நிற்ககக்கூட இடமில்லமல் இருந்த பேருந்துகளில் கூட்டம் குறைந்து கொண்டிருக்க,புகைவண்டிகளில் கூட்டம் அலைமோதுகிறது. எல்லாமே அம்மாவின் கைங்கர்யம்.ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் பணிநிமித்தம் போக நேர்ந்தது.பேருந்தில் 32 ரூபாய் புகைவண்டியில் 9 ரூபாய். ரயிலும் அரசாங்கத்துக்குச் சொந்தமானதுதான். கூட்டம் ஏன் அலைமோதாது. இதையும் வைகோ கவனித்தாரானால் ஐந்துவருடத்திற்குள்ளேயே பலன் கிடைக்கலாம்.
இறங்குகிறவர்களும் ஏறுகிரவர்களும் அந்த மூன்றடி வாசலுக்குள்ளேய மோதிக்கொண்டார்கள்.ஒருவழியாக உள்ளே நுழைந்தால் இரண்டு எதிர் எதிர் இருக்கைகளை வெறும் நான்கு ஆக்ரமித்துக் கொண்டிருந்தார்கள். பழங் காலத்துஎம்ஜியார் படத்தில் இப்படித்தான் எம் ஆர் ராதா படுத்துக்கொண்டு அழிச்சாட்டியம் பண்ணுவார்.அது அறுபதுகளில் தமிழனின் மனோபாவத்தை கிண்டலடித்தகாட்சி.ஐம்பது வருடங்கள் தாண்டியும் இதில் துளிக்கூட மாற்றமில்லை.
கணவன், மனைவி,இரண்டு குழந்தைகள்.மனைவி கனணவன் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள். குழந்தை களை அதட்டிப் படுக்க வைத்திருந்தான். ஏறிய பயணிகள் எந்திரிக்கச் சொன்னார்கள்.மனைவிக்கு உடம்புக்கு முடியவில்லை என்று பொய் சொன்னான்.குழந்தைகளை ’கொண்டே போடுவேன் க்காலி படுத்துக்கோ எந்திரிக் காத என்று மிரட்டினான். பேச்சுவழக்கு அவனை மதுரைக்காரன் என்று நிரூபித்தது. பயணிகள் அவனோடு சண்டைபோட்டாகள். இவன் நா மதுரக்காரெய்ங்க தெரியுமில்ல என்றான்.அவன் கருப்புக்கலர் வேஷ்டி உடுத்தி யிருந்தான். அவர்கள் நாங்க ராமநாதபுத்துக்கரங்க தெரிஞ்சுக்கோ என்றார்கள் அதில் ரெண்டுபேர் காவிக்க்கலர் வேஷ்டியுடுத்தியிருந்தார்கள். இந்தக்களேபரத்தில் குழந்தை அழுதது.சண்டை போடுவதை கைவிட்டுவிட்டு. இருக்கிற கொஞ்ச இடத்தைப் பகிர்ந்து கொண்டு உட்கார்ந்து அவர்களுக்குள் பேச ஆரம்பித் தார்கள்.சுகமில்லை என்று சொன்ன மனைவி எழுந்து ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம் பித்தாள். பிறகு குழந்தைகளும் எழுந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது. அந்த இடத்தின் கலவரச் சூழல் குறைய்ய ஆரம்பித்தது.
இரண்டு குழந்தைகளில் ஒன்றுக்கு இரண்டுவயது இருக்கும்.அது மெல்ல மெல்ல எல்லோரது மடிக்கும் தாவி அவர்களது சாப்பாட்டுப் பையை நோண்டியது.அவர்களின் சட்டைப்பயை துழாவியது, முகத்தை வருடியது. அவர்களும் நடந்த சண்டைக்கும் அந்தக்குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பதை தூக்கி வைத்துக் கொஞ்சுவதில் காட்டினார்கள். மதுரைக்கார வீரன்,அந்தக்குழந்தையுடைய அப்பனின் முகத்தைப்பார்த்தேன் தலைகுப்பறக் கவிழ்ந்திருந்தது.