லிக் கொண்டே வந்தவன் தூங்கிப்போனான். கதை சொல்லிகளைத்தூங்க வைத்த விநோதம் என்னவாக இருக்கும். ஒரு வேளை அந்தக்குளிர் காற்று, அந்தத்தளிர் நிலங்கள் ,பின்னிழுத்துக்
கொண்டுபோய் மீண்டும் அவனைத் தாய் மடியில் கிடத்தியிருக்கும். தூங்கட்டும்.எனக்கு தூக்கம் வரவில்லை நான் அந்தக்காடு,வயல்கள் தண்ணீரோடும்,  காற்றை கிழித்துக் கொண்டு நீச்சலடிக்கும் பறவைகளையும் பார்த்துக் கொண்டு போனேன்.பூச்சிக்காடு வருவதற்கு முன் முழித்துக்கொண்டான். பேருந்தை விட்டு இறங்கியதும் சுற்றும் முற்றும் பார்த்தான் யாரும் இல்லை.வீட்டுக்குபோனா தம்மடிக்க முடியாது இரு ஒரு தம்மடிப்போம் என்று சொல்லிவிட்டு ஒரு பெட்டிக் கடைக்குப் போனான்.

வீட்டுக்கு நடந்து போகிற வழியில் ரெண்டொரு பேர் எப்பப்பூ வந்தா,என்று விசாரித்தபடி முகம் மலர்ந்தார்கள்.அவனையொத்த முகஜாடையிருந்த ஒரு பெரியவரைக்காட்டி எங்க சித்தப்பா, கொஞ்சம் சண்ட என்றான் அவரும் ஓரக்கண்ணால் பார்த்தபடி கடந்து போனார். கூரைத்தாழ்வாராமும் ஓட்டுக்கூரையும் நார்க்கட்டிலும்,புராதான மரப்பீரோவும்,ஒரு பப்பாளி மரமும்,அடர்ந்த பிச்சிக் கொடியும் புதிதாய்க்கட்டிய ஒரு கழிப்பறையுமான வீட்டுக்குள் நுழைந்தோம்.முற்றத்தில், நடைபாதையில், புழக்கடையில், நடுவீட்டுக்குள் அம்மா அம்மா அம்மா என்ற வலைச்சொல்லை வீசி வீசி எறிந்து விட்டு திரும்பிவந்தான்.நான் தேடிவந்த அந்த பிம்பம் அடுப்பங்கரையில்  இருந்து பிரசன்னமானது.அவன் ஓடிப்போய் கட்டிப்பிடித்துக் கொண்டான். கொஞ்சம் எட்டத்தில் இருந்தேன். எப்படி அவர்களோடு முகமன் சொல்லிக் கொள்வதென்னும் குழப்பம் என்னை ஆட்டுவித்தது. முதன் முதலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குள் நுழையும் போது எனக்கிருந்த குழப்பம் இருந்தது.கையெடுத்து கும்பிட்டேன். எனது உடல் தரையில் கிடந்ததுபோல இருந்தது.

2.12.09

ஒரு பரபரப்பு நிகழ்வின் மறுபக்கம். to the last bullet


9/11 மற்றும் 26/11 இந்த இரண்டு தேதிகளைக்கேட்ட மாத்திரத்தில் பயங்கரவாதம் என்கிற பூச்சாண்டியின் உருவம் நிழலாடும். உலகமெங்கும் தீவிரவாதம் இந்த நேரத்தின் உடனடிச் சவாலாக முன் நிறுத்தப்படுகிறது. அந்த அரணுக்குள் அந்தமாயக் கேடயத்துக்குள் மறைந்துகொண்டு அதிகாரம் தனது மறைமுக செயல்திட்டங்கள் அணைத்தையும் வெகு இலகுவாக நிறைவேற்றிக்கொள்கிறது.




இதோ மும்பை தாஜ் சொகுசு விடுதித் தாக்குதல் நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. அந்த தக்குதலில் களப்பலியான உயிர்களில் அசோக் காம்டெ,கார்கரே,சலஸ்கர் எனும் பெயர்கள் முக்கியம் வாய்ந்தவை.தாக்குதலை முறியடிக்கப்போன அவர்கள் வீரமரணத்தை ஏந்திக்கொண்டார்கள். சம்பவ இடத்தின் தீவிரத்தை உடனடியாக காவல் துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்லியும் நெடுநேரம் போதிய படைகள் அனுப்பப்படவில்லை.காமா மருத்துவமனையில் நாற்பது நிமிடம் இரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த காவல் உதவி ஆணையாளைர் அசோக் காம்டே கேட்பாரற்று இறந்து போனார்.



இப்படியான இருட்டடிப்பு செய்யப்பட்ட சேதிகளோடு ஒரு புத்தகத்தை தனது காதல் கணவருக்கு நினைவஞ்சலியாக்குகிறார் வினிதா காம்டே. மறைந்த உதவி ஆணையாளர் அசோக் காம்டெயின் மனைவியான வினிதா எழுதிய to the last bullet எனும் இந்தப்புத்தகம் மும்பை கவல்துறை மற்றும் அரசியலில் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது. வெளியிட்ட நாளிலே விற்றுத்தீர்ந்து விட்ட அந்த விவாதப் புத்தகத்தின் வெளியீட்டு நிறுவணமான அமேயா பப்ளிகேஷன் இது இந்திய புத்தக வரலாற்றில் ஒரு திருப்பம் என கருதுகிறது.



இறந்தவர்களின் பெயருக்குப்பின்னால் ஒளிவட்டம் வரைந்துவிட்டு தனது பாதுகாப்பு ஓட்டைகளை மறைக்கிற அரசின் எல்லா பாக்கங்களையும் விவாதப்படுத்த வேண்டியது அத்தியாவசியமாகிறது.

18.11.09

கலவரத்தில் நசுங்கிய இயல்பான மனிதாபிமனம்.

மதுரையில் துணிக்கடையில் ஒரு சாத்தூர்க்காரரைப் பார்த்துவிட்டால் உடனே எதோ பொக்கிஷம் கிடைத்தது போல அவர்களைப் பற்றிக் கொள்ளச் சொல்லுகிறது. நீங்க பைபாஸ் ரோட்ல அந்திக்கட வச்சிருக்கீங்கள்ள என்று முகமன் சொல்லிக்கொண்டு சிநேகம் தொடரச் சொல்லுகிறது. சென்னையில் யாரையாவது விருதுநகர் மாவட்டத்து மனிதரைச் சந்திக்க நேர்ந்தால் எதோ உறவுகளைச் சந்திக்க நேர்ந்தது போல ஆகிவிடுகிறது. குண்டூர் தாண்டிவிட்டாலோ ஒட்டு மொத்த தமிழகமும் ஓரினம் ஆகிவிடுகிறது.


இப்படித்தான் கட்டாக் ( ஒரிஸ்ஸா) அகில இந்திய மாநாட்டுக்குப் போகும்போது நாங்கள் 48 பேர் ஒரு முன்பதிவு செய்யப்படாத பெட்டியை ஆக்ரமித்துக் கொண்டோம். கூத்தும் கும்மாளமுமாக கழிந்த ரெண்டு நாள் ரயில் பயணம். யாராவது ப்ரெட் ஆம்லெட் வாங்கினால் அது பல பங்குகளாகப் பிரிக்கப்படும். சிகரெட் குடிக்கிறவர்கள் ஆரம்பத்தில் கர்ணர்களாகவும் நாள் ஆக ஆக 'மாந்தோப்புக்குயிலே சுருளிராஜனாகவும்' எதிர்ப் பரிமாணம் எடுக்கிற விந்தைகள் நடந்தது.மிக நீண்ட கிருஷ்ணா ஆற்றுப் பாலத்தைக் கடந்து ரயில்போகையில் அப்படியே அந்தரத்தில் மிதக்கிற ஆர்ப்பரிப்பு தொற்றிக்கொண்டது. விசாகப்பட்டிணம் நிலையத்தில் சுடச்சுட அவிச்ச முட்டைவாங்கி மிளகாய்ப் பொடி சேர்த்து தின்ற போது பலபேருக்கு பல்விளக்கினோமா எனும் சிந்தனையில்லாமல் போனது.


தேநீர் குடிப்பதுகூட லாகிரி எனக் கருதும் தோழர்கள் கூட கொஞ்சம் சரக்கடித்துவிட்டு மேல்சட்டையை ஏற்றிக்கட்டி நடனம் ஆடியதும். ரெண்டு ரூபாய் சைக்கிள் வாடகையில் நான்குபேர் ஏறிக்கொண்டு கட்டாக் வீதியில் ஒரு ஆளும் கட்சி மந்திரிபோல எழுந்து நின்று வாக்குகேட்டதும். " பேரன்பு கொண்ட கட்டாக நகர வாக்காளப்பெருமக்களே, கெட்டவார்த்தைச் சின்னத்தில் போட்டியிடும் அன்புச் சகோதரர் கணேசன் அவர்களுக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யக் கேட்டுக் கொள்கிறேன்" என்று மணியண்ணன் செய்த அட்டகாசம் அந்த நடு ராத்திரி ரெண்டு மணி கட்டாக் வீதியில் இன்னும் உறைந்து கிடக்கிறது.


சுப்புராஜ் அண்ணன் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு, கரம் சாயா, போண்டா வடை, மணிப்பாறைப்பட்டீ, மணிப்பாறைப்பட்டீ.. எனக்கத்திக் கொண்டு ஒரு ரயில் நிலையத்தில் கோணங்கிச் சேட்டை பண்ணிக் கொண்டிருந்தார். அதே ரயிலில் பிரயாணம் செய்த மணிப்பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவவீரர் ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேர் தூரப்பிரதேசத்தில் கைபற்றிக்கொண்டு பேசிய நெகிழ்வின் தருணங்களை துல்லியப்படுத்துவது எனக்கு கடினம்.


டெல்லி கரோல்பாக் வீதியில் போய்க்கொண்டிருக்கும் போது 'எலே ஞொக்காலி' எனும் வார்த்தையக் கேட்டுப்பாருங்கள் விகல்பமில்லாத தமிழ்ப்பாலருந்திய சந்தோசம் வந்து சேரும். அங்கிருந்து எஸ்ற்றிடி போட்டு வீட்டுக்காரியுடன் பேசும்போதுபெருகும் கண்ணீரும் கதகதப்பும் "எப்ப வருவீக" என்று கேட்கும் போது சுருங்கிப்போகும் உலகத்தூரம். தூரக்கிழக்கு நாடுகளில் எப்படியெனத் தெரியவில்லை இன்னும் அடர்த்தியாக இருக்கலாம்.


ஒரு நாள் சென்னை ஜெமினி பாலத்துக்கிழே இருக்கும் எமரால்டு தியேட்டரில் மமூட்டியின் 1932 படம் பார்க்கப்போனோம்.மாப்ளாக் கலவரத்தின் தியாகத்தோடு ரத்தம் தோய்ந்த வரலாறு அது. நான், மாது, பீகே,சோலைமாணிக்க அண்ணன் எல்லோரும் நுழைவுச்சீட்டுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தோம். அந்த வரிசையில் வேஷ்டி கட்டிய நபர் ஒருவரைப் பார்த்தேன். தெரிந்த முகமாக இருந்தது. மூளையைக் கசக்கிக் கொண்டு இருந்த போது மம்மூட்டியின் ' தின ராத்திரங்கள் ' பற்றி மாது சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சில நிகழ்வுகளைச் செறிவூட்டிச் சொல்லுவதைக் கேட்கவேண்டும், கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒரு படைப்பாளி.


சற்று திரும்பிப் பார்த்தபோது அந்த வேஷ்டிக்காரர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவர் நம்மை வச்சகண் வாங்காமப் பார்த்தா அது நம்ம முதுகில் குறுகுறுக்குமாம் கிராமத்தில் யாரொ சொல்லக் கேட்டது. அந்த வரிசையில் ஒரு அழகான மண்ணிக்கணும், ஒரு நேர்த்தியாக உடை உடுத்திய வாலிபனும் இன்னொரு விபச்சாரப்பெண்ணும் நொடியில் கண்டதும் காதல் கொண்டார்கள். பிறகு இடைவேளைக்கு முன் அவள் அவனது கைக்கடிகாரம்,மணிப்பர்சுடன் எஸ்கேப்பினாள் அது கிடக்கட்டும் . அந்த வேஷ்டிக்காரர் இப்போதும் கூட குறுகுறு வெனப்பார்த்துக் கொண்டிருந்தார். நான் தனியே போய் யோசித்தேன். ஆமாம் சாத்தூர் முக்குலாந்தக் கல்லில் ஒரு ஆயத்த டெலிபோன் பூத் வைத்திருந்தவர் அவர், எனது நண்பனின் நண்பன் அவரது உடன் பிறந்தவன்.


விடைகிடைத்த சந்தோசத்தில் நேரே போய் ' நீங்க சாத்தூர் தானே ' என்று கேட்டேன். மருண்டு போய் இல்லை என்றார் நீ யாரு என்று கேட்டார் சொன்னேன் நான் சாத்தூரே இல்லை என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார். நுழைவுச்சீட்டு எடுத்துக்கொண்டு உள்ளே போனோம். நான் மாதுவிடமும் பீகேவிடமும் இதைச்சொன்னேன். அப்போதும் கூட மறைந்திருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். படம் ஆரம்பிக்குமுன்னாலேயே தியேட்டரைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. எனது கண்டுபிடிப்பும், விடையும் சிதைந்து போய் நான் மீண்டும் மூளையைக் கசக்கினேன்.


இரண்டு தரப்பிலும் சேர்ந்து மொத்தம் பதினைந்து பேர்களைப்பலி கொண்ட ஒரு கலவரம் நடந்தது சாத்தூரில்.சகஜ வாழ்வு பாதிக்கப்பட்டு ஒரே ஊரில் இருந்த தெருக்கள் வேறு வேறு நாடுகள் போலானது ஓவ்வொரு தெரு முனையிலும் காவலர்கள் உட்கார்ந்து பாண்டியாடிக் கொண்டிருந்தார்கள். சாத்தூரின் தண்ணீர்ப் பஞ்சம் மறந்துபோனது. இரவில் குடங்களோடு தண்ணீருக்கு அலைய பயம் தடுத்தது. நாய்களும் காற்றும் மட்டுமே பயமில்லாமல் அங்குமிங்கும் அலைந்தது. அப்படி ஒரு கலவரம் சாத்தூரில் முன்னதாக நடந்திருந்தது.


நெடுநாள் கழித்து சாத்தூரில் நடந்த ஜாதிக் கலவரத்தில் தொடர்புடையவர் பட்டியலில் அவரும் ஒருவர் எனத்தெரிந்து கொண்டபோது இன்னும் பல விடை கிடைக்காத மனிதாபிமானக் கேள்விகள் என்னைச் சூழ்ந்துகொண்டது.

25.10.09

டக்ளஸ் ஹச். மார்க்வெசும், மூலைவீட்டு முருகேசனும்.

ஊர் ஒதுக்கத்தில் திருட்டுத் தம்மடித்துக் கொண்டிருந்த எங்களை நோக்கி ஒரு பொடியன் வந்தான். ''ஊர் மடத்தில் கூட்டம் கூடிருக்கு ஒன்ய ஊர்த்தலைவர் வரச்சொன்னார்'' சொல்லிவிட்டு வந்த வேகத்தில் திரும்பி ஓடிவிட்டான். வீட்டுக்குத்தெரியாமல் செய்த தவறுகளின் பட்டியல் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து அலைக்கழிக்க. எதுவும் டாலியாகவில்லை. போனவாரம் எதோ குருட்டுத் தைரியத்தில் அவள் கன்னத்தில் உரசியதை முத்தம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். உதறிவிட்டுக் கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்டு ஓடிய அவள் ஊரைக் கூட்டியிருப்பாளோ எனும் சந்தேகம் வேகமெடுத்தது. போகிற வழியில் அவளது சித்தியும் கூட முகத்தைத்திருப்பிய காட்சி இன்னும் கூடுதல் உதறலைக்கொடுத்தது.


சனம் திரண்டு நிற்க நடுவில் இரண்டு பேண்ட் போட்ட படித்தவர்கள் இச்சிப்பட்டை,ராப்பட்டை போல நின்றிருந்தார்கள் அவர்களில் ஒருவர் கார்த்தி அண்ணன். அங்கே எப்போதும் இப்படித்தான். குரங்கு,கரடி,கிளிஜோசியம்,ஊர்தவறிய பிச்சைக்காரர்கள், போலிஸ்ஜீப்,கார்,கலைக்கூத்தாடி எல்லோருக்கும் ஒரே மாதிரியான கூட்டம் கூடும். ஓசிப்பொழுது போகஎப்போதும் நடக்கிற தெருச்சண்டையை விட்டால் இப்படி ஏதாவது எப்போதாவது விசேஷமாகக் கிடைக்கும்.


கார்த்தி அண்ணன் சாத்தூரில் இருந்து வந்து எங்கள் ஊரில் தீப்பெட்டி ஆபீஸ் நடத்தும் பட்டாதாரி. அவர் ஒரு பிரபல நடிகரின் கூடப் பிறந்தவர். அந்த நடிகரும் நானும் ஏவீஸ்கூலில் ஒன்றாகப் படித்ததால் என்மேல் கூடுதல் பிரியமாக இருப்பார். மற்றபடி ஊர்க் குமரிப்பிள்ளைகள் கிண்டலடிக்க நிறைய்ய சுவாரஸ்யங்கள் அவரிடம் உண்டு. போனிஎம், அப்பா இசை கேட்பார். ஆங்கிலப் படங்களை, நடிகர்களை சுட்டிக்காட்டித் தெரியுமா எனக்கேட்பார். சொக்கலால் பீடிக்கம்பெனி விளம்பரத்துக்கு ஓசியாய்க் காட்டப் படும் வீரத்திருமகள்,நல்லதங்காள்,படங்களை பார்க்கிற ஊர்ச்சனங்களுக்கு அவர் பேசுகிற எல்லாமே சிரிப்பாணிதான். அவரைப்போல கறுப்பான கலரில் பனியனும் அரைகால் டவுசரும் போட்டுக் கொண்டு அலைவார்.நாய்களுக்கு அப்போதெல்லாம் ஒரே குதியாட்டம் தான்.


அவரோடு வந்திருந்த பொழுதுபோக்கு ஒரு வெள்ளைக்காரன். ஊர்க்காரர்களுக்கு அன்று அவர்தான் குரங்கு. அவருக்கு ஊர்க்காரர்கள் குரங்கு. ஒரு வெள்ளைக்காரன், ஒரு பட்டணத்துக்காரன், ஒரு கடைக்கோடிக்கிராமம். இவர்களுக்கு நடுவில் உரையாடல்களை மொழிபெயர்க்கிற வேலை எனக்கு. நான் பேசிய ஓட்டை இங்லீசை ஊரே கொண்டாடியது. கார்த்தி அண்ணன் என்ன சொல்லி அவனைக் கூட்டிக் கொண்டு வந்தாரோ தெரியவில்லை. உலக அலட்சியம் அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் செயலிலும் இருந்தது. தனக்கு எல்லாம் தெரியும் உங்களுக்கு என்ன தெரியும் என்று சொன்னான். இமயமலைப் பக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வரும்போது இடைமறித்த ஆறு திருடர்களை தனக்குத்தெரிந்த தற்காப்புக் கலைகளால் விரட்டியடித்ததாகச் சொன்னான். யாராவது தைரியசாலி இருந்தால் என்னோடு சண்டைக்கு வாருங்கள் என்று சவால் விட்டான். பெண்கள் பக்கம் சலசலப்பு அதிகமானது.


அந்தப்பக்கமாய் தண்ணிபாச்சிவிட்டு வந்த முருகேசனைக் கூப்பிட்டு நான் செய்வதெல்லாம் உன்னால் செய்ய முடியுமா என்று சீண்டினான். சங்கோஜப்பட்ட அவர் சுதாரித்துக்கொண்டு களத்தில் இறங்கினார். முதலில் அவன் நின்ற இடத்திருந்து எவ்விக்குதித்து மார்க் பண்ணிவிட்டு முருகேசனைக் கூப்பிட்டார். முருகேசன் சாவகாசமாக அவனை விட இரண்டு மடங்கு தாண்டி விட்டு மம்பட்டியைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார். தான் ஜீன்ஸ் கால்சராய் அணிந்திருப்பதால் அப்படியனது எனச்சாக்குச்சொல்லிக்கொண்டிருந்த போது எட்டு வயசே இருக்கிற கருப்பசாமி தடாலென்று அவனெதிரே வந்து நின்று கம்புக் கூட்டுக்குள் கைவைத்து டர் டர்ரென்று ஓசை வரச்செய்தான் கூட்டம் கிடந்து சிரித்தது.

15.10.09

அரசு மருத்துவரும், ஆத்தா மாரியும்.

சாமத்தில் மிளக்காய்ச் செடிக்கு தண்ணி பாச்சப்போன சின்னையனை மணல்லாரி தட்டிவிட்டுப் போய்விட்டது. அறுபது ரூபாய் கிடைக்கிற அவனது சம்பாத்தியத்தோடு தீப்பெட்டியாபிஸ் போகிற மனைவியின் பொருளாதாரமும் சேர்ந்து தான் பொழப்பை நகர்த்துகிறது. வாழ்நாள் சேமிப்பு கடுகு டப்பாவுக்குள் கிடக்கிற நாப்பது ரூபா. தலைமுறைச் சொத்து ஒத்தப்பத்தி ஓட்டுவீடு.இதைவைத்துக்கொண்டு அப்பல்லோ, விஜயா, அய்யா மீனாட்சிகளை நினைத்துப் பார்க்ககூட முடியாது. அம்பது பைசா அனாசின் மத்திரையில் சொஸ்த்தமாக்குக்கிற காய்ச்சலுக்கு, அத்தனை சோதனையும் செய்து, பதினெட்டாயிரத்தைப் பறித்துக்கொண்டு ஒரு சிடியும், கொஞ்சம் ரிப்போட் பேப்பரும், கொடுத்தனுப்பிய கார்ப்பரேட் மருத்துவமனைகளை வேடிக்கை பார்க்கக்கூட முடியாது சின்னையன் வகையறாக்களுக்கு.


அங்கு பூக்களின் வாசம் இல்லை. மூத்திரக் கவிச்சையும் மாத்திரைக் கவிச்சையும் கலந்த பினாயில் நெடியிருக்கும். இதமான சினிமாப்பாடல் கேட்காது. இருமலும் அனத்தலும்தான். ஆறுதல் வார்த்தையில்லை. பேசுபொருளெல்லாம் வலியும் ரணமும் தான். தாளிப்பு வாசம் மூக்கிலேயே பசியக் கூட்டுகிற ஆவிபறக்கும் வீட்டுச்சோறு இல்லை. ஈக்கள் மொய்க்கிற, ஆறி அலமர்ந்துபோன அச்சடிச்ச சோறுதான். கனிவில்லை, அலட்சியமும் அதட்டலும் தான். ஒரு சிறைச்சாலைக்குண்டான அத்தனை அம்சங்களிருந்தாலும், தர்மாஸ்பத்திரிகள் தான் அறுபது சதமான இந்தியர்களின் கதிமோட்சம்.


இருபது நாள் ஓடிப்போனது இப்போது சுவத்தைப் பிடித்து நடக்கிறான். வாசலுக்கு வந்து இடை தரிசில்லாமல் ஓடும் வாகனங்களைப் பார்க்கிறான். மரண இருள் விலகி வாழ்வின் நம்பிக்கை ஒளி வந்துவிட்டது. கண்டம் கழிந்தது. ஆத்தா மாரியம்மாளுக்கு ஆடோ, கோழியோ வெட்ட நேமுக்கம் போடுகிறான். அதுவரைக்கும் காத்திருக்க முடியாதல்லவா? அரசுமருத்துவர் தான் ஆத்தாரூபமாகத் தெரிகிறார். காலில் விழுகிறான்.

அங்குபூக்களின் வாசத்தை உண்டாக்கும்
செயற்கை மணம் இல்லை.
வரவேற்பறையில் சாயிபாபா படமும்
அதற்குக்கீழே
தண்ணீரில் மிதக்கிற பூக்களும் இல்லை.
நுனிநாக்கு ஆங்கிலம் இல்லை.


இருந்தாலும் சானிமணக்கும் மாட்டுக்கொட்டடி போல. ஆமணக்கு சுமந்த ஆறுமுகத்தாயின் மேல் மணக்கிற வேர்வை வாசம் போல. நடுச்சாம முழிப்பில் ஆசுவாசமாக ஊதும் சொக்கலால் பீடிப்புகை போல. ஊரைக் கூட்டுகிற கறிக்குழம்பு வாசம் போல. பனையும், சகதியும்,சண்டையும் நெரிசலும் இருந்தாலும் அருள்மணக்கிற மாரியாத்தா போல அவனுக்கு அந்த தர்மாஸ்பத்திரி.

9.7.09

குபேரன் - விளையாட்டுப்பிராயத்தைக் களவுகொடுத்தவன்








அவன் பெயர் குபேரன். வயது எனது இளையமகனின் வயது இருக்கலாம். அதாவது பத்து அல்லது பதினொன்று. அழுக்கேறிய பெரிய மேல்சட்டை. அவனது வயதுக்கு மீறிய அணுபவத்தின் குறியீடு. ஒரு தேனீர்க்கடையின் சிப்பந்தி. எச்சில் குவலைகளைக் கழுவுவான். தாகமெடுத்தவர்களின் பணியிடத்துக்குப்போய் தேனீர் விநியோகிப்பான். அவசரத்தேவைக்கு கடைக்கு போவான். அது இல்லாத நேரங்களில் கடைமுதலாளியிடம் அடியும் உதையும் வாங்குவான். அவனுக்கு கொடுக்கப்படும் ஊதியம் இருபது ரூபாய். ஒவ்வொரு இரவும் மதுவிடுதியில் மித மிஞ்சிய போதையில் திண்ண இயலாமல் கீழே போட்டுவிட்டு வரும் வறுத்த கோழியின் விலையில் நான்கில் ஒரு பங்கு.



அருகிருக்கும் அந்த புகைப்பட நிலையம் நிரந்தர வாடிக்கை தளம். தேனீர் கொண்டு வருகிற சாக்கில் அமுங்கிக்கிடக்கும் தனது குழந்தைப்பிராயத்தை தவணை முறையில் வெளியில் எடுத்துவிடுவான். அது அவனது ஆசுவாச நேரம். ஒடிந்துபோன சுழல் நாற்காலியில் உட்கார்ந்து காரோட்டுவான். பிளாஷ் விளக்குகளின் நடுவில் நின்று எதிரே இல்லாத புகைப்படக்கருவிக்கு போஸ் கொடுப்பான். காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிற வண்ணப்புகைப் படங்களுக்குள் புகுந்து வான்காவைப்போல பிரயாணம் செய்வான். குடும்பப்புகைப்படத்துக்குள் தொலைந்து போன தகப்பனின் முகம் தேடுவான்.



யாராவது கூப்பிட்டு அவன் தலபுராணம் கேட்டால் "போங்கண்ணே" என்று உதாசினப்படுத்திவிட்டு ஓடிவிடுவான். உரையாடல்களை ஒளித்து வைப்பதுபோலவே சதா நேரமும் அவனது இரண்டு பிஞ்சுக்கைகளை பிரத்தியாருக்கு காண்பிக்காமல் மறைத்துக்கொள்வான். யாரும் பார்க்காத நேரத்தில் எச்சிலைத்துப்பி அவன் விரலிடுக்குகளை செயற்கையாக ஈரப்படுத்திக்கொள்வான். எச்சில் தண்ணீரில் கிடக்கிற விளையாட்டு விரல்களில் நிரந்தரமாகக்குடிகொண்டு விட்டது சேத்துப்புண். இப்போது அதோடும் விளையாடுகிறான். "பொன்மகள் வந்தாள் பொருள்கோடி தந்தாள்" என்று அவனது மானசீக கதாநாயகன் போல பாவனை செய்து பாட்டுப்பாடுவான். அப்போது கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்டு இழுத்துப்போகும் கடை முதளாலி பொடதியில் சடீரென அடிப்பது அவனுக்கு ஒரு போதும் வலித்ததில்லை.

4.7.09

இரண்டு உண்டியல்கள்.

செருப்பில்லாத கால்களில் இரண்டுமைல் நடந்து டவுன் பஸ்ஸுக்கு காத்திருந்து கல்லூரி வர நெஞ்சுரம் வேண்டும். வண்ண வண்ண டிபன் பாக்ஸ் கொண்டு வரும் பிகாம் வகுப்பில் தூக்குச்சட்டியில் ரசஞ்சோறு கொண்டு வர வலிமை வேண்டும். ஏழெட்டுப்பேர் சேர்ந்து பகிர்ந்து சாப்பிடுகிற போது மர நிழல் தேடி, தனியே சாப்பிடத் துணிச்சல் வேண்டும். சோக்கு உடை தாமோதரனோடு சிரித்துப்பேசிவிட்டு அலட்சியப்பார்வையோடு கடந்துபோகும் பொருளியல் போதகரை சகித்துக்கொள்ள திடக்காத்திரமான மனசு வேண்டும். இவையெல்லாம் ஒருங்கே அமைய வேண்டுமென்றால் கடைக்கோடிக் கிராமத்தில் கூலிக்காரத் தாய் தகப்பனுக்கு மகனாகப் பிறந்தால் மட்டும் போதும்.


பிறகு தோளில் கை போடுகிறவன் தானே உயிர் நண்பனாவான். அவனுக்கு உலகம் என்ன பெயர் வேண்டுமனாலும் வைக்கட்டும். கர்ணனுக்கு நண்பன். ரோட்டில் பசித்துக்கிடக்கும் பூஞ்சை உடலுக்கொரு ரூபாய் அதுவுமில்லை யென்றால் ஒரு உச்சுக்கொட்டல் கேட்கும் போது அந்தக்குரலோடு இணைந்து நடக்க எனக்கென்ன தடை. இழப்பதற்கெதுவுமற்ற என்னிடம் அள்ள அள்ள குறையாத அன்பிருத்தது. அந்த அன்பிற்குப் பாத்திரமாக அவர்களிடம் எல்லாம் இருந்தது.


தோழர் என்னும் வார்த்தை, தோளில் தொங்கும் ஜோல்னாப்பை, அந்தப்பைக்குள் என் கேள்விகளைத் தீர்த்துவைக்கிற புத்தகப் பக்கங்கள். அந்தச்சிகப்பு நிற தகரத்துக்குள் விழுகிற சில்லறைகளின் சத்தத்தில் ஒரு யுகாந்திரப்பசியைப் போக்கும் ஓசை கேட்டது. அதன் காது வளையத்துக்குள் கை நுழைத்துக் குலுக்க கிடைத்த பாக்கியம் எனக்கு பெரும்பாக்கியம் எனக்காத்துக்கிடந்தேன்.


தனிப்பாடம் என்று நானும், செய்முறை என்றென் தாயும் இருக்கங்குடி மாரியம்மன் கோவிலில் சந்தித்துக்கொண்டபோதுஎனது கையில் சிகப்பு உண்டியல் இருந்தது. அவள் போட்ட காசோடு இரண்டு சொட்டு கண்ணீரும் உள்ளே விழுந்தது." கல்ல ஒடைச்சு கருமலைய நீஞ்சி, வேகாத வெயில்ல வெறகு சொமந்து படிக்க வச்சது இப்படிப் பிச்சயெடுக்கவா" என்று சொல்லிச்சொல்லி அழுத கண்ணீரை நிறுத்த அப்போதில்லை வார்த்தைகள். என்னிடமும் கண்ணீர் தானிருந்தது.தானுண்டு தன் வேலையுண்டு எனும் நியதிக்குள் சிக்காத மாணவர்கள், படிப்பாளிகள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள்தறிகெட்டவர்கள் எனும் மூட நம்பிக்கை திணிக்கப்பட்ட சமூகத்தில் கூலிக்காரத்தாய் எப்படி கார்க்கியின் தாயாக மாற முடியும்.


வங்கியில் வேலை கிடைத்து அதே மாரியம்மன் கோவில் உண்டியல் காசு எண்ணிக்கைக்கு போனேன். என் அம்மாவுக்கு அளவு கடந்த சந்தோசம். பிரபலமான ஒரே ஊர், இரண்டு உண்டியல்களை எனக்கு அறிமுகப்படுத்தியது. காசு போட்டதோடு முடிந்துவிடுகிறது பக்தர்களின் வேலை. அந்த உண்டியல் பணத்தை வங்கியில் போடச்சொல்லி காத்திருந்த வங்கிகள் எத்தனை.அந்த உண்டியல் பணத்தை பராமரிக்க நடந்த போட்டியில் எத்தனை வெட்டுக்குத்து. எத்தனை வருடம் நீதிமன்றம். இங்கேயே இப்டீன்னா ?...


என் அம்மாவிடம் மட்டுமல்ல யாரிடமும் இதைச் சொல்லமுடியாது, அருள் வந்துவிடும்.

ஆராய்ச்சிமணியை இடைமறிக்கும் பாதுகாப்பு

மெட்டல் டிடெக்டர்கள், தானியங்கி ஒளிப்பதிவுக்கருவி, வருகைப்பதிவேடு, இதையெல்லாம் தாண்டி கண்காணிக்கசீருடையிலும், சாதா உடையிலும் காவலர்கள். அதையும் தாண்டிப்போனால் பெண்கள்,ஆண்களைத் தனித்தனியே சோதனை செய்ய காவலர்கள்.
பல அடுக்கு பாதுகாப்பு வளயங்கள் தாண்டிஅடையாள அட்டை வாங்கிப் போனால் தலைமைச் செயலகம்.உள்ளே ரக ரகமான வாகனங்கள் தனியார்களதும், அரசாங்கத்தினதும்.
ஏழு மழைதாண்டி ஏழுகடல் தாண்டிமேலேறிப்போனால் அமைச்சர்கள் அலுவலர்கள்சிப்பந்திகள், கோப்புகள்.கால்கடுக்க காத்திருந்துமனுக்கொடுத்து திரும்பும் சாமான்யகள்

நூறு ஆண்டுகளுக்குமேல் பழமையான மரங்கள்அந்த மரங்களுக்கு மேலே எந்த அடையாள அட்டையுமில்லாமல் வந்துபோகும் பறவைகள்.

27.5.09

இரண்டு எதிர்காலம்








அவனுக்கு வயது பதினாறு தான் இருக்கும். ஒரு சூட்கேஸ், ஒரு தூக்குப்பை, இன்னொரு சாப்பாட்டுப்பை வைத்திருந்தான். இரண்டு அலைபேசிகள் வைத்துக்கொண்டு நண்பர்களோடும் உறவினர்களோடும் பேசினான். தன்னோடு வந்த தாயிடம் மிகத்துள்ளியமான வார்த்தைகளில் பேசினான் சில நேரம் அறிவுரைகள் கூட. கொண்டு வந்த சிக்கன் நூடுல்ஸை சாப்பிட்டுவிட்டு உலகப்பதவிசாக கைகழுவித் துடைத்துக் கொண்டான். சென்னையச் சுற்றியுள்ள அத்தனை தொழில் நுட்பக் கல்லூரிகளின் பெயர், விலாசம், தரம், பாடங்களின் பட்டியல், அவர்கள் கறக்கும் நன்கொடைத்தொகை, அணைத்தயும்நுட்பமாகவே தாயிடமும், எதிர் இருக்கை மாணவனிடமும் விவரித்தான். அந்த பெட்டியில் இருந்த எல்லோரும் ஏதோ ஆங்கிலப்படம் பார்ப்பதுபோல அவனையே கவனித்தார்கள். அந்த இரவு நேரத்துரித வண்டியின் பெட்டிக்கு அவனே அன்றையகதை நாயகன். அந்த பிராயத்தில் தாங்கள் வழ்ந்த வாழ்கை எல்லோருக்கும் நிழலாடிப்போனது. டவுசர் கிழிந்த காலங்கள்.ஹிண்டு நாளிதழ் படித்துக்கொடிருந்த அவர் அரை மணிநேரம் பேசினார். கல்வி, பொருளாதாரம், சுகதாரம், தொழில் நுட்பத்தில் இந்தியா அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது என்று புள்காங்கிதப்பட்டார். யப்பா என்ன வளர்ச்சி, மிராக்கிள் இன்னும் ஒன் ஆர் டூ இயர் நாம தான் வல்லரசு என்று குதித்தார்.



நடு இரவில் இருப்புப்பாதை கோளாறு காரணமாக மூன்று மணிநேரத்தாமதம். மறுநாள் அதிகாலை முதல் காபி, காலைப்பலகாரம், கொய்யாப்பழம், முறுக்கு சுண்டல் நொறுக்குத் தீனிகளாக வந்துபோனது. கூடவே பிச்சைக்காரர்களும்.கணீர்க்குரலில் " கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே " பாடல் தூரத்தில் கேட்டது. ஒரு நுட்பமான பாடகியின் குரலோடு ஒப்பிட போட்டியிட அணைத்து குணாம்சங்களும் நிறைந்த அது நெருங்கிவந்தது. பின்னர் தான் தெரிந்தது. சுண்டியிழுக்கும் அந்த இசையின் சொந்தக்காரி ஒரு சிறுமி என்பது. அப்புறம் தனது மேல்சட்டையக் கழற்றி அந்தப் பெட்டியையே சுத்தம் செய்ய ஒருவன் வந்தான். " எப்பா சாம்பார் கொட்டிடுச்சு அத நல்லாத்தொட" என்று சொன்ன கனவான் வேலை முடித்துவிட்டு அவன் கை நீட்டும் போது ஹிண்டு பேப்பரின் ஆங்கில எழுத்துகளுக்குள் கானாமல் போனார். அவ்வளவு நேரமும் தனது அலைபேசியில் வீடியோ கேம் விலையாண்ட கதை நாயகன் ஜன்னலைத்திறக்க கிடந்து மல்லாடினான். " கொஞ்சம் ஒத்து சார் " என்று சொல்லிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அதை திறந்து கொடுத்துவிட்டு அருவறுப்பு பார்வைகள் பின்தொடரக் கடந்துபோனான். அவனுக்கும் வயது பதினாறு தான் இருக்கும்.

23.5.09

அமெரிக்காவும், அதைத்தழுவும் சிங்கள அரசும்








அன்று இரட்டைக்கோபுரம் தகர்ந்த போது உலகத்தின் கடைக்கோடி மனிதனும் பதறிபோனான். அப்போதைக்கு தீவிர வாதம் தவிர உலகில் எதுவும் பிரச்சினையில்லை என அமெரிக்கா உலகிற்கு கட்டளையிட்டது. அதே நேரத்தில் தான் ஈராக்கில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்க ராணுவம். அப்புறம் ஒரு நாள் தாஜ் உல்லாச விடுதி தாக்கப்பட்டது. அப்போதும் கூட உலகம் பதை பதைத்தது. இந்த ஊடகங்கள் அதை வைத்து என்னென்ன வியாபாரமெல்லாம் பண்ணியது என்பதையும் சேர்த்து உலகம் பார்த்தது. பகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப்பட்ட போதும், ஒரு ஒற்றை மனிதன் கர்நாடக - தமிழகக் காடுகளில் ஒளிந்தலைந்த போதும் தீவிரவாதம் எனும் பூச்சாண்டிக்கதையை இந்த ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பிவந்தது. நிஜப் பூச்சாண்டிகள் அந்த ஊடக வெளிசத்துக்குள் ஒளிந்துகொண்டார்கள்.



எந்த ஒரு மனிதனும் பொழுதுபோகாமல் துப்பாக்கி தூக்குவதில்லை. ஆனால் அமெரிக்காவுக்கோ நிலைமை அப்படியில்லை எப்படியும் உற்பத்தியான உயிரெடுக்கும் ராணுவக்கருவிகளை விற்றுத் தீர்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. எந்த ஆங்கிலத்தொலைக்காட்சி அலைவரிசையைத் தெரிவுசெய்தாலும் துப்பாக்கி சண்டை ராணுவம் தொடர்பான சாகசச் சினிமாக்களைத்தான் சதா ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் அமெரிக்க மூளைகளிலும் ஊறிப்போன கலையும் கலாச்சாரமும். அமெரிக்கா தனது மூன்று நூறு ஆண்டுகால சரித்திரத்தில் படையெடுத்து அழித்த நாடுகளின் பட்டியலில் இடம்பெறாத நாடு இனிமேல் தான் உதயமாக வேண்டும்.



இலங்கை இன்று கொண்டாட்டங்களில் இருக்கிறது. டைம்ஸ் நௌ பத்திரிகையின் இலங்கை செய்தியாளர் நாராயணன் ஆர்ப்பரிக்கும் சிங்கள இளைஞர்களோடு இணைந்துகொண்டு கருத்து திரட்டுகிறார். தமிழகத்தில் பத்திரிகையாளர் சோ ராமசாமி, வடநாட்டில் ராஜீவ் ஆதரவாளர்கள் என்று வெற்றியைக் கொண்டாடுகிறவர்களின் முகங்கள் மின்னுகின்றன. ராஜபக்சே முப்பத்தியிரண்டு பற்களும் அதைத்தாண்டி குழாய் வழியே ரத்தவெறிகொண்டு துடிக்கும் இதயமும் தெரிகிற அளவுக்கு வாயைப் பிளக்கிறார்.



ஆனால் அகதிமுகாம்கள், சண்டை நடந்த வவுனியா, முள்ளிவாய்க்கால் பகுதிகளையும், மருத்துவமனைகளையும் பதிய மறுக்கிறது ஒளிப் படக்கருவிகள். கேட்பாரற்றுக்கிடக்கும் அங்ககீனமான மனிதர்கள் தமிழ் மனிதர்களின் ஈனக்குரல் எந்த ஊடகம் மூலமாகவும் ஒளிபரப்பப் படவில்லை. இலங்கை முழுவதும் விரவிக்கிடக்கும் எஞ்சிய தமிழ்ச்சமூகத்தின் கடைகள், வீடுகளோடு, பெண்டுகளும் சூரையாடப்படுவதான செய்திகள் கொதிப்பை உயர்த்துகிறது.


பரபரக்கிற போக்குவரத்து நெரிசலிலும் கூட முகம் தெரியாத சவ ஊர்வலத்துக்கு ஒதுங்கி நின்று மரியாதை செய்கிற மனித மனம். இந்த ரத்தவாடையையும், மனிதப்பேரழிவையும் எப்படிப் பொறுத்துக்கொள்கிறது என்பது விசித்திரமாக இருக்கிறது.



சாம்ராஜ்ய வெறியில் கலிங்கத்தை வென்ற பேரரசன் அசோகன். சண்டைக்கு பிந்தைய போர்க்களத்துக் காட்சிகளால் மனம்பேதலித்து ஆசைகளை மறுதலித்தான். அப்புறம் பௌத்த மதம் தழுவினான். லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த பேரினவாத ராஜபக்சே, குருதிகுடித்த மயக்கத்தில் ஆடும் ராஜபக்சே எதைத் தழுவலாம்.