Showing posts with label அரசுமருத்துவமனை. Show all posts
Showing posts with label அரசுமருத்துவமனை. Show all posts

15.10.09

அரசு மருத்துவரும், ஆத்தா மாரியும்.

சாமத்தில் மிளக்காய்ச் செடிக்கு தண்ணி பாச்சப்போன சின்னையனை மணல்லாரி தட்டிவிட்டுப் போய்விட்டது. அறுபது ரூபாய் கிடைக்கிற அவனது சம்பாத்தியத்தோடு தீப்பெட்டியாபிஸ் போகிற மனைவியின் பொருளாதாரமும் சேர்ந்து தான் பொழப்பை நகர்த்துகிறது. வாழ்நாள் சேமிப்பு கடுகு டப்பாவுக்குள் கிடக்கிற நாப்பது ரூபா. தலைமுறைச் சொத்து ஒத்தப்பத்தி ஓட்டுவீடு.இதைவைத்துக்கொண்டு அப்பல்லோ, விஜயா, அய்யா மீனாட்சிகளை நினைத்துப் பார்க்ககூட முடியாது. அம்பது பைசா அனாசின் மத்திரையில் சொஸ்த்தமாக்குக்கிற காய்ச்சலுக்கு, அத்தனை சோதனையும் செய்து, பதினெட்டாயிரத்தைப் பறித்துக்கொண்டு ஒரு சிடியும், கொஞ்சம் ரிப்போட் பேப்பரும், கொடுத்தனுப்பிய கார்ப்பரேட் மருத்துவமனைகளை வேடிக்கை பார்க்கக்கூட முடியாது சின்னையன் வகையறாக்களுக்கு.


அங்கு பூக்களின் வாசம் இல்லை. மூத்திரக் கவிச்சையும் மாத்திரைக் கவிச்சையும் கலந்த பினாயில் நெடியிருக்கும். இதமான சினிமாப்பாடல் கேட்காது. இருமலும் அனத்தலும்தான். ஆறுதல் வார்த்தையில்லை. பேசுபொருளெல்லாம் வலியும் ரணமும் தான். தாளிப்பு வாசம் மூக்கிலேயே பசியக் கூட்டுகிற ஆவிபறக்கும் வீட்டுச்சோறு இல்லை. ஈக்கள் மொய்க்கிற, ஆறி அலமர்ந்துபோன அச்சடிச்ச சோறுதான். கனிவில்லை, அலட்சியமும் அதட்டலும் தான். ஒரு சிறைச்சாலைக்குண்டான அத்தனை அம்சங்களிருந்தாலும், தர்மாஸ்பத்திரிகள் தான் அறுபது சதமான இந்தியர்களின் கதிமோட்சம்.


இருபது நாள் ஓடிப்போனது இப்போது சுவத்தைப் பிடித்து நடக்கிறான். வாசலுக்கு வந்து இடை தரிசில்லாமல் ஓடும் வாகனங்களைப் பார்க்கிறான். மரண இருள் விலகி வாழ்வின் நம்பிக்கை ஒளி வந்துவிட்டது. கண்டம் கழிந்தது. ஆத்தா மாரியம்மாளுக்கு ஆடோ, கோழியோ வெட்ட நேமுக்கம் போடுகிறான். அதுவரைக்கும் காத்திருக்க முடியாதல்லவா? அரசுமருத்துவர் தான் ஆத்தாரூபமாகத் தெரிகிறார். காலில் விழுகிறான்.

அங்குபூக்களின் வாசத்தை உண்டாக்கும்
செயற்கை மணம் இல்லை.
வரவேற்பறையில் சாயிபாபா படமும்
அதற்குக்கீழே
தண்ணீரில் மிதக்கிற பூக்களும் இல்லை.
நுனிநாக்கு ஆங்கிலம் இல்லை.


இருந்தாலும் சானிமணக்கும் மாட்டுக்கொட்டடி போல. ஆமணக்கு சுமந்த ஆறுமுகத்தாயின் மேல் மணக்கிற வேர்வை வாசம் போல. நடுச்சாம முழிப்பில் ஆசுவாசமாக ஊதும் சொக்கலால் பீடிப்புகை போல. ஊரைக் கூட்டுகிற கறிக்குழம்பு வாசம் போல. பனையும், சகதியும்,சண்டையும் நெரிசலும் இருந்தாலும் அருள்மணக்கிற மாரியாத்தா போல அவனுக்கு அந்த தர்மாஸ்பத்திரி.