Showing posts with label மாற்றம். Show all posts
Showing posts with label மாற்றம். Show all posts

14.11.10

நோக்கியா,கோயம்முத்தூர்,மற்றும் அங்காடித்தெருக்கள்.

அன்று மூவரும் பேசிக்கொண்டிருந்த போது அண்ணன் சோலைமாணிக்கம் இது பற்றி பதைபதைக்கச்சொல்லிக்கொண்டிருந்தார்.தோழன் மாது இது இப்பதா உங்களுக்குத்தெரியுமா என்று கேட்டான்.கூடவே மேலும் பல தகவல்களைச் சொன்னான்.கைப்பேசி உபகரணத்தின் மதர் போடு எந்திரத்துக்குள் விழுந்து விட அதற்குள் தலையை விட்டு எடுக்கப்போன அம்பிகா இறந்து போனாள்.எந்திரச் சிங்கத்தின் வாய்க்குள் தலையை நுழைத்திருக்கிறாள்.இது சாதாரணமாக நிகழக்கூடியதுதான் எனினும் கட்டுப்பாட்டை இழந்த எந்திரம் சக ஊழியர்களின் கண்முன்னே தலையைத்துண்டாக்கியிருக்கிறது.கழுத்தை நெருக்கிக்கொண்டிருந்த  எந்திரத்தினை உடைத்து அம்பிகாவின் உயிரைக் காப்பாற்றத் துடித்திருக்கிறார்கள் அவர்கள்.அந்த மனிதாபிமானிகளின் கோரிக்கை ஈனக்குரலாகிப் போனதாம்,எந்திரத்தின் விலையைச்சொல்லிய அதிகாரியின் சிம்மக்குரலால்.

இந்த தகவல் சொல்லும்போதும் கேட்கும்போதும் உடல் பதை பதைக்கிறது.உடனிருந்த தோழர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்கிற கற்பனை மரணத்தைவிடக் கொடூரமானதாக இருக்கிறது. அந்தக்கொடூரம்தான் தொழில் நுட்பம்,லாபம்,போட்டி என்கிற பெயரில் தேசியமயமாக்கப்பட்டு வருகிறது.இது இந்த காலத்தின்  மிகப்பெரிய அவலம்.பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தைச் சமாளிக்கத்தான் பிறப்பெடுத்து வந்ததாக அறிமுகப்படுத்தப்படும் பன்னாட்டு நிறுவனங்கள். அது குளிரூட்டப்பட்டு கணினி மயமாக்கப்பட்ட கொட்டடி என்பதை கையில் கிடைக்கிற காகிதங்கள் மறக்கடித்துவிடுகின்றன.ஒரு கணினி அறைக்கும் இன்னொரு கணினி அறைக்கும் இடையில் இருக்கும் தடுப்புச்சுவர் தனக்கு மிக அருகில் உட்கார்ந்திருக்கும் மனிதன் யார் என்பதை மறைக்கிற பார்க்காமைச்சுவர்.அருகிலிருக்கும் சக ஊழியனுக்கு என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது எனத்தெரியாமல் உலக அரசியல் உலக இலக்கியத்துக்குள் கால் நனைத்து என்ன ஆகிவிடப்போகிறது ?.

இதைவிட மோசம் கார்,செல்போன்,ரசாயன உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும்  சீருடை அனிந்த பண்ணையடிமைகளின் நிலைமை.ஒவ்வொன்றாகப் பட்டியலிட அவசியமில்லை நீங்கள் அங்காடித் தெருவைப் பார்த்திருந்தால்.மதுரை போத்தீஸ் ஜவுளி நிறுவணத்தின் ஊழியர்கள் ரெண்டு பேர் பேசிக்கொண்டிருக்கையில் இந்த மாசம் இருவத்தி அஞ்சுநாள் வேலை செய்தால் ஒருமாசச் சம்பளமாம் என்றார் ஒருவர். சொன்னவுடன் கேட்டுக்கொண்டிருந்த சிப்பந்தி உற்சாகத்தில் துள்ளிக் குதித்துவிட்டார்.அப்போது நிறுவணம் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த அல்வா என் கையிலிருந்தது.அதைக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டேன்.ஆனால் அதே நேரத்தில் நிறுவண அதிபரின் பிம்பம் ஊழியர்களின் மனதில் தாறுமாறாக உயர்ந்திருக்கும். அது உண்மையுங்கூட.

ஒப்பீட்டளவில் பார்த்தால் போத்தீஸ் நிறுவணம் ஏனையவற்றைவிட ஒசத்தியாகத் தெரியலாம்.1987 ஆம் ஆண்டு துருக்கியிலிருந்து இந்தியா சுற்றிப்பார்க்க வந்த ஒரு இளைஞனிடம் பேசியபோது அவன் கம்பெனி செலவில் நாடு சுற்றிப்பார்க்க வந்திருக்கிறான் என்று ஆச்சர்யம் அறிந்தேன்.கம்பெனி ஒன்றும் மல்டி நேசனல் கம்பெனியல்ல. சும்மா சாதாரண ரொட்டிக்கடை.12 நாள் தற்செயல் விடுப்பு,மாசம் ஒருநாள் மருத்துவ விடுப்பு,ஈட்டு விடுப்பு,அப்புறம் அரசாங்க விடுப்புகள் என்பதெல்லாம் யாரும் போட்ட பிச்சையுமல்ல,கடவுள் கொடுத்த வரமுமல்ல.உழைக்கிற ஒவ்வொரு தொழிலாளிக்கும் கிடைக்கவேண்டிய ஜீவாதார உரிமை.

இந்த 2010 ஆம் ஆண்டில் சனி ஞாயிறு லீவுக்கு சம்பளம் கொடுக்கிற மனிதன் கடவுளாக  றுவதற்கும். பண்ணையடிமை காலத்தில் ஆண்டைகள் கொடுத்த இன்னும் கிராமங்களில் கொடுத்துக்கொண்டிருக்கிற பண்டிகைக்கால பரிசுகளுக்கும் என்ன வித்தியாசம். இரண்டுமே அத்தக்கூலி தான் என்று சொன்னால் அவர்களே என்னைத் திட்டலாம். பரந்துகிடக்கிற கிராமங்களில்,சிறு நகரங்களில், வயிற்றுக்காக வாழ்வு கடத்தும் கோடான கோடி ஜனங்களின் வாழ்வு இன்னும் அப்படியே அத்தக்கூலியாகத்தான் தொடர்கிறது. அந்த பண்ணையடிமை சமூகத்திலிருந்து இன்னும் இந்தியா மீண்டு வரமுடியவில்லை என்பதற்கு குளிரூட்டப்பட்டு,எஸ்கலேட்டர் வசதி செய்யப்பட்ட ஐந்து மாடி விஸ்வரூப உதாரணம் இது.

அதிலிருக்கிற குமுறல்களை ஒன்றிணைத்து சங்கமாக்கி வருகிற சிஐடியு வைப்பற்றி தீக்கதிர் தவிர நீங்கள் வேறு எந்த தினசரி ஊடகத்திலும் படிக்க முடியாது.தமிழகத்தில் மொத்தம் விற்பனையாகிற இருபதினாயிரம் பத்திரிகை,கொஞ்சம் சிற்றிதழ்கள்,அப்புறம் வினவு,மாதவராஜ் ஆகியோரின் பரப்புறைகள் பத்துக்கோடி ஜனங்களுக்கு பத்துமா?.
அப்படியே இருந்தாலும் எந்திரன்,மோகன்ராஜ்,கூட்டணிப் பரபரப்பில் இந்தசெய்தி எடுபடுமா?.

ஹியுண்டாய் கார் கம்பெனி ஊழியனுக்காகப் போராடி கைவிலங்கு மாட்டப்பட்டு ஜெயிலுக்குப்போன எங்கள் தோழர் அ.சவுந்திரராஜன் அந்தக்கம்பெனி ஊழியர் இல்லை.அந்த தொழிலாளிகளின் ஜாதிக்காரரும் இல்லை.அவர்களை முன்னிறுத்தி பேரம் பேசி சூட்கேஸ் வாங்கும் அரசியல் வியாபாரியும் இல்லை.எங்கு கொடுமைம் நடந்தாலும் அது கண்டு ரத்த அழுத்தம் கூடிப்போகிற கூட்டத்தின் தலைவன்.அப்படிப்பட்ட அசல் மனிதர்களை அச்சுறுத்துவதற்காக கொலைகாரர்களுக்கு இணையாக கைவிலங்கு மாட்டி அழைத்துப்போனது தமிழகம். அந்த தகவல் தமிழகத்தின் எத்தனைகோடிப் பேருக்குத்தெரியும்.

ரஜினி காந்தும்,சங்கரும் அந்த பாலைவனப்பகுதிக்கு பிரத்யேக விமானத்திலும் காரிலும் போனதை சாகசமாக்கிக் காட்டிக் கொண்டிருந்தது சன் டீவி.ஐஸ்வர்யாராயோடு நெருங்கி நடிக்கும் போதெல்லாம் அமிதப்பச்சன் 'கபர்தார்' என்று வக்கணம் காட்டியதாக மனசாட்சியை தொலைக்காட்சிகளில் உருக்கினார் ரஜினிகாந்த். இந்த நடிகர்களின் மனசாட்சியெல்லாம் திரையோடும்,திரைத்துறை சார்ந்த பிரபலங்களோடும் தீர்ந்து போய்விடுவதுதான் சோகமும் திசை திருப்பலும் ஆகிறது.அந்த திசை திருப்பல் வேலைகளை விட அசிங்கமானது அன்பிற்கினிய பேச்சாளர்,நாடாளுமன்ற சட்டமன்ற வித்தகர்,பழுத்த காங்கிரஸ்காரர்  ஒருவர் ஸ்ரீபெரும்புதூரில் அமைதியைக் குழைக்க சதி நடக்கிறது என்று பேசிய பேச்சு.

இந்த அரசு வன்முறையை,அரசாங்கமே வழிய திணிக்கிற கொத்தடிமையை முறையை தொழிற்சங்கங்களைச் சாடுவதன் மூலம் நியாயப்படுத்துகிறார் அவர்.வடக்கே தேசிய தொழிலாளர் காங்கிரஸ் தொடங்கிய போதும், பம்பாயில் கப்பற்படை எழுச்சி நடந்த போதும்,தென்கோடியில் வ உ சி தொழிற்சங்கம் ஆரம்பித்த போதும் யார் அமைதி கெட்டுப்போனதோ அவர்களின் அமைதி மீண்டும் கெடுகிறது. கவலைப்படுவது தேசத்தை மீட்டதாகச்சொல்லுகிற அதே காங்கிரஸ் காரர்கள்.இது  விடுதலை இந்தியாவின் மிகப்பெரிய கேலிக்குறிய விசயம்.

பன்னாட்டு நிறுவனங்களில் செய்து வைக்கப்பட்டிருக்கிற பலத்த மௌனத்திற்குப் பெயர்தன் அமைதி என்றால் அது போலவே அமைதி மயானங்களில் மட்டும்தான் கிடைக்கும். ஒருவருக்கொருவர் நல்லது கெட்டதைப் பேசுவதும் அதன்மூலம் சில வரம்பு மீறல்களைக் கண்டறிவதும் மனிதக்கூடத்தின் இயல்பு.அது மனித சுபாவமுள்ள தொழிலாளிகளின் உரிமை.அட்டூழியங்களை எதிர்த்துக் கேட்பது அமைத்திக்குப் பங்கம் என்பது பண்ணையார்கள் உருவாக்கிய உத்தி. அந்த விஷ உத்தியை இன்று வரை கெடாமல் பாதுகாத்து உலகமயத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்ததும் அவர்களே. எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு எஞ்சினிய்யரிங் கல்லூரி இருக்கிறது அங்கு சேட்டை செய்த எம் இ மாணவனை கட்டைக்கம்பால் அடித்து மண்டையை உடைத்திருக்கிறார் ஒரு தாளாளர்.விசாரித்துப் பார்த்ததில் அவர் ஒரு பட்டாசுக்கம்பெனி அதிபர் என்பது தெரிய வந்தது.இன்னும் தோண்டித் துருவி விசாரித்ததில்  அவர் குடும்பம் ஒரு பண்ணையார்க் குடும்பம் என்றும் தெரிந்தது.தனது பாட்டனார் வயக்காட்டிலும்,தனது தந்தை பட்டாசுக் கம்பெனியிலும் செய்ததை அவர் எஞ்சினியரிங் கல்லூரியில் நடைமுறைப்படுத்துகிறார்.

கோயம்பத்தூர் குழந்தைகளின் உயிரைக்குடித்த கயவனை என்கவுண்டரில் கொன்ற அரசுக்கு. அம்பிகாக்களை மெல்ல மெல்லக்கொல்லும் நிறுவணங்களை எச்சரிக்கக்கூடத் திராணியில்லை.இரண்டுமே உயிர்தானே?.
இப்போது 'பராசக்தி' படத்தின் கனல் தெறிக்கும் வசனங்கள் எல்லாம் பசுமையாய் நினைவுக்கு வருகிறது.
அம்பிகாவின் உயிரைவிட எந்திரத்தின் விலை உயர்ந்தது என்று கணக்குப்போடும் எம்பிஏ படித்தவருக்கும்,எம் இ படிக்கிற மாணவனைக் கட்டக்கம்பால் அடித்து மண்டையுடைத்த தாளாளருக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாச மில்லை.பண்ணையடிமையின் குரூரங்களும் பன்னாட்டுக்கம்பெனிகளின் லாபவெறியும் கைகோர்க்கிற இடம் அது. அதுதான் இனிமேல் வரப்போகும் சந்ததிகள் சந்திக்கவேண்டிய மிகப்பெரும் சவால்.

அதைச்சமாளிக்கிற பொறுப்பு இப்போது இந்தியப்பெண்கள் பக்கம் திரும்புகிறது.சங்கம் அமைக்கும் நடைமுறை களுக்கும்,தொழிற்சங்க உரிமைகளுக்கும்,பயந்து பெரும்பாலும் பெண்களை மட்டுமே பணியமர்த்துகின்றன தனியார் நிறுவணங்கள்.அதன் மூலம் அமைதியயையும் லாபத்தையும் ஒருசேர குவிக்கலாம் என்று மனப்பால் குடிக்கிற வர்களின் கணக்குத் தப்பாக ஒரு நாள் எல்லாம் மாறும்.அந்த மாற்றத்தைப் பெண்களே முன்னெடுப்பார்கள்.