Showing posts with label தொழிற்சங்கம். Show all posts
Showing posts with label தொழிற்சங்கம். Show all posts

6.1.16

இயக்கங்களுக்கு இலக்கு பூச்சாண்டிகள்.

இயக்கங்களுக்கு இலக்கு பூச்சாண்டிகள்.

வடக்கே போ,மேற்கே போ,தெற்கே கூடப்போ
உயிரே போனாலும் மகனே கிழக்கே மட்டும் போகாதே.
எதற்கம்மா என்ன தீமை இருக்கிறது எனக்கேட்பான்
தீமைகள் இல்லையப்பா பூச்சாண்டி இருக்கிறான் என்பாள்.

இல்லையம்மா கிழக்கே தான் என் நண்பன் இருக்கிறான்
இல்லையம்மா கிழக்கே தான் நம் வயல் இருக்கிறது
இல்லையம்மா கிழக்கே தான் சூரியன் உதிக்கிறது
இல்லையம்மா கிழக்கே தான் நம் பசுமாடு மேய்கிறது

சொன்னாக்கேளு எதுத்துபேசினால் சூடு வைத்துவிடுவேன்
வடக்கே போ மேற்கே போ தெற்கே கூடப்போ
உயிரே போனாலும் மகனே கிழக்கே மட்டும் போகாதே.




22.2.12

ஜாதி கடந்த பொதுவுடமைவாதியின் வீட்டுக்கல்யாணம்.

பாண்டியன் கிராமவங்கி ஊழியர்சங்கத்துக்கு 42 பி எல் எஃப் தெரு என்று ஒரு முகவரி உண்டு அதே போல எண் 6 பிச்சைப்பிள்ளைதெரு விருதுநகர் என்கிற முகவரியும் உண்டு. அது ஒரு பாதியில் நின்று போன  கட்டிடம். மீதிக் கட்ட முடியாமல் போன வீட்டுக்காரரின் கனவை நாங்கள் வாடகைகொடுத்து நனவாக்கினோம். அவர் வீடாக் கியிருந்தால் ஒரே ஒருகுடும்பம் மட்டுமே அங்குவாழ்ந்திருக்கும்.ஆனால் தமிழ்நாடு அரசு  ஊழியர்  சங்கம், பாண்டியன் கிராமவங்கி ஊழியர்சங்கம் என்ற இரண்டு சங்கங்களின் உறுப்பினர்களின் தற்காலிக வீடாகவும். நேரம் தப்பி வீடுபோக முடியாத தோழர்களுக்கு புகழிடமாகவும்.அங்கு தங்கியிருந்த  சுந்தரராஜ்,சிதம்பரம்  என்ற தோழர்களின் வாழிடமகவும் மாறியிருந்தது.

யாருக்காவது தேநீர்குடிக்க ஆசையிருந்தால் குறைந்தது பத்து தேநீர் செலவாகும் அதுவும் சந்தோசத்தோடு. யாருக்காவது காய்ச்சலென்றால் எதாவது ஒரு கை மாத்திரை தேடும் நெகிழ்சியான அரைக் கம்யூன் வாழ்க்கை வாழ்ந்த காலம் அது. பல நேரங்களில் பாண்டியன்கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் செயற்குழு  நடக்கும். அதுபின்னிரவில் தொடங்கி விடிய விடிய தொடரும் அப்போதெல்லாம் தங்கள் படுக்கைகளை எடுத்துக்கொண்டு மாடிப்படிக்கோ அல்லது பிடிக்காத சினிமா ஓடும் தியேட்டருக்கோ  போய் விடுகிற இங்கீதம் ஒலித்துக்கிடந்த காலம் அது. நான் மாதவராஜ், அன்பை மொத்தமாக வாங்கி  சில்லறைக்கு விநியோகம் செய்வதுபோல எந்தநேரமும் சீவலும் வெத்திலையும் கூடவே வைத்திருக்கும் தோழர் விஸ்வநாதன். எங்கள் அன்புத்தோழர் முதலாளி செல்வா தினம் அங்கே இரவு பத்துமணி வரை உட்கார்ந்திருப்போம்.

கடிதங்கள் வரும் அல்லது ஒரே ஒரு லேண்ட்லைன் போனுக்கு எப்பொழு தாவது அழைப்புவரும்.அதுதவிர்த்த நேரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தோழர்களோடு பேசிப்பொழுது கழிப்போம். அங்கே முத்துராஜ், ஜீவா, செல்வின், போன்ற தோழர்களோடு தோளாய் இருந்த அப்போதைய செயலா ளர் தோழர் பாலசுப்ரமணியன் மிகச்சிறந்த தொழிற் சங்கப்ப போராளி. அத் தோடு  மிகச்சிறந்த கவிஞர். சின்ன சின்ன கடிதங்களிலும், போஸ்டர்களிலும், நோட்டீசுகளிலும் சிரத்தையெடுத்து கவிதை மொழியில் எழுதும் தோழர். அவரை நானும் மாதுவும் நிறைய்ய எழுதச்சொல்லுவோம் அவரும்  ஆவலோடு   சரி சொல்லுவார்.ஆனால் மாவட்டம் முழுக்க வியாபித் திருக்கும்  அவரது சங்கத்தின் பிரச்சினைகள் அவரை முழுமையாக ஆகரமித்துவிடும். எங்கு பிரச்சினையென்றாலும் ஓடோடிச்செல்லும் மிகச்சிறந்த மனிதாபிமானி. அதனால் தான் எழுத்தையும் மிஞ்சிய செயலால் உயர்ந்துநிற்கிறார்.

அம்மா,அப்பா ஊர் ஜாதியக்கட்டுமானங்களை எதிர்த்து மணம் முடித்தார். அந்த மீறலில் விளைந்த கவிதையாய் ஒரு பெண் மகள் கிடைத்தாள். பெண்ணுக்கும் ஜாதிமதம் பாராத வரன் தேடினார் கிடைத்துவிட்டார். இரண்டாயிரம் வருட குப்பையைப் புறங்காலால் எத்தி நிமிரும் களிப்பை நான் அவர் முகத்தில் எபோதும் பார்க்கலாம். அதை எந்தச்சூழலிலும் தொய்வில்லாது பாது காக்கும் ஒரு சில தோழர்களில் தோழர் பாலுவும் ஒருவர்.அவர் தனது மகளின் கல்யாணத்தை ஜாதிகலக்காத தோழமையோடு நடத்தப்போகிறார்.அதற்கு அவரே எழுதிய கவிதையே அழைப்பிதழாகிறது.

சாதி,மதம்,இனம்,மொழி- என
புதர்மண்டிக்கிடக்கும்
சமூகச்சூழலுகிடையேயான
எங்களின் வாழ்க்கைப்பயணத்தை...

குருவிகளும்,கிளிகளும்
குயில்களும்,மைனாக்களும்
கூடுகட்டிகுலாவிடும்
சோலைகளுக்கு
இடையே ஆனதாக மாற்றிய
எங்கள் அன்புமலரின்
திருமணம்......

கால்நுற்றாண்டிற்கும் மேலாய்
எங்களுக்கு
எல்லாமுமாய் இருக்கிற
அன்புநெஞ்சங்களே....

அவசியம் வாருங்கள்.....

29.2.2012 விருதுநகரில்.
மணமக்கள், அபர்ணா-பாலச்சந்திரன்

அந்தக்கோட்டையில் கல்யாணம் இந்தக்கோட்டையில் கல்யாணம் என்று ப்ளக்ஸ் பேனர்கள் வழியே ஜாதி மருரூபம் எடுத்து நாக்கைத் துருத்திக் கொண்டலையும் இந்த அடர் இருளில் ஆங்காங்கே தெரியும் ஒளிக்கீற்றைப் போல நம்பிக்கையை தோற்கவிடாத தோழனுக்கும் அவர் மனைவிக்கும் முதலில் வாழ்த்துக்கள்.பின்னர் மகளுக்கும் வாழ்த்துக்கள். ஜாதிகடந்த பொதுவுடமையை நேசிக்கிற எல்லோரும் வாழ்த்தலாம்.
     

20.7.10

அந்த நாள்.

வாலிபவயதில் சூடேறிய சமூகக் கோபத்தை இனங்கண்டு என்னை ஒரு தொழிற்சங்கவாதியாக மாற்ற முயற்சி செய்தார் ஆவணப்பட இயக்குனர்.பா.கிருஷ்ணகுமார்.சின்னவயதில் யாரையும் கேட்காமல் நானும் வேலவரும் தோளில் கைபோட்டபடி அந்த குக்கிராமத்து ஆரம்ப பாடசாலைக்குபோனது போலவே.நானும் மாதுவும் தோளில் கைபோட்டபடி அந்த வாசலுக்குள் நுழைந்தோம்.கோபம், சந்தோசம், அழுகை, கண்முழிப்பு, வேலை, பயணங்கள்,ஒளிந்து ஒளிந்து மதுக்குடிப்பது என எல்லாவற்றினூடாக இரண்டு விஷயங்கள் கெட்டிப்படுத்தப்பட்டது.மனிதாபிமானம் குழைத்த பொதுவுவுடமை மீது ஈடுபாடும்.அதன் கிரியா ஊக்கியான நட்பின் விஸ்தீரனத்தை கூடுதலாக்கிய பயணமும்.

28 வருடங்கள் வங்கி ஊழியனாக கழிந்த காலங்களின் சம்பளம் அழிக்கவியலா நட்பும் கொஞ்சம் இலக்கியமும் தான். அதை உரசிப்பார்க்கிற தருணமும் 20.7.2009 வந்தது.நானும் கொக்கரக்கோ வலைத்தளத்தின் பதிவர் அண்டோ கால்பர்ட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாள் இது.எதையும் அறியாமல் துங்கிக்கொண்டிருந்த என் மனைவி,அடுத்த மாதம் சேரவிருந்த கல்லூரியின் கனவுடன் தூங்கிக்கொண்டிருந்த மகன் இருவரின் தூக்கத்தை கலைக்காமல் என்னை சஸ்பெண்ட் செய்த சேதி சொன்னார் அண்ணன் சோலை மாணிக்கம்.

அப்படியே எழுந்து சங்க அலுவலகம் போன என்னை தங்களின் செட்டைக்குள் மூன்றுநாட்கள் வைத்து அடைகாத்தார்கள். அந்த கதகதப்பை நினைத்தால் இன்னும் கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது.மாது,செல்வா,மணியண்ணா,சங்கரசீனி,சங்கர்,நாசர்,மணி,அருண் சோலை அண்ணா.எல்லோருக்கும் வீடு மனைவி மக்கள் அன்றாடக்கடமைகள் இருந்தது.அவை யாவற்றையும் சங்கத்தின் பொருட்டு ஒதுக்கிவைத்துவிட்டு எங்கள் இருவரைச்சுற்றி அன்புவேலி கட்டியிருந்தார்கள்.

அதுதான்,அந்த அன்புவேலிதான்.. ஆணவம், மமதை,அதிகாரத்திமிர்,ஓரவஞ்சனை,கொக்கரிப்பு எல்லாவற்றையும் சுக்குநூறாக்கியது. சங்கத்தின் ஒற்றுமை எங்களை நான்காம் நாளே இருக்கையில் மீள உட்காரவைத்தது.ஒரு சமூக ஈடுபாடுள்ள தொழிற்சங்கத்தின் நேர்மைத்திறனை ஓங்கி பிரகடனப்படுத்தும் நாட்களிள் அதுவும் ஒருநாள்.நினைவுகள் அழியாத சிறுகண்டன் அப்புவின் பாத்திரங்களில் பளபளக்கும் லட்சியத்தினூடே நட்பும் செழித்து வளரவில்லையா? அதுபோல எங்களிடமும் சொல்வதற்கு இந்த நாளிருக்கிறது.

28.6.10

ஒரு தூங்குமூஞ்சியும்,செயற்குழுக் கூட்டமும்.

அப்போதுதான்  தொழிற்சங்கத்தின் தீவிர உறுப்பினராக அறியப்பட்டேன்.பயிற்சிவகுப்புகள்,ஆர்ப்பாட்டங்கள்,மாநாடுகள் எல்லாவற்றிலும் பங்குபெறுகிற ஆவல் மிகுந்த நாட்கள் அவை. பின்னர் செயற்குழு உறுப்பினராக அறியப்பட்டேன்.வெறும் கொடியும் கோஷங்களும்,வேலை நிறுத்தங்களும், சம்பள உயர்வுமாக அறியப்படுகிற தொழிற்சங்க நடைமுறைகள் இன்னும் பொது உலகம் சரியாக அறியாதது. அவ்வளவு ஏன், கிட்டத்தட்ட இருபது வருடங்கள் அதற்குள் புழங்கிக் கிடக்கிற எனக்கும் புரியயாதது செயற்குழுக் கூட்டங்கள். முன் இரவு நேரங்கள் தொடங்கும். அல்லது ஞாயிற்றுக்கிழமை பகல் பதினோறு மணிக்குத் துவங்கும். வீடுகளில் பொதுவாக 'மீட்டிங்குக்குபோயிருக்காக' சொல்லிவிடுவார்கள்.(இதைச் சொல்லுகிற 'மாநாட்டு நாயக்கர்' என்கிற சிறுகதை முடிகிற தருவாயில் இருக்கிறது).பெரும்பாலும் இரவு நேரங்கள் நடக்கும் விவாதங்களில் தாக்குப் பிடிக்காமல் தூக்கப்பேய் பீடிக்கப்பட்டவனாய் எனது தலை எனக்குத் தெரியாமலே ஆடும். அதைச் சமாளிக்கிற உத்தியாய் கைவிரல்களால் தாளம் போடுகிற மாதிரி ஒரு பாவனை செய்துகொள்வேன்.

முழித்திருக்கிறவர்கள் நான் கண்ணை மூடிக்கொண்டு கேட்கிறேன் அல்லது சிந்திக்கிறேன் என்பதாக நினைக்கவேண்டும் என்கிற அலிபையை உருவாக்குகிற செயல் அது. ஆனாலும் எல்லோருக்கும் 'பயல பேய் பிடிச்சு ஆட்டுது' என்று தெரிந்துவிடும். 'தோழா போய் முகத்தக்கழுவிட்டு வா' என்று கடுகடுப்பாய் மாது சொல்லும்போது கையுங் களவுமாய் பிடிபட்டுப்போன குற்ற உணர்ச்சி வரும்.இல்ல சமாளிச்சிரலாம் என்று பதில் சொல்லும் ரோஷம் ரெண்டு நிமிஷத்தில் தவிடு பொடியாக மீண்டும் தலை மீண்டும் வெடுக் வெடுக்கென ஆடும்.அப்போது சம்பள உயர்வில் இருக்கிற குளறுபடிகளை ஈக்வேசனை சுட்டிக்காட்டி பிச்சமுத்து விளக்கிக்கொண்டிருப்பார்.அல்லது அகில இந்திய சங்கத்தின் முடிவுகளை கிருஷ்ணகுமார் அறிவித்துக்கொண்டிருப்பார்.ஆனால் என்னை அந்த பாழாய்ப்போன சாத்தான் வந்து ஆட்டுவிக்கும்.

எனது கிராமத்தில் சவுத் இண்டியன் பாப்திஸ்ட் மெசின் சார்பில் முழு இரவு ஜெபக்கூட்டம் நடக்கும். சின்ன வயசில் வாத்தியாருக்குப் பயந்து அங்குபோகனும். பாட்டுப்படும்போதும்,கதைகள் சொல்லும்போதும் விழித்திருப்பேன்,ஆனால் பிரசங்கங்கள் என்னைத் தாலாட்ட நான் தூங்கிப்போய் விடுவேன். அப்போதும் பைபிளம்மா என்கிற மேரிப்பாட்டி என்னை இப்படித்தான் திட்டும் 'ஒன்னய சாத்தான் பிடிச்சி ஆட்டுது'.ஏவீஸ்கூல்  ராமச்சந்திரனும்,ராமகிருஷ்ணன் சாரும் சயின்ஸ் பாடம் நடத்தும்போது ஒரு நல்ல கனவோடு தூங்கிப் போய்விடுவேன்.அதுபோலவே கல்லூரியில் எக்கனாமிக்ஸ் நடத்தும் பேரா.லிங்கசாமி. அவரைப் பார்த்தவுடனே எனக்குத்தூக்கம் வந்துவிடும்.நிற்க வைத்து மானத்தை வாங்குவார்கள்.அதுபோலத்தான் இந்த செயகுழுக்கூட்டங்களும். ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு பள்ளி இறுதித் தேர்வைப் போலப் பயமுறுத்திக்கொண்டு வரும்.

ஒரு நாள் விருதுநகரில் கூட்டம் நான் முருகவேல்,கிருஷ்ணன் மூன்று பேரும் அழைக்கப்பட்டிருந்தோம்.அன்று மாலையே கிளம்புகிற நேரம்,இடம் எல்லாம் சொல்லிவிட்டார் கிருஷ்ணன்.நான் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன் இருட்டுப்பக்கம் இருந்து வந்த கிருஷ்ணன் நீங்கள் பேருந்தின் முன்பகுதியில் உட்கார்ந்து கொள்ளுங்கள். நான் நடுப்பகுதி. முருகவேல் கடைசிப்பெஞ்சு என்று குசு குசுத்துவிட்டுப் போய்விட்டார். விருதுநகரில் இறங்கியதும் நீங்க ரயில்வேபீடர் ரோடு வழியா வாங்க, நான்மெயின்ரோடு வழியா,முருகவேல் கந்தபுரம் தெருவழியா என்று சொல்லிவிட்டு மீண்டும் மறைந்து விட்டார். எனக்கு என்ன நடக்கப்போகுதோ என்கிற பயமும் ஆவலும் ஒருசேர வந்துவிட்டது.பலகோணங்களில் யூகித்துவிட்டு இறுதியில், அடடா ஒருவேளை இன்னைக்கே ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆரம்பிச்சிருச்சுரும் போல இருக்கே வீட்லவேற சொல்லாம வந்துட்டமே என்கிற நமைச்சல் இருந்தது. கல்யாணம் ஆகி ஆறுமாசம் கூட ஆகலையே,அவள் என்ன செய்யப்போகிறாளோ என்கிற பதைபதைப்பு இருந்தது.தெருவில் எதிர்ப்படுகிற எல்லோரையும் சந்தேகத்தோடு பார்த்தேன்.எந்த நிமிடத்திலும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடும் பரபரப்பு இருந்தது.கூட்டம் நடந்த இடத்துக்கு போய் கூட்டம் ஆரம்பித்து பாடுபழமைகளைப் பேச ஆரம்பித்ததும் ஏமாந்து போய் தூக்கம் வந்துவிட்டது.

செயற்குழுவின் பதினைந்து பேரில் பணிரெண்டு பேர் சிகரெட் குடிக்கிறவர்களாக இருப்பார்கள்.தோழர் சாமிநாதன் என்னைவிட ரொம்ப இளையவன்.அவன் வளர்த்திருக்கிற தாடி,அவன் குடிக்கிற சிகரெட்,அவனது பேச்சுத்தொணி எல்லாம் என்னை 'நீ ஒரு நாளும் ஒரு தீவிர தொழிற்சங்கவாதியாக முடியாது' என்கிற மாதிரிக் கேலிசெய்யும்.அதுபோலவே முருகவேல்,கிருஷ்ணன்,சோமு போன்ற தீவிர தொழிற்சங்கவாதிகள் என்னையும் மாதுவையும் விளையாட்டுப் பிள்ளைகள் என்பார்கள். இந்த மூன்று பேரில் சோமுவிடம் கூட ஏதாவது பேசிவிடலாம். கிருஷ்ணன், முருகவேல் இருவரிடமும் எது குறித்தும் பேச முடியாது. எல்லாவற்றையும் மறுதலித்து அல்லது எதிர் நிலையிலிருந்துதான் பேசுவார்கள். சூரியன் கிழக்கே உதிக்கிறது என்று சொன்ன மறுகனமே புரியாமப் பேசாதீங்க,நீங்க மேற்குப்பக்கம் நிற்பதனால் தான் அது கிழக்கே இருக்கிறது என்று சொல்லுவார்கள். அந்தானிக்கில சுவத்துலபோய் ரெண்டுதடவ முட்டிவிட்டு வீட்டுக்குப் போய்விடுவேன்.

ஒரு முறை, வேறுகிளைக்கு மாறுதல் வேண்டும் என்கிற கோரிக்கையோடு ஒரு தோழர் சாத்தூருக்கு வந்திருந்தார்.அவரது குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வயதான தாய் தந்தையருக்கு உடம்புக்கு முடியவில்லை,பணப்பிரச்சினை,குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை.இந்த பிரச்சினைகளோடு தினம் அறுபது கிலோமீட்டர் பயணம் செய்து கிளைக்குப் போனால் கிளையில் மேலாளர் புரிதலில்லாமல் எதெற்கெடுத்தாலும் சண்டைக்கு வருகிறார் இப்படியெல்லாம் சொல்லிவிட்டு.'உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு ரெண்டுபக்கமும் இடி' என்கிற பழ மொழியைச் சொன்னாராம். 'எது எப்பிடியோ ஓசை வருதில்ல' என்றாராம் தொழிற்சங்க சுப்புடு.

மேடைப் பேச்சென்றால் கரகரத்த குரலில் உச்ச ஸ்தாயியில், முஷ்டி உயர்த்திக்கொண்டு'ஏற்றமிகு ஏதென்ஸ் நகரத்து எழில் மிகு வாலிபர்களே,நாற்றமெடுத்த சமுதாயத்தை நறுமணம் கமழ்விக்க இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன்'என்று பேசுவதுதான் என்கிற நம்பிக்கை மூடியிருந்த காலம்.அதை உடைத்துப்போட்டு ஒரு நிகழ்
கலையாக்கி மேடையை தமிழகமெங்கும் மேடைகளை  அபகரித்துக் கொண்டிருந்த கிருஷ்ணக்குமாரோடு ஆட்டுக்குட்டி போல அழைந்தோம் நானும் மாதுவும். அவர்தான் எங்கள் சங்க செயலாளர். அப்போது எங்கள் சங்க கூட்டங்களில் வாழ்த்திப் பேச நன்மாறன் வருவார். அவர் வந்துவிட்டால் சங்கவித்யாசமில்லாமல் தோழர்கள் கூடிவிடுவார்கள்.அரைமணி நேரம் மேடையில் பேசினால் வயிறு புண்ணாகிப்போகும்.சரவெடியாய்ப் பொருத்திப் போட்டுக்கொண்டே போவார்.

முதன்முதலில் 1985 ஆம் ஆண்டு எங்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசும்போது முன்வரிசையில் உட்கார்ந்து சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தேன்.ஒருவர் வந்து தலைவர் கூப்பிடுகிறார் என்று சொல்லி என்னை வெளியே அழைத்துக்கொண்டு போனார்.அங்கு உட்கார்ந்திருந்த அவர் 'ஒரு தொழிற்சங்கவாதி இப்படி சாமான்யன் போல சத்தம்போட்டு சிரிக்கக்கூடாது' என்று கண்டிப்பான குரலில் சொன்னார். எனக்கு அவமானமாகப் போய்விட்டது.தப்புச் செய்துவிட்டோ மே என்கிற குற்ற உணர்ச்சி மேலிட்டது.இனி உட்கார்ந்து தொழிற்சங்க சட்டதிட்டங்களை மணனம் செய்துவிட்டுத்தான் மறுவேலை என்கிற வெறிவந்தது. ரெண்டு நாள் மனசு சரியில்லாமல்  மூன்றாம் நாள் நடந்ததை மாதுவிடம் சொன்னேன்,அவன் கிருஷ்ணக்குமாரிடம் சொன்னான் ரெண்டு பேரும் குதித்துக் குதித்துச் சிரித்தார்கள்.

உடனிருக்கிற மனிதரை தனதுறவாய்,தோழனாய்ப் பாவிக்கிற உணர்வும் ,அவர் துன்பம் கண்டு வதங்கும் மனசும்.அவற்றை ஒருங்கிணைக்கிற சரடாகச் சங்கமும் இருக்கிறது.அங்கு  எல்லாச் சட்டதிட்டங்களையும் மீறிய மனிதாபிமானம் இருக்கிறது. அங்கு புழங்குகிற தோழர்களின் இன்ப துன்பங்களோடு களத்தில் பங்கெடுக்கிற போது எழுத்தில்வராத நியதிகளாய் புதுப்புது அனுபவங்கள் வந்துசேரும். அப்போது இதையெல்லாம் இரவு நேரங்களில் சாவகாசமாக உட்கார்ந்து நினைத்துச் சிரிக்கலாம். காலம்தான் எல்லாவற்றிற்குமான மருந்து,காலம் தான் எல்லாவற்றிற்குமான தீர்வு. இதோ தொழிற்சங்கத்துக்கு எதிர் முகாமில் இணைந்து விட்ட அந்த கிருஷ்ணனின் அந்த பழய்ய ஞாபகங்கள் மலரும் நினைவாக இருக்குமா?  எப்படியிருக்குமெனத் தெரியவில்லை.