
இரண்டு நாட்களாக இந்தப்பாடல் வந்து வந்து அலைக்கழிக்கிறது. சத்தமில்லாமல் வந்து உயிரைக் கவ்வும் ஒரு பார்வைபோல. அதிகாலை நேரத்து குளிர் நிசப்தத்தில் தூரத்து மரத்திலிருந்து எறியப்படும் குயிலின் ஒற்றை குரல்போல. ஒரு பசிய மாலையில்தன்னந்தனியே நடக்கையில் கூடவரும் ஒற்றையடிப் பாதைபோல. ஆளில்லா வீட்டில் நினவுகளைத் திறந்து உள் நுழையும் காற்றைப்போல. சந்தடி மிகுந்த நகர நெரிசலில்கண்தெரியாத இசைக் கலைஞனின்புல்லாங்குழலில் இருந்து கசியும் மனதுக்குப் பிடித்த திரைப்படப் பாடல் மெட்டைப் போல. ஒரு சமீபத்து பாடல். அது ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், வாரணம் ஆயிரம் திரைப்படப்பாடல். ''அனல் மேலே பனித்துளி:"...ஒரு அமைதிப் படையல். சுதா ரகுநாதனின் குரலில். அம்மாவும் நீயேஅப்பாவும் நீயே, கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே, காற்றினிலே வரும் கீதம், மாலையில் யாரோமனதோடு பேச, இயற்கையெனும் இளைய கன்னி, நிலவு தூங்கும் நேரம், .......................................................................இதே போல ஆயிரம் பாடல்கள் வந்து பொக்கிஷமாகக் கிடக்கும் இசைப்பரப்பில் இன்னொன்று. "சந்திப்போமா கனாக்களில் சில முறையா பல முறையா, அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா"என்று இனிப்பா கேள்விகளை மீட்டிக்கொண்டே நினவுகளைக் கிளறுகிறது. புற உலகின் தாக்குதலில் இருந்து தப்பிக்கக் கிடக்கும் நினைவுகளின் பதுங்குகுழி இப்படியான இசை. |