Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

27.10.13

பட்டு- நாவலின் விமரிசனமல்ல.



ராமநாதபுரத்தில் இருந்த போது ஒவ்வொன்றாய் வாங்கிப்படித்த புத்தகங்கள் இருபது தேறும். ஒவ்வொன்றாய் வாங்கத்தான் பையும் கையும் ஒத்துழைக் கிறது.அப்போதெல்லாம் அறைத்தோழர்கள்  எப்படி சார் படிக்க நேரம் கிடைக் கிறது உங்களுக்கு,என்று கேட்பார்கள்.நேரம் என்ன கடையிலா விற்கிறது ?, இல்லை மலைமுகடு களில் இருக்கிறதா ?.அரட்டையடிப்பதற்கான  காலங் களைப்போலத்தான், இந்த புத்தகம் மூலமாக அரட்டை அடிப்பதற்கும் லபிக் கிறது தேரம்.டிஸ்கவரி புக்பேலஸ் தோழர் வேடியப்பன் மூலமாக அணுப்பிய ஆறு புத்தகங் களில் இரண்டை முடித்தாகிவிட்டது.எங்கள் பாசத்துக்குறிய தொ.ப.வின் விடுபூக்களும்,அலெக்சாண்டர் பாரிக்கோவின் ‘பட்டு” நாவலும் பற்றிச்சொல்லியே ஆகவேண்டும்.

பட்டு, நல்ல கருஞ்சிவப்பு நிறத்தில் கையடக்கமான பக்கங்களிலும் கையடக் கமான விலையிலும் உருவாக் கப்பட்ட அழகிய நாவல்.ஒரு ராணுவ வீரணான ஹெர்வே ஜென்கர் பட்டுப்புழுக்களை ஜப்பானில் இருந்து வாங்கி பிரான்சில் உள்ள லாவில்டியூ என்கிற உள்ளூரில் விற்கும் வியாபாரியாக மாறிப்போகிறான்.அவனை அவனது அப்பா போட்டுவைத்திருந்த  ராணுவப் பெரும் பதவியெனும் கனவுப்பதையிலிருந்து ஒரு கொண்டையூசி வளை வாய் திருப்பி,கூட்டுப்புழுக்கள் சேகரிக்கும் ஜப்பான் பயணியாக்கியது பல்தொப்பியாதான்.

பிரான்சிலிருந்து கடல்மார்க்கமாக,ரயிலில்,குதிரையில் என மூன்று மாதங்கள் பயணம் செய்து மறு எல்லையில் இருக்கும் ஜப்பானை அடைகிறான். முட்டைகள் வாங்கிக்கொண்டு திரும்பி பிரான்ஸ் வருகிறான்.பட்டுமுட்டைகள் வாங்குகிற ஜப்பானில் ஹரா கீய் என்கிற ஜமீந்தாரின் இளம் மனைவியை காண்கிறான்.அவள் மீதான ஈர்ப்பு அவனை ஜப்பானை நோக்கி திரும்பத்திரும்ப பயணிக்க வைக்கிறது.

ஒருவருக்கொருவர் சந்கித்துக்கொள்ளாத இந்தக்காதல் கதையின் நடுவே பிரான்சின் தொழிற்புரட்சி, லூயிபாஸ்டரின் கண்டுபிடிப்புகள், ஜப்பானியப் போர் ஆகியவை சின்னச்சின்னத்தகவல்களாக வந்துபோகிறது.ஜப்பானிய மொழியில் எழுதிய அவளது கடிதத்தை எடுத்துக்கொண்டு பெரும்பயணம் செய்து திருமதி பிளான்சி என்கிற செக்ஸ் தொழிலாளி மூலம் மொழி பெயர்த்து அறிகிறான்.காலமாற்றத்தில் சூயஸ் காலவாய்திறக்கப்பட்டு,1884ல் செயற்கைப் பட்டுக்கான காப்புரிமைபெறப்பபட்டு ஜப்பான் கொள்முதல் செலவீனமாகிறது.இருப்பினும் அவனை அவள் கண்கள் இழுக்கிறது.

மீண்டும் ஷிராக்காவை அடைந்தபோது போரால் அது சிதலமடைந்து கிடந்தது. ஹரா கீயின் அரண்மனை வெறிச்சோடிக்கிடக்கிறது.ஆளரவமற்ற ஊரின் தனி மையில் இருந்த அவனைத்தேடி ஒரு சிறுவன் வருகிறான் அவனது அழைப்பை  ஏற்று நாட்கணக்காக அவன் பின்னாடி அழைந்து இறுதியில் ஹராகீயின் முகாமை அடைகிறான்.இந்த முறை வந்த ஜென்கரின் நோக்கத் தைப் புரிந்து கொள்கிறான் ஹராகீய்.அதானால் அவனைக் கூட்டிக் கொண்டு வந்த சிறுவனைக்கொல்கிறான்.

மீண்டும் பிரான்சுக்கு பயணமாகிற வழியில் கூட்டுப்புழுக்கள் செத்துப்போய் பயணற்றதாகிவிடுகிறது.அதை அப்படியே கீழே கொட்டிவிட்டு ஊர்திரும்பி, வேறு தொழில்செய்கிறான்.அவனுக்கு ஒரு ஜப்பானிய மொழிக்கடிதம் வருகிறது அதை எடுத்துக்கொண்டு மீண்டும் பிளான்சியிடம் ஓடுகிறான். அது ஒரு நெடிய காதல் கடிதம்.அதன்பிறகு அவனது மனைவி ஹெலன் மரித்துப் போகிறாள்.அதன்பிறகு கடிதம் ஜப்பானில் இருந்து வரவில்லை என்பதை அறிந்து மீண்டும் பிளான்சியை சந்தேகித்து அவளிடம் போகிறான்.
கடிதத்தை எழுதியது உண்மையில் யாரென்று முடிப்பதுதான் நாவலின் பெரும் வெற்றி.

அது ஹெலன்.ஹென்கரின் காதல் மனைவி ஹெலன்.

ஒரு நெடிய சிறுகதை போல இழுத்துக்கொண்டு ஓடும் நாவலில் இன்னொரு வியப்பு இருக்கிறது.ஒரு பக்கம் மட்டுமே இருக்கிற அத்தியாயங்கள். அதை விட  வியப்பு வெறும் அரைப்ப்பக்கத்தோடு முடிந்து போகும் அத்தியாயங் களுமான அதிசயத்தை சும்மா விடுவார்களா.அது திரைப்படமாகியிருக்கிறது.

0

தமிழில்=சுகுமாரன்
விலை =ரூ.95
வெளியீடு= காலச்சுவடு
கிடைக்குமிடம்=டிஸ்கவரி புக்பேலஸும் 

11.3.12

தோனியின் கேள்விகள் முன்வைக்கிற நம்பிக்கை.

ஒரே சுற்றுச் சுவருக்குள் இருக்கும் இரண்டு தியேட்டர்களில் அரவானும்,தோனியும்  திரையிடப்பட்டுக்  கொண் டிருக்கிறது. அரவான் பார்த்துவிடலாம் என்று சொல்லும்போது பதறிப்போய் வேண்டாம் என்று என் கையைப் பிடித்துக்கொண்டார் தேனிப் பக்கத்து ஊர்க்காரர் இளைஞர் ஒருவர்.படம் வெளியாகுமுன்னமே அரவான் க்ரூப்ஸ் னு போஸ்ட்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க சார் என்று கலக்கத்துடன் கூறினார்.ஒரு கலைப் படைப்பை, ஒரு கலை ஞனை சாயம் பூசி அழகுபார்ப்பது வேதனை மிகுந்த அருவருப்பாகும். எனவே சாவகாசமாய்  பார்த்துக் கொள்ளலாம் என்று தோனியைத் தேர்ந்தெடுத்தோம். காலம் கடந்து விமர்சனம் . ஆனாலும் இது விமர்சனம் இல்லை. சும்மா பார்த்த திரைப்படத்தை  சிலாகிப் பதுதான். இந்த சிலாகிப்பு எல்லோருக்கும் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதுதான் உலகம் அவரவர் ரசனை வேறுவேறாய் கிடக்கிறது. எனினும் சமூகம் சார்ந்த சிந்தனை வயப்படுகிறவர்கள் காலம் கடந்தும் நிற்கவே நிற்பார்கள். பிரகாஷ்ராஜ் நிற்பார்.

திரைத் துறையில் இருந்துகொண்டு இப்படி ஒரு கலகக் குரலைப் பதிவு செய்ய துணிச்சல் தேவை. அது நூறு கோடி இரு நூறுகோடி பணம் முதலீடு செய்கிற மசாலாத் துணிச்சலை விட கோடி மடங்கு பெரியது. கல்வி வியாபாரமாகிற கொடுமையை ஒரு முப்பதாண்டுகளுக்கும் மேலாக இடதுசாரி இயக்கங்கள் தெருத்தெருவாய் புலம்பிக்கொண்டிருக்கின்றன. அந்தப் புலம்பல்களை போட்டி என்கிற இரைச்சல் ஓரங்கட்டி விட்டது. அந்தோ.. இன்று கல்வி பொது விநியோகத்திடமிருந்து பறிக்கப்பட்டு கார்ப்பரேட் ....... கையில்  சிக்கிக்கொண் டிருக்கிறது. முதலில் சென்னை போன்ற பெருநகரங்களில் விதைக்கப்பட்ட விஷச்செடி தமிழகம் முழுக்க நீக்கமற வியாபித்துவிட்டது.

மூட்டை கட்டிக்கொண்டு போனால் ஒழிய உயர்கல்வி கற்க வேறு முகாந்திரமே இல்லை என்றாகிப்போன சூழல் இருக்கிறது. மண்ணெண்ணய் விளக்கிலும்,தெருவிளக்கிலும் படித்தவர்கள் மாவட்ட ஆட்சியாளராகினார்கள்  என் கிற செய்திகளால் பெருமிதப்பட்ட காலம் ஒன்றிருந்தது.அது வறிய மக்களின் கல்விக் கனவின்மீது திடமான வெளிச்சம் பாய்ச்சியகாலம். அதெல்லாம் இப்போது  மலை யேறிப்போய்  ஒரு லஞ்சம் வாங்காத அரசாங்க ஊழியன் கூட உயர்கல்வி குறித்து யோசிக்கமுடியாத சூழல் வந்து விட்டது. அப்படிப்பட்ட ஒரு பத்திரப் பதிவு அலுவலக குமாஸ்தாவின் குமுறலாய் கிளம்புகிறது தோனி.  ஒவ்வொரு ப்ரேமிலும் பெற்றோர்களின் மனசாட்சியை உலுப்பி விட்டுச் செல்கிறது படம்.

புறச் சமூகம் தனது குழந்தைகள் குறித்து விசாரிக்கிற கேள்விகளால் கூனிக்குறுகிப் போகிற பெற்றோர்களின் பிரதிநிதியாய் பிரகாஷ்ராஜ் தனித்து நிற்கிறார்.பந்தியில் அருகே அமர்ந்திருப்பவர் கேட்கிற கேள்விகளுக்கு அளக்கிற பெருமிதப் பொய்யும், கல்வி நிறுவன அதிபரிடம் தனது மகன் கட்டாயம் அதிக மதிப்பெண் வாங்கு வான் என்று சொல்லுவது, அதனால் வருகிற ஆதங்கத்தை மகனிடம் காட்டுகிற கோபமும் துல்லியமான செதுக்கல். பிரகாஷ்ராஜிடம் அடிவாங்குகிற ஒவ்வொரு அடியிலும் தனது அபிமானத்தை தளரவிடாத பந்தாய் திரும்புகிறது அந்தச் சிறுவனின்  நடிப்பு. கோமாவினால் படுத்த படுக்கையாய் கிடக்கிற போது நிலைகுத்தி நிற்கிற அவனது கண்கள் எல்லோரது கண்களிலும் நீரைக்கொட்டச்செய்யும்.

அடுக்குமாடியில் குடியிருக்கும் மக்களுக்கிடையே ஊடுறுவிக்கிடக்கும் பந்தம் மேலோட்டமாக இருந்தாலும் இந்த ஜாதிய திரட்டல் யுகத்தில் இன்னும் அழுத்தமாக சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. குடும்பத்துக்காக அரசியல்வாதியின் சின்ன வீடாகிற நளினியின் மீது காட்டுகிற வெறுப்பு,கந்து வட்டிக்கு கொடுக்கிற கனிபாயின் கறார்தன்மை மீது காட்சிப் படுத்தப்படுகிற வெறுப்பு,மதிப்பெண் வாங்கமுடியாத மகன் மேல் கவிழ்ந்திருக்கும் கோபம்  எல்லாமதிப்பீடுகளும் உடைந்து அன்பாகத் திரும்புகிற நெகிழ்ச்சி அழகு. எல்லோருக் குள்ளும்  மனிதா பிமானம்  ஒளிந்து கிடப்பதையும் எல்லோருக்குள்ளும் தனித்திறமை ஒளிந்து கிடப்பதையும் நம்பிக்கையோடு முன்வைக்கிறது தோனி.அதே நேரம் கல்விக்கொள்கை,புரையோடிக்கிடக்கும் லஞ்சம் இவற்றைச்சொல்லுகிறேன் பேர்வழி என்று இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் கோபத்தைத் திசை திருப்பாத நேர்மை இருக்கிறது இந்தப்படைப்பில்.

சமூக மாற்றங்கள் சினிமாக் கதாநாயகர்களால் மட்டுமே வரும் என்கிற மூடநம்பிக்கையையும், காதல் 100 சதவீதம் சுத்தமானதும் டூயட் பாடுவதாலும் என்கிற முரணான மூட நம்பிக்கையையும் ஜஸ்ட்லைக்தட்  ஒதுக்கி விட்டு  இயல்பாக நகர்கிறது. பின்னணி இசை படம் முழுக்க பிரகாஷ்ராஜுடன் கை கோர்த்துக் கொண்டு  வரு கிறது. நிழலாகப்படகோட்டி விளையாண்ட காலம்போய் பாடல் வீட்டுக்கு வந்த பிறகும் பின்னாடி நிழலாகத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

27.2.12

காவல்கோட்டத்தை காவல் காக்கும் ஜெயமோகன் - இடதுஎழுத்துக்கெதிரான சூழ்ச்சி.



காவல் கோட்டம் மிகச்சிறந்த நாவலா,இல்லை ஆதிக்க ஜாதிகளுக்காதரவான மிகச்சிறந்தபரப்புரையா என்பது குறித்து விவாதிக்கு முன்னாடி விமர்சனங் களின் விமர்சனங்களை கூர்மையாக அனுகவேண்டியிருக்கிறது. தமிழகத்தில் பார்ப்பணர்களும், முதலியார்களும், வெள்ளாளர்களும் ஜாதிகுறித்து வைத்திருந்த மேட்டிமையைக் காட்டிலும் இடைப்பட்ட சாதிகள் கொண்டிருக் கும் துவேஷமும்  மிகப் பிரபலமானது. அது இன்றுவரை தொடரும் அவலம். தீராத வன்கொடுமைகளைத் தடுக்கவழியில்லாமல் அலைகிறது தேசம். அப்படியிருக்க  இரண்டு ஜாதிகள் குறித்த பெருமிதங் களை ஒரு வரலாறாக முன்வைக்கிற இந்த நாவலில் இருக்கிற இடதுசாரிக் கருத்துக்களுக்கு எதிரான  விஷயங் களை அம்பலப்படுத்துகிறார் தோழர் மாதவராஜ்.

முதலில் இந்த விமர்சனத்தை அமைப்புக்கு எதிரானதாக கற்பித்துக்கொண்டு கிளம்பிய விவாதங்கள்  மேம்போக் கானவை. பின்னர் அதற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு கிளம்பும் குரல்கள் மிகுந்த உள்நோக்கமுடையவை. இந்துத் துவா மீது மோகமும் இடதுசரிகள் மீது தீராத காழ்ப்புணர்ச்சியும் கொண் டிருக்கிற ஜெயமோகன் இந்த நாவலை ஆதரித்தும் மாதவராஜை எதிர்த்தும் குமுதம் பத்திரிகையில் எழுதியிருப்பது மிகப்பெரும் வேதனை கலந்த சூழ்ச்சி யாகும். அந்த வாதங்களின் கூடுதல்  கொச்சைத் தனங்களாக எழுத்தாளர்  ஜெய காந்தனையும்,  எழுத்தாளர் மேலாண்மைப் பொன்னுச்சமியையும்  சுட்டிக் காட்டுவது இந்த எழுத்துலகம் கூர்ந்து  கவனிக்க  வேண்டிய விமர் சனம். யாரையும் விருப்பு வெறுப்பின்றி  விமர்சனத்துக் குள்ளாக்கும் தோழர் என்பது  மாதவ ராஜைப் பற்றி அறிந்த அத்தணை தோழர்களும்  அறிவார்கள். சு.வெங்கடேசன் உட்பட.

அமைப்பை எந்த தனி நபருக்காகவும் விட்டுக்கொடுக்காத நெறியுடையவரும் அவர். இதை தோழர்  உரா. வரதராஜன் மரணம் குறித்த பதிவிலும், அதற் கெதிராக வந்த விமர்சனங்களிலும் சமீபத்தில் தோழர் கோணங்கி குறித்த பதிவிலும் காணலாம்.அமைப்பு ரீதியாக மேலாண்மை பொன்னுச்சாமியைக் கொண்டாடுகிற மாதவராஜ் படைப்பு ரீதியாக அவரை அதிகமாக விமர்சித் திருப்பதை தமுஎச வட்டத்தில் அணைவரும் அறிவார்கள். தோழர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கும் கூட இது நன்றாகத் தெரியும்.தன்னை ஒரு போதும் எழுத்தாளர்  ஜெயகாந் தனின் மருமகன் என்று அறிமுகப்படுத்தாதவர் என்பதை மிகநெருக்கமாக அவரை அறிந்த எல்லோரும் அறிவார்கள். எண்பது களிலே எழுதத் தொடங்கிய அவர் தொண்ணூறுகளில் தான் எழுத்தாளர் ஜெய காந்தனின் மருமகனானார். அப்படியிருக்க எழுத்தாளர் ஜெயகாந்தனையும் தோழர் மேலாண்மையையும் இந்த விவாதங்களில் உள்ளிழுப்பது சூழ்ச்சி நிறைந்த செயல்.

இவ்வளவு காலமாக இடதுசாரிகளால் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிற சாகித்ய அகாடமி விருதுகள் தோழர் மேலாண்மைக்கும், காவல் கோட்டத் துக்கும் கொடுக்கப் பட்டதால் புனிதமானதாக மாறிவிட்டதாக மயக்கம் கொள் ளக்கூடாது என்கிற தொனி இருந்தது. தகுதிக்குறியோர் பட்டியலில் இந்த எழுத்துலகம் மதிக்கிற உன்னத எழுத்தாளர்கள் விடுபட்டதையும் அவர் தனது முதல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஒரு  இயக்கவாதியாக  மட்டு மிருந்து அந்த குறிப்பை அணுகினால் எரிச்சல் வரலாம், வரும். நேர்மையான முறை யில் அணுகினால் அது அலாதியாகத்தெரியும். பெத்தானியாபுரம் முருகா னந்தம் என்கிற நபரின் கேள்விகளாக முன்வைக்கப்பட்ட வரலாற்று ரீதி யான,மற்றும் சமூக ரீதியான கேள்விகளை அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட முடியாது.அதே கேள்விகளின் நீட்சிதான் மாதவராஜ் எழுதிய காவல் கோட்டம் விருதுகள் விழாக்கள் என்கிற மிகப்பெரிய விமர்சனம்.

இந்த விமர்சனத்துக்கு அமைப்பு ரீதியான கோபங்கள் வெளியேறும் என்பவை அறிந்த ஒன்று ஆனால்  அமைப் புக்கு எதிரான நபர்களிடமிருந்து எதிர்ப்பு வரு வது குதர்க்கமான ஒன்று. இருபத்தைந்து வருடங்கள்  முதலமைச்சராக இருந்த தோழர் ஜோதிபாசுவுக்கும் நேற்று கட்சியில் உறுப்பினரான ஒருவருக் கும் சமதையான அந்தஸ்து வழங்கும்  அமைப்புகள் இடதுசாரி அமைப்புகள். அப்படிப்பட்ட அமைப்பில் இருக்கிற  சட்டமன்ற வேட்பாளராக அறியப்பட்ட எழுத்தாளர் ஒருவர் வாளும் மலர்க் கிரீடமும் வாங்கிப் பெருமிதப்பட்டுக் கொள்வதை எந்த ஒரு இடதுசாரியும் ஏற்றுக்கொள்ளமாட்டான். அப்படி ஏற்றுக் கொள்ளாத ஆயிரக்கணக்கான  உண்மைத் தோழர்களின் பிரதிநிதித் துவக் குரலாக வந்ததுதான் இந்த நேர்மையான விமர்சனம்.

என்னைத்தவிர இங்கு எவன் எழ்துவதும் எழுத்தல்ல என்கிற கர்வத்தில் இருப்பவரும்,அதனால் தினம் வண்டி வண்டியாய் அம்பாரமாக இந்துத்வாக் குப்பைகளை  அள்ளிப் போடுபவரும், அந்தக் குப்பைகளின்மேல்  உட்கார்ந் திருகிறவருமான  ஜெயமோகன் இங்கு வந்து சாட்சி சொல்லவும்,நீதி சொல்லவும் இடதுசாரி அமைப்புகள் ஒன்றும் இளைத்தவை அல்ல. அதிகார மையங்களைச் சொரிந்து விடவும்,ஆதிக்க சாதிகளைப் பெருமிதப்படுத் துவதுமான அவர் போன்றவர்களின் எழுத்தை தோலுரிக்கிற பணி தான் இடதுசாரிகளின் முதற்பணி.  அப்படி யிருக்க அவர் வலிய வந்து  வெங்கடேசன் நனைகிறதாக ஒப்பாரி வைப்பது  ஆட்சேபகர மானது. தனது திண்ணை எழுத்துக்களிலும்,தனது கவிதை முன்னுரையிலும் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் காரர்  ஜெமோ என்று  ஆரம்பிக்கிற சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக  ஜெயமோகன் களத்தில் குதிப்பதும் அதை தோழர்கள் மௌனமாக ஏற்றுக் கொள்வதும் கவலை அளிப்பதான ஒன்று.

நாவலின்மீது ஜெமோ ஆதவரவாகவோ எதிராகவோ கருத்துச்சொல்லுவதை புரிந்துகொள்ளலாம்.மாதவராஜின் கேள்விகளுக்கு ஜெமோ பதில் சொல்லுவதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. மாதவராஜை நோக்கி ஆரம்பக் கட்ட வாசகராக இருக்கிறார் என்கிற எள்ளலை முன்வைக்கிற ஜெயமோகனுக்கு மிகுந்த  பெருமிதத் தோடு நாங்கள் சொல்லிக்கொள்ள ஒன்றிருக்கிறது. இந்துத்துவ,முதலாலித்துவ,ஜாதித்துவ பெருமைகளைத்  தூக்கிப் பிடிக்கும் நீங்கள் முதுநிலை வாசகராக இருக்கும் பட்சத்தில் நாங்கள் அதற்கு எதிரான எந்த இடத்திலும் இருப்போம். அது பற்றி எங்களுக்கு எள்ளளவும் வருத்தம் இல்லை. ஆனால் நாங்கள்  பாதிக்கப் பட்ட மக்கள் பக்கம் இருக்கிறோம். அவர்கள் அறிகிற பாஷைய எழுதுகிறோம் என்கிற பெருமிதம் எங்களுக்கு இருக்கிறது. அது தவிர்த்த எந்த அதிகார மையத்தின் சான்றிதழும் எங்களுக்கு அநாவசியமானது.

7.2.12

சாதாரண மக்கள் வாழ்க்கைப் பாட்டின் சொற்சித்திரங்கள்...-எஸ் வி வேணுகோபாலன்

காலண்டர்கள், கடிகாரங்கள், பஞ்சாங்கங்கள், ஜாதகக் கட்டுகள், பிரதோஷம், நவகிரக சாந்தி, பரிகாரங்கள், வாஸ்து சாஸ்திரங்கள்... இவற்றின் வாடையே படாத உலகிலும் மனிதர்கள் இருக்கிறார்கள். வாழ்கிறார்கள், மரிக்கிறார்கள். இவர்களது வாழ்வியல், நாகரிக உலகம் பேசிக் கொண்டிருக்கும் ஒழுக்க விதிகளின் ஆதாரத்தை அம்பலப்படுத்திவிடும் வல்லமை கொண்டதாக இருப்பது மேலோட்டமான பார்வையில் பிடிபடாது.

தெருவோரத்தில் எதையோ வெறித்துப் பார்த்துப் படுத்துக் கொண்டிருக்கும் ஆள், நடு வீதியில் காது கூசுகிற கெட்ட வார்த்தைகளால் எவனையோ ஏசிக் கொண்டே போகிற ஒழுங்கற்ற முறையில் உடையணிந்திருக்கும் பெண்ணொருத்தி, ரயில் பயணத்தில் திடீரென்று தோன்றி உங்கள் கால்களின் கீழே திரளும் குப்பையைப் பெருக்கிக் கொண்டே சில்லறைக்காக கையை நீட்டும் ஏழைச் சிறுவன்....இவர்களைக் கண்டால் ஏதோ தியேட்டரில் சுவாரசியமாகப் படம் பார்த்துக் கொண்டிருக்கையில்  புரொஜெக்டர் ஒளியின குறுக்கே எழுந்து நிற்கும் எவருடைய நிழலோ திரையில் விழுந்தாற் போல எரிச்சலடைகிறோம் நாம்.

பொற்கொல்லர் வீதியில் ஓடும் சாக்கடை நீரை முகந்தெடுத்து அலசி அலசி வடிகட்டி அதில் பொன் துகள்கள் கிடைக்காதா என்று தேடும் வாழ்க்கையை யாரும் ஏ.டி.எம். எந்திரத்தின்முன் வரிசையில் நின்று அட்டையைப் போட்டுப் பெற்றுக் கொண்டு வருவதில்லை. இந்த சமூகம் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கும் அடிப்படை தார்மீக அம்சம் அதில் புதைந்திருக்கிறது. சமூகவியலாளர் பதிவு செய்ய வேண்டியதை, இலக்கியவாதி படைப்புகளாய் வார்க்கிறார். முன்னதில் புள்ளி விவரங்களாக இருப்பது, பின்னதில் மண்டையில் ஓங்கி அறையும் சம்மட்டியாக வெளிப்படுகிறது. எல்லோருக்கும் அப்படியான புனைதல் சாத்தியமாவதில்லை.  உலுக்கி எடுக்கும் கதைகளை எஸ் காமராஜ் இந்தத் தொகுப்பு நெடுக வழங்கி இருப்பது, இதனால் தான் கவனத்தை ஈர்க்கிறது.

"எம்மா கஞ்சி போடுங்கம்மா, அழுக்கெடுத்துப் போடுங்கம்மா.." என்று வீதி நெடுக அலைந்து  தினம் ஒரு வீட்டில் எச்சிச் சோத்தோடு அவமானத்தையும் சேர்த்து வாங்கிக் கொண்டு வந்து வயிறு நிரப்பும் வண்ணார் குடும்பத்தின் சிறுவனுக்கு, இந்த ஊரு பூராம் வேற, நாம வேற என்பதை விளக்க முடியாத பெற்றோர் (வேரை விரட்டிய மண்), தெருக்கூத்தில் நடிப்புக்குக் கூட 'செத்த மாடு திங்கிற சின்ன சாதிப்பய, நாயே, போடா, வாடா என்று நம்மாளை எந்த மசுத்துக்கும் சொல்லப்பிடாது (விடுதலையின் ஒத்திகை ) என்று திமிரும் ஆதிக்க சாதி, தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைக்குப் போன தாழ்த்தப்பட்ட சாதிச் சிறுமிக்கு முதலாளியின் காமத்திற்கு ஈடு கொடுக்க வேண்டியதும் ஒரு ஊழியமாக அர்த்தப்படும் கொடுமையின் அடுத்த நுனியில் அதுவே அவளது வாழ்க்கை விதியாக மாறுவதும், அந்த அவமானத் தொழிலில் இருந்து வெளியேறுவதன் வாசலில் அவள் சாமியாடி குறிசொல்லியாக பரிணமிப்பதும் (மருளாடியின் மேலிறங்கியவர்கள்).. என "கருப்பு நிலாக் கதைகள்" தொகுப்பின் சிறுகதைகள்  உள்ளத்தை உலுக்கும் விவரிப்புகளோடு பட்டவர்த்தனமான விசாரணையாகவே உருவெடுக்கின்றன.

தலைப்புக் கதை, ஈவிரக்கமின்றி பாலியல் வேட்டைக்குப் படைக்கப்படும் பெண்ணொருத்தியின் கதையைச் சாட்டையடியாய்ச் சொல்கிறது. கயவனின் வன்புணர்ச்சியின் வலியில் இருந்து அவள் மீளுமுன் கணவன் தனது புனிதம் காப்பாற்றிக் கொள்ளக் குழந்தைகளோடு வேறிடம் போய்விடுவதும், அந்தக் கயவனோடே பகிரங்க வாழ்வை அவள் தொடர இடம் கொடுததும் கொச்சைப் படுத்தப்பட்ட உடலுக்கு மரியாதை மிஞ்சியிராததும் அவளுக்கான கூராயுதங்களைத் தயாரித்துக் கொடுக்கத் தான் செய்கிறது. 

வேதனையான வாழ்வுச் சூழல்களை மட்டுமே சொல்லி நகர்ந்துவிடாத காமராஜின் எழுதுகோல், இவற்றினூடே பனிப்பூக்கள் போல் மின்னும் மனிதநேயத்தை, மாற்றுப் போக்குகளின் தடயத்தை, சவால்களை ஏற்றுப் போராடும் வேட்கையை எல்லாம் உள்ளன்போடு பதிவு செய்கிறது. உலகெங்கும் பாட்டாளி மக்களின் விடியலுக்காகத் தன்னலமற்று உழைக்கும் தொழிற்சங்க ஆளுமைகள் அனைவருக்குமான படிமமாக படைக்கப்பட்டிருக்கும் சம்பத் (சம்பாரி மேளத்தின் உச்சமும், சில இழப்புகளின் மிச்சமும்) கதை ஒரு தந்தையும் மகளும் பகிர்ந்து கொள்ளும் எத்தனையோ சின்னச் சின்ன சந்தோசங்களை இழந்திருந்தும், ஒரே ஒரு பார்வையில், லேசாகத் தோலில் சாய்கையில், தலை கோதுவதில் அவற்றை மீட்டெடுக்கும் வல்லமை பற்றி அழகாகப் பேசி பொது வாழ்வை கவுரவிக்கிறது.

நகைச்சுவையோடு சாதாரண மனிதர்களின் அசலான வாழ்வைப் பேசும் "ஆனியன் தோசையும், அடங்காத லட்சியமும்", காதலின் மெல்லிய கணங்களைக் கவிதையாகக் கடக்கும் "ஜீவ அப்பமும் கொஞ்சம் கெட்டிச் சட்டினியும்", குழந்தைத் தொழிலாளர் பற்றிய வெற்றுப் பிரகடனங்களைக் கேள்விக்குட்படுத்தும் அதிர்ச்சியான "சிறுபிள்ளைகள் என்னருகே வர தடை செய்யாதிருங்கள்", அன்பின் வெள்ளம் எங்கே வழியுமோ அங்கே கழியும் வாழ்க்கை என முகவரி தரும் "நினைவில் சலசலக்கும் பனங்காடு"...என தொகுதி முழுக்க மீண்டும் மீண்டும் வாசிக்க நிறைந்திருக்கின்றன பதினான்கு கதைகள்.

இரண்டு கதைகள் ஒன்றாகக் கலந்து விட்ட பாட்டுக்காரி தங்கலச்சுமி மற்றும் தொகுப்பு முழுவதிலும் ஆங்காங்கு சரி செய்ய விடுபட்ட  மெய்ப்பு திருத்தங்களால் நெருடும் பிழைகள், சில இடங்களில் இருவரது பேச்சுக்களை ஒன்றாகக் கலந்துவிட்ட  உரையாடல்களால் ஏற்படும் வாசிப்பின் இடையூறுகள் இவற்றைக் குறிப்பிடாதிருக்க இயலாது. என்றாலும் வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கும் இந்த அழகான நூல், காமராஜின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு.  தமது தேர்ச்சியான சொற்சித்திரங்களில் அவர் குழைத்துத் தரும் மிகச் சாதாரண மக்களது வாழ்க்கைப்பாட்டின் வித்தியாசமான வாசிப்பு அனுபவம் அது. 

5.2.12

சூழ்ச்சியால் பேசப்படாது போன - அவள் அப்படித்தான்.

இன்று அதிகாலை ஐந்துமணிக்கு ஒரு உள்ளூர் கேபிள் மூலமாக கருப்பு வெள்ளை படங்களில் இருந்து  பாடல் கள் ஒலி_ஒளி பரப்பினார்கள். கடவுள் அமைத்துவைத்த மேடை,கம்பன் ஏமாந்தான்,பன்னீர்புஷ்பங்களே என மிக மிக நெருக்கமான பாடல்களாக இருந்தது. எழுபது  எண்பதுகளின் பாடல்கள். எல்லாமே என் கல்லூரிக்  காலங் களின் பாடல்கள். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் பாடல்கள். ஆனால் அது முழுக்க  கமல காசனின் படங்களாக இருந்ததால் கமலகாசனின் பாடல்கள் என்றுதான்  தமிழ்ச் சினிமா சொல்லும்.

முன்னாடி  கமலகாசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது அபூர்வராகங்கள் மற்றும் நிழல் நிஜமாகிறது ஆகிய இரண்டு படங்களால் சிவாஜியிலிருந்து கமலுக்கு உருமாற்றமான ரசனை. இரண்டிலும் ஒரு அசல் கோபக்கார  இளை ஞனாக சித்தரிக்கப் பட்டிருப்பார் கமல். பிற்பாடு அந்த ரசனையை ரஜினிக்கு  மாற்றிக் கொண்டேன் காரணம் இன்னும் அடர்த்தியான கோபம் அவரிடமிருந்து வெளியானதாக நான் நம்பியதால் வந்த வினை இது.

இதெற்கெலாம் சிவாஜியோ,ரஜினியோ,கமலோ காரணமில்லை அதன் இயக்குனர் தான் என்பதை அறிந்த போது எனக்கு அவள் அப்படித்தான் என்கிற படமும் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்கிற படமும் மிக மிக  நெருக் கமான படமாகத் தெரிந்தது. இந்த இரண்டில் அவள் அப்படித்தான் படத்தை குறிப்பிட்டுச்சொல்லியே தீரவேண்டும். தமிழ் இலக்கியச் சூழலில் சில எழுத்தும் எழுத்தாளர்களும்  கவனிக்கப் படாமல் போனது போல அவள்  அப்படித் தான் படமும் கவனிக்கப்படாமல் போனது. அதே காலத்தில் வெளியான பாரதிராஜாவின் படங்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கான தூண்டுகோலாக சித்தரிக்கப்பட்டது. ஆனால் நிஜத்தில் அவற்றில் பெண்கள் பெண்ணடிமைக் கலாச்சாரத்தைத் தூக்கிபிடிக்கும் பழய்ய பதுமைகளாகவே முன்னிருத்தப்பட்டார்கள். அவள் அப்படித்தான் அப்படி யில்லை.

1980 ஆம் வருஷம் சாத்தூர் தனலட்சுமி தியேட்டரில் திரையிடப் பட்டது. அப்பொழுதெல்லாம் சினிமா சகலரையும் விழுங்கும் ஒரு ராட்சஷ பொழுது போக்காக இருந்தது.புதுப்படம் திரையிடப்பட்ட முதல் நாள் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் வாங்கி அரங்கில் உட்காருகிற தமிழகம் தங்களுக்கான தேவைகள் எல்லாவற்றையும் கண் ணெதிரே பூதாகரமாக ஒளிரும் திரைம் தரும் என்று நம்பினார்கள். இன்னமும் நம்பிக்கொண்டிருக் கிறார்கள். இந்த நம்பிக்கையிலிருந்து  விலகிய இலக்கியம் காலங் காலங் காலமாக தோற்றுப் போய்க்கொண்டே  இருக்கிறது. அவள் அப்படித்தான் படமும் அப்படித்தான். மூன்றே நாட்களில் படத்தைத் தூக்கிவிட்டார்கள். மொத்தம் முன்னூறுபேர் கூடப்பார்த்திருக்க வாய்ப்பில்லை.அந்த மூன்று நாளில் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு மூன்று முறைபார்த்தோம்.

இன்றுவரை தமிழ்ச் சினிமாவுக்கென ஒரு நேர்கோடு  இருக்கிறது. அந்தப்படம் அதற்கு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கிறது.

ஒரு பெண்ணைப்பார்த்தவுடன் காதலிப்பது. ஒரு சீப்பு வாங்கவேண்டுமானால் கூட ஆயிரம் முறை யோசிக்கிற சனம் பார்த்த நொடியில் காதலில் விழு வதான கற்பனை. அப்படியே அவளைப் பூஜிப்பது. அவளது மினுக்கல் களை மட்டும் விஸ்வ ரூபப்  படுத்துவது. அவளிடம் மனது என்கின்ற ஒன்றிருப் பதை லாவகமாக ஒதுக்கித்தள்ளுவது.ஒரு பெண்ணை காதலிப்பது , அதற்கு எதிரான சவால் களை சாதுர் யமாக எதிர் கொள்வது. அவங்கப்பனைக் கொன்றுவிட்டு அவளை  மண முடிப்பது.

கொடுமை.  ஒரு பெண் இந்த உலகத்தில் முதன் முதலில் நெருக்கமாகவும் பிரியமாகவும் இருப்பது தனது தகப்பனிடம் என்கிற அறிவியல் உண்மையை ஹீரோயிசச் சாணியால் மூடி மறைத்த சினிமாக்கள் தான் இன்னும் அறி யாமையிலிருந்து மீள விடாமல் நம்மை அமுக்குகிறது.

அவள் அபபடித்தான் அப்படியில்லை. ஒருமுறைதான் காதல் வரும் எனும் சப்பைச் சிந்தனைகளை. தொட்ட வனையே கட்டிக் கொள்ளவேண்டும் என்கிற அதி பயங்கர சர்வாதிகாரச் சிந்தனைகளை மௌனமான அடியால் நொறுக் குகிற படம் அது. காதலன் காதலி நுனி விரலைத் தொட்டதும் மின்சாரம் பாய்ச்சுகிற கற்பனைகள் இல் லாத படம். ஒரு பெண்ணின் அவயவங்களைத் தொட்டுப்பார்க்க விடலைப் பையனுக்கும் ஆசைவரும்என்பதைச் சொல்லும் படம். அதை ஒரு சின்ன ஷாட்டில் சொல்லுகிற படம். காதலை பூஜை அறை யில் வைக்கிற சரக்காக ஆக்காத படம். ஆகவே அந்தப்படம் மக்களால் பெரி தும் பார்க்கப்படாமல் போனது.

ஆனால் அதிலும் நாம் சொல்லச் சின்னசின்னக் குறைகள் இருக்கிறது  அவளைப் பற்றி பேசுவது ஒரு ஆண் என்கிற குறைதான். அது எதனால் வந்த தென்றால் அதை உருவாக்க ஒரு பெண் இயக்குநர் இல்லை என்பதே. பெண் கள்  தனி யாகச் சினிமாவுக்குப் போகமுடியாத ஒரு மறைமுக தாலிபான் மனோபாவம் இருந்த இருக்கிற யுகத்தில் நாம் பெண் இயக்குநர்களுக்கு எங்கே போக?

பெண் மட்டுமல்ல இந்த சினிமா ஊடகத்தின் வழியே பேசப்படாது போன குரல்கள் ஒரு கோடியிருக்கும்.அதற்கு மேலும் இருக்கும். அந்தக் குரல்கள் தியேட்டர் இருளில், இடைவேளைக் காண்டீன் சலசலப்பில்,கழிப்பறை களில் சிதறிக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறன. அவற்றைப் பேசவிடாமல் குரல் நெறிக்கும் வகையில் வியாபார உத்திகள்,அரசியல் சூழ்சிகள்,தொழில் நுணுக்கங்கள், இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றன. அதனால் கதைகள் வற்றிப்போய் மீண்டும் மீண்டும் கழிசடைக் கருத்துள்ள ரஜினி படங்கள் மறு அவதாரமெடுக்கின்றன ரத்த பீஜன்களைப்போல.

6.10.11

நாஞ்சில் நாடனின் ’கான்சாஹிப்.’



( வண்ணநிலவனும்,நாஞ்சில்நாடனும் வாரிச்சுருட்டிக்கொள்ளும் ‘காபிர்களின் கதைகள்’ )


எந்த ஒரு அசாத்தியத்தையும் நிகழ்த்தாமல்,சாகசம் என்கிற வார்தையைக் கூட உச்சரிக்காமல், திடீர் திருப்பங்கள் அவர்கள் நடந்து போக்கும் தெருவில் கூட இல்லாமல் சுற்றித்திரியும் இரண்டு பேருடைய சகவாசத்தை சொல்லுகிற சிறுகதை.ஆனால் லயித்துப் போய்,ஆட்டுக்குட்டி மாதிரி நம்மை அவரது எழுத்தின் பின்னாடியே நடக்க வைக்கிற சமாச்சாரம் ஒன்றிருக்கிறது.அது நட்பு.அதை நட்புதான் என்று சொல்லாமல்.நட்புக்கான இல்லக்கணம் இதுதானென்றும் சொல்லாமல்.ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த பிரியத்தை மட்டுமே நம்பி இந்தக்கதையை நகர்த்தியிருப்பது தான் அதன் வசீகரம். கதை ஆரம்பிக்கும்போது இது கதையா நினைவு கூறலா என்கிற முடிவை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கான் என்று முடிகிற பேர்களாகப்பட்டியலிடுவது இப்படி குறுக்குமறுக்காக நம்மை அலையவிட்டு அப்புறம் மும்பைக்கு கூட்டிக்கொண்டு போகிறார் நாஞ்சில் நாடன். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு வீடே ஊராகும்.ஊரை விட்டு தனித்து விடுதியில் இருக்கும் எல்லோருக்கும் அந்த ஊரே வீடாகும்.

தனிமையில் உட்கார்ந்து விட்டத்தைப் பார்த்துகொண்டிருக்கு அலுத்துப்போய் கால் போன போக்கில் போகிற அனுபவம் அலாதியானது. அப்போது தனக்கு கொஞ்சம் இலக்கியமும் தன்னோடு கூடவருபவருக்கு நிறைய்ய இலக்கியமும் தெரிந்து இருப்பது எவ்வளவு  சிலாக்கி யமான விஷயம் என்பதை நாஞ்சில் நாடன் அசத்தலாக எடுத்துவைக்கிறார்.கான்சாஹிப்போடு சேர்ந்து சுற்றிய தெருக்கள்,பார்த்த சினிமாக்கள், நாடகங்கள், மனிதர்கள், ,சிகப்பு விளக்குத்தெருவும் பெண்களும் என்று வழிநெடுக நினைவுகளை நட்டுக்கொண்டு போய் ஒரு தோல்பையில் முடிகிறது கதை. பிரியமான மானிதர்களை நினைவுபடுத்துகிற எல்லாமே பிரியமானதாகவும் பொக்கிஷமாகவும் மாறும். அப்படி ஒரு தோல்பையை மாற்றிக் கையில் கொடுக்கிற சிறுகதையை படிக்கும் எல்லோரும் தங்களை உரசிப் பார்த்துக் கொள்ளச் சொல்லும் . முடிந்தால் அப்படியொரு கதையை எழுதவேண்டும் என்கிற ஏக்கத்தை உண்டுபண்ணும் கதை ’கான்சாஹிப்’.

5.10.11

வண்ணநிலவனும்,நாஞ்சில்நாடனும் வாரிச்சுருட்டிக்கொள்ளும் ‘காபிர்களின் கதைகள்’


சென்னை கேகே நகரில் உள்ள டிஸ்கவரி புக்பேலசுக்கு சென்ற மாதம் போயிருந்த போது சுற்றிச் சுற்றி புத்தகங்கள் காட்சிப் படுத்தப் பட்டிருந்த ஒரு நண்பனின் வீட்டுக்குள் நுழைந்தது போல இருந்தது.புத்தக அலமாரிகளுக்கு மத்தியிதான் அண்ணன் ராஜசுந்தர ராஜனும், விதூஷ்வித்யாவும், பத்மாவும், மேவியும் சகோதரர் கார்த்திகப்பாண்டியனும் இருந்தார்கள்அவர்களோடு பேசிக்கொண்டே புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன்.என்னை இறக்கிவிடவந்த எனது மூத்த மகன் கிஷோர்பாரதிக்கு அங்குதான் எடிட்டிங் குறித்த புத்தகம் ஒன்று வாங்கிக் கொடுத்தேன். அதை அவன் புரட்டிக்கூடப் பார்த்திருக்காமல் இருக்கலாம்.அல்லது படித்திருக்கலாம். ஆனால் அது காலங்காலத்துக்கும் அவனோடு கூட இருக்கும். ஒரு தகப்பனாக நான் அவனுக்கு வாங்கிக்கொடுத்த சில அறிவற்றுள் அதுவும் இடம் பிடிக்கும்.தன்னை யாராவது படிக்கமாட்டார்களா என்கிற ஏக்கத்துடன் அது அவனோடு கூடவே இருக்கும்.

அப்படி ஏக்கத்தோடு டிஸ்கவரி புக்பேலசின் அலமாரிகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் காத்துக்கிடந்தன.நான் பேச்சை தவிர்த்துவிட்டு புத்தகங்களுடன் பேசப்போனேன்.அப்போது தோழர் எஸ்.வி.வேணுகோபால் அவர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய புத்தகங்கள் கிடந்தன. அது தோழர் கீரணூர்ஜாகீர்ராஜாவின் புத்தகங்கள்.எண்பதுகளில் யதேச்சையாக ஒரு பழய்ய கணையாழியில் படித்த நாகூர் ரூமியின் குட்டிவாப்பா என்கிற சிறுகதை என்னை நெடுநாள் அழைக் கழித்த கதை.ஒரு சமூகத்தின் உள்ளார்ந்த விவகாரங்களை மனிதர்களின் நடை உடைபாவனையோடு கலந்து பிசைந்து வைக்கிற அந்த மாதிரியான எழுத்து குட்டிவாப்பா கதையில் கிடந்தது.வயதுதளர்ந்த ஒரு மனிதனை அவனது மூலநோயோடு கூடிய சுவாரஸ்யங்களை அசைபோட்டபடி அவரை நினைவு கூறும் அந்தக்கதை.அதன்பிறகு தான் தோப்பில் முகம்மது மீரானின் அன்புக்கு முதுமையில்லை தொடங்கி ஒன்றிரண்டை வாசிக்கிற ஈர்ப்புவந்தது. அதற் கடுத்து அந்தமக்களின் வாழ்க்கை குறித்து வருகிற எழுத்துக்களை திறம் படச்சொல்லுகிற சமகால எழுத்து தோழர் ஜாகீர்ராஜாவுடையது.

அவர்தான் காபிர்களின் கதைகள் என்கிற பதினெட்டுக்கதைகளை தொகுத்து ஆழி பப்ளிஷர் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டிருக்கிறார். அதில் ஒன்றி ரண்டைத் தவிர எல்லாவற்றையும் படித்தாகிவிட்டது. அதற்கந்த ராமநாத புரத்து தனிமைக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

மஹாகவி சுபரமண்ய பாரதிதொடங்கி அண்ணன் சோ.தர்மன் வரையிலான ஆளுமைகளின் கதைகள்.இந்தப்பதினெட்டுப்பேரும் தங்களின் குறுக்கே வந்த இஸ்லாமியர்கள் பற்றிக்கதை சொல்லியிருக்கிறார்கள். பதினெட்டுப்பேர்களில் எனக்குப்பிடித்த வண்ணநிலவனோடுதான் அதை ஆரம்பித்தேன். ’மெஹ்ருண்ணிஷா ’ ஒரு வாழ்ந்துகெட்ட பெரும் பணக்கார முஸ்லீம் வீட்டின் ஒட்டடை படிந்த சுவர்களுக்குள் பயணமாகிற கதை.அப்படியான வாழ்ந்துகெட்ட கதைகளில் எல்லாமே ஒரு வேலைக்காரர் கட்டாயம் கிடப்பார்.அவர்தான் உடைந்து நொறுங்கிப்போன மனிதாபி மானத்தை எடுத்து அவனது சேவகம் என்கிற அன்பினால் மறுபடி புணரமைப்பார். அப்படிப் புணரமைக்கிற ராமையாவை எல்லோரும் கட்டாயம் வாசிக்கவேண்டும்.

அவரோடும் அந்தகதையின் நாயகி மெஹ்ருண்ணிஷாவோடும்,அந்த வீட்டு சமயற்காரி ஆயிஷாவோடும் நாம் அந்த வீட்டுக்குள் பிரவேசிக்கலாம். ஊராருக்குத்தெரியாமல் அந்த வீட்டு ரகசியங்களைத் தெரிந்து கொள்ளலாம். தனக்கு குழந்தையிலாததால்  கணவனுக்கு இன்னொருத்தியை கைபிடித்துக் கொடுத்துவிட்டு அவளது அப்பா போட்டோவோடும் அவர்கொடுத்த வயலினோடும் அதுகசிகிற இசையோடும் அந்த வீட்டுக்குள்ளே தன்னை தானாகவே அடக்கம் செய்துக்கொள்ளும் மெஹ்ருண்ணிஷா. அவளை அறிய நாம் வண்ணநிலவனின் கையை மட்டும்தான் பிடித்துக்கொண்டு செல்ல வேண்டும். பெண்விடுதலை,மேல்கீழ் முரண்பாட்டை தகர்ப்பது போன்ற வற்றுக்கு வக்காலத்து வாங்காமலும்,இருக்கிற பண்ணை யடிமைத்தனத்துக்கு வால்பிடிக்காமலும் உள்ளபடியான நடப்பை  உருக உருகச் சொல்லுகிற வண்ணநிலவணின் மெஹ்ருண்ணிஷா இந்ததொகுப்பில் ஏழாவது கதையாக வரும்.

அப்புறம் தோழர் நாஞ்சில் நாடனின் ’கான்சாஹிப்.’

26.9.11

நம்பிக்கையூட்டும் கதைகளின் வரிசையில்- எங்கேயும் எப்போதும்



ஒரு ஓம்னிப் பேருந்துப் பயணம் தான் மொத்தக் கதை.பயணமும் பயணம் சார்ந்த நினைவுகளும் மட்டுமே தமிழ்ச்சினிமாவுக்கு மையக் கருவாக இருப்பது உண்மையில் துணிச்சலான விஷயம். நீண்ட தூரம் பேருந்தில் பயணப்பட்ட எல்லோரோடும் இந்தக்கதை கைகோர்த்துக் கொள்ளும்.அப்படிப் போகாதவர்களை வெகுவாக ஈர்க்கும் சமாச்சாரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற எதார்த்தப் பதார்த்தம் தான் ’எங்கேயும் எப்போதும்’.

பயண நேரங்களில் நமக்கு கிடக்கும் சௌகர்யங்களையும் அசௌகர்யங்களையும் அழகாகத் தொகுக்க முடிந்திருக்கிறது இயக்குநர் சரவணனுக்கு. கிராமத்திலிருந்து நகரம் போகிற எல்லோருக்கும் போதனைகள் கட்டாயம் காத்திருக்கும். அந்தப்போதனைகள் எச்சரிக்க வழிநெடுகச் சந்திக்கிற மனிதர்களை எல்லாம் கட்டாயம் சந்தேகிக்க வைக்கும். அப்படியாப்பட்ட சூப்பர் ஹீரோவாக இல்லாத சராசரி மனிதனின் பின்னாடி நகர்கிறது ஒலிப்பதிவாளரோடு கூடிய இந்த இயக்குநர் பட்டாளம். மக்கள் இதைத்தான் கேட்கிறார்கள் இந்த வெடுக்வெடுக்கென ஆடும் இடுப்பும்,ரத்தம் கோபளிக்கிற சண்டையும்,கண்ணீர் கொப்பளிக்கிற செண்டிமெண்டும் இல்லையென்றால் போட்ட துட்டை எடுக்கமுடியாது என்கிற இலக்கணத்தை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் சின்னச் சின்ன இயக்குநர்கள்.

பேருந்தில் ஏறியவுடன் தூங்கிப்போகும் அறிமுகமில்லாத பயணியாக வரும் நபர் மூன்று நான்கு ஷாட்டுகளில் விவேக்கையும் சந்தானத்தையும் ஊதித் தள்ளிவிட்டுப் போகிறான். தாம்பரத்தில் வண்டியை நிறுத்தி திருச்சி திருச்சி என்று நடத்துநர் கத்தியவுடன் எழுந்து பையைத் தூக்கிக்கொண்டு திருச்சி வந்துருச்சா என்று இறங்குகிற போது தியேட்டர் குபீரென ஆர்ப்பரிக்கிறது. சமீபத்திய எல்லாப் படங்களிலும் அழகிய படித்த மேல்தட்டுப் பெண்ணை ஒரு ரவுடி காதலிப்பதாகத்தான் கதை பண்ணினார்கள்.அது விதிவிலக்கு.ஆனால் எதார்த்தமாக தங்கள் கனவுகளுக்கு அருகில் வருகிற ஆண்கள் மேல் காதல் கொள்வதும் அதையே பரஸ்பரம் பெண்கள் மேல் கொள்வதுமாக சித்தரிக்கப்பட்ட நிஜம் இது. உறுத்தாத நிஜம்.

இந்த தமிழகம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிந்தாலும் முடியாவிட்டாலும் அதை ஆட்டுவிக்கிற ஒரு பொருள் உண்டெனில் அது தொழில் நுட்பக்கல்லூரிகள். அங்கிருந்து வெளியேறும் எதிர்கால இந்தியா.வெளியேறவிடாமல் வாசலிலேயே வழிமறித்து அழைத்த்துக் கொண்டுபோய் அடைத்துக் கொள்ளும் கார்ப்பரேட் நிறுவணங்கள். அடைக்கப்பட்ட கதவுகளுக்குள்ளிருந்து வெளியேறி எந்த ஊடகத்தையும் சலனப்படுத்தாத பேய்க்கதைகள் மண்டிக்கிடக்கிறது அங்கே. அதைப்பற்றி இன்னும் விரிவாக எந்த ஊடகமும் சொல்லவில்லை சித்தரிக்க வில்லை.அதன் வெளிப்புற விஷயங்களை நம்மோடு லேசாய்க் கசியவிட்டுப் பகிர்ந்து கொள்கிறது இந்த திரைப்படம். அந்த இளைஞர்களின் காதலை தெய்வீக-அமரத்துவம் வாய்ந்ததாக அறிமுகப்படுத்தாமல் ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பாக முன்வைத்திருப்பது ஆரோக்கியமானது.

அஞ்சலி ஜெய் இணையின் சந்திப்பும் காதலும் அடித்தள நடுத்தரவர்க்கத்தின் ஸ்பெசிமனாக்கியிருப்பதும், துபாயிலிருந்து திரும்புகிற  பிறப்பதற்குமுன் துபாய் கிளம்பிப்போய் ஆவலோடு திரும்புகிற தகப்பன், இளங்காதலர்கள்,ப்ராக்போட்டுக்கொண்டு அண்டை இருக்கைக்கெல்லாம் போய் காட்சியளிக்கிற குட்டீஸ் இந்தப் பாத்திரங்களின் செதுக்கல் எல்லாமே அவர்கள் மேல் நமக்கு அனுதாபம் வரவழைக்கத்தான் என்பதை இறுதிக்காட்சி சொல்லுகிறது.

நேர்க்குநேர் மோதிக்கொள்கிற பேருந்துகள் சின்னாபின்னமாகிற காட்சிதான் தமிழ் சினிமாவின் நிஜத்தொழில்நுட்பம். எனவே கதைகள் வற்றிப் போய்க்கிடந்த தமிழ்ச்சினிமாவுக்கு பலகோடிக் கதைகளில் ஒவ்வொன்றாய் எடுத்துக்கொடுக்க புது ரத்தங்கள் கிளம்பிவிட்டது. அதை அர்த்தத்தோடு சுவீகரிக்கிறது தொழில்நுட்பம். முந்தைய திரைப் படங்களுக்குச் சொல்லியிருந்த எமது விமர்சனங்கள் இதுபோலில்லையே என்கிற ஏக்கம் மட்டும் தான். இந்த நல்லவைகளுக்காக ஒரு பாட்டையும் அதைப்பாடுகிற உதித்நாராயணனையும் மன்னித்துவிடலாம்.

.இறுதிக்காட்சியில் லாரிக்காரர் ப்ரேக்போட்டு நிறுத்தி ஓடிப்போய் இடிபாடுகளுக்குள் பயமிலாமல் இறங்குவது.செல்போனில் நூற்றி எட்டுக்கு தகவல்கொடுக்கும் அடுத்த பேருந்துப் பயணிகள், களையெடுப்பைப் போட்டுவிட்டு ஓடிவரும் உறுத்துள்ள நிஜச்சனங்கள்.சிதறுண்ட உறுப்புகள்,ரத்தம், ரத்தம் உறய்ய வைக்கிற காட்சிகள் மருத்துவமனை மரணஓலம் என அதகளப்படுத்துகிறது அந்த எங்கேயும் எப்போதும் டீம். எங்களோடு திரைப்படம் பார்க்க வந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் கடைசிக்காட்சிகளைத் தவிர்த்துவிட்டு வெளியே போய் நின்றுகொண்டார்கள்.

நாம் படைக்கிற படைப்பு லேசாக சிலிர்ப்பையாவது உண்டு பண்ணி பார்வையாளனைச் சலனப்படுத்தவேண்டும்.அப்படிச்சலனப்படுத்தி தன்னை படைப்பாளியென நிரூபித்துக்கொண்ட இயக்குநர் சரவணன் நிச்சயமாய்ப் பாராட்டுக்குறியவர்.

வாழ்த்துக்கள் ’எங்கேயும் எப்போதும்’ பட்டாளத்துக்கு.

11.9.11

மங்காத்தா - தமிழ்சினிமா இதுவரை அரைக்காத கதை.




மங்கம்மா சபதம், ஒளிவிளக்கு,நல்லவன் வாழ்வான் என்றெல்லாம் தலைப்பைத்தேடித்தேடிஅலைந்த தமிழ்ச்சினிமா பயபுள்ள,ஏய், டூ என்றெல்லாம் தலைப்பு வைக்க துணிந்து விட்ட நிலையில் மங்காத்தா என்கிற இந்த தலைப்பு கொஞ்சம் முற்போக்கானதாக தோற்ற மளிக்கிறது. அந்த மங்காத்தாவை ராமநாதபுரம் வேலுமணிக்கம் திரையரங்கில் பார்த்தேன். சவாலே சமாளி என்கிற படத்தைப் பார்க்க எனக்கு எழுபதுகளில் வெறும் இருவத்தைந்து காசுகள் மட்டும் செலவானது. இப்போது சர்வசாதாரணமாக நுறு ரூபாய் வாங்கிக்கொண்டு நுழைவுச் சீட்டைக் கொடுக்கிறார்கள் அது என்னமோ ஆஸ்பத்திரி அட்டை மாதிரி இருக்கிறது. இருக்கைக்கு நுழையும்போது அதைக் கவனமாக திரும்ப வாங்கிக்கொள்கிறார்கள்.வீட்டுக்கு ஒரு ஹசாரேவை வைத்து கண்கானித்தாலும் அம்பானி வகையறாக்கள் அதற்கும் செலவுகளை ஏற்றுக்கொண்டாலும் கூட எதுவும் செய்ய முடியாது என்பதை நிமிடத்துக்கு நிமிடம் உறுதிசெய்கிற இந்திய லஞ்சத்தின் இன்னொரு வடிவம் இது. ஹசாரே ...அது வேறுவகையான சினிமா.

சமீபத்தில் அதிகம் பார்வையாளர்களை தியேட்டருக்கு இழுத்த பெருமை காஞ்சனாவுக்கு அடுத்து மங்காத்தா படத்துக்குத்தான் சேரும் அவ்வளவு கூட்டம். படம் வெளியாகி எட்டுநாள் கழித்து இவ்வளவு கூட்டம் என்பது இப்போதைய தழிழ்சினிமா வரலாற்றில் அபூர்வம்தான். அதற்கான ஈர்ப்பு இந்தப்படத்தில் இருக்கிறதா என்றால் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. நீண்டகாலமாக கெட்டவனைப் போரிட்டு ஜெயிக்கும் நல்லவன் கதைகளாகப் பார்த்து அலுத்துப்போன மக்களுக்கு முள்ளும் மலரும்,பொல்லாதவன், இப்படியான நெகடிவ் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தபோது ஏற்பட்ட ஈர்ர்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. எங்கே பார்த்தாலும் ஒரே அருவா,கிராமம் வெட்டுக்குத்து இந்த ரத்தவாடைக்குள் ரெண்டு குத்துப்பாட்டு,ஒரு டூயட் பாட்டு பாத்துப்பாத்து சுருண்டுபோன மக்களுக்கு விநாயக் மகாதேவன் பாத்திரம் தெம்பான அறிமுகம். ஒரு இருபது வருடங்கள் இந்த சினிமவுக்குள் கிடந்து முதிர்ச்சி அடைந்த ஒரு நடிகனுக்கு கிடைத்த லட்டு மாதிரியான பாத்திரம். இதுவரைக்கும் தமிழ்சினிமா உலகில் பேசப்படாத கிரிக்கெட் சூதாட்டம் இதில் பேசப்படுகிறது.

யூகிக்கமுடியாத கதைத்திருப்பங்களும் வேகம் வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டு சேர்க்கப்படும் கட்சிகளும் இல்லாத இந்த ரகம் புதுசு.இடைவேளைவரை படம் மெல்ல நகர்கிறதென்கிற குற்றச்சாட்டை ஊர்ஜிதப்படுத்துகிற இயல்புக்காட்சிகள் நிறைய்ய இருக்கிறது. தூங்குவது குளிப்பது இனிமேல் குடிக்கக்கூடாது என்று தனக்குத்தானே பேசிக்கொள்வது நிச்சயமாக அதிகம் சோர்வைத்தரும் காட்சிகள் தான்.அதுவுமில்லாமல் அப்போதெல்லாம் பின்னணி இசையே இருக்காது எதோ கல்யாண வீடியோ பார்த்த  உணர்வு வரும். ஆனால் அந்த மந்தக் காட்சிகள் தான் இந்தப்படத்தின் முடிவுக் காட்சிகளுக்கு கூடுதல் வேகத்தைக் கொடுக்கிறது. மேக்கப் இல்லாத நரைத்த முடியோடு அஜித். தமிழ்ச் சினிமாவுக்கு அச்சாணியாக இருக்கிற காதல் சரக்கை உலகத்துக்கே அச்சாணி என்று பினாத்துகிற உருகுதல் இல்லாதது. விவேக்,சந்தாணம் போன்ற ஹைகிளாஸ் கமெடியன்கள் வைத்துக் கொள்ளாதது. ஆகக்சிறந்த எழுத்தாளர்கள் என்கிறவர்களை எழுதச் சொல்லி ஆகக் குப்பையான, ஆக பிற்போக்குத் தனமான, ஆக சாதிய திமிர்நிறைந்த சிந்தனைகளை பரப்புதல் என்று செக்குமாட்டு தடத்திலிருந்து கொஞ்சம் விலக எத்தனித்திருக்கிற முயற்சி இது.

த்ரிஷாவும் அஜித்தும் மீண்டும் இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பு.கல்யாணமாகி புதுத்தாலியின் நிறம் மங்காமல் இருக்கும் அஞ்சலிக் காகவாவது வைபவ் உயிரோடு வந்துவிடுவார் என்கிற நம்பிக்கை.வேறு எவனாவது புதுசா ஒரு வில்லன் வந்து ஊடே புகுந்துகொள்ள த்ரிஷாவின் தகப்பனாரான ஜெயப்ரகாசும் அஜித்தும் கைகோர்த்துக்கொண்டு துவம்சம் செய்வதற்கான ஒரு தமிழ் ஆக்சன் சினிமா  இடை வெளியிருக்குமே அதற்குள்ளும் கதை ஊடுறுவவில்லை.  

ஆக இது வழக்கமாக அரைத்த மாவு இல்லை. என்றாலும் செறிவூட்டம் மிக்க கதையும் பாத்திரத்தேர்வும் இதில் இல்லை. யுவனின் பின்னணி இசை அருமை என்று பல பல விமர்சனங்கள் இட்டுக்கட்டினாலும் வத்தியக்கருவிகளை மூடிவைத்து விட்டு நடிக்க வாய்ப் பளிக்கிற உணர்வுகளை அதிகப்படுத்துகிற மௌனமும், புல்லாங்குழல், தவில், கஞ்சிரா, உடுக்கு, எவர்சில்வர் பானை, கோழிக்குஞ்சு அடங்கி அழவைக்கிற தாலாட்டு என அள்ளி அள்ளி கொடுத்த இளையராஜாவைத் தாண்டி இதுவரையாரும் முயற்சிக்க வில்லை. ராமராஜனா, மோகனா நீங்க எப்படிவேண்டுமானலும் சொதப்புங்கள்.ஆனால் வாழ்நாளெல்லாம் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் இதமான பாடல்கள் கிடைக்கும் என்று நம்பித் தியேட்டருக்குப் போகவைத்த இசை இப்போது கிடைப்பதில்லை. ஒரு வேளை இது தலைமுறை இடை வெளி யாகக் கூட இருக்கலாம். ஆனால் இசை வெளியென்பது நினைவுகளை இழுத்துக்கொண்டு அலைவது. அப்படி இழுக்கிற ஒரு பாடல் கூட இந்தப்படத்தில் இல்லை.

இவ்வளவு சீரியசான கதைக்குள் வலிந்து புகுத்தப்பட்ட ப்ரேம்ஜி அநாவசிய பாத்திரம். காமெடி கட்டாயம் வைத்தால்தான் படம் ஓடும் என்கிற மூட நம்பிக்கையும் எப்படியாவது தலையைக் காண்பிக்க வைக்கவேண்டும் என்கிற சகோதர பாசமும் அநாவசியம். ப்ரேம்ஜி க்கு கிடைத்திருக்கிற மேடை கிடைத் தற்கரிய மேடை அதை உபயோகப்படுத்த நிறைய்ய யோசிக்க வேண்டும் மெனெக்கெடவேண்டும். அதே போல கங்கை அமரனுக்கு கிடைத்த  கரகாட்டக் காரன் மாதிரி வெங்கட்பிரபுவுக்கு இந்த மங்காத்தா. தமிழ்ச்சினிமாவுக்குள் ஒரு இடத்தை நிறுவி இருக்கிறது அதைக்கவனத்துடன் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

4.9.11

மனதில் கேடுள்ள மனிதனை எளிதில் பழக்கமுடியாது.


சில நேரம் விதி என்பது கூட உண்டோ என்கிற மாதிரி நிகழ்சிகள் அமைந்துவிடுகிறது. ஒரே சுற்றுச்சுவர் இருக்கும் ஜெகன் மினி ஜெகன் தியேட்டரில் காஞ்சனா,ரௌத்திரம் ஆகிய இரண்டு படங்கள் திரையிடப்பட்டிருந்தது. காஞ்சனாவில் நகைச்சுவையும் புதிதாக திருநங்கையர் குறித்த மாறுபட்ட தமிழ்சினிமா அனுகுமுறையும் இருப்பதாக நண்பர்கள் சொல்லியதால் அந்தப்படம் பார்க்கப்போய், தவறுதலாக ’ரௌத்திரம்’ டிக்கெட் எடுத்து உள்ளே போக நேர்ந்தது. விதி வலியது. கொடுத்த எழுபது ரூபாய்க்கு படம் பார்த்து தீர்ப்பது என்கிற முடிவு. சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொண்டது போலாகியது. ரௌத்திரம் என்பதற்கு பொத்துக்கொண்டு வருவது என்று பதவுறை எழுதியிருக்கிறார் உயர்திரு கோகுல் என்கிற இயக்குனர். சமீபமாக பார்க்கநேர்ந்த இப்படிக்கதைகள் மிகத்துள்ளியமாக ஒரு குறிப்பிட்ட மக்களை குரூர எதிரியாகச் சித்தரிக்கிறது. அப்படி சுட்டிக் காட்டப்படும் மக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அதற்கு எதிராக எந்த சலலசலப்பும் எழுவது இல்லை. பெரும்பாண்மை மக்களை பெருமைப்படுத்தி கதை புனையப்படுவதால் அவர்களும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

கதாநாயகன் நடுத்தர குடும்பத்து உயர் ஜாதிக்காரனாக சித்தரிக்கப்படுகிறான்.போகட்டும்.அவன் நடுத்தெருவில் எதிரிகள் என்று சொல்லப் படுகிற ’கருப்பு நிற ’ ரவுடிகளை துவம்சம் செய்கிறான். வில்லன் வில்லனின் கையாட்கள்,அவர்களுக்கு உதவிசெய்கிற சட்டமன்ற உறுப்பினர் எல்லாமே கலப்படமில்லாத கருப்புநிறத்தில் இருப்பது போல தேர்ந்துகொண்டிருப்பது ஒட்டாமல் துருத்திக்கொண்டு தெரிகிறது. அந்தக்கதையின் தர்க்கத்தை நியாயப்படுத்த பாலாவின் படத்திலிருந்து ராஜ்கிரன் பேசுகிற வசனமாக சாமி நேர வராது அநியாயத்தை தட்டிக்கேட்கிற ஓவ்வொருத்தனும் சாமி தான் என்கிற வசனத்தை கோர்க்கிறார். அப்புறம் நடுத்தெருவில் இழுத்துக்கொண்டு போகும் பெண்ணைக் காப்பாற்றி அவள் அப்பனிடம் ஒப்படைக்கிறான். அவர் பெருமாள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடாத நான் உன்னத்தான் சாமியாக்கும்பிடுகிறேன் என்று சொல்ல பின்னணியில்  வேத ஊச்சாடனங்கள் ஒலிக்க  பெருமாள் சிலை உயர்ந்து,அவர் உலாத் துவங்குகிறார்.

எல்லாமும் சரிதான். தவறு செய்கிறவன் எவனாயிருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் முக்கியமான ரவுடியும் அவன் சேரித் தெருவும்,அவன் அணிந்திருக்கும் சிலுவைக்குறியும் க்ளோசப்பில் காட்டுவதால் தப்பு செய்கிறவன் எல்லோரும் விளிம்பு நிலைக்காரன் என்கிற கேடுகெட்ட சினிமாப் புத்தியை பொதுவாக்க முயல்கிறார் திருவாளர் கோகுல். இது மாதிரியான காட்சியமைப்புகள் கிட்டத்தட்ட தமிழ் (அகோர)ஆக்க்ஷன் படங்களின் பொது விதி என்றே ஆகிவிட்டது. ஆங்கிலப்படங்களில் இருந்து திருடப்பட்ட இப்படிப்பட்ட காட்சி களை தமிழ் மயப்படுத்துகிற பாவனையில் அப்பாவி விளிம்புநிலை மனிதர்களை எதிரியாக்குகிற படங்களை திருப்பாச்சி,நான் மகான் அல்ல, போன்றவற்றை குறிப்பிட்டு வரிசைப்படுத்தலாம். தமிழ்நாட்டின் நிவியல்புகளையும், சாதிய அடுக்குகளையும், அவற்றுக்குள் ஏற்படுகிற முரண்பாடுகளையும், அங்கு நடந்தேறுகிற பயங்கரங்களையும் அறியாத வெறும் தொழில்நுட்ப மொன்னைகள் தான் தங்களைப் படப் பாளிகள் என்று பிரகடனப்படுத்திக்கொள்ளுதுகள். இப்படிகதைகள் தயாரிப்பாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதும், பிரம்மாண்டச் செலவில் உருவாகி விற்றுப்போவதும் விநோதமில்லை. ஒரு இயக்குநர் குறைந்த பட்ச சமூக சிந்தனையில்லாமல் எப்படி இருக்க முடியும் என்பது தான் இங்கே விநோதமாக இருக்கிறது.

ஒரு கால் நூற்றாண்டுகாலம் தமிழ்சினிமாவில் கொடிகட்டிப்பறந்த திருவாளர் எம்ஜியாரை எனக்குப் பிடிக்காது. ஆனால் அவர்  திரைப் படங்கள் எல்லாமே நலிந்த மக்களின் பக்கமும் ஆதிக்கத்துக்கு எதிராகவும் மட்டுமே இருக்கும். தவறியும் அதில் ஜாதிய அடையாமும் ஜாதிய துவேசமும் இருக்கது. மதங்களுக்கிடையிலான முரண்களில் குளிர்காய்கிற சில்லறைத்தனமும் பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும் கண்டு பிடிக்கமுடியாது. அந்த ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே அவர் ஜெயித்தார். சிலநேரங்களில் ஆரம்பப்பாடசாலைச் சின்னப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லுகிற மாதிரி பாட்டும் வசனமும்,நடிப்பும் கூட இருக்கும்.அப்போதெல்லாம் நான்  அதைகேலி செய்திருக்கிறேன்.  ஆனால் இப்போதெல்லாம் அந்தக்குள்ள உருவம் கொண்ட கலைஞனின் விசாலமான மனது விஸ்வரூபமாகத் தெரிகிறது. இப்போதிருக்கிற கிராபிக்ஸ்,உயர்தொழில்நுட்பம் எல்லாவற்றையும் காலில்போட்டு மிதித்தபடி.

19.5.11

அழகர்சாமியின் குதிரையும், திருப்பூர் பனியன் கம்பெனிப் பெண்களும்.


ஒரு நூறு வருடங்களுக்கு முன்னாடி இந்தியாவின் போக்குவரத்தில் பெரும் பங்கு வகித்த வாகனம்.இன்னும் அலெக்சாண்டர், நெப்போலியன், சத்ரபதி சிவாஜி,ராஜாதேசிங்கு,ஊமைத்துரை,மாவீரன் திப்புசுல்தான்,சேகுவேரா ஆகிய பெயர்களோடு கூட வருகிற அவர்களின் உயிர்த் தோழன், இழு விசையையும், வேகத்தையும் கணக்கிடக்கிடைத்த பிராணி,சக்தி என்கிற சொல்லுக்கு வரையப் படும் ஓவியம் என அந்தக் குதிரைக்குத்தான் எத்தனை ஈப்புகள். அப்படித்தான் இந்த அழகர்சாமியின் குதிரையும் ஈர்த்தது. பரட்டைத் தலையோடும் கருத்த குள்ள உருவத்தோடும் ஒரு நாயகன், பாஸ்கர்சக்தி, இளையராஜா என அதன் மேல் ஈர்ப்பு வந்ததற்கு நிறைய்ய காரணங்கள் இருந்தது.கிராமங்களில் புதையுண்டு கிடக்கும் சொல்லப்படாத ஒரு கோடிக்கதைகளில் ஒரு கதையாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை இன்னும் கூடுதலாக்கியது படம்.

நடக்காமல் போன அழகரின் திருவிழாவோடு கதை தொடங்குகிறது. பாரதிராஜா தொடங்கி சுசீந்திரன் வரை இன்னும் நூறு தரம் காட்டினாலும் அலுக்காத காட்சிகள் அவை.சாமியாடி நாள்குறிப்பதில் தொடங்கி பந்தக்கால் நட்டு,வசூல் நடத்தி,வெள்ளையடித்து, மாவாட்டி,டெய்லரிடம் சட்டை அளவுகொடுத்து இப்படி ஒரு ஊர் திருவிழாவுக்குத்தயாராவது ரம்மியமான காட்சிகள்.அழகரின் வாகனமான மரக்குதிரை காணாமல் போகிற நேரத்தில் ஒரு நிஜக்குதிரை ஊருக்குள் வருவது வரை முதல் பாராவில் சொன்ன எதிர்பார்ப்பு அலுங்காமல் குலுங்காமல் இருக்கிறது.அதுவும் ஒரு லோடு லாரியில் வளர் இளம் பெண்களை அள்ளிப்போட்டுக்கொண்டு திருப்பூருக்கு கிளம்பும் காட்சி அப்படியே கலங்கடிக்கிறது. ஆஹா தமிழ்ச் சினிமாவுக்குள் ஒரு புதுரத்தம் புகுந்துவிட்டது என்று மனம் சந்தோஷப்படுகிறது.

அந்தச் சந்தோஷத்தை அப்படியே லாரியோடு ஏற்றிவிட்டு கதை குதிரை தெய்வகுத்தம்,மைச்சோஷியம் என்றும்,ஒரு கிராமத்துக்காதல் , குதிரைக்கு சொந்தக்காரன் வருகை,அவனால் ஏற்படும் குழப்பம்,அவனுக்கு ஒரு ப்ளாஷ் பேக் எனச்சிதறடிக்கப் படுகிறது. சொல்லப்பட்ட சம்பவங்கள் எல்லாமே தனித்தனியாய் பல சிறுகதைகளுக்கு  கருவாகும் காட்சிகள். இவற்றை யெல்லாம் இணைத்துக் கொண்டு அழுத்தமான கதை வரும் என்கிற எதிர்பார்ப்பு கடைசிவரை நமது கூடவே வருகிறது.இந்த தவிர்க்கமுடியாத எதிர்பார்ப்பு சுசீந்திரன் பாஸ்கர் சக்தி,மரணகானா ராமு,கந்தசாமி போன்ற தெரிந்த முகங்கள் இருப்பதானாலேதான். ஆனால்  எதையுமே முழுமையாகச் சொல்லி முடிக்காமல் விட்டுவிட்ட மாதிரி முடிந்து போகிறது.

கோடாங்கியின் மகளை ஊராட்சித்தலைவரின் மகன் காதலிப்பதும் அவர்கள் ஒளிந்து ஒளிந்து சினிமாவுக்குப்போவதும் அங்கே அலைகள் ஓய்வதில்லை படம் பார்ப்பதும் மிக மிக மேலோட்டமான காட்சிகள்.அதனால் தான் அவர்கள் இரண்டு பேரும் ஓடிப்போய் காவல் நிலையத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அந்தசெய்தியை கேட்ட ஊராட்சித்தலைவர் “ ஒரு தாழ்த்தப்பட்டவனின் மகளை எப்படி நான் மருமகளா ஏத்துக்கொள்ள முடியும் என்று கட்டுரையைப் படிப்பது போல வசனம் பேசுகிறார். ஒரு பூவைப் பிடுங்குவதுபோல் இவ்வளவு எளிமையானதா சுசீந்திரன் மேல் கீழ் கலப்புமணம்?.

நட்ட நடு டெல்லியில் கணினி வளர்க்கும் மேட்டிமை காலத்தில் கதறக் கதற கீழ்சாதிக் கணவனை அவள் கண்முன்னே வெட்டிக் கொன்றதையும்.அதற்கு செத்துப்போன பையனினின் குடும்பம் பயந்துபோய் பதுங்கிக்கொள்ள அவள் நீதிமன்றத்துக்கு அலைந்ததையும், நீதிமன்றம் அதைக்கருணைக் கொலை என்று சொன்னது. சொல்லி இந்திய அரசியல் சட்டம்,மனிதாபிமானம்,இந்திய தண்டனைச்சட்டம், குற்றவியல் மற்றும் வன்கொடுமைச் சட்டங்களை கொலைசெய்தது எல்லாம் நடந்து ஆறுமாசம் கூட ஆகத நேரத்தில் இப்படிக் கதை சொல்வது மெகா சீரியல் முடிவுகள் மாதிரியே இருக்கிறது.

இப்படியே கதையை முடித்துவிடுகிறார்கள். உடனே அடடா அந்தக்குதிரை என்னாச்சு  என்று நமக்கு ஒரு கேள்வி எழுகிறது நமக்கு மட்டுமல்ல இயக்குநருக்கும் கூட.அதனால் தான் காவல் ஆய்வாளர் மூலம் கேள்வியை வைக்கிறார் அதற்கு ஊராட்சித் தலைவரின் மகன் அவன் இந்நேரம் சிட்டாய்ப் பறந்து ஊருக்குப் போயிருப்பான் என்று சொல்லி சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறார்.படம் முடிகிறது.

முடிந்த பிறகும் நம்மோடு கூடவரும் கேள்வி திருப்பூருக்கு பனியன் கம்பெனிக்கு வேலைக்குப்போன அந்தப்பெண்களைப் பற்றித்தான்.
அவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு சொல்லப்படாத கதைகள் இருக்கிறது. அந்தக் கதைகளுக்குள்ளே சமகால அரசியல் இருக்கிறது.சமகால அரசியலை நடத்தும் தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம் பகிரங்க நிழலாய்: கருப்பு நிழலாய் கவிழ்ந்திருக்கிறது.

அந்த வளர் இளம் பெண்கள் உரத்துக்கேட்கிறார்கள்.
ஏன் சுசீந்திரன் சார் எங்களிடம் கதைகளைக்கேட்கவில்லையென்று.

22.3.11

" கருப்பு நிலாக்கதைகள் " - எழுத்தாளர் மேலாண்மைப் பொன்னுச்சாமியின் விமர்சனம்.


முதல் கதையான விடுதலையின் ஒத்திகையில் நடகவேஷத்தில் கூட எளியவன் வாயிலிருந்து வந்து விழுகிற நாயே என்ற சொல்லைத் தாங்கமுடியாத விபரீதம். ஏகாலித் தொழிலின் அடிமைத்தன வேலைகளைக் கூட விளையாட்டாகவும், வேலையாகவும் எடுத்துக்கொள்கிற சாலமுத்துவாலேயே தாங்க முடியாத அவமதிப்பு,ரயிலில் கிடைக்கிற சாதியற்ற வாஞ்சை.

மருளாடியின் மேல் இறங்கியவர்கள் ரொம்பவும் தனித்துவமான சிறந்த கதை.நுட்பமான சமூகப்பார்வையும் உளவியல் கூறும் உள்ள கதை.

நினைவில் சலசலக்கும் பனங்காடு ஆறுமுகச்சாமியின் உடல் சிலிர்ப்பில் துல்லியமாகிற ஆழ்மனக்காதல்.சம்பாரிமேளம் பற்றிய கதையில் பாண்டியன் கிராம வங்கித்தோழர்களும்,கிருஷ்ணக்குமாரும் மனசுக்குள் வந்து போகிறார்கள்.தொழிற்சங்கங்கள் மீது அசூயை ஏற்படுத்த முனைகிற தமிழ்சிறுகதை உலகின் ஒட்டு மொத்த எத்தனிப்புக்கும் எதிராக இருக்கிற கதை.மரியாதையை ஏற்படுத்துகிற சிறுகதை.

இந்தத்தொகுப்பிலுள்ள கதைகளில் ஆகச்சிறந்த சிறுகதை ’கருப்பு நிலாக்களின் கதை’.கண்ணகி மறக்கமுடியாத உயிர்ச்சித்திரம்.ஆண்களின் பலம் பலவீனங்களினால் அலைப்புறும் பெண்ணின் அவலமும் ஆவேசமும் தெரிக்கிற கதை.அரிவாள்மனைக்கு இப்படியொரு நற்குணமா ?.செவத்த மணியின் பலகீனம்,பால்ச்சமியின் மூர்க்கம் ரெண்டும் அவளை சிதைக்கிறது.அவைதான் அவளை உக்கிரப்படுத்தவும் செய்கிறது.

இன்னொரு ரயிலில் ஸ்டேசன் மாஸ்டர் உயர்ந்து நிற்கிறார்.ரயில் முகம் பார்த்தறியாத சிறுவனின் ஆவலும் அலைபாய்வும் கண்ணுக்குள் தெரிகிறது.பெரியார் பேரனுக்குப் பிடித்த பேய் நல்ல சித்தரிப்பு. பயந்த மனசுக்குள்ளொரு மனிதநேயம், உறவுச் சேர்க்கையைக் கலைத்துவிட்டோமே என்கிற குற்ற உணர்வு.ஆனியன் தோசையில் மனசு ஆடி ஆடிக் குலுங்கிச் சிரிக்கிறது.

எளிய மக்களின் வாழ்வியலையும், உளவியலையும் அவர்களது மொழியிலே மட்டுமில்லை.அவர்களது மனநோக்கிலிருந்தும் உணர்த்துவதும் விவரிப்பதுமித்தொகுப்பின் தனித்துவச்சிறப்பு.பொது மனிதனாகப்பாவனை பண்ணாத எழுத்தாளனின் நேர்மைதான் இந்தத் தனித்துவத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

வாக்கிய அமைப்புகளிலும் சற்று வித்தியாசம் தென்படுகிறது. வாக்கிய அமைப்புக்களில் எழுத்தாளர் ஏற்படுத்துகிற லாவகம் அந்த மொழிக்குரிய வெள்ளந்திக் குணத்தைச் சற்றே மட்டுப்படுத்துகிறது. விளைவு ? உணர்ச்சி ரீதியான தாக்குதல் நிகழ்த்துவதான பலகதைகள், பலநிகழ்வுகள், உணர்ச்சி ரீதியான அலைக்கழிப்பை ஏற்படுத்தாமல் போய்விடுகின்றன. அறிவை மட்டுமே உரசி விட்டு நகர்கின்றன.

வாசித்து முடித்தவுடன் மனசுக்குள் வேரடிப்பது கதைகளின் யதார்த்தமும்,நம்பகத்தன்மையும்,உணர்ச்சி ரீதியான அலிக்கழிப்பும்தான்.
களச்சித்தரிப்பு இல்லை.நிகவுகளைச்சித்தரிக்கும் கதைகள் காலம் இடம் போன்றவற்றைத் தாண்டி ச்செல்வதால் கதைகள் மனசுக்குள் வேரடிக்க மறுப்பதற்குக் காரணம்.

சச்சி, கண்ணகி, சாலமுத்து, வெள்ளச்சிகள் மறக்கமுடியாத உயிர் சிற்பங்களாகி நிலைக்கின்றன.எழுத்தாளனின் தனித்துவம் இந்தக்கதைகளெங்கும் கிடக்கின்றன.சேரிக்குள் இருந்து குடியானவத் தெருவைப்பார்க்கிற கண்ணோக்கில் ஒட்டுமொத்த கதைகளின் தொனியும் பயணமும் நிகழ்கிறது.

வடிவமைப்பும்,அச்சும், அட்டையும் நேர்த்தியாகச் செய்துவிட்டு ஃபைனல் ப்ரூப் கோட்டை விட்டு விட்டீர்கள்.எழுத்துப்பிழைகள் வாசிப்பு ருசிக்குள் கூடுதல் உப்பைப்போடுகிறது.வட்டார மொழிச்சிறுகதைகளில் எழுத்துப்பிழை வருவது பெரும் ஆபத்து.அனர்த்தங்களைத் தந்துவிடும்.

பொதுமனிதனாகப்பாவனை பண்ணாத எழுத்தாளனின் நேர்மை மொழியாளுமையிலும் செயல்பட்டிருந்தால் ஆகச்சிறந்த தொகுப்பாகவும் காலத்தால் மறக்கமுடியாத கலைப் படைப்பாகவும் மாறியிருக்கும்.

விமர்சனங்கள் உங்களையறியாமல் உங்களிடம் ஒட்டியிருக்கும் குறைகளைச் சுட்டுதல்.குறை களைந்த காமராஜை கண்டறிதல் என்று கொள்க.இந்தச் சிறுகதைத்தொகுப்பு ஆகச்சிறந்த கதைகள் கொண்ட அணிவகுப்பு. கிராமத்தின் ஏழ்மை இல்லாமை உள்முகச்சிதைவுகள்,நிறைவேறாத ஆசைகள் ஆகியவற்றைநல்ல கரிசல்காட்டு மொழியில் படைப்பாகத்தந்திருக்கிறீர்கள்.

’கருப்புநிலாக்கதைகள்’, ’மருளாடியின்மேல் இறங்கியவர்கள்,’ ’வேரைவிரட்டியமண்’, ’சம்பாரிமேளம்’ போன்ற உன்னத கதைகளை- சாகாவரம்பெற்ற கதைகளைத்தந்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

8.2.11

புதிய பூதம் - எஸ்.பாண்ட், அடுத்த கற்றை


இந்தியாவில் ராக்கெட் ஏவுகிற ஒவ்வொரு முறையும் மெகா பட்ஜெட் தமிழ் சினிமா மாதிரி ஊரைக்கூட்டி விருந்து வைத்து,ஹோமம் வளர்த்து, முக்கியஸ்தர்களை கூப்பிடுப் புகழச்சொல்லி மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவார்கள்.அந்த ராக்கெட் நாள் நட்சத்திரம் பார்த்துக்கிளம்பும்.ஆனால் நடத்திரத்துக்கு போய்ச்சேராது. கிளம்பி சிவகாசி ராக்கெட் போகிற தூரம் போய் பிறகு புசுக்கென கடலில் குதித்து விடும். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று குழம்பிப் போனதுண்டு.ஒரு நூத்திப் பத்துக்கோடி மனிதர்கள் இருக்கிற இந்தியாவிலிருந்து ஒழுங்காக ஒரு ராக்கெட் அனுப்ப 2000 வருஷம் பிடிக்கிறதே என்கிற கவலை வரும்.இதே போலத்தான் சர்வதேச விளையாட்டுக்கள், ஒலிம்பிக், கிரிக்கெட் சூது ஆகியவற்றிலும் குப்புற விழுந்து எழுந்து ’சிங்கம்டா’ என்று சொல்லிக்கொண்டே திரும்புவார்கள்.

இங்கே எதையும் ஒழுங்காக உண்மையாகச்சொல்லுவதில்லை.அவரவர் அவரவர்க்கான நியாயங்களோடும்,சார்புத்தன்மையோடும் அணுகுவதால் வரும் பிரச்சினை.இதோ இந்த வருடம் விக்ருதி வருடம் என்று சொன்னாலும் இந்தியாவுக்கு ஊழல் வருடம் என்றே சொல்லலாம். ஒன்றன் பின் ஒன்றாகபூதங்கள் கிளம்பியபடி இருக்கிறது.ஆதர்ஷ்,போபர்ஸ்,கொடநாடு என்கிற ஊழல் பெயர்களெல்லா வற்றையும் சிறியதக்கி விட்டு ஸ்பெக்ட்ரம் வந்தது. திருச்சி அளவுக்கே இருக்கும் ஒரு நாட்டைத்தேடி அங்கு கொண்டு போய் மூட்டை மூட்டையாய் இது பழய்ய அளவு, கற்றை கற்றையாய் குவித்திருக்கிறார்கள்.நேற்று அவர்களில் 15 சதனையாளரகளின் பெயர்கள் வெளியானது.அதையும் சிறியதாக்கிபடி கிளம்பியிருக்கிறது எஸ்.பேண்ட் அலைக்கற்றை ஊழல். இரண்டு லட்சம் கோடியாம்.

விக்ரம் என்கிற ஒரு தமிழ்சினிமா வந்தது.அந்தப்படத்தில் ஒரு ராக்கெட்டை தூக்கிக்கொண்டு வருவார்கள்.நாலே நாலு பேர் வந்து வழிமறித்து சின்னப்பிள்ளையிடம் கிலு கிலுப்பையைப்பறித்துக்கொள்வது போல ராக்கெட்டைப்பறித்துக்கொள்வார்கள்.அப்புறம் ஒரு ஹெலிகாப்டர் வந்து கோலிக்குஞ்சைத் தூக்குவது போல தூக்கிக்கொண்டு பறந்து போகும். அந்தப் படம் வந்த சமயத்தில்  பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ராக்கெட்டை எப்படி ஜஸ்ட் லைக் தட் தூக்கிச்செல்ல முடியும் என்கிற அறிவார்ந்த விமர்சனம் வந்தது.அந்த விமர்சனம் உண்மையும் கூட.அப்போது இந்தளவுக்கு நாட்டைத் தனியாருக்கு சோரம் போக விடவில்லை. இந்த 2011 ல் தனியார்களுக்கு குத்தகை விடப்பட்ட அரசு இலாகாக்கள் தான் இந்தியா என்று ஆகிப்போனது.
அதுதான் அந்த எம்.ஜி.சந்திரசேகர் 2 லட்சம் கோடியை இஸ்ரோவிலிருந்து கோழிக்குஞ்சைத் தூக்கிக்கொண்டு போவது போல் தூக்கிக்கொண்டு போயிருக்கிறார்.

இதில் என்ன கொடுமையென்றால் நடுத்தரவர்க்கமும் ,பணக்காரவர்க்கமுமான  20 சதமானம் போக எஞ்சியிருக்கிற எண்பது சதமான மக்களுக்கு இந்தச்செய்தி எதுவும் போய்ச்சேர்ந்து விடாதபடிக்கு மிகப்பெரிய ஊடுசுவர் ஒன்று எழுப்பப் பட்டிருக்கிறது.நமக்கு எப்படி உத்தப்புரம் சுவர்களைப்பற்றித் தெரியாதோ அதே போல அவர்களுக்கு இந்த ஊழல் மறிப்பு சுவர் பற்றியும் தெரியாது.இதை எப்படி அம்பலமாக்குவது என்பதை நுண் அறிவு படைத்த ஊடகங்கள் பார்த்துக்கொள்ளும்.மிகச்சரியாக தேர்தலுக்கு முந்தின இரவுதான் பூதங்கள் கிளம்புவது இந்தியாவின் விதி. வழக்கம்போலஅந்தச் சதுரங்க விதி அரங்கேறும்.

அப்போது இதுவெல்லாம் அம்பலமாகி இன்னொரு அரசாங்கம் வரும். அது ஜெயலலிதாவுக்கோ அல்லது அம்பானியின் பினாமிகளுக்கோ தான் பட்டா எழுதித்தரப்படும். அப்போது இதைவிடப்பெரிய எண்ணமுடியாத இலக்கங்களோடு ஒரு உழல் கிளம்பும். அதற்குள் அவர்கள் ஐந்தாண்டு ஆண்டு முடித்திருப்பார்கள்.

6.2.11

அக்கம் பக்கம் - பராக்குப்பார்த்தல்


ஆனந்தவிகடனில் 'ஆதவன் தீட்சண்யாவின்' சிறுகதை.

 இளம் வயதிலேயே துவங்கிவிடும் பெண் ஈர்ப்பின் குழப்பமான காலம் அந்த வளர் இளம் பருவம்.அந்த அழியாத கோலங்கள் எல்லோரையும் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டும்.கிராமங்களில் நுழையும் அழகிய பெண்களின் பின்னாடி ஒரு நூறு கதைகள் உருவாகும்.அதை ஒரு பத்தாவது படிக்கிற கிராமத்தானின் கண்ணாடி வழியே படம் பிடிக்கிற கதை. தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை சுசிலாக்காவை அழியாத கோலங்கள் ஷோபாவின் சாயலோடும்,ரோச்சாப்பூ ரவிக்கைக்காரி தீபாவின் சாயலோடும் அறிமுகப்படுத்தி அதைத்தாண்டி ஒரு முடிவைச் சொல்லுகிறது.



எதிர்பாராத ஏவுதளத்திலிருந்து எகிப்தின் எழுச்சி.

எகிப்து தேசத்தின் எழுச்சி பிரமீடுகளின் உயரத்தைத்தாண்டி விட்டது.பத்து நாட்களுக்கு மேலாக கெய்ரோ வீதிகளில் நங்கூரமிட்டிருக்கிற சாதாரண ஜனங்களின் கோபம் விமர்சனத்திற்கானதல்ல வழிகாட்டுதலுக்கானது. பெயர் சொல்லக்கூடிய எந்த எதிர்க்கட்சிகளின் பின்புலமும் இல்லாமல் காட்டுப் பூக்களைப்போல வெடித்திருக்கிறது புரட்சி.கட்சிகள் இப்போது மக்களிடம் உறுப்பினர் அட்டை கோருகிற விந்தை நடக்கிறது.எழுத்தாளர் கோணங்கி சொன்னது போல புரட்சி எனும் ராக்கெட் கிளம்பியிருக்கிறது. எதிர்பாரத ஏவுதளத்திலிருந்து.ஹோஸ்னி முபாரக் பதவி விலகிவிட்டார்.
இந்த காட்டுப்பூக்களுக்குள் தொலைந்து திரும்பியிருக்கிறார் பதிவர் ராகவன். பணி நிமித்தம் கெய்ரோ சென்ற அவர் மக்கள் எழுச்சிக்குள் சிக்கிப் பின் வெளியேறியிருக்கிறார்.அந்த அனுபவத்தைச் சுடச்சுட எழுதினால் நல்லாருக்கும்.

நோய்நாடி நோய்முதல் நாடி.

சக்கரை நோய், மாரடைப்பு, புற்றுநோய் ஆகியவற்றின் கேந்திரப் பகுதியாக இந்தியா மாறிவருகிறதென்பதை உலக சுகாதார நிறுவணம் எச்சரித் திருக்கிறது. ஆகவே நூறு மாவட்டங்களில் இவற்றிற்கு எதிரான விழிப்புணர்வும்,மருத்துவமும் வழங்குகிற திட்டத்தை குலாம் நபி ஆசாத் துவக்கியிருக்கிறார்.சினிமா கல்வி அரசியல் ஆகியவற்றின் வழியே இந்த நோய்கள் பரப்பப்படுக்கிறது என்பதையும் பன்னாட்டு இந்நாட்டுக் கம்பெனி களில் அது ஊற்றெடுக்கிறது என்பதையும் சொல்லாத வரை இது இலை களுக்கான வைத்தியம் மட்டுமே.

ஒருபக்கம் அருவாப்படம்,  மறுபக்கம் பொம்மைப்படம்.

நேற்று காவலன் படம் கிடைத்தது.எதிர்பாரதாவிதமாகச் சந்தித்த நண்பர் ஒருவர் வலியக் கொடுத்தார்.வீட்டில் வந்து போட்டுப் பார்த்த பின்னாடிதான் தெரிந்தது, குப்பையில் போடவைத்திருந்ததை என்னிடம் கொடுத்திருக்கிறார் என்று.பொம்மைப்படம் விரும்பிப் பார்க்கிற எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும்.அயல் நாட்டிலிருந்து வருகிற எல்லோரும் ,மதுரை மனிதர்களை அருவாளின் மறு ரூபமாகத்தான் பார்க்கிறார்கள்.மதுரையைப் பற்றிப் படம் எடுங்கடான்னா அருவாளைப்பத்தி படம் எடுக்கிறார்கள். அதில்லாவிட்டால் நாலு வேற்று மொழிப்படம்  இல்லை ஆங்கில எட்டு கார்ட்டூன் படங்கள் பார்த்து அதில் எலிக்கு கதாநாயகன் ,பூனைக்கு வில்லன் (அல்லது பிரகாஷ்ராஜ்) வேஷம் கட்டி களத்தில் இறக்கிவிட்டு விடுகிறார்கள். அதில் நடித்து முடித்த கையோடு ’இங்கே தொகுதிப்பங்கீடு பற்றிப்பேசப்படும்’ என்று போர்டு மாட்டிவிடுகிறார்கள்.தொப்புளைச்சுற்றி பம்பரம் விடுகிற, பிரமீடுகளைச் சுற்றி சுற்றி டூயட் பாடுகிற இவர்களின் கனவும் அரசியலும் வேறெப்படி இருக்கும்.

பெருமிதம்.

போன 26 ஆம் தேதி சானலைத் திருப்பும் போது ஒரு பேட்டி தட்டுப்பட்டது.  கதநாயகர் ஒருவர் பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தார். நார்வே  நாட்டுக்கு படப்பிடிப்புக்கு போனார்களாம்.அந்தப்படம் தான் நார்வேயில் டூயட் சாங்க் எடுத்த முதல் படமாம். நார்வே மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் ஒரே ஆச்சரியமாம்.இதுவரை ஆவணப்படம் எடுக்க வந்திருக்கிறார்கள்,சுற்றுலா வந்திருக் கிறார்கள், அரசுமுறைப் பயணமாக வந்திருக்கிறார்கள்,வாங்க விற்க வந்திருக்கிறார்கள் ஆனா டூயட் சாங் எடுப்பதற்காக வந்த மொதோ டீம் நீங்கதான் சார் என்றார்களாம். அதை சொல்லும்போது அவரது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்.ஊருக்குள்ள தப்பிவந்த கொரங்கப்பாத்த மாதிரிப்பார்த்திருக்கிறான் நார்வேக்காரன். அட வெங்காயம் இது கூடப்புரியலயா எத்தன வடிவேலு காமெடி நடிச்சிருக்கே, பார்த்திருக்கே. இந்தியாவின்,தமிழகத்தின் மானத்தைக்கூறுபோட்டு வித்துட்டு வந்ததைப் பெருமையாகப் பேசியபடி இருக்கிறது பாப்புலர் இலக்கியம். அதோடு கொண்டாடினான் குடியரசுத் தமிழன்.


14.12.10

இரண்டு சிறுகதைகள். தீட்சண்யா, bk

தேடித்தேடிக்கதைகள் படித்த காலங்களை பாதாள கரண்டிபோட்டுத்துழாவ வேண்டியிருக்கிறது.பேச்சில் மற்றவர் வேல.ராமமூர்த்தியின் வேட்டையைச் சிலாகிக்கிறபோதே ஆசை விதை  விழுந்துவிடும்.செக்காவின், தமிழ்ச்செல்வனின்,மாமா ஷாஜியின் கதைகள் குறித்து  வாயாற பேசுவார்கள். அந்தப்பேச்சு புத்தகங்களைத்தேடி த்துரத்தும்.அப்படித்தான் இரும்புக்குதிரை படித்துவிட்டு மாதுவும் bk யும் பேசிக்கொண்டிருந்தார்கள்.'அதன் அழகே அதன் சமயமற்ற தன்மையில்தான் இருக்கிறது' என்று bk சொல்லுவதற்கு முன்னாடி அந்தக்கதையின் தெறிப்பான இடங்களைப்பேசினார்கள்.அன்று இரவே விடிய விடிய முழித்து இரும்புக்குதிரை படித்துவிட்டேன்.அது போல ஒரு புத்தகத்துக்கு முன்னுரை எழுதிய bk 'புரிந்துகொண்டு வாழும் ஆண்,பெண் உறவு ரெட்டை நாயனத்தின் சங்கீதமாக வழிந்து ஓடும்' என்று எழுதினார்.

அப்படியான ஒருவாழ்வைப்பற்றியது. அது முடிகிற நுனியில் கிடைக்கிற அடர்த்தியான சோகம் நிறைந்த சிறுகதை
அப்பத்தா.பேச்சின் சாமர்த்தியத்தை அப்படியே எழுதவும் முடிகிற வீச்சு.

//வீட்டுக் கோழிகளுக்கும், விருந்தாட வரும் காக்கைகளுக்கும், கொல்லையில் நிற்கும் காராம் பசுவுக்கும் கூடத்தெரியும், தாத்தா தூங்குகிறார் என்று. கொலுசு போட்டுக் கொண்டே, சத்தம் வராமல் நடந்து போகிற வித்தை அப்பத்தா மட்டுமே அறிந்த நளினம்.//

//பேரக் குழந்தைகள் விடுமுறைக்கு வந்தால், ஒவ்வொரு நாளும் விருந்து தான். கறிக்கடை தங்கராசு வீட்டுக்கு வந்து தனிக்கறியாக, வெள்ளாட்டங்கறியாக தந்து விட்டு போவான். குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நல்லி வெட்டி வைத்திருக்க வேண்டும். குழந்தைகளின் பட்டியலில் தாத்தா எப்போதும் உண்டு.//

இப்படிச் சிறுசு சிறுசாக அப்பத்தா தாத்தா இணையின் உறவைச் சொல்லிக்கொண்டே போய் அப்பத்தாவின் கதையை முடித்துவைக்கிறார் எழுத்தாளர்.கீற்றுவில் கிடைக்கும்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11876&Itemid=263

சுட்டிப்படிக்கும் வரை நான் சொல்வது அதிகமெனப்படும்.

0

இன்னொன்று ஆதவன் தீட்சண்யாவின் 'களவு' இந்த காலாண்டுக்கான புதுவிசையின் கடைசிப்பக்கத்தில்.மேலே சொன்ன கதை , வயிறாரச் சாப்பிடும் ஒரு குடும்பத்தின் உறவும், உலுக்குகிற பிரிவும் என்றால். இது ஒரு விளிம்பு மக்களின் வயிற்று இரைச்சல் கேட்கிற எழுத்து.முழுவதும் கேட்க முடியாத படிக்கு எழுந்து ஓட வைக்கும் வாழ்வின் கதை. ஒரு அடர் மழை நாளில் கிழங்கு திருட வந்து பிடிபட்டுக்கொண்ட பெண்ணின் வறுமை சுழற்றியடிக்கும் கதை. முழுக்க முழுக்க எள்ளல்வழியே நகரசுத்தி தொழிலின் கொடுமையைச் சொன்ன  அவரே எங்கும் விலகாத அடர்த்தியோடு இழுத்துக்கொண்டு போகிறார். ஒரு வேளை பசியமர்த்தும் கிழங்கைத் திருடப் போகிறவள் மின்சார வேலியில் சிக்கிச் செத்துப்போனவர்களின் பட்டியலை நினைத்துக் கொள்கிறாள்.  நிஜத்திலும் கதையிலும் அது கடக்க முடியாத துயரம்.உழைப்பு உன்னதம் தான்,களவு கேவலம் தான். இந்த இரண்டையும் விட இருத்தலும் உயிரும் இன்றி யமையாதது. இதோ இல்லாதவர்களை அலைக்கழிக்கும் இருத்தலின் வலி.

http://www.facebook.com/#!/notes/aadhavan-dheetchanya/kalavu-cirukatai-atavan-titcanya/180560295304249

28.11.10

நந்தலாலா - அபூர்வமாகப் பூக்கும் தமிழ்ச்சினிமா.

எழுத்துப்போட்டு முடிந்த பிறகுதான் போனோம்.பத்து இருபது வருடங் களுக்குப் பிறகு ஆசையோடு பார்க்கப்போன பகல்காட்சி.நீல நிறப்படுதாவை விலக்கியபோது உள்ளிருந்த நூறுபேரில் சிலர் திரும்பிப் பார்த்தார்கள்.காட்சி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.விசிலடிக்க,கட்டவுட் வைக்க, தாள்களைக் கிழித்து தூவி விட யாரும் வரவில்லை. அப்பொழுது அகி பள்ளிக் கூடத்தி லிருந்து வந்து கொண்டிருந்தான்.திருவனந்தபுரம் கலாபவன் அரங்கில் பார்த்த ஒரு நூறு திரையிடல்களில் இருந்த அமைதி திரும்பிவந்தது.அங்கே பார்த்த ஒவ்வொரு படத்தின் முடிவிலும் இப்படியொரு படத்தைத்தமிழில் பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கம் வந்து போகும். அந்த ஏக்கத்தை தனிக்கிற படம் நந்தலாலா.பாஸ்கர் மணி கீழ்பாக்கம் மருத்துவம்னையிலிருந்து தப்பித்து வெளிவருகிறான் 'அகி' என்கிற அகிலேஷ் வீட்டிலிருந்து தப்பித்து வெளிவருகிறான் இருவரையும் சேர்த்துவைக்கிற தாயின் தாகம்.தங்களின் தாயைத்தேடி நடக்கிற பயணம் தான் கதை.

அவர்கள் பயணிக்கிற வழியெங்கும் தட்டுப்படுகிற மனிதர்கள் எளிதில் கோபப்படுகிறவர்களாகவும்,நிதானித்து புரிந்து கொண்ட பின் மனிதம் வழிந்தோடுகின்ற ஈர மனசுக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.ஒரு நெடிய பயணத்தில் கரம் கோர்க்கிற ரெண்டு குழந்தைகளும் கால்நடையாகவே தொடர்கிறார்கள்.அவர்களை ஏனையோர் சந்திக்கிற ஒவ்வொரு பகுதியும் தனித்தனி குறும்படம்.அவர்களை நடக்க விடாமல் எல்லோரும் கைகளில் தாங்கி, முதுகில் ஏற்றிக்கடத்தி விடுகிற கவிதை நிகழ்வுகள்.இதில் இன்னோவா காரில் வரும் புதுமணத் தம்பதிகள் தவிர எல்லோரும் ஒரே வகை.

க்ளோசப் காட்சிகளை தொட்டால் சினுங்கி,ரயில் பூச்சி,ஆலம் விழுதின் நுனி,பிறந்த குழந்தையின் விரல்களைப்போன்ற வெளிர் மஞ்சள் நுனி ஆகியவற்றுக்கு ஒதுக்கி வைத்து விடுகிறார். மற்ற எல்லாவற்றையும் உணர்வு பூர்வமான பிரதிபலிப்புக்கு அர்ப்பனித்து விடுகிறார்.கலவரம் நடக்கும் பகுதியில் வந்து போகிற மாற்றுத்திறனாளியும்,கூட்டு கற்பழிப்புக்குள்ளாகிற பெண்ணும்,சாலையோர விபச்சாரியும் இந்த உலகத்துக் உரத்த மௌனத்தில் ஏதேதோ சொல்லிவிட்டுப் போகிறார்கள்.சாலையோர விபாச்சாரி விவரிக்கிற பழய்ய வாழ்க்கை ஒரு கண்ணீர்க்கவிதை.வசனகர்த்தாவை துக்கிவைத்துக் கொண்டாடவேண்டும்.

பெரும்பாலான தமிழ்சினிமாவின் கதாநாயகர்களின் முதல் பிரவேசத்தை, காமிரா காலில் தொடங்கி  மேலேறி முகத்துக்கு கொண்டு வரும். சாயங்கால மானால் மாடு வீடு திரும்பும் பாதைக்கு அணிசையாய் இழுத்துச் செல்வது போல. நாயகிகளின் இடுப்பையும், மார்பகத்தையும் கண்டால் நகராமல் இருப்பது எல்லாம் தமிழ்சினிமா காமிராக் கலாச்சாரம். இந்தப்படம் முழுக்க முழங்கால்களுக்கு கீழேயே அதிக காட்சிகள் காண்பிக்கப்படுகிறது.எதோஒரு ஜப்பனியப்படத்தின் தழுவல் தானென்றாலும்,இப்படியும் படம் எடுக்காலாம் பாருங்கள் என்று முகத்திலடிக்கிற முயற்சி இது.சூறைக்காற்றில் மேலெ ழும்பும்  மக்கும் மக்காத குப்பைகளுக்கு மத்தியில் உலகத்தரம் வாய்ந்த அரிதான தமிழ் சினிமா.இடைவேளையில் வெளிவந்த போது வந்திருந்த பத்து முப்பது இளைஞர்களின் முகத்தில் ஏமாற்றம் இருந்தது.

75 வருட திரைப்படங்கள் தமிழ் ரத்தங்களில் ஏற்றி வைத்திருக்கிற சாக்கடையை  ஒன்றிரண்டு திரைப்படங்கள் மூலம் சுத்தப்படுத்திவிட முடியாது. ஒரே குத்தில் பத்துப்பேரைச் சாய்க்கிற காட்சிகள்.கஞ்சிக்கில்லாத ஏழை நாட்டுக்கோட்டை நகரத்தார் வீடுகளில் வசிக்கிற செட்டுகள்.லேசாக் கண்ணசந்தால் ஓடிப்போய் சுவிட்சர்லாந்தில் பிருஷ்டத்தை  ஆட்டுகிற காதல்பாடல்கள் இல்லாத படம் மொக்கை படம் என்றுதானே வர்ணிக்கப்படும். ஆனால் பாருங்கள் மொத்த தமிழ்ச் சினிமாவின் குறிப்பிட்டுச் சொல்லுகிற படங்கள் எல்லாமே அந்தந்த காலத்தில் ஓடாமல் முடங்கிய மொக்கைப்படம் என்பது தமிழ்ச் சினிமாவின் சாபக்கேடு.

இதில் விமர்சிக்கவேண்டிய இடங்கள் இல்லையா என்றால் இருக்கிறது. எனினும் அதைப் புறந்தள்ளிவிட்டு தூக்கிப் பிடிக்கவேண்டிய படைப்பு இது.இல்லையென்றால் 200 கோடி,162 கோடி செலவு செய்து தயாரிக்கும் கதையில்லாத திரைப்படம் தான் படைப்பு என்று சந்தைக்கு வரும்.

காட்சிகளின் உறுத்தலற்ற பதிவுக்கு போட்டி போட்டுக் கொண்டு இசை இழுத்துச் செல்லுகிறது. இந்திய திரை இசையில் பின்னணி இசைக்கு புதிய பரிணாமமும்,அழகிய பரிமாணமும் கொடுத்து நிறுத்தி வைத்திருப்பவர் இளையராஜாதான்.ஒரு ஏழை வீட்டுக்கு வரும் அதிகாரியின் பிரவேசம் என்ன மனநிலையை உருவாக்கும் என்பதை குஞ்சுக் கோழியின் கெக்கெக் சத்தத்தை சேர்த்து பிரம்மிப்பூட்டியவர் இளையராஜா.படம் முள்ளும் மலரும் இடம் காளியின் வீட்டுக்கு வரும் எஞ்சினியரின் வருகை.ஒரு 900 இந்தியத் திரைப் படங்களுக்கு இசையமைத்த அவரின் மேதமை மத்திய அரசால் நான்கு முறை கௌரவிக்கப்பட்டிருக்கிறது.

காட்சி ஊடகத்தின் மீதும், கதை மீதும்  அதீத நம்பிக்கை வைத்திருக்கிறது இந்த நந்தலாலா.அதற்கு ஈடு கொடுக்கிற அகிலேஷ்,பாஸ்கர்மணி அகியோருக்கு இணையாக இசை கூடவே நடக்கிறது.இருவரும் தங்கள் தாயைச்சந்திக்கிற  மனசை உலுக்குகிற காட்சியை கண்ணீர் விடாமல் சந்திப்பது சிரமம். அந்த ஈரம் அடுத்தொரு தரமான தமிழ்ச்சினிமா வரும் வரை காயாமல் காத்திருக்கும். நம்பிக்கையோடு.

17.10.10

சீனச் சிறைகளும் பான்பராக் எச்சில் விடுதலைகளும்

இந்த வார 20.10.2010 ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.'சீனாவின் அமைதியைக்கெடுத்த அமைதிப்பரிசு'.திரு ஆரோக்கியவேல் எழுதியிருக்கிறார்.சீனக்கவிஞரும் தியானமென் எழுச்சியின் தலைவர்களில் ஒருவருமான கவிஞர் 'லியூ சியோபோ'வுக்கு கிடைத்த நோபல் விருதைப்பற்றியதான கட்டுரை அது.இந்தக்கால எழுத்துக்கள் தனித்து நிற்கின்றன.நோபல் விருது கிடைத்தது தெரியாமல் சிறக்குள்ளிருக்கும் லியூ வுக்கு அவரது மனைவி மூலம்,தகவல் சொல்லப்பட்டதாகவும்.தகவல் சொல்லப்போன மனைவி என்ன ஆனாள் என்று தெரியாமல் போனதாகவும் எழுதிக்கொண்டே வந்து 'உலகின் மிகப்பெரிய  சிறைக்குப்பெயர்தான் சீனாவோ' என்று முடிக்கிறார். நல்லா இருக்குல்ல ?. இந்த முடிவின் வார்த்தைகள் ஒரு கவிதைபோல வந்து விழுந்திருக்கிறது.அருமை ஆரோக்கியவேல்.

0

ஒரு நாடு அதன் மக்களுக்கு எதுவாக இருக்கவேண்டும்.சீனா உண்மையிலேயே சிறையா இந்தக்கேள்விகள் ஊடகங்களின் வழியாக நம்மை வந்து சற்று ஆட்டிவிட்டுப்போகிறது.இது ஒன்றும் புதியதல்ல.உள்ளூர் அரசியல் வாதிகள் தகரம் கண்டுபிடிப்பதற்குமுன்னமே உண்டியல் கண்டுபிடித்தவர்கள் என்று வசைபாடுவதும் அமெரிக்கா தனது இலக்கியங்கள் அணைத்தையும் பொதுவுடமைக்கு எதிராகாக்கூர்தீட்டி விடுவதும் புதிதல்ல.தனது காமிக்ஸ் கதைகள்தொடங்கி உலகு புகழ் ரா ரா ரஸ்புதீன் பாடல்கள் வரை ரஷ்யாவை எதிரியாக்கியிருக்கும் அமெரிக்கா.அதன் சாகச கதநாயகர்களான ஜேம்ஸ்பாண்டுகள் ஒத்தை ஆளாய் சீனாவுக்குள்,ரஷ்யாவுக்குள்,தென்கொரியாவுக்குள்,க்யூபாவுக்குள் புகுந்து அதகளப்படுத்தி ஜெயித்துவிட்டு கடல்வழியே நாயகியோடு சல்லாப பயணம் மேற்கொள்வார்கள்.

அவர்களது ஜனங்களை சிந்திக்கவிடாமல் செய்ய அங்கே அதுதான் மேம்படுத்தப்பட்டபோதை. நமக்குத்தான் நாட்டுப்போதைகள் அதிகம் கிடைக்கிறது. அவை யாவன என்று கேட்கறீர்களா?. ஒண்ணா ரெண்டா சொல்லுவதற்கு. சின்ன வயசில் கம்யூனிசம் என்றால் இருக்கிறவர்களிடம் வழிப்பறி செய்வது என்று சொன்ன உள்ளூர் காங்கிரஸ் தாத்தா முத்தையாவின் அறியாமைதான்  எனக்கான அறிமுகம்.என்னைப்போல 90 சதமான இந்தியர்களுக்கும் அடித்தட்டு ஜனக்களுக்கான அறிமுகம் அதுவாகத்தான் இன்னும் இருக்கும். அதுபோலத்தான் சீனாவும் ஒத்தைக்கண்ணன் அறிமுகம். இந்திய சீன எல்லைப்போரின் போது

'ஐ சக்க ஐ அரைப்படி நெய்;
சீனாக்காரன் தலையில
தீயப்பொருத்தி வை'

என்கிற தேசபக்தி ரைம் மூலம் சீனா அறிமுகமானது.பக்கத்து தெருக்காரனிடம் சண்டையென்றால் சொந்தத்
தெருக்கார ஈ, காக்கா, குஞ்சுகளும் எதிரிப்பட்டை பூசியே தீரவேண்டும்.இப்படியான சின்ன ஆனால் மிகப்பெரிய உளவியல் பாதிப்போடு தான் எல்லோரும் இயங்கவும் வேண்டும் இல்லையா ?.சமீபத்தில் சீனா பற்றிய தேடலில் கூகுலுக்கும் சீனாவுக்கும் ஏற்கனவே வாய்க்காத் தகறாராகிப்போனது தெரியவந்தது. அங்கே இருக்கிற பைடு டாட்காம் கூகுலுக்கு வியாபார எதிரியாகிப்போனதால் விக்கிப்பீடியாவில் சீனா பற்றிய தகவல் இல்லை. அதானாலாயே அது இரும்புத்திரை நாடு என்று சொல்லிவிடலாமா?.

ஒரு சராசரி சீனக்குடிமகனுக்கும்,பணக்கார சீனக்குடிமகனுக்கும் உள்ள வருமான இடைவெளி 362 டாலரிலிருந்து,1142 டாலர் என்று சொல்லுகிறது பிரிட்டிஷ் பத்திரிகை.அதுதான் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியென்றும் சொல்லுகிறது. இதை ஒருநாளைக்கு நாப்பது ரூபாய் கூட கூலிகிடைக்காமல் திண்டாடும் என் 20 சதமான இந்தியர்களிடம் நான் எப்படி விளக்கிச் சொல்லமுடியும். 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'ஒரு குடும்பம் ஒரு குழந்தை' திட்டத்தால் 250 கோடி ஜனத்தொகை கட்டுப்படுத்தப்பட்டதாக அதுவே சொல்லுகிறது.நிலப்பரப்பிலும் மக்கட்தொகையிலும் நமக்கு நிகரான சீனாவின் தனிநபர் வருமாணம்,தனிநபர் சுகாதாரம் எல்லாம் திருப்தியளிக்கக்கூடிய அளவில் இருக்கிறது என்பதை யாரும் சொல்லுவதில்லை.  clean energy என்று சொல்லப்படுகிற இயற்கை எரிசக்தியை உபயோகிப்பதில் உலக நடுகளில் முதலிடத்தில்  சீனா நிற்கிறது என வாஷிங்டன் போஸ்ட் இதழ் சொல்லுகிறது.கட்டிடம்,காகிதம்,தீக்குச்சி போன்ற தளவாடங்களுக்கு மரத்தை வெட்டுவதில்லை என்கிற முடிவெடுத்ததால் தீப்பெட்டி தயாரிக்கும் பழய்ய தானியங்கி எந்திரங்கள் தென் தமிழ்நட்டுக்கு வந்திறங்கிக் கொண்டிருக்கின்றன.

அதை வாங்கப்போன ஒரு தீப்பெட்டித் தொழிலதிபர் வார்த்தைகளில் சொல்லுவதானால் 'அங்கே சோத்துக்கில்லாமல் வற்றிப்போன கண்களோடு எந்தமனிதனையும் பார்க்கமுடியாது.பிச்சைக்காரர்கள் மருந்துக்கு கூடக்கிடையாது' என்கிற கனிப்பு பாரபட்சமானதாக இருக்கமுடியாது.இது போதாதா வேறென்ன வேண்டும்.ஜனநாயகம் வேண்டுமாம், மதநம்பிக்கைக்கான விடுதலை வேண்டுமாம்.ஹப் புக்கு போக உரிமை வேண்டுமாம்.ஐயயிரம் ரூபாய்க்கு ரீபோக் ஷூ எடுக்க அனுமதி வேண்டுமாம்.5 டாலர் கொடுத்து காப்பிகுடிக்க விடுதலை வேண்டுமாம்,பொது இடங்களிலும்,தொடர்வண்டிகளிலும் பான்பராக் எச்சிலைத்துப்புகிற ஜனநாயகம் வேண்டுமாம்.தாய்ப்பால் தவிர இந்த பூமியின் அணைத்து படைப்புகள் மீதும் விலைப்பட்டியல் ஒட்டிவிடுகிற போட்டிவேண்டுமாம். அழிக்கவே முடியாத லஞ்சமும் ஜாதியும் பிணைந்துகிடக்கிற சௌஜன்யம் வேண்டுமாம். இதெல்லாம் கொடுக்காத சீனா ஒரு சிறையென்றால், சிறையே.

1991 அல்லது அதற்கு முந்தைய தேர்தலா என்று தெரியவில்லை வேட்பாளர்களின் சொத்துமதிப்பை இதே ஆனந்த விகடன் வெளியிட்டது. அதை மீண்டும் பொக்கிஷம் பகுதியில் போட்டுக் காண்பித்தால் இந்த விடுதலை பெற்ற ஜனநாயம் சம்பாதித்தது எவ்வளவு  என்று தெரிந்துகொள்ளலாம்.

24.6.10

வானம் அறிந்ததணைத்தும் - ஒற்றைக் கதவு.

இப்படிக்கற்பணை செய்துகொள்ளலாம்.அடர்ந்த பசிய காடு.அப்பொழுதுதான் மழைபெய்து ஓய்ந்த இளம் மாலை.அருகே பெண்குரலில் பேசியபடி நடக்கக்கிடைக்கிற சிலாக்கியம் எப்பொழுத்தாவது வாய்க்குமானல் அதை நான்
தோழர் ஜெயஸ்ரீயின் மொழிபெயர்ப்பான ஒற்றைக்கதவு என்றே சொல்வேன்.அதிர வைக்கும், அல்லது விடுகதை  முடிவாய்த்தான் இருக்க வேண்டும் என்கிற கோரிக்கை ஏதுமில்லாமல்.கதைகளை இயல்பாகச் சொல்லி முடிக்கிறார்.சந்தோஷ் ஏச்சிக்கானம்.மலயாள மூலமான இந்த சிறுகதைத் தொகுப்பை.அப்படியே தமிழ் மயமாக்கி விட்டிருக்கிறார் ஜெயஸ்ரீ. ஒரிஜினாலிட்டி வேண்டுமென்பதற்காக 'மச்சி,ஙொய்யால' என்று கதை வசனம் பேசுவதாய் மொழி பெயர்க்கிற ஹாலிவுட் மொழிமாற்றப் படங்களைப் பார்த்தவுடன் வடிவேலு இல்லாமலே சிரிப்புவரும்.

இன்னொரு நாட்டின் இலக்கிய வளங்களை சொந்த மொழிக்குக் கொண்டு வரும்போது நாம் வெறும் கதைகளை மட்டும் உள்வாங்கிக் கொள்வதில்லை. அந்த நிலப்பரப்பு,அதன் மொழி,அங்கு சாப்பிடுகிற உணவு,உடை உள்ளடக்கிய எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவேண்டும். தெரியவழி செய்ய வேண்டும். கண்ணைமூடிக்கொண்டு யோசித்தால் ஸ்தெப்பிப் புல்வெளியும்,மணப்பாடு கடலும்,அன்னைவயலின் கோதுமை வரப்புகளும்,எக்கத்தரினா பாவலவ்னாவும், சோக எழில் ததும்பும் ஒற்றையடிப் பாதையும் காட்சியாக ஓடவேண்டும்.ராஜாக்களையே பார்த்திராத நூற்றாண்டுகள் தாண்டிய தலைமுறைகளுக்கு அவர்களின் முகபாவங்களைக் கூடச் சித்தரிக்கமுடிகிற வல்லமை எழுத்துக்கு மட்டுமே சாத்தியம்.

அப்படித்தான் மலயாள மண்ணின் சுகந்தத்தையும்,செடிகளின் பசிய வாடையையும்,அந்த மக்களின் மேல் இயல்பாய்க் கவிழ்ந்திருக்கிற ஈரத்தையும் சொல்லுகிறது தோழர் ஜெயஸ்ரீயின் வலிமையான மொழி.
விருந்தாகும் உடல்கள் என்கிற கதையை எதற்காக முதல் கதையாக தெரிவு செய்தார் என்று தெரியவில்லை.நீச்சல் பார்க்க கரையில் உட்கார்ந் திருந்தவனை இழுத்துபோடும் அதிர்வுகளை உள்ளே வைத்திருக்கும் கதை.ஒருபெரு நகர மத்திய தரப்பெண்ணை ஒரு பல்பொருள் அங்காடிக்குள் பிரவேசிக்கச்செய்கிற பாவனையில், இந்தச்சமூகத்தின் ஆழ்மனத்தையும், சொகுசு தேடும் அதன் தவிப்பையும்,அதற்குப் பலிகொடுக்கிற இயல்பு களையும்.  இயலாமையையும்,குழைத்துக்கொடுக்கிறது இந்தக்கதை. டைனசரின் முட்டை,கோட்டை ஆகிய இரண்டுகதைகளும் அமானுஷ்யமான கதைப்போலத் தோன்றும் பெண்ணின் படிமங்கள்.

ஒரு நகர நெரிசலில் தற்செயலாய்க் கண்ணில் படுகிற ஊர்நண்பன் பீதாம்பரனோடு கழியும் ராமகிருஷ்ணனின் ஒரு இரவின் மதுநெடி மிகுந்த நினைவுகள் தூண்டில் முள்ளாய் அழுத்துகிறது.அங்கு நாம் நிச்சயிக்கப்பட்ட எந்த முடிவுகளையும்  அடையாதபடிக்கு மிகைப் போதையின் கடைநேர வாந்தி வந்து நிற்கிறது.

தொலைக்காட்சிப்பெட்டி இல்லாத ஒரு வீடு சில மணிநேரப் புலம் பெயர்தலை இயல்பாய் சொல்லி நகர்கிறது செய்திகளின் கூடெனும் சிறுகதை.அகதிகளின் கூடு,பழய்யமரங்கள் என்கிற கதைகளெல்லாம் அந்தப்பசிய வனங்களினூடே நிலைபெற்றுப்போன வீடுகளின் பெருமூச்சாய் நம்மை சூழ்ந்துகொள்கிறது.ஒரு பயணக்குறிப்பு போல சொல்லப்பட்டதாகினும்,ஆண்டாள்கோயில் பூசுபொடியின் சுகந்ததோடு நெடுநாட்கள் கூடவரும் கதை.நினைத்த நேரமெல்லாம் கோதுமை வயலின் வாசம் வீசும்.டமால் அதிர்வுகளோ,தத்துவ விசாரங்களோ இல்லையானாலும் அந்த மேலோட்டமான வார்த்தைகளில் நட்பின் ஆணிவேர் காணலாம்.ஒருபிடி கோதுமை என்கிற கதை.

இப்படியான கதைகள் ஏதும் அளவில் குறைந்தவையல்ல ஒரு தொகுப்பின் இருகரையையும் அடைத்துக்கொண்டிருக்கும் பதினான்கு கதைகளும் அதனதன் இடத்திலிருந்து வாழ்க்கையை உற்றுநோக்குகிறது.எதுவும் இளப்பில்லை காண் என்கிற குரலிருந்தாலும் ஒரு சிறுகதையைத் தலைப்பாக்குவதும் தலைமையேற்று நடத்தச் சொல்லுவதும் மனித மாண்பாகிறது.முன்னதாக தோழர் ஷைலஜாவின் மொழிபெயர்ப்பில் சூர்ப்பநகை கதையைப்படித்துவிட்டு நானும்,மாதுவும்,மாப்பிள்ளை ஆண்டோ வும் பறிமாறிக்கொண்ட விசும்பல்களை நினைவு கொள்ளவைக்கிறது 'ஒற்றைக்கதவு'.

வரிவரியாய் உள்வாங்கவேண்டிய அந்தக்கதையை என்னால் முழுவதுமாக அறிமுகப்படுத்த இயலாது.
ஒரு ஜெயிலில் பரிதவிக்கிற அதிகாரி நேர்மையைப் பாரமாய்ச்சுமக்கிற வர்க்கீஸ்.காவல் கோட்டைகளையும் ஊடுறுவி அங்கு உலவுகிற வெளியுலகின் நாற்றத்தைக்கண்டு பிதற்றுகிறவனாகிறான்.தண்டனையை நிரைவேற்றுகிறவர்கள் பெருங்குற்றவாளியாக மாறும் போது நியதிகள் சின்னாபின்னமாகும். அப்படி நியதிகளின் மேல் தீராதகேள்விகளை வைக்கிறவனாக கடத்தல் குற்றவாளி அந்தோணி வருகிறான்.தனது மேலதிகாரி தன்னை குத்திக்குதறுவதற்கு மனசாட்சியை அடகுவைத்து அவர் செய்கிற தவறுகள்தான் என்பது தெரிகிறது.ஆனாலும் அந்த ஜெயிலுக்குள் கஞ்சாவும்,மதுவும் புழங்குவது அந்தோணியின் ப்ளாக்கில்தான் என்கிற வெறியோடு அவனைத்தேடிப்போய் அடித்து நொறுக்குகிறார். ஆனால் அவன் தழும்புகளிலிருந்து வெளியேறும் கதையிலிருந்து, தான் இது வரை சேர்த்துவைத்த கற்பிதங்களை நொறுக்கிவிட்டு வெளியேறுகிறார் வர்க்கீஸ். வெளியிலிருந்து ஒரு மம்பட்டியான் சினிமா,ஒரு நாவல்,ஒரு மனிக்குறவன் நடோ டிப்பாடல் சொல்லுகிற கதையை ஜெயிலுக்குள்ளிருந்து வெகு இயல்பாகச்சொல்லுகிறது இந்த ஒற்றைக்கதவு.

மகாநதி படத்தில் லேசாகத்திறந்து காட்டப்பட்ட அந்த ஜெயிலின் உட்புறத்தை மிக லாவகமாகத் திறந்து சாவகாசமாகப்  பிரவேசிக்க  விடுகிறார்கள் மூலமொழியாளர் சந்தோசும்,மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீயும். ஆம் ஒரு படைப்பை உள்வாங்கும் போது மனிதர்களோடு நிலவியல் வரைபடமும் சேர்ந்து பதிந்து போவதுதான் எழுத்தின் மஹிமை.அது ஒற்றைக்கதவின் வழியே வலிமையாக விரிகிறது.

ஒற்றைக்கதவு

மூலம் -சந்தோஷ் ஏச்சிக்கானம்
தமிழில் -கே.வி.ஜெயஸ்ரீ
வெளியீடு -வம்சி புக்ஸ்
விலை- ரூ.80

22.6.10

விஜய் விருதுகள்,வறண்ட பிரதேசத்தில் பசிய நம்பிக்கை,அபிநயா.

மொட்டை வெயிலில் ஒற்றை வேப்பமரத்து நிழலில் கைலியைத் திரைத்துக்கொண்டு உட்கார்ந்து,தலைத்துண்டை அவிழ்த்து மடியில் வைத்துவிட்டு இருக்கிற தண்ணீரில் கை அலம்பிக்கொண்டு( டெட்டால் போட்டு கழுவிக்கொண்டல்ல)தூக்குவாளியின் மூடி திறக்கிற நேரம்.ஒரு உழைப்பாளிக்கு உலகத்தின் அத்துணை உன்னதங்களும் பின்னுக்குப் போய்விடும்.அந்த புளிச்ச கஞ்சி,வறுத்த வத்தல் டால்டா போட்டு,சாயம் பூசி,சாப்பாடு என்ற பெயரில் பரிமாறப்படுகிற ஒப்பணைகளை ஊதித்தள்ளும்.பசி ருசியறியாது.அதே உழைப்பாளியின் ஞாயிற்றுக்கிழமை முன்மதியம் வீட்டிலிருந்து வெளிக்கிளம்புகிற தாளிப்பு வாசனையில்
கிறங்கிப்போய் பசியின் அளவுகூட்டும்.அத்தியாவசியத்துக்கும் ஆடம்பரத்துக்குமான இடைவெளி மிகப் பெரியது அது பழய்ய கஞ்சிக்கும்,பீட்சாவுக்குமான காத தூர இடைவெளி.


வாழ்வில் ஒப்பனைகளுக்கான இடம் விரிந்துகொண்டே போகிறதுப்போல பிரம்மாண்டப்படுத்தப்படுகிறது தொலைக்காட்சியில்.அப்படியொரு பிரம்மாண்டம் தான் விஜய் அவார்ட்ஸ்.ஒருமணி நேரத்துக்குமேலே காட்டப்படுகிறது விருதுக்கான முன் தயாரிப்புகள்.விழா மேடையின் டாம்பீகம்.அங்கே வந்து ஆடப்போகும் தமிழறியாப்பெண்டிரின் எக்சைட்மெண்ட்,வந்து நிற்கும் வெளிநட்டுக்கார்கள் அதிலிருந்து இறங்கும் பரம்பரை நடிகர்கள்.அரைகுறை ஆடையில் வந்த ஒரு நடிகைக்கு ஆன் த ஸ்பாட் வார்த்தை விருதுகொடுக்கிற தத்துபித்து அறிவிப்பாளினி. இவைகளையெல்லாம் பார்க்கிற சாதாரண ஜனங்களுக்கு சினிமா மீது பிரம்மை மட்டுமே ஏற்படுத்துகிற துள்ளியமான ஏற்பாடு இது.


அப்படியிருந்த சினிமாவை தரையில் இறக்கிவிட்டது எண்பதுகளின் சினிமா முயற்சி. சற்று ஓய்ந்து மீண்டும் வேதாளம் ஏறிய முருங்கையாய் இன்னும் நீடிக்கிறது சினிமா.அந்த செல்லுலாய்ட் உற்பத்தி நிறுவனம் சாமன்யர்களை அண்டவிடாது அகழி பாய்ச்சி வைத்திருக்கிறது.அந்த அகழியை தாண்டி வந்து ஜெயிக்கிறது சமீபத்திய புது வரவுகள், சுப்ரமணியபுரம், பருத்திவீரன், ரேணிகுண்டா,நாடோ டிகள்,பசங்க, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்கள்.இவையாவும் அதன் கதைகளால் அறியப்பட்ட படங்கள்.அவற்றில் மருந்துக்கும் நட்சத்திர அந்தஸ்து உள்ள எவரும் முன்னிறுத்தப்படவில்லை என்பது நம்பிக்கையளிக்கிற விஷயங்கள்.2009 ஆம் ஆண்டு வெளிவந்த 132 படங்களில் பெருவாரியான பரிசுகளை ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே தட்டிச்செல்லமுடியும் என்பது கொண்டாடப்படவேண்டிய அதே நேரம் வேதனைக்குறிய விஷயம். வலுவானதாக கதைகளைத் தேடுவதில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது.சினிமா உலகம் சற்று நிதானமாகச் சிந்திக்கவேண்டிய விஷயம் இது.


அகலிகைக்கு கிடைத்தது சாப விமோசனமில்லை.ஒரு அங்கீகாரம். அவள் கல்லிலிருந்து மனுஷியானாளோ இல்லையோ. கவனிக்கப்பட்டாள்.அதுதான் பசங்க பட நாயகன் சொன்னதுபோல ஒரு சின்ன அங்கீகாரத்துக்காக normal மனிதர்கள் ஏங்குகிற போது.மாற்றுத்திறனாளிகள் இன்னும் சற்று அதிகமாகவே ஏங்குவார்கள்.அவர்களை அங்கிக்கரிக்கிறபோது அரங்கில் ஒலித்த அபிநாயவின் அந்த உற்சாகக்குரல் கவனிக்கப்படாத எல்லோரிடத் திலிருந்தும் வெளியேறும்.நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயா பரிசு வாங்கிய தருணங்கள் ஒரு அழகிய திரைக்காவியத்தை நெருங்கும் நிகழ்வுகள்.நாம் அறியாமலே கண்கள் கலங்குகிறது.அந்த நிகழ்வில் கோபிநாத் நடந்துகொண்டதும் கவனிக்கத்தக்கதும், கதிர் சொன்னதுபோல கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

20.6.10

ராவணன்- கைதேர்ந்த வியாபாரிகளின் கடைச்சரக்கு.

பேருந்தில்,ரயிலில்,வங்கியில்,ரேசன் கடையில்,புண்ணியத்தலங்களில் இப்படி எங்கெங்கு போனாலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது.ஆனால் அந்த ராட்ஷச திரையரங்கில் சனிக்கிழமை மாலை மூன்று நூறு ஜனங்களே உட்கார்ந்திருப்பது விநோதமாக இருக்கிறது. எம்ஜியார் படம் பார்க்கப்போய் நெரிசலில் சிக்கி இறந்த வரலாறுகளும்,ஹவுஸ்புல் போர்டுகளும் ஒரு சஹாப்தமாக கடந்தே போய்விட்டது.சினிமாவைத் தியேட்டரில் பார்க்கிற மோகம் குறைந்துபோயே போய்விட்டது. இதோ வந்த முன்னூறுபேர்களிடம் ஒரு  இரண்டாயிரம் பேருக்கான தொகையை கட்டணமாகப் பிடுங்கிக்கொண்ட திருப்தியில் வெள்ளித்திரை ஒளிர்கிறது. கோவில்பட்டி போன்ற சிறிய நகரத்திலேயெ நூறு ரூபாய்க்கு நுழைவுச் சீட்டு விற்கமுடியுமானால் சென்னை போன்ற பெரு நகரங்களை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

இந்தக்கதையில் வரும் சம்பவங்களும்,பாத்திரங்களும் கற்பனையே.உயிரோடு இறக்கிற அல்லது இறந்துபோன யரையும் நினைவுபடுத்தினால் அது தற்செயலானதே. என்கிற அறிவிப்போடு தொடங்குகிறது கோடிக் கணக்கான பணத்தைக் காவு வாங்கிக்கொண்டு பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் முன்னே தள்ளிக்கொண்டு வந்த ராவணன். மனிரத்னம், சுகாசினி,விக்ரம் , ஏஆர்.ரஹ்மான், உமறுப்புலவர் போன்ற பெயர்களைத் தவிர ஏனையப் பெயர்களெல்லாம் ராமாயணம் சீரியலில் வருகிற பெயர்களாகவே வருகிறது.அந்த சீரியலைப்பார்க்காதவர்கள் இந்தப்படத்தை தைரியமாகப் பார்க்கலாம்.

கதை.
சாத்தூர் ஏவீஸ்கூலில் அண்ணாமல என்கிற ஒரு சயின்ஸ்வாத்தியார் இருந்தார்.'ராமம்பொண்டாட்டிய ராவணந்தூக்கிட்டுப் போனான்,ராமம்போய் சண்டபோட்டு கூட்டிட்டு வந்துட்டான் இது தாண்டா ராமாயணம், பாடத்தக்கவனி, அவகாற்றோவின் கற்பிதக்கொள்கையின்னா' என்று ஒருவரியில் கதையை முடித்துவிட்டு பாடத்தை துவங்கிவிடுவார்.அதே ராமாயாணம் தான் கதை.விபீடணன்,சூர்ப்பநகை,அனுமன்,ராமன்,சீதை எனும் புராணப்பாத்திரங்களை அப்படியே அட்சர சுத்தமாக இந்தப்படத்தில் eguate செய்துகொள்ளலாம். அதே நேரம் வீரப்பனின் சாயல் தெரிந்தாலும் அதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

முழுக்க வட இந்திய மலைமுகடுகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. ரவ்வும் பகலும் மழை பெய்துகொண்டே இருக்கிறது.'சோ' வெனப்பெய்யும் மழையில் நம்ம சீயான் படுத்து குறட்டை விட்டுத் தூங்குகிறார்,மழையிலே கிடாக்கறியும் மீனும் சமைக்கிறார்கள்,மழையிலே ஆடிப்பாடுகிறார்கள்.மணிரத்னம் படத்தில் எப்படியும் ஒரு மழைப்பாட்டு வந்துவிடும் ஆனால் இந்தப்படம் முழுக்க மழையிலேதான்.எங்கு பார்த்தாலும் பசிய காடுகள்,செழிக்கச் செழிக்கத் தண்ணீர் கிடக்கிறது.மலைவாசியா,ஒடுக்கப்பட்டவனா என்கிற அடையாளமில்லாத விக்ரம் அண்ட் கோ அரண்மனைகளிலும்,கோவில் முகடுகளிலும் விழாக்கொண்டாடுகிறது. கதைக்களம், மொழி,வட்டாரவழக்கு, பழக்க வழக்கங்கள் எல்லாமே குழறுபடிகளாகவே தொடர்கிறதால் நம்பகத் தன்மை கடுகளவும் இல்லாமல் பாண்டசித்தன்மையே மேலோங்குகிறது.

கதை ராமாயணத்திலிருந்து விலகி சீதையின் கற்பு குறித்த மறுவாசிப்புக்கு உட்படுத்துவதற்கு நெருங்கிப்போய் மீண்டும் கற்பே பிரதானம் என்கிற நீதியைத்தூக்கிப் பிடிக்கிறது.அதனாலேதான் இறுதிக்காட்சியில் திடீரென முளைக்கும் ப்ருதிவிராஜ் துள்ளத்துடிக்க விக்ரமைப்போட்டுத் தள்ளுகிறார்.  அதனாலேதான் ப்ரியாமணி கூட்டுக் கற்பழிப்பில் ப்ருதிவிராஜ் இருக்கிறாரா இல்லையா என்பதை மங்கலாக்கிவிட்டு விடுகிறார் டைரடக்கர்.விக்ரம் ஏன் பக் பக் பக், டண்டனக்க என்கிற வார்த்தைகளை மேனரிசமாக்குகிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை.

காமிரா,படத்தொகுப்பு,இசை இன்னபிறவெல்லாம் இருக்கிறதே அதைப்பத்தி ஏன் சொல்லவரவில்லை என்கிற கோபமும் கேள்வியும் வரலாம்.ஒரு நல்ல உயர் தொழில் நுட்ப காமிரா,பல ஆங்கிலப்படங்கள் பார்ப்பதற்கான கொடுப்பினை,துட்டத் தண்ணியாச் செலவழிக்க ஒரு தயாரிப்பாளர் கிடைத்தால் போதும் என்ன தப்பும் செய்யலாம்.  சரிசெய்வதற்கு இருக்கவே இருக்கிறார்கள் நம்ப CG டிபார்ட்மெண்ட் இளைஞர்கள்.அதைவைத்து என்னமாதிரியான பிரம்மாண்டங்களையும் உருவாக்கிவிடலாம்.அந்த பிரம்மாண்டம் கதையில்லாது போகுமானால் காமிக்ஸ் லெவலுக்கும் கீழே போய்விடும்.

உழைப்பும் முயற்சியும் இருக்கிறதே அது கண்ணுக்குத் தெரியவில்லையா என்கிற எதிர்விமர்சனம் வரும்.எங்கூர்ல,  அதான் சிவகாசியில, ஒரு பட்டாசுக்கம்பெனி முதலாளி இருந்தார்.அவர் சீசன் காலங்களில் 
விடிகாலையில் எழுந்து பைக்கை எடுத்துக்கொண்டு குற்றாலத்துக்குப் போய், குளித்துவிட்டு, அவர் கட்டிக்குளித்த ஈரிழைத்துண்டு காய்வதற்குள் சிவகாசி திரும்பிவிடுவாராம். ஒரு நாள் ரெண்டு நாளில்லை மூனு நாலு மாசத்துக்கு தினம்தினம் இதே சோலியாய் அலைவாராம். இதிலும் கூட அவரது அயராத உழைப்பு,திறமை,தியாகம் எல்லாம் அடங்கி இருக்கிறது.

உலகமே ஆஹா ஓஹோன்னு பாராட்டுது,எங்க பாத்தாலும் ராவணன் ராவணண் என்கிற பேச்சே அடிபடுகிறது. எல்லோரும் பாராட்டுகிற ஒரு படைப்பை எப்படிக்குத்தம் சொல்லலாம்.தயாரிப்பாளர் யார்.ரிலையன்ஸ் நிறுவணம், அனில் திருபாய் அம்பானி.துணியில் ஆரம்பித்து, ,அலைபேசி இப்படி நூற்றுக்கணக்கான பொருள்களை தனது வியாபார உத்தியால் விற்றுவிடுகிற அதே ரிலையன்ஸ்தான். குடும்பச்சண்டையை, பங்காளி சண்டையயே மூலதானமும் விளம்பரமும்,வியாபராமும் ஆக்கிய அதே ரிலையன்ஸ்தான். இந்திய மூளைகளில் ஆழப்பதிந்து கிடக்கிற ராமாயணத்தை விற்கவந்திருக்கிறது,அதுவும் பாப்புலர் மீடியா மூலம்.ராமாயணம் நெடுந்தொடராய் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த எண்பதுகளில், ஒரு ஞயிற்றுக்கிழமை, மின்தடையினால் ஒளிபரப்பமுடியாமல்
போனது. ஆத்திரமடைந்த பக்தர்கள் ஒளிபரப்பு நிலையத்தையும்,மின்வாரிய அலுவலகத்தையும் உடைத்த பெருமையுடைத்து இந்திய பாரம்பரியம். ஆந்திரா,உபி,மபி,ராஜஸ்தான்,மராட்டா மாநிலங்களில் தொழிற்சங்க மாநாடுகளில் கூட ராமர் படத்தை வைத்து பூஜை நடத்திய பிறகே மாநாடுகள் துவங்கும் தொண்மம் ஒட்டிக்கிடக்கும் இந்தியாவில்,இது இந்த ஏக போகம் சாத்தியமே.

இந்த அருதப்பழய்ய கதைக்கு 120 கோடி ரூபாய் செலவாம்.மீண்டும் சிவகாசி தான்.அங்கே இரண்டு முதலாளிகளுக்குள் போட்டி வந்ததாம். நீ பெரியவனா நான் பெரியவனா போட்டி.'ஓந்துட்டுக்கும் ஏந்துட்டுக்கும் ஜோடி போட்டுக் கிடுவமா ஜோடி'  என்றபோட்டி.ஆளுக்கு கால்கிலோ அரிசி கொடுத்து ஆக்கச் சொன்னார்களாம் யார் சீக்கிரம் ஆக்குகிறார்களோ அவரே பெரிய பணக்காரர். ஒரே ஒரு நிபந்தனை அடுப்பெரிக்க ரூபாய் நோட்டை மட்டும்தான் உபயோகிக்க வேண்டும்'.இதை நாம் எந்த வகையில் சேர்ப்பது சமையல் வகையிலா,போட்டி வகையிலா, பொழுதுபோக்கு வகையிலா.அரசாங்கத்தை ஏமாற்றி, தொழிலாளர் வயிற்றிலடித்து, நுகர்வோரை மொட்டையடித்துச் சேமித்து வைத்த கொழுப்புக்கும் திமிருக்கும் உரசிப்பார்க்கிற இடமாக இப்போது  சினிமா கிடைத்திருக்கிறது.

மணிரத்னத்துக்கு கதைப்பஞ்சம் வந்துவிட்டது என்பதெல்லாம் நமது ஆதங்கம். அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் கலையா, வியாபாரமா என்கிற கேள்வியில்  கண்ணை மூடிக்கொண்டு வியாபாரப் பக்கம் நிற்கும் யாரிடமும், நாம் இப்படி கதையை எதிர்பார்ப்பது தவறு.,ஏமாற்றம் தான் மிஞ்சும்.எனக்கு பலகாலமக ஒரு தீராத சந்தேகம் இருந்தது. தமிழ் ஹீரோ,ஹிந்தி ஹீரோயின், ஹிந்தி வில்லன் இந்தக் காம்பினேசனில் மட்டுமே படமெடுக்கிறாரே வித்தக்காரன் மணிரத்னம் என்று.அது மார்க்கெட்டிங் உத்தியென்பது ரொம்ப லேட்டாகத்தெரிந்து கொண்டேன்.ரேணிகுண்டா படத்தை ஒரு பத்துதரம் பார்க்கவேண்டுமென்கிற இம்போசிசன் குடுக்கனும்.

கடைசியில் நடிப்பைப்பற்றி ஒன்று சொல்லவேண்டும்.நாற்பது ஐம்பது படம் நடித்தால் எல்லாரும் கைதேர்ந்த நடிகராகிவிடலாம். பயிற்சிதானே ?.ஆனால் ஓயாத மழையிலும்,பனியிலும்,ஆத்துக்குள்ளும்,கரண்டே இல்லாத அந்த பிராந்தியத்திலும் ஐஸ்வர்யா ராயின் உதட்டுச்சாயம் குறையாமல் பார்த்துக் கொண்ட அவரது சொந்த நடிப்புத்திறனையும்,டெக்னீசியன்களின் ஒத்துழைப் பையும்  என்ன பாராட்டினாலும் தகும்.

ராமாயணத்து ஒளிவட்டமும்,மணிரத்னத்தின் ஒளிவட்டமும் குறையக்கூடாது என்று நினைக்கிற எல்லோருக்கும் பிடித்தமான வியாபாரப்படைப்பு இது.