Showing posts with label ஆதிசேஷன். Show all posts
Showing posts with label ஆதிசேஷன். Show all posts

24.10.09

சேவுக்கடையின் எண்ணெய்க் கொப்பறையிலிருந்து வெளிக் கிளம்பும் தனல் கவிதைகள்.

சாத்தூர் பலப்பல நண்பர்களையும், கதைகளையும், கதை மாந்தர்களையும், கதை சொல்லிகளையும், விசித்திரங்களையும் வடுக்களையும் எனக்கு அறியத் தந்திருக்கிறது. அப்படியொரு நண்பர் ஆதிசேஷன். காடெல்லாம் கவிமனசைத்தேடி அலைந்து திரிந்து கலைத்து அமர்கையில் வீட்டுக் கொல்லையில் கிடைத்ததுபோல நாங்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு சேவுக்கடைத் தொழிலாளியாக அந்தக் கவிஞனை அறிமுகப்படுத்தியது சாத்தூர்.


சாத்தூர் சேவின் கரம் குறையாத எழுத்து அவருடையது. தீக்கதிர், செம்மலர் இதழ்களில் அவ்வப்போது எழுதும் அவரின் கவிதை ஒரு இரவு என்னைத்தூங்க விடவில்லை. காலை எட்டு மணிக்கு ஒரு விமர்சனக் கடிதத்தோடு அவர் வேலை பார்க்கும் கடைக்குப் போனேன். சேவுகள் அடுக்கப் பட்டிருக்கும் கடையின் பின்பகுதியில் அடுப்புக்கு முன்னால் அமர்ந்து சீனிமுட்டாய் பிழிந்துகொண்டிருந்தார். கால்சராய் போட்ட இவன் ஏன் இங்கு வந்தான் என்னும் தொனியில் என்னைப் பார்த்தார். அழைத்துப் போனவருக்கு தர்ம சங்கடமானது புரிதலில் இருக்கிற சின்ன இடைவெளி அது. ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டு காதலிக்குக் கொடுக்கிற கடிதத்தைப் போல கொடுத்து விட்டுக் தவிப்பில் கிளம்பினேன்.


கவிதை என்னைத் துரத்தியது போலவே கடிதம் அவரை என்னிடம் கூட்டி வந்தது. இடைவெளிகுறைந்து பேசிக்கொண்டிருந்த போது இதுவரை பிரசுரமாகாத கவிதை சொன்னார்.


0


ஞாயிற்றுக்கிழமைகளில் கறி அறுத்துக்கொடுக்கிறேன்,
காய்ச்சலாயிருக்கும் போது காபிபோட்டுக்கொடுக்கிறேன்,
அவள் கைவேலையாய் இருக்கும்போது குழந்தைகூட சுமக்கிறேன்இருந்தும் ஒரு நாளும் முளைத்ததில்லை அவளுக்கு மீசை.


0


வலது மூளையை ஜாதி தின்றுவிட்டது, இடது மூளையை மதம் தின்றுவிட்டது, தவற்றை நீட்டிக்க விரும்பாத தண்டுவடத்தைநொறுக்க ஆயுதம் பயின்று கொண்டிருந்தார்கள்.நாடாளுமன்றத்தைவிட பெரிய வெற்றிடத்தை நிரப்ப வநதவர்கள்

0


இப்படிச்சவுக்கால் அடிக்கிற அவரிடம் ஒரு தொகுப்புக்கான அசல் கவிதைகள் தேங்கிக் கிடக்கிறது. நேற்றும் அவர்தான் குறுந்தகவல் அனுப்பி இந்த வார ஆனந்தவிகடனில் ஒரு கவிதை வந்திருக்கிறது பாருங்கள் என்று சொன்னார். ஓடிப்போய்புத்தகம் வாங்கி தேடித்தேடிப் பார்த்தேன்.தொடைகளும், தனங்களும்தான் திருப்பிய பக்கங்களிலெல்லாம் இருந்து வெளிக்கிளம்பியது. அமிதாப்,கமல்,சூர்யா,மணிரத்னம் என பெரிய பெரிய இடிபாடுகளுக்கிடையில் ஒரு ஒற்றைப் பூப்போலஇந்தக் கவிதை நசுங்கிக்கிடந்தது.


நிலவில்

வடை சுட்ட பாட்டி

தண்ணீர் இல்லாமலாமாவாட்டியிருப்பாள். ?