Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

6.9.15

நான்கு நூற்றாண்டுகள் பின்தங்கியிருக்கிறோம்


பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கிறது சூரியன் ஒரே இடத்தில் இருக்கிறது என்று கண்டுபிடித்துச்சொன்னார் கலிலியோ. பூமிதட்டையானது என பைபிளில் சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை இந்த கண்டுபிடிப்பு சிதைப்பதால் மத நம்பிக்கைக்கு எதிரானது இந்த கண்டுபிடிப்பு என்று பிரகடனப்படுத்தியது கத்தோலிக்கசபை.  திருச்சபையின் உயர்மட்டக்குழு கலிலியோவை ரோமுக்கு அழைத்தது. போப் உள்ளிட்ட மதகுருமார்களுக்கு தனது கண்டுபிடிப்பை விளக்கிக் கூற வாய்ப்பளித்து நீதிசெய்தது நானூறு ஆண்டு களுக்கு முந்தைய மூடநம்பிக்கை.  கத்தோலிக்க கார்டினல்களில் பலபேர் கலிலியோவின் அபிமானிகளாய் இருந்த காரணத்தால் அவரது வாதம் பின்னாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்து மதத்தின் முடைநாற்றமெடுக்கும் மூடநம்பிக்கைகளை,ஜாதீயக்கட்டுமானங்களை எதிர்த்துக்கிளம்பிய இயக்கங்கள் ஏராளம், அதற்கு ஆணீவேராய் இருந்தது புத்தமதகொள்கைகள்.ஜைனம்,வீரசைவம்,சமணம்,சீக்கியம்,சூவ்பித்ததுவம்,ஆகிய இந்திய புராட்டஸ்டண்டுகள் உருவாவதற்குக் காரணமாக இருந்ததும் புத்தமதம். படையெடுத்துக் கைப்பற்றியதை விட அசோகன் புத்த மதத்தை போதித்துச் சம்பாதித்து அதிகம்.அதனால்தான் கிட்டத்தட்ட 28 முறை போதிமரம் வெட்டப்பட்டது.நாலந்தா பல்கலைக்கழகம் தரைமட்டமாக் கப்பட்டது, நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அதனால் தான் இன்றுவரை ஒருகுண்டூசியைக் கூட சொந்தமாக கண்டுபிக்க இயலாத கபோதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதோ இந்த 2105 ஆம் ஆண்டில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை எழுதியதால் கல்புர்கி கொல்லப்பட்டிருக்கிறார். ஷீனா போராவுக்கு கொடுக்கப்படுகிற ஊடக முக்யத்துவம்,சாக்‌ஷி மகராஜின் மேல் விழுகிற ஊடகவெளிச்சம் இந்த அறிவுப்படுகொலை யின்மேல் விழமறுத்துவிட்டது. மேலை தேசத்தில் போட்டி விளம்பரத்துக்காகவேணும் இவ்வாறான செய்திகள் எதிர்முகாம்களால் பெரிதுபடுத்தப்படும். அந்தோ இங்கு எல்லோரும் தங்களைத்தற்குறியாக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள். அதானல் தான் எல்லா ஊடகங்களும் இதை ஒருவரிச்செய்தியாக்கிக் கடந்துபோய்விட்டன. விலங்குகளுக்கு, பறவைகளுக்கு,சிலைகளுக்கு, மூடநம்பிக்கைகளுக்கு,களவாணிகளுக்கு,கொள்ளையடிப்பவனுக்கு,போலிச்சாமியார்களுக்கு இந்ததேசத்தில் இருக்கிற பாதுகாப்பில் 10 ஒரு பங்கு கூட அறிஞர்களுக்கு இங்கே கிடையாது. அதுவே தீராத சாபம்.

14.4.12

சவ்தாக்குளத்தில் கெட்டிதட்டிப்போன சாக்கடை கலந்து கிடக்கிறது.


காற்றும் நீரும் வானும் நிலவும் பொதுவிலிருக்குது,
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது.

இப்படி ஒரு திரைப்படக்கவிஞன் பாடிவிட்டுப்போனான்.காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே என இன்னொரு திரைப்பாடலும் உண்டு. ஆனால்,கிழக்குப்பக்கத்தில் மட்டுமே தெரு வைத்துக்கொள்வதற்கு அனுமதிக் கப்பட்டார்கள் ஒரு பிரிவினர். காற்றுக்கூட அவர்களை முதலில் தீண்டக் கூடாது எனும் கற்பிதம் ஒளிந்திருக்கும் நடைமுறை அது. ஆறுகள் எல்லாமே கிழக்கு பக்கம் பாய்வதால் முதலில் குளிப்பவன் நானாக மட்டுமே இருக்க வேண்டும் எனும் பெரிய்ய மனசும் கூட இதற்குக் காரணமானது. இதை நீங்கள் india untouched என்கிற ஆவணப் படத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். 

நீர் நிலைகளில் ஆடுமாடுகள் அனுமதிக்கப்பட்ட போதும் ஒருசரார் கடுமையாகத்தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.  சமீப காலம் வரை, அதாவது இருபதாம் நூற்றாண்டின் பாதிவரையில் குற்றாலத்தில் குளிக்க,பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் அனுமதிக்கப்படவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சி தரும் வரலாற்றுச் சேதி.உலகஅதிசயங் களில் ஒன்றாக அறிவிக்கக் கோரி மின்னணு வாக்கு கோரப்பட்ட நமது பெருமை மிகு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழத்தப்பட்டவர்கள் மட்டுமல்ல பிற்படுத்தப் பட்டவர்களும் அனுமதிக்கப் படவில்லை. நுழைய முயன்ற மூக்க நாடார் நான்மாடக்கூடலின் ஒரு வாயிலில் வைத்துக் கழுத்தறுக்கப்பட்டார். எனவே புதிதாகப் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசு ஒரு முடிவெடுத்தது. சமுதாயக் கிணறுகள் என்கிற ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி நீர் நிலைகளை உருவாக்கிக் கொடுத்தது. இதையும் அம்பேத்கர்,பெரியார்  உட்பட பல சாதிமறுப்பாளர்கள் எதிர்த்தார்கள்.அதையும் மீறி சட்டம் செயல்பட்டது. தாழ்த்தப்பட்ட வர்களுக்கென்று ஏற்படுத் தப்பட்ட தனி நீர்நிலைகளில் இரவோடு இரவாக மனிதக் கழிவுகளை அள்ளிப்போட்ட சம்பவங்கள் நடந்தது. 

2006 ஆம் ஆண்டு பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தலில்போது ஆவணப்பட படப்பிடிப்புக்காகப் போயிருந்தோம். பேருந்துநிலையத்தில் கீழே கிடந்த ஒரு பெரிய கல்லில் இருந்து இரண்டடித்தூரம் ஒதுங்கியே நின்றதொரு கூட்டம். விசாரித்தபோது தாழ்த்தப்பட்டவர்கள் அந்தக்கல்லில் உட்கார்வது அங்கிருக் கிற கள்ளர்களின் பெருமைக்கு இழுக்கு என்ற எழுதப்படாத சட்டம் இருக் கிறது.  உத்தப்புரத்தில் இன்னும் கூட ஒரு பயணிகள் நிழற்குடை அமைக்க முடியாமல் சாதிய ஆதிக்கத்தின் கீழ் மண்டியிட்டுக் கிடக்கிறது ஜனநாயகம். கிராமங்களில் கட்டப்படும் பெரும்பாலான நிழற்குடைகள் இரவோடு இரவா கச்  சிதிலமடைந்து போவதற்கு ’கீழத்தெரு பயலுகள்ளாம் நமக்குச் சமதையா உக்காரவா’ என்கிற ஆதிக்க மனோபாவம் தவிர வேறுகாரணங்கள் இருக் கவே முடியாது. இதியத் தொண்மங்களில் மறைந்தும் புதைந்தும் கிடக்கும் அதிர்ச்சியும் அதிலிருந்து மீண்டெழுந்த ஆச்சரியமும் சொல்லப்படாத வரலாறுகளாகும்.

அப்படியொரு பிரபலமான இடம் மராட்டிய மாநிலத்தின் மஹத் எனும் நகரில் உள்ள சவ்தார் குளம். அது நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியமும் சுற்றுலா ஈர்ப்பும் கொண்ட நீர்நிலை. நீண்ட நெடுங்காலமாக தாழ்த்தப்பட்ட வர்கள் அதை நெருங்க அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து ஒரு மாபெரும் போராட்டத்தை ஒருங்கி ணைத்தார் அம்பேத்கர். 1927 ஆம் ஆண்டு மார்ச் மதம் 20 ஆம் தேதி சுமார் பத்தாயிரம் தாழ்த்தப்பட்டவர்களைத் திரட்டி ஊர்வலமாக அழைத்துப்போனார். ஊர்வலத்துக்கு தடைகோரி நீதிமன்றத்தை நாடினார்கள், ஊர்வலத்தை குலைக்க மறைந்திருந்து கல்லெறிந்தார்கள், பின்னர் நேரடி யாகத் தாக்கினார்கள். என்றாலும் எதிர்த்தாக்குதல் ஏதும் இல்லாத சத்தியாக் கிரஹமாக முடிந்தது அந்தப்போராட்டம். சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்த காலத்தில் நடந்ததால் இரு கோடுகள் தத்துவத்தின் சிறு கோடாய்க் காணாமல் போனது சவ்தார் ஏரிச்சம்பவம் .

இதையெல்லாம் இந்தக் கனிணி யுகத்தில் மீளப்பேசி முகஞ்சுழிக்க வைக்க வேண்டுமா எனும் கேள்வியும் வரும். நகரங்களில்  இருந்து கொஞ்சம் ஒதுங்கி விட்ட இது, இந்த சதுக்க பூதம் இன்னும் கிராமங்களில் புதுக்கருக்கு மாறாமல் வாழ்கிறது என்பதை வெகுமக்களோடு படித்தவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும். இருநூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்கள் இருக்கும் மாவட்டத்தில் இரண்டே இரண்டு ஊர்களில் மட்டுமே பொதுமயானம் இருக்கிறது என்று சென்ற ஆண்டு பணிநிறைவு பெற்ற ஒரு கிராம நிர்வாக அலுவலர் சொன்னார்.

முன்னமிருந்த அடக்குமுறைகள் அளவு இப்போதில்லை என்பதை ஏற்றுக் கொள்ள ஆங்காங்கே ஆதரவுக்கரங்கள் நீளுகின்றது. ஆனாலும் நாளுக்கு நாள் நடைபெறும் திண்ணியங்கள், மேலவளவுகள், கயர்லாஞ்சிகள், சென்ன கரம் பட்டிகள், இருஞ்சிறைகள்,பரமக்குடிகள் ஆதிக்கத்தின் இருப்பைச்  சொல் லுவதற்கு கொத்துக்கொத்தாய் உயிர்ப்பலி கோருகிறது.சாண்ஏறுகிற சதீய வழுக்குமரத்தில் கிலோமீட்டர்க் கணக்கில் பின்னுக்குப்போக வேண்டியிருக் கிறது. அந்த நேரமெல்லாம் அம்பேத்கர் வந்து நின்று என் மக்களை இன்னும் அதே நிலையில் விட்டுப் போகிறேனே என்று சொல்லிய இறுதி வார்த்தைகள்  திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஆகவே அவரது  தேவை இன்னும்  அதிகரிக்கிறது. அவரது செயல்பாட்டாலும் சிந்தனைகளாலும்,தியாகத்தாலும் கிடைத்த புரட்சியாளர் பட்டம் இன்னும் தீராத வன்கொடுமைகளின் பொருட்டு மேலும் மேலும் மதிப்பு மிக்கதாகிக் கொண்டிருக்கிறது.

25.3.12

இந்த அரை நூற்றாண்டின் ஆகச்சிறந்த போராட்டம்-கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம்

கூடங்குளம் அனு உலை ஆபத்தானதா இல்லை பாதுகாப்பானதா என்கிற கேள்வி பதில்கள் இன்னும் பொதுமக்களைச் சென்றடையவில்லை.தேர்தல் நேரத்தில் 2ஜி அலைக்கற்றையில் திமுகவின் பங்கு பற்றி  ஏற்படுத்தப் பட்ட பரப்புரை போல கூடங்குளம் குறித்த கேள்விகளை ஊடகங்கள் மக்களிடம் எழுப்பத்தவறி விட்டது.  எனவே நடந்து கொண்டிருக்கும் வரலாறு காணாத மின்வெட்டுக்கு காரணம் கூடங்குளம் அணு உலை  திறக்கப் படாதது தான் என்கிற மூட நம்பிக்கைக்கு மக்கள் நேரடியாகத் தள்ளப்பட்டு விட்டார்கள். சிறப்பு பொருளாதார மண்டலங் கள், அந்நியநாட்டு ஆலைகள்,கணினி வழியே நெல்,சோளம், கம்பு,பருப்பு விளைவிக்கும் ஐடி  நிறுவணங்கள் ஆகிவற்றுக்கு அள்ளிக் கொட்டப்படும் மின்சாரம் குறித்து ஒரு நடுநிலை நாளேடும் வாய்திறப்பதில்லை. அவர் கள் டேக்காக் கொடுக்கும் மின்கட்டணப் பாக்கித்தொகை பற்றியும், அதற்கான மொத்த சைபர்கள் என்பதை வெளியே தெரியவிடாமல் லாவகமாகப் பாதுகாத்துக் கொள்வதும் நம்மூர் ஊடகங்கள்தான்.

இந்தியாவில் உள்ள அத்தனை டெல்டாப் பகுதிகளிலும் பெட்ரோலியம், மற்றும் எரிவாயுக்களுக்கு தேவையான கனிமவளங்கள் இருந்தாலும் அவற்றை உபயோகப் படுத்துகிற முனைப்பை அரசுகள் மேற்கொள்ளு வதில்லை. மின்சாரம்  தயாரிக்க வெறும் அனு உலைகளை மட்டுமே நம்பியிருக்க தேவையில்லை அதுதவிர்த்த அநேக வழிமுறைகள்  இங்கே மலிந்து கிடக்கின்றன. காற்று, கடல்அலை, சூரியவெப்பம், அனல், புனல் எனத்தொடங்கி குப்பைகளில் இருந்தும்,சாணங்களில் இருந்தும் மின்சாரம் தயாரிக்க முடியும். தென் மாவட்டங்களின் பெரும் பகுதி காடுகளை அடைத் துக் கொண்டிருக்கும் வேலிகாத்தான் முட்செடிகளை எரித்து மின்சாரம் தயாரித்தால் மொத்த தமிழகத்துக்கும் மின்சாரம் கொடுக்கலாம். இப்படி யிருக்க  ன் அனு உலையால் மட்டுமே மின்சாரம் எடுப்பேன் என்று தலைகீழாக நிற்கிறது அரசு.

வெளிநாடுகள் வேண்டாமென்று கழித்துக் கொட்டுகிற எல்லாக் குப்பைகளும் இந்தியாவுக்குள் தங்கு தடையின்றி வந்துகொண்டிருக்கிறது. சீனா ஒரு பத்து வருடங்களுக்கு முன்னாடியே மரங்களை அழித்து  தீக்குச்சிகள்   தயாரிக்கும் முறையைத் தடை செய்து விட்டது. எனவே அங்கே உபயோகமற்றுக் கிடக் கும் தானியங்கி தீப்பெட்டி எந்திரங்களை போட்டி போட்டுக்கொண்டு இறக் குமதி செய்கிறார்கள் சிவகாசியைச் சுற்றியிருக்கும் தீப்பெட்டி உற்பத்தி யாளர்கள்.  காயலான் கடை விலையிலான அந்த எந்திரங்கள் மூன்று நான்குகட்ட  கமிஷன்களோடு பெருமையாய் வந்து இறங்குகிறது. அதே அணுகு முறையைத்தான் அனுஉலை மற்றுமல்ல எல்லா  விவகாரத் திலும் இந்தியா பின்பற்றுகிறது.

இந்த தேசத்தில் அறுபது சதமான மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வறுமையின் மீது நோயையும் ஏவிவிடும் அணுக்கதிர்கள் குறித்த பயம்,போபாலில் நடந்த  கசிவைப் போல இன்னொரு முறை நடந்துவிடக் கூடாது என்கிற பயம். எல்லாம்  நியாயமானது. ஆகை யால்  இவ்வளவு காலம் நடக்கும் போராட்டங்களை நியாயமாக அணுகுவது மட்டுமே மக்கள் நல அரசாக இருக்க முடியும். ஒரு கார் தொழிற்சாலை வேண்டாமென்று  நந்திக்கிராமத்தில் நடந்த போராட்டத்தை அந்த அரசு மதித்து  பின்வாங்கவில் லையா?. அதைவிட்டு விட்டு போராட்டங்களைக் கொச்சைப்படுத்த அந்நிய நாட்டுத்தொடர்பு என்கிற பெரிய்ய கண்டுபிடிப்பைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. அதே அரசுதான் அந்நிய நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 2 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது.

இப்போது அதற்கு ஒருபடிமேலே போய் ரவுடிகளை ஏவிவிட்டு ஜனநாயக ரீதியான பொதுக்கூட்டங்களில் ரகளை யைத் தூண்டிவிடுகிறது இந்த அமைப்பு. நேற்று ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் புகுந்து அடிதடியில் ஈடுபட்டிருக்கிறார் கள்.ஒரு நியாயமான போராட்டத்தைக் கொச்சை  படுத்த தரங்கெட்ட வகை யில் இறங்குகிற நடவடிக்கைகள் இந்தியாவில் மட்டுமே நிகழும். கீரைக் கடைக்கு எதிர்க் கடைமாதிரி உண்ணாவிரதத்துக்கு எதிராக உண்ணும் விரதம் இருக்கிற விநோதம் வேறெங்கும் கேள்விப்படாத ஒன்று. அதே போலப் போராட்டக்காரர்கள் கையிலெடுக்காத வன்முறையை ஆதரவாளர்கள் எடுத்திருக்கிறார் கள் என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். இதே போலத்தான் ஐவர் என்கவுண்டர் கொலைகளை விசாரிக்கச் சென்ற உண்மை அறியும் குழுவுக்கும் நிகழ்ந்தது.

ஆனால் ஒரு  அற்புதமான போராட்டஉணர்வை  அறிமுகப் படுத்திய அனு உலை எதிர்ப்பாளர்கள் இந்த மாநில அரசை நம்பிக்கொண்டிருப்பது தான் கூடுதல் வேதனை.

04.03.2012

31.10.11

ஏழாவது அறிவு கொண்ட இந்தியாவில்....


இந்தியா ஒரு துணைக்கண்டம்.இந்தியா ஒரு தீபகற்பம்.இந்தியாவில் கற்கால மனிதர் தொடங்கி கணினி யுக மனிதர் வரையான எல்லா (specimen)அடையாளங் களையும் எச்சங்களையும் நாம் காணலாம்.

நமக்கு 2500க்கும்மேற்பட்ட வருட வரலாறு இருக்கிறது.முப்பெரும்கடல் ஐம்பெரும் காப்பியம் கிடக்கிறது. 4546 ஜாதிகளுக்குமேல் பல்கிப்பெருகிக் கிடக்கிறது. முப்பத்துமுக்கோடி தேவர்கள் ( இது ஜாதியில்லை)  உருவாகி அருள்பாலித்துக் கிடக்கிறார்கள்.

ஆனால் ஆயிரம் ஆயிரம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் இந்தியாவுக்கென்ன பங்கு இருக்கிறது ?.

பேருந்தைப் பார்க்காமல்செத்துப் போனவர்கள் உண்டு, ரயிலில் ஏறாமல் வம்சம் தொலைத்தவர்கள் உண்டு,ரேடியோ வாங்காமல் ஏங்கிச் செத்த வர்கள், தொலைக்காட்சி வாங்கமுடியாதவர்கள் இங்குண்டு ஆனால் அவற்றை யெல்லாம் சரிக்கட்ட வந்ததுதான் இந்த செல்போன் என்கிற அலை பேசி.

அதன் சுருக் கவரலாறு பார்ப்போமா ?

1910 ஆம் ஆண்டு லார்ஸ் மாக்னஸ் எரிக்சன் தனது காரில் ஒரு தொலை பேசியை பொருத்துகிறார். போகிற வழியில் எங்காவது தந்திக் கம்பி தென் பட்டால் தனது காரில் இருக்கும் தொலைபேசியை கொக்கிபோட்டு இணைத் துக் கொண்டு தொடர்பு கொள்வாராம். நம்ம ஊர்கள்ல கலியானம் சடங்குக்கு கொக்கிபோட்டு கரண்டு சுடுவம்ல அத மாதிரித்தான். ஆனால் அவர் அதை முறைப்படி அரசாங்கத்தில் பதிவு செய்து முன் அனுமதி   வாங்கிக் கொண்டார்.

பெர்லின் முதல் ஹம்பர்க் வரை ஓடிய புகைவண்டியின் முதல்வகுப்புப் பெட்டியில் தந்தியில்லாத் தொலைபேசி வசதி உருவாக்கப்பட்டது. இது நிகழ்ந்தது 1926 ஆம் வருடம். அதற்கு ரேடியோ டெலிபோன் என்று பெயரி ட் டார்கள். அதே காலத்தில் பயணிகள் விமானத்திலும் இந்த வசதி செய்யத் தொடங்கினார்கள்.இதன் நீட்சியாக இரண்டாவது உலகப்போரில் ஜெர்மன் நாட்டு பீரங்கிகளிலும் இந்த ரேடியோ டெலபோனி முறை கையாளப் பட்டது. இதைக் கண்ட ஜெர்மன் காவல்துறை ரோந்து வாகனங்களிலும் இந்த தந்தியில்லாத் தொலைபேசியை உபயோகிக்கத்தொடங்கியது.

அதைத் தொடர்ந்து இருவழி தந்தியில்லாத் தொலைபேசியை முதன் முதலாக வாடகைக் கார்களிலும், பின்னர் காவலர் வாகனங்களிலும் பின்னர் பெரு முதலாளிகளின் இந்த இருவழி தொலைபேசியை உபயோகிக்கத் தொடங் கினார்கள். ஆனால் அதில் தொடர்பு எண்கள் இருக்காது.இதுதான் பின்னாட்களில் வாக்கி டாக்கியாக உருமாறியது.

1940 ஆண்டுவாக்கில் ப்ளாக்பெர்ரி நிறுவணம் அதை இராணுவத்துக்காகச் சந்தைப் படுத்தத் தொடங்கியது.

1946 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் இரண்டு தொழில்நுட்பவல்லுநர்கள் ஜி.ஷப்பிரோவும், சர்ஜென்கோவும் இணைந்து கார்களுக்குள் பொருத்தக்கூடிய தந்தியில்லாத் தொலைபேசியை வெற்றிகரமாகக் கண்டு பிடித்தார்கள். என்ன வெற்றியென்றால் இந்த தொலைபேசியை 20 கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்கும் சாதாரண தொலபேசியுடன் இணைக்கமுடியும்.

1947 ல் டக்ளஸ் ரிங் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து அலை பேசி களுக்கான கோபுரங்கள் அமைத்து அதன் மூலம் மின்காந்த அலை வரிசை களை உருவாக்கி அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார்கள்.

இந்தக் கண்டுபிடிப்புகளில் சினிமாத் துறையும் இணைந்து கொண்டது  1950 ஆம் ஆண்டு வெளிவந்த சப்ரினா என்கிற திரைப்படத்தில் பெருமுதலாளி உபயோகிக்கிற அலைபேசியின் மாதிரிகள் பின்னர் பயன்பாட்டுக்கும் வந்தன.

அப்புறம் 1957 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் இன்னொரு இளம் விஞ்ஞானி குப்ரியானோவிச் கையடக்கமான முதல் அலைபேசியக் கண்டு பிடித்தார். அபோதைய கையடத்தின் எடை என்ன தெரியுமா மூன்று கிலோ. அவரே அதை 500 கிராம் எடையுள்ளதாகக்குறைக்க ஒருவருடம் போராடி 1958ஆம் ஆண்டு வெற்றி கண்டார்.

எனினும் முறைப்படி இந்தக்கண்டுபிடிப்புகளை காப்புரிமையோடு சந்தைப் படுத்த முடிந்தது அமெரிக்காவால்தான்.1970 ஆண்டு பெல் ஆராய்ச்சி நிறுவணத்திற்கு அலைபேசியின் முதல் காப்புரிமை வழங்கப்பட்டது. அதே போல இதை முதன்முதலில் உபயோகப் படுத்தத் தொடங்கிய தனிமனிதன் பிரிட்டிஷ் இளவரசன் பிலிப் மட்டுமே.

ஊரைவிட்டுதனியே காரில்போகும் போது இளவரசியோடு காதல் மொழி பேசிக்கொள்ளத் தான் இதை உபயோகித்தானாம். இதற்கு இடைப்பட்ட காலத் தில் இந்தியா தவிர்த்த பல்வேறு நாடுகள் செல்போன் குறித்த கண்டு பிடிப்பு களில் தத்தமது முயற்சிகளை பங்களித்தன.

இறுதியில் 1973 ஆம் ஆண்டு மோட்டோரோலா நிறுவணத்தின் மார்ட்டீன் கூப்பர் தனது முதல் பொதுமக்கள் செல்போனை பயன் பாட்டுக்கு வெளி யிட்டார். அதன் பெயர் என்ன தெரியுமா ’ மோட்டோரோலா டைனா 8000+ ’

1981 ஆம் ஆண்டு டென்மார்க்,ஸ்வீடன்,பின்லாந்து ஆகியநாடுகள் அகில உலக இணைப்புவசதிகொண்ட ( Nordic Mobile Telephone (NMT) system ) 1G  அலைக்கற்றை அலைபேசியை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

1985 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் வோடோபோன் நிறுவணம் அதனது செல் போனை அறிமுகப்படுத்தியது.

1990 ஆம் ஆண்டு 2G அலைக்கற்றை வசதிகொண்ட செல்லுலார்போன்கள் உலகம் முழுவதும் சந்தைப்படுத்தப்பட்டன.

இந்தவரலாற்றுநெடுகிலும் இந்தியா பற்றிய ஒருவரி கூட கிடையாது. வரி வேண்டாம். ஒரு கமா, ஆச்சரியக்குறி, புல்ஸ்டாப்புக்கூடக் கிடையாது என்பதே நமது பெருமை.

1986 ஆம் ஆண்டுக்கும் 1990 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வர்த்தகம், வெளியுறவு,முதலீடு போன்றவற்றில் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்டிருந்த நாடுகளில் நுழைய தனக்கு ஏதுவான பாதைகளை சுலபாமாக உருவாக்கிக்கொண்டது அமெரிக்கா.

அநேகமாக இதே காலக்கட்டத்தில்தான் சோவியத் ருஷ்யா சுக்குநூறாக உடைக்கப்பட்டு ( 1986 ) அமெரிக்காவின் கட்டுப்பாடுகள்,பயம் எல்லாம் அழிக்கப்பட்டது. சதாம் உசேன் இரான் இராக் போரை அறிவித்தார் 1980.

உலகத்துக்கு புதிய பொருளாதாரக்கொளகைகள்போல எய்ட்ஸ் என்னும் இன்னொரு மிரட்டல் கண்டுபிடிக்கப்பட்டது (1981).

இதே காலக்கட்டத்தில் தான் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு (1984) அரியணை ஏறிய ராசீவ் காந்தி புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தி படுக்கையறைக் கதவு வரை திறந்துவிட்டார்,

போபாலில் விஷவாயு கசிந்தது.

உலகம் முழுக்க செங்கல் சைசில் செல்போனை அறிமுகப் படுத்திக் கொண்டிருந்த இதே காலக்கட்டத்தில் தான்  கன்னியா குமரியிலிருந்து காஷ்மீர் வரை செங்கல் திரட்டி அதன் மூலம் இந்துத்துவா வெறியையும் திரட்டிக்கொண்டிருந்தது இந்தியா.

இதே காலங்களில் தான் தமிழகமும் ஆந்திராவும் சட்டி சுடுகிறதென்று தப்பித்து அடுப்பிற்குள் விழுந்தது. எம்ஜியாரும்,என்டிஆரும் தங்களது நடிப்புத் திறமை களை அரசியலில் ஓட்டுக்களாக மாற்றமுடிந்ததும் இதே காலத்தில்தான்.

எனக்குத்தெரிந்து பழம்பெருமை கொண்ட இந்தியா விஞ்ஞான உலகுக்கும், பயன்பாட்டுக்கும் கண்டுபிடித்துக்கொடுத்த பெருமைகள் அவ்வளவாக இல்லை.

புரட்சி நடிகன் எம் ஆர் ராதா சொன்னதுபோல எல்லோரும் நீராவியில் கப்பலையும்,ரயிலையும் இயக்கிக்கொண்டிருந்த போது நாம் அதை வைத்து இட்லி அவித்துக்கொண்டிருந்தோம்.

அதே போல யாராலும் அழிக்கமுடியாத இனிஎவராலும் இதற்குமேல் கண்டுபிடிக்கமுடியாது என்று சரணாகதி அடையும் அளவுக்கு ஜாதியைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறோம்.

இல்லை நாம் ரொம்பக் கண்டுபிடித்திருக்கிறோம் என்று எவரேனும் சொல்ல வந்தால் மீண்டும் சிலேட்டுப் புத்தகத்தோடு படிக்கக் காத்திருக்கிறது உலகம்.

2.10.11

வராமல் வந்த மாமணி இந்தப் பஞ்சயத்துராஜ்



இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்று சொன்ன சொல்லில் நிறைய்ய மர்மங்கள் இருக்கிறது.முதலில் ஆன்மா என்கிற சொல்லே மிகவும் மர்மமானது.ஆம் கண்டுபிடிக்க முடியாத,அல்லது இல்லாத ஒன்றை நாம் மர்மமென்றுசொல்லலாம். இரண்டாவதாக அவர்சொன்னது கிராமங்களின் மண் வளங்களையா, இல்லை இயற்கையின் வசீகரத்தையா, இல்லை மனிதர்களையா என்று தெரியாத மர்மங்கள் இருக்கிறது.

அவர் சொன்னது இயற்கையும் மண்ணும் சார்ந்ததாக இருந்தால் அவை இப்போது அழிந்து கொண்டிருக்கிறது.மனிதர்கள் குறித்து என்றால் அவை ஒவ்வொன்றும் ஒரு நாடாக இருந்தது, இருக்கிறது என்பதுதான் நிஜம்.தமிழகம் முழுக்க உள்ளாட்சித்தேர்தல் காய்ச்சல் பரவி கொதித் துக்கொண்டிருக்கும் நேரத்தில் மஹாத்மாவின் பிறந்த நாள் வந்திருக்கிறது. புலால் விற்பனை நிலையங்களும், மதுபானக் கடைகளும் பூட்டிக் கிடக்க்கிற இந்த ஒருநாள் இந்த அரசு அவருக்கு போடுகிற ஒரு கூளைக்கும்பிடு அவ்வளவுதான். நகரங்களில் இந்த இரண்டுவகைக் கடைகள் பூட்டிக்கிடக்க கிராமங்களில் இந்த இரண்டும் தங்குதடையின்றிக் கிடைக்கும் விசித்திரம் நிறைந்த தேசம் இது.

பஞ்சாயத்துராஜ் என்கிற திட்டம்  உண்மையில் மிகவும் உன்னதமானது. அதிகாரப்பரவல் கடைக்கோடி கிரமத்தானுக்கும் போய்ச் சேரவேண்டும் என்கிற திட்டமும் அதற்கான சட்டமும் உருவாவதற்காக பாடுபட்ட கனவுகண்ட அத்துணை சிந்தனையாளர்களும் போறுதற்குறியோர். கொக்கோ கோலாவுக்கு தண்ணீர்தர இந்தியாவின் பிரதமரும்,தமிழக முதல்வரும் ஒத்துக்கொண்டு கையெழுத்திட்ட பின்னாடிக்கூட சம்பந்தப்பட்ட கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் அதை நிரகரிக்கமுடிகிற அதிகாரம் படைத்தது பஞ்சாயத்துராஜ்.
செருப்பு அணிந்துகொண்டு ஆதிக்கசாதித் தெருவில் நடந்தால் உயிர்போகும் அபாயம் இருக்கிற கிராமசபைகளின் தலைமை நாற்காலியில் ஒரு தலித் உட்கார வழிவகை செய்கிற இந்த ஏற்பாடு புரட்சிகரமானது. அதை உள்வாங்கிக்கொண்டு அமல்படுத்திய ராஜீவ்காந்தி தனது இமாலயத் தவறுகளுக்கு பரிகாரம் தேடிக்கொண்ட செய்கை இது.

கிராமங்கள் ஆதிக்க சாதியினரிடமும்,ஆண்டைகளிடமும்,பண்ணையார்களிடமும் சிக்கிக்கொண்டு திக்கித்திணறுகிற போது வாரமல் வந்த மாமணி இது. சாலைகள்,கண்மாய்,ஆறுகள்,வீடுகள்,வீட்டுக்குள் கழிப்பறைகள்,வறுமை தீர வேலைவாய்ப்பு, என்று வறிய மனிதர்களின் கைகளுக்கு நேரடியாக இந்திய அரசின் திட்டங்கள் பகிர்ந்தளிக்க வழிவகை செய்கிற நேர்த்தியான ஏற்பாடு இது. இன்னும் சொல்லிச் சொல்லி சிலாகிக்க ஆயிரமாயிரம் நற்பண்புகள் கொட்டிக்கிடக்கிற திட்டம் இந்த பஞ்சாயத்து ராஜ். எப்படி காமராஜர் காலத்து கல்விச் சாலைகள் இந்தியக் கிராமங்களின் முகங்களைப் புரட்டிப்போட்டதோ அதே போல, அதன் அடுத்த அத்தியாயம் இது. ஆனால் இதைக்கொண்டாட மேட்டிமை வாதிகளும் ஊடகங்களும் தயாராக இல்லை என்பதில் உண்மையான மேல்கீழ் அரசியல் இருக்கிறது.

ஆனால் ஐயோ....அப்படிப்பட்ட அதிகாரத்தை அறுபது ரூபாய் மதுவுக்கும் ஐம்பது ரூபாய் பிரியாணிக்கும் அடகுவைக்கிற நடைமுறையை என்னவெனச் சொல்லுவது. ஊர் ஊராய்ப் போய்ப்பாருங்கள் மதுவின் வாடைக்குள்ளும்,நூறு இருநூறு ரூபாய் லஞ்சக்காசுக்காகவும் பஞ்சாயத்துராஜ் தனது அருமை பெருமைகளை இழந்துகொண்டிருக்கிறது. அந்தப்பெட்டிக்கடையில் ரெண்டுபேர் பேசிக்கொண்டிருந்தார்கள். ’’மொத்தம் 647 ஓட்டு அதுல நம்ம நாயக்கமாரு ஓட்டுமட்டும் 418 ஓட்டு. அவன் 113,இவன் 52,அப்புறம் அல்ரசில்றயெல்லாம் சேத்து மிச்சம் 64 ஓட்டு.நம்ம பயக அத்தனபேரு ஒட்டுமொத்தமா போட்ருவான்.நம்ம தான் இந்த தடவையும்’’.என்று.
மாஞ்சு மாஞ்சு நாளும் பொழுதும் செலவழித்து கொண்டுவந்த இந்த திட்டத்தை பெட்டிக்கடையில் பொழுதுபோகாத ஒரு ஜாதிவெறியன் சீரழிப்பான் என்று நினைத்துப் பார்த்திருப்பார்களா?

ஜனநாயகமும், பஞ்சாயத்துராஜும் திரும்பத் திரும்ப இந்த கடவுளால் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பது தான் இந்த தேசத்தின் பெரும் சோகம்.இதை இந்த அழிமாண்டத்தை சமர்செய்து சீர்செய்யப்போகிற ஒருவனும் இன்னும் பிறக்கவில்லை அவர் அந்த அரக்கர் ஒருநாள் பிறக்காமலா போவார் ?

24.9.11

கொடியங்குளம்-தாமிரவரணி-பரமக்குடி...ஜனநாயகத் தலைகுனிவுகள்.


ராமநாதபுரத்தில் இருந்து வீடு திரும்பும்போது சக ஊழியர் ஒருவர் சீக்கிரம் பஸ்ஸப்பிடிச்சி ஊரு போயிருங்கப்பு எங்கனயாச்சும் பஸ்ஸ நிப்பாட்டிட்டா அவ்ளோதான் என்றார். பரமக்குடி அஞ்சு முக்குரோட்டில் வானுயர்ந்த ப்ளக்ஸ் பேனர் இருந்தது. மறுநாள் குருபூஜை என்பதால் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தார்கள். காய்ச்சலுக்கு மாத்திரை வாங்கவந்தவர்களைக் கூட நிக்காத போ என விரட்டிக் கொண்டிருந்தார்கள். உடன்வந்த பயணிகள் உச்சுக்கொட்டி தங்களது அதிருப்தியை வெளிக்காட்டிக் கொண்டார்கள். அடுத்த நாள் கடை யிருக்காது கூட ரெண்டு பால் பாக்கெட் வாங்கிவச்சுக்கொங்க என்று அருகிலிருந்தவர் போனில் மனைவிக்கு எச்சரிக்கை செய்து கொண்டிருந்தார். அந்த உரையாடல்களோடு பரமக்குடி இயங்கிக்கொண்டிருந்தது.
சமூகம்,உலகம்,இந்தியா,ஜாதி,பரமக்குடி
ஒரு தெய்வநம்பிக்கை இல்லாதவனாக தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு ’குருபூஜை’ என்கிற சொல்லை நானும் வெறுக்கிறேன். ஆனால் சுற்றிலும் நடக்கிற நடப்புகள் தான் அடுத்த வீட்டுக்காரனை ஆட்டுவிக்கிறது. நமக்குப் பிடித்துப்போனால் யப்பா கூட்டம் ஜேஜேன்னு இருக்கும் என்று கொண்டாடுவோம். பிடிக்காவிட்டால் ஒரே கசகசப்பு தொந்தரவு தாங்கமுடியாது என்று சபிப்போம். இப்படியான  சிந்தனைகள் நமது சாதிய ரத்தத்தில் ஊறிப்போனவை. பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தலுக்காக நான்கைந்துமுறை அந்தப்பகுதிகளில் பயணித்து பேட்டிகளுடன் இருந்தபோது ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தலித்தல்லாத எல்லோரும் திரு.தொல்திருமாவளவன் அவர்களின் பெயர் சொல்லும் போது ஒருமையிலும் ஒவ்வாத முகத்துடனமே தங்களை நிரூபித்துக் கொண்டார்கள். எல்லாம் சகஜமாக இருந்ததாம் அவர் வந்துதான் சாதீய மோதல்களை உருவாக்கிவிட்டாராம். இதே கருத்தை ஒரு படிப்பறிவில்லாத கூலிக்கார ஆதிக்க சாதிக்காரர் தொடங்கி முற்றும் கற்ற கல்வியாளர் என்று சொல்லிக்கொள்கிறவர் வரை வைத்திருக்கிறார்கள். அதில் முற்போக்கு பிற்போக்கு எல்லாம் ஏதும் வித்தியாசம் இல்லை.

இந்திய சமூகத்தில் வேரோடிக் கிடக்கும் எல்லாத் தவறுகளுக்கும் அடிநாதமாக இருப்பது சாதி மட்டும் தான் என்பதை இனங்கண்டு அதை வேரறுக்க கிளம்பிய தலைவர்கள் எல்லோரும் பகடி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் புறந்தள்ளப் பட்டிருக்கிறார்கள் அல்லது சாதிய அடையாளம் கொடுத்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் ஒரு கடவுள் அவதரிக்கவெண்டுமென்றால் கூட அவன்  மேல் சாதியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. சாத்தூருக்கு அருகிலே உள்ள ஓ.மேட்டுப்பட்டி என்கிற கிராமத்தில்  பகடை காளியம்மன் கோவில் என்று இருக்கிறது. சாமி இருக்கிறதா இல்லையா என்கிற விவாதத்துக்கு முன்னாள் இந்த மனிதன் தனது சாதியை எங்கெல்லாம் கொண்டுபோய் நிறுவி வைத்திருக்கிறான். பார்த்திபனூர் நுழைவுவாயிலில் பரளை என்று ஒருகிராமம் வரும் பத்தடி தூரத்தில் முஸ்லீம்பரளை என்று இன்னொரு கிராமம் வரும். அதே போலவே கடற்கரை கிறித்தவ புண்ணியத்தலமான உவரி போகும் போது, நாடார் உவரி என்று இன்னொரு ஊர் வரும்.

இப்படித்தான் இந்த தேசம் முழுக்க நானும் அவனும் ஒன்றில்லை என்கிற மூர்க்கமான குரலின் நடப்புகள் நிறுவப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு சின்னச் சின்ன பங்கம் வரும்போதெல்லாம் அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஜாதி தனது கொடூர மரண தண்டனைத் தீர்ப்பை மிகச்சுலபமாக நிறைவேற்றிக் கொள்கிறது. இவை எதுவும் வேண்டாம், வாருங்கள் சீக்கியத்துக்கு என்று அழைத்துக் கொண்டு போனார்கள்.அங்கே சரியில்லை வாருங்கள் கிறித்தவத்துக்கு என்று  அழைக்க அங்கே ஓடினார்கள். அம்பேதகர் வந்து எல்லா வற்றையும் மறுதலித்து பௌத்த மதத்துக்கு  கூட்டிக் கொண்டு போனார். பின்னர் மீனாட்சிபுரங்களாவது நமக்கு பூரண மனித அடையாளம் தரும் என்று நம்பி ஓடினார்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் முன்னாடி வழிகாட்டியவர்களை அவர்களது தலைவர் களாக வரித்துக்கொண்டார்கள். ஆனால் பாருங்கள் இந்த தலித் சமூகம் தன்னை பெரும்பான்மை மக்களில் இருந்து ஒரு இம்மியளவு கூட வித்தியாசப்படுத்தாமல் அப்படியே அச்சு அசலாக அவர்களைக் நகலெடுத்துக் கொண்டுதான் வாழ்ந்து தொலைக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த குருபூஜை.

சமீபகாலங்களில் குருபூஜை கொண்டாடாத சாதிகளே இல்லையென ஆகிப்போனது. இப்போதெல்லாம் தமிழகத்தில் புதிய புதிய சுதந்திரப் போராட்ட வீரர்களும் புதிய புதிய மன்னர்களும் கொண்டாடப் பட்டுக்  கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்குக்கூட ஜாதிப்பெயிண்ட் பூசி தெருமுனையில் நிறுத்தி விட்டார்கள். அப்படிப் பூசிவிடுகின்ற கூட்டங்களில் இருந்து ஒரு போதும் தலைவர்கள் உருவாவதில்லை. அவர்களை காசுபோட்டு,லாரிபிடித்து ஒருங்கினைத்து மாநாடு நடத்தி தங்கள் தொழிலையும், கருப்புப் பணததையும் காப்பற்றிக்கொள்கிறார்கள். கூடவே சட்டசபைத் தேர்தலில் தங்களுக்கான தொகுதிகளை ஒதுக்கி அப்புறம் உல்லாசங்களையும் ஒதுக்கி கொள்கிற வியாபரம் பெருகிக்கிடக்கிறது.

ஆனால் இவைகளோடு தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்தையும் வரலாற்றையும் எடைபோடமுடியாது. அவர் யார்,எங்கிருந்துவந்தார்,என்னசெய்தர்,எதற்ககாகக் கொலை செய்யப்பட்டார் என்கிற செய்தியை தெரிந்துகொள்ளவேண்டும். நாம் நமது சொந்த ஜாதி அடையாளத்தைக் கழற்றி வைத்து விட்டுப் படித்தோமேயானல் ஏனைய சாதிய மாநாடுகளுக்கும் அவரது நினைவு தினத்துக்குமான வித்தியாசம் புரியும்.

இன்னும் போராட்டக்களத்தில் இருக்கும் மணிப்பூர் மக்களின் கொதிநிலையை மேலேற்றி விட்டவர் தோழர் மனோரமா தேவி.  ராணுவச் சட்டம் afspa 1958 அமலானதால் அந்த இன மக்கள் சந்தித்த இன்னல்களை ஒன்று திரட்டியவர்.ஒரு தன்னார்வத் தொண்டர்.அந்த ஒரே காரணத்துக்காக அவர் கூட்டிக்கொண்டு போய் கற்பழித்து தெருவில் வீசியெறியப்பட்டார்.அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை அந்த பசுமையான மணிப்பூர் பிரதேசம் பற்றி எறிந்துகொண்டே இருக்கிறது.  இப்படித்தான் உலகமெங்கும் தியாகிகள் இனங்காணப்படுகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு போரட்டக்காரர்தான் தியாகி இமானுவேல் சேகரன் அவரைக்கொண்டாடும் செப்டம்பர் 11 ஆம்நாள்.அது குருபூஜையல்ல. ஒரு தியாகியின் நினைவுதினம்.  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தான் கற்ற கல்வி, பட்டறிவு இவற்றை செலவழித்தவர். படிப்பறிவில்லாமலும் அடிமை இருட்டிலும் கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வெளிச்சம் கொண்டுவந்தவர். செருப்புப் போடக்கூடாது,நல்ல ஆடைகள் அணியக் கூடாது. படிக்கக்கூடாது,எதிர்த்துப் பேசக்கூடாது என்கிற அடக்குமுறை முதுகுளத்தூர் பகுதிகளில் அமலில் இருந்தது. விடுதலைக்குப் பிந்திய காங்கிரஸ் ஆட்சியும்,கிறித்தவ மதமும் இவற்றிலிருந்து தலித்துகளூக்கு விடுதலை கொடுத்தது. அதனாலேயே காங்கிரசுக்கு ஓட்டளிக்கக் கூடாது என்கிற மேல் அடக்குமுறையை ஏவி விட்டார்கள்.

அடங்ககமறுத்து தலித்துக்கள் எதிர்த்து நின்றார்கள். கலவரங்கள் வெடித்தது. அந்தக் கலவரங்களுக்கு முடிவுகட்ட அரசு அமைதிப் பேச்சு வார்த்தையை ஒருங்கிணைத்தது. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் கலந்து சிறைசென்றவரும், பின்னர் ராணுவத்தில் பணியாற்றியவரும், திரும்பிவந்து தகப்பனார் ஆரம்பித்த தேவேந்திர வேளாளர் சங்கத்தை வழிநடத்தினார் ஒருவர். அவர் இம்மானுவேல் சேகரன்.  அந்த தலித் மக்களில் இருந்து மேலெழுந்து வந்து  அவர்களுக்கான மூன்று பிரதிநிதிகளில் ஒருவராக 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி நடந்த சமாதானக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.அதனாலேயே,அதாவது ஒரு தலித்தை தலைவனாக ஏற்றுக்கொள்ள முடியாத மறுநாள் 11.09.1957 ஆம் தேதி கொல்லப்படுகிறார்.

இப்படித்தான் இதே ரீதியில்தான் உலகெங்கிலும் உள்ள போராட்ட வரலாறுகள் காணக்கிடைக்கிறது. எனது சந்ததிகளுக்கு எம் பெருமைகளைச் சொல்லாதே நாம் சந்தித்த அவமானங்களைச்சொல், நாம்பட்ட வேதனைகளைச்சொல், நாம் சிந்திய ரத்தத்தைப் பற்றிச்சொல் அதிலிருந்து அவர்கள் புதிய வரலாறுகளை உருவாக்குவார்கள் என்கிற கோரிக்கைகளோடே நசுக்கப்பட்ட உலக சமூகம் காத்துக்கிடக்கிறது. இந்தியாவில் அதைச்சொல்லுகிற தலித்துகள் மட்டும் கலகக்காரர்களாக, பிரிவினைக்காரர்களாக, கலவரங்களைத் தூண்டுபவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்களின் அணிதிரட்டல்கள் மூர்க்கத்தனமாக கையாளப்படுகிறது.  அவர்களின் கொண்டாட் டங்கள் மட்டும் அமைதிக்கு பங்கமென்கிற மாதிரி அரசாலும் ஊடகங்களாலும் திரித்துக் கூறப்படுகிறது. தோழர் ஜான்பாண்டியன் அப்படிச் சித்தரிக்கப் படுகிறவர்களில் ஒருவர். திரித்துக் கூறப்படுகிற ஒரு நிகழ்வு தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுதினம்.

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இந்திய சமூகம் ஆர்ப்பாட்டம்,உண்ணாவிரதம்,சாலைமறியல் ஆகிவற்றை  நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதை எதிர்கொள்ள அரசு பேச்சு வார்த்தை நடத்துகிறது,கைதுசெய்கிறது. மிஞ்சி மிஞ்சிப்போனால் தடியடி நடத்தி அப்புறப்படுத்துகிறது. ராம் லீலா மைதானத்தில் கைதுசெய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட பாபா ராம்தேவுக்காக இந்தியா முழுமைக்கும் கொதித்து எழுந்ததுபோல பத்திரிகைகள் சித்தரித்தன. அன்னாஹசாரேவின் உண்ணா விரதத்துக்கு அனுமதிமறுக்கப்பட்ட போது இந்திய மேட்டிமை வாதிகள் ஜனநாயகம் செத்துவிட்டதென கூக்குரலிட்டது. நீதிமன்றம் தலையிட்டு உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டது.

அவற்றையெல்லாம் நேரலையாக இந்தியா பார்த்துக் கொண்டிருந்தது. நடந்து முடிந்து இன்னும் ஒருமாதம் கூட ஆகவில்லை.  ஆனால் ஒரு நூற்றி ஐம்பது கிராமத்தார்கள் சாலையில் உட்கார்ந்து மறியல் செய்ததற்கு துப்பாக்கி சூடு நடந்திருப்பது இந்திய சமூகத்தில் தலித் தல்லாதவர்  சந்தித்திராத  கொடுமை. சமாதானம் செய்திருக்கலாம், கைது செய்திருக்கலாம், கண்ணீர்ப் புகை வீசிக் கலைத்திருக் கலாம். அத்துணையிலும் ஆத்திரம் தீரவில்லையா  லத்திக்கம்பால் கூட அடி அடித்திருக்கலாம்.எதிரி நாட்டுப் படைகளைச் சுடுவது போல துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது காவல்துறை. அவ்வளவு ஆத்திரம் எங்கிருந்து வந்தது. நிராயுத பாணிகளான அப்பாவி களின் உயிரைப் பறிக்க உத்தரவு  கொடுத்தது யார் ?.

ஒரு மத்திய மந்திரியைச் செருப்பாலடித்தவனைக் கூட இழுத்துக் கொண்டுபோய் சிறையில்தான்  அடைத்தார்கள். நாடுகடந்து வந்து மும்பை தாஜ்விடுதியில் கண்மண் தெரியாமல் துப்பாக்கிச்சூடு நடத்திய கசாப் இன்னும் விசாரணைக் கைதியாகவே இருக்க, இந்த அதிரடித்துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் தாழ்த்தப்பட்ட்வர்கள் என்பதால் மட்டுமே. இது போன்ற சாதி ஊர்வலங்களுக்கு கொடுக்கிற எச்சரிக்கையாக அரசு இதைச்செய்ததாம்.இருக்கிற அரசியல் அழுத்தங்களைத்திசைதிருப்ப அல்லது தமிழர்களை ஒன்றுசேரவிடாமல் தடுக்க எடுக்கப்பட்ட சாணக்கியத்தந்திரம் என்றெல்லாம் நோக்கர்கள் ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள். வேறெந்த சாதியின் ஊர்வலமும் இங்கே நடக்கவில்லையா ?எனில் இந்த தலித் மக்களின் ஏழு உயிர் என்ன சோதனைச்சாலைக்கு கொண்டு போகும் எலிகளின் உயிரைவிட மலிவானதா ?தாக்குண்டால் புழுக்கள் கூட தரைவிட்டுத்துள்ளி எழும் சாக்கடைப் புழுக்களா தலித் மக்கள் காரணமில்லாமல் நசுக்குவதற்கு.

ஒரு அரசுக்கே தலித் மக்கள் மீது கவிழ்ந்திருக்கும் குரோதத்தின் மிக வெளிப்படையான சாட்சிதான் இப்படியான படுகொலைகள். இது கொடியங்குளத்தில், தாமிரபரணியில் இப்போது பரமக்குடியில். இந்த அரசின் இமாலயத் தவறைச் சுட்டிக்காட்ட இப்போது மொத்த தமிழகமும் விரல் நீட்டியிருக்கவேண்டும்.  ஆழ்மனத்தில் தாண்டவமாடும் எக்காளத்தை முகத்தில் மறைக்க மௌனம் சாதிப்பதை நீண்ட நாள் மறைக்கமுடியாது. அதைக் கவனம் கொள்கிற பக்குவம் இங்கிருக்கும் இருபதுகோடிக்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வரும்.

அதுவரை தாங்கள் சிந்திய ரத்தத்தை கணக்கெடுத்து வைத்துக்கொள்வார்கள்.

7.8.11

களவு போகுதடா.


அந்த சம்பவம் நடந்து ஒரு மூன்று நாட்கள் ஓடி விட்டது. அந்த குடியிருப்பில் இருக்கிற எல்லோருக்கும் அது பேசு பொருளாகவும்  மாறிப்போனது. சம்பவம் நடந்தபோது வயதான மூதாட்டி மட்டும் இருந்தார் என்று குடும்பத்தின் ஒருதரப்பும்.இல்லை மகனும் மருமகளும் கூடவே இருந்ததார்கள் ஆனால் அதை போலிசார் மறைத்துவிட்டார்கள் என மறுதரப்பும் பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு அது பிரதான பேசுபொருளாக இருந்தது.களவு போன நகைகளின் எடைகுறித்து மேலும் கீழுமான தகவல்கள் வந்துகொண்டே இருந்தது.இன்னொரு வீட்டில் திருடர்கள் எப்படி வந்து பேசினார்கள் எப்படி கவனத்தை திசை திருப்பி பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்தார்கள் என்று நடித்துக் காண்பித் தார்கள். வந்தவர்களில் ஒருத்தர் கூட நடுவயதுக்காரன் கூட இல்லை எனவும் பார்த்தால் களவாணிகள் போலவே இல்லை எனவும் திருடர்களைப் பற்றி புகழ்ந்து பேசினார்கள். போலீசார் மறுநாள் வந்து கூடுதல் காவலர்களோடு ரோந்து சுற்றினார்களாம் தெருத்தெருவாக நின்று ஒலிபெருக்கி மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரஸ்தாபித்தார்களாம். இவ்வளவும் பேச்சும், தகவல்களும் பரிவர்த்தனைகளும் அவரவர் வீட்டுக்குள்ளே தொலைபேசியை கவனித்தபடியே பரிமாறிக்கொள்ள பழகிவிட்டிருந்தது அந்த மத்திய தர குடியிருப்பு.

காய்கறி வாங்க கடைக்கு வரும் நேரங்களில்.தெருக்குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் அவதானிப்பில் கசிந்த இந்த தகவல்கள் ஒரு முழுநேர பொழுதுபோக்கின் இடையில் கொடுக்கும் விளம்பரம் போலவோ இல்லை இடையில் கொறிக்கும் தின்பண்டம் போலவோ கறைந்து போனது.இன்னும் ஒருவாரத்துக்கு, கொஞ்சம் கூடப்போனால் அடுத்த பரபரப்பு வரும் வரை பேசப்படலாம். இல்லை மகனின் மகளின் படிப்பு செலவுக்கு பணம் தயார் செய்து அனுப்புகிற கவலையில் மறந்து போகலாம். வாழ்வை இழந்து ஒரு ஆயுட்கால விபரீதத்திற்கு தங்களை தயார்ர் செய்துகொண்ட அந்த இளைஞர்கள் பக்கமோ,தங்கள் ஆயுட்கால சேமிப்பை இழந்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும்
அந்த மத்திய தரக் குடும்பத்துப் பக்கமோ நின்று பேசாமல் இங்கு கருகிப்போன சமூக விலங்கின் அணிதிரட்டலை நினைத்து வேதனை மட்டுமே மேலோங்குகிறது.

மிக அருகருகே இருக்கும் வீடுகளில் தனது சமயோசிதத்தை மட்டுமே மூலதனமாக்கித் திருடிச்சென்ற அந்த இளைஞர்கள் அவதானிப்பின் மிக முக்ய புள்ளி ஒருவனுக்கொருவன் கைகொடுக்கமுடியாத தூரத்தில் இந்த மதியதரவர்க்கம் இருக்கிறது என்பதே. எவ்வளவு பெரிய சத்தம், அவலச்சத்தம் வந்தாலும் சன்னலை மட்டும் திறந்து பார்க்கும் சிங்கங்களும் புலிகளும் நிறைந்த குடியிருப்பு என்று மிகத் துள்ளி யமாகக் கணக்கெடுத்திருக்கும் அந்த இளைஞர்களை ஏமாற்ற விரும்பாத எனது மக்கள். அவர்கள் தொலைக்காட்சி பார்த்து லயித்துக் கொண்டிருந்த தருணத்தில் ஒரு டெம்போ வேனைக் கொண்டுவந்து நிறுத்தி எல்லா தட்டு முட்டு சாமான்களையும்  அள்ளிப் போட்டுக் கொண்டு போன நிகழ்வுகள் மிக இயல்பாக நடந்திருக்கிறது. இப்படித்தான் தெருத்தொடங்கி,ஊர் தாலுக்கா,மாவட்டம்,மாநிலம் என விஸ்தரித்துக்கொண்டு போகிறது இந்த வேற்றுமையின் ஒற்றுமை. ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்து ரொம்பச் சுளுவாகக் களவாண்டு போவதற்கு ஏதுவாக இருந்தது பிரிட்டிஷ் இந்தியா. இப்போது இருந்த இடத்தில் இருந்து கொண்டே களவாட விடும் அளவுக்கு தங்களைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறது கணினி இந்தியா.வீரத்தை மொத்தமாய் குத்தகை எடுத்த இந்தியர்கள் அன்றும் இன்றும் உயிரோடுதான் இருந்தார்கள்,இருக்கிறார்கள் என்பதை இறுதியாகச்சொல்லி முடிக்கிறேன்.

6.12.10

ஓடு,அவர்கள் நகரத்துக்குள் வருகிறார்கள்


(இன்று அம்பேத்கரின் நினைவு தினம்.மும்பை சிவஜி பூங்காவில் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் மரியாதையை செலுத்த திரளும் நாள் இன்று.ஆனால் இந்த பெரும் கூடல் பரவலாக அறியப்படாத ஒரு நிகழ்வாகும்.இந்த தேசம்,அல்லது தலித்துகள்கூட அவரது கனவுகளை உணர்ந்துகொண்டார்களா என்பது இன்னும் கேள்வியாகவே தொடருகிறது.இருப்பினும் லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்டவர்களை ஒரே இடத்துக்கு இழுத்துவரும் உந்து சக்தி அவரிடம் இருந்திருக்கிறது. khairlanji the bitter crop என்கிற ஆனந்த் டெல்டும்டே  புத்தகத்திலிருந்து தமிழாக்கப்பட்ட சில பக்கங்கள்)

 " சைத்யா பூமி "  அம்பேத்கர் நினைவஞ்சலி . இதுவரை ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத ஒரு உணர்வுபூர்வமான அபூர்வ நிகழ்வு. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்துவரும் இந்த தாழ்த்தப்பட்டவர்களின் பெருந்திரள், நிதானமாகப் பெருகிக்கொண்டே வருகிறது. தங்களின் ஒப்பற்ற வழிகாட்டி பாபாசாஹேப் அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட சமத்துவ சகோதரத்துவ ஜனநாயகக் குடியரசு அவர்களுக்கு எந்த பாதுகாப்பும் சந்தோசமும் வழங்காவிட்டாலும் கூட அவர்களந்த நாளின் புனிதத்தன்மையின் மேல் களங்கம் வரும்படியான சிறு அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். கட்டுக்கடங்காத அந்தப் பெருந்திரள் ஒரு சிறு நூலிழை போன்ற சமதா சைனிக் தல் எனும் தொண்டர்களால் கட்டுப்படுத்தப்படவில்லை, ஒழுங்கு படுத்தப்பட்டது.

அதுவரை சமதா சைனிக் தல்லின் பாதுகாப்பு எல்லைக்கு வெளியே இருந்த மும்பை காவல்துறை. வலுக் கட்டாயமாக நிகழ்ச்சியைக் காவல்துறைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தத்தை ஊடகங்கள் ஏற்படுத்தின. தொடர்ந்து ஐந்து நாட்கள் ஒருங்கிணைக்கப்பட்ட பீதிப் பிரச்சாரத்தால் தங்களின் மீட்பருக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செலுத்தமுடியாமல் பயத்தில் ஆயிரக்கணக்கான தலித்துக்கள் மும்பை பயணத்தை கைவிட்டுவிட்டார்கள். அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு தலித்துக்கள் திரண்ட இந்த பெருந்திரளை காவல்துறையின் கட்டுக்குள் கொண்டு வரும் இந்த அரிய சந்தர்ப்பத்தை கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

தலித்துகள் ஒன்றிணையும்போது என்ன விசை உருவெடுக்கும் எனும் அச்சத்தை இந்த வருடாந்திர நிகழ்வு சாத்தியப்படுத்துகிறது. அது தலித் ஒற்றுமைக்கான நம்பிக்கையை விரிவடையச் செய்கிறது. டிசம்பர் ஆறாம் நாள் நிகழ்ச்சியால் மாநிலத்தில் பெருகிவரும் தலித் நம்பிக்கையில் விஷத்தைக்கலக்க ஊடகங்கள் திட்டமிட்டன.

மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறத் தயாராக இருக்கிற இரண்டு மும்பை சிவாஜி நகர வாசிகளின் புகைப்படத்தை முதல் பக்கத்தில் பிரசுரித்தது மும்பை நாளிதழ். ஒரே ஒரு நாள் தாங்கள் வசிப்பிடத்து தெருக்களில் தலித்துக்கள் நடமாடுவதைத் தவிர்க்கும் பொருட்டு இந்தச் செய்திகள் வெளிப்படையாகச் சித்தரிக்கப்பட்டன. 5.12.2006 ல் வெளியான தி டெய்லி நியூஸ் அண்ட் அனலைசிஸ் நாளிதழில் " கத்தி முனையில் வசிக்கும் சிவாஜி நகரக் குடியிருப்போர்" என்கிற கட்டுரை மூலமாக உயர் ஜாதிக்காரர்களின் அசௌகரியங்களைப் பட்டியலிடுகிறார் கட்டுரையாளர் ஹைனா தேஸ்பாண்டே.ஒருதலைப் பட்சமான,முன்முடிவுகளோடு புனையப்பட்ட அந்தக்கட்டுரை  பிரிட்டிஷ் காலத்தில் எழுதப்பட்ட நேட்டிவ்ஸ், ஈவென்ட்ஸ் எனும் ஆங்கிலக் கட்டுரையை நினைவுபடுத்துகிறது.

பலர் தங்களின் அன்றாட வேலைகளை மாற்றியமைத்துக்கொண்டார்கள். வீடுகளின் பாதுகாப்பை மேம்படுத்திக் கொண்டார்கள்.தங்களின் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. தங்களுக்குள்ளே ஒரு தடுப்புச்சுவரை ஏற்படுத்திக்கொண்டார்கள். இரவு நேரத்தில் இறைச்சலாக ஒலிபெருக்கி அலறுகிறது. தலித்துக்கள் வீடுகளின் சுற்றுப்புறத்தை அசிங்கமாக்குகிறார்கள். நடைபாதையில் குளிக்கிறார்கள். உடைத்துவிடுவார்களோ என்கிற பயத்தில் கார்களை வெளியே எடுப்பதில்லை. ஒரு நாள் முழுக்க நாங்கள் வீட்டுச்சிறையில் இருக்கிறோம் என்னும் கூப்பாடுகளை ஊடகங்கள் வெளியிட்டன.

// அம்பேத்கரைப்பின்பற்றும் ஜனங்கள் கிராமங்களினின்றும், நகரங்களினின்றும் மும்பையை நோக்கி வந்து குவிவதால் உண்டாகும் அசௌகரியங்கள் தெருக்களில் சிறுநீர்கழிப்பதும், மலம் கழிப்பதும், மட்டுமல்ல. பெண்களைச்சீண்டுவது, அரசுப் பொதுப் போக்குவரத்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது, என நீள்கிறது. மும்பை மக்களின் பெருமையும் மேன்மையும் அவர்கள் அதீத பொறுமையைப் படித்துக்கொண்டதால் கிடைத்தது. ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்கு தலித்துகளின் அதிகாரத்தால் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதே எனக்குத்தெரிந்த அர்த்தம். தலித்துகள் வசிப்பிடங்களில் இப்படியான அடக்குமுறைகளை எங்கும் காணமுடியாது. அவர்கள் தேர்தலில் போட்டியிடட்டும், அதிகாரப்பகிர்வுக்காகப் போராடி அதன்மூலம் இந்தச்சமூகத்துக்குள் நுழைவதை வரவேற்கிறேன். அதற்காக மும்பையை நாசமாக்காமல் இருக்கட்டும். //

என்று 5.12.2006 தேதி ஆஃடர்நூன் டெஸ்பாட்ச் அண்ட் குரியர் இதழின் ஆசிரியர் மார்க் மனுவேல்  தலித்துக்களின் மீதான தன் வெறுப்பை வெளிக்காட்டும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.இதுதான் சமூக முரண்பாடுகளின் மீது ஒட்டுமொத்த ஊடகங்கள் கொண்டிருக்கும் பொதுப் புத்தியாக இருக்கிறது. கயர்லாஞ்சிக் கொடூரம் மார்க் மனுவேலின் புத்திக்கு தலித் ஒடுக்குமுறை யாகப்  படவில்லை. இதற்கு முன்னால் அரசியல் கட்சிகளாலும் மதவாதி களாலும் சிவாஜி நகர் பூங்காவில் வருடம் முழுவதும் கூடங்கள் கூட்டப் படுகிறது. பொதுச் சொத்துக்களையும், தனியாரின் உடமைகளியும் சூரையாடிக் கொள்ளையடிக்கும் அந்தச்சீரழிவுகள் ஒரு போதும் இதழியலாளர்களின் கண்ணை உறுத்துவதில்லை.

 தங்களின் வசிப்பிடத்துவழியாக ஒரு நாள் கூட நடமாட அனுமதிக்காத மேட்டிமைப்புத்தி தான் இந்த எழுத்து.மேலோட்டமாகப்பார்த்தால் இது மிகச்சரியான அனுகுமுறை மாதிரித்தோன்றும்.ஆனால் இதே அனுகுமுறை ஏனைய பெருந்திரள்களுக்குப் பொருந்தாது.அதற்கு உளவியல் ரீதியன, பரிணாம ரீதியான தத்துவங்களை மேற்கோள் காட்டி அதை ஒரு உன்னதமான நிகழ்வாக உருமாற்றும் தந்திரம் வெளிப்படும். கவர்ஸ்டோ ரியாக.

என் நிலம் எங்கே,எனது இடம் எங்கே,என் தன்மானம் எங்கே,என்ஏதிர்காலம் எங்கே,நான் யார் என்கிற கேள்விகளைப் புதைத்து விட்டு அதைத் தேடியலைகிற 20 சதமான தலித்துகளை புரிந்துகொள்ள கொஞ்சம் மனிதாபிமானம் வேண்டும். அதற்குத்தான் இங்கே பெரும்பஞ்சமாக இருக்கிறது.அதிலிருந்து நீள்கிற ஈரம் தோய்ந்தகைகளை அவர்கள் அறிவார்கள். 

ஒரு சில நேர்மையான பத்திரிகையாளர்கள் இதில் விதிவிலக்காகிறார்கள். சாய்நாத்தும் , ஜோதி புனிவானியும் பிரதான ஊடகங்களின் சார்புத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். கடந்த நாற்பது வருடங்களாக சிவசேனா நடத்தும் தசராக் கொண்ட்டாட்டங்களால் மொத்த மும்பையே திணறடிக் கப்படுவது ஏன் ஊடகங்கலின் கண்ணில் படுவதில்லை. பால்தாக்கரே வெறிப் பேச்சால் ஒவ்வொரு முறையும் சிவாஜி பூங்காவின் சுற்றுவட்டாரம் சூரையாடப் படும்போது மட்டும் அந்தப்பகுதிக் குடியிருப்போர் ஆனந்தம் அடைகிறார்களா?. வருடாவருடம் பத்து நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டுமொத்த மும்பை கொண்டாடும்போது, போக்குவரத்து சீர்கெட்டு மாற்றமடைகிறது, ஒலிமாசுபடுகிறது,கடல்நீர் மாசுபடுகிறது, சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு வருடத்தில் ஒரு நாள் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்திவிட்டுப் போகும் சைத்ய பூமி நிகழ்வை மட்டும் பூதாகரப்படுத்துவது ஏன். தாக்கரேயின் மனைவி மீனாதாய் தாக்கரேயை இழிவுபடுத்தியதாக சொல்லி ஜுலை 2006 ல் சிவசேனா கும்பல் நடத்திய, அட்டகாசங்களையும், சூரையாடல்களையும் எதிர்த்து எந்த விதமான கருத்தும் தெரிவிக்க துணிச்சலில்லாததுதான் உங்கள் பத்திரிகை நீதியா?.என்று புனிவாணி கேள்வி எழுப்புகிறார்.

25.11.10

மறதியெனும் புதை சேற்றுக்குள்

'mission scandal eradication' திருப்திகரமாக முடிந்தது.

இனி  புரட்சிப்பெண் vs சுதந்திரப்போராட்ட தியாகி வழக்கில் ஊடகங்கள் முழுமையாகக் கவனம் செலுத்தும்.உலக வரலாற்றில் முதன் முறையாக அரங்கேறும் இந்த குடும்பச் சண்டையின் ருசிகர ,எதிர்பாராத, ஹேர்பின் திருப்பங்கள் ஆகியவற்றை தொகுத்துவழங்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன அச்சு மற்றும் மின்னனு ஊடகங்கள். இது போதாதென்று 162 கோடி மெகா பட்ஜெட்டில் மொழிமற்றம் செய்யப்பாடப்போகிறது ஒரு உலகமஹா காவியம்.அதற்கும் கணிசமான பக்கங்கள் ஒதுக்கியே தீரவேண்டும்.

மறதி எனும் புதைசேற்றில் நுற்றாண்டு  சூதாட்டம் தொடர்கிறது கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எத்தனை காலம் தொடரும்?

7.11.10

ஓபாமாவிடம் கேட்கப்பட்ட அசட்டுக்கேள்வி.

தீபாவளிக்காக கரியாக்கப்பட்ட பொருளாதாரத்தைவிட அதிகம் திரு.பாரக் ஓபாமாவின் வருகைக்காக இந்தியா ஒதுக்கியது.செலவுக்கதிகமான எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் கூடிக்கொண்டே போனது. எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள்,கருத்து மோதல்கள் என ஊடகங்களின்மூலம் அல்லோல கல்லோலப்பட்டது தேசம்.சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளின் விளம்பர நேரத்தில் இடம் பிடிக்காதது மட்டும் தான் குறை. எல்லாம் ஒரு அமெரிக்க அதிபர் சம்பிரதாய வருகைக்காக.

வந்தவர் மும்பை புனித சேவியர் கல்லூரியின் மாணவர்களோடு உரை யாடினார். கேள்விகளும் பதிலுமான அந்த நேரத்தை உலகம் உற்றுக் கவனிக்கிறது. ஒரு மாணவி 'ஏன் பாகிஸ்தானை ஒரு தீவிரவாத நாடாக அறிவிக்கவில்லை, ஏன் இன்னும் நீங்கள் நட்பு பாராட்டுகிறீர்கள்' என்று கேட்டிருக்கிறாள். இந்தக்கேள்வியும் அதற்கு திரு.பாரக் ஓபாமா சொன்ன பதிலும் தான் இந்த நிமிஷத்தின் தலைபோகிற பிரச்சினையாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. நல்ல வேளை ஜாவேத் அக்தாரை மெல்லமாக பந்துவீசச் சொல்லுங்கள் என்று கேட்கவில்லை.

'டைம்ஸ் நௌ' தொலைக் காட்சியின் நேரலையில் மும்பைத் தாக்குதலுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கொடுக்கபட்டுக் கொண்டிருக்கிறது.பிரதம செய்தியாளர் மும்பை,டெல்லி போன்ற நகரங்களின் நிருபர்களோடு தொடர்பு கொள்கிறார் நுனிநாக்கு ஆங்கிலத்தில் அவர்களும் பதறுகிறார்கள்.அங்கிருந்து இஸ்லாமாபாத்துக்கு தொடர்புகொண்டு பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செயலாளரிடம் பேசுகிறார்.தொழில் நுட்பத்தின் சகல தகிடு தத்தங்களையும் உபயோகித்து  அவரது பதிலை ஒரு எறிகிற பிரச்சனையாக்குகிறது தொலைக் காட்சி வியாபாரம்.

அடிப்படையில் அமெரிக்கா ஒரு ஆயுதவியாபார தேசம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இரண்டாவது பாகிஸ்தானைக் 'கிள்ளுகிறான் முள்ளுகிறான்' என்று சொல்லி பிராது கொடுக்கிற அளவுக்கு அமெரிக்கா ஒன்றும் சட்டாம்பிள்ளையில்லை.அது ஒரு உலக நாட்டாமையும் இல்லை.உலகத்துக்கே நீதிசொல்லுகிற அளவுக்கு மனிதவளமும், அறிவுத் திறனும் இருக்கும் 117 கோடி ஜனத்தொகை கொண்டவர்கள் நாம்.அதை மறந்து அமெரிக்காவிடம் நியாயம் கேட்கிற அளவுக்கு இந்தியா கையறுநிலைக்குப் போய்விட்ட காரணம் என்ன?பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவித்து விடுவதன் மூலம் இந்தியாவுக்கு என்ன லாபம்.லாபமிருக்கா இல்லையா வெனத்தெரியாது.ஆனால் அறிவித்தால் அது அமெரிக்காவுக்கு எவ்வளவு நஷ்டம்.

போபால் விஷ வாயுக் கசிவினால் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கும் அவலம்,பிடி கத்திரிக்காய்,காப்புரிமை,அனு ஆயுதபரவல், சந்தைப் பொருளாதாரம் போன்றவை குறித்து அமெரிக்காவிடம் கேட்கவேண்டிய கேள்விகள் ஆயிரமாயிரம் இருக்கிறது.அது பற்றி அந்தப்பெண்ணுக்கு தெரியுமோ தெரியாதோ. 

இதையெல்லாம் தெரியாத ஒரு மாணவியின் அசட்டுக்கேள்வியை இந்த தேசத்தின் கோரிக்கையாக்கப் பார்ப்பது எவ்வளவு கபடம் நிறைந்தது. இது ஒரு மாணவியின் அசட்டுக் கேள்வி மட்டுமல்ல ஒரு 63 ஆண்டுகாலம் ஊட்டிவளர்த்த வெறுப்பின் பிரதிபலிப்பு.ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்ட இந்த பகைக்குப்பின்னாடி மிகப்பெரிய மேல்மட்ட அரசியல் இருக்கிறது. அதற்குப் பின்னாடி சர்வ நிச்சயமாக ஊடகங்கள் இருக்கின்றன.(அந்தக்கேள்விக்கு ஒரு நீண்ட பதிலைச்சொல்லிய திருமிகு ஓபாமா இறுதியில் 'இரு நாடுகளும் உட்கார்ந்து பேசித்தீர்க்கவேண்டிய விடயம் இது' என்று சொல்லுகிறார்.)இந்த ஊடக நாடகத்தின் தொடர்ச்சியாக இன்று மாலை அரசு முறைச் சந்திப்பாக பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை சந்திப்பதையும், 20 நிமிட நேரம் தனியே உரையாடுவதையும் அறிவிக்கிறது. ஆறு அம்ச ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகிறது என்பதை போகிறபோக்கில் சொல்லி விட்டுக்  கடந்துவிடுகிறது.

சாமான்யன் முதல் அறிவு ஜீவி வரை எதிரும் புதிருமாக அடித்துக்கொண்டு பொழுதுபோக்க புனித சேவியர் கல்லூரி மாணவியின் கேள்வி.மேல்மட்ட இந்தியா இன்னும் கொழிப்பதற்கு தங்கு தடையில்லாத ஒப்பந்தங்கள்.

17.10.10

சீனச் சிறைகளும் பான்பராக் எச்சில் விடுதலைகளும்

இந்த வார 20.10.2010 ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.'சீனாவின் அமைதியைக்கெடுத்த அமைதிப்பரிசு'.திரு ஆரோக்கியவேல் எழுதியிருக்கிறார்.சீனக்கவிஞரும் தியானமென் எழுச்சியின் தலைவர்களில் ஒருவருமான கவிஞர் 'லியூ சியோபோ'வுக்கு கிடைத்த நோபல் விருதைப்பற்றியதான கட்டுரை அது.இந்தக்கால எழுத்துக்கள் தனித்து நிற்கின்றன.நோபல் விருது கிடைத்தது தெரியாமல் சிறக்குள்ளிருக்கும் லியூ வுக்கு அவரது மனைவி மூலம்,தகவல் சொல்லப்பட்டதாகவும்.தகவல் சொல்லப்போன மனைவி என்ன ஆனாள் என்று தெரியாமல் போனதாகவும் எழுதிக்கொண்டே வந்து 'உலகின் மிகப்பெரிய  சிறைக்குப்பெயர்தான் சீனாவோ' என்று முடிக்கிறார். நல்லா இருக்குல்ல ?. இந்த முடிவின் வார்த்தைகள் ஒரு கவிதைபோல வந்து விழுந்திருக்கிறது.அருமை ஆரோக்கியவேல்.

0

ஒரு நாடு அதன் மக்களுக்கு எதுவாக இருக்கவேண்டும்.சீனா உண்மையிலேயே சிறையா இந்தக்கேள்விகள் ஊடகங்களின் வழியாக நம்மை வந்து சற்று ஆட்டிவிட்டுப்போகிறது.இது ஒன்றும் புதியதல்ல.உள்ளூர் அரசியல் வாதிகள் தகரம் கண்டுபிடிப்பதற்குமுன்னமே உண்டியல் கண்டுபிடித்தவர்கள் என்று வசைபாடுவதும் அமெரிக்கா தனது இலக்கியங்கள் அணைத்தையும் பொதுவுடமைக்கு எதிராகாக்கூர்தீட்டி விடுவதும் புதிதல்ல.தனது காமிக்ஸ் கதைகள்தொடங்கி உலகு புகழ் ரா ரா ரஸ்புதீன் பாடல்கள் வரை ரஷ்யாவை எதிரியாக்கியிருக்கும் அமெரிக்கா.அதன் சாகச கதநாயகர்களான ஜேம்ஸ்பாண்டுகள் ஒத்தை ஆளாய் சீனாவுக்குள்,ரஷ்யாவுக்குள்,தென்கொரியாவுக்குள்,க்யூபாவுக்குள் புகுந்து அதகளப்படுத்தி ஜெயித்துவிட்டு கடல்வழியே நாயகியோடு சல்லாப பயணம் மேற்கொள்வார்கள்.

அவர்களது ஜனங்களை சிந்திக்கவிடாமல் செய்ய அங்கே அதுதான் மேம்படுத்தப்பட்டபோதை. நமக்குத்தான் நாட்டுப்போதைகள் அதிகம் கிடைக்கிறது. அவை யாவன என்று கேட்கறீர்களா?. ஒண்ணா ரெண்டா சொல்லுவதற்கு. சின்ன வயசில் கம்யூனிசம் என்றால் இருக்கிறவர்களிடம் வழிப்பறி செய்வது என்று சொன்ன உள்ளூர் காங்கிரஸ் தாத்தா முத்தையாவின் அறியாமைதான்  எனக்கான அறிமுகம்.என்னைப்போல 90 சதமான இந்தியர்களுக்கும் அடித்தட்டு ஜனக்களுக்கான அறிமுகம் அதுவாகத்தான் இன்னும் இருக்கும். அதுபோலத்தான் சீனாவும் ஒத்தைக்கண்ணன் அறிமுகம். இந்திய சீன எல்லைப்போரின் போது

'ஐ சக்க ஐ அரைப்படி நெய்;
சீனாக்காரன் தலையில
தீயப்பொருத்தி வை'

என்கிற தேசபக்தி ரைம் மூலம் சீனா அறிமுகமானது.பக்கத்து தெருக்காரனிடம் சண்டையென்றால் சொந்தத்
தெருக்கார ஈ, காக்கா, குஞ்சுகளும் எதிரிப்பட்டை பூசியே தீரவேண்டும்.இப்படியான சின்ன ஆனால் மிகப்பெரிய உளவியல் பாதிப்போடு தான் எல்லோரும் இயங்கவும் வேண்டும் இல்லையா ?.சமீபத்தில் சீனா பற்றிய தேடலில் கூகுலுக்கும் சீனாவுக்கும் ஏற்கனவே வாய்க்காத் தகறாராகிப்போனது தெரியவந்தது. அங்கே இருக்கிற பைடு டாட்காம் கூகுலுக்கு வியாபார எதிரியாகிப்போனதால் விக்கிப்பீடியாவில் சீனா பற்றிய தகவல் இல்லை. அதானாலாயே அது இரும்புத்திரை நாடு என்று சொல்லிவிடலாமா?.

ஒரு சராசரி சீனக்குடிமகனுக்கும்,பணக்கார சீனக்குடிமகனுக்கும் உள்ள வருமான இடைவெளி 362 டாலரிலிருந்து,1142 டாலர் என்று சொல்லுகிறது பிரிட்டிஷ் பத்திரிகை.அதுதான் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியென்றும் சொல்லுகிறது. இதை ஒருநாளைக்கு நாப்பது ரூபாய் கூட கூலிகிடைக்காமல் திண்டாடும் என் 20 சதமான இந்தியர்களிடம் நான் எப்படி விளக்கிச் சொல்லமுடியும். 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'ஒரு குடும்பம் ஒரு குழந்தை' திட்டத்தால் 250 கோடி ஜனத்தொகை கட்டுப்படுத்தப்பட்டதாக அதுவே சொல்லுகிறது.நிலப்பரப்பிலும் மக்கட்தொகையிலும் நமக்கு நிகரான சீனாவின் தனிநபர் வருமாணம்,தனிநபர் சுகாதாரம் எல்லாம் திருப்தியளிக்கக்கூடிய அளவில் இருக்கிறது என்பதை யாரும் சொல்லுவதில்லை.  clean energy என்று சொல்லப்படுகிற இயற்கை எரிசக்தியை உபயோகிப்பதில் உலக நடுகளில் முதலிடத்தில்  சீனா நிற்கிறது என வாஷிங்டன் போஸ்ட் இதழ் சொல்லுகிறது.கட்டிடம்,காகிதம்,தீக்குச்சி போன்ற தளவாடங்களுக்கு மரத்தை வெட்டுவதில்லை என்கிற முடிவெடுத்ததால் தீப்பெட்டி தயாரிக்கும் பழய்ய தானியங்கி எந்திரங்கள் தென் தமிழ்நட்டுக்கு வந்திறங்கிக் கொண்டிருக்கின்றன.

அதை வாங்கப்போன ஒரு தீப்பெட்டித் தொழிலதிபர் வார்த்தைகளில் சொல்லுவதானால் 'அங்கே சோத்துக்கில்லாமல் வற்றிப்போன கண்களோடு எந்தமனிதனையும் பார்க்கமுடியாது.பிச்சைக்காரர்கள் மருந்துக்கு கூடக்கிடையாது' என்கிற கனிப்பு பாரபட்சமானதாக இருக்கமுடியாது.இது போதாதா வேறென்ன வேண்டும்.ஜனநாயகம் வேண்டுமாம், மதநம்பிக்கைக்கான விடுதலை வேண்டுமாம்.ஹப் புக்கு போக உரிமை வேண்டுமாம்.ஐயயிரம் ரூபாய்க்கு ரீபோக் ஷூ எடுக்க அனுமதி வேண்டுமாம்.5 டாலர் கொடுத்து காப்பிகுடிக்க விடுதலை வேண்டுமாம்,பொது இடங்களிலும்,தொடர்வண்டிகளிலும் பான்பராக் எச்சிலைத்துப்புகிற ஜனநாயகம் வேண்டுமாம்.தாய்ப்பால் தவிர இந்த பூமியின் அணைத்து படைப்புகள் மீதும் விலைப்பட்டியல் ஒட்டிவிடுகிற போட்டிவேண்டுமாம். அழிக்கவே முடியாத லஞ்சமும் ஜாதியும் பிணைந்துகிடக்கிற சௌஜன்யம் வேண்டுமாம். இதெல்லாம் கொடுக்காத சீனா ஒரு சிறையென்றால், சிறையே.

1991 அல்லது அதற்கு முந்தைய தேர்தலா என்று தெரியவில்லை வேட்பாளர்களின் சொத்துமதிப்பை இதே ஆனந்த விகடன் வெளியிட்டது. அதை மீண்டும் பொக்கிஷம் பகுதியில் போட்டுக் காண்பித்தால் இந்த விடுதலை பெற்ற ஜனநாயம் சம்பாதித்தது எவ்வளவு  என்று தெரிந்துகொள்ளலாம்.

4.10.10

விலகாத இருள்.

அனுகுண்டை வெடிக்கலாம்
வின்கலத்தை ஏவலாம்
நாற்கர சாலையமைக்கலாம்
ரக ரகமாக நூடுல்ஸ் சமைக்கலாம்
கணினி இறக்குமதி செய்யலாம்
வல்லுநர்களை ஏற்றுமதி செய்யலாம்
வல்லரசுக் கனவுகூட   நனவாகலாம்
இந்தியாஒளிர்கிறதென்று ஒலிபரப்பலாம்.


எனினும்....

அந்திக்கருக்கலில்,முந்திக்காலையில்
நடைபாதைகளில் நுழைகையில்
வாகன வெளிச்சம் கூச
பதறி எழுந்து தலைகுனியும்
கிராமத்து சகோதரிகளோடு
இன்னும் இருண்டேகிடக்கிறது
என் தேசத்தின் முகம்.

21.9.10

காஷ்மீர். பனியில் எறியும் அணையாத தீ .

இந்தியாவின் நீளத்தைக் குறிக்கும், அளக்கும் வடக்கு முனை.அப்புறம் ஆப்பிள் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் மாநிலம்.பனிமலைகள், எம்ஜியார் இதயவீனையில் ஒண்டர்புல்,ப்யூட்டிபுல்  என்று குதித்து ஓடிக்காட்டிய பசேல் பிரதேசம் இப்படியான குளிச்சியான அல்லது இதமான நினைவுகளைத்தந்து கொண்டிருந்த மாநிலம். தீராத துப்பாக்கிச்சத்தங்களோடே செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.ஒரு நடுத்தரவயசுக்காரன் நினைக்கலாம் இது எண்பதுகளில் ஆரம்பித்த பிரச்சினை என்று.ஆனால்  இந்த தேசத்தின் விடுதலைக்கான தேதி குறிக்கப்பட்ட நாளில் இருந்து பிரச்சினையோடே தொடர்கிறதுதான் கஷ்மீரின் நிஜ வரலாறு.

இந்தியா சுதந்திரமடைந்த போது ஜம்முகாஷ்மீர் ஒரு மன்னராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது.மன்னன் ஹரிசிங் என்ன காரணத்தினால் ஆண்டு அனுபவிக்க அனுமதிக்கப்பட்டான் எனத்தெரியவில்லை.ஆமாம் ஜம்மு காஷ்மீர் பகுதி இந்தியாவோடு இணைக்கபடவில்லை.இங்கிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானும் பிரிவினையின் பேரில் பெருக்கெடுத்தோடிய ரத்தம்.ரெண்டு பக்கத்துப் பெண்டுகளுக்கும் நேர்ந்த சொல்லமுடியாத மானபங்கம். ஒரு பெரும் வரலாற்று சோகம்.பரஸ்பரம் இரண்டு பக்கத்திலும் நடந்த உயிர்ச்சேதம் ஒரு உலகப்போரை மிஞ்சும்.

பிரிந்துபோன கையோடு அங்கிருந்த சிறுபாண்மை மக்கள் விரட்டப்பட்டார்கள்.பின்னர் அது ஒரு முஸ்லீம் மத அடிப்படை நாடானது.கைக்கெட்டும் தூரத்தில் அனாமத்தாக விரிந்துகிடந்த இயற்கை வளமும், வற்றாத நதிகளும் தகதக்கும் ஏரிகளும் நிறைந்து கிடக்கும் ஒரு பிரதேசத்தை அபகரிக்க யாருக்குத்தான் ஆசை வராது.ஆசை வந்த சீனாவும்,பாகிஸ்தானும் 20 மற்றும் 37 விழுக்காடு காஷ்மீரை கையகப்படுத்திக் கொண்டன.மீதியிருந்த 43 சதமான காஷ்மீரை ஹரிசிங் அனுபவித்து வந்தான்.சுதந்திரத்துக்கு முன்னமும் கூட அது இந்துக்களால் ஆளப்பட்ட முஸ்லீம் பகுதியாகும்.அப்போதும் கூட நேரு தலைமையிலான அரசு அது பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் பாகிஸ்தான் அதிபர் ஜின்னாவின் ஆசைப்படி அந்தப்பகுதியிலுள்ள மலைஜாதி மக்களும் பாகிஸ்தான் துருப்புக்ககளும் இணைந்து மிச்சக்காஷ்மீரை பிடிக்க நுழைந்தனர்.

தொடர்ந்து சண்டையால்  மன்னரிடமிருந்து காஷ்மீரை முழுவதும் பிடுங்க முயற்சி செய்தனர். நொந்துபோன ஹரிசிங் அப்போது நேருவிடம் ராணுவ உதவி கோரினார்.அப்போது இந்தியாவின் வியாபாரத்தை இழந்து பர்மாவில் முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதி மவுண்ட் பேட்டன் ஆலோசனையின்பேரில்  காஷ்மீர் இந்தியாவோடு இணைய வலியுறுத்தப்பட்டது. மகாராசன் வேறுவழியில்லாமல் தான் ஆண்ட பகுதிகளை 26.10.1947 அன்று இந்தியாவுக்கு கைமாற்றினான். அப்போதும் கூட துள்ளியமான எல்லைகளை வறையறுக்காமல் விட்டு விட்டார் நவ இந்தியச் சிற்பி பண்டிட் ஜவஹர்லால் நேரு.

இணைக்கப்பட்ட காஷ்மீர் ஒரு secular அரசின் மாநிலமாக இருந்தது.காஷ்மீர் பகுதிகளுக்கென்று சிறப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது.ஆனாலும் பாகிஸ்தான் ஆக்ரமித்த பகுதியும் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியிலுள்ள முஸ்லீம் ஜனத்தொகையும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய முஸ்லீம் பிரதேசமாக மாறியது.1947 ல் இருந்தே அவர்களின் கனவெல்லாம் பகிஸ்தானோடு இணவதாகவே இருந்தது.எனவே மொழி,கலாச்சராம்,இனம் இவைகளின் அடிப்படையில் தாங்கள் பாகிஸ்தானுடனேயே இணைய விரும்புவதாக காஷ்மீர் மக்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வந்தார்கள். காஷ்மீர் முஸ்லீம்கள் எங்களோடு இருப்பதற்கே நாங்கள் ஆசைப்படுகிறோம் ஆனால் அவர்களின் விருப்பத்தை எதிர்க்கவும் மாட்டோ ம் என்னும் மழுப்பல் அறிக்கை விட்டார் நேரு.

பிரிட்டிஷ் காலத்திலிருந்தே உருவான இந்து முஸ்லீம் பிரிவினை.எண்பதுகளில் உருவான jklf இயக்கம்,ஆப்கன் தாலிபான்களின் ஆதிக்கம்,இந்தியவில் உருவான ராமஜன்ம பூமி விவகாரம் அதைத்தொடர்ந்து இடிக்கப்பட்ட
பபாபர் மசூதி என நிலைமை மேலும் மேலும் விரிசலடைந்து கொண்டே போனதேயொழிய ஒரு நிரந்தரத் தீர்வு
எட்டப்படவே இல்லை.காஷ்மிர் எல்லையில் 100000 ராணுவவீரர்களும்,100000 எல்லைக்காவல் படையினரும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு வருடத்திற்கு 300 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களைப் பலியிடுகிறது.பனிப்பிரதேசத்தில் எல்லைக்காவலில் நிற்கும் ராணவ வீரனின் சம்பளம், சமதளத்தில் இருக்கும் வீரனை விட இரண்டு மடங்கு அதிகம்.அவர்களுக்கென உருவாக்கப்படும் ஆடை,உணவு,போக்குவரத்து ஆகியவை அம்பானி,அமிதாப்,மல்லையா,smகிருஷ்ணா,லட்சுமி மிட்டல் போன்றவர்களின் தரத்துக்கு இணையானது.அதற்காக இதுவரை ஆன செலவு  100000 கோடி என்று புள்ளிவிபரம் சொல்லுகிறது.

அந்தப்பணத்தில் சீனப்பெருஞ்சுவர் போலொரு அதிசயத்தை நிர்மானித்திருக்க முடியும்.வடக்கிலிருந்து தெற்காக ஒரு செயற்கை ஆறு உருவாக்கியிருக்க முடியும்.பெருகிவரும் லஞ்சத்தை தடுக்க உருப்படியாய் எதாவது செய்திருக்க முடியும்.வேலையின்மை,பசிக்கொடுமை,பட்டினிச்சாவு இவற்றையெல்லாம் மட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனாலும் நமக்கு வீம்புதான் முக்கியம். அப்படி இருந்தும் கிட்டத்தட்ட 10,15 கிலோமீட்டர் பகுதிக்குள் ஊடுறுவிய
பாகிஸ்தான் துருப்புக்களை தடுக்க முடிந்ததா?. பெரும் எண்ணிக்கையில் வீரர்களை இழந்த கார்கில் யுத்தம் நடந்ததுதான் மிச்சம்.இவை எல்லாம் எதற்காக பொலித்தகராறுக்காக மட்டுமே.கூடப்பிறந்த கிச்சா நாயக்கரும்,
கிட்ண நாயக்கரும் பத்துவருடம் கோர்ட்டுக்கு அலைந்து, வீம்புக்காக வீடுவாசல் இழந்து,நிம்மதியிழந்த கதைபோலத்தான் இந்தப்பொலித்தகராறு கதை.ஆனால் இது கொஞ்சம் பெரிய பொலி.

சர்வதேச அரசியல் மற்றும் வரலாற்று நோக்கர்கள் இது எப்போதோ முடிந்திருக்கவேண்டிய பிரச்சினை என்பதில் திடமாக இருக்கிறார்கள்.இந்தப்பிரச்சினையில் இரண்டு யுத்தங்கள் நடைபெற்றிருக்கிறது.1989 க்குப்பிறகு நிரந்தரமான பதட்டம் அங்கே குடிகொண்டிருக்கிறது.கட்டப் பஞ்சாயத்து நாட்டாமை ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு தீர்க்கமான முடிவைச்சொல்லாமல் தீயை அணைக்காமல் குளிர் காய்கிறது.அமெரிக்காவின் கைப்பாவையாக இருக்கும் ஐநா சபை தலையிட்டு இதுவரை ஒரு குழாயடிச்சண்டை கூட தீர்த்துவைக்கபடவில்லை.அப்படிச் சண்டையில்லாத பகுதியில் அமெரிக்காவே குசும்பு இழுத்து சண்டைபோடும்.இது வரை 120 மேற்பட்ட படையெடுப்புகளை நிகழ்த்திய போர்வெறி அமெரிக்க அரசின் ரத்தில் ஓடுகிறது.அதை விரல் நீட்டி குற்றம் சொல்லமுடியாத முதுகெலும்பில்லாத அரசுகளில் ஒன்றாக நீடிக்கிறது இந்தியா.

நமக்கு எல்லாமே அமெரிக்காதானே?. அதே பாணி அனுகுமுறைதான்.ஒரு பகுதியில் பதட்டம் உருவாவதற்கான எல்லாச்சூழலையும் உருவாக்கி விட்டு,பதட்டம் வந்த பின் தீவிரவாதப் பகுதியாக அறிவிப்பது.அப்புறம் ராணுவத்தையும் சண்டையையும் கொண்டாடுகிற அமெரிக்க மனோபவம் சன்னஞ்சன்னமாய் ரத்ததில் ஊறிவிட்டது.கேள்விகளற்ற மூடப்பற்றும்,சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட திருவுருவாக்கலும் ராணுவத்தின் மீது செயற்கையாய் வரையப்படுகிற மாயை அவர்களைப்போலவே. ரெட்டைக் கோபுரத்தை தகர்த்த போது அமெரிக்காவை விட இந்தியா தான் பெரும் குலுங்கு குலுங்கியது.அமெரிக்காவின் சோகம் நமது சோகம்.அதன்பிறகு எடுக்கிற சினிமா,பேசுகிற சகஜ வார்த்தைகளில் ஓசாமாபின் லேடன் எதிரியாக்கப்பட்டுவிட்டான்.அமெரிக்காவுக்கு எதிரி நமக்கு எதிரி.

பனையிலிருந்து விழுந்த அப்பனுக்கு எலும்பு கூடிவர வீட்டில் ஆட்டுக்கால் சூப்பு செஞ்சாளாம் அம்மெக்காரி.
அதை எடுத்துட்டுவந்து சேக்காளிகிட்ட பெருமை பீத்தினானாம். சேக்காளி சொன்னானாம் 'எங்கப்பனுக்கும் ஒரு நா பனையிலிருந்து உழுந்து கால் ஒடிஞ்சு போகும், அப்போ நானும் குடிப்பெண்டா ஆட்டுக்கால் சூப்பு'
என்று .அதே தான் நமக்கும். அங்கே 9/11 இங்கே 26/11.தீவிரவாதத்துக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் இப்போது அமெரிக்காவின் பிரிக்கமுடியாத கூட்டாக இந்தியா.கடந்த பத்துவருடங்களாக வந்த தலைப்புச் செய்திகளை கவனித்தால் ஒன்று புரியும்.இந்த ஊடகங்கள் ஒரு திருவிழாவையும் நிம்மதியாகக் கொண்டாட விடவில்லை.
சுதந்திர தினம்,குடியரசு தினம்,தீபாவளி,விநாயகர் சதுர்த்தி,காமன்வெல்த் போட்டி எல்லாவற்றிற்கும் முன்னாடி
தீவிரவாதிகளின் ஊடுறுவல் என்கிற செய்தி வந்தே தீரும். ஒரு திட்டமிட்ட வெறுப்பை குடிமக்களின் ஆழ்மனதில்
கொண்டுபோய் வைத்துவிட்டு அதை அப்போதைக்கப்போது நினைவுபடுத்துகிற இழிவான தந்திரம் இது.

ஆதலால்தான் அந்தப்பகுதி மக்களின் உயிர்,உடமைகள்,மானம்,கற்பு,நிம்மதி எல்லாமே நமக்கு இழிவானதகத்தெரிகிறது.காஷ்மீர் தீவிரவாதப்பகுதியாக அறிவிக்கப்பட்டதிலிருந்து தினம் தினம் பிடித்துக்கொண்டு போகப்படு
அப்பாவி பொது ஆண்கள் திரும்புவதே இல்லை.காணாமல் போன ஜனத்தொகை லட்சத்தை நெருங்குகிறது.
அவர்கள் விட்டுச்சென்ற வீடு,மனைவி,மக்கள், கனவு எல்லாம் சின்னாபின்னமாகித் தெருவில் அலைகிறது.
அப்படி அலைகிற பெண்கள் தாங்கள் விதவையா சுமங்கலியா என்ற குழப்பத்திலேயே ஒவ்வொரு இரவையும்
கடத்துகிறார்கள்.திடீரென்று ராணுவ முகாமிலிருந்து ஒரு அழைப்பு வரும்.'இங்கே ஒருவவர் இருக்கிறார், உடனே வந்து அது உங்கள் கணவரா என்று பாருங்கள்' என்கிற தெய்வ வார்த்தையோடு. கட்டாயம் அது எல்லாமே இரவு நேரங்களாக அமைந்துவிடும்.சிங்கத்தின் குகைக்குள் நுழைந்து திரும்புமா மான்குட்டி.திரும்புகிற பெண்களிடம் என்ன கதை இருக்கும் ?.இப்படிச் சொல்லமுடியாத கதைகளோடு இரண்டு லட்சம் பெண்கள்  ஒரு அமைப்பாகிவிட்டார்கள்.( the waiting,afspa 1958 ஆவணப்படங்கள் )

அது தவிர்க்க முடியாத எதிர் விதியல்லவா ?.

குஞ்சுகளைக் களவாட வரும் பருந்தை
எதிர்த்து பிடறி சிலிர்க்கும் கோழிகள்.
தாக்குண்டால் புளுக்கள் கூடத்
தரைவிட்டுத் துள்ளி விழும்.

அப்படி நியூட்டனின் விதியையும், இந்தக் கவிதையும் புறந்தள்ளிவிட முடியாது.
எனக்கானலும், எனக்குப்பிடிக்காத ஒருவனுக்கானாலும் வலி வலிதான்.
அதைத் தீர்க்கிற மருந்து ,கட்டாயம் துப்பாக்கிகளில் இல்லை.


ஒரு இந்தியனிடம் கேட்டால்
காஷ்மீர் எனக்குசொந்தம் என்பான்
ஒரு பாகிஸ்தானியும் கூட அப்படியே சொல்வான்
ஒரு கஷ்மீரியிடம் கேட்டால் விடுதலை கேட்பான்
அந்தப் பனிப்பிரதேசத்திடம் கேளுங்கள்
அந்த மனிதாபிமனியிடம் கேளுங்கள். 

7.9.10

செப்டம்பர் 7 வேலை நிறுத்தம். ஊர்கூடி நடத்தும் பொதுக்காரியம்.

அந்த மீசைக்காரர் வந்ததும் 'சார் டீ சப்பிடாச்சா  வாங்கியாரவா' என்று கேட்டுவிட்டுத்தான்  பணம் கட்டுவார்.கூட்ட நெரிசலில் சளைக்காமல் காத்திருந்துவிட்டு கடைசியில் பணம்கட்டுவார்.அந்த நேரம் பார்த்து தேநீர் வரும். வாங்கி ஓரம் வைத்துவிட்டு அவரது சலான் வாங்கி பணம் எண்ணுவேன்.'ஆறமின்ன குடிங் சார் நா ரெண்டு நிமிஷம் லேட்டாப் போறேன்' என்பார்.தன் மனைவி கட்டவேண்டிய மகளிர் கடன் பணத்தைக்
கட்டவந்து மேனேஜரிடம் வசவு வாங்கி சோர்ந்திருந்த போது அவரைத் தேற்றி அவரிடம் பணம் வாங்கி அனுப்பிய நாளில் இருந்து என்னோடு ஒட்டிக்கொண்டார்.ரெண்டாவது முறை லோன் வாங்கியபோது வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் ஆளுக்கொரு கூல்றிங்ஸ் வாங்கி வைத்துவிட்டுப் போய்விட்டார்.பேருந்தில் பார்த்துவிட்டால் எழுந்து உட்கார இடம் தருவார்.தன் பெண்டு பிள்ளைகளிடம் நல்லவிதமாக அறிமுகம் செய்து வைப்பார்.

நேற்று அவர் ஒருவரை அழைத்துக் கொண்டு வந்த நேரம் மணி ஐந்துக்கு மேலாகிக் கொண்டிருந்தது.வங்கி கிளையை மூட இருந்தோம். 'அப்ப நாளை வரட்டா' என்று கேட்டார்.'இல்ல நாளைக்கு ஸ்ற்றைக் நாளாண்ணிக்கு வாங்க' என்றேன். 'என்ன சார் ஓயாம இப்டி ஸ்டைக் பண்றீங்க சம்பளம் இண்ணுமா பத்தல' என்றார்.சுரீர் என்றது.'இல்லங்கய்யா நாளைக்கு  பண்ணபோற வேலை நிறுத்தம் விலைவாசிக்கு எதிராக,நாளைக்கு பண்ணப்போறது ஆள் பற்றாக்குறைக்கு எதிராக,சம்பள உயர்வுக்காக அல்ல. இன்னொன்னு தெரியுமா நாளைக்கு பண்ணப்போற வேலை நிறுத்தத்துக்கு ஒரு நாள் சம்பளத்தை நாங்கள் கட்டாயம் இழந்து விடுவோம் என்று சொன்னப்பிறகு அவருக்கு பதிலேதும் சொல்லத் தோணவில்லை.ஏஞ்சார் இப்பிடி ஒங்களயே நட்டப்படுத்திக்கிட்டு நாட்டத்திருத்த முடியுமா? என்று கேட்டார்.

ஊர்ல ஒரு கெட்ட காரியம் நடந்தா எல்லோரும் அந்த நாள்ல வேலக்குப்போகாம, இருக்றத குடிச்சிக்கிட்டு இருப்போமில்ல என்று கேட்டேன். 'ஆமா சார் அன்னைக்கு மனுசன் வேலைக்கு போவானா' என்றார் வீராப்பாக.அதும்மாதிரித்தானய்யா இந்த ஸ்ட்ரைக்கும் என்று சொன்னதும் புரிந்துகொண்ட மாதிரி சிரித்துவிட்டு 'எலே வாடா புதங்கெளமெ வருவோ, ஒரு நா பிந்துனா என்ன உலகமே பிந்திரவா போகுது,ஒத்தாளாக்கெடந்து அங்கெயு இங்கெயு தவ்வித்தவ்வி வேல பாக்காங்க ஆள் போடவேண்டாமா கூறுகெட்ட பய கவுர்மெண்டு' என்று சொல்லிக்கொண்டே பக்கத்தூருக்கு நடந்துபோனார்.அந்த மக்களிடம் எடுத்துச்சொல்ல வழியில்லை.திசை திருப்ப ஊடகங்கள் இருக்கிறது.அய்யணார் அண்ணாச்சி புரிந்துகொண்ட மாதிரி அறுபதுகோடிச் சனங்களுக்கு புரிய வைக்க இங்கே என்ன ஏற்பாடு இருக்கிறது ? அது வரை வேலை நிறுத்தம் கூட மூட நம்பிக்கைதான் கிராமத்து மக்களுக்கு,ஏன் படித்தவர்களுக்கும் கூடத்தான்.     

5.9.10

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.


ஒரு ஆர்வத்தில் கூகுளில் தேடியபோது தென்பட்டது புதைந்து கிடக்கிற ஆச்சரியங்கள்.கதைகளால் மண்மூடிப்போன கனிம வளங்கள். அதுவும் எனது தேசத்தில்.தொழில் நுட்பம் விரல் நுனியில் உலகைக் கொண்டுவருகிற இந்தக் காலத்திலேயே இருட்டடிப்பு நடந்தால் மன்னராட்சிக் காலத்தில் என்னென்னவெல்லாம் புதைக்கப்பட்டிருக்கும்.இது அரசியலுக்கு அப்பாற்பட்ட என்தேசத்தின் இயற்கை பற்றிய செய்தி. அதை வலை மக்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.


92500 சதுர கிலோமீட்டர்கள் விரிந்துகிடக்கும் அந்த மலைப்பகுதிகளில்தான் லட்சக்கணக்கான மரம் செடிகொடிகள் வாழ்ந்து வருகிறது.இந்தியாவின் தட்ப வெப்ப சமன்பாட்டை பாதுகாக்கிற மிகப்பெரிய பசுமைப் பிரதேசம். அங்குதான் மஹாநதி மற்றும் கோதாவரி நதிகள் ஊற்றெடுத்து சமப்பரப்புக்கு ஓடிவருகிறது.அங்குதான் அள்ளஅள்ளக் குறையாத இந்த தேசத்தின் மாசுபடாக் கனிம வளங்கள் கிடக்கிறது.இரும்புத் தாதுக்களும்,பாக்சைட் நிலக்கரி வளமும் இன்னமும் சொல்லப்படாத கனிம வளங்களும் கிடைக்கிறது. மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அந்த தண்டகாரண்யத்தில்  புதைந்து கிடக்கிற 1.1 பில்லியன் டன் இரும்புத்தாது தான் இந்தப் பூமிப்பந்தில் கிடைக்கிற ஆகப் பெரிய இரும்பு வளம்.அதுவும் நம்மிடம் மட்டுமே இருக்கிறது என்பதை சாமான்யன் அல்ல ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லாத ஏற்பாடு இங்கிருக்கிறது.

இதை சாட்டிலைட் தொழில்நுட்பத்தின் மூலம் வெளிநாடுகள் கண்டுபிடித்துவிட்டன.இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் நமக்குத்தெரியாததை அவன் கண்டுபிடித்துவிட்டான்.வெள்ளக்காரன் வெள்ளக்காரந்தான்.அப்றம் அங்கிருக்கிற முதலீட்டாளர்களின் கண்களை அது உறுத்திவிட்டது. இத்தனை யுகங்கள் மனிதக்காலடி படாமல் கிடந்த அந்தப்பகுதியில் கிடைக்கிற  கனிம வளங்களை வெட்டி எடுத்து உலகத்துக்கு விநியோகிப்படுவதை அரசும் ஊடகங்களும் சொல்லவில்லை.சொல்லப்போவதும் இல்லை. சொல்லி என்ன ஆகப்போகிறது சொல்லுங்கள் எந்த ஒப்பந்தமாவது மக்களைக்கேட்டுப்போடப்படிருக்கிறதா என்ன ?.அதற்கு அவசியமுமில்லை.

முன்னதாக அந்த கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை ஊளை மோர் விலைக்கு விற்றுவிட்டார்கள். அப்படி விற்றதொன்றும் தரிசு நிலமோ,இல்லை ஒரு தனிநபருக்குச் சொந்தமான விலை நிலமோ இல்லை.லட்சக்கணக்கான மலைமக்கள் வாழ்ந்து வருகிற வனப் பகுதி.எஸ்ஸார் என்கிற அந்நிய நிறுவனம் 2005 ஆம் ஆண்டே மத்திய இந்தியாவில் உள்ள அந்த பலைடல்டா மலைப்பகுதியில் ஒரு இரும்புத்தாது வெட்டியெடுக்கும் தொழிற்சாலையை நிறுவிவிட்டது.அங்கிருந்து மும்பைக்கு இரும்புக் கனிமத்தைக் கடத்திக்கொண்டுவர 267 (திருநெல்வேலியிலிருந்து திருச்சி வரையான தூரம்.பேருந்தில் போனால் ஐந்து மணிநேராப் பயணதூரம்)கிலோமீட்டர் நீளத்துக்கு  குழாய்கள் அமைத்துத் தரப்பட்டிருக்கிறது.




வெள்ளைக்காரன் ஆண்ட நாட்களில் வெட்டிக்கொண்டுபோன நமது விலையுயரப்பெற்ற மரங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.அதன் பிறகும் நமது கொள்ளைக்காரர்கள் வெட்டியெடுத்தவையும் அப்படியே.அதையெல்லாம் சரிசெய்ய அங்கே நூற்றுக் கணக்கான சிறு இயக்கங்கள் இருக்கின்றன. பசுமை இயக்கங்கள்.இதுவரை லட்சோப லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வந்திருக்கின்றன.அவற்றைச் செய்பவர்கள் இயற்கை ஆர்வளர்கள்,காந்திய வாதிகள், விவசாயிகள், காட்டுப்பற்றாளர்கள், அறிவுஜீவிகள்,அறிவியல் வல்லுநர்கள்.அவர்களின் இந்த இயற்கைப் புணரமைப்பு வேலைகளை யெல்லாம் தூக்கிக்கடாச வருகிறது ஜப்பான்,சீனா ஆகிய நாடுகளின் பொக்லைன் எந்திரங்கள்.

ஒரு மரம் வெறும் இலையல்ல,
ஒருமரம் வெறும் கனியல்ல,
ஒருமரம் வெறும் பூவல்ல,
ஒருமரம் வெறும் கூடுகட்டும் இடமல்ல
கூடவே மனிதகுலத்துக்கான
ஆக்சிஜனை அள்ளிக்கொடுக்கும்
ஜீவ விருட்சம் அது.
மரம் செடி கொடிகள் இல்லாத மண்
தரிசெனச் சொல்லப்படும்.
மரம் செடிகொடிகள் இல்லாத மண்
உயிர்கள் வாழத் தகுதியற்றதாகப்படும்.
 மரம்இல்லாத மண்திங்கள் செவ்வாய்
புதனெனும் வெற்றுருண்டைகளாகும்.

ஒரே ஒரு மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகக்கலகம் செய்ததாக விடுதலை வரலாறுகள் இருக்கின்றன.ஆனால் ஆயிரக்கனக்கான மரங்களை வேரோடு பிடுங்கி எறிய கிளம்பிவருகிறது அந்நிய முதலீட்டாளர்களின் எந்திரக் கைகள்.அதற்கு ஒத்து ஊதுவது தான் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள்.அவை வேரோடு பிடுங்கப்போவது மரங்களையும்,கனிம வளங்களை மட்டும் இல்லை இந்தியாவின் சீதோஷ்ணத்தயும் சேர்த்துத்தான்.

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் படிக்க ஆரம்பித்ததும் அதில் வருகிற தகவல்களும்,தரவுகளும் இந்திய நிலப்பரப்புகளோடு நம்முன் காட்சியாகிறது.


நன்றி: விக்கிப்பீடியா,வெப் இமேஜ்,

14.8.10

ஊழல் மொய்க்கிற தேசம்.

எந்த ஊடகத்தைப் பார்த்தாலும் தலைப்புச்செய்திகள் இந்த தேசத்தை மூழ்கடித்துக்கொடிருக்கும் முடைநாற்றத்தைச்சொல்லும் சேதிகளாகவே இருக்கிறது.கேதன் தேசாய்,கில்,அமித்ஷா,செத்துப்போன ராஜீவ் காந்தி,போபால்,டௌ கெமிக்கல்,இப்படி இந்திய துனைக்கண்டத்தை ஆளும் அரசர்களும் அவர்களின் நேரடி ஏவலாட்களான உயர் அதிகாரிகளும்,அவர்களை இயக்குகிற பெருமுதலைகளும்  ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்பதை நிரூபிக்க குற்ற விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். இதில் எதிர்க்கட்சி- ஆளும்கட்சி பேதமில்லாமல் எல்லோரும் ஜெயிக்கிறார்கள் தோற்றுப் போனது ஜனநாயகமும் அதைக் கட்டிக்காக்கும் மக்களும் தான்.

சென்ற வாரம் சிவகாசிக்கு அருகில் ஒரு வெடி விபத்து நடந்தது சட்டவிரோதமாக பட்டாசுதயாரித்தவர்களைப்பிடிக்கப்போன காவல் துறை மற்றும் வருவாய்த்துறை முதல் நிலை அதிகாரிகள் ஒன்பதுபேர் விபத்தில் சிக்கிக்கொண்டார்கள்.தேடுதல் வேட்டைக்குப்போனவர்கள் பலியான விபரங்களை முன்வைக்கும் செய்திகள் முரண்பாடுள்ளதாக இருக்கிறது.பத்திரிகைச் செய்திகளும் வாய்மொழிச் செய்திகளும் அரசு நிர்வாகத்தின் கையாலாகத்தன்மைக்கு மிகப்பெரிய உதாரணம்.

சிவகாசியைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் தொழில் அமோகமாக நடைபெறுவது இன்றல்ல நேற்றல்ல.அதற்கு ஒரே காரணம் மோசமான கூலியும்,அமோகமான லாபமும் தான்.அதைக்கண்டு கொள்ளாத தொழிலாளர் நலத்துறை மட்டுமல்ல அந்தத் தொழிலைக் காபந்து பண்ணும் இன்னும் அதிகாமான துறைகளும் தான். பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழில் என்பது மத்திய கலால் துறை,மாநில விற்பனைவரித்துறை,வெடிபொருள் மற்றும் சுரங்கத்துறை,வருவாய்த்துறை,தொழில்துறை,மாசுகட்டுப்பாட்டுத்துறை என்கிற துறைகளின் கட்டுப்பட்டிலும்,கண்காணிப்பிலும் இயங்குகிறவை.ஆனால் அந்தந்த துறைகளின் கட்டுப்பட்டுத்திறமை என்ன என்பதை வருடா வருடம் நடக்கும் விபத்துக்கள் நாறடிக்கின்றன.

இது பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது மத்தியப்பிரதேசத்திலிருந்து இன்னொரு பூதம் கிளம்புகிறது.இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான செய்தி இது.600 டன் வெடிபொருட்கள் காணவில்லை என்று கைபிசைகிறார் அதை ந்ர்வகிக்கும் நேர்மைமாறா உயர்திரு. உபாத்யாய்.அதோடு நில்லாது எனக்கு பொறுப்பில்லை என்கிறார்.எல்லாம் உண்மை.மக்கள் பொறுப்பில்லாமல் இருப்பதால் எல்லாமே இங்கு சாத்தியம்.




600 டன் வெடிபொருட்களுடன் 61 லாரிகள் மாயம்:தீவிரவாதிகள் கடத்தலா? சாகர், ஆக.13-

600 டன் வெடிபொருட் கள் ஏற்றப்பட்ட 61 லாரி களைக் காணவில்லை. இத னால் மத்தியப் பிரதேசத் தில் பரபரப்பு ஏற்பட்டுள் ளது. இவற்றை நக்சலைட்டு கள் கடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள அரசு வெடிபொருள் கிட்டங்கியி லிருந்து இந்த வெடி பொருட்கள் ஏற்றிய லாரி கள் மத்தியப் பிரதேச மாநி லம் சாகர் மாவட்டத்தில் உள்ள கணேஷ் எக்ஸ் புளோ சிவ்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப் பட்டன. மொத்தம் 61 லாரி களில் 600 டன்னுக்கும் மேற் பட்ட வெடிபொருட்கள் அதில் இருந்தன. ஆனால் இதுவரை ஒரு லாரி கூட வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வெடி பொருட்களை அனுப்பி வைத்த ராஜஸ்தான் எக்ஸ் புளோசிவ்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் உபாத் யாய் கூறுகையில், உரிய உரிமங்களுடன் வந்த லாரி களில்தான் இந்த வெடி பொருட்களை ஏற்றி அனுப்பி வைத்தோம். ஆனால் தற் போது ஒரு லாரி கூட வந்து சேரவில்லை என எங்களுக் குத் தகவல் வந்துள்ளது. ஆனால் இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றார். இந்த லாரிகள் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்ட வையாகும். அதில் டெட்ட னேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் இருந்தது.

இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால் சம்பந்தப்பட்ட கணேஷ் கெமிக்கல்ஸ் நிறுவனம் தற் போது பூட்டப்பட்டுள் ளது. அதன் உரிமமும் கடந்த மார்ச் மாதமே முடிவடைந்து விட்டதாம். பிறகு எப்படி இத்தனை டன் வெடி பொருட்களை அந்த நிறுவ னத்திற்கு அனுப்பினர் என் பது தெரியவில்லை. கணேஷ் வெடிபொருள் நிறு வனத்தின் உரிமையா ளர்களும் தலைமறைவாக உள்ளனர். இதனால் பாது காப்புப் படையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் கள் வெடிபொருட்களை நக்சலைட்கள் அல்லது தீவிரவாதிகள் கையில் ஒப்படைத்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு சூரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட டெட் டனேட்டர்கள், இதே தோல்பூர் பேக்டரியிலி ருந்துதான் டெலிவரி செய் யப்பட்டது என்பதால் 600 டன் வெடிபொருள் மாய மான சம்பவம்பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்ஞா சிங் தாகூர் உள்ளிட்டவர் கள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து சிறு பான்மை மக்கள் மீது பழி போட முயன்றனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், இந்த பாணி யில் வெடிபொருட்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள் ளது. இப்போது பெருமள வில் வெடிபொருட்கள் கடத்தப் பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

14.7.10

இந்திய விடுதலையும், தலித் விடுதலையும்

அடையாளம்,ஒற்றுமை,விடுதலைக்கான தலித்துகளின் போராட்டம் எனும் நூலின் தமிழாக்கத்தின் ஒருபகுதி.




எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும் - ஆம்
எல்லோரும்  ஓர்குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும்  இந்நாட்டு மன்னர்.



பாரதியின் கனவோடு காத்துக்கிடந்தது காலம். அது கனிந்தது. அந்த ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம்
நாள் நள்ளிரவு பணிரண்டு மணிக்கு. ஏன் இரவு பணிரண்டு மணி எனக் கேட்டால் அர்த்தமுள்ள இந்து தத்துவத்திலிருந்து பக்கம் பக்கமாக மிட்டாய்க்கதைகள் வரலாம். எந்த வேதம் இந்திய மனிதர்களைப்பிரித்ததோ, எந்த வேதம் ஒரு பெருவாரியான ஜனங்களை ஊரை விட்டு விரட்டி புற ஜாதியினராக்கியதோ, எந்த வேதம் அதைக்கேட்ட பிற்படுத்தப் பட்டவர்கள் தலித்துக்கள் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றச் சொன்னதோ அதே வேதத்திலுள்ள ஆகம விதிப்படி தான் இந்த இந்தியாவுக்கு நள்ளிரவில் விடுதலைக்கான நாள் குறிக்கப்பட்டது.விடுதலைக் கப்புறம் நேரு தலைமையில் உருவான மத்திய அரசு இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்கியது. அதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பாதுகாப்புக் குறித்து பல அடிப்படைச்சரத்துக்கள் இயற்றப்பட்டன.

15 வது ஷரத்து.
------------
மத இன ஜாதி மற்றும் பால் பாகுபாடுகளிலிருந்து விடுதலை அடைவதற்கான உரிமையை
வழங்குகிறது

16 வது ஷரத்து.
------------
தலித்துகளுக்கு சமுதாய மற்றும் கல்வியின் மூலம் கட்டாய வளர்ச்சி தேவை என்பதை வலியுறுத்துகிறது. அது மட்டுமில்லாமல் தீண்டாமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனவலியுறுத்துகிறது. தீண்டாமைக்கொள்கையைக் கடைப்பிடிப்பது தண்டனைக்குறிய குற்றம் என்று வறையறுக்கிறது.   

23 வது ஷரத்து
------------
வேலைபார்க்கிற இடங்களில், பொருளாதரா ரீதியாக மட்டுமல்லமால், சமூக மேலான்மையால் நிர்ப்பந்தப்படுத்தப்படும் தலித்துகளுக்கு பாதுகாப்பளிக்கிறது. அதோடு மட்டுமில்லாது மத்திய மாநில அரசுகளில் சில குறிப்பிட்ட பதவிகளுக்கு நியமனம் செய்யும்போது இடஒதுக்கீடு அளிக்கிறது.

25 வது ஷரத்து
------------
இந்தியர் யாவரும் தங்களிஷ்டப்படி எந்த மதத்தையும் தேர்ந்தெடுத்து அதில் இணைந்துகொள்ளும்அடிப்படை உரிமை.

34 வது ஷரத்து
------------
பாராளூமன்ற, சட்டசபை , பஞ்சாயத்து தேர்தல்களில் அதிகாரப்பரவலுக்காக தலித்துக்கள் தேர்தலில் போட்டியிட இட ஒதுக்கீடு வழங்குகிறது.

46 வது ஷரத்து
------------
கல்வி மற்றும் பொருதார நிலைமகளில் தலித்துகளின் நிலைமயக் கவனித்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவ சிறப்புக் கண்கானிப்பு வேண்டுமென உறுதி செய்திருக்கிறது.இது தவிர மிகப்பிரபலமான பி சி ஆர் ( ப்ரொடெக்சன் ஆப் சிவில் ரைட்ஸ் ஆக்ட்- 1955 )பி சி ஆர் ஆர் சட்ட ம் ( 1977 ), வன்கொடுமைத்தடுப்புச்சட்டம் ( 1989 ) ஆகியவையும் இன்னும் இருக்கின்றன.

................... இந்த சட்டங்கள் பூராவும் அமலாகிப் பூர்த்தியடைந்திருந்தால் எப்போதோ கீழ் மேலென்ற நிலை மாறியிருக்கும். இந்தியா எந்தாய் நாடு இந்தியர் யாவரும் என் உடன்பிரந்தோரென்று சொல்லியபடி தெருக்களில் ஜாதி மத பேதம் மறந்து குழந்தைகள் ஓடித்திரிந்திருக்கும். ஆனால் இங்கே இன்னும் வாச்சாத்தி, மாஞ்சோலை, வீதிகளில் மிதிபட்டுக்கிடக்கிறது. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலிகளில்
இன்னும் இரண்டாயிர வருட முடைநாற்றம் உட்கார்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா கிராமக்குடிநீர் ஆதாரங்களிலும் கண்ணுக்குத்தெரிகிற கிருமிகளாக தடைச்சட்டம் இருக்கிறது. பெருநகரங்கள் நகரங்கள் நகரத்தை நோக்கி நகருகிற உர்கள் தவிர்த்த எல்லாகிராம டீக்கடைகளிலும் ஒரு ஓரத்தில் நின்று டீக்குடிப்பதை பார்த்தபடியே காலம் நகர்கிறது. நகராட்சி ஊழியத்துக்கு அருந்ததியர்தான் என்பதை மாற்றமுடியாது.

மாற்றம் இருக்கிறதா இல்லையா என்று கண்கானிக்ககூட இந்தியாவின் மூத்த குடிமகன் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்துக் கண்காணிக்கலாம் என்றும் சட்டம் வழி வகுக்கிறது. ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி ரஜேந்திர பிரசாத் அவர்கள் 1936 ஆம் ஆண்டு
காந்தியால் முன்மொழியப்பட்டு அம்பேத்கர் ஆதரவோடு கொண்டுவந்த பட்டியல் இனத்தவர்களின் பட்டியலுக்கு
ஒரு புது வியாக்கியானத்தைக் கொண்டுவந்தார் அதுதான் அரசியலில் மதத்தைக்கலக்குகிற முயற்சி. யார் யாரெல்லாம் பட்டியல் இனத்தவர் என்று சொல்லிவிட்டு அவர்களில் எவெரேனும் இந்து அல்லாத பிற மதத்தைத் தழுவினால் அவர்கள் ஷெடூல்டு இனத்தில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் எனும் ஒரு சூழ்ச்சியை
இடைச்செறுகலாக, பிற்சேர்க்கையாக சேர்க்கிறார் இந்தியாவின் முதல் மூத்தகுடிமகன். இந்தச்சூழ்சியானது
இந்திய அடைப்படை உரிமைச்சட்டத்தின் 25 வது ஷரத்துக்கு நேர் எதிரானது எனப்பெரும் கலகக்குரல்கள்
கேட்டபின்னர்  மிகத் தாமதமாக இரண்டுமுறை சீர்திருத்தப்பட்டது 1956 ல் சீக்கியர் களையும், 1990 ல்
புத்த மதத்தையும் இந்த சட்டத்துக்குள் கொண்டுவந்தனர்.

எப்படியிருந்தபோதிலும் நசுக்கப்பட்டவர்களை அடையாளப் படுத்தும்போது கூட மத அளவுகோல் கொண்டு அளப்பது நவ நாகரீகக் கொடுமை. அதுவும் எந்த சனாதனத்தின் காலில் மிதிபட்டு நசுங்கினார்களோ அதே சனாதனத்தின் காலுக்கடியிலேயே விமோசனம் கிடைக்கும் எனும் குருட்டுத் கதையானது தலித்துக்களின் நிலைமை. எல்லா மதத்திலும் இருக்கிற தலித்துகளுக்கு ஒரே அடயாளம் கிடைக்க இருந்ததையும், அவர்களை  ஒன்று சேர விடாமலும் பிரித்தாளும் சூழ்சியை அதிகாரத்தின் துணையோடு அரங்கேற்றினார் ஹிந்து மஹாசபையின் தீவிர உறுப்பினர் ராஜேந்திர பிரசாத். அந்த அரங்கேற்றத்தின் எதிரொலியாக முஸ்லீம் தலித்துகளும் கிறிஸ்தவத் தலித்துகளும் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் பிரகாரம் கிடைக்கிற அடிப்படை உரிமைகளை அனுபவிக்க இயலாத பிரிவினராயினர்.

நிலைமைகள் இப்படியிருந்த போதிலும் ஒரு சில நேர்மையான உயர் அதிகாரிகளும் அரிதாகவேனும் அவ்வப்போது
குறிஞ்சியாய் பூத்தார்கள். ஜனாதிபதியின் நேரடி  நியமனத்தால் வந்த  ஆனையாளர் L M ஸ்ரீகாந்த் அப்படிப்பட்ட ஒரு உயர் அதிகாரி. அவர் நியமிக்கப்பட்ட ஓராண்டுகாலத்தில் நடக்கிற ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்திலும்
தலித்துகளுக்காக, அவர்களைப் பாதுகாக்கிற சட்டங்கள் ஒழுங்காக நிறைவேறுகிறதா என்று சோதனை செய்ய,
நடவடிக்கை எடுக்க, அது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க, அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.  
அவர் சமர்ப்பித்த அறிக்கை பரபரப்பானதும் மிகுந்த ஈர்ப்புத் தன்மை கொண்டதுமாகும். அது 1951 ஆம் ஆண்டில்
சமர்ப்பிக்கப்பட்டது. அதுவே தலித்துக்கள் குறித்த முதல் அறிக்கை.

-----------------------------------------------------------------------------------------
"இந்து சமூக ஏற்பாட்டில் ஜாதி என்பது ஒரு மனிதனின் அடயாளமாகவும்,  செய்யும் தொழிலுக்கான தகுதியாகவும்,கௌரவமகவும் வலிந்து திணிக்கப்பட்டு பின் கடைப்பிடிக்கப்படுகிறது. இது போலொரு வறட்டு நடைமுறை இந்தியாவைத்தவிர உலகின் வேறெந்த மூலையிலும் கிடையாது. தெருக்கூட்டுவது, சாக்கடை சுத்தம் செய்வது, தோல் பதனிடுவது, செருப்புத்தைப்பது, மலம் அள்ளுவது, பிற மனிதனின் அழுக்குத்துணிகள் வெளுப்பது போன்ற தொழில்கள் எல்லாம் மனிதனால் அவனது கைகளால் செய்யப்படுகிறது. இந்தத் தொழில்கள் யாவும் ஒரு சில ஜாதிகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்திய ஜனத்தொகையில் ஐந்து கோடிக்கு மேலிருக்கும்  அவர்கள் ஹரிஜனங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்."
"
அடக்குமுறயால் திணிக்கப்பட்ட இந்த பழக்கங்களால் அவர்கள் தங்கள் சுய மரியாதையை இழந்திருக்கிறார்கள்.
அவர்கள் அதற்குள்ளே நூற்றாண்டுகாலங்களாக உழன்றுகிடப்பதால், அது சாபமில்லை, அதை உடைத்துக்கொண்டு அவர்களால் வெளி வரமுடியும் என்பதை உணராதபடிக்கு அதிலே லயித்துக் கிடக்கிறார்கள். எனவே அவர்கள் பிறமனிதர்களோடு போட்டி போட்டு  தொழில்களிலோ ஆலைகளிலோ உழைக்கமுடியாத சோம்பேறிகளாக மாறீப்போகிறார்கள், அவர்கள் மூலையும் உடலும் சோர்ந்து போயிருக்கிறது. அதை விடக்கொடூரம் தங்கள் குழந்தைகளைக்கூட பள்ளிக்கூடம் அனுப்ப முடியாத ஊற்றுக்கண் அடக்கிறவர்களாக மாறுகிறார்கள்

 
-----------------------------------------------------------------------------------------
அறிக்கையின் இந்த வார்த்தைகள் இருண்டு கிடக்கும் தலித்துகளின் உள்ளார்ந்த இயல்புகளின் மேல் வெளிச்சம்
பாய்ச்சுகிறது. அது ஜாதீய மேலாதிக்கத்தால் நசுங்கிக்கிடக்கும் மனித விழிப்புணர்வைப்பற்றிப்பேசுகிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கூனிக்கிடக்கிற சமுகத்தின் முதுகெழும்புகளை நிமிர வைக்கும் மருத்துவம் குறித்து
யோசிக்க வேண்டிய நிர்ப்பந்ததில் இந்தியா இருப்பதைச்சுட்டிக்காடுகிறது. அது வெறும் காகிதச்சட்டங்களாலும்,
ஆணைகளாலும் தீர்மாணங்களாலும் பணமுடிப்புகளாலும்  நிவர்த்தி செய்யமுடியாத பீடை எனத்திட்டவட்டமாக குறிப்பிடுகிறார்.
  
ஒரே ஒரு மாற்று தானிருக்கிறது அது கல்வி.  அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி தர யோசிக்கிற போதே அவர்களின் உள்ளார்ந்த இயல்புகளை அலசி ஆராய்ந்து கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். எனவும் தெளிவக
ஆரம்பிக்கிறார் LM ஸ்ரீகாந்த்.இதற்கெனப் பிரத்யேகமாக அவர் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அலைந்து திரிந்திருக்கிறார்.

28 வது அறிக்கை ( 1987 ) 
-------------------------------------
கிட்டத்தட்ட முப்பத்தாறு வருடங்கள் அந்த நாற்காலி ஒரு அருங் காட்சிப் பொருளாகவும், மாதம் பிறக்கிற போது
பணம் பட்டுவாடாப் பண்ணுகிற கல்லாப்பெட்டியாகவும் இருந்ததே தவிர குறிப்பிட்டுச் சொல்லுகிற மாதிரி ஒரு துரும்பைக்கூடத் தூக்கிப்போடத்தயாராயில்லை. எனவே 1987 ல் வெளியான 28 வது அறிக்கை கூடுதல் கவனம் பெறுகிறது. அதாவது இந்த அறிக்கை தயாரான 1980 வது ஆண்டு கணக்கெடுப்புப்படி சுதந்திரமும் கடுமையான சட்டங்களும் நடைமுறைக்கு வந்து நாற்பதாண்டுகள் கடந்த பின்னரும் நிலைமைகள் கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.பொதுக்கிணற்றில் தண்ணீரெடுக்க முடியாத கொடும் நடைமுறைகள் கிராமங்களில் கொஞ்சமும் குறையாமல் இருந்தது. அது போலவே நகரங்களின் சேரிப்பகுதியில் குடியிருப்பவர்களின் நிலைமைகளும் நீடித்தது. அதுபோன்ற தீராக்கொடுமைகளின் பட்டியல் பற்றிப்பேசுகிறதுறது, அந்த 28 வது அறிக்கை.
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தலித்துகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு சின்னசின்னக் கீற்றாக ஒளிர ஆரம்பிக்கிற இடங்களில் எல்லாம் அவர்கள் அடுத்தவர்களின் ஆறாத கோபத்திற்கு ஆளக நேர்ந்தது. அந்தக்கோபத்துக்கு விலையாக மொத்தம் மொத்தமாக உயிரும் உடமைகளும் தலித்துகளிடமிருந்து பறிபோயின. அவர்களின் பாதம் பதிந்து நிற்கிற ஒரு
தப்படி இடம்கூட அவர்களுக்கெனச் சொந்தமாக இல்லாத ஜீவராசிகளாக இருந்ததனால்,  உயிர் வாழ்தலின் நிர்ப்பந்தத்தால் அறிதலுக்கான முயற்சியையும் கைவிட நேர்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வண்கொடுமைகளுக்கெதிரான இயலாமை, அவமானங்கள், இதர கொடுமைகள் என நீளும் பாடியல்கள், தங்கள் மிச்ச நாட்களுக்காக வாய்மூடிப் பொறுத்துக்கொண்டது போக, பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் தினசரி நாளிதழ்களில் இடம்பெறாத நாளேகிடையாது என்று சத்தியம் செய்து சொல்லலாம். அப்படி பதிவு செய்யப்பட்ட மிகக்கடுமையான குற்றங்கள் சராசரியாக வருடத்திற்கு 15000 என்று கணக்கிடப்படுகிறது.

1) தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் குறித்த தெளிவற்ற ஆவணங்களால் தீர்க்கப்படாத தாவாக்கள்.
2) வயிற்றுப்பாட்டுக்கு எட்டாத குறைந்த கூலி, அல்லது கூலியில்லாத உழைப்பினால் உருவாகும் மனக்கசப்பும்    பதற்றமும்.
3) தன்னெழுச்சியாக கிழம்பும் விழிப்புணர்வு ஆகியவைகளே அதற்கான காரணங்களாகச் சொல்லுகிறது.  
  
சுதந்திரத்துக்குப்பிறகான மொத்த கல்வி வளர்ச்சி 1961 ல் 24 சதவீதமாகவும், 1971 ல் 29.4 சதவீதமாகவும், 1981 ல் 36.2 ஆகவும் இருக்க தலித்துக்கள் 1981 ல் 21.4 சதவீதம் மட்டுமே எட்டமுடிந்திருக்கிறது.
மத்திய மாநில அரசுகளின் உயர் பதவிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கும் குறைவாகவே தலித்துகள் இருக்க முடிந்தது.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வேலைகிடைக்கப்பெற்றோர் கணக்கில் 1983-85 ஆண்டில் வெறும் எட்டு சதமானவர்கள் தான் தலித்துகள். கிட்டத்தட்ட பாதிக்கும் மேலான இட ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள் காலியிடங்காளாகவே கிடந்தன.

இப்படி புள்ளிவிவரங்களுக்குள் பயணமாகித்தான் தலித்துகளின் நிலைமையைச்சொல்ல வேண்டிய அவசியமில்லை.அது கதவையும், கண்ணையும் திறந்துபார்த்தவுடன் தென்படுகிற அன்றாட அவலங்கள்.