Showing posts with label வலைப்பதிவர். Show all posts
Showing posts with label வலைப்பதிவர். Show all posts

22.4.12

வலைப்பதிவர் அறிமுகம்


சாத்தூரிலிருந்து இன்னொரு வலைப்பதிவர்.

தோழன் மாதவராஜ் தொடங்கிவைத்த வலைக்கலாச்சாரத்தில் அவனால் நுழைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இதோ, இந்தக்குட்டியூண்டு சாத்தூரிலிருந்து கிட்டத்தட்ட எட்டாவது வலைப்பதிவராக அறிமுகமாகிறார் தம்பி ஆண்டனி.

ஓவியம்,புகைப்படம்,வீடியோ, ஆகியவற்றில் தொழில்முறைக்கலைஞனாக இருக்கும் தம்பி ஆண்டனி.மிகச்சிறந்த இயற்கை சம்பந்தமான புகைப்படக் கலைஞன். அதற்கென தனது ஓய்வு நேரங்களையெல்லாம் செலவுசெய்வபவர்.
அப்படிச்செலவழித்துப்பதிவு செய்த புகைப்படங்களையும் அனுபவங்களையும் ’தூரிகை நிழல்’ பக்கம் வழியே வலையில் பகிர்ந்து கொள்ளவருகிறார்.

வரவேற்போம்.

அவரது வலை விலாசம்

www.denilantony.blogspot.in

31.8.11

எழுத முடியாமல் கழிந்துபோன நாட்களுக்கான சரிக்கட்டல்.


சாத்தூரிலிருந்து வேலிப் புதர்களைத் தாண்டி நான்கு மணிநேரம் பயணம் செய்து ராமநாதபுரம்.அங்கே ஐந்து இரவுகள் புத்தகங்கள் கொசு கொசுவர்த்தியோடு கழியும்.பகல்களை எல்லாம் வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொள்வார்கள்.அல்லது மனமுவந்து நானே கொடுத்து விடுவதுண்டு. சண்டையும், கோபங்களும், பேசாவிரதமும் நினைக்க நினைக்க இனிக்கிற தனிமை. அதுமட்டுமா இனிக்கிறது வெறும் வெங்காயம் கிள்ளிப்போட்டு மணக்க மணக்க இறக்கி வைக்கும் மொட்டைச்சாம்பார் இனிக்கிறது.அதன் ருசிதேடி நாக்கு நூற்றித் தொண்ணூற்றி எட்டு கிலோ மீட்டர்கள் நீளுகிறது.திங்கட்கிழமைக்காலை பேருந்து சத்தமும் பயண நினைவுகளும் எரிச்சலூட்ட சனிக்கிழமை அதே பேருந்தும் பயணமும் குதூகலம்தரும் இது ஒரு தவணை முறையிலான புலம் பெயர்தல். என் வாழ்நாளில் அதிகம் சண்டையிட்டுக்கொண்டது பேருந்து அரசுப்பேருந்து நடத்துநர்களிடம் தான்.இப்போதெல்லாம் அவர்களிடத்தில் கொஞ்சம் பரிவும் ஸ்நேகமும் வருகிறது.

சென்ற வாரம் 20, 21, 22 தேதிகளில் சென்னையில் இருந்தேன்.சென்னையில் இருந்தது ஒன்றும் பெரிய தகவல் இல்லை.ஆனால் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பதிவர்கள் ஐந்துபேர் சந்தித்துக் கொண்டதுதான் மகிழ்சித்தகவல்.ஐந்து பேரை ஒன்று சேரவைத்தார் தோழர் பத்மஜா.சென்னை டிஸ்கவரி புக்பேலஸில் வலசை இதழ் வெளியீடு நடந்து முடித்திருந்தார் கார்த்திகைப்பாண்டியன்.அங்கே ராஜ சுந்தரராஜண்ணா வையும் தோழர் விதூஷையும் மேவியையும் சந்தித்தோம். வலசை இதழ்களோடு கீரனூர் ஜாகீர் ராஜாவின் மூன்று நாவல்களும் வாங்கிக்கொண்டோம் சென்னை செல்லும்போதெலாம் சந்திக்க எண்ணித்திரும்பியது வானம்பாடிகள் பாலாண்ணா வைத்தான்.அவரால் டிஸ்கவரி புக்பேலஸ் அமைந்திருக்கும் கேகே நகருக்கு அலையமுடியாததாகையால் சென்னையின் குவிமையமான தி நகருக்குச் சென்றோம்.

ஒவ்வொரு எழுத்தும் அதன் வரி வழியே முகங்களைக் கற்பனையில் வரைந்து வைத்திருக்கும்.அந்த கற்பனை ஓவியத்தோடு நிஜ ஓவியத்தை ஒப்பிட்டுப் பார்க்கிற ஒரு போட்டி முடிவும் குறுகுறுப்பும் முன்னோடிச் செல்லும். பின் தங்கிப்போய்  முகங்கள் பார்க்கும் சந்தோஷம் தான் இந்த வலைப்பதிவர் சந்திப்பு. இன்னொரு வகையில் அந்த சந்திப்புகளும் பகிர்தலும் எழுதுவதற்கு உந்துதலாகவும் மாறும். சில நேரம் படித்ததும் எழுத்தத்தூண்டும் சில புத்தகங்களும் நல்ல எழுத்தும் கூட. அப்படி எழுதத்தூண்டிய புத்தகங்கள் வரிசையில்ஜாகீர் ராஜவின் மீன்காரத்தெரு. பிறகு விரிவாக எழுதலாம். ஆனால் உடனடியாகச்சொல்லவேண்டியது வலசையில் வந்திருக்கும் தோழர் பத்மஜாவின் நீச்சல்காரன்.

ஜான் சீவரின் மூலக்கதை எப்படியிருக்குமோ தெரியவில்லை ஆனால் அதை அப்படியே பிசிறில்லா தமிழ்ச்சிறுகதையாக்க முடிந்திருக்கிறது தோழர் பத்மாவால். ஒரு கனமான முடிவும் விறு விறுப்புக்கு பஞ்சம் வைக்காத சம்பவங்களும் மட்டுமே மொழிபெயர்ப்போடு பயணப்படவைக்கும். அதுதான் இதுவரையில் எனக்கிருந்த அனுபவம்.ஆனால் ஒரு சன்னமான படிமக்கதைபோல தோற்றமளிக்கும் நீச்சல்காரனை நீரோட்டம்போன்ற எழுத்தின் மூலம் படிக்க வைத்திருக்கிறார்.அதுவே அந்த இதழிலுள்ள ஏனைய மொழி பெயர்ப்புகளையும் வாசிக்க தூண்டுகிறது.

9.2.11

ஒரு புத்தகம், ஒரு புதிய வலைப்பக்கம்.




மதுரையைத் தாண்டி எங்கும் போயிருக்கவில்லை.வேலை கிடைத்து கிழக்கு ராமநாதபுர மாவட்டம் பாண்டுகுடியில் வேலை. 1984 ஆம் ஆண்டு ரமேஸ்வரத்தில் வங்கி நிர்வாகக்குழுக்கூட்டம்.அங்கேயே எங்கள் சங்கத்தின் சார்பில் எதுக்கடை போட்டோம் .தர்ணா.ஒரு இரவு ஒரு பகல் அங்கேயே தங்க நேர்ந்தது. எல்லோரும் மறுநாள் திரும்பினார்கள் நானும் வந்துவிட்டேன். இதில் ஒரு செய்தியுமில்லை. ஆனால் கடலுக்கும்,கோவிலுக்கும் போகாமல் திரும்பி வந்தேன் என்பது செய்தி.பாடத்தில் படித்த பாம்பன் பாலத்து வழியே கடலையும் அலைகளையும் பார்த்தபடி எந்த உறுத்தலும் திரும்பிவந்தேன்.

சென்ற மாதம் ரெண்டு முறை சென்னை போக நேர்ந்தும் புத்தகக் கண் காட்சிக்குப் போக முடியவில்லை.அது தான் உறுத்திக்கொண்டிருந்தது.
வருவேன் என்று தொயரங்கட்டிய பிறகும் ரெண்டு போடு போட்டு அனுப்பிவைத்துவிட்டு அம்மா அப்பா போன சாத்தூர் ஒத்தையடிப் பாதையைப்போல, அவர்கள் பார்த்த சிவாஜி படம் மாதிரி இந்த புத்தகக்கண்காட்சி ஏக்கமும் ஆர்வமும் உண்டுபண்ணியது. அதைச் சரிசெய்கிற மாதிரி தோழர் பத்மா அவர்கள் வாங்கி அனுப்பிய யோ.கர்ணனின் சிறுகதைப் புத்தகம் இன்று வந்து சேர்ந்திருக்கிறது.

நாங்கள் பேசுகிற தொழிற் சங்கம்,தமுஎச,இலக்கியம்,சினிமா இவற்றின் பின்னாடி ஒரு பெயர் ஒளிந்து கொண்டிருக்கும்.அந்தப் பெயர் தோழர் கிருஷ்ணகுமார்.பகலில் நிர்வாகத்தோடு மல்லுக்கு,சாயங்காலம் உறுப்பினர்களின் கடிதங்களுக்கு பதில்,இரவில் செயற்குழுவில் குடுமிபிடி
என்று நிற்காமல் ஓடும் கடிகாரத்தை நிறுத்தி ஆசுவாசமாய் ஒரு ஓவியம்,ஒரு கவிதை,ஒரு சினிமாப் பாட்டு, ஒருத்தரோட காதல் அனுபவம், ஒரு ஏ ஜோக் என்று ரம்மியப்படுத்துவார் கிருஷ்ணகுமார்.எந்த நேரமும் இளைஞர் பட்டாளம் சுத்திக்கிடக்கும். இதோ அவரது வலைப்பிரவேசம் ‘ உண்மை புதிதன்று ‘.படிக்கிற எல்லோருக்கும் எழுத்துக்களோடு அவரது கனத்த குரல் ஒலிக்கும்.