பேருந்தில்,ரயிலில்,வங்கியில்,ரேசன் கடையில்,புண்ணியத்தலங்களில் இப்படி எங்கெங்கு போனாலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது.ஆனால் அந்த ராட்ஷச திரையரங்கில் சனிக்கிழமை மாலை மூன்று நூறு ஜனங்களே உட்கார்ந்திருப்பது விநோதமாக இருக்கிறது. எம்ஜியார் படம் பார்க்கப்போய் நெரிசலில் சிக்கி இறந்த வரலாறுகளும்,ஹவுஸ்புல் போர்டுகளும் ஒரு சஹாப்தமாக கடந்தே போய்விட்டது.சினிமாவைத் தியேட்டரில் பார்க்கிற மோகம் குறைந்துபோயே போய்விட்டது. இதோ வந்த முன்னூறுபேர்களிடம் ஒரு இரண்டாயிரம் பேருக்கான தொகையை கட்டணமாகப் பிடுங்கிக்கொண்ட திருப்தியில் வெள்ளித்திரை ஒளிர்கிறது. கோவில்பட்டி போன்ற சிறிய நகரத்திலேயெ நூறு ரூபாய்க்கு நுழைவுச் சீட்டு விற்கமுடியுமானால் சென்னை போன்ற பெரு நகரங்களை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
இந்தக்கதையில் வரும் சம்பவங்களும்,பாத்திரங்களும் கற்பனையே.உயிரோடு இறக்கிற அல்லது இறந்துபோன யரையும் நினைவுபடுத்தினால் அது தற்செயலானதே. என்கிற அறிவிப்போடு தொடங்குகிறது கோடிக் கணக்கான பணத்தைக் காவு வாங்கிக்கொண்டு பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் முன்னே தள்ளிக்கொண்டு வந்த ராவணன். மனிரத்னம், சுகாசினி,விக்ரம் , ஏஆர்.ரஹ்மான், உமறுப்புலவர் போன்ற பெயர்களைத் தவிர ஏனையப் பெயர்களெல்லாம் ராமாயணம் சீரியலில் வருகிற பெயர்களாகவே வருகிறது.அந்த சீரியலைப்பார்க்காதவர்கள் இந்தப்படத்தை தைரியமாகப் பார்க்கலாம்.
கதை.
சாத்தூர் ஏவீஸ்கூலில் அண்ணாமல என்கிற ஒரு சயின்ஸ்வாத்தியார் இருந்தார்.'ராமம்பொண்டாட்டிய ராவணந்தூக்கிட்டுப் போனான்,ராமம்போய் சண்டபோட்டு கூட்டிட்டு வந்துட்டான் இது தாண்டா ராமாயணம், பாடத்தக்கவனி, அவகாற்றோவின் கற்பிதக்கொள்கையின்னா' என்று ஒருவரியில் கதையை முடித்துவிட்டு பாடத்தை துவங்கிவிடுவார்.அதே ராமாயாணம் தான் கதை.விபீடணன்,சூர்ப்பநகை,அனுமன்,ராமன்,சீதை எனும் புராணப்பாத்திரங்களை அப்படியே அட்சர சுத்தமாக இந்தப்படத்தில் eguate செய்துகொள்ளலாம். அதே நேரம் வீரப்பனின் சாயல் தெரிந்தாலும் அதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
முழுக்க வட இந்திய மலைமுகடுகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. ரவ்வும் பகலும் மழை பெய்துகொண்டே இருக்கிறது.'சோ' வெனப்பெய்யும் மழையில் நம்ம சீயான் படுத்து குறட்டை விட்டுத் தூங்குகிறார்,மழையிலே கிடாக்கறியும் மீனும் சமைக்கிறார்கள்,மழையிலே ஆடிப்பாடுகிறார்கள்.மணிரத்னம் படத்தில் எப்படியும் ஒரு மழைப்பாட்டு வந்துவிடும் ஆனால் இந்தப்படம் முழுக்க மழையிலேதான்.எங்கு பார்த்தாலும் பசிய காடுகள்,செழிக்கச் செழிக்கத் தண்ணீர் கிடக்கிறது.மலைவாசியா,ஒடுக்கப்பட்டவனா என்கிற அடையாளமில்லாத விக்ரம் அண்ட் கோ அரண்மனைகளிலும்,கோவில் முகடுகளிலும் விழாக்கொண்டாடுகிறது. கதைக்களம், மொழி,வட்டாரவழக்கு, பழக்க வழக்கங்கள் எல்லாமே குழறுபடிகளாகவே தொடர்கிறதால் நம்பகத் தன்மை கடுகளவும் இல்லாமல் பாண்டசித்தன்மையே மேலோங்குகிறது.
கதை ராமாயணத்திலிருந்து விலகி சீதையின் கற்பு குறித்த மறுவாசிப்புக்கு உட்படுத்துவதற்கு நெருங்கிப்போய் மீண்டும் கற்பே பிரதானம் என்கிற நீதியைத்தூக்கிப் பிடிக்கிறது.அதனாலேதான் இறுதிக்காட்சியில் திடீரென முளைக்கும் ப்ருதிவிராஜ் துள்ளத்துடிக்க விக்ரமைப்போட்டுத் தள்ளுகிறார். அதனாலேதான் ப்ரியாமணி கூட்டுக் கற்பழிப்பில் ப்ருதிவிராஜ் இருக்கிறாரா இல்லையா என்பதை மங்கலாக்கிவிட்டு விடுகிறார் டைரடக்கர்.விக்ரம் ஏன் பக் பக் பக், டண்டனக்க என்கிற வார்த்தைகளை மேனரிசமாக்குகிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை.
காமிரா,படத்தொகுப்பு,இசை இன்னபிறவெல்லாம் இருக்கிறதே அதைப்பத்தி ஏன் சொல்லவரவில்லை என்கிற கோபமும் கேள்வியும் வரலாம்.ஒரு நல்ல உயர் தொழில் நுட்ப காமிரா,பல ஆங்கிலப்படங்கள் பார்ப்பதற்கான கொடுப்பினை,துட்டத் தண்ணியாச் செலவழிக்க ஒரு தயாரிப்பாளர் கிடைத்தால் போதும் என்ன தப்பும் செய்யலாம். சரிசெய்வதற்கு இருக்கவே இருக்கிறார்கள் நம்ப CG டிபார்ட்மெண்ட் இளைஞர்கள்.அதைவைத்து என்னமாதிரியான பிரம்மாண்டங்களையும் உருவாக்கிவிடலாம்.அந்த பிரம்மாண்டம் கதையில்லாது போகுமானால் காமிக்ஸ் லெவலுக்கும் கீழே போய்விடும்.
உழைப்பும் முயற்சியும் இருக்கிறதே அது கண்ணுக்குத் தெரியவில்லையா என்கிற எதிர்விமர்சனம் வரும்.எங்கூர்ல, அதான் சிவகாசியில, ஒரு பட்டாசுக்கம்பெனி முதலாளி இருந்தார்.அவர் சீசன் காலங்களில்
விடிகாலையில் எழுந்து பைக்கை எடுத்துக்கொண்டு குற்றாலத்துக்குப் போய், குளித்துவிட்டு, அவர் கட்டிக்குளித்த ஈரிழைத்துண்டு காய்வதற்குள் சிவகாசி திரும்பிவிடுவாராம். ஒரு நாள் ரெண்டு நாளில்லை மூனு நாலு மாசத்துக்கு தினம்தினம் இதே சோலியாய் அலைவாராம். இதிலும் கூட அவரது அயராத உழைப்பு,திறமை,தியாகம் எல்லாம் அடங்கி இருக்கிறது.
உலகமே ஆஹா ஓஹோன்னு பாராட்டுது,எங்க பாத்தாலும் ராவணன் ராவணண் என்கிற பேச்சே அடிபடுகிறது. எல்லோரும் பாராட்டுகிற ஒரு படைப்பை எப்படிக்குத்தம் சொல்லலாம்.தயாரிப்பாளர் யார்.ரிலையன்ஸ் நிறுவணம், அனில் திருபாய் அம்பானி.துணியில் ஆரம்பித்து, ,அலைபேசி இப்படி நூற்றுக்கணக்கான பொருள்களை தனது வியாபார உத்தியால் விற்றுவிடுகிற அதே ரிலையன்ஸ்தான். குடும்பச்சண்டையை, பங்காளி சண்டையயே மூலதானமும் விளம்பரமும்,வியாபராமும் ஆக்கிய அதே ரிலையன்ஸ்தான். இந்திய மூளைகளில் ஆழப்பதிந்து கிடக்கிற ராமாயணத்தை விற்கவந்திருக்கிறது,அதுவும் பாப்புலர் மீடியா மூலம்.ராமாயணம் நெடுந்தொடராய் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த எண்பதுகளில், ஒரு ஞயிற்றுக்கிழமை, மின்தடையினால் ஒளிபரப்பமுடியாமல்
போனது. ஆத்திரமடைந்த பக்தர்கள் ஒளிபரப்பு நிலையத்தையும்,மின்வாரிய அலுவலகத்தையும் உடைத்த பெருமையுடைத்து இந்திய பாரம்பரியம். ஆந்திரா,உபி,மபி,ராஜஸ்தான்,மராட்டா மாநிலங்களில் தொழிற்சங்க மாநாடுகளில் கூட ராமர் படத்தை வைத்து பூஜை நடத்திய பிறகே மாநாடுகள் துவங்கும் தொண்மம் ஒட்டிக்கிடக்கும் இந்தியாவில்,இது இந்த ஏக போகம் சாத்தியமே.
இந்த அருதப்பழய்ய கதைக்கு 120 கோடி ரூபாய் செலவாம்.மீண்டும் சிவகாசி தான்.அங்கே இரண்டு முதலாளிகளுக்குள் போட்டி வந்ததாம். நீ பெரியவனா நான் பெரியவனா போட்டி.'ஓந்துட்டுக்கும் ஏந்துட்டுக்கும் ஜோடி போட்டுக் கிடுவமா ஜோடி' என்றபோட்டி.ஆளுக்கு கால்கிலோ அரிசி கொடுத்து ஆக்கச் சொன்னார்களாம் யார் சீக்கிரம் ஆக்குகிறார்களோ அவரே பெரிய பணக்காரர். ஒரே ஒரு நிபந்தனை அடுப்பெரிக்க ரூபாய் நோட்டை மட்டும்தான் உபயோகிக்க வேண்டும்'.இதை நாம் எந்த வகையில் சேர்ப்பது சமையல் வகையிலா,போட்டி வகையிலா, பொழுதுபோக்கு வகையிலா.அரசாங்கத்தை ஏமாற்றி, தொழிலாளர் வயிற்றிலடித்து, நுகர்வோரை மொட்டையடித்துச் சேமித்து வைத்த கொழுப்புக்கும் திமிருக்கும் உரசிப்பார்க்கிற இடமாக இப்போது சினிமா கிடைத்திருக்கிறது.
மணிரத்னத்துக்கு கதைப்பஞ்சம் வந்துவிட்டது என்பதெல்லாம் நமது ஆதங்கம். அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் கலையா, வியாபாரமா என்கிற கேள்வியில் கண்ணை மூடிக்கொண்டு வியாபாரப் பக்கம் நிற்கும் யாரிடமும், நாம் இப்படி கதையை எதிர்பார்ப்பது தவறு.,ஏமாற்றம் தான் மிஞ்சும்.எனக்கு பலகாலமக ஒரு தீராத சந்தேகம் இருந்தது. தமிழ் ஹீரோ,ஹிந்தி ஹீரோயின், ஹிந்தி வில்லன் இந்தக் காம்பினேசனில் மட்டுமே படமெடுக்கிறாரே வித்தக்காரன் மணிரத்னம் என்று.அது மார்க்கெட்டிங் உத்தியென்பது ரொம்ப லேட்டாகத்தெரிந்து கொண்டேன்.ரேணிகுண்டா படத்தை ஒரு பத்துதரம் பார்க்கவேண்டுமென்கிற இம்போசிசன் குடுக்கனும்.
கடைசியில் நடிப்பைப்பற்றி ஒன்று சொல்லவேண்டும்.நாற்பது ஐம்பது படம் நடித்தால் எல்லாரும் கைதேர்ந்த நடிகராகிவிடலாம். பயிற்சிதானே ?.ஆனால் ஓயாத மழையிலும்,பனியிலும்,ஆத்துக்குள்ளும்,கரண்டே இல்லாத அந்த பிராந்தியத்திலும் ஐஸ்வர்யா ராயின் உதட்டுச்சாயம் குறையாமல் பார்த்துக் கொண்ட அவரது சொந்த நடிப்புத்திறனையும்,டெக்னீசியன்களின் ஒத்துழைப் பையும் என்ன பாராட்டினாலும் தகும்.
ராமாயணத்து ஒளிவட்டமும்,மணிரத்னத்தின் ஒளிவட்டமும் குறையக்கூடாது என்று நினைக்கிற எல்லோருக்கும் பிடித்தமான வியாபாரப்படைப்பு இது.