Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

29.7.12

bread and tulips - (இத்தாலியப்படம்) வசீகரிக்கும் முதிர்காதல்.


ஞாயிற்றுக்கிழமைகளை அர்த்தமுள்ளதாக்க மிகப்பெரும் முயற்சிகள் தேவையற்றுப் போகிறது. மிகச்சாதாரண நிகழ்வுகளும்,சம்பாஷனைகளும் அந்தநாளை இனிதாக்கிவிடும். பயணக்களைப்பில் படுத்துக்கொண்டே  தொலைக் காட்சி பார்க்கிற சோம்பேறி நிமிடங்களை நிமிர்த்தி வைத்து,அதற்குள்ளேயே இழுத்துக்கொண்டு போய் அமிழ்த்தி விட்டது இன்றைய சினிமா.bread and tulips என்கிற இத்தாலிப்படம் அது. வெறும் பத்து அல்லது பனிரெண்டே கதாபாத்திரங்கள். அவர்களு டனான உறவுகள், உணர்வுகள் இவை அணைத்தையும் பார்வையாளர்கள் மேல் பாய்ச்சமுடிந்திருக் கிறது அந்த இயக்குனரால்.

விடுமுறையைக்கழிக்க பேருந்தில் பயணமாகும் ஒரு குடும்பம் ஓரிடத்தில் அந்தக்குடும்பத்தின்  பிரதானப் பெண்ணை மறந்துவிட்டு பயணத்தைத் தொடர்கிறது. இரண்டு மணிநேரங்களுக்கு மேலாகியும் கணவனோ குழந்தைகளோ அவளைத்தேடி திரும்ப வராததால் பேதலித்துப் போகிறாள். தெரியாத இடம் மீண்டும் எப்படி வீடுபோவோம் என்று அல்ல. எப்படி மொத்தக்குடும்பமும் தன்னை மறந்து போனது என்கிற சிந்தனையில் குழம்பி, தன்னைத்தானே தொலைத்துக்கொள்கிறாள்.அந்த விடுமுறையைத் தனியேகழிக்க விரும்புகிறாள். தன் வாழ்நாளில் ஒருதரமாவது பார்த்துவிட ஏங்கிய வெனிஸ் நகருக்கு போகிறாள் ரோசல்பா.

வெனிஸ் நகரின் மார்க்கபோலோ விடுதியில் தொடர்ந்து தங்கமுடியாத அளவுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படுகிறது. அந்த விடுதியின் சேவகர் பெர்னாண்டோவிடம் உதவி கேட்கிறாள்.பெர்னாண்டோ தனது அறையில் தங்க இடம் அளிக்கிறான். பக்கத்து அறையில் தங்கியிருக்கும் மஸாஜ் மற்றும் அழகு கலை நடத்தும்  க்ராஸி யாவுடன் நட்புக்கொள்கிறாள்.சாப்பாட்டுக்கு துலிப் மலர்கள் விற்கும் ஒரு கடையில்  வேலைக்குச் சேர்கிறாள்.
ஒவ்வொரு நாளும் அறைக்குத் திரும்பும்போது கொஞ்சம் உணவும், துலிப் மலர்கள் மீது செருகப் பட்ட ஒரு கடிதமும் காத்திருக்கிறது. அதை வைத்து விட்டு அங்கிருந்து போய்விடும் எப்போதும் வருத்தம் தோய்ந்த முகத்தோடு அலையும்  பெர்னாண்டோவை அறிந்துகொள்கிற ஆர்வம் மேலிடுகிறது அவளுக்கு. அவன் வாசித்துவிட்டு அடுக்கி வைத்திருக்கிற புத்தகங்கள் அவன்மீது லயிப்பை உண்டாக்குகிறது. அவனது அறையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அக்கார்டியன் வாத்தியம் பெர்னாண்டோ மீது கூடுதல் ஈர்ர்ப்பை உண்டாக்கு கிறது. அந்த அக்கார்டியனை இசைத்து பக்கத்து அறை சிநேகிதியை சிலாகிக்கச்செய்கிறாள். அவனைப்பின் தொடர்கிறாள். ஊருக்குள் அவனது மகளும் பேரனும் இருப்பதை அறிகிறாள்.அவர்களோடு சேர்ந்து பேரனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள்.

கணவனின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் சிப்பந்தியை உளவுக்கு அமர்த்தி ரோசல்பாவை வெனிஸ் நகர் முழுக்கத் தேடச்சொல்லுகிறான்.அவனிடம் இருந்து தப்பிக்க நடன விடுதிக்குப் போகிறார்கள் ரோசல்பாவும், பெர்னாண்டோவும்.அங்கே அவளுக்குச்சில கவிதைகள் சொல்லுகிறான், பின்னர் இருவரும் நடனமாடு கிறார்கள்.விடுதியைத்தேடிக்ககண்டுபிடிக்கிற உளவாளி,ரோசல்பாவின் சிநேகிதி க்ராசியாவுடன் உறவுகொள் கிறான். பின்னர் உளவு வேலையை உதறிவிட்டு அங்கேயே தங்கிவிடுகிறான். ஊரில் தனது மகன் போதைக்கு அடிமையாகி,பள்ளியில் இருந்து இடைநின்று போவதை அறிந்து வேண்டாவெறுப்புடன் ஊருக்குத் திரும்புகிறாள். அன்றிரவு மிகுந்த எதிர்பார்ப்புடன் படுக்கைக்கு செல்லுகிற ரோசல்பாவை கண்டு கொள்ளாமல் தூங்கி விடும் கணவனை எழுப்பி பேசுகிறாள். இனி நமக்குள் ஒன்றுமில்லை என்று சொல்லித் தூங்கிவிடுகிறான்.

வெனிசில் ரோசல்பாவை நினைத்துக்கொண்டே உருகிப்போகிற பெர்னாண்டோ அவலைத்தேடி போகிறான். மீண்டும் ஒரு முறை தன்னோடு நடனமாட அழைக்கிறான்.இருவரும் காதலாகி நடனமாடுகிறார்கள்.மிகச்சாதார ணமாக ஆரம்பிக்கிற இந்தப்படத்தில் பரபரப்பு,சண்டை,குரோதம்,திகில்,சஸ்பென்ஸ் என எதுவுமில்லை.அதுமட்டு மல்ல மையக்கதாபாத்திரங்கள் யாரும் இளையவர் இல்லை.ரோசல்பாவாக நடிக்கும் லிசியாமாக்லியட்டாவும், பெர்னாண்டோவாக நடிக்கும் கான்ஸும் நடுவயதுக்காரர்கள்.தவிரவும் படம் முழுக்க ஆங்கில பாணியிலான காதல் காட்சிகள் ஏதும் இல்லை.

ஆனால்

படம் முழுக்க நகர விடாமல் நம்மை ஈர்க்கிற மெலிதான புல்லாங்குழல் இசைபோல காதல் கதை நெய்யப் பட்டிருக்கிறது. சிறுபிராயத்தில் நம்மை வசீகரித்த மூன்றாம் வகுப்பு கனகசுந்தரி டீச்சர்,அடுத்த தெருவுக்கு வாக்கப்பட்டு வந்த மல்லிகா மதினி,மூன்றுவருடம் சிவகாசிப்பேருந்துப்பயணத்தில் முன்னிருக்கையில் அமர்ந்து வந்த  மின்சார வாரிய தமயந்தி மேடம். இப்படி நினைவுகளின் நிலைத்துப்போன முகங்களின் முதிர்ந்த பிம்பமாய் வருகிறது லிசியா மாக்லியட்டாவின் வசீகரமுகம். சிரிக்கிற காந்தக்கண்களும் அவரது பாவனைகளும் பார்வையாளர்களைக் கட்டி இழுத்துக்கொண்டு போகிறது. நீர் சூழ்ந்த அந்த அழகிய வெனிஸ் நகர வீதியெங்கும் சுழன்று சுழன்று போய் நடனத்துடனான இறுதி முத்தத்தில் ஜொலிக்கிறது. கனிந்து விழுந்த பழத்தின் வாசனையோடும் ருசியோடும் காதல் சொல்லப்பட்டிருக்கிறது.

11.3.12

தோனியின் கேள்விகள் முன்வைக்கிற நம்பிக்கை.

ஒரே சுற்றுச் சுவருக்குள் இருக்கும் இரண்டு தியேட்டர்களில் அரவானும்,தோனியும்  திரையிடப்பட்டுக்  கொண் டிருக்கிறது. அரவான் பார்த்துவிடலாம் என்று சொல்லும்போது பதறிப்போய் வேண்டாம் என்று என் கையைப் பிடித்துக்கொண்டார் தேனிப் பக்கத்து ஊர்க்காரர் இளைஞர் ஒருவர்.படம் வெளியாகுமுன்னமே அரவான் க்ரூப்ஸ் னு போஸ்ட்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க சார் என்று கலக்கத்துடன் கூறினார்.ஒரு கலைப் படைப்பை, ஒரு கலை ஞனை சாயம் பூசி அழகுபார்ப்பது வேதனை மிகுந்த அருவருப்பாகும். எனவே சாவகாசமாய்  பார்த்துக் கொள்ளலாம் என்று தோனியைத் தேர்ந்தெடுத்தோம். காலம் கடந்து விமர்சனம் . ஆனாலும் இது விமர்சனம் இல்லை. சும்மா பார்த்த திரைப்படத்தை  சிலாகிப் பதுதான். இந்த சிலாகிப்பு எல்லோருக்கும் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதுதான் உலகம் அவரவர் ரசனை வேறுவேறாய் கிடக்கிறது. எனினும் சமூகம் சார்ந்த சிந்தனை வயப்படுகிறவர்கள் காலம் கடந்தும் நிற்கவே நிற்பார்கள். பிரகாஷ்ராஜ் நிற்பார்.

திரைத் துறையில் இருந்துகொண்டு இப்படி ஒரு கலகக் குரலைப் பதிவு செய்ய துணிச்சல் தேவை. அது நூறு கோடி இரு நூறுகோடி பணம் முதலீடு செய்கிற மசாலாத் துணிச்சலை விட கோடி மடங்கு பெரியது. கல்வி வியாபாரமாகிற கொடுமையை ஒரு முப்பதாண்டுகளுக்கும் மேலாக இடதுசாரி இயக்கங்கள் தெருத்தெருவாய் புலம்பிக்கொண்டிருக்கின்றன. அந்தப் புலம்பல்களை போட்டி என்கிற இரைச்சல் ஓரங்கட்டி விட்டது. அந்தோ.. இன்று கல்வி பொது விநியோகத்திடமிருந்து பறிக்கப்பட்டு கார்ப்பரேட் ....... கையில்  சிக்கிக்கொண் டிருக்கிறது. முதலில் சென்னை போன்ற பெருநகரங்களில் விதைக்கப்பட்ட விஷச்செடி தமிழகம் முழுக்க நீக்கமற வியாபித்துவிட்டது.

மூட்டை கட்டிக்கொண்டு போனால் ஒழிய உயர்கல்வி கற்க வேறு முகாந்திரமே இல்லை என்றாகிப்போன சூழல் இருக்கிறது. மண்ணெண்ணய் விளக்கிலும்,தெருவிளக்கிலும் படித்தவர்கள் மாவட்ட ஆட்சியாளராகினார்கள்  என் கிற செய்திகளால் பெருமிதப்பட்ட காலம் ஒன்றிருந்தது.அது வறிய மக்களின் கல்விக் கனவின்மீது திடமான வெளிச்சம் பாய்ச்சியகாலம். அதெல்லாம் இப்போது  மலை யேறிப்போய்  ஒரு லஞ்சம் வாங்காத அரசாங்க ஊழியன் கூட உயர்கல்வி குறித்து யோசிக்கமுடியாத சூழல் வந்து விட்டது. அப்படிப்பட்ட ஒரு பத்திரப் பதிவு அலுவலக குமாஸ்தாவின் குமுறலாய் கிளம்புகிறது தோனி.  ஒவ்வொரு ப்ரேமிலும் பெற்றோர்களின் மனசாட்சியை உலுப்பி விட்டுச் செல்கிறது படம்.

புறச் சமூகம் தனது குழந்தைகள் குறித்து விசாரிக்கிற கேள்விகளால் கூனிக்குறுகிப் போகிற பெற்றோர்களின் பிரதிநிதியாய் பிரகாஷ்ராஜ் தனித்து நிற்கிறார்.பந்தியில் அருகே அமர்ந்திருப்பவர் கேட்கிற கேள்விகளுக்கு அளக்கிற பெருமிதப் பொய்யும், கல்வி நிறுவன அதிபரிடம் தனது மகன் கட்டாயம் அதிக மதிப்பெண் வாங்கு வான் என்று சொல்லுவது, அதனால் வருகிற ஆதங்கத்தை மகனிடம் காட்டுகிற கோபமும் துல்லியமான செதுக்கல். பிரகாஷ்ராஜிடம் அடிவாங்குகிற ஒவ்வொரு அடியிலும் தனது அபிமானத்தை தளரவிடாத பந்தாய் திரும்புகிறது அந்தச் சிறுவனின்  நடிப்பு. கோமாவினால் படுத்த படுக்கையாய் கிடக்கிற போது நிலைகுத்தி நிற்கிற அவனது கண்கள் எல்லோரது கண்களிலும் நீரைக்கொட்டச்செய்யும்.

அடுக்குமாடியில் குடியிருக்கும் மக்களுக்கிடையே ஊடுறுவிக்கிடக்கும் பந்தம் மேலோட்டமாக இருந்தாலும் இந்த ஜாதிய திரட்டல் யுகத்தில் இன்னும் அழுத்தமாக சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. குடும்பத்துக்காக அரசியல்வாதியின் சின்ன வீடாகிற நளினியின் மீது காட்டுகிற வெறுப்பு,கந்து வட்டிக்கு கொடுக்கிற கனிபாயின் கறார்தன்மை மீது காட்சிப் படுத்தப்படுகிற வெறுப்பு,மதிப்பெண் வாங்கமுடியாத மகன் மேல் கவிழ்ந்திருக்கும் கோபம்  எல்லாமதிப்பீடுகளும் உடைந்து அன்பாகத் திரும்புகிற நெகிழ்ச்சி அழகு. எல்லோருக் குள்ளும்  மனிதா பிமானம்  ஒளிந்து கிடப்பதையும் எல்லோருக்குள்ளும் தனித்திறமை ஒளிந்து கிடப்பதையும் நம்பிக்கையோடு முன்வைக்கிறது தோனி.அதே நேரம் கல்விக்கொள்கை,புரையோடிக்கிடக்கும் லஞ்சம் இவற்றைச்சொல்லுகிறேன் பேர்வழி என்று இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் கோபத்தைத் திசை திருப்பாத நேர்மை இருக்கிறது இந்தப்படைப்பில்.

சமூக மாற்றங்கள் சினிமாக் கதாநாயகர்களால் மட்டுமே வரும் என்கிற மூடநம்பிக்கையையும், காதல் 100 சதவீதம் சுத்தமானதும் டூயட் பாடுவதாலும் என்கிற முரணான மூட நம்பிக்கையையும் ஜஸ்ட்லைக்தட்  ஒதுக்கி விட்டு  இயல்பாக நகர்கிறது. பின்னணி இசை படம் முழுக்க பிரகாஷ்ராஜுடன் கை கோர்த்துக் கொண்டு  வரு கிறது. நிழலாகப்படகோட்டி விளையாண்ட காலம்போய் பாடல் வீட்டுக்கு வந்த பிறகும் பின்னாடி நிழலாகத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

5.2.12

சூழ்ச்சியால் பேசப்படாது போன - அவள் அப்படித்தான்.

இன்று அதிகாலை ஐந்துமணிக்கு ஒரு உள்ளூர் கேபிள் மூலமாக கருப்பு வெள்ளை படங்களில் இருந்து  பாடல் கள் ஒலி_ஒளி பரப்பினார்கள். கடவுள் அமைத்துவைத்த மேடை,கம்பன் ஏமாந்தான்,பன்னீர்புஷ்பங்களே என மிக மிக நெருக்கமான பாடல்களாக இருந்தது. எழுபது  எண்பதுகளின் பாடல்கள். எல்லாமே என் கல்லூரிக்  காலங் களின் பாடல்கள். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் பாடல்கள். ஆனால் அது முழுக்க  கமல காசனின் படங்களாக இருந்ததால் கமலகாசனின் பாடல்கள் என்றுதான்  தமிழ்ச் சினிமா சொல்லும்.

முன்னாடி  கமலகாசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது அபூர்வராகங்கள் மற்றும் நிழல் நிஜமாகிறது ஆகிய இரண்டு படங்களால் சிவாஜியிலிருந்து கமலுக்கு உருமாற்றமான ரசனை. இரண்டிலும் ஒரு அசல் கோபக்கார  இளை ஞனாக சித்தரிக்கப் பட்டிருப்பார் கமல். பிற்பாடு அந்த ரசனையை ரஜினிக்கு  மாற்றிக் கொண்டேன் காரணம் இன்னும் அடர்த்தியான கோபம் அவரிடமிருந்து வெளியானதாக நான் நம்பியதால் வந்த வினை இது.

இதெற்கெலாம் சிவாஜியோ,ரஜினியோ,கமலோ காரணமில்லை அதன் இயக்குனர் தான் என்பதை அறிந்த போது எனக்கு அவள் அப்படித்தான் என்கிற படமும் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்கிற படமும் மிக மிக  நெருக் கமான படமாகத் தெரிந்தது. இந்த இரண்டில் அவள் அப்படித்தான் படத்தை குறிப்பிட்டுச்சொல்லியே தீரவேண்டும். தமிழ் இலக்கியச் சூழலில் சில எழுத்தும் எழுத்தாளர்களும்  கவனிக்கப் படாமல் போனது போல அவள்  அப்படித் தான் படமும் கவனிக்கப்படாமல் போனது. அதே காலத்தில் வெளியான பாரதிராஜாவின் படங்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கான தூண்டுகோலாக சித்தரிக்கப்பட்டது. ஆனால் நிஜத்தில் அவற்றில் பெண்கள் பெண்ணடிமைக் கலாச்சாரத்தைத் தூக்கிபிடிக்கும் பழய்ய பதுமைகளாகவே முன்னிருத்தப்பட்டார்கள். அவள் அப்படித்தான் அப்படி யில்லை.

1980 ஆம் வருஷம் சாத்தூர் தனலட்சுமி தியேட்டரில் திரையிடப் பட்டது. அப்பொழுதெல்லாம் சினிமா சகலரையும் விழுங்கும் ஒரு ராட்சஷ பொழுது போக்காக இருந்தது.புதுப்படம் திரையிடப்பட்ட முதல் நாள் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் வாங்கி அரங்கில் உட்காருகிற தமிழகம் தங்களுக்கான தேவைகள் எல்லாவற்றையும் கண் ணெதிரே பூதாகரமாக ஒளிரும் திரைம் தரும் என்று நம்பினார்கள். இன்னமும் நம்பிக்கொண்டிருக் கிறார்கள். இந்த நம்பிக்கையிலிருந்து  விலகிய இலக்கியம் காலங் காலங் காலமாக தோற்றுப் போய்க்கொண்டே  இருக்கிறது. அவள் அப்படித்தான் படமும் அப்படித்தான். மூன்றே நாட்களில் படத்தைத் தூக்கிவிட்டார்கள். மொத்தம் முன்னூறுபேர் கூடப்பார்த்திருக்க வாய்ப்பில்லை.அந்த மூன்று நாளில் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு மூன்று முறைபார்த்தோம்.

இன்றுவரை தமிழ்ச் சினிமாவுக்கென ஒரு நேர்கோடு  இருக்கிறது. அந்தப்படம் அதற்கு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கிறது.

ஒரு பெண்ணைப்பார்த்தவுடன் காதலிப்பது. ஒரு சீப்பு வாங்கவேண்டுமானால் கூட ஆயிரம் முறை யோசிக்கிற சனம் பார்த்த நொடியில் காதலில் விழு வதான கற்பனை. அப்படியே அவளைப் பூஜிப்பது. அவளது மினுக்கல் களை மட்டும் விஸ்வ ரூபப்  படுத்துவது. அவளிடம் மனது என்கின்ற ஒன்றிருப் பதை லாவகமாக ஒதுக்கித்தள்ளுவது.ஒரு பெண்ணை காதலிப்பது , அதற்கு எதிரான சவால் களை சாதுர் யமாக எதிர் கொள்வது. அவங்கப்பனைக் கொன்றுவிட்டு அவளை  மண முடிப்பது.

கொடுமை.  ஒரு பெண் இந்த உலகத்தில் முதன் முதலில் நெருக்கமாகவும் பிரியமாகவும் இருப்பது தனது தகப்பனிடம் என்கிற அறிவியல் உண்மையை ஹீரோயிசச் சாணியால் மூடி மறைத்த சினிமாக்கள் தான் இன்னும் அறி யாமையிலிருந்து மீள விடாமல் நம்மை அமுக்குகிறது.

அவள் அபபடித்தான் அப்படியில்லை. ஒருமுறைதான் காதல் வரும் எனும் சப்பைச் சிந்தனைகளை. தொட்ட வனையே கட்டிக் கொள்ளவேண்டும் என்கிற அதி பயங்கர சர்வாதிகாரச் சிந்தனைகளை மௌனமான அடியால் நொறுக் குகிற படம் அது. காதலன் காதலி நுனி விரலைத் தொட்டதும் மின்சாரம் பாய்ச்சுகிற கற்பனைகள் இல் லாத படம். ஒரு பெண்ணின் அவயவங்களைத் தொட்டுப்பார்க்க விடலைப் பையனுக்கும் ஆசைவரும்என்பதைச் சொல்லும் படம். அதை ஒரு சின்ன ஷாட்டில் சொல்லுகிற படம். காதலை பூஜை அறை யில் வைக்கிற சரக்காக ஆக்காத படம். ஆகவே அந்தப்படம் மக்களால் பெரி தும் பார்க்கப்படாமல் போனது.

ஆனால் அதிலும் நாம் சொல்லச் சின்னசின்னக் குறைகள் இருக்கிறது  அவளைப் பற்றி பேசுவது ஒரு ஆண் என்கிற குறைதான். அது எதனால் வந்த தென்றால் அதை உருவாக்க ஒரு பெண் இயக்குநர் இல்லை என்பதே. பெண் கள்  தனி யாகச் சினிமாவுக்குப் போகமுடியாத ஒரு மறைமுக தாலிபான் மனோபாவம் இருந்த இருக்கிற யுகத்தில் நாம் பெண் இயக்குநர்களுக்கு எங்கே போக?

பெண் மட்டுமல்ல இந்த சினிமா ஊடகத்தின் வழியே பேசப்படாது போன குரல்கள் ஒரு கோடியிருக்கும்.அதற்கு மேலும் இருக்கும். அந்தக் குரல்கள் தியேட்டர் இருளில், இடைவேளைக் காண்டீன் சலசலப்பில்,கழிப்பறை களில் சிதறிக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறன. அவற்றைப் பேசவிடாமல் குரல் நெறிக்கும் வகையில் வியாபார உத்திகள்,அரசியல் சூழ்சிகள்,தொழில் நுணுக்கங்கள், இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றன. அதனால் கதைகள் வற்றிப்போய் மீண்டும் மீண்டும் கழிசடைக் கருத்துள்ள ரஜினி படங்கள் மறு அவதாரமெடுக்கின்றன ரத்த பீஜன்களைப்போல.

17.10.11

வாகைசூடட்டும் புதுப்புதுக் கதைகள்.



சூட்டோடு சூடாக பார்த்துவிடத் துடித்து முடியாமல் போனது. இந்த இரண்டு வார இடைவெளியில் பார்க்கநேர்ந்த விளம்பரங்கள் உச்சிமண்டையில்  உட்கார்ந்துகொண்டு என்னைப்பார் என்னைப்பார் என்று கெஞ்சியது. சிட்பியா டோனில் அல்லது கேவாக்கலரில்  விளம்பரம் விரிய அது எனது பால்ய நினைவுகளைக் கிளறிவிட்டு விட்டது. மீளக் கிராமத்துக்குள் போகிற போதெல்லாம் பால்யத்தின் நினைவுகள் மட்டுமே நிழலாடமுடியும்.நாங்கள் ஏறி விளையாண்ட உரல்களும் மதில்களும் குள்ளமாகிவிட்டதுப்பொன்ற பிரம்மை உண்டாகும். ஆனால் அவற்றை வேரோடு தோண்டியெடுத்து  காட்சிகளாய்க் கொண்டுவந்து கொட்டியிருக்கிறார் இயக்குனர் சற்குணம்.

சொல்லப்பட்ட கதை நூற்றுக்கு நூறு கொத்தடிமைகளின் கதை. இரவுகளிலும் கூட நிழலென நீளும் அவர்களின் துயரத்தைக்கோடிட்டு மட்டும் காட்டிவிட்டு அந்த துயரத்துக்குள் இருந்து நகர்த்தப்படும் வாழ்க்கையைச் சின்னச் சின்ன சந்தோசங்களாக கோர்த்திருக்கிறார் இயக்குனர். ஒரு கலைப்படத்துக்கு மிக அருகில் நகரும் இந்த திரைப்படம் முந்தைய களவாணிபோல கொண்டாடப் படாததற்கு செங்கல் அறுக்கிற கொத்தடிமைகள் மட்டுமே காரணம்.  விளிம்பு மக்களிலும் ஒருகுறுகிய எண்ணிக்கையில் தமிழகத்தில் வாழும் அவர்களது வாழ்க்கை ஏனைய சமூகத்துக்கு முற்றிலும் அந்நியமானது.  வெறும் உழைப்புச் சுரண்டலோடு நின்று போகிறவராக ஆண்டை  பொன் வண்ணனைக் காண்பித் திருப்பது கொஞ்சம் நழுவல் ரகம். அல்லது முழுக்க முழுக்க குழந்தை உழைப்பை  சுற்றுகிற காரணத்தால்  பொன் வண்ணன் முழுக்கச் செதுக்கப் படாமல் போயிருக்கலாம். ஆயினும் கொத்தடிமைகளின் வாழ்க்கை சொல்லமுடியாத இருள் அடர்ந்தது. அதுவும் அறுபதுகளின் மத்தியில் ஆன காலம் என்பதால் ஆதிக்கம் இன்னும் கூடுதலாகவே இருக்கவாய்ப்பிருக்கிறது.

எங்கள்முதல் ஆவணப்படத்துக்காக கேபிள் குழி தோண்டும் ஒருகுடும்பத்தை ஒருவாரகாலமாக படம் பிடித்தோம். வெறும் பணிரெண்டு நிமிடங்கள் நீடிக்கிற அந்த ஆவணத்துக்கு அவ்வப்போது அவர்களுக்குத்தெரியாமல் படம் பிடித் தோம். ஒருவாரத்துக்குப் பின்னால் அதிலிருக்கிற ஒரு பெண் காணவில்லை.  கேட்டதற்கு,ஊருக்கு (சேலத்துக்கு பக்கத்திலாம்)  போனதாகச்சொன்னார்கள். ஊருக்குப் போகிறேன் என்று சொன்னதற்காக கங்காணி அவளைக் கணவன் முன்னாடியே கன்னத்தில் அடித்தானாம். இது 2005 ஆம் ஆண்டுவாக்கில் நடந்தது. 1966 ல்  அதுவும் ஆதிக்கம் செரிந்த புதுக்கோட்டைப்பகுதியில் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்று ஊகித்துக்கொள்ளுங்கள்.

ஆயினும் அந்த ’கண்டெடுத்தான் காட்டு’ மனிதர்களைச் சுற்றியும், அவர்களு க்கான அறிவொளி குறித்தும் பேசுவதால் இந்தப்படத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கணும்.

குருவிக்காரர்,வைத்தியர்,தம்பிராமையா,அப்புறம் சூரங்குடி ( தம்பி) கந்தசாமி ஆகிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஆண் பாத்திரங்களும் இனியா, ஊனமுற்ற சிறுவனின் தாய் என இரண்டே இரண்டு பெண்பாத்திரங்களும் தவிர இந்தப் படமெங்கும் வியாபித்திருப்பவர்கள் அந்த சிறுவர்களும் அவர்கள் அடிக்கிற லூட்டியும் தான். சதா நேரமும் பயமுறுத்திக்கொண்டிருக்கும் ஆதிக்கத்தின் மீது மறைமுகமான அவர்களுக்குள்ளே புழங்கிக்கொள்ளும் விமர்சனம் இருக்கும். அந்த விமர்சனத்தை பொழுதுபோக்காக கடத்தும்  விளிம்பு மனிதர் களிடத்தில் வியந்து வியந்து போற்றக் கூடிய குசும்பு மண்டிக்கிடக்கும்.
அதோடு கூடவே இயற்கையோடு இரண்டறக் கலந்த அற்புதமான வாழ்வு முறை இருக்கும். அவர்களிடத்தில் ஆதிப்பொதுவுடமை வாழ்க்கையின் எச்சங்கள் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த அரிய பொக்கிஷங்களை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார் சற்குணம்.

மரத்தில் மீன் ஏறுவது,குளத்தில் அடியில் கிடக்கிற மீன் புழுவைக்கடிக்கும்போது அது என்னவகை எனத் துள்ளியப்படுத்துவது,புகை போட்டு எலிப்பிடிப்பது,செத்துப்போன குருவிக்காரருக்கு படப்பு வைப்பதென்று இந்த கணினி யுகம் மறந்து போன கிராம வாழ்க்கையை சின்ன சின்ன காட்சிகளில் மீட்டித் தருகிறது வாகைசூடவா. இனியா இதுவரை வந்து தங்களை கிராமத்துப்பெண்ணாக உருமாற்றிக்கொண்ட புகழ்பெற்ற தமிழ் நாயகிகளை விழுங்கிச்செறித்தபடி அநாயசப் படுத்துகிறார். அவரும் கூட கன்னடத்துக்காரராமே. கலை எல்லைகளற்றது. அதுபோலவே காதலும் வரம்புகளற்றது. ஊருக்கு வந்த வாத்தியாரை காதற்கணவனாய் வரித்துக் கொள்கிற கண்டெடுத்தான்காட்டுப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் இனியா. அதற்குச் சம்பவங்களும், பின்புலமும் கதையும் வலுவூட்டியிருக்கிறது. வாத்தியார் விமலை ஏகடாசி பண்னிவிட்டு இந்தப்பக்கம் திரும்பி தனக்குள் சிரிக்கிற இனியாவின் அந்த மேனரிசம் நெடுநாள் நினைவுகளில் கிடக்கும்.

இரவில் முசிறிக்கு தீப்பந்தங்களோடு காட்டு வழியே நடந்துபோகிற காட்சி தமிழ்சினிமாவுக்கு அர்த்தம்கூடுதலாகச்சேர்க்கிறகாட்சி. அதை  அனுபவித் தவர்களைக் கட்டாயம் அலைக்கழிக்கும் அந்தக்காட்சி.
http://skaamaraj.blogspot.com/2010/04/blog-post_09.html
( நேரமிருந்தால் கொஞ்சம் படியுங்கள் )

நடந்துவரும் கூட்டத்துக்குள் இருளும் ரகசிய சில்மிஷங்களும் கலவையாக சூடுபரவிக்கிடக்கும் அப்போது தீப்பந்தங்கள் வழிமறிக்கிற நெருடல்களாக மாறும். இப்படிப்படம் முழுக்க ஒரு  விளிம்பு வாழ்க்கையை செதுக்கிச்செதுக்கி வைத்திருக்கிற படம். மிருனாள் சென் இயக்கி எண்பதுகளில் வெளிவந்த மந்தன் திரைப்படத்தை நினைக்க வைத்தாலும் வைத்துவிட்டுப்போகட்டும். அவர்களுக்குள் தூவப்படும் கல்வி இந்த சமூக மடமைகளில் இருந்து  உடைத்துக் கொண்டு வெளிவர உதவும் கிரியா ஊக்கியாக மாறவேண்டும் என்கிற கனவிருக்கிற எல்லோரும் அங்கீகரிக்கிற படைப்பாக வந்திருக்கிறது வாகை சூடவா.

விமலின் நடிப்பை, இசையை, தொழில்நுட்பத்தை எல்லாம் தனித்தனியே சொல்லுகிற அளவுக்கு எனக்கு திரைப்பட ஞானம் இல்லை. ஒரு வலுவுள்ள  கதை செய்நேர்த்திமிக்க படைப்பாளனின் கையில் கிடைக்கும் போது அந்தக் குழுவும் செய்நேர்த்திமிக்கதாக மாறும். வரண்டு கிடந்த தமிழ்ச் சினிமாவுக்குள் கதைகளோடு களமிறங்கும் எல்லோருக்குமான வெற்றியாக இந்தப்படமும் இருக்கட்டும்.

26.9.11

நம்பிக்கையூட்டும் கதைகளின் வரிசையில்- எங்கேயும் எப்போதும்



ஒரு ஓம்னிப் பேருந்துப் பயணம் தான் மொத்தக் கதை.பயணமும் பயணம் சார்ந்த நினைவுகளும் மட்டுமே தமிழ்ச்சினிமாவுக்கு மையக் கருவாக இருப்பது உண்மையில் துணிச்சலான விஷயம். நீண்ட தூரம் பேருந்தில் பயணப்பட்ட எல்லோரோடும் இந்தக்கதை கைகோர்த்துக் கொள்ளும்.அப்படிப் போகாதவர்களை வெகுவாக ஈர்க்கும் சமாச்சாரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற எதார்த்தப் பதார்த்தம் தான் ’எங்கேயும் எப்போதும்’.

பயண நேரங்களில் நமக்கு கிடக்கும் சௌகர்யங்களையும் அசௌகர்யங்களையும் அழகாகத் தொகுக்க முடிந்திருக்கிறது இயக்குநர் சரவணனுக்கு. கிராமத்திலிருந்து நகரம் போகிற எல்லோருக்கும் போதனைகள் கட்டாயம் காத்திருக்கும். அந்தப்போதனைகள் எச்சரிக்க வழிநெடுகச் சந்திக்கிற மனிதர்களை எல்லாம் கட்டாயம் சந்தேகிக்க வைக்கும். அப்படியாப்பட்ட சூப்பர் ஹீரோவாக இல்லாத சராசரி மனிதனின் பின்னாடி நகர்கிறது ஒலிப்பதிவாளரோடு கூடிய இந்த இயக்குநர் பட்டாளம். மக்கள் இதைத்தான் கேட்கிறார்கள் இந்த வெடுக்வெடுக்கென ஆடும் இடுப்பும்,ரத்தம் கோபளிக்கிற சண்டையும்,கண்ணீர் கொப்பளிக்கிற செண்டிமெண்டும் இல்லையென்றால் போட்ட துட்டை எடுக்கமுடியாது என்கிற இலக்கணத்தை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் சின்னச் சின்ன இயக்குநர்கள்.

பேருந்தில் ஏறியவுடன் தூங்கிப்போகும் அறிமுகமில்லாத பயணியாக வரும் நபர் மூன்று நான்கு ஷாட்டுகளில் விவேக்கையும் சந்தானத்தையும் ஊதித் தள்ளிவிட்டுப் போகிறான். தாம்பரத்தில் வண்டியை நிறுத்தி திருச்சி திருச்சி என்று நடத்துநர் கத்தியவுடன் எழுந்து பையைத் தூக்கிக்கொண்டு திருச்சி வந்துருச்சா என்று இறங்குகிற போது தியேட்டர் குபீரென ஆர்ப்பரிக்கிறது. சமீபத்திய எல்லாப் படங்களிலும் அழகிய படித்த மேல்தட்டுப் பெண்ணை ஒரு ரவுடி காதலிப்பதாகத்தான் கதை பண்ணினார்கள்.அது விதிவிலக்கு.ஆனால் எதார்த்தமாக தங்கள் கனவுகளுக்கு அருகில் வருகிற ஆண்கள் மேல் காதல் கொள்வதும் அதையே பரஸ்பரம் பெண்கள் மேல் கொள்வதுமாக சித்தரிக்கப்பட்ட நிஜம் இது. உறுத்தாத நிஜம்.

இந்த தமிழகம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிந்தாலும் முடியாவிட்டாலும் அதை ஆட்டுவிக்கிற ஒரு பொருள் உண்டெனில் அது தொழில் நுட்பக்கல்லூரிகள். அங்கிருந்து வெளியேறும் எதிர்கால இந்தியா.வெளியேறவிடாமல் வாசலிலேயே வழிமறித்து அழைத்த்துக் கொண்டுபோய் அடைத்துக் கொள்ளும் கார்ப்பரேட் நிறுவணங்கள். அடைக்கப்பட்ட கதவுகளுக்குள்ளிருந்து வெளியேறி எந்த ஊடகத்தையும் சலனப்படுத்தாத பேய்க்கதைகள் மண்டிக்கிடக்கிறது அங்கே. அதைப்பற்றி இன்னும் விரிவாக எந்த ஊடகமும் சொல்லவில்லை சித்தரிக்க வில்லை.அதன் வெளிப்புற விஷயங்களை நம்மோடு லேசாய்க் கசியவிட்டுப் பகிர்ந்து கொள்கிறது இந்த திரைப்படம். அந்த இளைஞர்களின் காதலை தெய்வீக-அமரத்துவம் வாய்ந்ததாக அறிமுகப்படுத்தாமல் ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பாக முன்வைத்திருப்பது ஆரோக்கியமானது.

அஞ்சலி ஜெய் இணையின் சந்திப்பும் காதலும் அடித்தள நடுத்தரவர்க்கத்தின் ஸ்பெசிமனாக்கியிருப்பதும், துபாயிலிருந்து திரும்புகிற  பிறப்பதற்குமுன் துபாய் கிளம்பிப்போய் ஆவலோடு திரும்புகிற தகப்பன், இளங்காதலர்கள்,ப்ராக்போட்டுக்கொண்டு அண்டை இருக்கைக்கெல்லாம் போய் காட்சியளிக்கிற குட்டீஸ் இந்தப் பாத்திரங்களின் செதுக்கல் எல்லாமே அவர்கள் மேல் நமக்கு அனுதாபம் வரவழைக்கத்தான் என்பதை இறுதிக்காட்சி சொல்லுகிறது.

நேர்க்குநேர் மோதிக்கொள்கிற பேருந்துகள் சின்னாபின்னமாகிற காட்சிதான் தமிழ் சினிமாவின் நிஜத்தொழில்நுட்பம். எனவே கதைகள் வற்றிப் போய்க்கிடந்த தமிழ்ச்சினிமாவுக்கு பலகோடிக் கதைகளில் ஒவ்வொன்றாய் எடுத்துக்கொடுக்க புது ரத்தங்கள் கிளம்பிவிட்டது. அதை அர்த்தத்தோடு சுவீகரிக்கிறது தொழில்நுட்பம். முந்தைய திரைப் படங்களுக்குச் சொல்லியிருந்த எமது விமர்சனங்கள் இதுபோலில்லையே என்கிற ஏக்கம் மட்டும் தான். இந்த நல்லவைகளுக்காக ஒரு பாட்டையும் அதைப்பாடுகிற உதித்நாராயணனையும் மன்னித்துவிடலாம்.

.இறுதிக்காட்சியில் லாரிக்காரர் ப்ரேக்போட்டு நிறுத்தி ஓடிப்போய் இடிபாடுகளுக்குள் பயமிலாமல் இறங்குவது.செல்போனில் நூற்றி எட்டுக்கு தகவல்கொடுக்கும் அடுத்த பேருந்துப் பயணிகள், களையெடுப்பைப் போட்டுவிட்டு ஓடிவரும் உறுத்துள்ள நிஜச்சனங்கள்.சிதறுண்ட உறுப்புகள்,ரத்தம், ரத்தம் உறய்ய வைக்கிற காட்சிகள் மருத்துவமனை மரணஓலம் என அதகளப்படுத்துகிறது அந்த எங்கேயும் எப்போதும் டீம். எங்களோடு திரைப்படம் பார்க்க வந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் கடைசிக்காட்சிகளைத் தவிர்த்துவிட்டு வெளியே போய் நின்றுகொண்டார்கள்.

நாம் படைக்கிற படைப்பு லேசாக சிலிர்ப்பையாவது உண்டு பண்ணி பார்வையாளனைச் சலனப்படுத்தவேண்டும்.அப்படிச்சலனப்படுத்தி தன்னை படைப்பாளியென நிரூபித்துக்கொண்ட இயக்குநர் சரவணன் நிச்சயமாய்ப் பாராட்டுக்குறியவர்.

வாழ்த்துக்கள் ’எங்கேயும் எப்போதும்’ பட்டாளத்துக்கு.

11.9.11

மங்காத்தா - தமிழ்சினிமா இதுவரை அரைக்காத கதை.




மங்கம்மா சபதம், ஒளிவிளக்கு,நல்லவன் வாழ்வான் என்றெல்லாம் தலைப்பைத்தேடித்தேடிஅலைந்த தமிழ்ச்சினிமா பயபுள்ள,ஏய், டூ என்றெல்லாம் தலைப்பு வைக்க துணிந்து விட்ட நிலையில் மங்காத்தா என்கிற இந்த தலைப்பு கொஞ்சம் முற்போக்கானதாக தோற்ற மளிக்கிறது. அந்த மங்காத்தாவை ராமநாதபுரம் வேலுமணிக்கம் திரையரங்கில் பார்த்தேன். சவாலே சமாளி என்கிற படத்தைப் பார்க்க எனக்கு எழுபதுகளில் வெறும் இருவத்தைந்து காசுகள் மட்டும் செலவானது. இப்போது சர்வசாதாரணமாக நுறு ரூபாய் வாங்கிக்கொண்டு நுழைவுச் சீட்டைக் கொடுக்கிறார்கள் அது என்னமோ ஆஸ்பத்திரி அட்டை மாதிரி இருக்கிறது. இருக்கைக்கு நுழையும்போது அதைக் கவனமாக திரும்ப வாங்கிக்கொள்கிறார்கள்.வீட்டுக்கு ஒரு ஹசாரேவை வைத்து கண்கானித்தாலும் அம்பானி வகையறாக்கள் அதற்கும் செலவுகளை ஏற்றுக்கொண்டாலும் கூட எதுவும் செய்ய முடியாது என்பதை நிமிடத்துக்கு நிமிடம் உறுதிசெய்கிற இந்திய லஞ்சத்தின் இன்னொரு வடிவம் இது. ஹசாரே ...அது வேறுவகையான சினிமா.

சமீபத்தில் அதிகம் பார்வையாளர்களை தியேட்டருக்கு இழுத்த பெருமை காஞ்சனாவுக்கு அடுத்து மங்காத்தா படத்துக்குத்தான் சேரும் அவ்வளவு கூட்டம். படம் வெளியாகி எட்டுநாள் கழித்து இவ்வளவு கூட்டம் என்பது இப்போதைய தழிழ்சினிமா வரலாற்றில் அபூர்வம்தான். அதற்கான ஈர்ப்பு இந்தப்படத்தில் இருக்கிறதா என்றால் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. நீண்டகாலமாக கெட்டவனைப் போரிட்டு ஜெயிக்கும் நல்லவன் கதைகளாகப் பார்த்து அலுத்துப்போன மக்களுக்கு முள்ளும் மலரும்,பொல்லாதவன், இப்படியான நெகடிவ் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தபோது ஏற்பட்ட ஈர்ர்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. எங்கே பார்த்தாலும் ஒரே அருவா,கிராமம் வெட்டுக்குத்து இந்த ரத்தவாடைக்குள் ரெண்டு குத்துப்பாட்டு,ஒரு டூயட் பாட்டு பாத்துப்பாத்து சுருண்டுபோன மக்களுக்கு விநாயக் மகாதேவன் பாத்திரம் தெம்பான அறிமுகம். ஒரு இருபது வருடங்கள் இந்த சினிமவுக்குள் கிடந்து முதிர்ச்சி அடைந்த ஒரு நடிகனுக்கு கிடைத்த லட்டு மாதிரியான பாத்திரம். இதுவரைக்கும் தமிழ்சினிமா உலகில் பேசப்படாத கிரிக்கெட் சூதாட்டம் இதில் பேசப்படுகிறது.

யூகிக்கமுடியாத கதைத்திருப்பங்களும் வேகம் வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டு சேர்க்கப்படும் கட்சிகளும் இல்லாத இந்த ரகம் புதுசு.இடைவேளைவரை படம் மெல்ல நகர்கிறதென்கிற குற்றச்சாட்டை ஊர்ஜிதப்படுத்துகிற இயல்புக்காட்சிகள் நிறைய்ய இருக்கிறது. தூங்குவது குளிப்பது இனிமேல் குடிக்கக்கூடாது என்று தனக்குத்தானே பேசிக்கொள்வது நிச்சயமாக அதிகம் சோர்வைத்தரும் காட்சிகள் தான்.அதுவுமில்லாமல் அப்போதெல்லாம் பின்னணி இசையே இருக்காது எதோ கல்யாண வீடியோ பார்த்த  உணர்வு வரும். ஆனால் அந்த மந்தக் காட்சிகள் தான் இந்தப்படத்தின் முடிவுக் காட்சிகளுக்கு கூடுதல் வேகத்தைக் கொடுக்கிறது. மேக்கப் இல்லாத நரைத்த முடியோடு அஜித். தமிழ்ச் சினிமாவுக்கு அச்சாணியாக இருக்கிற காதல் சரக்கை உலகத்துக்கே அச்சாணி என்று பினாத்துகிற உருகுதல் இல்லாதது. விவேக்,சந்தாணம் போன்ற ஹைகிளாஸ் கமெடியன்கள் வைத்துக் கொள்ளாதது. ஆகக்சிறந்த எழுத்தாளர்கள் என்கிறவர்களை எழுதச் சொல்லி ஆகக் குப்பையான, ஆக பிற்போக்குத் தனமான, ஆக சாதிய திமிர்நிறைந்த சிந்தனைகளை பரப்புதல் என்று செக்குமாட்டு தடத்திலிருந்து கொஞ்சம் விலக எத்தனித்திருக்கிற முயற்சி இது.

த்ரிஷாவும் அஜித்தும் மீண்டும் இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பு.கல்யாணமாகி புதுத்தாலியின் நிறம் மங்காமல் இருக்கும் அஞ்சலிக் காகவாவது வைபவ் உயிரோடு வந்துவிடுவார் என்கிற நம்பிக்கை.வேறு எவனாவது புதுசா ஒரு வில்லன் வந்து ஊடே புகுந்துகொள்ள த்ரிஷாவின் தகப்பனாரான ஜெயப்ரகாசும் அஜித்தும் கைகோர்த்துக்கொண்டு துவம்சம் செய்வதற்கான ஒரு தமிழ் ஆக்சன் சினிமா  இடை வெளியிருக்குமே அதற்குள்ளும் கதை ஊடுறுவவில்லை.  

ஆக இது வழக்கமாக அரைத்த மாவு இல்லை. என்றாலும் செறிவூட்டம் மிக்க கதையும் பாத்திரத்தேர்வும் இதில் இல்லை. யுவனின் பின்னணி இசை அருமை என்று பல பல விமர்சனங்கள் இட்டுக்கட்டினாலும் வத்தியக்கருவிகளை மூடிவைத்து விட்டு நடிக்க வாய்ப் பளிக்கிற உணர்வுகளை அதிகப்படுத்துகிற மௌனமும், புல்லாங்குழல், தவில், கஞ்சிரா, உடுக்கு, எவர்சில்வர் பானை, கோழிக்குஞ்சு அடங்கி அழவைக்கிற தாலாட்டு என அள்ளி அள்ளி கொடுத்த இளையராஜாவைத் தாண்டி இதுவரையாரும் முயற்சிக்க வில்லை. ராமராஜனா, மோகனா நீங்க எப்படிவேண்டுமானலும் சொதப்புங்கள்.ஆனால் வாழ்நாளெல்லாம் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் இதமான பாடல்கள் கிடைக்கும் என்று நம்பித் தியேட்டருக்குப் போகவைத்த இசை இப்போது கிடைப்பதில்லை. ஒரு வேளை இது தலைமுறை இடை வெளி யாகக் கூட இருக்கலாம். ஆனால் இசை வெளியென்பது நினைவுகளை இழுத்துக்கொண்டு அலைவது. அப்படி இழுக்கிற ஒரு பாடல் கூட இந்தப்படத்தில் இல்லை.

இவ்வளவு சீரியசான கதைக்குள் வலிந்து புகுத்தப்பட்ட ப்ரேம்ஜி அநாவசிய பாத்திரம். காமெடி கட்டாயம் வைத்தால்தான் படம் ஓடும் என்கிற மூட நம்பிக்கையும் எப்படியாவது தலையைக் காண்பிக்க வைக்கவேண்டும் என்கிற சகோதர பாசமும் அநாவசியம். ப்ரேம்ஜி க்கு கிடைத்திருக்கிற மேடை கிடைத் தற்கரிய மேடை அதை உபயோகப்படுத்த நிறைய்ய யோசிக்க வேண்டும் மெனெக்கெடவேண்டும். அதே போல கங்கை அமரனுக்கு கிடைத்த  கரகாட்டக் காரன் மாதிரி வெங்கட்பிரபுவுக்கு இந்த மங்காத்தா. தமிழ்ச்சினிமாவுக்குள் ஒரு இடத்தை நிறுவி இருக்கிறது அதைக்கவனத்துடன் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

4.9.11

மனதில் கேடுள்ள மனிதனை எளிதில் பழக்கமுடியாது.


சில நேரம் விதி என்பது கூட உண்டோ என்கிற மாதிரி நிகழ்சிகள் அமைந்துவிடுகிறது. ஒரே சுற்றுச்சுவர் இருக்கும் ஜெகன் மினி ஜெகன் தியேட்டரில் காஞ்சனா,ரௌத்திரம் ஆகிய இரண்டு படங்கள் திரையிடப்பட்டிருந்தது. காஞ்சனாவில் நகைச்சுவையும் புதிதாக திருநங்கையர் குறித்த மாறுபட்ட தமிழ்சினிமா அனுகுமுறையும் இருப்பதாக நண்பர்கள் சொல்லியதால் அந்தப்படம் பார்க்கப்போய், தவறுதலாக ’ரௌத்திரம்’ டிக்கெட் எடுத்து உள்ளே போக நேர்ந்தது. விதி வலியது. கொடுத்த எழுபது ரூபாய்க்கு படம் பார்த்து தீர்ப்பது என்கிற முடிவு. சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொண்டது போலாகியது. ரௌத்திரம் என்பதற்கு பொத்துக்கொண்டு வருவது என்று பதவுறை எழுதியிருக்கிறார் உயர்திரு கோகுல் என்கிற இயக்குனர். சமீபமாக பார்க்கநேர்ந்த இப்படிக்கதைகள் மிகத்துள்ளியமாக ஒரு குறிப்பிட்ட மக்களை குரூர எதிரியாகச் சித்தரிக்கிறது. அப்படி சுட்டிக் காட்டப்படும் மக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அதற்கு எதிராக எந்த சலலசலப்பும் எழுவது இல்லை. பெரும்பாண்மை மக்களை பெருமைப்படுத்தி கதை புனையப்படுவதால் அவர்களும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

கதாநாயகன் நடுத்தர குடும்பத்து உயர் ஜாதிக்காரனாக சித்தரிக்கப்படுகிறான்.போகட்டும்.அவன் நடுத்தெருவில் எதிரிகள் என்று சொல்லப் படுகிற ’கருப்பு நிற ’ ரவுடிகளை துவம்சம் செய்கிறான். வில்லன் வில்லனின் கையாட்கள்,அவர்களுக்கு உதவிசெய்கிற சட்டமன்ற உறுப்பினர் எல்லாமே கலப்படமில்லாத கருப்புநிறத்தில் இருப்பது போல தேர்ந்துகொண்டிருப்பது ஒட்டாமல் துருத்திக்கொண்டு தெரிகிறது. அந்தக்கதையின் தர்க்கத்தை நியாயப்படுத்த பாலாவின் படத்திலிருந்து ராஜ்கிரன் பேசுகிற வசனமாக சாமி நேர வராது அநியாயத்தை தட்டிக்கேட்கிற ஓவ்வொருத்தனும் சாமி தான் என்கிற வசனத்தை கோர்க்கிறார். அப்புறம் நடுத்தெருவில் இழுத்துக்கொண்டு போகும் பெண்ணைக் காப்பாற்றி அவள் அப்பனிடம் ஒப்படைக்கிறான். அவர் பெருமாள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடாத நான் உன்னத்தான் சாமியாக்கும்பிடுகிறேன் என்று சொல்ல பின்னணியில்  வேத ஊச்சாடனங்கள் ஒலிக்க  பெருமாள் சிலை உயர்ந்து,அவர் உலாத் துவங்குகிறார்.

எல்லாமும் சரிதான். தவறு செய்கிறவன் எவனாயிருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் முக்கியமான ரவுடியும் அவன் சேரித் தெருவும்,அவன் அணிந்திருக்கும் சிலுவைக்குறியும் க்ளோசப்பில் காட்டுவதால் தப்பு செய்கிறவன் எல்லோரும் விளிம்பு நிலைக்காரன் என்கிற கேடுகெட்ட சினிமாப் புத்தியை பொதுவாக்க முயல்கிறார் திருவாளர் கோகுல். இது மாதிரியான காட்சியமைப்புகள் கிட்டத்தட்ட தமிழ் (அகோர)ஆக்க்ஷன் படங்களின் பொது விதி என்றே ஆகிவிட்டது. ஆங்கிலப்படங்களில் இருந்து திருடப்பட்ட இப்படிப்பட்ட காட்சி களை தமிழ் மயப்படுத்துகிற பாவனையில் அப்பாவி விளிம்புநிலை மனிதர்களை எதிரியாக்குகிற படங்களை திருப்பாச்சி,நான் மகான் அல்ல, போன்றவற்றை குறிப்பிட்டு வரிசைப்படுத்தலாம். தமிழ்நாட்டின் நிவியல்புகளையும், சாதிய அடுக்குகளையும், அவற்றுக்குள் ஏற்படுகிற முரண்பாடுகளையும், அங்கு நடந்தேறுகிற பயங்கரங்களையும் அறியாத வெறும் தொழில்நுட்ப மொன்னைகள் தான் தங்களைப் படப் பாளிகள் என்று பிரகடனப்படுத்திக்கொள்ளுதுகள். இப்படிகதைகள் தயாரிப்பாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதும், பிரம்மாண்டச் செலவில் உருவாகி விற்றுப்போவதும் விநோதமில்லை. ஒரு இயக்குநர் குறைந்த பட்ச சமூக சிந்தனையில்லாமல் எப்படி இருக்க முடியும் என்பது தான் இங்கே விநோதமாக இருக்கிறது.

ஒரு கால் நூற்றாண்டுகாலம் தமிழ்சினிமாவில் கொடிகட்டிப்பறந்த திருவாளர் எம்ஜியாரை எனக்குப் பிடிக்காது. ஆனால் அவர்  திரைப் படங்கள் எல்லாமே நலிந்த மக்களின் பக்கமும் ஆதிக்கத்துக்கு எதிராகவும் மட்டுமே இருக்கும். தவறியும் அதில் ஜாதிய அடையாமும் ஜாதிய துவேசமும் இருக்கது. மதங்களுக்கிடையிலான முரண்களில் குளிர்காய்கிற சில்லறைத்தனமும் பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும் கண்டு பிடிக்கமுடியாது. அந்த ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே அவர் ஜெயித்தார். சிலநேரங்களில் ஆரம்பப்பாடசாலைச் சின்னப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லுகிற மாதிரி பாட்டும் வசனமும்,நடிப்பும் கூட இருக்கும்.அப்போதெல்லாம் நான்  அதைகேலி செய்திருக்கிறேன்.  ஆனால் இப்போதெல்லாம் அந்தக்குள்ள உருவம் கொண்ட கலைஞனின் விசாலமான மனது விஸ்வரூபமாகத் தெரிகிறது. இப்போதிருக்கிற கிராபிக்ஸ்,உயர்தொழில்நுட்பம் எல்லாவற்றையும் காலில்போட்டு மிதித்தபடி.

19.5.11

அழகர்சாமியின் குதிரையும், திருப்பூர் பனியன் கம்பெனிப் பெண்களும்.


ஒரு நூறு வருடங்களுக்கு முன்னாடி இந்தியாவின் போக்குவரத்தில் பெரும் பங்கு வகித்த வாகனம்.இன்னும் அலெக்சாண்டர், நெப்போலியன், சத்ரபதி சிவாஜி,ராஜாதேசிங்கு,ஊமைத்துரை,மாவீரன் திப்புசுல்தான்,சேகுவேரா ஆகிய பெயர்களோடு கூட வருகிற அவர்களின் உயிர்த் தோழன், இழு விசையையும், வேகத்தையும் கணக்கிடக்கிடைத்த பிராணி,சக்தி என்கிற சொல்லுக்கு வரையப் படும் ஓவியம் என அந்தக் குதிரைக்குத்தான் எத்தனை ஈப்புகள். அப்படித்தான் இந்த அழகர்சாமியின் குதிரையும் ஈர்த்தது. பரட்டைத் தலையோடும் கருத்த குள்ள உருவத்தோடும் ஒரு நாயகன், பாஸ்கர்சக்தி, இளையராஜா என அதன் மேல் ஈர்ப்பு வந்ததற்கு நிறைய்ய காரணங்கள் இருந்தது.கிராமங்களில் புதையுண்டு கிடக்கும் சொல்லப்படாத ஒரு கோடிக்கதைகளில் ஒரு கதையாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை இன்னும் கூடுதலாக்கியது படம்.

நடக்காமல் போன அழகரின் திருவிழாவோடு கதை தொடங்குகிறது. பாரதிராஜா தொடங்கி சுசீந்திரன் வரை இன்னும் நூறு தரம் காட்டினாலும் அலுக்காத காட்சிகள் அவை.சாமியாடி நாள்குறிப்பதில் தொடங்கி பந்தக்கால் நட்டு,வசூல் நடத்தி,வெள்ளையடித்து, மாவாட்டி,டெய்லரிடம் சட்டை அளவுகொடுத்து இப்படி ஒரு ஊர் திருவிழாவுக்குத்தயாராவது ரம்மியமான காட்சிகள்.அழகரின் வாகனமான மரக்குதிரை காணாமல் போகிற நேரத்தில் ஒரு நிஜக்குதிரை ஊருக்குள் வருவது வரை முதல் பாராவில் சொன்ன எதிர்பார்ப்பு அலுங்காமல் குலுங்காமல் இருக்கிறது.அதுவும் ஒரு லோடு லாரியில் வளர் இளம் பெண்களை அள்ளிப்போட்டுக்கொண்டு திருப்பூருக்கு கிளம்பும் காட்சி அப்படியே கலங்கடிக்கிறது. ஆஹா தமிழ்ச் சினிமாவுக்குள் ஒரு புதுரத்தம் புகுந்துவிட்டது என்று மனம் சந்தோஷப்படுகிறது.

அந்தச் சந்தோஷத்தை அப்படியே லாரியோடு ஏற்றிவிட்டு கதை குதிரை தெய்வகுத்தம்,மைச்சோஷியம் என்றும்,ஒரு கிராமத்துக்காதல் , குதிரைக்கு சொந்தக்காரன் வருகை,அவனால் ஏற்படும் குழப்பம்,அவனுக்கு ஒரு ப்ளாஷ் பேக் எனச்சிதறடிக்கப் படுகிறது. சொல்லப்பட்ட சம்பவங்கள் எல்லாமே தனித்தனியாய் பல சிறுகதைகளுக்கு  கருவாகும் காட்சிகள். இவற்றை யெல்லாம் இணைத்துக் கொண்டு அழுத்தமான கதை வரும் என்கிற எதிர்பார்ப்பு கடைசிவரை நமது கூடவே வருகிறது.இந்த தவிர்க்கமுடியாத எதிர்பார்ப்பு சுசீந்திரன் பாஸ்கர் சக்தி,மரணகானா ராமு,கந்தசாமி போன்ற தெரிந்த முகங்கள் இருப்பதானாலேதான். ஆனால்  எதையுமே முழுமையாகச் சொல்லி முடிக்காமல் விட்டுவிட்ட மாதிரி முடிந்து போகிறது.

கோடாங்கியின் மகளை ஊராட்சித்தலைவரின் மகன் காதலிப்பதும் அவர்கள் ஒளிந்து ஒளிந்து சினிமாவுக்குப்போவதும் அங்கே அலைகள் ஓய்வதில்லை படம் பார்ப்பதும் மிக மிக மேலோட்டமான காட்சிகள்.அதனால் தான் அவர்கள் இரண்டு பேரும் ஓடிப்போய் காவல் நிலையத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அந்தசெய்தியை கேட்ட ஊராட்சித்தலைவர் “ ஒரு தாழ்த்தப்பட்டவனின் மகளை எப்படி நான் மருமகளா ஏத்துக்கொள்ள முடியும் என்று கட்டுரையைப் படிப்பது போல வசனம் பேசுகிறார். ஒரு பூவைப் பிடுங்குவதுபோல் இவ்வளவு எளிமையானதா சுசீந்திரன் மேல் கீழ் கலப்புமணம்?.

நட்ட நடு டெல்லியில் கணினி வளர்க்கும் மேட்டிமை காலத்தில் கதறக் கதற கீழ்சாதிக் கணவனை அவள் கண்முன்னே வெட்டிக் கொன்றதையும்.அதற்கு செத்துப்போன பையனினின் குடும்பம் பயந்துபோய் பதுங்கிக்கொள்ள அவள் நீதிமன்றத்துக்கு அலைந்ததையும், நீதிமன்றம் அதைக்கருணைக் கொலை என்று சொன்னது. சொல்லி இந்திய அரசியல் சட்டம்,மனிதாபிமானம்,இந்திய தண்டனைச்சட்டம், குற்றவியல் மற்றும் வன்கொடுமைச் சட்டங்களை கொலைசெய்தது எல்லாம் நடந்து ஆறுமாசம் கூட ஆகத நேரத்தில் இப்படிக் கதை சொல்வது மெகா சீரியல் முடிவுகள் மாதிரியே இருக்கிறது.

இப்படியே கதையை முடித்துவிடுகிறார்கள். உடனே அடடா அந்தக்குதிரை என்னாச்சு  என்று நமக்கு ஒரு கேள்வி எழுகிறது நமக்கு மட்டுமல்ல இயக்குநருக்கும் கூட.அதனால் தான் காவல் ஆய்வாளர் மூலம் கேள்வியை வைக்கிறார் அதற்கு ஊராட்சித் தலைவரின் மகன் அவன் இந்நேரம் சிட்டாய்ப் பறந்து ஊருக்குப் போயிருப்பான் என்று சொல்லி சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறார்.படம் முடிகிறது.

முடிந்த பிறகும் நம்மோடு கூடவரும் கேள்வி திருப்பூருக்கு பனியன் கம்பெனிக்கு வேலைக்குப்போன அந்தப்பெண்களைப் பற்றித்தான்.
அவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு சொல்லப்படாத கதைகள் இருக்கிறது. அந்தக் கதைகளுக்குள்ளே சமகால அரசியல் இருக்கிறது.சமகால அரசியலை நடத்தும் தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம் பகிரங்க நிழலாய்: கருப்பு நிழலாய் கவிழ்ந்திருக்கிறது.

அந்த வளர் இளம் பெண்கள் உரத்துக்கேட்கிறார்கள்.
ஏன் சுசீந்திரன் சார் எங்களிடம் கதைகளைக்கேட்கவில்லையென்று.

30.4.11

அந்த விருதுகள் மீறலுக்கும்,கலகத்துக்கும் கிடைத்த விருதுகள்-பாலச்சந்தர்


சுமித்ராவின் தலையணைக்குள் ஒளித்துவைத்திருக்கும் தனது சிகரெட் லைட்டரை எடுக்கவரும் கமலஹாசன்,காய்கறிக்காரம்மாவின் பழங்களைப் பொறுக்கச் சொல்லி நடத்துநரை அடிக்கும்போது நீ என்ன கம்யூனிஸ்டா அநியாயங்களைத் தட்டிக்கேட்கிறவன் கம்யுனிஸ்ட் என்றால் நான் கம்யூனிஸ்ட் தான் என்று கூறுகிற கமல்ஹாசன்.சரத்பாபுவிடம் ஷோபவைப் பற்றி பேசவந்தவன் வெஸ்ட்பெங்காலில் கம்யூனிஸ்ட் ஆட்சியைப் பிடித்து விட்டதே அதைப்பற்றி என்ன நினைக்கிறாய் என்கிற கமலஹாசன்.

மூக்குப் பொடிப் போட்டுக்கொண்டு மீசையை முறுக்கிக்கொண்டு விபச்சாரி சரிதாவைக் காதலிக்கும் ரஜினிகாந்த். ஒரு ஆச்சாரமான குடும்பத்திலிருந்து கிளம்பிப்போய் விபச்சாரம் செய்யும் பிரமிளா, ஜனகணமண பாடும்போது சுவிங்கம் மெல்லும் கல்லூரித்தோழனை அடித்து துவம்சம் செய்யும் நக்சலைட் என தமிழ்திரை யுலகத்துக்கு பல புதுப்புது கதாபாத்திரங்களையும். வாழ்வின் நிஜ சுக துக்கங்களில் இருந்து பிரச்சினைகளையும், உரையடல்களையும் அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர்.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கொஞ்சம் விவரந்தெரிஞ்சவர்களாகக் காட்டிக்கொள்ள பாலச்சந்தரின் பெயரையும் உபயோகப்படுத்தியே தீரவேண்டும். தமிழ்ச்சினிமாவில் கலைப் படங்களுக்கான விதையைத் தூவியவர்களுள் மிக முக்கியமானவர் பாலச்சந்தர். சாத்தூர் போன்ற நான்காம்  தர நகரங்களில் அவரது படம் வசூலுக்கு நொண்டியடிக்கும். ஆனாலும் சென்னை மதுரை கோவை போன்ற பெருநகரங்களில் கொண்டாடப் படும்.சிவாஜி படம் எம்ஜியார் படம் முத்துராமன் படம் என நடிகர்களை முன்னிறுத்திய காலத்தில்; அட அப்படியே நல்லாப்பூசிவிட்ட காங்க்ரீட் மாதிரி முகத்தை வைத்துக்கொள்ளும் ஜெய்சங்கருக்கு கூட திரைப்படத்தின் உழைப்பெல்லாம் போய்ச் சேர்ந்துவிடும் காலத்தில்; திரைப்படம் என்கிற ஒரு படைப்பை படைபாளியின் பெயரால் அறியச்செய்த புரட்சிக்காரன் பாலச்சந்தர்.

பத்துப்பேரை ஒரே குத்தில் சாய்க்கிற மாதிரி இல்லாமல் இயல்பில் கலகம் செய்யும் கதாபாத்திரங்களைக்கொண்டாதாலோ, இல்லை மரத்தைச்சு சுற்றி டூயட் பாடாமல் அந்தக் காலத்து இளைஞர்களின் காதலைக் கோடிட்டுக் காட்டியதாலோ என்னவோ அந்த நிழல் நிஜமாகிறது படத்தை பத்து தடவைக்கு மேலே பார்க்கவைத்தார் பலச்சந்தர்.அதற்குப்பிறகு அவரது எல்லாப் படங் களையும் பார்த்தே தீரவேண்டும் என்கிற வேட்கையை மூட்டியவர்.

அவர் அறிமுகப்படுத்திய ருசிதான்  பாரதிராஜாவை, மகேந்திரனை,  ஸ்ரீதர்ராஜனை, அவளப்படித்தான்ஸ்ரீப்ரியாவை நேசிக்க வைத்தது. தமிழகம் தாண்டி ஹிந்தி பெங்காலி ஒரியா மலையாளம், ஜப்பான், ஈரான்,சாப்ளின் படங்களைத் தேடித்தேடி பார்க்க- ரசிக்க தூண்டியது. இல்லையா ?.இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல இயக்குநர்களுக்கும் பொருந்தும்.

ஆனாலும் இந்த நூறுவருட சினிமாவில் கலைப்படைப்புகளுக்கான முயற்சிகள் எதாவதொரு காரணத்தால் வளரவிடாமல் வெட்டப்படுகிறது. பாலச்சந்தருக்குப் பிறகு மீறல் கதைகளை கொடுத்து நிலைத்து நிற்காமல் போகிற சூழல் தான் இன்னும் நீடிக்கிறது. எனவே சிகரம் என்கிற தனது பட்டப்பெயரைத் தக்கவைத்துக் கொண்டே தொடர்கிறார். அவருக்கு கிடைத்திருக்கும் விருதைக் கொண்டாடுவோம்,அவரை வாழ்த்துவோம்.

15.4.11

அக்கம் பக்கம் அரசியல் பராக்கு பார்த்தல் 5


வெகுதூரம் நிற்காமல் ஓடிய ஓட்டைப்பேருந்து போல. நிற்கப்போகும் போது நெடு நேரம் உருமி விட்டு ஓய்வெடுத்துக்கொண்டது தேர்தல்.திரும்ப  இயக்குவதற்கு  இன்னும் ஒரு மாதம் காத்திருக்கவேண்டும்.அதுவரை அது மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு இருக்கும்.அதுவரை திருவாளர் தேர்தல் ஆணையம்தான் ஒரு மாத முதல்வர்.அப்புறம் நம்ம அம்மா ஜெயித்து விட்டால் தமிழகத்தில் சமூக பொருளாதார அரசியல் மாற்றம் வந்தே தீரும். ஆதலால் ஜப்பான்,சீனா,மாதிரி இங்கு நில நடுக்கமும் சுனாமியும் ஒருக்காலும் வராது. மாறி மாறி இந்த அதிமுகவும் திமுகவும் வந்து போனாலே போதாதா?.நித்தம் நித்தம் பத்துச்செருப்படி வாங்கிக் கொண்டிருப்பவனுக்கு சவுக்கடி வலிக்காது. சரி இது எப்போ மாறும் என்று அப்பாவியாகக் கேட்கிற ஜனங்களுக்கு பதில் சொல்ல வரிசையாக விஜயகாந்த், ரஜினிகாந்த், விஜய், தனுஷ்காந்த் என்று ஒரு பெரும் பட்டாளம் வரிசையில் நிற்கிறது.( தகுதியு திறமையும் பொங்கி வழிகிற எதிர்கால முதல்வர்கள் எவெரேனும் விட்டுப்போயிருந்தால் தயை கூர்ந்து தழிச்சமூகம் என்னை மன்னிக்கட்டும்).

பிடிக்கும், பிடிக்காது கொள்கை அரசியல் கூட்டணி அரசியல் எல்லாவற்றையும் தள்ளிவைத்து விட்டு நான் வருந்துகிற ஒரே விஷயம் அய்யா வைகோ அவர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்துத்தான்.திமுக வை விட்டு வெளியேறி தனியே ஒரு கட்சி ஆரம்பித்தவுடன் 2011 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக வருவார் என்று என்னைப்போல நினைத்த எண்ணிக்கையிலடங்கா தமிழர்களின் கணிப்பை தவிடு பொடியாக்கி விட்டது சமகால அரசியல்.தான் பேசவேண்டியதை மண்டபத்தில் எழுதி வாங்கி வாசிக்காத பேச்சாளன். நிறைய்ய இலக்கியம் படிக்கிறவர்,நிறைய்ய உலக அரசியல் படிக்கிற வாசகர். பாவம் இந்தச்சதுரங்கக் காய்நகர்த்தலில் கட்டங்களுக்கு வெளியே நிற்கிறார்.அந்தப் பாவத்துக்கு பரிகாரம் இன்னும் எத்தனை வருடங்கள் இந்த தமிழகம் அனுபவிக்கப்போகிறதோ தெரியவில்லை.

அதுகிடக்கட்டும் அரசியல். எனக்கு ஜெயலலிதா அவர்களை நிறைய்யப் பிடிக்கும் நடிகர் திலகத்தோடு இணைந்து நடித்த அத்தணை படங்களையும் குறைந்த பட்சம் நாலு தரமாவது பார்த்திருப்பேன். குறிப்பாக தெய்வமகனும், கலாட்டாக்கல்யாணமும்,இன்ன பிறவும்.புற்கள் நிறைந்திருக்கும் அந்த மலை முகடுகளில் எஸ்பிபி குரலை தன்குரலாக்கிப் ’போட்டுவைத்த முகமோ’ என்று பாடும் போது எற்படுகிற பரவசம் சொல்லில் அடங்காது.

நடிகை என்று சொன்னவுடன் பழய்ய நடிகைகளில் ஒருவர் நடிப்பு அலாதியாக இருக்கும் அவர் பேர் சட்டென நினைவுக்கு வரவில்லை.அவரது தனிச்சிறப்பு வாய்ந்த நடிப்பும் அதைவிடப்பிடிக்கும்.தோசைக்கரண்டியை முகத்து நேரே நீட்டிக்கொண்டு பேசுகிற மாதிரி சோத்தாங்கையை வைத்துக்கொண்டு வசனம் பேசுவார்.கோபம் சந்தோசம்,பரிதாபம்,திகைப்பு என எல்லாவற்றிற்கும் தோசைக்கரண்டியையே நீட்டுவார்.

தோசை என்று சொன்னவுடன் இப்போது படாரென்று நினைவுக்கு வருவது மதுரை. மதுரைக்குள் சமீபமாக நுழைகிற எல்லோருக்கும் கொடுக்கப்படுவது கையில் ஒரு அருவாளும் வாயில் அண்ணன் அஞ்சா நெஞ்சன் என்கிற வார்த்தையும் தான்.தன்னை துதிபாடாத எதையும் மதுரைக்குள் நுழைய விடுவதில்லை என்பதில் வெற்றிபெற்ற அவர் ஆட்சியர் சகாயத்தின் வரவால் கதிகலங்கிப்போனார்.காலம் தோசையத் திருப்பிப் போட்ட மாதிரி போட்டுவிட்டது.

கடைசியாக ஒன்று கிட்டத்தட்ட சாத்தூர் முழுவதும் இருப்பவர்கள் 200ம் வரப்போகிறவர்கள் 50ம் விநியோகித்துவிட, விட்டுப்போனது எங்கள் ஏரியா தான்.என் ஜி ஓ காலனி, குயில்தோப்பு எல்லாம் நடுத்தரவர்க்கம் இருக்கிற கான்க்ரீட் வீடுகள்.எனவே இரண்டு பேரும் கொடுக்கவில்லையாம். ஆனால் ஆத்திரம் அடைந்த ஒரு அம்மா கொடுப்பதற்கு நியமிக்கப்பட்டவரை இப்பொழுதுவரை அவளே இவளே என திட்டித்தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

3.4.11

நகைச்சுவை நடிகர் வடிவேலு சாத்தூருக்கு வந்தார்.


சுருளிராஜனுக்குப் பிறகு எல்லோர் மனதிலும் பசை போட்டு ஒட்டிக்கொண்ட நகைச்சுவைக் கலைஞன் வடிவேலு. தனது நகைச்சுவையில் சமூகத்தின் அடித்தள மக்களின் குமுறல்களை பகடியாக்கும் கருத்தை அடிநாதமாக வைத்துக்கொண்டவர்.அறிவார்ந்த நகைச்சுவையாக தெரிவு செய்து தன்னை ஒரு மேல் மட்டத்தவனாக காட்டிக்கொள்ளாத வெள்ளந்தி நடிகன் வடிவேலு. பாரவண்டியின் மேக்காலாக அழுத்துகிற புறச்சூழலைக் கடத்திவிட ஒரு பத்து நிமிடம் வடிவேலுவின் நகைச்சுவையைப் பார்த்தால் மனசு இதமாகும். சிலபொழுதுகளில் கண்ணில் நீர்கோர்க்கிற வரை சிரிக்கமுடிகிற அவரது நகைச்சுவையை ரசிக்காத மனிதர்களே இருக்க முடியாது.

அவர் நேற்று சாத்தூருக்கு வந்தார்.ஒரு கட்சியின் பிரச்சார பீரங்கியாக இல்லாமல் ஒரு சிரிப்பு பீரங்கியாக அவரைப்பார்க்க அலைபாய்ந்தது. மேலே ஒட்டிக்கொண்டிருந்த இலக்கியம்,அரசியல்,வங்கி ஊழியன் என்கிற பகட்டுக்களை உதறிவிட்டு எம் சகோதர சகொதரிகளோடு கூட்டத்துக்குள் கறைந்துபோக சித்தமாயிருந்தேன். ஆண்களை விடப் பெண்கள் கூட்டம் அதிகாமக இருந்தது. ஆறு மணிக்கு வருவார் என்ற வாக்குறுதி ஏழறை வரை நீட்டித்தது. சாத்தூர் எட்வர்டு மேநிலைப்பள்ளிக்கு எதிரில் உள்ள கைவண்டி தள்ளுவண்டி வியாபரிகள் அவர்கள் எந்தக்கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் பூரித்துப் போயிருப்பார்கள். ஒரு அறை மணிநேரத்தில் இருநூறு சம்சா வை விற்றுத்தீர்த்த தள்ளுவண்டிக்காரரின் அருகில்தான் நானும் நண்பர் கணேசனும் நின்றிருந்தோம்.

தேதிமுக பிரமுகர் ஒருவர் கூடுகிற கூட்டத்தைப் பார்த்துக் கடுப்பாகி ”எலெக்சன் கமிஷன் காரன் என்ன..........றானா ” என்று கெட்ட வார்த்தையில் வசைபாடிக் கொண்டிருந்து விட்டு எத்தல் ஹார்வி ரோட்டிலிருக்கும் டாஸ்மாக்குக்குள் நுழைந்துவிட்டார். அந்தக் கூட்டத்திலிருந்த  எளந்தாரிகள் பத்துப்பேர் கிரிக்கெட் ஸ்கோரையும் ஓடிப்போய் பார்த்துக்கொண்டு அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணுமாக இருந்தார்கள்.நேரம் நெருங்க நெருங்க தெற்கே இருந்து வருகிற ஓவ்வொரு வாகன வெளிச் சத்துக்கும் கூட்டம் ஆரவாரம் செய்தது. ஏழுமணிக்கெல்லாம் ஆண்கள் பகுதியில் கூட்டம் அதிகரித்தது. எல் ஐ சி மேலாளர்,சத்யா ஓட்டல் சிப்பந்தி, நாலைந்து பஞ்சாயத்து தலைவர்கள்,ஐஓபி சிப்பந்திகள் எனத் தெரிந்த முகங்களாக நெருங்கி வந்தார்கள். அவரவர்க்கு ஒரு கட்சி பிடிப்பு இருந்தாலும் அவரது நகைச்சுவைக்காக வந்தோம் என்றார்கள்.

சத்தூரையே தூக்குகிற ஆரவாரத்தோடு வடிவேலுவின் வாகனம் வந்தது. பாதுகாப்புக்காக பிடித்திருந்த கயிற்றை கீழே போடும்  படிக்கேட்டுக் கொண்டார் தாய்மார்களை எதிரே வர அழைத்தார். அவன் இவன் நாயே பேயே என்றெல்லாம் யாரையும் திட்டவில்லை அவரது வழக்கமான மொழியிலேயே ரெண்டு நிமிடம் பேசிவிட்டு அங்கிருந்து கடந்துபோனார். அதனாலேயே யாருக்கும் ஓட்டுப்போடப் போவதில்லை என்கிற தன் மன உறுதியை தளரவிட்டுவிடாமல்,” வாடி இன்னும் இருபது க்றோஸ் அடைச்சாத்தான் நாளைக்கு காக்கிலோ கோழி எடுக்க முடியும்” என்று சொல்லிவிட்டு தீப்பெட்டியாபீசுக்குள் போன  அம்மாவின்  கையைப் பிடித்துக்கொண்டு போன பத்துவயதுச் சிறுமியிடம் இருந்த சந்தோசம் போலக்கூட்டம் கறைந்து போனது.

அந்த ஆராவாரமும்,கைதட்டலும்,விசிலும் வெறும் உணர்ச்சிகள் மட்டு மில்லை ஒரு கட்சிக்கானதாகவும் தோணவில்லை. எல்லோருக்குள்ளும் யாரையோ ஒரு ஆளைத் தேடுகிற ஆர்வம் மறைந்து கிடக்கிறது. தங்களின் சோகங்களைக் கடத்திவிடுகிற ஒரு தோளைத்தேடியபடியே காத்திருக்கிறது பாமரக்கூட்டம். அவர்கள் தேடுகிற சாயலில் ஆள் கிடைக்கிற வரை கூடிக்கூடி கலைந்து போய்க்கொண்டே இருப்பார்கள். கிடைக்காமலா போகும் ?

6.2.11

அக்கம் பக்கம் - பராக்குப்பார்த்தல்


ஆனந்தவிகடனில் 'ஆதவன் தீட்சண்யாவின்' சிறுகதை.

 இளம் வயதிலேயே துவங்கிவிடும் பெண் ஈர்ப்பின் குழப்பமான காலம் அந்த வளர் இளம் பருவம்.அந்த அழியாத கோலங்கள் எல்லோரையும் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டும்.கிராமங்களில் நுழையும் அழகிய பெண்களின் பின்னாடி ஒரு நூறு கதைகள் உருவாகும்.அதை ஒரு பத்தாவது படிக்கிற கிராமத்தானின் கண்ணாடி வழியே படம் பிடிக்கிற கதை. தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை சுசிலாக்காவை அழியாத கோலங்கள் ஷோபாவின் சாயலோடும்,ரோச்சாப்பூ ரவிக்கைக்காரி தீபாவின் சாயலோடும் அறிமுகப்படுத்தி அதைத்தாண்டி ஒரு முடிவைச் சொல்லுகிறது.



எதிர்பாராத ஏவுதளத்திலிருந்து எகிப்தின் எழுச்சி.

எகிப்து தேசத்தின் எழுச்சி பிரமீடுகளின் உயரத்தைத்தாண்டி விட்டது.பத்து நாட்களுக்கு மேலாக கெய்ரோ வீதிகளில் நங்கூரமிட்டிருக்கிற சாதாரண ஜனங்களின் கோபம் விமர்சனத்திற்கானதல்ல வழிகாட்டுதலுக்கானது. பெயர் சொல்லக்கூடிய எந்த எதிர்க்கட்சிகளின் பின்புலமும் இல்லாமல் காட்டுப் பூக்களைப்போல வெடித்திருக்கிறது புரட்சி.கட்சிகள் இப்போது மக்களிடம் உறுப்பினர் அட்டை கோருகிற விந்தை நடக்கிறது.எழுத்தாளர் கோணங்கி சொன்னது போல புரட்சி எனும் ராக்கெட் கிளம்பியிருக்கிறது. எதிர்பாரத ஏவுதளத்திலிருந்து.ஹோஸ்னி முபாரக் பதவி விலகிவிட்டார்.
இந்த காட்டுப்பூக்களுக்குள் தொலைந்து திரும்பியிருக்கிறார் பதிவர் ராகவன். பணி நிமித்தம் கெய்ரோ சென்ற அவர் மக்கள் எழுச்சிக்குள் சிக்கிப் பின் வெளியேறியிருக்கிறார்.அந்த அனுபவத்தைச் சுடச்சுட எழுதினால் நல்லாருக்கும்.

நோய்நாடி நோய்முதல் நாடி.

சக்கரை நோய், மாரடைப்பு, புற்றுநோய் ஆகியவற்றின் கேந்திரப் பகுதியாக இந்தியா மாறிவருகிறதென்பதை உலக சுகாதார நிறுவணம் எச்சரித் திருக்கிறது. ஆகவே நூறு மாவட்டங்களில் இவற்றிற்கு எதிரான விழிப்புணர்வும்,மருத்துவமும் வழங்குகிற திட்டத்தை குலாம் நபி ஆசாத் துவக்கியிருக்கிறார்.சினிமா கல்வி அரசியல் ஆகியவற்றின் வழியே இந்த நோய்கள் பரப்பப்படுக்கிறது என்பதையும் பன்னாட்டு இந்நாட்டுக் கம்பெனி களில் அது ஊற்றெடுக்கிறது என்பதையும் சொல்லாத வரை இது இலை களுக்கான வைத்தியம் மட்டுமே.

ஒருபக்கம் அருவாப்படம்,  மறுபக்கம் பொம்மைப்படம்.

நேற்று காவலன் படம் கிடைத்தது.எதிர்பாரதாவிதமாகச் சந்தித்த நண்பர் ஒருவர் வலியக் கொடுத்தார்.வீட்டில் வந்து போட்டுப் பார்த்த பின்னாடிதான் தெரிந்தது, குப்பையில் போடவைத்திருந்ததை என்னிடம் கொடுத்திருக்கிறார் என்று.பொம்மைப்படம் விரும்பிப் பார்க்கிற எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும்.அயல் நாட்டிலிருந்து வருகிற எல்லோரும் ,மதுரை மனிதர்களை அருவாளின் மறு ரூபமாகத்தான் பார்க்கிறார்கள்.மதுரையைப் பற்றிப் படம் எடுங்கடான்னா அருவாளைப்பத்தி படம் எடுக்கிறார்கள். அதில்லாவிட்டால் நாலு வேற்று மொழிப்படம்  இல்லை ஆங்கில எட்டு கார்ட்டூன் படங்கள் பார்த்து அதில் எலிக்கு கதாநாயகன் ,பூனைக்கு வில்லன் (அல்லது பிரகாஷ்ராஜ்) வேஷம் கட்டி களத்தில் இறக்கிவிட்டு விடுகிறார்கள். அதில் நடித்து முடித்த கையோடு ’இங்கே தொகுதிப்பங்கீடு பற்றிப்பேசப்படும்’ என்று போர்டு மாட்டிவிடுகிறார்கள்.தொப்புளைச்சுற்றி பம்பரம் விடுகிற, பிரமீடுகளைச் சுற்றி சுற்றி டூயட் பாடுகிற இவர்களின் கனவும் அரசியலும் வேறெப்படி இருக்கும்.

பெருமிதம்.

போன 26 ஆம் தேதி சானலைத் திருப்பும் போது ஒரு பேட்டி தட்டுப்பட்டது.  கதநாயகர் ஒருவர் பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தார். நார்வே  நாட்டுக்கு படப்பிடிப்புக்கு போனார்களாம்.அந்தப்படம் தான் நார்வேயில் டூயட் சாங்க் எடுத்த முதல் படமாம். நார்வே மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் ஒரே ஆச்சரியமாம்.இதுவரை ஆவணப்படம் எடுக்க வந்திருக்கிறார்கள்,சுற்றுலா வந்திருக் கிறார்கள், அரசுமுறைப் பயணமாக வந்திருக்கிறார்கள்,வாங்க விற்க வந்திருக்கிறார்கள் ஆனா டூயட் சாங் எடுப்பதற்காக வந்த மொதோ டீம் நீங்கதான் சார் என்றார்களாம். அதை சொல்லும்போது அவரது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்.ஊருக்குள்ள தப்பிவந்த கொரங்கப்பாத்த மாதிரிப்பார்த்திருக்கிறான் நார்வேக்காரன். அட வெங்காயம் இது கூடப்புரியலயா எத்தன வடிவேலு காமெடி நடிச்சிருக்கே, பார்த்திருக்கே. இந்தியாவின்,தமிழகத்தின் மானத்தைக்கூறுபோட்டு வித்துட்டு வந்ததைப் பெருமையாகப் பேசியபடி இருக்கிறது பாப்புலர் இலக்கியம். அதோடு கொண்டாடினான் குடியரசுத் தமிழன்.


7.1.11

இடைவெளியை, புத்தாண்டை சரிக்கட்டும் பதிவு.

கிட்டத்தட்ட பத்து நாட்கள் வலைப்பக்கம் வராமல் வனவாசம் போமாதிரி இருந்தது.நெட் துண்டிக்கப்பட்டு அதை மீளப்பெறுவதற்குள் வருடடத்தின் இறுதிநாளும் அடுத்த ஆண்டின் துவக்க நாளும் கடந்து போய்விட்டது.வலை நண்பர்கள் யாபேர்க்கும் முகமன் சொல்ல
இந்த நாளே கிடைத்திருக்கிறது.தாமதமானாலும் எல்லோர்க்கும் 2011க்கான  என்  வந்தனம்.

ஒவ்வொரு ஆண்டும் நான் என் தோழனோடே இருந்தது தவிர வேறெதுவும் நினைவில் வரவில்லை கடந்த இரண்டு ஆண்டுகள் அது தூரமாகிக்கொண்டு போகிறது.எனக்கு கல்யாணமான முதலாண்டு நான் அவள் வீட்டில் இருந்தேன். அந்த அடர்ந்த பனியில் புதுக் கனவு களோடு தூங்கிப்போயிருந்த்தேன்.அப்போது மணி பனிரெண்டைத் தாண்டி விட்டது. தேவாலயம் போய்விட்டு வந்த எனது மாமியார் வீடு தூங்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது அந்தக் குறுகிய தெருவில் சலசலப்புக் கேட்டது.அந்தத் தெருவுக்கு சம்பந்தமில்லாத மூன்று பேர் நெடு நெடுவென உள்ளே வந்தார்கள். தெரு அவர்களை ஊகிக்க முடியாமல் திணறியது.எங்கள் வீட்டுக்கதவைத்தட்டி எனை விசாரித்து எழுப்பச் சொல்லி வாந்ததும் ஆரத்தழுவிக்கொண்டு புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார்கள் பீகேயும்,மாதுவும்,பெருமாள்சாமியும்.
அப்படித்தான் அந்த1987 விடிந்தது.அந்தக்கதகப்பான புத்தாண்டு காலங்கடந்தும் நினைவில் நிலைக்கும். அந்தப்புத்தாண்டுப் பரிசை பொக்கிஷமாக்கி வைத்திருக்கிறேன்.

நினையாத நாளிலே தேவதூதனைப்போல வந்த அந்த மூன்றுபேரின் கைகளிலும் தங்கமும் வெள்ளைப்போழமும்,வாசனைத் திரவியமு
மாய் நட்பு இருந்தது. எல்லா புத்தாண்டும் மாதுவோடே பிறந்ததும்,அவனருகில் இல்லாத தருணங்களில் முதல் வாழ்த்தை அவனுக்கென அடைகாத்து வைத்திருந்ததும் சொல்லித் தீராத கணங்கள்.

தென்மேற்குப்பருவக்காற்று பார்க்க நேர்ந்தது.களவின் பெருமை சொல்லும் இன்னொரு படம் இது.வெகு நீளமாக சொல்லவேண்டிய ஒரு கதையை சிகப்புத்துண்டு போட்ட ஒரு பெரியவர் ரெண்டுவரியில் சொல்லிவிட்டுப்போகிறார்.கதைக்கென தனித்து நாயகனும் நாயகியும் இருந்தால்கூட அந்த இரண்டு பாத்திரங்களைச்சேர்த்து விழுங்கிக்கொண்டது சகோதரி சரண்யாதான்.அநியாயத்துக்கு அவரைக்கொன்று போடுவதை ஏற்கமுடியவில்லை. கதைகளிலும்சரி,நிஜத்திலும் சரி அவள் வாழவேண்டும்.

அதீத பிம்பங்களில் இருந்து விலகி இப்படி நிஜத்துக்கு அருகில் வரும் படங்கள் கலைப்படங்களாயிருந்தாலும் ரொம்ப ஸ்லோவாக ஓடினாலும் சரி அது ஒரு படைப்பாகும்.அல்லாதவை சரக்குகளே நல்லா மாசாலா ஏத்திப் போட்ட  சரக்குகள்.இதற்குவக்காளத்து வாங்கிய
இயக்குநர்களை நீயா நானாவில் பார்க்க நேரிட்டது.ஆனால் அதற்கு இணையான கூட்டம் எதிரில் உட்கார்ந்திருந்ததும் காரமான நிஜத்தை
எடுத்து வழக்குறைத்ததும் நம்பிக்கையை கொடுக்கிறது.தோழர்கள் ராம்,வசந்த்,மிஸ்கின் ஆகியோரின் குரல்கள் முக்கியமானவை.

3.12.10

வலையுலகின் மீது குவியும் நம்பிக்கை.

ஆங்கிலத்தில் தயாராகி ஹிந்திக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட போதிலும் அந்த திரைப்படம் கவனம் பெறாமலே போய்விட்டது.தமிழுக்கு மொழிமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.பின்னர்
தோழர் வழக்கறிஞர் சத்திய சந்திரன் தொடுத்த வழக்கினால் அம்பேத்கர் திரைப்படம் தமிழில் வருகிறது.அதுவும் சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் சடங்குக்கு திரையிட்டுவிட்டு மீண்டும் பூசனம்  பூக்கவிடுவதாக சித்தம் கொண்டிருக்கிறது வாழும் சமத்துவப் பெரியாரின் பரிவாரம்.

எதிரே சீறிப்பாய்ந்து வருகிற காரை 'எந்திரன்' மாதிரி கையிலே பிடித்து கரப்பான் பூச்சியைத்தூக்கிப் போடுகிற காட்சி அமைக்கப்பட்டால் கூட அம்பேத்கருக்கு அத்தனை திரையரங்கும் வழிவிடுமா என்பது சந்தேகம்.தமிழ்நாட்டில் எங்காவது ஒரு திரையரங்கு ஒரு தலித்துக்கோ,இல்லை ஒரு முற்போக்காளருக்கோ சொந்தமாக இருக்க வாய்ப்புமில்லை.ஐஸ்வர்யா ராயில்லை,ஆஸ்கார் விருதுவாங்கிய இசையமைப்பாளர் இல்லை.இன்னும் புரட்சியாளர் அம்பேத்கரை ஒரு சாராருக்கான அடையாளமாகவே தள்ளிவைத்துப் பார்க்கிறோம்.தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருக்கும் இயக்கங்கள் கூட இந்தப்படம் குறித்து ஏதும் பேசமலிருக்கிறது.

வெளியில் தமுஎச அம்பேத்கர் படத்தின் திரையிடலை  இயக்கமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. முன்னதாக வலையுலகில் தோழர் மாதவராஜ்,உண்மைத்தமிழன்,திரை_ பறை கருணா ஆகியோர் இது குறித்து தங்களின் ஆதங்கங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.இன்று திரையிட இருக்கும் நிலையில் எந்த நாளிதழிலும் இது குறித்த செய்தியோ,விளம்பரமோ வரவில்லை.நண்பர்களே சமூகத்தில் தொடரும் ஒதுக்குதலின் நீட்சியாகவே இந்த திரைப்படத்தின் மீதான அனுகுமுறையையும் கருதவேண்டியிருக்கிறது. ஆகவே அம்பேத்கர் திரைப்படத்தின் விளம்பரத்தை நமது பக்கங்களில் பதிப்பதன் மூலம் வலை ஒரு மாற்று ஊடகம் என்பதை நிலை நிறுத்துவோம்.

வாருங்கள் ஊர்கூடித்தேர் இழுப்போம்.

28.11.10

நந்தலாலா - அபூர்வமாகப் பூக்கும் தமிழ்ச்சினிமா.

எழுத்துப்போட்டு முடிந்த பிறகுதான் போனோம்.பத்து இருபது வருடங் களுக்குப் பிறகு ஆசையோடு பார்க்கப்போன பகல்காட்சி.நீல நிறப்படுதாவை விலக்கியபோது உள்ளிருந்த நூறுபேரில் சிலர் திரும்பிப் பார்த்தார்கள்.காட்சி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.விசிலடிக்க,கட்டவுட் வைக்க, தாள்களைக் கிழித்து தூவி விட யாரும் வரவில்லை. அப்பொழுது அகி பள்ளிக் கூடத்தி லிருந்து வந்து கொண்டிருந்தான்.திருவனந்தபுரம் கலாபவன் அரங்கில் பார்த்த ஒரு நூறு திரையிடல்களில் இருந்த அமைதி திரும்பிவந்தது.அங்கே பார்த்த ஒவ்வொரு படத்தின் முடிவிலும் இப்படியொரு படத்தைத்தமிழில் பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கம் வந்து போகும். அந்த ஏக்கத்தை தனிக்கிற படம் நந்தலாலா.பாஸ்கர் மணி கீழ்பாக்கம் மருத்துவம்னையிலிருந்து தப்பித்து வெளிவருகிறான் 'அகி' என்கிற அகிலேஷ் வீட்டிலிருந்து தப்பித்து வெளிவருகிறான் இருவரையும் சேர்த்துவைக்கிற தாயின் தாகம்.தங்களின் தாயைத்தேடி நடக்கிற பயணம் தான் கதை.

அவர்கள் பயணிக்கிற வழியெங்கும் தட்டுப்படுகிற மனிதர்கள் எளிதில் கோபப்படுகிறவர்களாகவும்,நிதானித்து புரிந்து கொண்ட பின் மனிதம் வழிந்தோடுகின்ற ஈர மனசுக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.ஒரு நெடிய பயணத்தில் கரம் கோர்க்கிற ரெண்டு குழந்தைகளும் கால்நடையாகவே தொடர்கிறார்கள்.அவர்களை ஏனையோர் சந்திக்கிற ஒவ்வொரு பகுதியும் தனித்தனி குறும்படம்.அவர்களை நடக்க விடாமல் எல்லோரும் கைகளில் தாங்கி, முதுகில் ஏற்றிக்கடத்தி விடுகிற கவிதை நிகழ்வுகள்.இதில் இன்னோவா காரில் வரும் புதுமணத் தம்பதிகள் தவிர எல்லோரும் ஒரே வகை.

க்ளோசப் காட்சிகளை தொட்டால் சினுங்கி,ரயில் பூச்சி,ஆலம் விழுதின் நுனி,பிறந்த குழந்தையின் விரல்களைப்போன்ற வெளிர் மஞ்சள் நுனி ஆகியவற்றுக்கு ஒதுக்கி வைத்து விடுகிறார். மற்ற எல்லாவற்றையும் உணர்வு பூர்வமான பிரதிபலிப்புக்கு அர்ப்பனித்து விடுகிறார்.கலவரம் நடக்கும் பகுதியில் வந்து போகிற மாற்றுத்திறனாளியும்,கூட்டு கற்பழிப்புக்குள்ளாகிற பெண்ணும்,சாலையோர விபச்சாரியும் இந்த உலகத்துக் உரத்த மௌனத்தில் ஏதேதோ சொல்லிவிட்டுப் போகிறார்கள்.சாலையோர விபாச்சாரி விவரிக்கிற பழய்ய வாழ்க்கை ஒரு கண்ணீர்க்கவிதை.வசனகர்த்தாவை துக்கிவைத்துக் கொண்டாடவேண்டும்.

பெரும்பாலான தமிழ்சினிமாவின் கதாநாயகர்களின் முதல் பிரவேசத்தை, காமிரா காலில் தொடங்கி  மேலேறி முகத்துக்கு கொண்டு வரும். சாயங்கால மானால் மாடு வீடு திரும்பும் பாதைக்கு அணிசையாய் இழுத்துச் செல்வது போல. நாயகிகளின் இடுப்பையும், மார்பகத்தையும் கண்டால் நகராமல் இருப்பது எல்லாம் தமிழ்சினிமா காமிராக் கலாச்சாரம். இந்தப்படம் முழுக்க முழங்கால்களுக்கு கீழேயே அதிக காட்சிகள் காண்பிக்கப்படுகிறது.எதோஒரு ஜப்பனியப்படத்தின் தழுவல் தானென்றாலும்,இப்படியும் படம் எடுக்காலாம் பாருங்கள் என்று முகத்திலடிக்கிற முயற்சி இது.சூறைக்காற்றில் மேலெ ழும்பும்  மக்கும் மக்காத குப்பைகளுக்கு மத்தியில் உலகத்தரம் வாய்ந்த அரிதான தமிழ் சினிமா.இடைவேளையில் வெளிவந்த போது வந்திருந்த பத்து முப்பது இளைஞர்களின் முகத்தில் ஏமாற்றம் இருந்தது.

75 வருட திரைப்படங்கள் தமிழ் ரத்தங்களில் ஏற்றி வைத்திருக்கிற சாக்கடையை  ஒன்றிரண்டு திரைப்படங்கள் மூலம் சுத்தப்படுத்திவிட முடியாது. ஒரே குத்தில் பத்துப்பேரைச் சாய்க்கிற காட்சிகள்.கஞ்சிக்கில்லாத ஏழை நாட்டுக்கோட்டை நகரத்தார் வீடுகளில் வசிக்கிற செட்டுகள்.லேசாக் கண்ணசந்தால் ஓடிப்போய் சுவிட்சர்லாந்தில் பிருஷ்டத்தை  ஆட்டுகிற காதல்பாடல்கள் இல்லாத படம் மொக்கை படம் என்றுதானே வர்ணிக்கப்படும். ஆனால் பாருங்கள் மொத்த தமிழ்ச் சினிமாவின் குறிப்பிட்டுச் சொல்லுகிற படங்கள் எல்லாமே அந்தந்த காலத்தில் ஓடாமல் முடங்கிய மொக்கைப்படம் என்பது தமிழ்ச் சினிமாவின் சாபக்கேடு.

இதில் விமர்சிக்கவேண்டிய இடங்கள் இல்லையா என்றால் இருக்கிறது. எனினும் அதைப் புறந்தள்ளிவிட்டு தூக்கிப் பிடிக்கவேண்டிய படைப்பு இது.இல்லையென்றால் 200 கோடி,162 கோடி செலவு செய்து தயாரிக்கும் கதையில்லாத திரைப்படம் தான் படைப்பு என்று சந்தைக்கு வரும்.

காட்சிகளின் உறுத்தலற்ற பதிவுக்கு போட்டி போட்டுக் கொண்டு இசை இழுத்துச் செல்லுகிறது. இந்திய திரை இசையில் பின்னணி இசைக்கு புதிய பரிணாமமும்,அழகிய பரிமாணமும் கொடுத்து நிறுத்தி வைத்திருப்பவர் இளையராஜாதான்.ஒரு ஏழை வீட்டுக்கு வரும் அதிகாரியின் பிரவேசம் என்ன மனநிலையை உருவாக்கும் என்பதை குஞ்சுக் கோழியின் கெக்கெக் சத்தத்தை சேர்த்து பிரம்மிப்பூட்டியவர் இளையராஜா.படம் முள்ளும் மலரும் இடம் காளியின் வீட்டுக்கு வரும் எஞ்சினியரின் வருகை.ஒரு 900 இந்தியத் திரைப் படங்களுக்கு இசையமைத்த அவரின் மேதமை மத்திய அரசால் நான்கு முறை கௌரவிக்கப்பட்டிருக்கிறது.

காட்சி ஊடகத்தின் மீதும், கதை மீதும்  அதீத நம்பிக்கை வைத்திருக்கிறது இந்த நந்தலாலா.அதற்கு ஈடு கொடுக்கிற அகிலேஷ்,பாஸ்கர்மணி அகியோருக்கு இணையாக இசை கூடவே நடக்கிறது.இருவரும் தங்கள் தாயைச்சந்திக்கிற  மனசை உலுக்குகிற காட்சியை கண்ணீர் விடாமல் சந்திப்பது சிரமம். அந்த ஈரம் அடுத்தொரு தரமான தமிழ்ச்சினிமா வரும் வரை காயாமல் காத்திருக்கும். நம்பிக்கையோடு.

31.10.10

பாலிவுட்டில் தோண்டி எடுக்கப்படுகிறது, புதைபொருளாகிப்போன ஒருவலாறு.

                                                    Masterda Surya Sen 

ஒரு உண்மையான விடுதலை வரலாறு பாலிவுட்டில் படம்பிடிக்கப்படுகிறது.
மறைத்துவைக்கப்பட்ட செங்கொடிப் பதாகையின் நிழலும் முதன் முறையாக வெள்ளித்திறைக்கு வருகிறது.'க்கேலேங் ஹம் ஜீ ஜானு ஸே'(Khelein Hum Jee Jaan Sey) .'உணர்வோடும் உயிரோடும் விளையாடுவோமாக'. என்று அர்த்தமாம். ராஜசுந்தரராஜன் அண்ணாச்சிக்கு நன்றி.அசூதோஷ் கவாரிகர் இயக்கத்தில் அபிஷேக்கும்,தீபிகாவும் நடிக்கிறார்களாம். ஜாவேத் அக்தார் படல்களில் வந்தேமாத்ரம் புதியகுரலில் ஒலிக்கப்போகிறது.

பக்கிம் சந்த்ர சட்டர்ஜியின் கவிதை வந்தேமாத்ரம். அந்த ஒரு சொல் இந்தியா முழுமைக்கும் சொந்தமானதாக மாறிப்போனது.அப்போது விடுதலை முப்பதுகோடி மக்களின் பொதுப் பசியாகி இருந்தது.உயிர், உடமை, உற்றார், பெற்றோர், மேட்டிமை, கல்வி, கலவி, இளமை, கனவு, இயல்பு எல்லா வற்றையும் காவு கொடுத்துக் கிளம்பிய விடுதலை லட்சியம் சாதாரணமல்ல.
21 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்திய மண்ணில் எண்ணிலடங்காத விடுதலை விதைகள் பதுங்கிக்கிடந்தது.இந்தியன் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பதில் ரத்தம் கோரியபடிக் கிளம்பிய இயக்கங்கள் முளைத்த காலமது. எழுதப்பட்ட வரலாறுகளில்,பாடநூலில் சொல்லிக்கொடுக்கப்பட்ட மணப்பாடத் திட்டத்தில் காங்கிரஸ் மட்டுமே முன்நிறுத்தப்பட்டது.பல உண்மைப் போராட்டங்களின்  ரத்தகறைகள்,கலகங்கள் ஒதுக்கி  வைக்கப் பட்டன. அவற்றில் ஒன்று சிட்டகாங் எழுச்சி.

விடுதலைக்கு முந்திய இந்தியாவில் வங்காளத்தில் இருந்த ஒருங்கிணைந்த மாவட்டம் சிட்டகாங். மலை, ஆறு, கடல், இறுக்கமான வனம் என்கிற நிலவமைப்புகளைக்கொண்ட  பகுதி. தற்போதைய பங்களாதேஷின்
இரண்டாவது பெரிய துறைமுகமாக விளங்கும் நகரம் சிட்டகாங்.பிரிட்டிஷ் ஆதிக்கம் குவிந்து கிடந்த அந்த 1930 களில் பெரும் தகிப்புடன் கிளம்பிய பல விடுதலை போராட்டங்களில் சிட்டகாங் எழுச்சியும் ஒன்று.தோழர் சூரியா சென் தலைமையில் சுமார் 65 தோழர்கள் ஏந்திய துப்பாக்கிகளின் வெடிச்சத்தம் பிரிட்டிஷ் பேரரசை நிலைகுழையச்செய்த நாள் ஏப்ரல் 18, 1930.

பிரிட்டிஷ் பேரரசின் மூளையான 'ஐரோப்பிய க்ளப்பின்' உயர்மட்ட அலுவலகம் அமைந்திருந்த இடம் சிட்டகாங்.அங்குதான் பேரரசின் உயரதிகாரிகள் வாசம் செய்தார்கள்.அவர்களை மொத்தமாகத் தொலைத்துக் கட்டவும், தபால், தந்தி, புகைவண்டி போன்ற தொலைத் தொடர்பு வசதிகளை நிர்மூலமாக்கவும் திட்டமிடப்பட்டதுதான் சிட்டாகாங் எழுச்சி. இதை கொரில்லாத் தாக்குதல் என்று சொல்லுவார்கள். இது வியட்நாம் விடுதலையின் அடிமுழு ஆதாரம். இதில் பிரதிலதா வடேதர்,அம்பிகா சௌத்ரி,ஆகியோரோடு தோழர் கல்பனாதத்தும்  இருந்தார். ராணி மங்கம்மாள், ராணி லக்குமிபாய், கேப்டன் லட்சுமி போன்ற பெயர்களுக்கு இணையான இன்னொரு பெயர்
'கல்பனாதத்'.

திட்டமிட்டபடி  பத்துமணிக்கு துவங்கியது வீரவிடுதலையின் அணிவகுப்பு. முந்திட்டப்படி ராணுவத்தளவாடங்களை மட்டுமே அவர்களால் தகர்க்கமுடியவில்லை எஞ்சிய அணைத்தும் வெற்றியடைந்தது.பின்னர் ஓரிடத்தில் கூடி 'விடுதலை இந்தியா' என்கிற பிரகடத்தை முழங்கி தேசியக் கொடியேற்றிவிட்டு காட்டுக்குள் போனார்கள்.

ஒரிஜினல் வீரம், ஒரிஜினல் விடுதலை,  எதுவும் இந்தியாவில் நிலைக்க முடியாது என்ற விழுமியத்தின் எச்சம் தான் சிட்டாகாங் வீரர்கள் சிறைப் பிடிக்கப்பட்ட வரலாறு.பிடிபட்ட அந்த 65 பேர்கொண்ட' இந்திய விடுதலைப் படை' (indian revolution army)  யில் பதினான்கே வயதானதொரு வீரன் இருந்தான். பிடிபட்டவர்களில் மிக மிக இளவயதுக்காரன். வாழ்வியல் சுழற்சியின் அதியற்புதக் கனவுக் காலமான விளையாட்டுப் பருவத்தை தியாகம் செய்த தோழர் சுபோத்ராய்.கைதுசெய்யப்பட்டு 1940 ஆம் ஆண்டே  உயிரோடு விடுதலை அடைந்து 2006 ஆம் ஆண்டு வரை உயிரோடிருந்த தோழர் சுபோத்ராய்.பெரும்பாண்மை இந்தியர்களின் கவந்த்துக்கு வராத இந்தவரலாறு வெள்ளித்திரை மூலம் திரும்புகிறது.அது பெரிய சந்தோஷம்.

இந்த நிஜமான புரட்சிக்காரர்களின் செல்லுலாய்ட் பிம்பங்களாக வெளிவர இருக்கிறது 'க்கேலேங் ஹம் ஜீ ஜானு ஸே' ('கெலீன் ஹம் ஜீ  ஜான் சே').ஒரு கதை,ஒரு நாவல்,ஒரு உண்மைச் சம்பவம் திரைப்படமாகும்போது நீர்த்துபோகவும் சாத்திய மிருக்கிறது அடர்த்தி யாகவும் சாத்தியமிருக்கிறது.அது படைப்பாளியின் செய்நேர்த்தியைப் பொறுத்தது.

பொறுத்திருந்து பார்க்கலாம்.

26.10.10

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா

இன்றைய்ய முக்கியச்செய்திகள்.

நமீதாவை காரில் கடத்த முயன்ற வாலிபர் கைது.

ராதா ரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

14 வருடங்களுக்கு முன்னாள் தான் எழுதிய ஜூகிபா கதைத்திருட்டு தான் எந்திரன்.
கவிஞர், எழுத்தாளர் தமிழ்நாடன் போலீசில் புகார்.

இந்த மூன்று முக்கியச்செய்திகளும் பேப்பரில். ரஜினியின் அரசியல் பிரவேசம்-
இது எக்கச்சக்கமாக இண்ட்லியின் முன்னனியில்-

என்னென்ன செய்திகள் இந்த தமிழக மக்களைச் சென்று சேரவேண்டும் என்பதில் மிகக்கறாரான நடைமுறை
பின்பற்றப்பட்டு வருகிறது.ஊடகங்களும் தமிழ்சினிமா மாதிரியே பெருத்த மசாலாக்கலவையில் தான் செய்தி தயாரிக்கிறார்கள்.பேப்பர் இல்லாமல் கூட செய்திவரும் மசாலா இல்லாத செய்தித்தாள் கிடையவே கிடையாது.  நமீதா கடத்தப்பட்ட விவகாரம்.26 வயதான பெரியசமிக்கு இருந்த லட்சியத்துக்கு 50 க்கும் மேலாகிறது.1960 களிலேயே அஞ்சலிதேவி,பானுமதியம்மா போன்றவர்களின் மீது வெறிகொண்டலைந்த ரசிக மனோபாவம் இது.அதைக்குறையவிடாமல் பாதுகாப்பதில் இந்த ஊடகங்களுக்கு இருக்கும் தொழில் பக்தி அலாதியானது.கூட இருந்த நண்பர் சொன்னார் இந்தச்செய்தி பொய் என்று.நமீதாவை எப்படிக்காருக்குள் கடத்திக்கொண்டுபோயிருக்க முடியும் என்கிற நக்கலான கேள்விக்கென்ன பதில்.

எழுத்தாளர் தமிழ்நாடன் மேல் அனுதாபம் வருகிற செய்தி இது.என்னமோ தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகிற சினிமாக்கள் எல்லாம் காப்புரிமைச்சட்டத்தை மதித்து உத்தரவு வாங்கிய பின் தொடங்கப்படுகிற மாதிரி நினைப்பு. இது எந்திரனுக்கு கொடுக்கப்படும் கொசுறு விளம்பரம் என்பதுதான் நிஜம்.சங்கர் இந்தியன் படம் எடுத்தவுடன்
இருந்த பத்துரூபாய்க்கும் பலகாரம் வாங்கித்தின்றுவிட்டு தாலுகா ஆபிசுக்குள் போனாராம் ஒரு சினிமாப் பைத்தியம்.எதுக்காக...லஞ்சம் கொடுக்காம சர்ட்டிபிகேட் வாங்குவதற்கு.இந்தியன் பட வெற்றிக்குப்பிறகு கமல்  அரசியலுக்கு  வருவாரா மாட்டாரா என்று புரளியைக் கிளப்பவில்லை.அந்த அரசியல் தான் என்னன்னு புரியல.

ஆனால் ஒவ்வொரு முறை ரஜினி படம் வெளிவந்து அடுத்தபட வேலைகள் துவங்கும் போதும் திட்டமிட்ட புரளி
யைக்கிளப்பி விட்டுவிடுகிறார்கள். பிஸினஸ் டாக்டிஸ்.எம்ஜியார் ஆட்சிக் காலத்திலிருந்து இப்படிப் புரளியைக் கேட்டுக் கேட்டு காது புளியந் தோப்பாகிவிட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து குற்றாலம் போனால் சிவகிரிப்பக்கம் ஒரு மலையின் மேல் சங்கர் அளவுக்கு பிரம்மாண்டமாய் ஏசுவருகிறார் என்று எழுதியிருக்கும்.அதற்கும் ரஜினியின் அரசியல் பிரசவ செய்திக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

எங்க ஊரு டவுன் பஸ்ஸை விட அதிக ஷண்டிங் அடித்த பெருமை இந்த லட்சிய வீரனுக்கு மட்டும் தான்
பொருந்தும்.கலைத்துறையின் மூலமாக இந்த தமிழ் மக்களுக்கு மானமும் ரோஷமும் வரவேண்டும் என்று
பாடுபட்ட ஒரு மிகப்பெரிய ஆளுமையின் மகன்.அப்பம்பேரக் கெடுக்கவந்தவன் என்று சொல்லுவது இதுதானோ? 

29.9.10

தீபாவளி,சிறார்கள்,எந்திரன் துப்பாக்கி.

ராமர் வில்லெடுப்பார் அம்பை நாணில் வைத்து இழுக்காமலே விடுவார் அது பறந்து போகும், பறந்து போகும் போய்க்கொண்டே இருக்கும்.நம்ம தமிழ்சினிமாவில் மாதிரி  தலைவாசலில் இருந்து கதாநாயகன் ஓடிவருவார்.அடுப்பங்களையிலிருந்து கதாநாயகி ஓடிவருவார். அது ஒரு அஞ்சு நிமிசம் ஓட்டம் இருக்கும்.அஞ்சஞ்சும் பத்து நிமிஷம் ஓடிக்கடக்கிற அளவில் வீடுகள் இந்தியாவில் எங்கிருக்கிறதென்று தெரியவில்லை. அதே போலத்தான் ராமரின் வில்லும் மதுரைக்கு ஜவுளி எடுக்க போகிற மாதிரி கிளம்பிப்போகும். அதுக்குள்ளாற அடுப்பில் உலை நத்த்து விட்டு கடைக்குப் போய் விட்டுவந்து விடலாம்.கிளம்பிப் போன அம்பு ஒன்று பத்தாகும். பத்து நூறாகும்.அது வேற கதை.அதோடு நில்லாமல் அம்பிலிருந்து தீ ஜுவாலைகள் கிளம்பும்.அந்தப் பக்கமிருந்து தண்ணீர் பீய்ச்சியடிக்கும்.சாத்தூரில் அப்போது தண்ணிப்பஞ்சம். ராமாயணம் பார்க்க வந்த ஒரு அம்மா 'இம்பூட்டு தண்ணியும் வீணாப்போகுதே'என்று ஆதங்கப்பட்டார்.'என்னதான் சண்டன்னாலும் இப்பிடிக் குடிக்கிற தண்னிய நாசமாக்குறது நல்லால்ல' என்றும் தீர்ப்புசொன்னார்.

ஆனால் குழந்தைகள் அப்படியில்லை.தொலைகாட்சிக்கு முன்னாடி கட்டிப்போட்ட மாதிரிக்கிடக்கும்.
ஒண்ணுக்குத் தண்ணிக்கு கூடப்போகாமல் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும்.நம்ம குடும்பங்களுக்கு பிள்ளைகளை டியூஷனுக்கு அணுப்ப வேண்டும் அல்லது அவர்கள் சமத்தா இருக்கவேண்டும்.அப்படியில்லாமல் ஓயாம சண்டைபோட்டும்,எதாவது கேட்டு நச்சரிக்கும் குழந்தைகளைத் திசை திருப்ப ராமாயணம் போட மாட்டானா என்று ஏங்குவோம்.அந்த அளவுக்கு அது அவர்களை entertain பண்ணும்.அப்படியான காலச்சூழலில்தான் இந்த விளம்பரங்களும் சூடு பிடிக்க ஆரம்பித்தது.ராமாயணத்தில் இருக்கிற குழந்தைகளுக்கான ஈர்ப்பை சுவீகரித்துக்கொண்டு அப்படியே முன்னேறி விட்டன.அவ்வளவு fantacy நிறைத்து தருகிறார்கள்.

சோப்புக்கள் எல்லாம் பாதாம்,பிஸ்தா,ஏலக்காய்,முந்திரி எனப்பாயசம் தயாரிக்கிற பொருளில் தாயாராகிறதாம்.இன்னொரு சோப்பில் பப்பாளி,ஆரஞ்சு,ஆப்பிள் கலந்து பழரசத்துக்கான சேர்மானம் இருக்குமாம்.சாப்பிடுகிற பொருட்களெல்லாம் கேடு விளைவிக்கும் ரசாயணக் கலவைகளில் தயாரிக்கிற (ம_ராண்டிகள், மன்னிக்கவும்) பன்னாட்டுக் கம்பெனிகள் இப்படி நமது காதுகளில் டிஜிட்டல் பூச்சுற்று நடத்துவாகள்.அதை விட அதிசயம் என்னவென்றால்  வழுக்கைத் தலையில் முடி முளைக்குமாம். இப்படிச் சொல்லுகிற சொக்குப்பொடிகள்.இதை அங்கீகரிக்கிற மாதிரியும் ஆமோதிக்கிற மாதிரியும் விற்பனை அமோகமாக நடப்பதால் இன்னும் என்னென்ன சொல்லுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

அப்படியொரு அங்கீகாரம் தான் எந்திரன் படத்துக்கான ஒலிப்பேழை,முன்னோட்டக் காட்சிகள் வெளியீடும் அதற்கடுத்து தற்போது களேபரப்படுத்திக் கொண்டிருக்கும் முன்பதிவுத் திருவிழாவும்.கண்ணில் தட்டுப்படுகிற முன்னோட்டக்காட்சியில் ரஜினியின் இடுப்பைச்சுத்தி ஆயிரங்கண்ணுப்பானை போல கணக்கிலடங்காத ஏகே 47 துப்பாக்கிகள் துருத்துகிறது.எல்லாவற்றையும் இயக்கி குண்டு மழைபொழிவார் கணினியுக ராமர்.வில்லுக்கும் சரி துப்பாக்கிக்கும் சரி நியூட்டனின் விதி நிரூபணமாகவேண்டும்.பின்னோக்கி எவ்வளவு இழுக்கப்படுகிறதோ அவ்வளவு தூரம் முன்னேறிப்பயணிக்கும் விசை.ஒரு துப்பாக்கியை தமிழ்ச்சினிமாவில் காட்டுகிறதைப்போல சொகுசாய் கையாளமுடியுமா?. ராணுவ வீரர்கள் தான் சொல்லவேண்டும்.  தானியங்கித் துப்பாக்கிகளை இயக்க stand வேண்டும் அல்லது புஜங்களில் தாங்கிப்பிடிக்கவேண்டும்.அகஸ்துமகஸ்தாக இருந்தால் வெடிக்கிற போது கிளம்புகிற எதிர்விசை தோள் புஜத்தை கலக்கிவிடும் என்று ராணுவவீரர்கள் சொல்லக் கேட்கலாம்.

அதுவெல்லாம் கிடக்கட்டும் ஓரமாய்த்தூக்கி வைத்துவிடுவோம்.ஒரு கலிக்கிண்டுகிற துப்பாக்கி.அதாங்க குருவி சுடுகிற துப்பாக்கியைச் சொந்தமாக வைத்திருப்பதற்குக் கூட ஆறுமாசம்,ஒரு வருஷம் ஆர்டிஓ அலுவலகத்துக்கு நடையாய் நடக்க வேண்டும். ஆயிரம் காரணம் சொல்லி உரிமம் வாங்க வேண்டும்.வாங்குகிறவருக்கு சமூக அந்தஸ்து வேண்டும். பண்ணையார், பெருமுதலாளி,அமைச்சர் போன்ற அந்தஸ்து.அதையும் மீறி வைத்திருந்தால் அதைக்கள்ளப் பணத்தோடு பதுக்கித்தான் வைத்திருக்கமுடியும்.போலீஸ் கண்டு பிடித்துவிட்டால் கதி அதோகதிதான்.இதை எந்த சினிமாவாவது சொல்லியிருக்கா?.இங்கே தான் அப்படிக் கிடையவே கிடையாது.மக்களை சிந்திக்க வைக்கிற அறிவை உயர்த்துகிற எந்தக் காரியத்தையும் செய்யப் போவதில்லை என்று சத்தியம் பண்ணுகிற வைபவம்தான்,(பெரிய பதாகைத்) தமிழ்சினிமாக்களுக்குப் பூஜைபோடுகிற வைபவம்.

விளையாட்டுத் துப்பாக்கி வாங்குவதற்கும் அதைப் பயன்படுத்துவதற்கும் மட்டும்தான் இங்கு யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை.தீபாவளி வருகிறது கொஞ்சம் சகாயமாகவும் கிடைக்கும்.அப்படி துப்பாக்கிகள் வைத்திருக்கிற ரஜினியை சிறுவர்களுக்கு ரொம்பப்பிடிக்கும்.நிஜத்தில் மனிதர்களின் ஆழ்மனத்தில் அற்புதங்களுகான ஏக்கம் தூங்கிக்கொண்டே இருக்கும்.அதைக் காசாக்குகிற வித்தைதான் ஒரு அடியில் பத்து, இல்லை இல்லை நூறு பேரை அடித்துப்பறக்க விடும் டெக்னிகல் தரம் உயர்த்தப்பட்ட சினிமா.நிச்சயம் அவர்களுக்கான பொழுதுபோக்கு 200 சதவீதம் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற படச்சுருள்களின் வரிசையில் எந்திரனும் சேரலாம். சிறுவர்களுக்குத்தானென்றாலும் டாம் அண்ட் ஜெர்ரி,ஹாரிபாட்டர் போன்றவற்றை நாமும் பார்ப்பதில்லை ?.

14.9.10

குரலின் சுரத்தில் சரம் கோர்க்கும் நினைவுகள்.

ஒரு முன்மதிய நேரத்து
குளிர் நினைவுகளை ஊடறுக்கும்
தூரத்து வேலிக்குயிலின் தேடலும்
கூட்டி விட்டுக்கூட வரும்
தனிமையின் ராகத்தோடு.

பின் தொடரும் வாகனச் சலனங்களில்
பிரிந்து போய் சக்கரம் முன்னும்
நினைவுகள் பின்னுமான பயணத்தில்
சுகந்தப் புல்லாங்குழல் ஊடிசையாய்
சுதி சேர்க்கும் கருவேலம் பூக்கள்.

ஈரம் கோர்த்த பகற்பொழுதின்
கடிகார நகர்வில் இனிப்புத்தடவி
இழுத்துச் செல்லும் அளவான ஆல்கஹாலும்
அன்புகோர்த்த நட்பின் வார்த்தைகளும்.

எல்லாவற்றையும்...
எங்கிருந்தோ கேட்கும் சுவர்ணலதாவின்
சினிமாத் தனிமைப் பாடல்களின் வழி
மீளக்கொண்டுவரலாம் வாழ்வின்
ரசம் மிகுந்த நேரங்களை.

3.9.10

வம்சம்,நான் மகான் அல்ல = வேறுவேறு அல்ல.

எப்படித் திருப்பிப்போட்டுப் பார்த்தாலும் ஒரேவகையான கதைகளிலேயே சிக்கிக்கொண்டு கிடக்கிறது தமிழ்சினிமா.முன்பாதி வாழ்வின் அன்னியோன்யங்களையும்,சின்னச்சின்ன மகிழ்ச்சியான தருணங்களையும் செதுக்கிக்கொடுக்கிற இயக்குனர்கள் பின்பாதியில் கொலைகொலையாக் குவிக்கிறார்கள்.கார்த்தி ஐசிஐசிஐ வங்கியின் கடன்தவணை வசூலிக்கப்போகும் காட்சியும் மனிதாபிமானத்தால் பறிபோகும் வேலையும் வேதனைகலந்த விகடம்.அதிலும் கிரிக்கெட் பார்க்கிற குடும்பத்துக்குள் புகுந்து ஒரு கிரிக்கெட் வெறியனாக மாறிப்போகிற போது இயக்குனரின் சமூக எள்ளல் அருமையாக வெளிப்படுகிறது.வம்சம் படத்தில் அம்மா,வீடு,கஞ்சாக்கருப்பு மற்றும் கிராமத்து குசும்புகள்.அதை அப்படியே நான்மகான் அல்லபடத்தில் அம்மா, அப்பா, தங்கை நண்பர்கள் நகரத்து கிறக்கும் தருணங்களாக்கியிருக்கிறார்கள்.

அங்கே எதேச்சையாய் ஒரு பெண் இங்கேயும் கல்யாணவீட்டில் ஒரு பெண்.காதலை முன்மொழிய அங்கு சங்கோஜம் இங்கே மணிரத்னம் ஸ்டைல்.எல்லாச் சினிமாக்களிலும் ஒரே ஒரு டூயட் பாடலில் காதலாகி பாடல் முடிவில் அப்பாக்களுக்கு தெரிவது தமிழ்சினிமாவின் மரபார்ந்த இலக்கணங்களில் ஒன்று. இப்படியே ஒவ்வொரு ப்ரேமாக இரண்டையும் ஒப்பிட்டுக்கொண்டே போகலாம்.இடைவேளையோடு ஒரு திருப்பம் அதிலிருந்து வெள்ளித்திரை முழுக்க ரத்தக்களரி.அந்த ரத்தத்திற்காக எடுத்துக்கொள்ளும் களம் ஒரே வகையான,ஒரே மாதிரியான,ஒரே பக்கமாக சாய்வது இங்கே தவிர்க்கமுடியாததாகிறது.அதுதான் ஏனென்றே விளங்கவில்லை.

எத்தனை கொலைகளைக் காண்பிப்பது, எவ்வளவு குரூரமாய் காண்பிப்பது என்பதில்தான் சமீபத்திய சினிமாக்களுக்குள் போட்டியே நடக்கிறது.ஒரு ஆட்டுக்குட்டியை அறுப்பதற்குக்கூட கரணங்கள் கற்பிக்கிற பரிகாரமும் செய்கிற மனித மான்பைக் கொச்சைப்படுத்துகிற காட்சிகள் அருவருப்பானவை.இன்னொன்று விகட வேடம் பூசிக்கொள்ள இங்கே காலங்காலமாய் கருப்பு மனிதர்கள் தான் தெரிவு செய்யப்படுகிறார்கள்.அந்தப்பீடையிலிருந்து பாலாஜி சக்திவேல்களும்,பாண்டிராஜுக்களும் மீண்டு வரமுடியவில்லை.ஆமாம் இது விஷயத்தில் தமிழ்திரையின் மரபு இன்னும் கற்காலத்திலேயே கிடப்பது வேதனைக்குரிய விடயம்.

இன்னொன்று தமிழ் பேசத்தெரியாதது மட்டுமே நடிகைகளுக்கான உயர்ந்த பட்சத் தகுதியாகிவிட்டது.கலைக்கு மொழியில்லை என்பதை அப்படியே ஏற்றுக்கொள்கிற விரிவு இருந்தாலும்.வடமாநிலப் பெண்களைத் தவிர யாரையும் நடிகையாக்கக் கூடாது என்கிற தமிழ்ச்சினிமாவின் சங்கல்பமும் அதன் சூட்சுமமும் தான் பிடிபடவில்லை.தமிழ்த்திரையின் பாரபட்சமற்ற ஆய்வாளர்கள் இது பற்றி ஏதும் சொல்லியிருக்கிறார்களா ?. அப்படியிருந்தால்  அறியத்தாருங்கள்.

காதல் படத்தில் ஊரைவிட்டு ஓடிப்போன ஜோடிகள் சுகுமாரனின் இருப்பிடத்துக்கு தஞ்சம் புகுவார்கள்.அறையில் தங்கியிருக்கும் சக தோழனின் நண்பனுக்காக தங்களின் குறைந்த பட்ச இருப்பிடத்தையும் விட்டுக்கொடுப்பார்கள்.அந்த கல்யாணத்தைக் கொண்டாடுவார்கள்.இவை எல்லாம் வாழ்க்கையில் எஞ்சியிருக்கிற நம்பிக்கையைத் தூக்கிப்பிடிக்கிற காட்சிகள். ஆனால் நா.ம.அல்ல படத்தில் நம்பி வந்த நண்பனைக் கொன்று விட்டு அவனோடு வந்த பெண்ணைப்பாலியல் பலாத்காரம் செய்கிற இளைஞர்களாக ஒரு குழுவைக் காண்பிப்பது அபத்தம். மிருகங்களில் கூட இப்படியொரு பழக்கம் இருக்கவே முடியாது.அவர்களில் ஒருவன் முஸ்லீமாகவும்,இன்னொருவன் கழுத்தில் சிலுவையைத் தொங்கவிடுவதும் விஷமத்தனமான காட்சிகள்.கல்லூரியில் முதலாண்டு படிக்கிற மாணவர்கள் நான்குபேர் சேர்ந்து ஒரு தொழில் முறை தாதாவை அதுவும் அவரது குப்பத்திலேயே வைத்து ஜஸ்ட் லைக்தட் போட்டுத்தள்ளுவது ரத்தத்தில் தோய்த்தபூவைக் காதில் சுற்றுவதாகும்.நா ம அல்ல படத்தில் கத்தியில் விஷம் தடவிக்கொள்ளுகிற உத்தி,வம்சத்தில் கத்தாழைக்குருத்தில் விஷம் தடவி.

நீங்கள் அப்படியே வம்சம் படத்துக்கு வந்தால் கொலைசெய்வதை ஒரு பாரம்பரியப் பெருமையாகவும்,திருவிழாக்கள் கொலைசெய்ய தேர்வு செய்யும் நேரமாகவும் அர்த்தப்படுத்துகிறார் அன்புத் தம்பி பாண்டியராஜன்.அவ்வளவு நடக்கிற இடத்தில் காவல் துறை கையலாகாததாக இருப்பதுபோலொரு தோற்றத்தைக் கொண்டுவருவது அனுபவ குறைச்சலைக் காட்டுகிறது.அதுவும் ஒரு காவலரே ஒரு ஜாதியின் பெருமையை ஒரு மணிநேரம் காலாட்சேபம் நடத்துகிற மாதிரியான காட்சிகள் பாண்டசி வகையைச் சேர்ந்தவை. லாக்கப் மரணங்களும், லத்திசார்ஜுகளும்,என்கவுண்டர்களும் மலிந்துகிடக்கிற காவல் துறைகுறித்து சின்ன ஞானம் கூட இல்லாததைத்தான் இது காட்டுகிறது.

இந்த தேசம் அதன் கல்விக்கொள்கை.அதன் அயல் கொள்கை.இங்கிருந்து சட்டபூர்வமாய் களவாடப்படும் கனிம வளங்கள்.வேலையில்லாத் திண்டாட்டம் என ஒரு கோடி பிரச்சினைகள் இங்கிருக்கிறது.எல்லாம் விடுபட்ட கேள்விகளாகி கிராமங்களில் அருவா பூத்துக்குலுங்குவதும் அதன் மஹிமை சொல்லுவதும்.நகரத்தில் பேட்டை மக்களை ஒடுக்குவதுமான முரண்பாட்டுடன் கூடிய ஒரே ஸ்டீரியோ டைப் கதைகள்தான் இன்றைய தமிழ்ச்சினிமாவின் விற்பனைப் பொருள்.இதை சிடியில் பார்த்தாலென்ன,பயாஸ்கோப்பு படச்சுருளில் பார்த்தாலென்ன,பென்  ட்ரைவரில் பார்த்தாலென்ன ?