Showing posts with label கண்ணீர். Show all posts
Showing posts with label கண்ணீர். Show all posts

29.12.11

ஏழைகளின் கண்ணீரெனும் வற்றாத நதிமூலம்


வாச்சாத்தித் தீர்ப்பின் போது நடந்த தொலைக்காட்சி நேர்காணலில் பெண்கள் தீர்ப்பைப் பற்றிச் சொல்லும்போது தெளிவாகச் சொல்லி, நேர்ந்தவற்றைச் சொல்லும் போது உடைந்து நொறுங்கிக் குலுங்கிக் கண்ணீர் சிந்துவார்காள். அணைகட்டியிருந்த அந்த உப்புவெள்ளம் எங்கே இருந்தது.

காரமான உணவு சாப்பிடுவதாலும் கண்ணில் தூசி விழுவதாலும்  கொட்டாவி விடுதல்,கோபம்,சோகம்,ஆனந்தம் சிரிப்பு போன்ற மிகு உணர்ச்சிகளின் மூலம்  உருவாகி பின்னர் அது கன்னம் வழி ஓடி மண்  கலக்கிறது. மூளையினின்றும் தனியே தன்னை ஸ்தாபித்துக்கொள்ளும்  தன்னாட்சி நரம்பு மண்டலம் தான் கண்ணீரை உருவாக்குகிறது. அந்த அடானமஸ் அமைப்பு கண்ணீரை மூன்று வெவ்வேறு காரணங்களுக்காக திறந்து விடுகிறது. இதனால் கண்ணில் இருக்கும் மூன்று திரைகளுக்கு உயவுப்பொருளாக மாறுவதும் பழய்ய  உயவுப் பொருளை சுத்திகரிக்கவுமான இரண்டு பிரதான வேலையை இந்த கண்ணீரானது  செய்கிறது.

ஆத்திரம், ஆனந்தம், சோகம்,வெங்காயம் உரிப்பதுபோன்ற வேலைகளில்லாத விலங்குகளுக்கும்கூட  இயல் பாகவே கண்ணீர் வழிகிற ஏற்பாடு இருக்கிறதாம்.இப்படி பட்டியலிட சுட்டிக்காட்ட அறிவியல்  காரணங்கள், கண்டுபிடிப்புகள் ஆயிரம் இருந்தாலும் கூடக் கண்ணீர் உணர்வால் ஆனது. அதுவே அதன் விஷேச குணம். ஆற்றமுடியாத சுயவலிகளைக் காயங்களை யாரும் குறைக்க முடியாதபோது சொந்தக் கண்ணீர் அதை இலகுவாக்கும். அழுவதனால் பாரம் குறைந்து ஆயுள் கூடுகிறதாம். கண்ணிலே நீரெதற்கு காலம் எல்லாம் அழுவதற்கு, அழுதால் கொஞ்சம்  நிம்மதி, கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்க்கோலம்,உன்கண்ணில் நீர்வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்று கண்ணதாசன்கள் எழுதி  வைத்திருக்கிறார்கள்.  இந்த வரிகளை க்கேட்கும் போதே கண்ணீர் மண்டலம் கலங்கும்.எதிராளியை இயக்கும். அல்லது இப்படிச்சொல்லலாம் இளகிய மனதைக் கட்டாயம் இழுத்துப் பிடித்து ஆட்டும்.

அதனாலேதான் எலிகள் தனது எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள உடல் முழுவதும்  சொந்தக்  கண்ணீரை தடவிக்கொள்ளுமாம். இளகியமனது இருக்கிறதோ இல்லையோ கண்ணீருக்கு எதிராளியை  இளகச் செய்யும் வேதியற்பண்பு ( chemistry- chemical reaction) இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. ஆமாம் ஆண் மிருகங்களின் காம வேட்கையைக் குறைக்கும் சக்தி கண்ணீருக்கு இருக்கிறதாம். இப்படி அறிவியல் ஆய்வின் முடிவுகளும் இலக்கிய குறிப்புகளும். ஒரு புள்ளியில் இயல்பாகவே  சந்தித்துக்  கொள் கின்றன. அது  ஆதிக் கத்தை எதிர்கொள்கிற இயலாமையின் வெளிப்பாடு கண்ணீர் என்பதே. அதனால் தான் ஜெர்மனியக் கவிஞன் குந்தர்கிராஸ் எதிர்க்கவலுவில்லாத ஏழைகளின் கண்ணீர் ஆயிரம் வாளுக்குச்சமம் என்று கூறுகிறார்.

தனக்கெனத் தனியே தமிழ்,ஆங்கிலம், உருது, பாலி, ஸ்பானிஸ், பிரெஞ்சு,ருஷ்ய,மொழிகளென ஏதும் இல்லாத குழந்தைகள் தங்களின் தேவைகளை,உணர்வுகளை அழுகையால் மட்டுமே உலகுக்கு அறிவிக்கிறது. அப்படியான ஒரு மொழியைப் புரிந்து கொள்ளமுடிகிற இன்னொரு வகை தாய்களின் வகை. அவள் மட்டுமே ஒரு  குழந் தையின் அசைவுகளையும் மொழியின்றி அறிந்துகொள்ளும் ஆதி அறிவியல் அறிஞர் ஆகிறாள். அந்த அறிவின் பயன்பாடுகளை அவள் ஆதிக்கத்துக்கு  எதிரான தனது இயலா மையின் போது  பரீட்சித்துக் கொள்கிறாள்.

உலகமெங்கிலும் கண்ணீர் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமானது என்கிற பெருங்கருத்து நிலவுகிறது. லத்தீனமெரிக்க நாடுகள் தவிர்த்த ஏனைய தேசத்தில் அழுவது ஆண்களுக்கு அழகானதல்ல என்கிற  ஆதிக்கச் சிந்தனதான் நிறைந்திருக்கிறது என்பது விநோதமான வரலாற்றுச் செய்தி. வரலாறோ, நீதியோ அது எப்போதும் எழுதுபவனுடைய சார்புத்தன்மையையே நிலைநிறுத்தும். வரலாற்றை உருவாக்கிய பெண் ஒதுக்கப்பட்டு எழுதிய ஆண் தன்னை நிறுவிக்கொண்ட கொடுமை வீரம் என்கிற பதத்தால் உருவாயிற்று.