நான்கு நாட்கள் கிராமத்தில் கிடந்தேன்.விளைந்து மூன்று வருடங்களான வயல்வெளிகளினூடே நடந்து கண்மாய்க்கரைக்கு போனோம்.
அங்கே குழுமிக்கிடக்கும் புளியமரத்தடியில் உட்கார்ந்து அசைபோட்டோம்.தழும்பிக்கிடக்கும் கிணற்று நீரில் குதித்தோம் நேரம் போவது தெரியாமல் தவளைகளோடு நீருக்குள் கிடந்தோம்.ஷாம்பு, சோப்பு வகையறாக்கள் இல்லாத சிரிப்பும் கும்மாளமும் நீச்சலும் பாட்டுமான ஒரு குளியல் கிடைத்தது.
கருப்புநிலாக்கதைகளில் வரும் ஆனியன் தோசையைச் சிலாகித்துவிட்டு எட்டாவது குழந்தை பிறந்தபோது தன் மனைவிக்கு கருத்தடை செய்துகொண்ட பிச்சைக்கனியின் கதையை ஊர் சொல்ல இடி இடி எனச்சிரித்துக்கிடந்தோம்.உலகப்புரட்சிக்காரன் சேகுவேராவைப்பற்றி சொல்லச்சொல்ல முதியவர்களோடு இளைஞர்களும் நெருங்கி வந்து கதை கேட்டார்கள்.
காலையில் கறிவதக்கி இறக்கியதும் மாதவராஜ் தம்பியும் போட்டோக்கட கார்த்தியும் வருவாங்களாய்யா என்று அம்மா கேட்டார்கள். உட்காரக்கூட இடமில்லாத அந்த ஓட்டுவீட்டில் நண்பர்களோடு உட்கார்ந்து சாப்பிட்ட சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.கூடவே தளுத்தளுக்கும் குரலில் அம்மாவும் அவளும் குட்டியின் நினைவுகளைச் சொன்னார்கள்.இரவு சந்தோஷம் பொங்கும் வார்த்தைகளோடும் சந்தோஷக்குப்பியோடும் அன்புத்தம்பி பாலு வந்தான்.ஊர்தாண்டி இருக்கும் பம்புசெட்டு வாய்காலைல் உட்கார்ந்து பேசினோம்.
சாப்பாடு செமிக்க வெத்திலை போட்டுக்கொண்டிருக்கும்போது சாமியாடிக் கருப்பசாமிச் சின்னையா வந்து எங்களோடு உட்கார்ந்து தமிழகத் தேர்தலையும் அரசியலையும் பேசினார்.கடவுளின் தூதுவரோடு கருத்து யுத்தம் நடத்தினோம்.அவரும் கூட அன்னா ஹசாரேயைப்பற்றி புகழ்ந்து பேசினார்.இது அவருக்கிருக்கிற இன்னொரு நம்பிக்கை.வெப்பங்குச்சிகள் எரியும் அக்கினிச்சட்டியோடும்,மேளக்காரர்களின் வியர்வையோடும் வெறியேற்றுகிற டண்டனக்கா உருமியோடும் சாயங்காலம் நாக்கில் சூலாயுதம் குத்தி சாமியாடினர்.கழுத்து முங்கக்கிடக்கும் ஊர்மாலைகளோடு நாங்களும் மாலைபோட்டோம்.
பார்க்கிற இடமெல்லாம் பான் பராக் தாள்களும், உடைந்த டாஸ்மாக் குப்பிகளும் கிடந்தன.தினம் முன்று நான்கு சண்டைகள் கூட நடந்தது.நூறு ரூபாய்க்கு ரம்மிச்சீட்டு விளையாண்டார்கள். இவைகளுக்குள்ளேதான் அவர்களின் கொண்டாட்டமும், அன்பும், விருந் தோம்பலும் கிடந்தது.
பாளையங் கோட்டையிலிருந்து கரகாட்டக் கோஷ்டி வந்திருந்தது இரவு முழுக்க சினிமாப்பாட்டும் ரெட்டை அர்த்த வசனங்களுமாக கேட்டுக்கொண்டே இருந்தது.விடிந்த பிறகு முதல் பேருந்துக்காகக் காத்திருந்த கரகாட்டக் கோஷ்டியில் அந்த இரண்டு பெண்கள் இருந்தார்கள். கொண்டு வந்திருந்த சூட்கேஸ் மேல் சுருண்டு படுத்துக்கிடந்த அவர்கள் மேல் இரவு முழுக்க எரிந்த காமப்பார்வைகள் கூட சுருண்டு கிடந்தது.ரெண்டு மணிநேரம் மூன்று மணிநேரம் ஆடிவிட்டு முடித்துக்கொள்ளலாமே எதுக்கு விடியவிடிய ஒடம்ப வருத்தனும் என்று கேட்டேன்.விடிய விடிய ஆடுவது சம்பளத்துக்காக மட்டுமில்லை கூட்டிக்கொண்டு வந்த பொம்பளப்பிள்ளைகளின் பாதுகாப்புக் காகவும் தான் என்று சொன்னார். அப்போது குட்டைப்பாவாடைக்கும் ஜிகினா ரவிக்கைக்கும் இடையில் தெரியும் அவள் பசித்த வயிறு நினைவுக்கு வந்தது.
ஊரை விட்டுக்கிளம்பும்போது சித்திகள், சித்தி பிள்ளைகள், பங்காளிகள், பெருசுகள் என அன்பும் பாசமுமாக சூழ்ந்து கிடந்தேன்.எல்லோரும் கொடிஎறக்குனாப்பெறகு போகலாமுல்ல எனச்சொல்லிக்கொண்டே வழியனுப்பினார்கள்.ஊருக்கு மேற்கே மஞ்சநீராட்டுக்கு அடிக்கிற மேளம் மெல்ல மெல்ல குறைந்துகொண்டே இருக்க வாகன இறைச்சல் அதிகரிக்க ஆரம்பித்தது.