Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

10.1.16

யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914


அயோத்திதாசர் தமிழை அடித்தள மக்களின் நிலைப் பாடுகளிலிருந்து வாசித்தார். கால அடிப்படையில் சைவத் தை விட சமண, பௌத்த சமயங்கள் மூத்தவை எனத் தமிழ் இலக்கியச் சான்று களின் வழி அவரால் நிரூ பிக்க முடிந்தது. பூர்வத் தமிழின் அறம், காப்பிய மரபுகள், இலக்கணம், இலக் கிய மரபுகள் ஆகியவற்றைச் (அதாவது மொத்தத் தமிழ்ப் பண்பாட்டை) சமண, பௌத்த மரபுகளே நிலைப்படுத்தின எனப் பண்டிதரால் எடுத்துக் காட்ட முடிந்தது.

பூர்வத் தமிழ் மரபு சாதி யில்லாச் சமூக அடிப்படை யில் அமைந்திருந்தது என்ற அயோத்திதாச பண்டிதரின் நிலைப்பாடு தமிழ் வரலாறு குறித்த அடிப்படையானதொரு விவாதத் தைத் தொடக்கி வைத்தது.  விவசாயத்திலிருந்து அந்நியப்பட்டுப் போனவர்கள்தான் சாதி அமைப்பைத் தமிழில் அறிமுகப்படுத்திப் பாடுபடும் விவசாயச் சாதிகளை இழிவு படுத்தினர் என்ற வாதத்தை பண்டிதர் முன்வைத்தார்.

அயோத்திதாசர் எல்லா வழிகளிலும் உழைப்பை முன்னிறுத்தினார். அதுவே தனது இயக்கத்தின் மிகமுக்கியமான புள்ளியாகவும் கருதினார்.மேட்டிமைச் சாதிகள் உடல் உழைப்பை நினைத்துப் பார்க்கவே முடியாது. அவர்கள் ஒருபோதும் உழைக்கத்தயாரக இருந்ததில்லை. ஆதலால் உழைப்பை அவர்கள் சிறுமைப்படுத்தினார்கள். எனவே அயோத்திதாசர் தனது ஆதிவேதம் என்கிற நூலில், உழைப்பிலிருந்து வந்ததுதான் சிந்தனை, உழைப்பிலிருந்து வந்ததுதான் கண்டுபிடிப்புகள் என்பதையும் உழைப்பிலிருந்து வந்ததுதான் கலாச்சாரங்கள் எனவும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அதற்கான வாழ்வியல் ஆதாரங்களியும் முன்வைத்தார்.

அயோத்திதாசரின் இந்த ஓயாத பரப்புரைதான் தமிழ்ச்சூழலில் தனித்தமிழ்,சாதியற்ற தமிழகம்,உழைப்பாளர்களை போற்றுகிற சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாக விளங்கியது.

நன்றி அயோத்திதாசர் வலைத்தளம், மற்றும் முத்துமோகன்


3.1.16

சமம்




சமம் என்பது துரதிஷ்டவசமானது.
சமம் என்ற சொல்லுக்கு இணையான
அல்லது மாற்றுச்சொல் காணக்கிடைக்கவில்லை.
சமம் என்பது அதே போல் அல்லது
அதற்கு இணையான என்று பொருள் கொள்ளலாம்.
இணையான என்பதை அளவை,தொகை,எண்ணிக்கை,
மதிப்பு,தரம்,பட்டம் என்ற மதிப்பீடுகளில் ஒப்பிடலாம்.
இந்த மதிப்பீடுகள் பௌதீக மற்றும் கணித இலக்கணங்களுக்கு வேண்டுமானால் துள்ளியப்படலாம் இந்த மதிப்பீடுகளை
மனித உயிர்களுக்கு ஒரு போதும் இலக்கணப்படுத்தமுடியாது.

6.9.15

நான்கு நூற்றாண்டுகள் பின்தங்கியிருக்கிறோம்


பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கிறது சூரியன் ஒரே இடத்தில் இருக்கிறது என்று கண்டுபிடித்துச்சொன்னார் கலிலியோ. பூமிதட்டையானது என பைபிளில் சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை இந்த கண்டுபிடிப்பு சிதைப்பதால் மத நம்பிக்கைக்கு எதிரானது இந்த கண்டுபிடிப்பு என்று பிரகடனப்படுத்தியது கத்தோலிக்கசபை.  திருச்சபையின் உயர்மட்டக்குழு கலிலியோவை ரோமுக்கு அழைத்தது. போப் உள்ளிட்ட மதகுருமார்களுக்கு தனது கண்டுபிடிப்பை விளக்கிக் கூற வாய்ப்பளித்து நீதிசெய்தது நானூறு ஆண்டு களுக்கு முந்தைய மூடநம்பிக்கை.  கத்தோலிக்க கார்டினல்களில் பலபேர் கலிலியோவின் அபிமானிகளாய் இருந்த காரணத்தால் அவரது வாதம் பின்னாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்து மதத்தின் முடைநாற்றமெடுக்கும் மூடநம்பிக்கைகளை,ஜாதீயக்கட்டுமானங்களை எதிர்த்துக்கிளம்பிய இயக்கங்கள் ஏராளம், அதற்கு ஆணீவேராய் இருந்தது புத்தமதகொள்கைகள்.ஜைனம்,வீரசைவம்,சமணம்,சீக்கியம்,சூவ்பித்ததுவம்,ஆகிய இந்திய புராட்டஸ்டண்டுகள் உருவாவதற்குக் காரணமாக இருந்ததும் புத்தமதம். படையெடுத்துக் கைப்பற்றியதை விட அசோகன் புத்த மதத்தை போதித்துச் சம்பாதித்து அதிகம்.அதனால்தான் கிட்டத்தட்ட 28 முறை போதிமரம் வெட்டப்பட்டது.நாலந்தா பல்கலைக்கழகம் தரைமட்டமாக் கப்பட்டது, நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அதனால் தான் இன்றுவரை ஒருகுண்டூசியைக் கூட சொந்தமாக கண்டுபிக்க இயலாத கபோதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதோ இந்த 2105 ஆம் ஆண்டில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை எழுதியதால் கல்புர்கி கொல்லப்பட்டிருக்கிறார். ஷீனா போராவுக்கு கொடுக்கப்படுகிற ஊடக முக்யத்துவம்,சாக்‌ஷி மகராஜின் மேல் விழுகிற ஊடகவெளிச்சம் இந்த அறிவுப்படுகொலை யின்மேல் விழமறுத்துவிட்டது. மேலை தேசத்தில் போட்டி விளம்பரத்துக்காகவேணும் இவ்வாறான செய்திகள் எதிர்முகாம்களால் பெரிதுபடுத்தப்படும். அந்தோ இங்கு எல்லோரும் தங்களைத்தற்குறியாக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள். அதானல் தான் எல்லா ஊடகங்களும் இதை ஒருவரிச்செய்தியாக்கிக் கடந்துபோய்விட்டன. விலங்குகளுக்கு, பறவைகளுக்கு,சிலைகளுக்கு, மூடநம்பிக்கைகளுக்கு,களவாணிகளுக்கு,கொள்ளையடிப்பவனுக்கு,போலிச்சாமியார்களுக்கு இந்ததேசத்தில் இருக்கிற பாதுகாப்பில் 10 ஒரு பங்கு கூட அறிஞர்களுக்கு இங்கே கிடையாது. அதுவே தீராத சாபம்.

3.7.13

தீவிரமாகும் தனிமையின் இசை.

நெடுநாட்களாகவே,புத்தகம்,இசை,சினிமா,தொலைக்காட்சி எனத்தொலைந்து கொண்டிருக்கிறது பொழுதுகள்.அம்மா வந்தாள் வாங்கி ரெண்டாவது தரம் வாசிக்க, புதிதாக தெரிகிறார் திஜா.ஊரெல்லாம் உன்பாட்டுத்தான் பாடலை பாடுகிற ஜேசுதாஸ் மிக நெருங்கி வந்து உட்கார்ந்து கொள்கிறார்.பின்னே ஆயிரம் தடவைகளுக்குமேலே கேட்டாகிவிட்டது.அதற்குவரும் ஊடிசை நெடுநாட்கள் பழகிய நண்பனின் வார்த்தைகளாக உருமாறுகிறது. கேணிக்
கரை வீதியில் இருக்கும் அந்த மேன்சனுக்கு அருகில் ஒருகுடும்பம் வடை போட்டு விற்றுக்கொண்டிருக்கும்.அவர்கள் அதிகாலை நான்குமணிக்கு எழுந்து பாத்திரங்களை உருட்டும் சத்தம் மறைந்துபோன தகப்பனாரை யாவகப்படுத்தும்.அந்த நேரத்துக்கு சரியாக ஒரு தெருப்பசுமாடு வந்து மாவு பிசைந்த தேக்சாவை தனது நாக்கால் வரக்,வரக்கென்று சுரண்டித்தின்கிற சத்தம் தினபடிக்கான சுப்ரபாதமாகும்.பிறகுதான் அந்த ஆக்காட்டிக்குருவியின் கிர்ரிக் சத்தம் கேட்கும்.

சின்னச்சின்ன அசைவுகளையும்,காய்கறி மார்க்கெட்டுக்கு அருகில் குவியும் குப்பைகளையும் அதனைதத் வறாமல் வந்து இல்லாமல் ஆக்கி விட்டுப் போகும் நகராட்சி சேவகர்களையும் ஊர்ந்து கவனிக்கும்படியாக்கிவிடுகிறது இந்த தனிமை. மார்க்கெட்டில் இருக்கும் சேகரண்ணன் கடை இனிப்பு போண்டாவும், அங்குவந்து அமர்ந்து ரெண்டு போண்டா சாப்பிட்டுவிட்டு பசியாறிப்போகும் காய்கறிவிற்கிற கிராமத்து பெண்களும் பரிமாறிக்கொள் ளாத தோழமையை கொடுத்துவிட்டுப்போகிறார்கள்.

வரும் வழியில் அதிகாலை வேளை அடர்த்தியாய் பவுடர் அப்பிக்கொண்டு கிழிந்த சேலையால் முக்காடுபோட்டுக்கொண்டு வடநாட்டுப் பாஷையில் பிச்சைகேட்கிற வயதான பெண்மணியை ஊகிக்கமுடிகிறது.அவரது கம்புக் கூட்டில் அன்றைய நாளிதழ் இருப்பதைக்கவனிக்க முடிகிறது.ஆனால் வியாழக்கிழமை தவறாமல் ஒருபெட்டிக்கடையில் ஆனந்தவிகடன் வாங்கப் போகிற போது அந்த வடநாட்டுப்பெண் காசு கொடுத்து தமிழ் நாழிதழ் வாங்கியது எதற்காக.இந்தக் கேள்வி இதுவரை பார்த்த, படித்த, கேட்ட  திகில் கதைகளின் விடைகளையெல்லாம் தாண்டி தொக்கி நிற்கிறது.

தினம் கடந்து போகும் அரண்மனை வீதியில் தான் அரசியல் கூட்டங்கள் நடக்கும்.அதனருகில் தான் எதையும் அலட்சியப் படுத்தியபடி காய்கறிகளை கடைவிரித்து உட்கார்ந்திருக்கிற பெண்களிருப்பார்கள். அதற்கருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு முன்னாடி எந்த நேரமும் அரைப்போதையில் உட்கார்ந்து கொண்டு போவோர் வருவபவரை அளந்து கொண்டிருப்பவர்
என்ன வேலை செய்வார் அவர் குடும்பம் எங்கிருக்கும் என்கிற கேள்வியும் கூட விடைதராமல் கிடக்கிறது.

போன செவ்வாய்கிழமை தலைமைத்தபால் நிலையத்துக்கு  முன்னாடி மேடை போட்டு பெரிய பெரிய ஒலிபெருக்கிப் பெட்டி வைத்து பாட்டுப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே பாட்டு.ஜேசுதாஸ், மெல்லிசை மன்னர்,கவிஞர்முத்துலிங்கம்( சரியா தெரியவில்லை) மூவரும் சேர்ந்து அந்தப்பகுதி முழுவதையும் வசியப்படுத்திக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் நின்று வரிகளையும் இசையையும் கேட்டால் நாளைக்காலையிலேயே இந்த தேசம் முழுக்க பாட்டாளி மக்கள் கைக்க்கு வந்துவிடும் போன்ற குதியாட்டம் உருவாகும்.

அப்புறம் நேரம் ஆக ஆக வங்கி இருக்கும் வீதிமுழுவதும் விலையுயர்ந்த கார்கள் கட்சிக்கொடிகட்டிக்கொண்டு வந்து தெருவை நிறைத்தன.ஏதாவது பிறந்த நாள், நூறாவது நாள் கொண்டாட்டமாக இருக்கலாம் என்று நினைத்து வேலைக்குள் முங்கிப்போனது தேரம். ஒரு பத்தரை மணிக்கெல்லாம் ’விற்காதே விற்காதே என் எல் சி பங்குகளை விற்காதே’ என்ற கோஷம் கேட்டது. இப்படியான கோஷங்கள் இடதுசாரித்தொழிற்சங்கக்கங்களின் கூட்டங்களில்,அதன் ஏனைய அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்களில் மட்டும் தான் கேட்கமுடியும்.ஆடிப்போனேன் ஒருவேளை ஆளும் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிக்காரர்கள் புகுந்துவிட்டார்களா என்று பதை பதைத்துப் போனேன். பிறகுதான் தெரிந்தது என் எல் சி பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடது என்று ஆளும் அண்ணா திமுக நடத்துகிற போராட்டம் என்று.ஓடம் ஒருநாள் வண்டியில் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
எனும் சொல் எவ்வளவு சத்தியமானது.

தனது தேர்ந்த திரக்கதைகளாலும்,செய்நேர்த்தி மிக்க பொதுவுடமைப் பாடல் களா லும் தமிழகத்து உழைக்கும் மக்களை மயக்கி வைத்திருந்த எம்ஜியாரின் உத்தி இனிமேல் செல்லுபடியாகாது. சனம் சினிமாவை விரட்டிவிட்டு சீரியல் களை கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருக்கிறது. அவர்களின் பக்கம் தான் இருக் கிறேன் என்று திசை திருப்ப இதுபோன்ற ஆர்ப்பாட்ட உத்திகளையும் ஒரு ஆளும் கட்சி கையாள வேண்டியது, இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் புதியது.

3.6.12

மெகா சீரியல்களை மிஞ்சும் தொலைக்காட்சி விவாதங்கள்

இன்றிரவு புதிய தலைமுறை விடைதேடும் விவாதங்கள் நிகழ்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பே மிகவும் நுணுக்கமான உள் நோக்கம் கொண்டது.கருத்து சுதந்திரம் குறித்த சகிப்புத்தன்மை குறைந்து வருகிறதா இந்த தலைப்பே சார்புத்தன்மை கொண்டது. ஹோஸ்டைல் விட்னெஸ்,லீட் கொஸ்டீன் வகைகளைச்சார்ந்தது இது.

இருந்துதான் தீரும். ஆம் சகிப்புத்தனமை குறைந்து வருகிறது என்று விவாதம் செய்த எல்லோரும் அந்த மக்களுக்கான உரிமைகளை ஒடுக்கு முறைகளை அழிக்கப் போராடுங்கள் அதைவிடுத்து கருத்து சுதந்திரத்தில் கை வைக்காதீர் கள் என்கிற தொனி நிறைந்த மையப் புள்ளியிலே தான் நின்று பேசினார்கள். பரமக்குடியில் ஒரு ஜனநாயகரீதியான போராட்டம் நடத்தியதற்காக பன்றி யைச் சுட்டுக்கொல்லுகிற மாதிரி சுட்டுக்கொன்றது அரசு. கலப்புத் திருமணத்தை பொறுக்கமாட்டாமல் உயிரோடு எரித்துக் கொன்றவனுக்கு வக்காலத்து வாங்கியது இந்த தேசத்து உச்சபட்ச நீதி.

இது ஊடகங்களில் வந்தசேதிகள். ஆனால் வராத ஒடுக்குமுறைகள் கோடிக் கணக்கில் கிடக்கிறது. இவற்றையெலாம் ரத்தக் கண்ணீரோடு தினம் தினம் சகித்துக்கொண்டுதான் உழல்கிறது தலித் சமூகம். அப்படித்தான் இந்த கார்ட்டூன் விவகாரத்திலும் அவர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்று  ஆசைப் படுகிறது மேட்டுக்குடி அறிவுலகம்.

கிராமங்களில் நடக்கிற அக்கிரமங்களை எதிர்த்துக்கேள்விகேட்டால் அடித்துக் கொல்லப்படுகிற சம்பவங்கள்.அதுகுறித்து புகார் கொடுக்கப் போனால் உயிரைப்பறிகொடுத்தவர்கள் மீதும் பொய்வழக்குகள். யாராவது போய்க்கேட்டால் கீழூருக்கு மேலூரு தாயாப் பிள்ளையாப் பழகிக்கிட்டு இருந்தோம் புதுசாப்படிச்சிட்டு வந்த அகராதி பிடிச்ச பயகளால கலவரமாகிப் போச்சி” என்கிற கருத்துக் கணிப்புவரும். இதே ரீதியில் அனுகப்படும் இந்த விவாதங்களை நாம் இன்னொரு மெகா சீரியல்போலத்தான் கடந்து போகவேண்டியிருக்கிறது.

இது குறித்த விற்பன்னர்களின் கோப்புக்காட்சிகளில் ஊடகவியளாளர் ஞானியின் வாதங்கள் அதிர்ச்சி தருபவையாகவே இருந்தது. அவரும்கூட மெகா சீரியல் கதாநாயகிரேஞ்சுக்குத்தான் கருத்துசொல்லுகிறார்.
இந்தியாவில்  மட்டும் தான் புரட்சி என்கிற சொல்லுக்கு சினிமாக்கதநாயகர்கள் என்று அர்த்தம்.

5.2.12

சூழ்ச்சியால் பேசப்படாது போன - அவள் அப்படித்தான்.

இன்று அதிகாலை ஐந்துமணிக்கு ஒரு உள்ளூர் கேபிள் மூலமாக கருப்பு வெள்ளை படங்களில் இருந்து  பாடல் கள் ஒலி_ஒளி பரப்பினார்கள். கடவுள் அமைத்துவைத்த மேடை,கம்பன் ஏமாந்தான்,பன்னீர்புஷ்பங்களே என மிக மிக நெருக்கமான பாடல்களாக இருந்தது. எழுபது  எண்பதுகளின் பாடல்கள். எல்லாமே என் கல்லூரிக்  காலங் களின் பாடல்கள். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் பாடல்கள். ஆனால் அது முழுக்க  கமல காசனின் படங்களாக இருந்ததால் கமலகாசனின் பாடல்கள் என்றுதான்  தமிழ்ச் சினிமா சொல்லும்.

முன்னாடி  கமலகாசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது அபூர்வராகங்கள் மற்றும் நிழல் நிஜமாகிறது ஆகிய இரண்டு படங்களால் சிவாஜியிலிருந்து கமலுக்கு உருமாற்றமான ரசனை. இரண்டிலும் ஒரு அசல் கோபக்கார  இளை ஞனாக சித்தரிக்கப் பட்டிருப்பார் கமல். பிற்பாடு அந்த ரசனையை ரஜினிக்கு  மாற்றிக் கொண்டேன் காரணம் இன்னும் அடர்த்தியான கோபம் அவரிடமிருந்து வெளியானதாக நான் நம்பியதால் வந்த வினை இது.

இதெற்கெலாம் சிவாஜியோ,ரஜினியோ,கமலோ காரணமில்லை அதன் இயக்குனர் தான் என்பதை அறிந்த போது எனக்கு அவள் அப்படித்தான் என்கிற படமும் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்கிற படமும் மிக மிக  நெருக் கமான படமாகத் தெரிந்தது. இந்த இரண்டில் அவள் அப்படித்தான் படத்தை குறிப்பிட்டுச்சொல்லியே தீரவேண்டும். தமிழ் இலக்கியச் சூழலில் சில எழுத்தும் எழுத்தாளர்களும்  கவனிக்கப் படாமல் போனது போல அவள்  அப்படித் தான் படமும் கவனிக்கப்படாமல் போனது. அதே காலத்தில் வெளியான பாரதிராஜாவின் படங்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கான தூண்டுகோலாக சித்தரிக்கப்பட்டது. ஆனால் நிஜத்தில் அவற்றில் பெண்கள் பெண்ணடிமைக் கலாச்சாரத்தைத் தூக்கிபிடிக்கும் பழய்ய பதுமைகளாகவே முன்னிருத்தப்பட்டார்கள். அவள் அப்படித்தான் அப்படி யில்லை.

1980 ஆம் வருஷம் சாத்தூர் தனலட்சுமி தியேட்டரில் திரையிடப் பட்டது. அப்பொழுதெல்லாம் சினிமா சகலரையும் விழுங்கும் ஒரு ராட்சஷ பொழுது போக்காக இருந்தது.புதுப்படம் திரையிடப்பட்ட முதல் நாள் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் வாங்கி அரங்கில் உட்காருகிற தமிழகம் தங்களுக்கான தேவைகள் எல்லாவற்றையும் கண் ணெதிரே பூதாகரமாக ஒளிரும் திரைம் தரும் என்று நம்பினார்கள். இன்னமும் நம்பிக்கொண்டிருக் கிறார்கள். இந்த நம்பிக்கையிலிருந்து  விலகிய இலக்கியம் காலங் காலங் காலமாக தோற்றுப் போய்க்கொண்டே  இருக்கிறது. அவள் அப்படித்தான் படமும் அப்படித்தான். மூன்றே நாட்களில் படத்தைத் தூக்கிவிட்டார்கள். மொத்தம் முன்னூறுபேர் கூடப்பார்த்திருக்க வாய்ப்பில்லை.அந்த மூன்று நாளில் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு மூன்று முறைபார்த்தோம்.

இன்றுவரை தமிழ்ச் சினிமாவுக்கென ஒரு நேர்கோடு  இருக்கிறது. அந்தப்படம் அதற்கு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கிறது.

ஒரு பெண்ணைப்பார்த்தவுடன் காதலிப்பது. ஒரு சீப்பு வாங்கவேண்டுமானால் கூட ஆயிரம் முறை யோசிக்கிற சனம் பார்த்த நொடியில் காதலில் விழு வதான கற்பனை. அப்படியே அவளைப் பூஜிப்பது. அவளது மினுக்கல் களை மட்டும் விஸ்வ ரூபப்  படுத்துவது. அவளிடம் மனது என்கின்ற ஒன்றிருப் பதை லாவகமாக ஒதுக்கித்தள்ளுவது.ஒரு பெண்ணை காதலிப்பது , அதற்கு எதிரான சவால் களை சாதுர் யமாக எதிர் கொள்வது. அவங்கப்பனைக் கொன்றுவிட்டு அவளை  மண முடிப்பது.

கொடுமை.  ஒரு பெண் இந்த உலகத்தில் முதன் முதலில் நெருக்கமாகவும் பிரியமாகவும் இருப்பது தனது தகப்பனிடம் என்கிற அறிவியல் உண்மையை ஹீரோயிசச் சாணியால் மூடி மறைத்த சினிமாக்கள் தான் இன்னும் அறி யாமையிலிருந்து மீள விடாமல் நம்மை அமுக்குகிறது.

அவள் அபபடித்தான் அப்படியில்லை. ஒருமுறைதான் காதல் வரும் எனும் சப்பைச் சிந்தனைகளை. தொட்ட வனையே கட்டிக் கொள்ளவேண்டும் என்கிற அதி பயங்கர சர்வாதிகாரச் சிந்தனைகளை மௌனமான அடியால் நொறுக் குகிற படம் அது. காதலன் காதலி நுனி விரலைத் தொட்டதும் மின்சாரம் பாய்ச்சுகிற கற்பனைகள் இல் லாத படம். ஒரு பெண்ணின் அவயவங்களைத் தொட்டுப்பார்க்க விடலைப் பையனுக்கும் ஆசைவரும்என்பதைச் சொல்லும் படம். அதை ஒரு சின்ன ஷாட்டில் சொல்லுகிற படம். காதலை பூஜை அறை யில் வைக்கிற சரக்காக ஆக்காத படம். ஆகவே அந்தப்படம் மக்களால் பெரி தும் பார்க்கப்படாமல் போனது.

ஆனால் அதிலும் நாம் சொல்லச் சின்னசின்னக் குறைகள் இருக்கிறது  அவளைப் பற்றி பேசுவது ஒரு ஆண் என்கிற குறைதான். அது எதனால் வந்த தென்றால் அதை உருவாக்க ஒரு பெண் இயக்குநர் இல்லை என்பதே. பெண் கள்  தனி யாகச் சினிமாவுக்குப் போகமுடியாத ஒரு மறைமுக தாலிபான் மனோபாவம் இருந்த இருக்கிற யுகத்தில் நாம் பெண் இயக்குநர்களுக்கு எங்கே போக?

பெண் மட்டுமல்ல இந்த சினிமா ஊடகத்தின் வழியே பேசப்படாது போன குரல்கள் ஒரு கோடியிருக்கும்.அதற்கு மேலும் இருக்கும். அந்தக் குரல்கள் தியேட்டர் இருளில், இடைவேளைக் காண்டீன் சலசலப்பில்,கழிப்பறை களில் சிதறிக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறன. அவற்றைப் பேசவிடாமல் குரல் நெறிக்கும் வகையில் வியாபார உத்திகள்,அரசியல் சூழ்சிகள்,தொழில் நுணுக்கங்கள், இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றன. அதனால் கதைகள் வற்றிப்போய் மீண்டும் மீண்டும் கழிசடைக் கருத்துள்ள ரஜினி படங்கள் மறு அவதாரமெடுக்கின்றன ரத்த பீஜன்களைப்போல.

2.2.12

இன்றைக்கும் ஒத்துப்போகும் பழங்கதைகள்


அது தாது வருசப் பஞ்சம்.திருடர்கள் பணம்,பொன்,பண்டங்களைத் திருடு வதை  விட்டு விட்டு.ஆக்கிவைத்த கஞ்சிப்  பானை களைக் களவாண்டு போனர்கள்.தேசம் முழுக்க பசியே வியாபித்திருந்த பஞ்சம் தலைதூக்கி ஆடியது. அவன் சொந்த ஊரைக் காலி பண்ணிவிட்டு சோறு கிடைக்கிற இடம்தேடி காடுமேடெல்லாம் அலைந்தான். பலநாள் அலைந்து கண்கள் பஞ்சடைத்துப் போய் ஓரிடத்தில் மயங்கி விழுந்தான்.

அந்த நேரத்தில் அங்குவந்த குடியானவன் ஒருவன்அவனைத் தூக்கிக் கொண்டுபோய் கண்முழிகக வைத்தான். கதைகேட்டான்.சொன்னான். இப்போதைக்கு என்னிடம் கொஞ்சம் கேழ்வரகும் வேட்டையாடிக் கொண்டு வந்த கொக்கும் இருக்கிறது சமைத்துத் தந்தால் சாப்பிடுவாயா என்று கேட்டான். ஆபத்துக்குப் பாவம் இல்லை உயிர் கொடு என்றான். கேழ்வரகை திரித்து,கொக்கைச் சமைத்துக் கலியும், கறியும் கொடுத்தான்.

அங்கேயே தங்கி விடுவதெனத் தீர்மானித்து அவனிடம் சொன்னான்.சரி என்னுடன்  தொழிலுக்கு வருவாயா எனக் கேட்டான்.சரி சொன்னான்.எனில் இன்றிரவு தொழிலுக்குப் போகலாம் என்று சொன்னான்.ஏன் இரவு என்று கேட்டான். பொறு அவசியம் வரும்போது சொல்கிறேன் என்றான்.இரவில் ஒரு வீட்டருகே போனார்கள். சன்னலை உடைத்து உள்ளே போ அங்கிருக் கும்  சாமான்களைத் தூக்கிக் கொண்டுவா என்று சொன்னான்.திருடுவதா மாட்டேன் என்று சொன்னான்.

’அப்ப என் கொக்கும் கலியும் கக்கு’
 என்றானாம்.

10.12.11

பொங்கியெழும் அணையும்,உடைப்பெடுக்கும் ஒருமைப்பாடும்



தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருக்கிற ஒவ்வொரு முறையும் அண்டைமாநிலத்தோடு உரசல் தீவிரமடைவது எதேச்சையானதா திட்டமிட்ட்டு நடக்கிறதா என்கிற சந்தேகம் வந்துகொண்டே இருக்கிறது. கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து கசிந்த தண்ணீர் விவகாரம் பெரிதாக உடைப்பெடுத்தது. பூதாகாரமாகி பின்னர்  திரைப்படத் துறையினரின் கூட்டுப் படப்பிடிப்பெல்லாம் கூட நடந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை அதை முழுநீள நிகழ்ச்சியாக சன் தொலைக்காட்சிக் குழுமங்கள் நேரடியாக ஒளிபரப்பியது. என்ன மாயமோ தெரியவில்லை இப்போதெல்லாம் அதைப்பற்றிப் பேசுவது செய்தி வெளியிடுவது out of fashion ஆகிவிட்டது. தண்ணீர் தேவையான  அளவுக்கு  அங்கிருந்து கிடைக்கிறதா இல்லை போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று தமிழ் உணர்வாளர்கள் முடித்துக்கொண்டார் களோ என்னவோ தெரியவில்லை.

 மூன்று முக்கிய தேசியக் கட்சிகள் மட்டுமே களத்தில் இருக்கிற கேரளத்தில் உணர்வு ரீதியான போராட் டங்கள் ஆரம்பித்து வைக்கப் படுகிறது.  இதில் ஆர் எஸ் எஸ் சும் அதன் கொடுக்குகளும் போடுகிற ஆட்டம் அபரிமிதமானது. ஆனால் பத்திரிகைகள் காங்கிரஸையும் தோழர்.அச்சுதானந்தனையும் மட்டும் குறிப்பிட்டுவிட்டு சடக்கென்று கடந்து போய்விடுகின்றன.

முதலில் இந்த முல்லைப் பெரியாறு அணை எங்கே இருக்கிறது,அதன் வரலாறு என்ன என்பதனைத் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது. அதன் பிறகு நீர்-நிலம்-காற்று-மற்றும் பொதுத்துறைகள்  எல்லாம் தேசத்தின் பொதுச்சொத்துக்கள் என்கிற புரிதலும் வரவேண்டும். அதன் பின்னர் எதன் மீது தனிக்கவனமும் யார் மீது கோபமும் வரவேண்டும் என்கிற வழிகளைத் தேர்ந்து கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது.

முல்லைப்பெரியாறு கேரளாவில் உள்ள  இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. கடல்மட்டத்திலிருந்து 881 மீட்டர் உயர்த்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளில் 1895 ஆம் ஆண்டு. பிரிட்டிஷ் இந்தியாவால்  கட்டி முடிக்கப்பட்டது. முதலில் பெரியாறு அணை என்றும் பின்னர் முல்லைப்பெரியாறு அண என்றும் பெயர் மாற்றப்பட்டது.காரணம் கேரளத்து நதிகளான முல்லய்யாறும்,பெரியாறும் கலந்து தேக்கிவைக்கப்படும் இடம் என்பதே. அப்போதைய திருவிதாங்கூர் அரசர் விஷாகத்திருநாள் ராம வர்மனுக்கும் இந்திய  மாகானச் செயலாளருக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் அந்நாளைய ராணுவ செயற்பொறியாளர் ஹென்னிங்டனும் திருவிதாங்கூர் திவான் ராம் ஐய்யங்காரும் 1886 ஆம் ஆண்டு அக்டோபர்29 ஆம் நாள் கையெழுத்திட்டனர்.

999 வருடத்திற்கான ஒப்பந்த ஷரத்துப்படி 8000 ஏக்கர் நிலம் அணைக்காகவும் 100 ஏக்கர் நிலம் கட்டுமானத் திற்காகவும் சர்வ சுதந்திர பாத்தியதைக்காகக்  கையளிக்கப்பட்டது. ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஐந்து ரூபாய் வாடகை வீதம் வருடத்திற்கு 40000 ரூபாய் செலுத்தவேண்டும்.

சென்னைப்பட்டாளியன்களும் போர்ச்சுக்கீசிய கைவினைகர்களும் ஈடுபடுத்தப்பட்ட கட்டுமானத்தின் உத்தேச மதிப்பீடு 1கோடியே நான்குலட்சம். செங்கற்ஜல்லிகள்,சுண்ணாம்பு,கருப்பட்டி ஆகியவை கலந்து உருவாக்கப்பட்ட பழய்ய தொழில்நுட்பம்.கட்டுமான காலத்தில் சுமார் 450 பேர் உயிரிழந்தார்கள் இரண்டுமுறை உடைப்பெடுத்து பெருத்த சேதமேற்பட்டது எனவே செலவினங்கள் கூடியது, உடனே பிரிட்டிஷ் அரசு அணை கட்டுமானத்தை நிறுத்திவைத்தது.சர் பென்னிகுயிக் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து கட்டுமானத்தைத் தொடர்ந்தார்.

இந்தக் கட்டுமானத்தின் விஷேசம் என்னவென்றால் இரண்டு நதிகளின் போக்கு அரபிக்கடலை( மேற்கு)  நோக்கி யிருக்கிறது. அதைத் தேக்கி வங்காள விரிகுடாவுக்குத் (கிழக்கே) திருப்பவேண்டும். திருப்பியதால் தென்  தமிழக த்தின் மழைமறைவுப் பிரதேசங்களான மதுரை,தேனி,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரத்து மாவட்டங்கள் பயனடைந்தன.அங்கிருந்த சுமார் 85000 ஏக்கர் பொட்டல் காடுகள் விலை  நிலங்களாக மாறின. இந்த  அணையி லிருந்து கேராள பயன்பாட்டுக்கு ஒருசொட்டுக் கூடக் கிடையாது.அதே போல அணையின் பராமரிப்பு,பாதுகாப்பு எல்லாமே தமிழ்நாட்டைச்சார்ந்தது.

இந்த ஒப்பந்தம் இந்திய சுதந்திரத்துக்குப் பின் காலாவதியாகிய படியால் அதன் பிறகான பலசுற்றுப்  பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்து இறுதியில் 1970ல், முதல்வர் அச்சுதமேனன் அரசால் ஒப்பந்தம்  புதுப்பிக்கப் பட்டது.அதன் பிரகாரம் வாடகையை ஒரு ஏக்கருக்கு 30 ரூபாயாக உயர்த்தியும் அதுபோக தயாரிக்கப்படும் ஒவ்வொரு கிலோவாட் மின்சாரத்துக்கும் 12 ரூபாய் வரியாகவும் செலுத்தவேண்டுமென ஒப்பந்தமானது.

1979 ஆம் ஆண்டு குஜராத்திலுள்ள மோர்வி அணை உடைந்து சுமார் 1500 பேர் உயிரிழந்து 150000 பேர்  பதிக்கப் பட்டனர்.அதன்பின் அணைகள் குறித்த பாதுகாப்பில் தீவிரம் காட்டப்பட்டது.116 வருட பழமையும்,19ஆம்நூற் றாண்டின் கட்டுமானத் தொழில் நுட்பமும், வல்லுநர்களால் எச்சரிக்கப்பட்டது. கூடவே இரண்டு முறை  இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம், கல்லாறு பகுதிகளில் ஏற்பட்ட 4.5 ரிக்டர் நிலநடுக்கம். மாறிவரும் பூமி வெப்பமயமாதல் ஆகிய காரணங்களினால் முல்லைப் பெரியாறு தேக்கத்தை மையப்படுத்தி கொந்தளிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நீரின் தேக்க அளவு குறைக்கப்பட்டது.கொந்தளிப்பு இரண்டு மாநிலங்களுக்கிடையிலான
சண்டையாக மாறிக்கொண்டிருக்கிறது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது எனக்கிளம்பிய போராட்டங்கள் கொந்தளிப்பாகி அவ்வளவுபெரிய அணயை உடைப்போம் என்று கேரளத்தார் அறிக்கைவிடுகின்றனர்.இந்த அறிவீன அறிக்கைகளை தூக்கிக் கொண்டு பிரதேச உணர்வை கிளறிவிடுகிறது கேரளாரசியல்கட்சிகள்.ஆனால் அங்கிருக்கிற சமூக ஆர்வலர்கள் இலக்கியவாதிகள் தமிழகத்துக்கு வழக்க ம்போல தண்ணீர் தந்தே ஆக வேண்டும் என அறிக்கை விடுகிறார்கள். நீதி மன்றமும் அதை உறுதிப்படுத்துகிறது.

இவ்வளவு களேபரம் நடந்து கொண்டிருக்கையில் மத்திய அரசு இது எதோ வெளிநாட்டுப் பிரச்சனைபோல கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது. இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு எத்தனை பொதுத் துறைப் பங்குகளை விற்கலாம்,எந்தெந்த துறைக்குள் அந்நிய முதலீட்டைப் புகுத்தலாம்,சில்லறை விற்பனையோடு சேர்த்து எதையெல்லாம் விற்கலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது.

பொங்கிவரும் போராட்ட உணர்வைப் பார்க்கும்போது. சரி இருக்கட்டும் ஒரு நல்ல போராட்டத்துக்கான தருணம் வரும் அப்போது இன்னும் அடங்காத கோபத்தோடு மக்கள் கிளம்புவார்கள் என்கிற நம்பிக்கை வருகிறது.

6.12.11

’மனமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல’ (அண்ணல் அம்பேத்கர் நினைவுக்கு)


                                                        ( S.Radhakrishnan )

இந்தப் பதம் ஒரு நெடுங்கவிதையின் இடையில் வரும்.இதை எழுதிய கவிஞர் வலைமக்களால் பெரிதும் அறியப்பட்டவர்.அவன் தோழன் மாதவராஜ் .( தீராதபக்கங்கள்). அவன் எழுதிய இன்னொரு குருசேத்திரம் என்கிற கவிதையின் இடையில் தான் இந்தப்பதம் வரும். இது நாங்கள் நடத்திய அக்கினிக்குஞ்சு என்கிற கையெழுத்துப் பத்திரிகையில் தவிர வேறெங்கும் நாம் பார்க்க முடியாது. இருந்தும்  1984 ஆம் ஆண்டு வாசிக்கப்பட்ட கவிதையின் இடையில் வரும் இந்தச்சொல் ஏன் எனக்குப் பிடித்துப்போனது என்பதை முழுக் கவிதையையும் வாசித்தல் தான் புரியும்.அது ஒருபுறம் இருக்க மனம் இருந்தும் ஒருதாழம் பூவைப்போல ஒதுக்கிவைக்கப்பட்ட பலரில் பாபா சகேப் அம்பேத்கர் முதலானவர்.

அவர் குறித்த பல புத்தகங்கள் இருக்கிறது.இன்னும் வலையில் தேடினால் அதற்கதிகமாகவும் கூடப்படிக்கலாம்.ஆனால் அவரைப்பற்றிய சில அறிதான செய்திகளை எனது தாய்மாமனார் திரு எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் சொல்லிக்கேட்கவேண்டும்.. அம்பேத்கரைவிட பெருந்தலைவர் காமராஜர் குறித்த அறிதான விஷயங்களை இடம் காலம் குறித்த துள்ளியத்தோடு தனது அலாதியான விமர்சனத்தையும் சேர்த்துச் சொல்லுவார். அப்படி ஒருமனிதர் அதுவும் பள்ளி ஆசிரியர் பொதுச் சமூகத்தில் இருந்தால் அவரைக்கொண்டாட சமூகம், அமைப்புகள் நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு வந்திருக்கும். ஏனோ தெரியவில்லை இந்த ஐம்பத்தெட்டு வயதிலும் யாராலும் இனங்காணப் படாத மனிதராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரும் கூட இந்த மனமிருந்தும் ஒரு தாழம்பூவைப் போல என்கிற பதத்தின் பட்டியலின் கீழ்வருகிற ஒரு மனிதராவார். அவர் அம்பேத்கர் குறித்துச்சொன்ன ஒரு விஷயத்தை இங்கே இன்று பகிர்ந்து கொள்ளவேண்டும்.

அவர் தனது மகனுக்காக ஒரு சான்றிதழ் வாங்க ஒரு வழக்குறைஞரிடம் போனாராம்.அங்கே வழக்கறிஞரின் நண்பர்களும் சொந்தங்களுமாக நான்கைந்து பேர் குழுமியிருந்தார்களாம். இவரைப்பார்த்ததும் இந்த அம்பேத்கர் என்னதான் செய்துவிட்டார் நாடு முழுக்க சிலைவைத்துக் கொண்டாடு மளவுக்கு என்று ஒருவர் கேட்டாராம் மற்றவர்களும் பகடி செய்து சிரித் தார்களாம். உடனே ’நான் ஒரு கையெழுத்து வாங்க வந்திருக்கிறேன் இந்த நேரத்தில் இப்படி ஒரு கேள்வி என்காதில் விழுகிறது,நான் பதில் சொன்னால் ஒருவேளை எனக்கு போட வேண்டிய கையெழுத்து கிடைக்காமல் போய் விடும் ஆனாலும் என்னிடம் கேட்கப்படாத இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லாமல் போக முடியாது’ என்று சொன்னதும் சரி அப்படி என்னதான் செய்தார் இந்த அம்பேத்கர் என்று கேட்டிருக்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவுக்கு வரிவடிவிலான சட்டம் ஒன்று தேவைப்பட்ட தொடக்க காலத்தில் அதை உருவாக்கு வதற்கான அரசியல் நிர்ணய சபையைக் கூட்டினார்கள்.அதன் தலைவராக முன்னாள் சனாதிபதி திரு ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டாராம். பின்னர் அந்த சபை நான்குமுறை கூடி யிருக்கிறது அதன் பின்னர் கூட சுதந்திர இந்தியாவில் நான்குபேர் கொண்ட குழு அமைக்கமுடியவில்லை. பிர்தமர்நேருவின் ஆலோசனைப்படி அதற்குத் தகுதியான ஒரே நபர் என்கிற நிணயசபையின் உறுப்பினர்கள் எல்லோரும் அம்பேத்கரைப்பார்க்க அவரது இல்லத்துக்குப் போனார்களாம். வரவேற்று உபசரித்து வருகையின் நோக்கம் கேட்ட அறிந்துகொண்ட அம்பேத்கர் ’உங்களுக்கு ஒரு இதிகாசம் தேவைப்படும் போதும் நாங்கள் அவசியமாக இருந்தோம்,ஒரு புராணம் தேவைப்படும் போதும் நாங்கள் அவசியமான வர்களாக இருந்தோம் இப்போது சட்டம் தேவைப்படுகிறது இப்போதும் கூட நாங்கள் தான் தேவைப்படுகிறோம்’ என்று சொல்லிவிட்டு அரசின் விருப்பத்துக்கு இணங்க சட்டக்குழுவின் தலைவராக இருக்க ஒத்துக் கொண்டார். அந்தக்குழுவில் அம்பேத்காருடன் இணைந்து பணிபுரிய சர். அல்லாடி கிருஷ்ணமூர்த்தி அய்யரும், டிடி.கிருஷ்ணமாச்சாரியும்,வங்கத்தின் நர்சிங்ராவும்,கேகே முன்ஷி,கனேஷ் மாவ்லாங்கர் ஆகியோர்...... நியமிக்கப் பட்டார்கள்.

அந்தகுழுவின் முதல் கூட்டம் மட்டுமே ஆறுபேருடன் நடந்தது. பொதுவாகவே இப்படியான அமைப்புக்களின் முதல்கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள் என்னவாக இருக்கும்.அலுவலகத்தை எங்கே வைத்துக்கொள்ளலாம்.
அலுவலக சாதனங்கள்,சப்பாடு,தேநீர் இவற்றை எங்கு இருந்து தருவித்துக் கொள்ளலாமென்கிற விடயங்கள் குறித்து மட்டுமே பேசியிருக்கமுடியும். அதன் பிறகு தனக்கு வயதுஆகிவிட்டது என ஒருவரும்,தான் மேலைநாடு போகிறேன் என்று இன்னொருவரும்,தனக்கு உடல்நிலைசரியில்லை என மூன்றாமவரும் அந்தக்குழுவில் இருந்து விலகிக்கொண்டார்களாம்.

குழுவுக்கான புதிய உறுப்பினர்களை நியமிக்கச் சொல்லிக் கேட்காமல் அம்பேத்கர் தனக்கிட்ட பணிகளை தன்னந்தனியே தொடங்கினார். அவர் குறிப்புகள் சொல்லசொல்ல அவரது உதவியாளர் அப்போதைக்கிருந்த அந்தக்கால ரெமிங்டன் தட்டச்சு எந்திரத்தில் அதை எழுத்துருவாக்க பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது.

இடைப்பட்ட காலத்தில் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் சனாதிபதி ராஜேந்திரப் பிரசாத்திடம் போய் ஒரு தேசத்தின் சட்டவடிவை உருவாக்க எப்படி ஒருதனிநபரைமட்டும் சார்ந்திருக்கமுடியும் என்று வாதிட்டு இருக்கிறார்கள். அவர்களின் முணுமுணுப்பை புறந்தள்ளிய சனாதிபதி அவருக்கு துணைக்கு  ஆள் தேவைப்பட்டால் அவரே கேட்டிருப்பார் நானாக வழியப்போய் ஆட்கள் நியமித்தால் அவரை என்னால் எதிர்கொள்ள முடியாது தவிரவும் அவரது திறமை பற்றி எங்களுக்குத்தெரியும் என்று சொல்லிவிட்டாராம்.

ஒன்றிரண்டல்ல பத்தொன்பது மாதங்கள் அல்லும்பகலும் தன்னந்தனியே கிடந்து உருவாக்கிய வரைவு சட்டமசோதாவை மிகச்சரியாக நவம்பர் 1949 ஆம் ஆண்டு 26 ஆம் தேதி நிர்ணயசபையின் கூட்டத்தில் சமர்ப்பித்தார் அம்பேத்கர். 95 திருத்தங்கள்,12 பட்டியல்கள், 22 தொகுதிகள்,448 ஆர்ட்டிகிள்ஸ், ஆகிய வற்றை உள்ளடக்கிய 117369 ஆங்கிலச் சொற்களினால் உருவாக்கப்பட்ட ஒருகணத்த கோப்பு அது.

அந்தக்கூட்டத்தில் இந்த சட்ட உருவாக்கலில் தனக்கு உறுதுணையாக இருந்த ஏனையோருக்கும் நன்றி தெரிவித்து அவர்களின் பங்களிப்பில் தான் இது சாத்தியமாகி யிருக்கிறது என்று உரையாற்றினாராம். கூட்டத்தில் ஆஜராகி யிருந்த ஏகே அய்யர் என்கிற அல்லாடி கிருஷ்ணமூர்த்தி உட்பட யாரும் ஏதும் சொல்லாமலிருந்தாலும்,டிடிகே அவர்கள் எழுந்து உண்மையில் இந்த சட்ட உருவாக்கலில் எங்களுக்கு  பங்கில்லாத போதும்கூட எங்கள் பெயரை இணைத்திருப்பது அம்பேத்கரின்  பெருந்தண்மையைக் காட்டுகிறது என்று சொன்னாராம்.

உண்மையான நடப்பு இப்படி இருக்க பத்திரிகையாளர் திரு சோ.ராமசாமி அவர்கள் எதாவது சட்டநுணுக்கங்கள் பற்றிச் சொல்லும்போது பெரும்பாலும் டாக்டர் டிடிகே அவர்களின் பெயரையும், சர்.அல்லாடிகிருஷ்ணமூர்த்தி அவர்களையும் மட்டும்தான் மேற்கோளிட்டு காட்டுவார்.

மிகப்பெரும் படிப்பாளி,மிகப்பெரும் எழுத்தாளர்,கல்வியாளர்,உலகின் அணைத்து மதங்கள் குறித்து நுணுக்கமாக கற்றறிந்த அவர்தான் இந்து மதம் குறித்த மிகப்பெரிய எதிர்க் கருத்தை வலுவாக முன்வைத்தார்.சுமார் 5000 பக்கங்கள் எழுதியிருக்கிற சாதனை இதுவரையில் யாராலும் எட்டப்பட முடியாதது. தான் முதலாக வெளியிட்ட இந்தியாவில் ஜாதிகள் எனும் புத்தகம் தொடங்கி 1956 ல் வெளியான புத்தமும் அவரது தம்மமும் எனும் புத்தகத்தோடு சுமார் 21 புத்தகங்களை அறிவுலகத்துக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.அவர் எழுதிய புத்தமும் தம்மமும்,ரைடில்ஸ் ஆப் ஹிண்டுயிஸம்,சூத்திரர்கள் யார், அனிஹி லேசன் ஆப் கேஸ்ட் ஆகியவை எவராலும் மறுதலிக்கமுடியாத பொக்கி ஷங்கள். இந்தியாவின் சமூகபொருளாதார அமைப்புக்குறித்த அவரது தீர்க்க மான மற்றும் ஆழமான கருத்தியல்கள் பொதுச்சமூகத்தால் புறந்தள்ளப் பட்டவை. சத்திய சோதனையும்,வேர்ல்டு ஆப் டிஸ்டனியும் தூக்கிவைத்துக் கொண்டாடப்படும் அளவுக்கு அம்பேத்கர் அறியப்படவில்லை. சுமார் 50000 புத்தகங்களை தனது சொந்தச்செலவில் வாங்கி நூலகமாக்கிய பெருமை வேறெந்த கல்வியாளருக்கும் கிடையாது.

இந்தத் தகவல்களை உலக நடப்புகளோடும்,இன்றைய்ய செய்திகளோடும் ஒப்பிட்டுச் சொல்லிக்கொண்டே போவார் திருராதாகிருஷ்ணன் அவர்கள். அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் சத்தூரில் இருக்கிறது. அந்த பட்டாளம்  தேவி ஸ்டுடியோவிலோ,என் ஆர்கே சுவீட்ஸ் வாசலிலோ, இல்லை ஒரு தேநீர்க் கடையிலோ தினப்படிக்கு கூடும். மிகச்செறிவான அரசியல் சமூக, இலக்கிய,திரைப்படம் குறித்த விமர்சனக் கருத்துக்கள் பதிவுசெய்யப் படாமல் காற்றில் கறைந்து கொண்டே போகிறது. அவரிடம் அழியாத வாய்மொழிப் பொக்கிஷங்கள் தேங்கிக்கிடக்கிறது அதிலிருந்து கொஞ்சமாவது  எடுத்து பதிவு செய்ய ஆவலாக இருக்கிறது.எனவே இந்தநாளின் நடுப்பகலில் அவரைச் சந்தித்து அவரோடு பேசிக்கொண்டிருந்த தருணம் மிக முக்கியமானது.


         

4.12.11

சில சில்லறைத் தகவல்களும் தேசபக்தியும்.



இந்த வார்த்தையே கொஞ்சம் சிக்கலானது அதென்ன தேச பக்தி. நாம் வாழும் தேசத்தின் மீது பக்தி மட்டும்தான் இருக்கவேண்டுமா? காதல் இருக்கக்கூடாதா ? நேசம்,அன்பு,பற்று,அபிமானம்,மரியாதை இவையெல்லாம் இருக்கக்கூடாதா ?. பக்தி என்கிற சொல்லே குதர்க்கமானதும் நிறைய்ய உள்குத்துகள் அடங்கியதும்  ஆகும். முதலில் தேசம் என்பது என்ன வெறும் எல்லைகள் மட்டும்தானா ? அதில் வாழுகின்ற மனிதர்  சகமனிதர், உயிரினங்கள்,இயற்கை,மண்,வளங்கள் இவை யாவும் கூட்டாக சேர்ந்தது தானே தேசமாக முடியும்.நம்மோடு இங்கிருக்கிறவற்றை நேசித்து விட்டு பிறகல்லவா எல்லைகள் பற்றி  யோசிக்கவேண்டும்.  இருப்ப வற்றை கூடியமட்டும் கூறுபோட்டு விட்டு தேசபக்தி வேண்டுமெனத் தேடினால் என்ன  கிடைத்து  விடப் போகிறது. கிடைக்கப்போவது அக்மார்க் அடிமைத்தனம் மட்டுமே?

இந்த இந்தியா அம்பத்தாறு தேசங்களாக பிரிந்துகிடந்த காலத்தில் மேலை நாடுகளில் இருந்து எதாவது வாசனத்திரவியங்களை விற்கவந்தார்ர்கள். வந்ததும் லாட்டரி அடித்த சந்தோசமடைந்தார்கள். எதற்கு ஏவாரம் பண்ணவேண்டும் நாட்டையே  அடிமைப் படுத்திவிட்டால் கப்பல் கப்பபலாய் அள்ளிக்கொண்டு போகலாம் என்று முடிவுபண்ணினார்கள். அது அவர்களுக்கு வியாபாரம் பண்ணுவதை விட சுலபாமான வேலையாக இருந்தது.அவர்களின் உடலுக்கு ஏற்ற தட்பவெப்பம் சரியாக இல்லாதிருந்த போதுகூட அவர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்கான தட்பவெப்பம் தேவைக்கு அதிகமாகவே இருந்தது.

கிறிஸ்து பிறந்து 2011 ஆண்டுகள் கடந்து போன பின்பும்,கணினி,உயிரி,பௌதிக,ரசாயன தொழில்நுட்பங்கள் கூடிப்போன இந்தக்காலத்தில் கூட கேரளத்தோடும், கர்நாடகத்தோடும், மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிற இதே மனிதர்கள் தான் அன்றைக்கு சேர,சோழ,பாண்டிய மீசைகளை முறுக்கிவிட்டுக் கொண்டலைந்தார்கள். சகமனிதனை வெட்டிச் சாய்த்துப் பீய்ச்சி அடிக்கிற ரத்தத்தைக் கண்டு கொந்தளிக்கிற குரூரத்தை வீரம் என்று பீற்றிக் கொண்டு கிடந்தார்கள். ஆடுமாடு திருடுவதை ஆநிறை கவர்தல் என்று புராணகாவியங்கள்  எழுதி வைத்தார்கள்.

பிறன்மனை நோக்கக்கூடாது என்பதை இதிகாசமாக்கிய காலத்தில்தான் ஒருத்தன்  பொண் டாட்டியை இன்னொருத்தன் அபகரிக்க ஆயிரக்கணக்கான சிப்பாய்களின் விலை மதிப்பில்லாத உயிர்களைப் பகடைக் காய்களாக்கினார்கள். மலை உச்சியில்,நதிக்கரைகளில் நூறு இருநூறு ஏக்கர்களில் அரண்மனை  கட்டிக் கொண்டு நூற்றுக்கணக்கான பெண்களை வைத்துக்கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கு ஏழைகளின் வயிற்றிலடித்து வரிகள் வாங்கிக் குவித்தார்கள். இதே மன்னர்கள் தான் நோய்வாய்ப்பட்டு மரித்துப் போன மனைவிகளுக்கு நினைவுச் சின்னம் எழுப்புகிறேன் என்று சொல்லி லட்சக்கணக்கான மனிதர்கள் உழைப்பை உறிஞ்சி மண்டபங்கள் கட்டினார்கள். இதை எவனும் எதிர்த்துக்கேட்க வழியில்லாதவாறு மனிதர்களை நிறம்பிரித்தார்கள்.

இதுபோதுமானதாக இருந்தது மேலைத் தேசத்தவர்கள் நம்மை அடிமையாக்க.வெறும் பிரிட்டிஷார் மட்டும் தான் நம்மை அடிமையாக்கினார்கள் என்பதுபோலத்தான் இன்றுவரை நமக்கு வரலாறுகள்  சொல்லிக்கொடுக்கின்றன. வந்து போனவர்களின் பட்டியலைப் பார்த்தால் அவமானத்தில் உடல்பதறுகிறது.  கில்ஜிகள், முகம்மதியர்கள், பார்சீகள்,போர்ச்சுக்கீசியர்கள்,யூதர்கள்,சிரியர்கள்,டச்சுக்காரர்கள், அப்புறம் தானே பிரிட்டிஷார்கள் வந்தார்கள். இதிலென்ன கொடுமை என்றால் இந்த இனத்தவரெல்லாருடைய நாட்டு வரைபடத்தைப் பாருங்கள்  வெற்றிலை எச்சிலைத்( அல்லது பான்பராக்) துப்பியது போலதிட்டுத் திட்டாய்மட்டுமே இருக்கும். அப்படியே நமது இந்திய வரைபடத்தைப் பாருங்கள் மிகக்கேவலாக இருக்கும். அதைவிடக் கொடுமை என்ன வென்றால் யூதர்களுக்கு நாடே கிடையாது.

இந்த யூதர்களுக்குத்தான் கேராளா தொடங்கி பம்பாய் வரையிலும் இந்தியா சிக்கிக்கிடந்தது. அதற்குப்பெயர் யூத இந்தியாவாம்.அந்த யூத வந்தேறிகளுக்கு அப்போதைய ’இந்து’ மன்னன் ஒருவன் கிறித்தவ யூதத்தலைவன் ஜேம்ஸ் ராப்பனுக் கொடுத்த உரிமைகைகளின் எண்ணிக்கை 72 வகையாகும்.ஆள்,அம்பு,பரிவாரம்,அரண்மனை,அந்தப்புறம் இவைகள் போதாதென்று ஆனைமேலே  அம்பாரி. அந்த அம்பாரி போகும் போது முன்னாடி முரசறைந்து கொண்டு பராக் சொல்லவேண்டும். சொல்லும்போது கீழ்சாதிக்காரார்கள் ஓடோடி கண்ணில் படாமல் மறைந்து கொள்ளவேண்டும். இதே வகை மரியாதைகள் சிரியதேசத்து கிறித்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டதாகத் தாமிரப் பட்டயம் சொல்லுகிறது.( ஜேம்ஸ்மெஸ்ஸேயின் ’தி டவுன்ட்ரோடன்’ பக்கம் 17 ).தனது மண்ணில் தன்னோடு பிறந்து தனக்காக உழைத்து,வியர்வை சிந்துகிறவனை பார்க்கக்கூடாதவனாகவும் தன்னை  அடிமையாக்க வந்தவனிடம் குண்டி குப்புறவிழுந்து எல்லாவற்றையும் இழந்து போனவர்கள் தான் வீரம் செரிந்த மன்னர்கள் என்று நாம் இன்னும்கூடப் போற்றிப்பாடுகிறோம்.

ஏகலைவன் என்கிற ஒரு சாமான்யன் வில்வித்தை தெரிந்துகொண்டான் எனக்கலங்கிப்போய் அவன் பெருவிரல் பிடுங்கிய சூழ்ச்சிக்காரர்கள் வாழ்ந்த இந்த தேசத்திலிருந்து தான் போதி தர்மன் வருஷக்கணக்காய் பயணமாகிப் போய்  சீனர்களுக்குத் தற்காப்புக் கலை சொல்லிக் கொடுத்தானாம். இது எப்படியிருக்கிறது ?. புராணங்களின் காதுகளிலேயே சமகாலக் கதைகள் பூச்சுற்றுகிறபோது பழங்காலக் கதைகள் சும்மாவா  இருந்திருக்கும் ?. சொல்லுகிற கதைகளெல்லாம் வீரம்தான் என்று வைத்துக்கொள்வோம். அதையெல்லாம் வைத்துக்கொண்டு உள்ளூர்க்காரனை மட்டும் தான் அடிக்கவேண்டுமா அயல்நாட்டுக்காரனை அடிக்கக்கூடாதா? அப்படியானால் அது
என்னவகை வீரம். அந்த வீரத்தை 1947 வரை அடகுவைத்திருந்தார்களா? இல்லை  பத்மநாதபுரம் கோயில் நகைகளைப்போல குழிதோண்டிப் புதைத்துப் பூட்டிவைத்திருந்தார்களா?.

இந்தியப்பரப்பில் எத்தனை பேரரசர்கள்,எத்தனைஎத்தனை சிற்றரசர்கள்,எவ்வளவு குறுநிலமன்னர்கள்,இன்னும் ஜமீந்தார்கள் இருந்தார்கள்.  அவர்களில் எத்தனை அரசருடைய ஆள் அம்பு பரிவாரங்கள் பிரிட்டிஷாரைக்குறி பார்த்தது. கணக்குபார்த்தால் வருத்தமாக இருக்கிறது. ஆனால் வரி வசூலிப்பவர்களாகக் கப்பம் கட்டுகிறவர்களாக காலந்தள்ளிய மன்னர்கள் பட்டியல் தான் கணக்கிலடங்காதது. ராணி லக்குமிபாய், வீரபாண்டியக் கட்டபொம்மன் போன்றோரைக் கணக்கிலெடுத்தாலும் மெல்லமெல்லக்கிளம்பும் தரவுகள் குழப்பம் தருகிறது.

ஆனால் சாமன்யர்களின் கால்கள் வீதிக்கு வந்தபிறகுதானே சுதந்திரம் என்கிற சொல் உருவானது. அப்படிச்சொல் உருவாக உயிர் புதைத்தோர் பட்டியல் நீளமானது அவர்கள் யாரும்  அரச குடும்பத்தையோ, ஜமீந்தார்  பரம்பரை யிலோ இல்லை வழிவழியாய் நெஞ்சில் வாள் கொண்டு எழுதிய வீரக்கதைகளுக்குச் சொந்தக்காரர்களோ
இல்லை. ஜாலியன் வாலா பாக்கில் மலிவாக மடிந்துபோன உயிர்களுக்கு பதில் கேட்க முப்பதுவருடங்கள் பதுங்கியிருந்து ஜெனரல் டயரின் உயிரை பிடுங்கினன் ”உத்தம் சிங்”.இந்தப்பெயரைக்கேட்டாலே உடல் புல்லரிக்கிறது. வன் ஒரு சாமன்யன்.அதேபோலத்தான் சூரியா  சென்,  கல்பனாதத் , பகத்சிங்,  சுகதேவ், ராஜகுரு,வாஞ்சி,குமரன்,வ உ சி,சிவா என்கிற எளிமையான மனிதர்கள் தான் போராளிப்பட்டம் ஏந்தினார்கள். அவர்களின் கதைகள் கேட்ட சாமான்யர்கள்தான் தெருவில் இறங்கினார்கள்.இறங்குவார்கள்.

அதுவரை
சில்லறை சில்லறையாய்
எல்லாவற்றையும் சுருட்டிக்கொள்ளும்
இந்த தேசத்து ஆட்சியாளர்களோடு
கைகோர்த்துக்கொண்டு
அமெரிக்காவும் ஆட்டம்போடும்.
அதுவரை
நாமும் மலையாளிகளும் மாறி மாறி
உண்ணாவிரதம் இருக்கலாம்.
அதுவரை
தேசம் என்பது பக்திக்கானதாக
மட்டுமே பற்றவைக்கப்படும்.

13.11.11

ஆற்றாது அழுத கண்ணீர்......


தமிழ் மக்களின் மேல் கவிழ்ந்திருக்கும் நீங்காத சாபம்தான் இந்த நிகழ் அரசியலும்,சினிமாவும். ஒரு ஐந்துவருடம் மக்கள் பட்டு அழுந்திய மனக்குமுறலுக்கும் ஆயாசத்துக்கும் திமுகவுக்கு கோட்டைவாசலைத் திறந்துவிட்டது 2006 தேர்தல் . அதை மாற்றம் எனக்கணக்கிலெடுத்துக் கொண்டால் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்துக்குள் நடந்த சண்டைகளைக்கூட மாற்றம் என்று தான் புள்ளி விபரப் படுத்தவேண்டிய கேடுகாலம் வந்துபோனது தமிழகத்தில். யாருக்குமே தெரியாமல் சும்மா மதுரைக்குள் சம்பாதித்துக்கொண்டிருந்த அழகிரி யானைமாலை போட்டதுபோல மத்திய மந்திரி ஆனார்.நானென்ன இளைத்தவனா என்று தயாநிதி அழகிரியும் மத்திய மந்திரி ஆனார். இவர்களிருவரும் மந்திரியாகிறபோது நான் மட்டும் என்ன சூத்தக் கத்திரிக்காவா என்கிற கேள்வியோடு கனிமொழியும் களமிறங்கினார். தமிழக அரசியல் சூடு பிடித்துக் கொண்டது.நீங்கள் இதே சூத்திரத்தை அப்படியே தமிழ்ச் சினிமாவுக்கும் தூக்கிப் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

ஒரே குடும்பத்தில் இரண்டுபேருக்குமேல் சினிமாத்துறையில் இருந்தால் மட்டுமே ஸ்டார் அந்தஸ்து பெறமுடியும் என்பதை எழுதாத சட்டமாக்கி அரசி யலைப்போல சினிமாவா? சினிமாவைப்பார்த்து அரசியல் கள்ளக் காப்பி அடிக்கிறதா? என்று கண்டு பிடிக்க முடியாமல் செய்து விட்டார்கள். சண்ட,சண்டக்கோழி, கோழிச்சண்ட,சண்டியர்,420,பருத்திவீரன்,வீரமும் ஈரமும் இப்படியான சினிமாக்களாக கொட்டிக்குவித்து இதிலிருந்து ஏதாவது ஒன்றைத்தான் நீ தெரிவுசெய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தியது தமிழ்ச்சினிமா. அதாவது நாற்பத்தேழுவருடமாக திமுக அல்லது அதிமுக மட்டும்தான் கட்சிகள் என்கிற ரெட்டைச்சாளர ஆரசியலை நிலை நிறுத்திவிட்டார்களே அதுபோல.அரசியலென்பது குறைந்தபட்சம் ஒரு டாடா சுமோவாவது
வைத்துக்கொண்டு திமிர்த்தனம் பண்ணுவது,லஞ்சம் வாங்குவது,லஞ்சம் வாங்கிக்கொடுப்பது,கட்டப்பஞ்சாயத்து பண்ணுவது மக்களை சாதிய ரீதியாக ஒன்று திரட்டுவது என்கிற பண்ணையார்த்தனங்களை ஆராதிக்கிற செயல்களாக மாற்றமானது. அதை அப்படியே கட்டமைக்கிற நடவடிக்கைகளை இந்த இரண்டு குப்பையில் ஊறிய மட்டைகளும் துள்ளியமாக நடத்தியது.

படிப்பறிவில்லாமல் வெறும் சண்டியர்த்தனத்தால் கட்சியேறி பதவிக்குவந்தவர்கள் மட்டுமே இப்படிச்செய்தார்கள் என்கிற நியதியில்லாமல் பெரும் பட்டமும், வக்கீல்கள்,டாக்டர்கள்,பேராசிரியர்கள்  உயர்படிப்பு படித்தவர்களும்  கூட இதே சாக்கடைக்குள் தான் விழுந்து புரண்டார்கள். ’ஏற்றதொரு கருத்தைச்சொல்வேன் எவர் வரினும் அஞ்சேன்,நில்லேன்’ என்கிற வரிகளைப் படித்துப் புல்லரித்தவர்கள் திமுக, அதிமுக அரியணைகளுக்குள் சிக்கிச்
செல்லரித்துப் போனார்கள். நான் கோட்டைக்குள் மட்டுமல்ல தமிழகத்தில் செருப்பே அணிவதில்லை ஏனென்றால் அம்மா ஆளும் தமிழகம் எனது கோவில்’ என்கிற உலகப் புரட்சிகரமான,திராவிடத்தனமான கருத்தை ஒரு சட்ட வல்லுநரான அமைச்சர் உதிர்க்கிறார்.அதை இந்தக்களவாணிப்பத்திரிகைகள் பெருமிதத்தோடு செய்தியாக்குகிறது.தமிழகம் படித்துவிட்டு காறித்துப்புவதை மறந்து எதிரும் புதிருமாய் உட்கார்ந்து கொண்டு நீயா நானா வென விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறது.

இந்துமதமெனும் வர்ணாசிரம கொடுங்கோண்மைக்கு எதிர்ப்புத்தெரிவித்து தம்மை வெளியிழுத்துக்கொண்டு
கலகம் செய்து ஆரம்பிக்கப்பட்ட தத்துவங்கள்  அந்நாட்களில் பௌத்தம், சீக்கியம், சூவ்பி, ஜைனம் ,சமணம், அருட்பெரும் ஜோதி,வீரசைவம்,பார்சீ யெனக்கிளம்பியவற்றின் நீட்சியாக தெற்கில் உதித்தது திராவிடம். ஒரு கருஞ்சூரியனின் அலைச்சலும் ஆற்றலும் சிந்தனையும் செயலுமான வெக்கை தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அசாத்திய அரசியல் வரலாறு. பெரியாரின் படத்தை உபயோகப்ப்படுத்துவதோடு பெரியாருக்கும் திராவிடக்கட்சிகளுக்குமான பந்தம் நின்றுபோனது. அதனால்தானோ என்னவொ அந்த தீர்க்கதரிசி போங்கடா வெங்காயங்களா நீங்களும் உங்கள் தேர்தலும் என்று மூக்கைப்பொத்திக்கொண்டு ஒதுங்கிப்போய் நின்று கொண்டார். ’கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா’ என்பது அறுபதுகளில்
நாடிநரம்புகளை சிலிர்க்கச்செய்யும் வார்த்தைகள்.இது அந்தக்காலத்தில் வேலை வெட்டி இல்லாமல் கஞ்சிக்கு வழியில்லாமல் பஞ்சத்திலடிபட்ட தமிழர்களை உசுப்பி விட்டது.

ஆனால் அதே வழியில்வந்த இந்த அரசு இதோ 13500 மக்கள் நலப்பணியாளர்களை வயிற்றிலடித்துத் தெருவுக்குள் தள்ளி விட்டிருக்கிறது.ஒரே காரணம் அவர்களெல்லோரும் திமுக ஆட்சிக்காலத்தில் பணியிலமர்த் தப்பட்டவர்கள் என்பது மட்டுமே. இதே போலத்தான் சென்ற முரையும் ஆடுகோழி வெட்டக்கூடாது என்று சட்டம் இயற்றியது இந்த அரசு.ஒரே கையெழுத்தில் பத்தாயிரம் சாலைப்பணியாளர்களைத்தெருவுக்கு அனுப்பியது. தெருவுக்கு வந்த குடும்பங்கள் அதைசமாளிக்கமுடியாமல் அழுதுபுலம்பியது.எண்பது தோழர்கள் இறந்து போனார்கள். நூறுக்கும் அதிகமானவர்கள் மனப்பிறழ்வுக்கு ஆளானார்கள். இறுதியில் தேர்தல் பயத்தினால் மறுபடியும் பணிக்கு அழைக்கப்பட்டார்கள். ஆனால் இறந்துபோனவர்கள் விட்டுச்சென்ற  குடும்பங்கள். அந்தக் குடும்பங்களின் கண்ணீர் அப்படியே உறைந்து போயிருக்கிறது. மனப்பிறழ்வானவர்களின் வார்த்தைகள் திரும்ப திரும்ப இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்தக்கறையே நீங்காமல் திட்டுத்திட்டா இருக்கும்போது இதோ மறுபடியும் மக்கள் நலப்பணியாளர்களை தெருவுக்கு கொண்டுவந்திருக்கிறது அரசு.

வேலையிழந்த பெண்கள் தெருப்புழுதியில் புரண்டு அழுகிற காட்சி மனம் பதற வைக்கிறது. அப்படி அவர்கள் வயிற்றிலடித்து,அவர்கள் கண்ணீரை கோட்ட வைத்து என்ன சாதிக்கப்போகிறது இந்த அரசு. தோற்றுப்போன மந்திரிகளையும்,கட்சிக்காரர்களையும் கோர்ட்டுக்கு அலைய வைக்கிற செயல்கள் சரியென்கிற ஒரே  காரணத் துக்காக அவர்களுக்கு ஓட்டுப்போட்ட சனங்களை வயிறெரிய விட்டு விட்டு மின்விசிறிகள் கொடுப்பது
எதற்கு? வெக்கையை இன்னும் விசிறிவிடுவதற்கா?.

எதிர்க்க வழுவற்ற ஏழைகள் அழுதுபுலம்பி ஆற்றாமல் சிந்தும் கண்ணீர் ஆயிரமாயிரம் கூர்மையான வாள்களுக்குச்சமம்

என்று ஜெர்மானியக் கவிஞர் குந்தர்கிராஸ் சொல்லுகிறார்.  


6.11.11

வரலாறு நெடுகிலும் அணைக்கப்பட்ட அறிவொளி தீபங்கள்.......

                                         ( அமெரிக்கப்படை தீயிட்டுக்கொளுத்திய பாக்தாத் நுலகம்)

இந்தியா முழுமைக்கும் பரவியிருந்த பௌத்தம் உயிர்ப்பலிகளை எதிர் கொண்டு நிர்மூலமாக்கப்பட்டது.போதிமரம் இருபதுமுறைக்குமேல் வெட்டப்பட்டது.உலகின் முதல் பல்கலைக்கழகமான நலந்தா தரைமட்ட மாக்கப்பட்டது. அதற்குப்பின்னர் அங்கிருந்த அறிவுப்பொக்கிஷங் களான ஓலைச்சுவடிகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.(கிமு1193)பற்ற வைத்த தீ மூன்று மாதங்களுக்கு மேல் எறிந்துகொண்டிருந்ததாம்.

http://skaamaraj.blogspot.com/2009/10/blog-post_27.html

போலந்து,பல்கேரிய நாடுகளில் நாஜிகள் நூலகங்களைத்தீகிரையாக்கினர்(கிபி 1941-42).

இலங்கையில் யாழ் பல்கலைக்கழக நூலகம் எறிக்கப்பட்டது(1981).

ஆப்கனில் தாலிபான்கள் நூலகத்தைத்தீக்கிரையாக்கினார்கள்(1998).

ஈராக் போரில் அமெரிக்கா ஈராக்கியர்களைக் கொன்றுகுவித்ததோடு நின்றுபோகாமல் அங்கிருந்த புகழ் மிக்க கலைப் பொக்கிஷங்களைஅழித்து நாசம் பண்ணியது (கிபி2003).

இப்படி வரலாறு நெடுகிலும் அறிவுத்தீபத்தை அணைக்கிற சிந்தனைக்கொலைகள் நிகழ்ந்து வந்திருக்கிறது. அவையாவும் கடைந்தெடுத்த காட்டுமிராண்டிச் செயல்கள் என்றால் சென்னை கோட்டூர்புரத்தில் இருந்து இடம்மாற்ற முடிவு செய்யும் தமிழக யோசனை  மேற் சொன்னவற்றின்  ஹைடெக் வடிவம். நூலகம்  ஆளும் கட்சி,எதிர்க்கட்சி எனும் குடுமிபிடிக்குள் அடங்காத அறிவுப்பெட்டகம்.அதன் மேல் கைவைக்கிற அரசின் செயலைக் கண்டிக்க அறிஞர்கள்,எழுத்தாளர்கள் கலைஞர்கள் மட்டும் போதும் என்கிற எல்லைகள் தவறானது. அதைத் தாண்டி இது ஒரு பொதுப் பிரச்சினை என்பதை பரவலாக்க வேண்டும்.

அண்ணா நூற்றாண்டுவிழா நூலகப்பிரச்சினையில் குரலெழுப்பும் எல்லோருக்கும் செவ்வணக்கம்.

o

by Su Po Agathiyalingam on Wednesday, 02 November 2011 at 17:25

புஷ்யமித்திரன் புத்தநினவுத்தூண்களை இடித்தான். ஹிட்லர் நூலகத்தையும் புத்தகங்களையும் எரித்தான்.சிங்களக் காடையர்கள் யாழ் நூலகத்தை எரித்தனர்.தாலிபான்கள் புத்தர் சிலையை உடைத்தனர்.அமெரிக்க ராணுவம் ஈராக்கில் அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் சூறையாடியது.பாபர் மசூதியை சங்பரிவாரங்கள் நொறுக்கின.வரலாறு முடியவில்லை... ஜெயலலிதாவுக்குபகை கருணாநிதிமீதா? தமிழ் மீதும் தமிழ் பண்பாட்டின் மீதுமா ? பாடபுத்தகங்களில் செம்மொழி மீதெல்லாம் கருப்பு சாயம் பூசி அழித்தார்..’யாதும் ஊரே யாவரும் கேளிர் ’பாடலை மறைத்தார் அது வர்ணாஸ்ரத்திற்கு எதிரான குரல் என்பதால்.சமச்சீர் கல்விக்கு எதிராக கொக்கரித்தார்.செம்மொழி நூலகத்தை குப்பைத் தொட்டியில் வீசினார்.தலைமைச் செயலகத்தை அடாவடியாக மருத்துவமனையாக மாற்றுவேன் என்கிறார். இப்போது அண்ணா நூலகத்தை பிய்த்து எறிகிறார்.இதையெல்லாம் வரலாற்றில் பாசிசம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்?ஆனால் வரலாறு பாசிஸ்டுகளைக் குப்பைத்தொட்டியில்தான் வீசியெறிந்துள்ளது? கடைசியாக ஒரு தகவல்:குமரிமுனை திருவள்ளுவர் சிலை பாசிஸ்டுகள் கண்ணை உறுத்துகிறதாம்...தற்போது ஆயுதப்போலீஸ் காவல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாம்.ஒரு நாள் கடற்கரை கண்ணகி சிலைபோல் வள்ளுவரும் காணாமல் போக ஏற்பாடாம்.என்ன செய்யப் போகிறாய் தோழா

இடிபாடுகளில் தொலைந்த இந்திய ஞானம் ( நலந்தா பற்றிய குறிப்பு)
http://skaamaraj.blogspot.com/2009/10/blog-post_27.html

17.10.11

உள்ளாட்சியைக் கைப்பற்றப் போவது யார் ?. ஜாதியா,ஊழலா இல்லை ஹசாரேவா



பேஸ்புக்குக்கும் ப்ளாக்குக்கும் அலைந்து அலைந்து கண்கள் வலித்திருந்தது. காலைச்சாப்பாட்டை எடுத்துவைத்த இணை கிறுக்குத்தான் பிடிச்சிருச்சி என்று சொல்லிக்கொண்டே அதை எடுத்து மூடிவைத்துவிட்டு தொலைக்காட்சிக்குள் தொலைந்துவிட்டார்.பகல் முழுவதும் யாரவது வந்து வாக்குறுதி நோட்டீசும் மாதிரி வாக்க்குச் சீட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.ஒரு சில நோட்டீசில் காந்தி எம்ஜியார் காமாராஜர் அம்பேத்கர் முத்துராமலிங்கம் அழகுமுத்து வ.உ.சி அப்துல்கலாம் இம்மானுவேல்சேகரன். இன்னும் ஒருசில நோட்டீசில் பெரியாரும் முத்துராமலிங்கமும் அருகருகே காட்சிதந்தார்கள். பார்த்தபோது சிரிப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.

அடுத்த வருடத்திலிருந்து முழுமையாக மின்வெட்டே இருக்காது என்று அம்மா அறிக்கைவிடுகிறார். அதைப்படித்த ஒரு இளைஞன் ஆமாமா பரமக்குடி மாதிரி முழுக்க முழுக்க ஆளவெட்ட ஆரம்பிச்சுருவாங்க அதனால மின்சாரத்த வெட்டத் தேரமிருக்காது என்று சொல்லுகிறார். ஆனால் அதே பரமக்குடிக்கு ஓட்டுக்.கேட்கப்போன கேப்டன் இனிமேல் இடஒதுக்கீடு என்பதே இருக்கக்கூடாது என்கிற தனது ஆராய்ச்சியை தெருவில் கொட்டுகிறார். அப்போ இந்த ஆறுபேர் படுகொலையும் இடஒதுக்கீட்டுக்கு எதிராகத்தானா என்கிற நக்கலுக்கு அவர் எப்படிப்பதில் சொல்லுவார்.  கைக்கெட்டாத தூரத்தில் இருந்து தான் கேள்விக்கேக்கனும்.

இந்தத்தேர்தல் எப்படியெல்லாம் தான் குட்டிக்கரணம் போடவைக்கிறது. மூன்றுமுறை தொடர்ந்து பஞ்சாயத்துதலைவராக இருந்த ஒருவர் நான்காவது முறையாக தனது மனைவியை நிறுத்துகிறார். அதோடு நிற்காமல் நான் ஆட்சிப் பொறுப்பேற்றால் பொதுமக்களுக்கு  நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பேன் என்று கூச்ச நாச்சமில்லாமல் உறுதிமொழி கொடுக்கிறார். காலையில் டீக்கடைக்கு வந்த ஒரு
பட்டாசுக் கம்பெனி முதலாளி அந்த ஊரின் அடுத்த பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிடுபவர். ராத்திரியானா ஒரு நூருரூவாக்கட்டு காலியாப் போகுது என்று சொல்லிவிட்டு கோடு போட்ட டவுசரிலிருந்து மீதிரூபாயை எடுத்துக் காட்டுகிற்றார். அதைப்பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ’எல்லாத்துக்கும் வாங்கிக்,கொடுக்ககூடாது  அண்ணாச்சி,டெய்லி ஒரு இருபது பேருக்கு மட்டும் வாங்கிக் கொடுக்கணும். அதுவும் கண்ட பயக வருவாய்ங்க கவனமாப் பாத்து வாங்கிக் கொடுக்கணும்’. என்று அறிவுறை சொல்லுகிறார்.

ஓட்டுவீடுகள் மட்டுமே நிறைந்திருக்கிற அந்த ஊரில் ஆனையாக்குவேன் பூனையாக்குவேன் என்று சொல்லி பஞ்சாயத்துதலைவர் பதவியேற்ற ஒருவர் ஒரே வருடத்தில் மூன்று மாடி வீடுகட்டுகிறார். இரண்டு டாடா ஏசி வாங்கி வாடகைக்கு விடுகிறார்.குண்டிகிழிந்த டவுசர் போட்டுக்கொண்டலைந்த மகனுக்கு பல்சர் வண்டி வாங்கிக்கொடுக்கிறார்.நட்ட நடுத்தெருவில் சாக்கடையோடும் ஊரில் அந்தப்பல்சர் வண்டியில் அவன் சிட்டாய்ப் பறக்கிறான். அதுவரை அண்ணாதிமுக திமுக தேமுதிக மதிமுக கொடிகளுக்கு இடையில் இருக்கிற வித்தியாசம் கூடத்தெரியாத கூமுட்டையாக இருந்தவர் பழுத்த அரசியல்வாதியாகி ஆளும்கட்சியின் விவசாய அணிச் செயலாளாராகிறார். அதற்குப்பிறகு அங்கிருக்கிற வேலிக் காட்டையெல்லாம் எர்த்மூவர் வைத்து திருத்தி, அளந்து, கல்நட்டி, செம்மண் கோடு போட்டு, ரியல் எஸ்டேட் தொழில் செய்ய ஆரம்பிக்கிறார். ஏங்கெல்சையும் டார்வினையும் காலில்போட்டு மிதிக்கிறபடியான பரிணாமம் இது.

இதையெல்லாம் பக்கத்துவீட்டில் இருந்து பார்த்துப் பொருமிக் கொண்டிருக்கும் மதினிக்காரி சாப்பாடுவைக்கிற நேரமெல்லாம் பங்காளிக்கு
பொழைக்கிற வழிசொல்லிக் கொடுக்கிறாள். அவளும் பத்துப்பவுனில் ஒத்தை வட முறுக்குச்செயின் போட்டுக்கொண்டு டாடா ஏசியின் முன்னாடி உட்கார்ந்துகொண்டு மாரியம்மன் கோவிலுக்கு போக ஆசைப்படமாட்டாளா என்ன? அந்த ஆசைதான் இந்த தேர்தலில் அண்ணனையும் தம்பியையும் எதிர் எதிராக பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிட வைக்கிறது. நாப்பதுவருஷம் தண்ணிபாய்ச்சி சேர்த்து வச்ச கம்மாப்பிஞ்சையை கிரயம் எழுதிக்கொடுத்து கத்தை கத்தையாய் நோட்டுவைத்துக்கொண்டு க்ரேடு க்ரேடாக குவார்ட்டர் வாங்கிக் குவிக்கிறார்கள்.

ஒரு நகராட்சியின் மொத்த வாக்குகள் எத்தனை அதில் எந்த ஜாதி அதிக எண்ணிக்கை என்கிற கணக்கெடுப்புக்கு அப்புறம் தான் வேட்பாளர் தேர்வு நடக்கிறது.ஆளும், எதிர்,கூட்டணி,சுயேச்சை வேட்பாளர் எல்லோரும் அதே ஜாதிக்காரர்களாகவே நிறுத்தப்படுகிற்றார்கள்.
ஆனால் இந்தச்சூழலில் தான் ஒரு வலைத்தளம் கணக்கெடுப்பில்  நல்லவேட்பாளர்களைத்தான் இந்த உள்ளாட்சி தேர்தல் தேர்ந்தெடுக்கும் என்று எழுபது சதவீதம் பேர் ஓட்டளித்து கருத்துக்கணிக்கிறது. இந்த மாதத்தில்தான் புத்தகம் பேசுது உள் அட்டையில் பேராசிரியர் க.பழனித்துரை எழுதிய ‘ தமிழக கிராமப்புற உள்ளாட்சி( கடமையும்- அதிகாரங்களும்) என்கிற கையேடு விற்பனைக்கு வருவதாக விளம்பரப்படுத்துகிறது.

இதுவேறு இதிகாசம் ஆவணப்படத்துக்காக காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.பழனித்துரையைச் சந்திதித்து  பேட்டி யெடுத்தோம்.அப்போது அவர் சொன்னது.பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்களாம்.மதுரைப் பகுதியில் சுமார் ஐநூறு பஞ்சாயத்து தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்களாம்.கலந்துகொண்டவர்கள் ஆயிரம் பேர் கணக்கு உதைக்க. என்னவென மண்டையைப்போட்டுக்குழப்பிக்கடைசியிகண்டுகொண்டார்களாம்.தேர்ந்தெடுக்கப்பட்ட அத்துணைபெண் தலைவர்களின் கணவன் மார்களும் கூட வந்திருந்ததுதான் காரணம்.உடனே மேடையிலிருந்து பொறுப்பாளர்கள் சம்பந்தப்பட்ட தலைவர்கள் மட்டுமே இருக்கமுடியும் அவர்களின் கணவன்மார்கள் வெளியே போகவேண்டும் என்று சொன்னதும் சுமார் 250 எழுந்துபோய்விட்டார்களாம். மீண்டும் கணக்கு உதைக்கவே மண்டையைக் குடைந்து கண்டுபிடித்ததில். அந்தக்கூடுதல் 250, பேர் ஊராட்சிமன்றத்தின் எழுத்தர்கள் என்பது தெரியவந்தது.
ஆமாம் பெரும்பாலான தலித் மற்றும் படிக்காத தலைவர்களின் பஞ்சாயத்துகளில் கிட்டத்தட்ட தலைவர் பொறுப்பைப் பிடுங்கிக்கொள்வது
பேண்ட் சட்டை போட்ட எழுத்தர்களே.

இந்தக்கொடுமை போதாதென்று பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், மற்றும் வங்கிக்கிளைகளில் தலித் பஞ்சாயத்து தலைவர் நின்று கொண்டிருக்க பஞ்சாயத்து கிளார்க்குகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முன்னே நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் வன்கொடுமைகள் நடப்பதாகச்சொன்னார்.  அதன்பிறகான எனது வங்கிநாட்களில் நான் அதைக் கவனிக்கத் தொடங்கினேன்.பேராசிரியர் சொன்னதைவிடவும் நூறுமடங்கு கூடுதலாகவே நடக்கிறது. காரணம்அரசு அலுவலர்கள், வங்கிமேலாளர்கள்,ஊழியர்கள்,என்.ஜி.ஓ, க்கள் எல்லோருக்கும் கூடுதல் சமூகப்பொறுப்பு இருக்கிற சுரணையே இல்லாமல் ஜாதியத்தடத்திலே பயணிக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில்தான் வருடா வருடம் சிறப்பாகச் செயல்படும் ஊராட்சி மன்றங்களைத் தேர்ந்தெடுத்து  மத்திய அரசும் மாநில அரசும் பரிசு அளிக்கிறது, அதைத்தான் முன்மாதிரி பஞ்சாயத்துக்களாக அரசு அறிவிக்கிறது. அந்தப் பஞ்சாயத்துக்கள் எம்ஜியார்,ரஜினி மாதிரி எந்த விதமான சாகச அற்புதங்களியும் செய்துவிடுவதில்லை. அரசு அறிவித்த திட்டங்களை முறைப்படி அமல்படுத்துகின்றன, அவ்வளவுதான். அப்படி அறிவிக்கப்படுகிற பஞ்சாயத்துக்கள் மூன்றே முன்றுதான். ஆனால் தமிழகத்திலுள்ள மொத்தப்பஞ்சாயத்துக்கள் சுமார் 12856.
எனில் மீதமுள்ள 12853 பஞ்சாயத்துக்களும் என்ன செய்கின்றன. மீண்டும் முதலில் இருந்து வாருங்கள்.

இதைக்கண்காணிக்க அரசு எந்திரத்தில் ஏற்பாடுகள் இல்லையா என்றால் அழகாக இருக்கிறது. ஆனால் எல்லாக்களவாணித்தனங்களும் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. இங்கேதான் காவல்துறையின் உச்சாணிப்பொறுப்பில் இருந்து ஓய்வு பெறும் இகாப க்கள் ஜாதிக் கட்சித் தலைவர்களாகிறார்கள்.வருமாண வரித்துறையின் உயர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெறுகிறவர்கள் தனியார் நிறுவணங்களுக்கு கணக்கு ஆலோசகர்களாகிறார்கள்.பொதுத்துறைவங்கிகளில் இருந்து ஓய்வு பெற்ற மறுநிமிடம் தனியார் நிதிநிறுவணங்களுக்கு மேலாளர்களாக உருமாறுகிறார்கள். அரசுப்பள்ளியில் வேலைபார்த்துக்கொண்டு முழுநேரமும் மெட்ரிக்குலேசன் மாணவர்களுக்கு டியூசன் எடுக்கிறார்கள். இப்படிப்பொறுப்புள்ள கணவான்கள் கூடித்தான் அன்னா ஹசாரேயை கதாநாயகன் ஆக்குகிறார்கள்.

17.9.11

நிறுவணங்கள் எந்திரத்தாலானது. (அக்கம்பக்கம் பராக்குப்பார்த்தல்)


ஒரு ஐந்து நாட்கள் மறைமலை நகரில் நடந்த பயிற்சிவகுப்பில் கலந்துகொள்ள நேந்தது. பசுமையான சூழலும்,ஒழுங்குபடுத்தப்பட்ட பராமரிப்பும் அதிக இறைச்சல் இல்லாத அமைதியும் அது அலுவலர்களுக்கானதென்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. புதிய புதிய மனிதர்கள் புதிய புதிய புரிதல்கள் அதிலேற்படும் நெருக்கம் நட்பு என இன்னொரு கதவு திறந்துவிடப்பட்டிருந்தது. இதுவரை ஏற்றி வைத்திருந்த பாரத்தை இறக்காமல் பயணிக்க சிரமாமமாக இருந்தாலும் தொடர்கிறது பயணம்.

பிஜய்குமார் ஸ்வைன் என்கிற பயிற்சியாளர் மூன்று நாட்கள் எங்களோடு இருந்தார் அறுபது வயதை நெருங்கும் அந்த ஒரியாக்கார மனிதர் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பட்டம் படித்து பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி இடையில் இன்னொரு கம்பெனிக் குத்தாவி இப்போது national institute of rural development பயிற்சி நிறுவணத்தின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார். ஒரியாவும் ஆங்கிலமும் கலந்த அவரது வார்த்தைகளில் ஒரு மிதமிஞ்சிய வேகம் இருக்கும். மிகக்கராறான நேரம் தவறாமையும், சின்னசின்ன ஒழுங்கீனங்களின் மேல் அவர் வைத்திருக்கிற துவேசமும் வியப்பானதாக இருக்கிறது.

நாட்டில் பெருகிவரும் பட்டினி வயிறுகளைக் கண்டு கொள்ளாமல் நாம் நமது   செலுத்துவோமானால் நமது சோறு பறித்துக்கொள்ளப் படும் என்று சொல்லுகிறார்.ஒரே நாள் இரண்டுவேளை சாப்பிட முடியாமல் போனால் கண் சொருகுகிறது நடை சோர்வடைகிறது, நாவரட்சியாகிறது ஆனால் பதின்மூன்று நாட்கள் பட்டினியாய்க் கிடந்த மனிதர் ஒருவர் எழுந்து கையை சுறுசுறுப்பாய் ஆட்டிக் கொண்டு பொது மக்களுக்கு போஸ் கொடுப்பது எப்படி என்கிற எள்ளல் இருக்கிறது அவரிடம். ஆனால் அதே வேளையில் இருக்கிற அத்துணை பொதுத்துறை நிறுவணங்களின் மீதும் துவேசம் வைத்திருக்கிறார்.

லாபம் ஈட்டாத நிலைமைகளுக்கு பணியாளர்கள் மட்டுமே காரணம் என்கிற ஆணித்தரமான கருத்தும் இருக்கிறது. முன்னதை மனிதாபி மானத்தோடு சேர்ந்த அறிவென்றும் பின்னதை தொழில் பக்தி என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம். மாலை நேரங்களில் அப்படியே காலாற நடந்து நால்வழிசாலைக்குப் போனால்  நோக்கியா நிறுவணத்தின்  மிகநெடிய தனிச் சாலையும் பார்த்தவுடன் பயம் பிடித்து ஆட்டுகிற தொழிற்சாலையும் தூரத்தில் தெரிகிறது.அங்கிருந்து வெளியே வரும் இளம் யுவதிகளின் கழுத்தில் தொங்குகிற அடையாள அட்டையும் அவர்கள் கண்களில் தங்கி  இருக்கிற சோர்வும் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. வேலை முடித்துவருகிற களைப்பும் திருப்தியுமில்லை அது. உழைக்கிற போது வெளியேறுகிற வியர்வைமேல் வெளிக் காற்று பட்டவுடன் ஒரு பரவசம் வருமே? அதுவும் இல்லை. பிஜய்குமார் ஸ்வைனைப்போல ஒரு கடைந்தெடுத்த பயிற்சியாளனிடம் மேலாண்மை பயின்ற ஒரு மேலாளரின் மனித உழைப்பைப் பிழிந்தெடுக்கிற தந்திரத்தில் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் சாயல் அது.

அப்புறம் நண்பரோடு மறைமலை நகரில் மதுபாணம் வாங்க டாஸ்மாக் கடைக்குப்போனோம்.  திரையரங்குகளில் நுழைவுச் சீட்டுக் கொடுக்கிற இடம் போல விற்பனையாளருக்கும் வாங்குபவருக்குமிடையில் ஒரு சிறு துளை மட்டுமே இருக்கிறது. முற்றிலும் கம்பி அழி பாய்ச்சப்பட்ட முகப்பில் தொங்கிக்கொண்டு, கூட்டம் அலைமோதுகிறது ஒரு கால் புட்டி மதுவாங்க. எறி திராவகத்தைத் தொண்டை வழி இறக்கி ரத்த நாளங்கள் வழியே சிறுமூளையை தள்ளாட வைக்கிற கிறக்கம் தேவையிருக்கிற மனிதர்கள் லட்சம் லட்சமாய்ப் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டம் கூடுகிற எல்லா இடங்களையும் கட்டுப்படுத்த ஒரு குறுகலான வழி இருக்கிறது.

விருதுநகரைக் கடந்து வரும்பொழுது தமுஎசவின் மாநிலமாநாட்டு பதாகைகள் சுவரெழுத்துக்கள் கண்ணில் தோன்றி பெரும் சலனத்தை உண்டு பண்ணுகிறது. சொந்த சித்தப்பா வீட்டுக்கல்யாணம் ஊரில் நடக்க பங்கேற்கமுடியாத நானும் என் அம்மாவும் எதையெதையோ பேசிக்கொண்டு சாத்தூர் போன நாட்களின் நெருஞ்சி நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கிறது.  தமுஎச மாநில மாநாடு குறித்து நடக்கிற சம்பாஷனைகளில் இருந்து விலகி ஒளிந்து கொள்ளவேண்டிய ஒதுக்க நிர்ப்பந்தம் இருக்கிறது. முதல் கலை இலக்கிய இரவுக்காக சாத்தூரின் மூலை முடுக்கெல்லாம் அலைந்து திறவாத கதவையெல்லாம் திறந்து சேமித்த உண்டியலின் சலசலப்பு நிழலாடுகிறது.

தீக்கதிர் செய்தியை வாசித்து தலைதூக்குகிற மனைவியின் கண்களை சந்திக்கமுடியாமல் பின்வாசலுக்கு  போக வேண்டியிருக்கிறது. திரும்பிவரும்போது அவள் கேட்கிற கேள்விக்கு ஒன்றுமில்லை எனச்சொல்லவேண்டியிருக்கிறது. வழிநெடுக சிந்திக்கிடக்கும் இந்த ஒன்றுமில்லை என்கிற வார்த்தைகள் துகள்களாகி வழி நடந்த பாதை மண்ணெங்கும் உரமேறிக் கிடக்கிறது.

22.6.11

பஞ்சாயத்து தலைவர் பதவி பொது ஏலத்துக்கு


ஒரு உயர்வுநவில்ச்சிக்காக முன்னமொருமுறை இப்படி எழுதியதாக ஞாபகம் இருக்கிறது.அது இப்போது செய்தியாக வந்துவிட்டதில் ஆச்சர்யமும் சந்தோசமும் இல்லை. மாறாக பெரும் சஞ்சலம் வந்துசேர்கிறது. இப்படியே போனால் அரசாங்கத்தைக்கூறு போட்டு வித்துருவான்.என்று நாம் கோபத்தில் சொல்லுவது  இப்போது மத்தியில் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் நான் சொல்லவந்தது அதுவல்ல.இந்த ஆண்டு ஊர்ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வரப்போகிறதில்லையா.அந்தத்தேர்தலில் அவரவர் போட்டியிடுவதற்குத் தான் தங்களை எல்லாவகையிலும் தயார் படுத்திக்கொண்டிருப்பார்கள்.ஆனால் ஒரு பஞ்சாயத்தில் பதவியை ஏலத்திற்கு விடத்தயாராகிக் கொண்டிருக்கிறார் களாம். ஏலத்தொகை ரூபாய் இருபது லட்சமாம்.

எந்தப்பஞ்சாயத்து என்றுகேட்கிறீர்களா. ஒட்டுமொத்த தமிழ்ச் சினிமாவும் மையம் கொண்டிருக்கிற நம்ம மதுரை மாவட்டத்தில் தான் இந்த பொது ஏலமுறை அமலுக்கு வந்திருக்கிறது.மதுரைமாவட்டம் உசிலம்பட்டி த்தாலுகாவில் உள்ள செல்லம்பட்டி (செல்லம்பட்டி என்றால் நீங்கள் மறந்திருக்கக் கூடும் இங்குதான் சென்ற முறை ஆட்சியர் உயர்திரு உதயச்சந்திரன் மற்றும் சிபிஎம் விசிக கட்சிகளின் பெரும் போராட்டத்தில் பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தல் நடந்தது.) ஒன்றியத்தில் உள்ள அய்யனார் குளம் ஊராட்சித்தலைவர் பதவியின் தற்போதைய மார்க்கெட் விலை 20 லட்சம்.நன்றி தீக்கதிர் நாளேடு.22.6.2011.http://www.theekkathir.in/index.asp

8.6.11

இடவல பேதமும் ஒரு அர்த்தமுள்ள திண்ணையும்.


திருவிழாக்கூட்டம் போல இருந்தது. சண்டைதான்.ஓசியில் பார்க்கக் கிடைக்கிற நிகழ்கலை இல்லையா.'தெருச்சண்டை கண்ணுக்கு குளிச்சி' எங்கம்மா இப்படிச் சொலவடை சொல்லும். அவன் தான் மாரிமுத்து கையில வேப்பங் கொலயில்லாம ஆடிட்டு இருந்தான். என்ன என்று கேட்டால் அவன் பீச்சாங் கையி என்று சொல்லிவிட்டானாம்.சொன்னால் என்னப்பா ஒனக்கு இடது கைப் பழக்கம்தானே என்று கேட்டால் சொன்ன திலகரை விட்டுவிட்டு என்னோட மல்லுக்கு நின்னான்.'என்ன ரெண்டடி ஆடிச்சிருந்தாக்கூட பொறுத்திடுப்பேன் எப்படிச்சொல்லப்போச்சு' என்று பிராதாகிவிட்டது.ஊர்ச்சனங்களும் கூட அப்படிச் சொன்னது தப்பென்றே அபிப்பிராயப் பட்டார்கள்.

நொட்டாங்கை பழக்கமானாலும் கூட அவனது செயல்களெல்லாம் மிகத்துள்ளியமாக இருக்கும். எழுத்து அச்செழுத்துப்போல இருக்கும்.கிட்டி அடிக்கும் போது எதிரே நின்றால் மூஞ்சப் பேத்துரும்.அப்படி அந்த இடது கை யாருக்கும் இல்லாத வல்லமையை கொடுத்தாலும் அவனே கூட அதை இகழ்வாக எண்ணியிருந்தான்.

அவனென்று இல்லை ஊர்,ஜில்லா,நாடு எல்லாம் அப்படித்தான் மதுரை போகும் பேருந்தில் விருதுநகருக்கு பயணச் சீட்டுக் கேட்டேன் நிற்கமுடியாத கூட்டம் வலதுகையில் கம்பியைப் பிடித்திருந்தேன்.அதனாலே இடதுகையால் காசைக் கொடுத்தேன் கண்டக்டர் அளவுகடந்த கோபமடைந்து விட்டார் என்னா சார் 'படிச்ச ஆள் மாதிரி இருக்கீங்க இடது கையில காசு தறீங்க'.வலது காலை எடுத்து முதல் அடிவைக்க வேண்டுமென்கிற தொன்று தொட்ட ஆச்சாரங்களும் இப்பொழுது கூட மிக நெருக்கமான நபர்களை சங்கர் தான் அவனுக்கு வலது கை மாதிரி என்று சொல்லுவதுண்டு.

இரண்டிரண்டாக இருக்கும் கண்,காது,நாசி போன்ற உறுப்புக்களுக்கு இடது வலது பேதமில்லை.அப்படியிருக்க கைக்கு மட்டும் இட வல பேதம் எப்படி வந்திருக்கும்.இடது கை இழிவான செயலுக்கும், வலது கை உயர்வான வேலைகளுக்கும் பயண்பாடாவதால் இந்த பேதம் வந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் இழிவும் உயர்வும் நமது உடலுக்குள்ளே தான் இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வழும் பதிவுலக நண்பர் திரு ராம் அவர்கள் ஊருக்கு வந்திருந்தார்கள்.பத்தமடையில் தோழர் தமிழ்ச்செல்வன் வீட்டில் நானும் தோழன் மாதுவும் அவரைச்சந்திக்க நேர்ந்தது. ஒரு முழுப்பகல் தமிழ்ச்செலவனுடைய சமயலையும் பேச்சையும் சேர்த்து ருசிக்கக் கிடைத்த தருணம் அது.

உலகமே பார்த்து வியக்கும் குடும்பம் கூட்டுக்குடும்பம் நமது தனிசிறப்பு என்பது தெரியும் ஆனால் ஒரே குடும்பத்துக்குள் இருந்துகொண்டு ஒருவருக்கொருவர் பேச்சு வழக்கில்லாமல் ஒதுங்கி வாழ்வது உலகத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சித்தகவல் என்று சொல்லுகிறார்.ஆனால் நமோ 'நா அவங் கூடப்பேச மாட்டேன்' என்று இலகுவாகச் சொல்லிவிடுகிறோம்.மற்ற உறவுகளுக்கு எப்படியோ ?. கணவன் மனைவிக்குள் பேச்சில்லாமல் கழிந்த கொடூர வாழ்க்கை இங்கே கோடிக்கணக்கில் இருக்கும்.அதைக்கூடப் பெருமிதத்தோடு சொல்லும் நமது கௌரவம்.இன்னும் சிசுக்கொலை பற்றி,நீளப்படங்கள் பற்றி,தற்கொலைகள் பற்றி எல்லாம் அவரோடு ஒருநாள் முழுக்கப் பேசிக்கிடந்தோம் நாங்கள்.

உளவியலில் ஆராய்சிப்பட்டம் பெற்று  அங்கே பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ராம் சொல்லும்போது' ஆதிகாலத்து தாய்மர்கள் குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு தங்களுக்கான அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது குழந்தைக்கு தாயின் அருகாமையை உணர்த்துவதற்காக இதயம் இருக்கும் இடது பக்கம் குழந்தையை அணைத்துக்கொண்டிருக்க வேண்டும். வலது கையினலேயே  எல்லாக் காரியங்களும் செய்து அது பழக்கமானது என்று  இடதுகைப்பழக்கம் உருவானதன் பூர்வாசிரமம் பற்றிச்சொன்னார். அப்படியானால் ஆண்கள் ?

விலங்குகளோடும்,அதன் பின்னர் மனிதரோடும் சண்டையிட்டுக் கொண்டே காலம் தள்ளிய ஆண் ஊயிரின் மையப் புள்ளியான இதயத்தைப் பாதுகாக்க கவசங்களை இடது கையிலும் கல்,வில், வாள் போன்ற கொலைக்கருவிகளை வலது கையிலும் ஏந்தியபடி அலைந்து அலைந்து வலது கைப்பழக்குத்துக்கு ஆளாகியிருக்கிறான் என்று கூறினார். சொந்த உறுப்புக்களுக்குள் பேதமாகிப் பின்னால்,சொந்த மனிதக் கூட்டத்தில் பேதமாகி,உலகமே இடவல பேதத்தில் இயங்க ஆரம்பித்தது ஒரு பெரும் தேடலுக்கான வரலாறு.

ரோமானியர்களே இடது பழக்கத்தை இழிவு பழக்கமாக உலகுக்கு அறிமுகம் செய்தவர்கள்.அவர்களது கத்தோலிக்க மதம் போகிற திசையெல்லாம் இடது கைப்பழக்கத்துக்கு எதிரான மூடக்கருத்துக்களும் கொண்டுசெல்லப்பட்டன. ஜீசஸ் உட்கார்ந்திருப்பது வலது பக்கம் எனவும்,சாத்தான்கள் இட்து பக்கம் எனவும் கற்பிதப்படுத்தப்பட்ட பைபிள் பரப்புறைகள் உலகம் எங்கும் வியாபித்தது.வலது கை குலுக்கல், வணக்கம் சொல்லுதல் போன்ற நடை முறைகளை அறிமுகப்படுத்தியவர்களும் ரோமானியர்களே.

ஆனால் விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகள் இடது பக்கத்தின் சிறப்பை வெளிக் கொணர்ந்திருக்கிறது. மூளையின்  செயல்பாட்டுப்பகுதி, இதயம் அமைந்திருக்கும் பகுதி,அதனோடு தொடர்புடைய உடலுறுப்புக்கள் எல்லாமே இடது பக்கமே அமைந்திருக்கின்றன.

இடது கையில் நான்காவது இருக்கும் மோதிர விரலின் நரம்புகள் நேரடியாக இதயத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறதாம்.வரலாற்றின் மிகச்சிறந்த ஆளுமைகள் எல்லாம் அதிஷ்டவசமாக இடது கைப்பழக்கம் உள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.இசைமேதை பீத்தோவன்,உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் மைக்கேல் ஆஞ்செலோ,லியார்னோடாவின்சி, தத்துவமேதைகள் கொதே,நீட்ஷே. ப்போலியனும் அவனது மனைவி ஜோசப்பினும் இடது கை ஜோடி, ஜூலியஸ் சீசர் கூட ஒரு இடது கை வீரன். டகளம், விளையாட்டுத் துறைகளில் இடது ஆட்டக்காரர்கள் தனித்த இடத்தைப் பிடித்தவர்களாக அறியப்படுகிறார்கள்.

மீறலும்,எதிர்ப்பும்,கட்டமைப்பை எதிர்த்து கலகம் நடத்துவதும்,அந்நியமும்,இருட்டும்,இடது பக்கத்திலிருந்தே வரும்  என்பதே உலகளாவிய நம்பிக்கைகள்.வழி வழியாய் வந்த மத,அரச,முதலாளி நம்பிக்கைகள் வலதென்றும்,அதை எதிர்ப்பது இடதென்றும் பின்னாளைய உலகம் பிரிந்து கொண்டது.பிரஞ்சுப்புரட்சிக்கு முந்தையப் பாராளுமன்றத்தில் கனவான்கள் இடதுபக்கத்திலும்,அறிஞர்கள் வலது பக்கத்திலும் அமர்ந்திருந்தார்களாம்.

மிகப்பெரும் ஆராய்ச்சிக்கும் அதைத் தொடர்ந்து கிடைக்கிற பல அறிய தகவல்களுக்கும் ஊற்றுக்கண்ணான இந்தப்பொருள் குறித்து நிறைய்யப் பேச விவாதிக்க களம் இருக்கிறது. காலம் இல்லை.

( இது ஒரு மீள்பதிவு )

5.6.11

திடீர் ரசம்,திடீர் சாம்பார், மற்றும் திடீர் புரட்சியாளர் ராம்தேவ்.


ஜீவ சமாதி யடைந்தார்,தண்ணீரில் மிதக்கிறார்,குருடர்களைப்பார்க்க வைக்கிறார்,வாயிலிருந்து லிங்கத்தை எடுக்கிறார்,கிரிக்கெட்டில் ஜெயிக்க யாகம் நடத்துகிறார்,ஓடிப்போனார்,இரட்டை ஆயுள் தனடனை கொடுக்கப்பட்டது,ரஞ்சிதாவுடன் சல்லாபமாக இருந்தார் என்றுதான் இது வரை சாமியார்களைப்பற்றிச் செய்திகள் வந்துகொண்டிருந்தது.சமீபகாலமாக  அவர்களுக்கு புது அவதாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது அரசியல் அவதாரம்.அதுவும் பரபரப்பான அரசியல் அவதாரம்.தங்களின் ஞானதிருஷ்டியால் நடந்தவற்ரையும் நடக்க இருப்ப வற்றையும் அறியமுடிகிற இவர்களின் கண்ணுக்கு இப்பொழுதுதான் இந்த லஞ்சம் கறுப்புப்பணம் தெரியவந்திருக்கிறது.இவ்வளவு நாட்கள் அந்த ஞானதிருஷ்டி என்கிற ரேடாரில் லஞ்சமும் ஊழலும் கறுப்புப்பணமும்  தட்டுப்படாமல் போனது எப்படி.அல்லது கண்டுகொள்ளாமல் விடப்பட்டது எப்படி.

நேற்று கரைவேஷ்டி கட்டிய அண்ணாதிமுக கவுன்சிலரலிருந்து தலைமுறை தலைமுறையாய் கரைவேஷ்டி கட்டாமல் கொள்ளையடிக்கிற முதலாளிகள் வரை தாங்கள் அடித்த பணத்தில் முதல் பங்கை உண்டியலில்தான் போடுகிறார்கள்.அன்னதானம் போட,கும்பாபிஷேகம் நடத்த என கோயில்களுக்கு கொடுக்கிற அன்பளிப்புகள் தங்கள் கறைகளை கழுவிக்கொள்வதோடு வருமாண வரியிலிருந்தும் விலக்குப் பெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இப்படியான ஆன்மீக செயல்பாடுகளின் நிஜமான நிதியாதாரம் முறைகேடாக சம்பாதித்த பணம்தான் என்பதை தெய்வமே அறியும்.அதனால் தான் அந்த ஏரியாவுக்குள் இன்று வரை நுழையாமல்  சமியார்களும் பீடங்களும் நிஷ்டையில் இருந்தார்கள்.  இப்போது தங்களின் மௌனத்தைக் கலைத்துவிட்டு இந்த தவறுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது வினோதமான விஷயமக இருக்கிறது.சுமார் பதினெட்டுக்கோடி செலவில் முற்றிலும் குழு குழு வசதி செய்யப்பட்ட பந்தலில் இருந்துகொண்டு  அவர்கள் படம் காட்டுவதைப் படம் பிடிக்க வெறிகொண்டலைகிறது அவர்களின் ஊடகங்கள்.

ஒரு யோகா சொல்லிக்கொடுக்கிற சாமியார் எப்படி பதினெட்டுக்கோடி செலவழித்து உண்ணாவிரதம் இருக்க முடியும். ஒரு ஆன்மீக நிலையம் எதற்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் உயர்தொழில்நுட்ப மருத்துவமனைகள் நடத்துகிறது.கருணையும், பரிவும்,மண்ணிப்பும் நிறைந்த சாத்வீகச்சாமியார்கள் ஏன் மசூதியை இடிக்கவேண்டும் என்கிற மனசாட்சிப்படியான கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை. ஒரு மிகப்பெரிய ஊழலைக்கண்டுபிடித்து அதற்குத்தண்டனை கொடுத்துக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் அன்னா ஹசாரேவும்,ஆன்மீக ராம்தேவும் விஸ்வரூபமாகக்காட்சிப் படுத்தப்படுவது எதற்காக,யாருக்காக ?.

தங்களின் ஒருநாள் கூலியையும் இழந்துவிட்டு கைக்காசும் செலவழித்து வட்டாட்சியர் அலுவலகங்களின் முன்னாடி உட்கார்ந்து கோஷமிடும் லட்சோபலட்சம் மக்களின் கோரிக்கைகளை உதாசினமாகக் கடந்து போகிறது ஊடகங்கள் . இங்கொன்றும் அங்கொன்றுமாக தினம் தினம் இந்தியா முழுவதும் நடக்கிற போராட்டங்கள்.ஊழலின் ஊற்றுக்கண்ணான நிறுவணங்களில் நேரடியாகத் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துகொண்டிருக்கிறது ஒரு தன்னலமில்லாத கூட்டம்.அநீதிகளுக்கு எதிராகக் களத்தில் இறங்கி அதனால் இன்னல்களை சம்பாதித்து இறுதியில் தங்கள் உயிரையும் பலிகொடுத்த தியாகிகள் ரத்தினசாமி,லீலாவதி போன்ற வர்களின் மரணம் எதோ முன்பகை காரணமாக நடந்தது போல ஒரு வரிச்செய்தியாய்ச் சித்தரித்தது ஊடகங்கள்.

இப்போது களத்தில் இருக்கிற எந்த அரசியல் கட்சியும் எந்த அரசியல் வாதியும் சுத்தமானவர்கள் இல்லை என்பது போலொரு தோற்றத்தை உண்டு பண்ணவே திட்டமிட்டு இந்த திசை திருப்பல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.   இந்த உண்ணா விரதப் போராட்டத்துக்கான உடனடிப்பலன்கள் ஏதும் சர்வநிச்சயமாக நிகழ்ந்து விடப் போவதில்லை.ஆனால் திட்டமிட்டபடி பலன்கள்  அரசியல் அனுகூலமாக முடியும்.

2.6.11

கட்டபொம்மன்,பகத்சிங்,பாரதி வரிசையில் பதிந்துபோன மேற்குவங்கம்



இந்தியா முழுமைக்கும் தீபாவளி கொண்டாடிக்கொண்டிருக்கும் போது கேரளம் ஓணம் கொண்டாடுகிறது.இந்தியா முழுவதும் அடிமைப்பட்டுக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது துப்பாக்கிகளும் தோட்டாக்களும் சுபாஷ் சந்திரபோஸ் களும் சூரியாசென்களும் கல்பனாதத்துகளும் மேற்குவங்கத்திலிருந்து கிளம்பி னார்கள். சிட்டகாங் கிளர்ச்சியும் சூரியா சென்னும் வரலாற்று ஆசிரியர்களால் மறைக்கப்பட்ட பெயர்கள்.அந்த மேற்குவங்கம் அரவிந்தர் என்கிற புரட்சிக்காரனைக்கொடுத்தது ஆனால் புதுச்சேரி அவருக்கு ஆஸ்ரமம் அமைத்துக் கொடுத்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியிருக்கவேண்டும் என்பதை இப்போதே சிந்திக்கிற மாநிலம்  என்கிற பெயரும் அதற்கு எதிராக எனது எதிரிகளை கல்கத்தாவில் விட்டுச்செல்கிறேன் என்று மவுண்ட் பேட்டன் சொல்லிக்கொண்டு  திரும்பிப்போனதும் வரலாற்றில் அழியாத வார்த்தைகள். அவர் திரும்பிப்போகிற நேரத்தில் கூட அடிமை எதிர்ப்பின் உக்கிரமான பகுதியை  மேற்குவங்கமே எடுத்துக்கொண்டது. அன்னிபெசண்ட், நிவேதிதா,அன்னைதெரேசா,தாகூர்,சத்யஜித்ரே,மிருணாள் சென், அபர்ணா, நந்திதா போஸ் என்கிற நூற்றுக்கணக்கான ஆளுமைகளோடு ஒரு கால்பந்தாட்டக்காரனுக்கு சிலை வைத்திருக்கிற மாநிலம்.

இன்னும் கூட அமர்த்தியா சென் போன்ற பொருளாதார வல்லுநர்களை உற்பத்திசெய்து கொடுத்துக்கொண்டிருக்கிற மாநிலம்.  இவ்வளவு பெருமை களுக்கும் ஒரே காரணம் ஒரு முப்பத்திநான்கு ஆண்டுகள் அங்கு இடதுசாரி ஆட்சி நடைபெற்றதுதான் எனச்சொல்லமாட்டேன். இவ்வளவு காலம் அங்கு ஒரு செங்கொடி ஆட்சி நடைபெறுவதற்கு இவையெல்லாம் தான் மூலகாரணியாக இருந்தது.இன்னும் இந்தியா இருக்கிற வரை அது அப்படித்தான் தொடரும்.காரணத்தைம் ஒரு சின்ன உத்தாரணத்தோடு சொல்லலாம். இன்றைக்கு இருக்கிற அணைத்து தேசியத் தொழிற் சங்கங்களுக்கும் ஆரம்பகாலத்தில் அங்குதான் முளைப் பிடித்தார்கள். இன்றைக்கும் கூட ஐஎன்டியுசி தொடங்கி புரட்சிகர தொழிலாளர் முன்னணிகள் வரையிலும் பெருவாரியானவை மேற்குவங்கத்திலிருந்தே நிர்வகிக்கப்படுகின்றன.அதனாலேகூட அது எனக்குப்பிடித்துப்போனது எனச்சொல்லமாட்டேன்.

1958 ல் அரச மான்யம் ஒழிக்கப்பட்டுவிட்டாலும் இன்னும் முதல்வர்களை ராஜராஜ ராஜமார்த்தாண்ட என்று  ஒரு முழத்துக்கு நீட்டி புனைப்பெயர்  சொல்லி விட்டு நிஜபெயரை மறந்துபோகும் அளவுக்கு துதிகள் பெருகிக் கிடக்கிற தேசத்தில்.   இருபத்தைந்தாண்டு காலம்  முதலமைச்சாராயிருந்த ஒருவரை எல்லோரையும் போலத்தோழர் ஜோதிபாசு என்று அழைக்கமுடிகிற எளிமை குடிகொண்டிருந்தது அங்கேதான். ஒரு ஐந்தாண்டுகள் பதவியில் இருந்தால் எவ்வளவு அள்ள முடியும் என்பதை மாறி மாறிவரும் தமிழக ஆட்சியாளர்களும் அவர்களது தோழிகளும் குடும்பத்தினரும் உலகத்துக்கு வெட்ட வெளிச்சமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முப்பத்துநான்கு ஆண்டுகாலம் பதவியில் இருந்த அந்தக்கூட்டத்துக்கு அவப்பெயர் கிள்ளினான்,முள்ளினான்,குசுவினான் என்பதுதான். அவர்களுக்கென்று சொந்த கொடநாடோ,சன்,கலைஞர் குழுமங்களோ கிடையவே கிடையாது.

கவுஹாத்தியில் நடைபெற்ற அகில இந்திய கிராமவங்கி ஊழியர்சங்க மாநாட்டுக்கு போகிற வழியில் அந்த ஹௌரா சந்திப்பில் அரைநாள் தங்கவேண்டியிருந்தது. எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளார் தோழர் கிருஷ்ணகுமார் காத்திருக்கும் அறையை விட்டு யாரும் வெளியே போகக்கூடாது என்று கடும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.  கட்டுப்பாட்டை மீறுகிற மனசு எல்லோர் அடிமனதிலும் குறுகுறுத்துக் கொண்டே இருக்குமல்லவா ? நாங்கள் கட்டுப்பாட்டை மீறிப்போனோம். போகிற வழியெங்கும் சொத சொதவெனச் சகதி. கூடவந்தவர் சொன்னார் பார்த்தாயா கம்யூனிஸ்ட் கட்சி ஆளுகிற மாநிலத் தலைநகரில் கூட குடிசைகளையும் சகதிகளையும் ஒழிக்க முடியவில்லை என்று. அப்பொழுது எனக்கு பதில்சொல்லத் தெரியவில்லை ,விமர்சனம் வந்தது,கேட்டேன் .பிழைக்கவே வழியில்லாத பீகாரிகளும் ஒரியாக்காரர்களும் தினம் தினம் கள்ள ரயிலேறி வந்து கல்கத்தாவில் குடிபுகுந்தால் என்ன ஆகும்.இந்தியாவில் உள்ள மொத்தக்குடிசையும் அங்கேதான் இருக்கும் என்று பதில் சொன்னார் ஒருதோழர்.

ஒரு கடைகோடி குடிசைவாசிக்கு இருக்கும் ஜீவாதார நம்பிக்கையைப் பெறுவது எவ்வளவு பெரிய விஷயம். அங்கெ போன உயிர் பிழைத்துக்கொள்ளலாம் என்கிற உறுதி வந்ததற்கு அந்த மாநிலம் கொண்டிருந்த மனிதாபிமானம் மட்டுமே  காரணம். எனவே தான் இந்தியாடுடே,ஐபிஎன்,என்டிடிவி, தினமலர்,தினத்தந்தி,சன்டீவி ஆகிய ஊடகங்களுக்கு முதல் எதிரியாகவே நீடிக்கிறது. அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.ஆகையால தான் ஜெயித்து பதவிக்கு வந்த மம்தா பானர்ஜியை எப்போதும் காட்டன் சேலை உடுத்தும் எளிமையானவர் என்று முன்னிறுத்துகிறது. இன்றும் கூட ஓட்டுவீட்டில்தான் குடியிருக்கிறார் என்று பெருமிதப்படுகிறது.காட்டன் புடவை உடுத்துவதும், ஜோல்னாப்பை தொங்கவிட்டுக் கொள்வதும்,தங்க நகைகள் தவிர்த்து சில எளிமையான அலங்காரங்கள் செய்துகொள்வதும் வங்காளிகளின்  பிரத்யேகக் கலாச்சாரம். அப்படிப் பார்த்தால் அந்த மாநிலத்து ஆண்களெல்லாம் வேஷ்டியை தார்ப்பாச்சா கட்டுவார்கள் அதற்காக அவர்கள் வெறும் கோவணம் தான் கட்டிக் கொள்கிற்றார்கள் என்று சொல்வதா ?.

ஆனலும் அதை ஒரு பெரிய கவர்ச்சி செய்தியாக வெளியிடும் பத்திரிகைகளும் அதைப்படிக்கிற தமிழ் வாழ் தினத்தந்தி வாசகன். உள்ளூர் அய்யாவையும் அம்மாவையும்,அவர்களின் கொடிக்குகளான கவுன்சிலர்களையும் அவர்களின் மனைவிமார்கள் அள்ளிப்போட்டுக்கொள்கிற நகைகளையும் நினைத்துக் கொண்டு உரலை இடிக்கிறான்.அந்த இடியில் சொல்லாமல் விட்டுப்போன முந்தைய முதல்வர்களின் எளிமை விடுபட்டுப்போகிறது.இப்படிக் கள்ள மௌனம் காப்பதிலும் பெரிய்ய அரசியல் இருக்கிறது. அதாவது மனித மனம் எதிர்விதமாகக் கற்பனை செய்யும் குணாம்சம் கொண்டது .

முதன்முதலில் கடலைப் பார்த்த ஒரு கருசக்காட்டு மனிதன்  மாப்ப்ள பாத்தியா இந்தூர்க்காரங்க குடுத்துவச்சவங்கடா,வருசம் முழுக்க நல்லாக்குண்டி கழுவுவாங்க என்று சொன்னானாம். அப்படித்தான்  இந்த ஊடகங்கள் மக்களுக்கு செய்திகள் சொல்லுகிறது.

எப்ப பாரு ரஷ்யாவப்பாரு மேற்கு வங்கத்தப்பாருன்னு சொல்லிக்கிட்டு அலைந்தது ஒரு கூட்டம் இனி இந்தியாவில் அப்படி பொதுநம்பிக்கைகளை சுட்டிக் காட்டுவதற்கும் சொல்லி க்காண்பிப்பதற்கு இடமில்லாமல் போய் விட்டதா?

இல்லை.

எம் இளமைக் காலங்களில் கட்டபொம்மனின், வாஞ்சிநாதனின், பகத்சிங்கின், பாரதியின் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளுக்குள் முறுக்கேறி ஓடுமே ஒரு சூடான ரத்தம்.அவர்களின் கதைகள் கேட்கிறபோதெல்லாம் ஒரே ஒரு நாள் அவர்களைப்போல் வாழ்ந்து மடிந்து போகச்சித்தமாகும் ஆவல் மேவுமே ?  அது போல.

இந்த தேசத்தில் காணக்கிடைக்கிற மேடு பள்ளங்களுக்கு,
ஆண்டான் அடிமை  வழக்கத்துக்கு,
பாட்டினிச் சாவுக்கும் பத்து ஏக்கர் பங்களாவுக்கும் உள்ள வேறுபாட்டுக்கு மருந்தாகக்கிடைக்கிற ஒரே மாற்று என்ற நம்பிக்கையும்
அந்த நம்பிக்கையை சுட்டிக்காட்டவவும் இப்போதைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிற பொது மனிதர்கள் நிறைந்த இடம்
அந்த மாநிலம் என்பதாலே எனக்குப்பிடிக்கும்.

பட்டங்கள்  ஆளவும் சட்டங்கள் செய்யவும் கூடுகிற ஒரு சட்டசபையை,அந்த மாநிலத்தின் முதல்  மண்டபத்தை எழுத்தாளர்கள் கட்டிடம் என்று சொல்லுவது தான் கூடுதலாகப் பிடிக்கும்.


26.5.11

சமச்சீர் கல்வி முறையை கைவிட வேண்டாம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கோரிக்கை



சமச்சீர் கல்வி முறையை கைவிட வேண்டாம் என்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.கங்காதரன், பொதுச் செயலா ளர் எஸ்.துரைகண்ணு வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

கடந்த ஆண்டு ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்பு களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டு இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப் படுவதாக இருந்த சமச்சீர் கல்வி முறையை பாடத்திட் டங்களில் தோற்கடிக்கப் பட்ட திமுக அரசாங்கம் செய்த சில தவறுகளை கார ணம் காட்டி நிறுத்தி வைப் பதாக தமிழக அரசாங்கம் மேற்கொண்டிருக்கிற முடிவு அதிர்ச்சியளிக்கிறது.

பணக்கார தமிழகம், ஏழைத் தமிழகம் என நமது மாநிலம் இரண்டாகப் பிளவு பட்டிருக்கிறது. அரசாங் கத்தின் ஒவ்வொரு அசைவையும் பணக்காரத் தமிழகம் தன் பால் சாதகமாக்கிக் கொள்ள அயராது முயல்கிறது. அதன் காரணமாகவே அரசின் பொறுப்புகளில் இருந்த கல்வி பணக்காரர்கள் புகுந்து விளையாடும் கள்ளச்சந்தையின் சரக்காக மாறிவிட்டிருக்கிறது. கொள்ளை லாபம் ஈட்டுவதை கட்டுப்படுத்த முடி யாத அரசாங்கமே தமிழக அரசாங்கத்தையே மாற்றும் அளவு கல்வி வணிகர்கள் தலைக்கனம் பிடித்து அலை கிறார்கள். தமிழகத்தின் புதிய அரசாங்கம் எடுத் திருக்கிற முடிவை கல்வி வணிகர்கள் மட்டுமே வர வேற்றிருக்கிறார்கள் என் பதை தமிழக அரசாங்கம் ஆழமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனை வரும் ஒரே மாதிரியான கல்வி முறையின் கீழ் பயில வேண்டும் என்ற நோக்கத் தோடு கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அறி முகமான ஒரு திட்டத்தை சொத்தை காரணங்களைக் காட்டி அவசரகதியில் முடக்கிப்போட முயல்வது தமிழக அரசாங்கத்தை பணக் கார தமிழகத்தின் பக்கம் மட்டுமே தள்ளிவிடும்.

ஏழைகளுக்கு இலவச அரிசி; பணக்காரர்களுக்கு தரமான கல்வி வழங்குகிற முரண்பாடான அரசாங்க மாகத் தோற்றமளிப்பதில் இருந்து விடுபட்டு உண்மையான மக்கள்நல அரசாங்கமாகத் திகழ்ந்திட பாடத் திட்டத்தில் உள்ள சர்ச்சைக் குரிய பகுதிகளை நீக்கி விட்டு இந்த ஆண்டு முதலே சமச்சீர் கல்வித்திட்டத்தை தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தீக்கதிர்-  நாளிதழ்


கொள்ளிவைக்கப் பிள்ளையில்ல 
குடிச்ச கஞ்சி கூட்டுலசேரல
ஊசிமேல தவமிருந்து 
ஒத்தப்பிள்ள பெத்தானாம்
பெத்த பிள்ளைக்கு பேச்சு வராம 
ஊர் ஊரா அலைஞ்சானாம்
போகாதா கோயிலில்ல 
கும்பிடாதசாமியில்ல
ஒரு நாத்தேவையில 
திருவாய் மலர்ந்தானாம் 
கொள்ளியோட பெறந்த பிள்ள
ஒன்னக்கொல்லாம விடமாட்டேன்னு
விக்குனானுமில்ல 
வெறச்சானுமில்ல தகப்பன்

24.5.11

ரயில் பயண அரசியல்.


ரோசாவே சின்ன ரோசாவே என்று ஆரம்பித்துவிட்டு பிறகு அதே மெட்டில் அமைந்த ஹிந்தி பாடலைப்பாடிக்கொண்டே அருகே வந்தான்.
அவன் கழுத்தில் தொங்கிய ஹார்மோனியப்பெட்டி ரயிலிறைச்சலைத்தாண்டி வந்து இசை பேசியது. அவனோடு செக்கச்செவேலென்ற சின்னப்பெண் கூட வந்தாள். அவளது கையில் இரண்டு வெள்ளை தகடுகள் இருந்தது அதை வைத்து தாளம் போட்டுக்கொண்டு வந்தாள்.உற்றுக்கவனித்த போதுதான் தெரிந்தது.அது அஸ்பெஸ்டாஸ் தகடுகளை உடைத்துச் செய்யப்பட்ட வாத்தியக்கருவி என்று.roadside stones are prolotariates weapen என்று படித்த பதம் நினைவுக்கு வந்தது.

ஹார்மோனியக்காரனைப் பார்த்து ஒரு பிராயாணி சொன்னார் கண்ணு தெரியலையோன்னு நெனச்சேன்,நல்லாத்தானே இருக்கு ஆளும் தெடமாத்தானே இருக்கான் ஒழைச்சுபிழைக்காலமில்ல” என்றார்.உடனே உடன் பயணித்தவர்கள் அது பற்றியே பேச ஆரம்பித்தார்கள்.
சற்று நேரத்துக்கெல்லாம் அவன் ஒரு தேசத்துரோக குற்றவாளிபோல புனையப்பட்டான்.புத்தகம் படித்துக்கொண்டு வந்த இன்னொரு பயணி மூடி வைத்துவிட்டுச்சொன்னார் ஆமா இன்போசியஸ் கம்பெனில டீம் லீடர் போஸ்ட் தர்ரேன்னாங்க இவந்தான் வேண்டமின்னு சொல்லிட்டு வந்து பிச்சையெடுக்கிறான்”  என்று சொல்லிவிட்டு மீண்டும் புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டார்.ஆளாலுக்கு ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கொஞ்சநேரத்துக்கெல்லாம் அடுத்த நிறுத்தம் வந்தது புத்தகப்பிரயாணி எழுந்து போய்விட்டார்.திரும்பவும் மெல்ல சபை கலைகட்டியது.
குடிச்சிருப்பானோ,அதான் அப்படி கிருத்துருவமா பேசுறான்,ஆமாமா கவர்மெண்டே கடையத்தொறந்து ஊத்திக்கொடுத்தா இப்பிடித்தான் என்றார்கள்.அதுக்குத்தா அம்மா வைக்கபோகுதுல்ல ஆப்பு என்றார் இன்னொருவர்.அப்ப டாஸ்மாக்க மூடிருவாங்களா என்று கேட்டார்.
மாலை மலர்ல கேள்விக்குறி போட்டாச்சு என்றார்.அப்பாட தமிழ்நாடு இன்னிமே உருப்பட்டுரும் என்கிற நிம்மதிப்பெருமூச்சு வந்தது.
டாஸ்மாக்கை மூடிவிட்டு தனியாருக்கு ஏலம் விட்டுவிட்டால் தமிழர் நாட்டில் ஒருவனும் குடிக்கமாட்டானா என்றார் கூட வந்தவர்.
இப்போதும் கூட ஒரு சின்ன  மௌனம் இடைமறித்தது.