Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

18.5.11

தமிழகம் சந்தித்த மௌனப்புரட்சி.


                                                    (நிழற்படம் ஆண்டனி)

இந்தத்தேர்தல் முடிவுகள் ஒரு மௌனப் புரட்சியை உண்டு பண்ணியதாக முதிர்ச்சியான சிந்தனையாளர்கள் கூட கருத்து தெளிக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் இந்த நடவடிக்கை யானை போட்ட மாலைதான். கொடுமை என்னவென்றால் இன்னும் ஒரு அஞ்சு வருஷம் கழித்து இதே யானை இதே மாலையை அதே திமுகவுக்குத்தான் போடும்.அது என்ன செய்யும்.அத்தம்பெரிய்ய யானைக்கு பாவம் இள்ளிக்கண். ரெண்டே ரெண்டு உருவம் மட்டும் தான் தெரிகிறது.இந்த யானை அதுபாட்டுக்கு ஐஜேகே என்கிற இந்திய ஜனநாயகக்கட்சிக்கு மாலை போட்டுவிடுமோ என்று பதைபதைப்பில் காத்துக்கிடந்தேன்.பரவாயில்லை அது பழையபடி தெரிந்த தலைக்கே போட்டுவிட்டது.

சரி அதைவிடுங்கள் புரட்சி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் தமிழகத்தில் பல பதவுறைகள், பலப்பல பொழிப்புறைகள் கிடைக்கின்றன. சிலநேரம் கழிப்பறையில் ஆண் பெண் வித்தியாசத்தைக் காட்ட படம் வரைந்து வைத்த மாதிரி ஆட்களையே கொடுவந்து முன்னால் நிறுத்தி வைத்து விடு கிறார்கள்.ஆனால் இந்த மௌனப்புரட்சி மௌனப்புரட்சி அப்படிங்கிறாங்களே அதுதான் ஒரே கொடைச்சலா இருந்தது.ஆர்வத்தில் அது என்னய்யா என்று கேட்டேன். 13 ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார் என்றார்கள்.அந்த நாளும் வந்தது.

சாயங்காலம் வரும் வழியெங்கும் மௌனப்புரட்சிக்கான அத்தாட்சி ஏதும் தென்படுகிறதா என்று தேடிக்கொண்டே வந்தேன்.அதே கருவக்காடு.அதே உச்சி வெயில். அதே அக்குவா பீனா.அதே தாசில்தார்.அதே போலீஸ்கார். அதே பத்திரப்பதிவு அலுவலகம்.அதே கந்துவட்டிக்காரன்.அதே கடை அதே விலை. இப்படி எதுவும் மாறவில்லை அப்படியப்படியேதான் தொடர்கிறது.

சலித்துப் போய் ஒதுங்கி நின்றேன்.சாக்கடை வாருகாலை முக்கி முக்கி அள்ளிக்கொண்டிருந்தார் ஒரு தோழர்.ஒங்களுக்கெல்லாம் துளுரு உட்டுப் போச்சிடா மத்தியானம் வேலைக்கு வரதப்பாரு......எனக்கெட்ட வார்த்தை கேட்டது. அதே திமிர் அதே வெள்ளைவேட்டி சட்டை. படீரென்று  பொறி தட்டியது வேஷ்டிக் கரையைப் பார்த்தேன் இடையில் வெள்ளைக்கோடு. ஆஹ்ஹா ஆமாம் மௌனப் புரட்சியைக்கண்டு பிடித்துவிட்டேன்.

அதன் பிறகு சுவர்கள்,கார்கள்,சைக்கிள்,ஆட்டோக்கள் என எல்லாவற்றிலும் புதுப்புது முகங்கள்.ஆமாம் அதே தான் மௌனபுரட்சி.வாழ்க மௌனப்புரட்சி.

15.4.11

அக்கம் பக்கம் அரசியல் பராக்கு பார்த்தல் 5


வெகுதூரம் நிற்காமல் ஓடிய ஓட்டைப்பேருந்து போல. நிற்கப்போகும் போது நெடு நேரம் உருமி விட்டு ஓய்வெடுத்துக்கொண்டது தேர்தல்.திரும்ப  இயக்குவதற்கு  இன்னும் ஒரு மாதம் காத்திருக்கவேண்டும்.அதுவரை அது மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு இருக்கும்.அதுவரை திருவாளர் தேர்தல் ஆணையம்தான் ஒரு மாத முதல்வர்.அப்புறம் நம்ம அம்மா ஜெயித்து விட்டால் தமிழகத்தில் சமூக பொருளாதார அரசியல் மாற்றம் வந்தே தீரும். ஆதலால் ஜப்பான்,சீனா,மாதிரி இங்கு நில நடுக்கமும் சுனாமியும் ஒருக்காலும் வராது. மாறி மாறி இந்த அதிமுகவும் திமுகவும் வந்து போனாலே போதாதா?.நித்தம் நித்தம் பத்துச்செருப்படி வாங்கிக் கொண்டிருப்பவனுக்கு சவுக்கடி வலிக்காது. சரி இது எப்போ மாறும் என்று அப்பாவியாகக் கேட்கிற ஜனங்களுக்கு பதில் சொல்ல வரிசையாக விஜயகாந்த், ரஜினிகாந்த், விஜய், தனுஷ்காந்த் என்று ஒரு பெரும் பட்டாளம் வரிசையில் நிற்கிறது.( தகுதியு திறமையும் பொங்கி வழிகிற எதிர்கால முதல்வர்கள் எவெரேனும் விட்டுப்போயிருந்தால் தயை கூர்ந்து தழிச்சமூகம் என்னை மன்னிக்கட்டும்).

பிடிக்கும், பிடிக்காது கொள்கை அரசியல் கூட்டணி அரசியல் எல்லாவற்றையும் தள்ளிவைத்து விட்டு நான் வருந்துகிற ஒரே விஷயம் அய்யா வைகோ அவர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்துத்தான்.திமுக வை விட்டு வெளியேறி தனியே ஒரு கட்சி ஆரம்பித்தவுடன் 2011 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக வருவார் என்று என்னைப்போல நினைத்த எண்ணிக்கையிலடங்கா தமிழர்களின் கணிப்பை தவிடு பொடியாக்கி விட்டது சமகால அரசியல்.தான் பேசவேண்டியதை மண்டபத்தில் எழுதி வாங்கி வாசிக்காத பேச்சாளன். நிறைய்ய இலக்கியம் படிக்கிறவர்,நிறைய்ய உலக அரசியல் படிக்கிற வாசகர். பாவம் இந்தச்சதுரங்கக் காய்நகர்த்தலில் கட்டங்களுக்கு வெளியே நிற்கிறார்.அந்தப் பாவத்துக்கு பரிகாரம் இன்னும் எத்தனை வருடங்கள் இந்த தமிழகம் அனுபவிக்கப்போகிறதோ தெரியவில்லை.

அதுகிடக்கட்டும் அரசியல். எனக்கு ஜெயலலிதா அவர்களை நிறைய்யப் பிடிக்கும் நடிகர் திலகத்தோடு இணைந்து நடித்த அத்தணை படங்களையும் குறைந்த பட்சம் நாலு தரமாவது பார்த்திருப்பேன். குறிப்பாக தெய்வமகனும், கலாட்டாக்கல்யாணமும்,இன்ன பிறவும்.புற்கள் நிறைந்திருக்கும் அந்த மலை முகடுகளில் எஸ்பிபி குரலை தன்குரலாக்கிப் ’போட்டுவைத்த முகமோ’ என்று பாடும் போது எற்படுகிற பரவசம் சொல்லில் அடங்காது.

நடிகை என்று சொன்னவுடன் பழய்ய நடிகைகளில் ஒருவர் நடிப்பு அலாதியாக இருக்கும் அவர் பேர் சட்டென நினைவுக்கு வரவில்லை.அவரது தனிச்சிறப்பு வாய்ந்த நடிப்பும் அதைவிடப்பிடிக்கும்.தோசைக்கரண்டியை முகத்து நேரே நீட்டிக்கொண்டு பேசுகிற மாதிரி சோத்தாங்கையை வைத்துக்கொண்டு வசனம் பேசுவார்.கோபம் சந்தோசம்,பரிதாபம்,திகைப்பு என எல்லாவற்றிற்கும் தோசைக்கரண்டியையே நீட்டுவார்.

தோசை என்று சொன்னவுடன் இப்போது படாரென்று நினைவுக்கு வருவது மதுரை. மதுரைக்குள் சமீபமாக நுழைகிற எல்லோருக்கும் கொடுக்கப்படுவது கையில் ஒரு அருவாளும் வாயில் அண்ணன் அஞ்சா நெஞ்சன் என்கிற வார்த்தையும் தான்.தன்னை துதிபாடாத எதையும் மதுரைக்குள் நுழைய விடுவதில்லை என்பதில் வெற்றிபெற்ற அவர் ஆட்சியர் சகாயத்தின் வரவால் கதிகலங்கிப்போனார்.காலம் தோசையத் திருப்பிப் போட்ட மாதிரி போட்டுவிட்டது.

கடைசியாக ஒன்று கிட்டத்தட்ட சாத்தூர் முழுவதும் இருப்பவர்கள் 200ம் வரப்போகிறவர்கள் 50ம் விநியோகித்துவிட, விட்டுப்போனது எங்கள் ஏரியா தான்.என் ஜி ஓ காலனி, குயில்தோப்பு எல்லாம் நடுத்தரவர்க்கம் இருக்கிற கான்க்ரீட் வீடுகள்.எனவே இரண்டு பேரும் கொடுக்கவில்லையாம். ஆனால் ஆத்திரம் அடைந்த ஒரு அம்மா கொடுப்பதற்கு நியமிக்கப்பட்டவரை இப்பொழுதுவரை அவளே இவளே என திட்டித்தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

8.4.11

மே பதினான்காம் தேதிக்குப்பிறகு என்னென்ன நடக்கும்


எங்கு திரும்பினாலும் நம்ப முடியாத செய்திகளாகவே இருக்கின்றன.எதை நம்ப எதை நம்பாமல் இருக்க நீங்களே சொல்லுங்கள்.

ஜெயலலிதா நடத்திய கோவை பிரச்சாரக் கூட்டத்திற்கு திரண்டிருந்த மக்களைப் பார்த்தால் கலைஞரின் குடும்பத்தைத் தவிர ஒட்டுமொத்த தமிழகமே வந்திருந்தது போலத் தோன்றுகிறது.மதுரையில் நடந்த திமுக கூட்டணி பிரச்சாரத்திற்கு வந்திருந்தவர்கள் வரிசை நீண்டு கொண்டே போய் வாஹா எல்லையைத் தொட்டுவிடும் போலிருக்கிறது. சன்குழுமங்களும் ஜெயா பரிவாரங்களுமாக தொலைக்காட்சி சேனல்கள் எதிரெதிராகக் களமிறங்கி படம் காட்டுகிற தேர்தல் செய்திகளால் மக்களுக்கு கிறுக்குத்தான் பிடித்துப்போகும். இதுக்கு பேசாமால் அந்த சீரியல் நாடகங்களுக் குள்ளேயே புதைந்தும், விளம்பரங்களுக்குள் நனைந்து ஊறி முளைத்தும் போகலாம்.

அச்சு ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். தன் ஆயுளில் பாதி நாளை உண்ணாவிரத்ததில் கழித்துக்கொண்டிருக்கும் மணிப்பூரின் இரும்புப்பெண் ஐரோம் ஷர்மிளாவைப்பற்றி செய்தி போடத்துணியாத பத்திரிககள். மத்தியில் விபி சிங் அரசு கவிழ்ந்ததும்.முதல் பக்கத்தில் முக்கால்வாசியை விபி சிங் அரசு கவிழ்ந்தது என்கிற தலைப்பைப்போட்டு சந்தோஷம் கொண்டாடிய பத்திரிகைகள்.கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் வயிற்று உபாதையால் குசுப்போட்டாலும் இந்தியாவை மாசு படுத்திவிட்டார்கள் என்று செய்தி போடுகிற ஊடகங்கள். இந்தியா மாற்றத்தை தேடுகிறது என்று பிதற்றுகிறார்கள். மாற்றம் என்கிற சொல்லைத் தவிர மற்றவையெல்லாம் மாறும் என்று சொன்ன அந்த தாடிக்கார மனுஷன் ஏளனச்சிரிப்புச் சிரிக்கிறார்.

எங்கள் தீக்கதிர் பத்திரிகையில் அம்மா சிரித்தபடி போஸ்கொடுக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒற்றையாய் உலக உருண்டையைத் தூக்கினாலும் ஒரு வரிச்செய்தி கூடப்போடாத தினமணியும் தினமலரும் தோழர் பிரகாஷ் காரத்,தோழர் என்.வரதராஜன் பேச்சுக்களை முதல்பக்கத்தில் போடுகிறார்கள். விலைவாசிக் கெதிராக டெல்லியில் நடைபெற்ற இடதுசாரிக்கட்சிகளின் கூட்டத்தையும் அந்த ஆர்ப்பரிப்பையும் இருட்டடிப்பு செய்த கொயங்கா குழுமங்கள் எப்போது சிவப்புக்கு மாறியது ? இயேசுவின் வருகை சமீபித்துவிட்டது என்கிற மாதிரி புரட்சி சமீபித்துவிட்டதா?  என்ன நடக்கிறதென்றே விளங்கவில்லை.

அங்கே அஞ்சு கோடியைப் பிடித்தார்கள் இங்கே பத்துக்கோடியைப் பிடித் தார்கள் என்கிற செய்திகள் ஒருபக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் வரிசையில் நிற்கவைத்து டோக்கன் கொடுக்கிற பணத்திமிரையும், அதற்காக மக்கள் அடிச்சுப்பிடிச்சி வரிசையில் நிற்கிற அவலங்களை நேரில்பார்க்கும் போது மனம் பதறுகிறது. பக்கம் பக்கமாக ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றிப் பேசுகிற எழுதுகிற பத்திரிகைகள் அதில் பங்கெடுத்துள்ள பௌஅனடைந்துள்ள நிறுவணங்கள் பற்றிய செய்தியைக் கசியவிடாமல் பாதுக்காத்துக் கொள்வது ஏனென்றே விளங்கவில்லை.

இருப்பிடச் சான்றிதழுக்காக கையெழுத்துப் போட்டுவிட்டு இருநூறு ரூபாய் வாங்கிய அந்த கிராம நிர்வாக அலுவலர் சொன்னார் காலங்கெட்டுப்போச்சி சார் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி.அதுக்கு எத்தன சைபர் போடுவதென்றே விளங்கவில்லையென்று. கையெழுத்து வாங்க வந்தவர் அப்பாட தப்பித்தோம் இந்த இருநூறு ரூபாயோடு போச்சே என்று உள்ளுக்குள்  சந்தோசப் பட்டுக் கொண்டு வெளியில் சிவாஜி போலச் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டார்.

ஊருக்குப்போயிருந்தேன் அந்த அதிமுக கட்சிக்காரர் எங்க சித்தப்பாதான் சில சந்தேகங்கள் கேட்டார். ஏம்பா கலைஞர் கட்சிக்காரங்க போடுற சினிமாப் பாட்டெல்லாம் எம்ஜியார் பாட்டா இருக்கே,திமுக கூட்டணிவேட்பாளர் வாறாராம் ஆனா திருமாவளவன் கொள்கை விளக்கப்பேச்சைப்போட்டு முழக்குறாங்க. ஊருக்குள்ள வர்ற எல்லா வேன்கள்ளயும் பதினாலு கலர்ல கொடிப்பறக்கே அவிங்க போஸ்டர்லேயும் பெரியார், அண்ணா, காமராசர், தேவர், அம்பேத்கர், ஒரு முஸ்லீம் தலைவர் இருக்காங்க இவிங்க அடிக்கிற போஸ்டர்லேயும் இதே தலைவர்கள் இருக்கங்களே என்று காம்ப்ளான் குடிக்காத குழந்தை மாதிரி கேள்விகள் கேட்கிறார்.

நான் என்ன சொல்லட்டும் ?.

மே பதினான்காம் தேதியும் இதே போலத்தான் மின்சாரவெட்டு நீடிக்கும். புரட்சித்தலைவி முதல்வரானாலும், தானைத்தலைவர் முதல்வரானாலும் ஒரு லிட்டர் அக்வா பீனாத் தண்ணீர் பணிரெண்டு ரூபாய்க்குத்தான் விற்கும். மே பதினான்காம் தேதிக்குப்பிறகு அவர் அங்கே தாவினார்,இவர் இங்கே குதித்தார் என்கிற விளையாட்டுச்செய்திகள் வரும். மே பதினான்காம் தேதிக்குப்பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு பணிரெண்டாகக் குறையப் போவதுமில்லை, அரிசி விலை அஞ்சு ரூபாய்க்கு இறங்கப் போவதுமில்லை. மே பதினான்காம் தேதிக்குப்பிறகும் தனியார் வெட்டிய வாய்க்கால் மூலமாகவோ அரசு பதித்த குழாய்கள் மூலமாகவோ சீமைச்சாராயம் கட்டாயம் ஆறாக ஓடத்தான் போகிறது.

அதன்பிறகு பாருங்கள் எல்லாக் கலர் கொடியும் இறங்கி இளைப்பாறப் போய்விடும்,ஒரே ஒரு கலர்க்கொடி மட்டும் பிரச்சினைகளைப் பேசியபடி இறங்காமல் பறந்துகொண்டிருக்கும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

5.4.11

சமூகச் சீர்கேடுகளைக் கிண்டல் செய்யும் தேர்தல் பகடிகள்


ஈரானில் 2009 ஜூன் 12 ல் நடந்த தேர்தலில் அதிபரின் சார்பில் போடியிட்ட மஹ்மூத் அஹ்மதியினைக்கிண்டல் செய்த தேர்தல் பகடிகள் இவை.நமது
நாட்டில் நடக்கிற நடப்புகளோடு ஒப்பிட்டால். அவர்களின்  பிரச்சினை யெல்லாம்  ஜூஜுபி.

1) அம்மா வீட்டுக்குப்போயிருந்த மனைவி கணவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

” அன்பே தக்காளி மட்டும் வாங்குங்கள் அவசரப்பட்டு உருளைக் கிழங்குகளை வாங்கிவிடவேண்டாம்,தேர்தல் நெருங்குகிறதல்லவா நமது வீட்டுக்கு அதிகப்படியான உருளைக்கிழங்குகள் வரும்”.

 =காதலோடு மனைவி.

தேர்தல் நேரத்தில் அகமதிநெஜானி இலவச உருளைக்கிழங்குகள் வழங்குவதாக  வந்த செய்தியை கிண்டல் பண்ணி வந்த பகடி.

0

2) ஏன் முசாவியைத்தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு அவரது ஆதரவாளர்கள் அடித்த பிட் நோட்டீஸ்.

  அவர் வயோதிகர்,அதனால் நீண்ட நாட்கள் அவரது கொடுங்கோலாட்சியைப்பொறுத்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தமில்லை

  அவரது மனைவி ஒரு படித்தவர்,அவர் ஒரு பேராசிரியை,ஆதலால் வேலை      நேரத்தில் அவரைத்தொந்தரவு செய்யமாட்டார்

  அவர் ஒரு போதும் அவரது உறவினர்களுக்கு அரசாங்க உத்தியோகத்துக்கு சிபாரிசு செய்யமாட்டார்

0

வலையில் சுட்ட அயல் தேர்தல் பகடிகள் மண்ணின் மணத்துக்கு மாற்றபொபட்டிருக்கிறது.

3) இரண்டு கட்சிகளின் தலைவர்கள் ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந் தார்கள். முதலாமவர் கீழே பார்த்துக்கொண்டே சொன்னார் " பாருங்க நான் ஆயிரம் ரூபாயைக் கீழே போட்டேனென்றால் பத்து வாக்காளர்கள் சந்தோஷப் படுவார்கள்"  என்றார்

இரண்டாமவர் சொன்னார்  ""நான் ஐயாயிரம் ரூபாயைக்கீழே போட்டேனென்றால் பத்துப்பேர் சந்தோஷப் படுவார்கள்" என்றான்.

இதைக்கேட்டுக்கொண்டிருந்த பைலட் பவ்யமாகக்கேட்டார்  " ஒட்டுமொத்த தமிழ்நாடே சந்தோசப்பட நான் ஒன்று சொல்லட்டுமா"

" சொல்லு சொல்லு"  என்றார்கள்

”ஒங்க ரெண்டுபேரையும் தூக்கிக்கீழே போட்டால் போதும் ” என்றார்.

0

4) தேர்தல் பிரச்சாரத்துக்கு போய்விட்டு நள்ளிரவில் திரும்பிக்கொண்டிருந்த வேட்பாளர் இருட்டில் ஒரே கூட்டமாக இருப்பதைப் பார்த்து வண்டியைத் திருப்பி அங்கே போகச் சொன்னாராம். போனப்பின்தான் தெரிந்தது அது பேய்களின்மாநாடு என்று. வந்தது வந்தாச்சு ஓட்டுக் கேட்டு விட்டுப் போவோம் என்று முடிவானது. லைட்டப்போட்டு மைக்கைப்பிடித்தார் வேட்பாளர்.

31.3.11

கொள்ளிகள் எரியும் கூட்டத்தில் நாடு தீபம் தேடிக்கொண்டிருக்கிறது


கட்சிகளுக்கான மாவட்டச்செயலாளர்கள் தேர்வாகட்டும்,அந்தக்கட்சிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வாகட்டும் அந்த மாவட்டத்தில் எந்த ஜாதியினர் கணிசமாக இருக்கிறார்கள், அங்கு எந்த ஜாதியின் ஆதிக்கமிருக்கிறது என்பதைப்பொறுத்தே தேர்வுகள் நடக்கிறது.உதாரணமாக வன்னியர் அதிகமாக வாழும்  ஏரியாவில் அந்த பகுதியில் அதிகம் இல்லாத இனத்தவரான நாயக்கரோ நாடாரோ போட்டியிடுவதில்லை, போட்டியிட்டதாக சரித்திரமும் இல்லை பூகோளமும் இல்லை.நாயக்கர் ஓட்டுக்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதற்காக ஒருகாணி நிலம் கூட இல்லாத நாயக்கருக்கு சீட் வழங்கப்படுவதில்லை. அதெல்லாம் வசதி படச்ச நாய்க்கமாருக்கு என்கிற ’தண்ணீர் தண்ணீர்’ வசனம் தான் நினைவுக்கு வருகிறது.எந்தக்கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் மாண்டேக் சிங்க் அலுவாலியா தான் திட்டக்கமிஷன் தலைவர்.அதேபோல பாகிஸ்தானில் குடியுரிமை பெற்றுக்கொண்டு அங்கு தங்கி இருந்தாலும் நம்ம பசி க்கு ஒரு காபினெட் போஸ்ட் உறுதி.

கடைந்தெடுத்த ஜாதி,பண்ணையார்த்தனம்,உலகமயம் மூன்றும் கூட்டுச்சேர்கிற ஜனநாயகம் இது. நாம் பெயர்களுக்கு முன்னால்  வேண்டுமானால் மானே தேனே போட்டுக்கோ என்று சொன்னமாதிரி புரட்சி,சமத்துவம் என்கிற வார்த்தைகளைப் போட்டுக் கொள்ளலாம்.ஆகவே புரட்சித்தமிழன், புரட்சிக்கலைஞர்,புரட்சித்தலைவி,சமத்துவமக்கள்கட்சி,புரட்சிபாரதம் என்கிற மாதிரியான பெயர்களை வைத்துக்கொண்டு இப்போதைக்கு ஆறுதலடைந்து கொள்ளலாம். அல்லது ஆஹா வந்துவிட்டது புரட்சி எனப் பீத்திக்கொள்ளலாம். கண்ணங்கரேர்னு இருக்கிற எங்க பெரியப்பனுக்கு வெள்ளைச்சாமின்னு பேர்வச்ச மாதிரித்தான் இங்கு கதைகள் நடக்கிறது. இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையம். இங்கே கொமுட்டிக்காயே சக்கரை.

அன்று முன்பதிவுக்காக புகைவண்டி நிலையத்தில் காத்திருக்க நேர்ந்தது.அருகில் உட்கார்ந்திருந்த கரைவேட்டிக்காரர் எந்தக் கரையாயிருந்தாலென்ன அது கறைதான். காங்கிரசையும் சேர்த்து அவை ஒரே குட்டையில் ஊறிய மட்டையே. அவர்  வார்டு வார்டாக ஜாதியின் பெயரையும் அங்கு எத்தனை ஓட்டுக்கள்  என்பதையும் புட்டுப்புட்டு வைத்தார். அவர் ஒரு முழு நேர அரசியல்வாதி.போன தேர்தலில் ஒரு வாக்குக்கு என்ன விலை என்பதையும் இந்த தேர்தல் நேரத்தின் விலைவாசி ஆகியவற்றோடு கணக்குப்பார்த்து எவ்வளவு கொடுத்தால் ஜெயிக்கலாம் என்பதையும் துல்லியமாகச்சொன்னார். அத்தோடு மட்டுமில்லாது தேர்தல் கமிஷன் நெருக்கடி கொடுத்தால் அதைச்சமாளிக்க என்னென்ன தந்திரோபாயங்களை கையாள்வதென்றும் பட்டியலிட்டார். எங்கூர்ல ’கள்ளம்பெருசா காப்பாம் பெருசா’ அப்படீன்னு ஒரு பழமொழி உண்டும்.

21.3.11

யார் யாரை ஏமாற்றுகிறார்கள்.


வழகத்துக்கு முன்னாலேயே முழித்துக்கொண்டு ஊர் ஒத்தையடிப்பாதைவழியே பஞ்சாயத்துப்பள்ளிகளை
நோக்கி பயணப்படும். நடக்கமுடியாதவர்கள், வயோதிககர்கள், பிள்ளைத்தாச்சிப் பெண்கள் எல்லாம்
மாட்டுவண்டிகளில் கொண்டுவந்து இறக்கிவிடப்படுவார்கள். நீண்டவரிசையில் பாட்டும் கூத்துமாக
நகர்ந்துபோய் ஆட்காட்டி விரலில் மை தடவிக்கொண்டு திரும்ப வருவார்கள்.  ஏதாவது வேப்ப மர
நிழலில் மொய் எழுதுகிற தங்கிலியான் உட்கார்ந்து ரெண்டு கருத்த வெத்திலையும் ஒரு கொட்டப்பாக்கும்
கொடுத்துக்கொண்டிருப்பார். கூட ரெண்டு குடுத்தா ஙொப்பன் வீட்டுச்சொத்தா போயிரும் என்று கேட்கிற
மதனிமார்களுக்குச் சொல்ல, ''வீட்டுக்கு வா கூட ரெண்டு போனி கூலு கரைச்சித்தாரன், அதுவுமில்லைன்னா
குருன வாங்கிப்பொங்கி கருவாட்டுத் தண்ணி வச்சித்தாரன், இது ஊர்த்துட்டுல வாங்குன வெத்தில,
பங்காளத்தபடிதான்''  யோக்கியமான பதிலும் அவரிடம் இருக்கும். ஓட்டுப்போடுவதைப் பார்க்கவென்றே
சின்னப்பிள்ளைகள் கூட்டம் கூட்டமாய் வந்துபோகும். ஜனநாயகத்தின் பெரும் திருவிழாவாக கள்ளங்கபடமற்ற
தேர்தல் கடந்துபோன காலங்கள் அது.


முடியாட்சியும் ஆங்கில ஆட்சியும் தாண்டியொரு மக்களாட்சியை ருசிக்கத்தொடங்கிய காலம் அது. கிட்டத்தட்ட
எண்பதுகள் வரை இதுதான் நிலைமை. ஆனால் இருபது வருசத்தில் எல்லாம் வேகமாய் மாரிக்கொண்டு
வருகிறது. இப்போது எல்லாக் கிராமங்களிலுமே காலைப் பேருந்துக்கு ஒரு கூட்டம் கிளம்புகிறது. தாலுகா
ஆபீஸ், கோட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், காவல் நிலையம் இப்படி மக்கள் வந்து
போகும் இடங்களுக்கு  அவர்கள் பிரிந்து போய் காத்திருப்பார்கள். பிரச்சினைகளை உண்டாக்க, பெரியதாக்க,
பிரச்ச்சினைகளுக்கு பஞ்சாயத்துப் பண்ண, கடைசியாய் ராசி பண்ணிவிட்டு மதியம் சீமைச்சாராயமும்,
பிரியாணியும்  இரவு கடைசி வண்டிக்கு வீடு திரும்பும் போது ஒரு நூறு ரூபாயாவது பையில் இருக்கும்.


பருத்தியும் மிளகாயும் விளைந்த நிலங்களில் வேலிக்கருவேல மரங்கள் மண்டிக்கிடக்க, எங்கள்
உழைப்பாளர்கள் கிராமங்களிலிருந்து கிளம்பி வந்து கௌரவப் பிச்சைக்காரர்களாக உருமாறுகிறார்கள். நகரத்து வீதிகளில்
பிரியாணி வாடை மணக்கிற முகங்கள் தேடி அலைகிறார்கள். ஏற்கனவே நாறிக்கிடக்கிற பல அலுவலகங்கள்
இன்னும் அதிகாமாக சுத்தம் செய்ய முடியாத படி நாறடிக்கப்படுகிறது. ஒரு நாள் பொழுது கழிவதற்காக
விலை மதிக்க முடியாத நாணயமும் நேர்மையும்  விலைபோகிறது. கைநாட்டுக்காரர்களும், நகரம்
பரிச்சயமில்லாத அப்பாவிகளும் இவர்களை நம்பி குறுக்குப்பாதையில் பயணமாகிறார்கள்.

1975 ஆம் ஆண்டு சாத்தூரில் அழகுத்தேவர் என்கிற எம் எல் ஏ ஒருவர் இருந்தார், அவரிடம் கையெழுத்து
வாங்கி மாணவர் விடுதியில் சேர எனக்கு எட்டு கிலோ மீட்டர் நடக்கிற நேரம் மட்டுமே செலவானது.
தம்பி எந்த ஊரு, என்ன படிக்கிறெ, நல்லாப்படிக்கனும் என அறிவுரை சொல்லிக்கொண்டே
”அமுக்குத்தேவர்” என்று கையெழுத்துப்போட்டு விட்டு கீழே வைத்த வேப்பங்குச்சியை எடுத்து திரும்பவும்
பல்விலக்க ஆரம்பித்தார். அந்தக் கிராமத்தானின் முகம் எதோ கனவில் வருகிற மாதிரித்தான் நிழலாடுகிறது.
அவர் தங்கியிருந்த அந்த வாடகை வீட்டில் இப்போது யாரோ தீப்பெட்டி ஆபீஸ் போர் மேன் வாடகைக்கு
குடியிருக்கிறார்.

தன்னைத்தேடி வருகிறவர்களை காக்கவைப்பதுவும் அழைக்கழிப்பதுமே ராஜதந்திரமாகிப்
போன காலமாகிவிட்டது இப்போது. லஞ்சப்பணத்தில் பங்களாக் கட்டியவன் பிளைக்கத் தெரிந்தவனாகிறான்.
நேர்மையான அரசு அதிகாரி முசுடு, மனிதரண்டாதவன் எனப் பட்டம் வாங்கி மதிப்பிழந்துபோகிறான். அந்த
கருத்துருவாக்கம் நகரம் தாண்டிப் பயணமாகி பான்பராக் பொட்டலம்போல், அழுகுனி சீரியல் போல்
கடைகோடிக் கிராமத்துக்கும் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது. அதனால் தான் இப்போது ஒவ்வொரு கிராமத்திலும்
ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல், கொள்ளை நடக்கிறது. ஐந்து வருசம் தங்களைச்சுரண்டித்திங்க
தலைக்கு இருநூறு முன்னூறு என்று சுய அடமானம் அரங்கேறுகிறது.

ஒரு துக்க விட்டுக்குப்போவதற்கு இரவு பணிரெண்டு மணிக்கு இரு சக்கர வாகனத்தில் கிராமத்துக்கு ப்போக வேண்டிய
நிர்ப்பந்தம் வந்தது நான்கு கிராமங்கள்  தாண்டிப்போகவேண்டும் ஒவ்வொரு ஊரிலும் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் பத்துப்பேர்
உட்கார்ந்துகொண்டு போகிற வருகிற வாகனங்களை மறித்துக்கொண்டிருந்தார்கள். சாதிக்கலவரம் ஏதும் நடந்து
விட்டதோ என்னும் பயத்தோடு கடந்துபோன என்னயும் வழிமறித்து எந்தக்கட்சி என்று விசாரித்தார்கள் ஒரு
வேளை கட்சிக்கலவரமாக இருக்குமோ என்னும் சந்தேகம் வந்தது. கிராமங்களில் கட்சி மற்றும் மதக்கலவரங்கள்
வருவதற்கு சாத்தியமே இல்லை.

கிராமங்கள் அழிந்து வருவதற்கு சமச்சீரற்ற நடைமுறையும், அதன் ஆதிக்காரணியான சாதியும் தான் முக்கிய
காரணம். அதை அழிக்க எந்த விஞ்ஞானியாலும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே அங்கு
என்ன ஜீவாதாரப் பிரச்சினை குறித்துமுரண்பாடு வந்தாலும் அது சாதிக் கலவரமாகத்தான் மாறும், அது
வேறு பிரச்சினை. எனது ஊருக்கு முந்திய ஊரில் என்னை இடை மறித்தார்கள் பக்கத்து ஊர் என்பதால்
தைரியமாக நின்றேன் என்னை அடையாளம் கண்டுகொண்ட சிலர் குசலம் விசாரித்து  விட்டு போகச்
சொன்னார்கள். என்ன என்று கேட்டேன் "" தேர்தல் செலவுக்கு பணம் தர ஆள் வரும் அதான் நிக்கோம்,
பையப்பதனாமா போங்க"" என்று என்னை அனுப்புவதிலே குறியாக இருந்தார்கள். ஒவ்வொருவரின் கையிலும்
வெவ்வேறு கட்சிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்லிப்புகள் இருந்தன.

வீட்டுக்குப் போனதும் என எனது அம்மா முழித்துக்கொண்டு ’என்னய்யா துட்டிக்கு வாரவன் கண்ணு வெளிச்சத்திலே வரலாமில்ல இந்த ராவுல ஒத்தியில வண்டியில ஏ வரணும்’ என்று விசனப்பட்டார்கள். தந்தையாரைக் காணவில்லை
காரணம் கேட்டேன். ’கச்சிக்காரங்க வருவாங்கண்ணு ஊரே போய் ரோட்டுல நிக்கி ஙொய்யாவும் அங்கன போய் கெடக்காரு’
ஒன்று விளங்கவே இல்லை  எல்லா கட்சியில் அட்டைகளையும் வைத்திருப்பது ஏன் என்று கேட்டேன். வருகிற கட்சி எதுவாக இருந்தாலும் அவர்களுக்குத்தான் ஊரின் மொத்த ஓட்டும் என்று சொல்லி பணம் வாங்கத்தான் என்பது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

யார் யாரை எமாற்றுகிறார்கள் என்று புரியவில்லை.

(மீள் பதிவு)

7.3.11

விறு விறுப்பான காட்சிகள் அரங்கேறும் கட்சிக் கூட்டணி.


நிஜமான சூதாட்டம் ஆரம்பமாகிறது. கடந்த பத்தாண்டுகளாக திரும்பமுடியாத சேற்றுக்குள் சிக்கிக்கொண்ட ஜனநாயகம் கைதேர்ந்த சூதாடிகளின் பிடியில் சிக்கிக்கொண்டது.ஜாதிக்கட்சிகளின் கொட்டம் அடங்கிப்போனது பாமக போன்றகட்சிகள்  தங்களின் சொந்த மண்ணிலே மண்ணைக்கவ்வியது என்கிற நோக்கர்களின் வாதமெல்லாம் தவிடுபொடியாக அடுத்த தலைமுறை ஜாதிக்கட்சிக்காரர் களம் இறங்குகிறார்.அவரைத்தொடர்ந்து எல்லா ஜாதிக்கட்சிகளும் அதே ஜாதியைச்சேர்ந்த அந்தக்கட்சியின் எதிரிகளும் களம் இறங்குகிறார்கள்.எல்லா ஊர்களிலும் ஜாதிகள் புது வடிவம் எடுக்கின்றன. ஆள்திரட்டுகின்றன, போஸ்டர் அடிக்கின்றன வாகனங்கள் அமர்த்தி எதாவதொரு காட்டுக்குள் கூட்டம் கூட்டி அவரவர்களுக்கு தனித்தனியே அரசியல் மாநாடுகள் நடத்துகின்றன. ஒரு சட்டமன்றத் தொகுதி கிடைத்தால் கூடப்போதும் அதை வைத்தும்,  அந்த மக்களை வைத்தும் பிழைப்பு நடத்திக்கொள்ளலாம் என்கிற சுத்தம் செய்யமுடியாத சந்தர்ப்பவாத சாக்கடைக்குள் அமிழ்ந்துவிட்டது அரசியல் தமிழகம்.

சட்டிசுடுகிறதே என்று சொல்லி, தப்பிக்க எவ்விக்குதித்து, எரிகிற அடுப்பில் விழுந்துகிடக்கிறது காங்கிரஸ்.இன்று இமயம் தொலைக்காட்சியில் இனமான காங்கிரஸ் தமிழர் உயர்திரு ஈவிகேஎஸ் பேட்டி நடந்தது. கடந்த காலத்தை ஒரே ஒரு வைரஸ் ஊடுருவச்செய்து கரப்ட் ஆக்கி தேடமுடியாதபடி ஆக்கி விட்டால்.அப்புறம் கேட்டால். அத்தணையும் புரட்சிக்கருத்துக்கள்.அவர் உலக அரசியல் பேசுகிறார். பொருளாதார மந்தம் குறித்தும் அது எந்தெந்த நாடுகளை சூறையாடியது என்றும் பட்டியல் தருகிறார்.கண்ணைமூடிக்கொண்டே கேட்டால் காரல் மார்க்சின் பேரன் பேசுவதுபோலத் தொணியிருக்கும். ஆளும் திமுக ஊழலின் உச்சத்தில் இருக்கிறதென்கிற  வாசகம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த நையாண்டி. இந்த நையாண்டியும் எவ்வளவு நாள், எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதில் எந்த உறுதியும் கிடையாது.

ஏனெனில் அரசியலில் நிரந்த எதிரியும் கிடையாது. நிரந்தர நண்பனும் கிடையாது. இது  கலப்பு அரசியல்,கலப்பு பொருளாதாரம், மசாலாச் சினிமா போல இந்தியாவில் தயாரான தத்துவம். ஒழப்படித் தத்துவம். இங்கே அந்த மாதிரி ரொம்பக்கிடைக்கும். எம்ஜியார் அண்ணாயிசம் என்கிற ஒன்றைக் கண்டுபிடிக்கவில்லை ? அதே மாதிரித்தான். 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின்னர் உலகமெல்லாம் புரட்சி நடந்துகொண்டிருந்தது. வறட்சி இருந்தால் புரட்சி வரும்,அடிமைத்தனம் இருந்தால் புரட்சி வரும், கொடும்கோலாட்சி இருந்தால் புரட்சி வரும். இவையெல்லாம் மாற்றத்திற்கான தட்பவெப்பநிலை. இந்த மூன்றும் அந்த 1920 களில் இல்லாமலா தேனும் பாலும் ஓடிக் கொண்டிருந்தது ?.

எத்தனை லட்சம் உயிர்கள் பறிபோனது.எத்தனை தலைவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள் எத்தனை தலைவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள், தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்.நடந்தது என்ன அதிகாரத்தை வெள்ளையனிடமிருந்து பிடுங்கி உள்ளூர் ஆதிக்க ஜாதிகளிடமும், பண்ணையார்களிடமும் ஒப்படைக்கத்தான் ஜனநாயகம் என்கிற அமைப்பு உருவானது. ஒரே வீட்டில் நாலு அண்ணன் தம்பிகள் இருந்தாம் நாலு பேருக்கும் ஆளுக்கு ஒரு சொத்து,ஆளுக்கு ஒரு வியாபாரம் ஆளுக்கு ஒரு கட்சி என்று ஜனநாயகத்தைப் பிரித்துக்கொண்டார்கள். நான் தலைவர் உயர்திரு ஈவிகேஎஸ்ஸைச் சொல்லவில்லை. இப்படி விநோதம் இங்கே தான் நடக்கும். நடக்கட்டும். வெள்ளையனை 300 ஆண்டுகள் பொறுத்துக்கொள்ளவில்லை ? அதுபோல கொள்ளையர்களை 64 ஆண்டுகாலம் பொறுத்துக்கொள்ளவில்லை. இன்னும் நாட்கள் இருக்கிறது.அதுவரை ஆட்காட்டி விரலைக் கழுவி வைத்துக்கொள்வோம்.