Showing posts with label நாட்டார்தெய்வம். Show all posts
Showing posts with label நாட்டார்தெய்வம். Show all posts

19.3.11

குலசாமியும் தீராத பூசுபொடியின் வாசமும்.



இத்தோடு மூன்றாவது இது அழைப்பு. பேரப்பிள்ளைகளை விசாரித்துவிட்டு,ஒரு கழிப்பறை வேண்டுமென்கிற கோரிக்கையையும் கோடிட்டுக்காட்டிவிட்டு கடைசியில் அம்மா சொன்னாள்.’எப்பிடியாச்சும் லீவு போட்டுட்டு வந்துருப்பா,பங்காளிகள்லாம் ஒன்னத்தான் கெட்டாக’. சொல்லும் போது அதே உரத்த குரல்கேட்டது. செல்போனில் மெல்லப் பேசினால் கூடப்போதுமென்கிற நுனுக்கம் அவளுக்கு இன்னும்  கைவரவில்லை.பேசி முடித்த கையோடு சுற்றியிருப்பவர்களைப் பெருமிதமாக ஒரு பார்வை பார்த்திருப்பாள். கனகமணிப்பெரியம்மையும் ,கூல்பானை பொண்டாட்டியும் எதாச்சும் கேலி பேசியிருப்பார்கள். கண்மலரும் பூசுபொடியும் மறக்காம வாங்கியாரச் சொல்லுக்கா என்று ஆரிட்டாச்சித்தி சொல்லியிருப்பாள்.அவள் தான் அந்த மத்தியான வெயிலில் தங்கு தங்குன்னு குதிப்பாள் நாக்கை த்துருத்திக்கொண்டு எனக்கு முட்டை வேணும்,சாராயம் வேணும்,ஒரு கைப்பிடி வச்ச அருவா வேணும் என்று அருவாக்குச்சொல்லச் சாமியாடுவாள்.

ஒரு பத்துப்பதினைந்து வருடங்கள் ஓடிப்போனது,ஊரோடு உட்கார்ந்து நரிக்கொறத்தி ஆட்டம் பார்த்தது.ரெட்டைஅர்த்த வசனங்களைக் கேட்டுக் கொண்டே முறைப்பெண்களைப்பார்க்கிற குறுகுறுப்பு.கிழவன் கோவிலில் சாமிகும்பிடும்போது யாருக்காவது அருள்வந்து உடலை உலுக்கி நாக்கைத் துருத்துவது. தெருச்சண்டையில் ஆம்பளையைப் பொம்பளை மல்லுக்கட்டி ஜெயிப்பது.ஊர்ப்பஞ்சாயத்தில் நல்ல நாயம் பேசுனீக நாயம் வேண்டான்னு சொன்னா தீத்து உட்ருங்க,மனசுக்கு பிடிச்சவனோட காலந்தள்ளட்டும் என்கிற குரல்கேட்டு பத்துப்பதினைந்து வருடங்கள் ஓடிப்போனது. எலே, செம்பட்டையா,  இப்படி பேர்களோடும் இன்னும் சில கெட்ட வார்த்தைகளோடும் அறியப்பட்ட காலங்கள் மாறி “தம்பி எப்ப வந்துச்சி,வாங்க வாத்தியாரய்யா என்கிற மரியாதைகளில் கொஞ்சம் தூரம் அதிகமானது.

முன்னமெல்லாம் மாசி மாதம் ஒண்ணாந்தேதி குலசாமி கும்பிட பங்காளிகள் கூப்பிடுவார்கள். அப்போது ‘ஆமா பெரிய்ய ராஜராஜ சோழன் பரம்பரை’ ஒங்க சல்வார்பட்டியான் வளசலில் பெரிய்ய பணக்காரன் வள்ளிமுத்து பெரியப்பன் மட்டுந்தான். அவனுக்குத்தான் ஓடு போட்ட வீடு இருக்கு. மத்தபடி எல்லாருக்கும் கூர வீடு. அதும் பிரிஞ்ச.கூரைய சரிசெய்ய வக்கில்லாதவங்க வளசல். இதுல என்ன என்ன கொளம் குத்துக்கல்லு சாமின்னு இப்படி எதாச்சும் சொல்லிவிட வந்தவர்கள் அதிகப் பிடிச்சவன் என்று  முனகிக்கொண்டே அங்கிருந்து வெறுப்போடு போய்விடுவார்கள்.ஆனால் ஒரு அரைமுடித் தேங்காயும்,நெய் ஊத்தாத சக்கரைப் பொங்கலும் கட்டாயம் தழுகையாக வீடு வந்துசேரும்.

பங்காளி முருகேசன் அந்தோணி கூட சண்டைபோட்டு மண்டைய ஒடச்சி போலீஸ் ஸ்டேசனுக்கு அலைந்தார்கள்.அந்தோணி உயிர்ச்சிநேகிதன், அந்தோணிக்கு சப்போட்டா அலைஞ்சதும் பங்காளிகளின் கோபம் கருப்பசாமி பக்கம் திரும்பியது.ஊனு கம்பைத்தூக்கிக்கொண்டு அடிக்கஓடி வந்தான் முருகேசன். அப்போது ஆரிட்டாச்சித்திதான் மக்காடச்சேந்து அவனப்பிடிச்சி கம்பைப்புடுங்கி விட்டு வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனாள். ரோஷம் வந்து திருப்பி அடிக்க எத்தனித்த கருப்பாமியின் கண்ணுக்குள் பார்த்த ஆரிட்டாச்சித்தியின் பார்வை ஆத்திரத்தை தளரவைத்தது.

இருசக்கரவாகனத்தை நிறுத்தியவுடன் எல்லோரும் திரும்பிப்பார்த்தார்கள். நெடுநாள் பேசாமல் இருந்த நண்பனின் வீட்டுக்குள் போவதைப்போல கூச்சத்தோடு நடந்து போனான் கருப்பசாமி. காடுமுழுக்க விரவிக்கிடந்த வெயில் இனித்தது. குழந்தைகள் ஓடிப்போய் வண்டிமேல் ஏறி உட்கார்ந்து விளையாட ஆரம்பித்ததுகள்.அந்தக்கூட்டத்துக்குள்ளேதான் கருப்பசாமியின் பழய்ய நாட்கள் கிடந்தது. முருகேசச்சித்தப்பன் வந்து பையை வாங்கிக் கொண்டார்.பீடத்தைச்சுற்றி சாணி தெளிக்கப்பட்டிருந்தது.இலையில் தேங்காபழங்களை அடுக்கிவைத்துக் கொண்டிருந்த சாமிகொண்டாடி மோகன் ’பந்தல்ல ஒக்காருண்ணே, மயினி நீங்களும் போங்க’ என்றான். பொங்கல் சட்டியில் உலை கொதித்துக்கொண்டிருந்தது. ஆரிட்டாச்சித்திதான் பச்சரிசியை அரித்துக்கொண்டிருந்தாள். சட்டியை ஒருக்களித்து வைத்துக்கொண்டு அரைசி அரிப்பது அந்த லாவகத்தோடு பேசும் ஆரிட்டாச்சித்தி ஏ அரிசி வேணுமா என்று கேட்டாள்.நனைஞ்ச அரிசி திங்க எச்சிலூறியது.அரிசி,தேங்காச்சில்,வெல்லக்கட்டி சேத்து திங்கக்கொடுத்து வைக்கணும்.

பொங்கிய பொங்கலோடு குலவைச்சத்தம் காடெங்கும் ஒலித்தது.மோகன் தேங்காயை உடைத்தான்.சாம்பிராணி பத்தி சூடம்  கணத்தது. ஆளாளுக்கு அருள்வந்து சாமியாடினார்கள்.ஆரிட்டாச்சித்தி காடே அதிரும்படி கனைத்துக் கொண்டு திடீரெனக்கீழே விழுந்தாள்.எழுந்து சங்கு சங்கெனக்குதித்தாள். எல்லோருக்கும் திண்ணீறு போட்டாள். கூப்பிடு அவனை என்றாள்.கருப்பசாமி அருகே போனான் அவளுக்கு உடல் கூடுதலாய்க்குலுங்கியது.மார்புக்கு குறுக்கே இருந்த கருப்பாசாமியின் கையைப் பிடித்துக்கொண்டாள். நான் சொன்னதெல்லாம் செஞ்சயா எங்கடா பூசுபொடியென்றாள். கோதைநாச்சியார் புரத்தில் பாவாடை சட்டையோடு அலைந்த போதும் கருப்பசாமியிடம் பூசு பொடிதான் கேட்பாள். கருப்பசாமியின் கண்கள் திரண்டது. அவன் ஆத்திகனாகிக்கொண்டிருந்தான்.

22.10.09

அன்றாடங்களின் அலட்சியத்தை கவனப்படுத்தும் பேரா.தொப வின் - '' தெய்வம் என்பதோர் ''

சிந்துபாத் கதைகள் படிக்கத் தொடங்கிய போது, செய்திகளும் சினிமாவும் கூட அந்நியமாக இருந்தது. படக்கதைகள் படிக்கிற காலத்தில் சிறுகதைகளில் நாட்டமில்லை. சினிமாவின் கதாநாயகிகள் கனவுகளை ஆக்ரமித்தபோது எல்லாமே அயற்சியளிக்கிற விடயங்காளாக இருந்தது. சிறுகதைகளும் சாண்டில்யனும் படிக்கத்துவங்கிய காலத்தில் கட்டுரைகளின் ஒரு வரியைக்கூடக் கடக்க முடியாமல் போனது, அது சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதுவேறு இதிகாசம் ஆவணப் படத்துக்காக சென்னை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, பத்தமடை, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, மதுரை என அலைந்த காலத்தில் ஒரு நான்கு பேருடைய பேட்டி பல அடர்த்தியான அதிர்வுகளை உண்டாக்கியது. பஞ்சாயத்துராஜ் மற்றும் ஜனநாயகத்தேர்தல்கள் குறித்த ஆய்வாளர் பேரா.க.பழனித்துரை. வரலாற்று ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். நாட்டார் தெய்வங்கள்குறித்த ஆய்வாளர் தொ.பரமசிவன். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்.


ஆவணப்படத்தில் ஐந்து நிமிடம் பத்து நிமிடம் மட்டுமே வெளியான இவர்களின் மூலப் பேட்டிகள் ஒவ்வொன்றும் குறைந்தது இரண்டு மணிநேர நீளமனவை. தனித்தனியே ஒரு புத்தகமாக விரியும் தன்மை கொண்ட ஒலிவடிவக் கட்டுரைகள் அவை.நமது அன்றாடங்களில் எதிர்ப்படும், கேள்வியற்றுக் கடந்துபோகும் பல சின்னச் சின்ன நடைமுறைகள் மீது கவனத்தைத் திருப்பும் வல்லமை கொண்ட பேச்சுக்கள்.


பாளயங்கோட்டையிலுள்ள பேராசிரியர்.தொபரமசிவன் வீட்டுக்கு தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களோடு படப்பிடிப்புக்குழுவினர் போனோம். படப்பிடிப்புக் குழு என்பது வெறும் மூன்று அல்லது நான்கு பேர்தான். நான், மாது, தம்பி ப்ரியாகார்த்தி எப்போதாவது ஒரு துணை ஒளிப்பதிவாளர் வருவார். பேரா.தொப வின் வீட்டுக் கொல்லையில் அந்த அரை நெல்லிக்காய் மரத்தடியில் விழுந்துகிடந்த நெல்லிக்கனிகளை எடுத்துச்சுவைத்த படி பேட்டி துவங்கியது. ஒரு திண்ணைப் பேச்சுப்போல, ஒரு நண்பர் சந்திப்புப் போல துவங்கிய பேச்சுதான், எங்களது பேட்டி. ஸ்டார்ட் காமிரா, ஆக்சன், கட் என்னும் வார்த்தைகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டதாகவே எங்களின் நான்கு ஆவணப்படமும் தயாரிக்கப்பட்டது என்பது சற்று வியப்பான விஷயம்.


பேராசிரியரின் பேட்டியை உடனிருந்து கேட்ட எனக்கு அவரது புத்த்கங்கள் வாங்கிப்படிக்க வேண்டுமென்கிற ஆவலைத் தூண்டியது. பேராசிரியர் தொப. அவர்களின் பண்பாட்டு அசைவுகள், மற்றும் தெய்வம் என்பதோர் எனும் இரண்டு புத்தகங்கள் ஆய்வுலகில் அலாதியானவை. படிக்கிற போது வாசகனை மிரட்டுகிற வார்த்தைகளோ மேற்கோள்களோ இல்லாமல் நமது அன்றாடப் புழக்கங்களில் இருந்தே எல்லாவற்றையும் ஆராயத் தந்துள்ளார். தோழர் தமிழ்ச்செல்வன் சொல்வது போல ஆற்றங்கறையில்,கிணற்றடியில்,சாவு வீட்டு முற்றத்தில் என தமிழ் மண்ணின் புழுதிபடிந்த வார்த்தைகளில் இருக்கிறது அவரதுதெய்வம் என்பதோர் புத்தகம். ஒரு பேராசிரியர் பாடப்புத்தகத்தின் தூக்கம் வரவைக்கும் சொற்களற்ற மொழியில்,வழியில் புத்தகம் தருவது இன்னும் சிலாக்கியமானது.


இருக்கங்குடி மாரி, நெல்லைப்பகுதி பேச்சி, சுடலைமாடன், செல்லியம்மன், துரௌபதியம்மன் என்கிற கிராமக் கோடியில் வருசம் முழுக்க கேட்பாரற்றுக் கிடக்கிற நாட்டார் தெய்வங்கள் உருவான கதைகள் தொடங்கி, அவற்றிற்கிருக்கும் ஒரு நாள் மரியாதை குறித்தும் பேசுகிறார். அப்போது நமது வீட்டுப் பெரியவர் ஒருவர் நமது கையைப்பிடித்து கூட்டிக் கொண்டுபோய் ஒவ்வொரு நாட்டார் கோவிலாக அர்த்தத்தோடு சுற்றிக்காண்பிக்கிற உணர்வு ஏற்படுகிறது. பெருந் தெய்வங்கள் குறித்த ஒப்பீடுகள் வாசக மனதில் கேள்விகளை விவாதங்களைத் துவக்கி வைக்கிறது. வெறுமனே நீலிக்கண்ணீர் என்னும் ஒரு சொல் நமது புழக்கத்தில்கடந்து போகக் காண்கிறோம். அதற்குப் பின்னாள் இருக்கும் ஒரு கதையைச் சொல்லி வியக்கவைக்கிறார். பொங்கல் முடிந்த மறுநாள் வெகுமக்களோடு கறைந்து சித்தப்பா, மாமா அண்ணனாகி கூலிக்குப் போகும் நாட்டார் தெய்வப் பூசாரிகளையும், பெருந்தெய்வக் கோவில்களில் இருப்பவர்கள் அதை ஒரு அதிகாரமாக்கிக் கொள்வதையும் ஒப்பிடுகிறார். வள்ளலாரும் பங்காரு அடிகளாரும் பேசப்படுகிறார்கள். நாகூர், நாகப்பட்டினம், சமயபுரம் மூன்று கோவில்களுக்கும் ஒரே நபர் பயபக்தியோடு நுழைய முடிகிற மனநிலை எப்படி உருவானது என விவரிக்கிறார். தந்தை பெரியாரின் முரட்டு நாத்திகமும், ஆலய நுழைவுப் போராட்டமும் உண்டாக்கும் முரண்பாட்டையும் அதிலிருந்து எழும் கேள்விகளுக்கும் விளக்கம் தருகிறார் பேராசிரியர். தொ.ப.


நம்மைச் சுற்றிக் கிடக்கும் இந்த வாழ்கையின் மேலிருக்கிற அலட்சியத்தை இடை நிறுத்தி கவனப்படுத்தும் இந்த நூல். எல்லாவற்றையும் சம மரியாதையோடு பார்க்கக் கற்றுக் கொடுக்கும் அது தெய்வங்களுக்குக் கூட மனிதன் கொடுக்கிற கொடையாக மாறும் .


" தெய்வம் என்பதோர் "

யாதுமாகி பதிப்பகம்,
பாளையங்கோட்டை,
நெல்லை. 2

18.9.09

நாட்டுப் பொங்கலும், மாரியம்மன் தூதுவனும்.








மாசி மாசத்திலொருநாள் பொங்கல்சாட்டு நடக்கும் அஞ்சக்கிழவன், செவனிப்பெரியம்மை, பூமணிப்பாட்டியும் இன்னும் சில சாமியடிகளும் பிராதானமானவர்களாக இருப்பார்கள். அஞ்சக்கிழவன் தான் பெரிய சாமி அதாவது மாரியம்மா. அவன் ஆறடி பீரோவை நகர்த்தியது போல கணத்த சரீரத்தோடு சட்டையில்லாமல் தான் நடந்து வருவான். செவனிமேலே பேச்சியும், பூமணிப்பாட்டி மேல் வடக்கத்தியம்மனும் இறங்குவார்கள். பூமணிக்கிழவி நோஞ்சான், காலும் அவள் நினைவின் வேகத்துக்கு ஈடு கொடுக்காத சவட்டைக்கால். அதனால் அருள் வருகிற நேரம் மட்டும் கொஞ்சம் உடம்பை முறுக்கி, சத்தம் கொடுத்து, உஸ்ஸெனச் சொல்லுவாள். அப்புறம் சும்மா வளப்பாடுமாதிரி ஒரு கையில் வேப்பங்கொலை வைத்துக்கொண்டபடி நடந்து வருவாள்.

செவனிக்கு மெயின் டூட்டி பேச்சியம்மாதான் என்றாலும் பொங்கச் சாட்டுகிற அன்று மட்டும் சுடலை மாடனையும் சேர்த்து அடிசனல் டூட்டி பார்க்கவேண்டும். சில நேரம் அனுமஞ்சாமியும் வரும். ரெண்டு கழுதையுந் துடியானதுக. வந்து இறங்கினால் தங்கு தங்குன்னு குதிப்பான் சாட்டை எடுத்து மடேர் மடேரென்று அடிப்பான், பொத்தென்று கீழே விழுவான், ஈசானா மூலையைப் பார்த்து வெடியோசையில் சிரிப்பான். இந்த நடைமுறைகளை அஞ்சக்கிழவனும், பூமணிப்பாட்டியும் செய்ய முடியதாகையால் செவனிக்கிழவி தான் அதற்குப் பொருத்தமானவள். களத்தை அதகளப்படுதுவாள் ஆடும்போது தூசி பறக்கும். பெரிய அருவாளைப் பிடிக்கச்சொல்லி கூர் முனையில் ஏறி நிற்பாள். நாக்குத்துருத்தியபடி கிளம்பும் அவளது ரௌத்ரம் பார்க்கும் போது சுற்றி நிற்பவர்கள் யாருக்கும் கிலிபிடிக்கும். மூச்சுவிடக்கூடாது, விடமாட்டார்கள். பயம். அவள்தான் அந்த வருசத்தில் நடந்த ஊருக்கு ஒவ்வாத, கெட்ட காரியங்களைப் பட்டியலிடுவாள். அதில் ஊர்நாட்டாமை செய்த தவறுகள் சொல்லமாட்டாள்.

ஊர்த்தங்கிலியான் ஒட்டுமொத்த பட்டியலுக்கும் தானே பிரதிநிதியாக வந்து மன்னிப்புகோருவார். மனிப்புகிடைத்த பின்னே நாள் குறிக்கப்படும். பங்குனி மாச முழுநிலவு நாளன்று திருநாள். அதுவரை ஊர்மடத்தில் சீட்டாடிக்கிடந்த ஆண்கள் விரட்டப்பட்டு வேலைகளுக்கு போவார்கள். வேலி விறகுவெட்டி காயப்போடுவர்கள். சேர்த்துவைத்த நெல்லை அவித்து காயப்போடுவார்கள். தினையெடுத்து உமிக்குத்தி வைப்பார்கள். மாவிடிக்க கருப்பட்டி வாங்கக்காசு சேரும் வரை தினையரிசி பானையில் காத்துக்கிடக்கும். சொந்தஞ் சுறுத்துகளுக்குச் சொல்லியனுப்புவார்கள். இந்த தடவையாவது எனக்கு நைலக்ஸ் சேலை எடுக்கனும் என்று வீட்டுக்குள்ளும், பாளையங்கோட்டை கரகாட்டம்தா இந்த தரவ என்று ஊர்மடத்திலும் கோரிக்கைகள் வைக்கப்படும். எளவட்டங்களுக்குள் இன்னொரு வகையான பொங்கலும் நடக்கும்.

ஒரு முறை சொக்கலால் பீடியால் ஒரு பொங்கலே நின்று போக இருந்தது. அஞ்சக்கிழவனுக்கு அத்தனை லாகிரியும் உண்டு.வெத்திலை போடுவான். ஞாயித்துக்கிழமையானல் கறிஎடுத்து தானே வதக்கி சாராயம்குடிப்பான். சில நாள் இட்லிக்கடை பொன்னம்மாவீட்டில் இட்லி திங்கிற சாக்கில் காலநேரம் போவது தெரியாமல் பேசிக்கிடப்பான். அவர்களிருவரும் பேச்சில்நிகழையும், மௌனத்தில் கடந்தவற்றையுமாக காலங்களை அசைபோட்டபடி பொழுது கடத்துவார்கள்.
இப்படிப்பட்ட மனுசனுக்கு ஒரு மாசம் எல்லாவற்றையும் ஒத்திவைப்பது சிரமமானது. இருந்தும் எல்லாவற்றையும் எடுத்துப்பரணில் பதுக்கி வைத்துவிட்டு. மாரியைத்தலையில் வைத்துக்கொள்வான். ஒரு நான்கு நாள் ஊர்சுற்ற வேண்டும்.ராத்திரியில் பக்கத்து ஊர்களுக்கு போய் தானியம் தவசங்களைக் காணிக்கை பெற்றுக்கொண்டுவந்து சேர்க்கவேண்டும். நடு இரவுகளில் தூக்கம் கலைக்க அங்காங்கே கொடுக்கும் வரக்கப்பி போதாது சொக்கலால் பீடியும் வேனும்.

இது பின்னாட்களில் வைதீகப் பிரச்சினையாகி, மூத்த சாமி சுத்தக்கொறச்சலா இருக்கப்படாது என்று விழாக் குழுவின் தீர்ப்பானது. மகனா கடமையா என்று எஸ்பி சௌத்ரிக்கு வந்தது போல " பீடியா சாமியா" அஞ்சக் கிழவனுக்கும் ஒரு பிரச்சினை வந்தது. ரொம்பச் சுளுவாக பீடிப்பக்கம் சாய்ந்துகொண்டான் எங்க தாத்தன் அஞ்சன். அப்போது கூட செவனிக்கிழவிக்கு அருள் வந்து குடுகுடுன்னு கொடமானம் கொடுத்தாள். " ஒரு வருச லொம்பலத்த மறக்க இந்தச் சனங்களுக்கு பொங்கல் தானப்பா லவிச்சிருக்கு, இதையு ஒங்க நொரநாட்டியத்துக்காக கலைச்சு உட்டுட்டாசனம் கிறுக்குப்பிடிச்சி அலயப்போது, பெரிய்ய கட்டுசெட்டு நொட்டுன கட்டு செட்டு " என்று சொடலையாகிச் சொன்னது ரொம்பச்சரி யெனப்பட்டது. மாரியம்மா இப்போல்லாம் பீடியை ஒளிவு மறைவில்லாமல் சாமிகுடிக்கும்.

மூன்று சாமியாடிகளும் ஒரு மாதத்துக்கு பயபக்தியோடு திரிவார்கள். மாசி மாசக்கடைசியில் மூனுநாள் காணாமல் போகும் அஞ்சத்தாத்தன் பங்குனி முழுக்க தாஞ்சோடி பாக்கியப்பாட்டி வீட்டு முத்தத்திலே நின்னு பேசிட்டுத் திரும்ப வந்திரும். நித்தக்குளியல், சுத்தபத்தம், தனிக்கும்பா கருவாடு, கறிச்சேக்க மாட்டார்கள். ஊருக்குள்ளும் யாரும் கறித்திங்க மாட்டார்கள். பன்னிக் குடிசைமாதிரி இருக்கும் அந்த மாரியம்மன் கோவிலுக்கு வெள்ளையடிக்க மூனு வாளிச் சுண்ணாம்பு போதும். ஆனால் அதற்காக நடக்கும் அலும்பலிருக்கிறதே அதுதான் கூத்து. என்னமோ அரம்மனைக்குப் பெயிண்டடிக்கப் போவது போல பாவனைகாட்டுவார் அஞ்சத் தாத்தா.
பொங்கல் முடிந்து வரவு செலவு காட்டும்போது " சாத்தூரூக்குப் பேய்" வந்த செலவு என்று கணக்கெழுதித் தருவார். ' சாத்தூருக்குப் பேய் வந்தா ' அத விரட்டுற செலவு சாத்தூர் நாட்டாமைக்குத் தானே ? என்று பெரியசாமிக் கிழவன் கேட்டதும் சனம் கொல்லெனச் சிரிக்கும். 'கணக்கச் சரியானு பாரு மூதி, பெரிய்ய நக்கீரப் பூலழு, குத்தங் கண்டுபிடிக்க வந்துட்டான்' அவருஞ் சிரித்துக்கொள்வார்.