Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts

23.12.09

தண்டிக்கப்பட்ட அலுவலகக் காதல்.

இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது. அவரது பணிக்காலம் முடிய ஆனாலும்கூடுதல் சுறு சுறுப்போடு அலுவலகம் வந்துவிடுவார்.அவருக்கிருக்கிற அந்த ஆஸ்த்துமா தூசியை,துர்நாற்றத்தை,குளிரை,சில நேரம் வெப்பத்தையும் கூட தாங்கமுடியாத்தாக்கிவிடும்.அது ஒரு கிராமம். பின்தங்கிய கிராமம்.காய்கறி மார்க்கெட்டைப்போல எந்த நேரமும் மனிதர்கள் கூடம் கூட்டமாக வந்துபோகும் வங்கிக்கிளை.பத்து மணிக்கு இருக்கையில் உட்கார்ந்தால் கடவுளே வாசலில் வந்து நின்றால் கூட எழுந்து போய் பார்க்கமுடியாத பணிச்சுமை.வேலைக்கு சேர்ந்த காலத்தில் நூறு வவுச்சர்களுக்கு ஆறு க்ளர்க்,ரெண்டு ஆபீசர்,ஒரு மேனேஜர்.இப்போது முன்னூற்றைம்பது வவுச்சர்களைத் தாண்டிவிடுகிறது.அதைச் சமாளிக்க வெறும் ரெண்டு க்ளார்க்குகள் தான்.தண்ணீர்ப்பந்தல் மாதிரி தான் வங்கிவேலை ஆகிப்போனது.'கையெழுத்துப் போடத்தெரியாதுல்ல' என்று மிகுந்த கர்வத்தோடு படிவங்களை முகத்துக்கு நேரே நீட்டும் மானாவாரி மனிதர்கள். மனிதாபிமானமுள்ளவர்களாக வாழ்வது சற்று சிரமம்.

சக ஊழியரின் சிரமத்தை,நிர்வாகத்துக்குள் இருக்கும் பாரபட்சத்தை,களவாணித்தனம் பண்ணிவிட்டு பதவிக்குள் ஒளிந்துகொள்ளும் கபடத்தைக் கண்டு பொங்குகிற மனிதர்கள் தேடி ஒருங்கிணைக்கப்பட்டதுதான் தொழிற்சங்கம்.அண்ணன் சுப்புராஜ் அப்படிப்பட்ட தொழிற்சங்க மனிதர். பழம் பெரும் காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர். ஒரு கல்லூரியின் நிர்வாகக் குழுவின் முன்னாள் உறுப்பினர். லோன் வாங்கிவிட்டு டீ வாங்கிக்கொடுத்தால் கெட்டவார்த்தையில் திட்டித்தீர்க்கிறதை அவர் நேர்மை என்றும் உலகம் முசுடு என்றும் புரிந்து வைத்திருக்கிறது.ஒரு கிராமத்து நாட்டாமையின் கோபத்தோடு உயர் அதிகாரிகளைக்கூட விமர்சனம் செய்யும் அவர் தான் எங்கள் மேலாளர்.

ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு நூறு கிலோமீட்டர் தாண்டி மாறுதல் போடப்படுகிறது. புதிதாக வேலைக்குச்சேர்ந்த அவருக்கு விடுப்பு ஏதும் இல்லை.இப்போதிருக்கும் கிளையில் பேறுகாலம் வரை நீடிக்க அனுமதி மட்டும் தான் கேட்கிறார் தயவுதாட்சண்யம் இல்லாமல் மறுக்கப்படுகிறது. இதைப்பற்றி அங்கலாய்ப்பது கூட தேசத்துரோகக் குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

.இதை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் முதலில் நானுன்,அன் டோ வும்,அப்புறம் முத்துவிஜயன் சார், இப்போது கிட்டத்தட்ட 49 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கு எந்த வித முகாந்திரமும் சொல்லப்படவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை. பிரிட்டிஷ் அரசு நாங்கள் நாய்களைக்கொல்வதானாலும் காரணம் சொல்லிவிட்டுத்தான் கொல்லுவோம் என்று சொன்னது.இங்கே அந்த சல்ஜாப்புக்கூட மிஞ்சவில்லை. ஒரு பொதுத்துறை நிறுவணம் ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புக்கு ஊறுகாயாகிவிட்டது. அந்தப்பச்சை மை சிந்துகிற ஒவ்வொரு நேரமும் பல வீடுகளில் கண்ணீர் சிந்துவதுதான் வாடிக்கையாகிவிட்டது. 

சனிக்கிழமை அண்ணன் சுப்புராஜுக்கு பனியிடைநீக்க உத்தரவு வருகிறது எனத்தெரிந்து.மருத்துவ விடுப்பை முறித்துக்கொண்டு கிளைக்கு வந்தார்.லேசான கலக்கம் இருந்தாலும். திமு திமுவென வந்த வாடிக்கையாளர்  கூட்டத்தில்  அது காணாமல் போனது.தன்னுடைய மேஜையில் இருந்த அவருக்கான உடமைகளை  எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து டெபாசிட்,லோன் வவுச்சர்களை சரிபார்த்து பாஸ்பண்ணுவதில் குறியாக இருந்தார்.அன்று கொடுக்கப்படவேண்டிய சுய உதவிக்குழுக் கடனை சாங்க்சன் செய்தார். பனிரெண்டு மணிக்கு ஆளுக்கு இரண்டு மாரி பிஸ்கட் தருவார்.அதுவும் வந்தது. இந்த வேகத்தினூடே வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்.உத்தரவைத் தூக்கிக்கொண்டு வரும் அந்த மனிதன் வருவானென்று. வரவில்லை.திமுதிமுவென சீருடையில் சுய உதவிக் குழுப்பெண்கள் வந்தார்கள் கதவடைக்க இன்னும் பத்து நிமிடம் தான் இருந்தது. அவர்களின் தலைவி பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டாளென்றும் அவள் மீது காவல் துறையில் புகார் கொடுக்க வேண்டுமென்றும் கசமுசவென்று கத்தினார்கள். அவர்களைச்சமாதானப்படுத்தி தலைவிக்கு இன்னொரு முறை அவகாசம் கொடுக்கலாம் என்று சொல்லி  அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

வழக்கமான பேருந்தை தவற விட்டு தாமதமாக வீட்டுக்குப்போனார்.அங்கே அவருக்கான இடை நீக்க உத்தரவு தபாலில் வந்திருந்தது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதிகூடத் தண்டிக்கப்படக்கூடாது என்பது தான் நீதித்துறையின் ஆதாரம். சட்டம் ஒழுங்கு என்பதெல்லாம் மனிதர்களுக்காக உருவானது. மன்னிக்கத்தெரிந்த மனிதனின் இதயம் மாணிக்கக் கோவிலப்பா என்னும் சினிமாப்பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறது.மனசு பாரம் அழுத்தும் போது இலக்கியங்கள் லேசாக்குகிறது.
 
நேற்று அலுவலகத்துக்குப் போனேன் சதாகாலமும் அவரோடு சண்டைபோட்டு கொண்டிருந்த நினைவுகள் சுரீரென்றது. அவரது நாற்காலியைச்சு ற்றி எறும்புகள் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது மாரிப்பிஸ்கட்டின் துகள் களைத் தூக்கிக்கொண்டு.அவரது கோபச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது ஒரு மூத்த சகோதரனின் வாசனையோடு.