Showing posts with label சுயபுராணம். Show all posts
Showing posts with label சுயபுராணம். Show all posts

12.5.10

நாட்காட்டியை உற்றுக் கவனிக்கிற இன்னொரு நாள்.

பனிரெண்டு மாதங்களின் சுவடுகள் கடற்கரை மணலுள் பொதிந்து கிடக்கிறது. திரும்பிப்போய் தேடிப்பார்க்கிற போது சிப்பிகளும்,வதங்கிய மலர்களும்,சிரிப்பொலியும்,சினிமாப்பாடல்களுமாகவே தட்டுப்படுகிறது.ஒரே ஒரு வெள்ளைக் காகிதப் போட்டலம் மட்டும் பெருத்த மௌனத்தோடு கிடக்கிறது.அது அந்த மூன்று நாள்.ஒரு கட்டுரை எழுதியதற்காக பனியிடை நீக்கம் செய்யப்பட்ட நாட்கள்.எங்கேனும் தனது ஆணவத்தை  ஆடிச் சறுக்கிவிடாமல் பாதுகாக்க மனித உடலை முட்டுக்கொடுக்கும்,அல்லது முயல்குட்டிகளைப் பலிகொடுக்கும் கதைகள் கேட்டால் அந்த மனிதனின் குரூர முகம் மட்டுமே வந்து போகும்.

அதை முறியடிக்கிற வல்லமை மிகுந்த மயிலிறகுக் கைகளோடு அன்பெங்கும் வியாபித்திருப்பதாய் எனைச்செட்டைக்குள் வைத்திருந்தனர் என் தோழர்கள்.மாது,செல்வா,மணியண்ணன்,அண்ணன் சோலை மாணிக்கம், சங்கர்,நாசர்,சங்கரசீனி,அருண்,சுப்ரமணீ எல்லோரும் எங்களைச் சூழ்ந்து கொண்டு ஆதரவு கொட்டினார்கள்.எங்கெங்கெல்லாமிருந்தோ அலைபேசியில் ஆறுதல் வந்தது. ஆபத்துக் காலத்தில்தானே நண்பர்கள்,தோழர்களின் அசல் முகம் காணலாம்.அதற்காகவேணும் தர்மம் தோற்கிறது போல இன்னும் பல தருணம் வேண்டும்.அந்தக்கசப்பு நாட்களிலிருந்து விடுதலையாகி வெளியேற கிடைத்த அருமருந்தானது இந்த வலை.இங்கேயும் சளைத்தவரில்லை எனச்சொல்லி  எங்கள் பாசமிகு தோழர்கள் ஆற்றுப் படுத்தினார் கள். நன்றல்லாதவற்றை தோழர்களின் துணை கொண்டு அன்றே மறந்தேன். 

இந்த வருடத்திற்குள்ளாவது இன்னொரு சிறுகதைத் தொகுப்பை வெளியிடத் தீர்மானித்தவை சோம்பேறித்தனத்தால் சுனங்கிக்கிடக்கிறது. சிலநேரம் அலுவலக,தொழிற்சங்க நெருக்கடிகள் திட்டத்தைப் புரட்டிப் போடுகிறது. இரண்டு கண்களில் எது ப்ரியமானது.நாட்காட்டியின் இதழ்களைக் கிழிக்கத் தேரமில்லாது கழியும் வாழ்க்கைக்குள்ளே எல்லாம் பொதிந்துகிடக்கிறது.ஒரு கால்நூற்றாண்டு காலம் பிரக்ஞையின்றிக்கழிந்த இந்தநாளை என் இல்லத் துணையின் வருகைதான் அடிக் கோடிட்டு நிறுத்தியது. இcபோது குழந்தைகள் சொந்தங்கள்,நண்பர்கள் எல்லாம் குதூகலமாக்குகிறார்கள்.இன்றுதான் நான் பிறந்தேனாம்.

என் தங்கை அன்பின் முல்லை அனுப்பிய இசை வாழ்த்து இத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது.. அத்தோடு என் அன்பும் தான்.
 http://www.123greetings.com/send/view/05112110104856407826