Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

21.6.12

வலி மிகுந்த மாற்றம்.

கைப்பேசியின் இனியும் சேமிக்க இடம்போதாது என்று எச்சரிக்கை வந்தது. சேமிப்புக்கிடங்கில் கிடந்த  எண் களையெல்லாம் வரிசைப்படுத்தி, நீண்ட நாட்களாக அழைக்கப்படாத எண்களை நீக்கிவிடலாம் என்கிற முடிவுக்கு வந்தான். வரிசையில் வருகிற ஒவ்வொரு எண்ணும் முக்கியமானதாகவெ இருந்தது. அலைபேசி ஒலித்த  மறு கணமே எடுக்காவிட்டால் கோபித்துக் கொள்ளும் கணேசன், கும்கி.குளிக்கிற நேரம்,கழிக்கிற  நேரம்,  வண்டி யோட்டுகிற நேரம்,தூங்குகிற நேரங்களில் போன்பேச இயலாது என்கிற சிந்தனை இல்லாமல்  கோபித்துக் கொள்ளுகிற சுந்தரலிங்கண்ணன். சுந்தரலிங்கண்ணன் வாடிக்கையாக ராத்திரி பதினோரு மணிக்குத்தான் போன் பண்னுவார். எடுக்காவிட்டால் மறுபடியும் மறுபடியும் அழைப்புமணி அடிக்கும். எடுத்து விட்டால் எலே  சின்னப் பயலே உனக்கு அவ்வ்ளோ திமிராலே என்று தொடங்கி குறைந்தது அரை மணி நேரம் பேசுவார்.  தூங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகுட்டிகள் எழுந்து விடும். அவளுக்கானால் ரொம்ப நாளாச் சந்தேகம்  வேறு.  ”அர்த்த ராத்திரியில் அப்படி ஆம்பளக்கி ஆம்பள என்ன பேசுவீங்க”  பொறுக்கமாட்டாமல் கேட்டே விட்டாள்.

எங்கப்பா போன?, அவனும் போன எடுக்கமாட்டுக்கான், நீயும் எடுக்கமாட்டுக்க என்று எடுத்ததும் கோபத்தை மட்டுமே வணக்கமாகச் சொல்லும் சன்முகண் ணாச்சி. சுருளி எடுக்காமல்போய் அவள் எடுத்துவிட்டாள் மிகவும் பரிவோடு குசலம் விசாரிப்பார். பிள்ளைகளைப் பற்றிக் கேட்பார். இந்த ஒரு வருடத்தில் ரெண்டே ரெண்டுதரம் மட்டுமே அவரிடமிருந்து போன் வந்திருந்தது. பல முறை அழைத்தும் எடுக்காமல் ஒரு நாள் எடுத்து  என்னப்பா, சீக்கிரம் சொல்லு என்றார். எப்படிண்ணே இருக்கீங்க என்று கேட்டான். இருக் கேன் இருக்கேன் வையி என்று மறுமுனை கட்டானது. படபடவெனக் கண்ணீர் வந்து தொலைத்துவிட்டது. என்ன ஏதென்று கேட்டவளிடம் சொன்னான். எதுக்கெடுத்தாலும் சின்ன நொள்ள கெனக்க அழதுக்கிட்டு,ஆம்பள தான ?, என்று அங்கிருந்து போய்விட்டாள்.

வாரத்துக்கு ஒருமுறையாவது  போன்பண்ணுங்கண்ணே அத மிச்சம் பிடிச்சி எங்ககொண்டு போகப் போறிங்க என்று அன்பை உலுக்கிவிடும் நாசர். இப்படி யான எண்கள் எல்லாம் ஒருகாலத்தில்  நெருக் கமாக இருந்து இப்பொழுது  எட்டாத தொலைவுக்கு போயிருந்தது. ”என்னங்க எல்லார்ட் டயுமா சண்ட போட்டீங்க  முன்ன மெல்லாம் நொய்யி நொய்யின்னு போனடிச் சிக்கிட்டே இருக்கும் இப்பென்ன மாசத்து ஒரு போனக்கூட காணும்” என்கிறவளுக்கு மார்க்சைப் பற்றி என்னசொல்ல ? மாற்றம் சாஸ்வதமானது மட்டுமல்ல ரொம்ப  வலிமிகுந்ததும் தான்.

வரிவடிவில் வந்துபோன ஒவ்வொரு எண்ணாகக் கடந்து போகும்போதும் நினைவுகள்  துயர்வடிவில்  கடந்து போனது. சங்கரராமன் சேர்மன் என்றிருந் தது அதைப் பார்த்தவுடன் அவனுக்கு பின்னிரவிலும் நிற்காமல் புனுப் புனு வெனப்பெய்த ஒரு  அடைமழை நாள், காரின் கண்ணாடிகளில் வழித்தோடிய நினைவுவந்தது. பாலுசாரின் மாருதி 800 காரும்,அதன் பின் பகுதியில் ஏற்றப் பட்ட சுவரொட்டிகளும், அன்று சூலக்கரை முக்கு ரோட்டில்  விடிய விடியப் பேசிக்கொண்டிருந்ததும்  நினைவுக்கு வந்தது. அத்தோடு கூட மூன்றுநாள்   சங்க அலுவலகத்தில் தோழர்களோடு குழுமிக்கிடந்த நாட்களும் நினைவுக்கு வந்தது.

சின்னவனாக இருக்கும் போது வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஒரு பன்றி குட்டி போட்டிருந்தது.அதில் ஒரு குட்டி இரண்டு மரக் கவளிக்கிடையில் சிக்கிக் கொண்டு வீர் வீரென்று கத்திக்கொண்டிருந்தது.குட்டிப்போட்ட பன்னிக்கு பக்கத்தில போகாத வெறிபிடிச்சிக்கடிச்சிறும் என்று அம்மா பயமுறுத்தியதை யும் சட்டை பண்ணாமல்  சிக்கிக் கிடந்த குட்டியையெடுத்து விட்டான். மறு கனம் எங்கிருந்தோ பிடறி சிலிர்த்து ஓடிவந்த தாய்ப்பன்றி  சுருளிச் சாமியை  தூக்கி எறிந்தது.மயங்கி விழுந்து கிடந்தவனை எடுத்துவைத்துக் கொண்டு அலறிப்பிடிச்சி தலையில தலையில அடித்துக்கொடு அழுதாள் அம்மா. அப்போது  பன்றி கடித்த கெண்டைக்கால் தழும்பும் கூடவே நினைவுக்கு வந்தது.

எல்லா எண்களுக்கும் பெயர் இருந்தது. ஒரே ஒரு எண்ணுக்கு மட்டும் நட்சத்திரக் குறியிருந்தது. அது யாருடை யதாக இருக்கும் என்று யோசிக்க யோசிக்க சுருளிச்சாமி மறந்து போன மனிதர்கள் எல்லோரும் நினைவுக்கு வந்தார்கள். இறுதியில் அந்த எண் யாருடையது என்று கண்டுபிடித்து விட்டான். ஒருநாள்  புறவழிச் சாலையில் சைக்கிளில் போய்க்கொண்டி ருக்கும் போது ஒரு பெண் ஓடிவந்தாள். சார் நீங்க பேங்லதான வேலபாக்கீங்க, சுருளிச்சாமிதான சார். நா பிகாம் படிச்சிருக்கேன்,சும்மாதான் வீட்ல இருக் கேன், ஒங்க பேங்க்ல ஏதாச்சும் வேலை இருந்தாச்சொல்லுங்க,இது எங்க அண்ணன் வீட்டு லேண்ட் லைன்,எம்பேரு சந்த்ரமதி இப்படி  திடுதிப் பென்று பிரசன்னமாகி ஒரு பயோடேட்டாக் கொடுத்து விட்டு மறைந்து போனவளை மறுபடியும் சுருளி பார்க்கவே இல்லை.முகம் கூட மறந்து போனது.அவள் கண்களில் இருந்த கெஞ்சல்,படபடப்பு இன்னும் அப்படியே   சுவடு மாறாமல் நிழலாடுகிறது. அந்தப்பெண்மேல் எந்த ஈடுபாடும்,ஈர்ப்பும் இல்லை. அசரீரி போல திடீரென்றுவந்த அந்தக் கோரிக்கையும், நம்பிக்கையும் அழிக்க முடியா ததாகிவிட்டது.

குட்டி,பேனா வானா என்று இரண்டு பெயர்கள் இருந்தது. ஜெயராஜும், பாலு சாரும்தான் அவை  இரண்டு பெயர்களும். குட்டி வெறும் மூன்று வருடப் பழக்கம் தான். பபுள்கம் மாதிரி அப்படியே ஒட்டிக்கொண்டான். சாயந்திரம்  சைக்கிளை எடுக்கப் போகும்போது அவனிருக்கும் மாடிக்குப்போய் ஒரு எட்டு பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவான் சுருளி. போகும் போது யாராவது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தால் ஆட்காட்டி விரலை உயர்த்தி முகத்தை கெஞ்சலாக வைப்பான். ஒருநிமடம் பொறுத்துக்கொள்ள வேண்டுமாம். மறு கணமே அதே ஆள்காட்டி விரலை ஆட்டி நாக்கைத் துருத்தி முறைப்பான். போனால் கொன்னுறுவானாம்.

கீழே இறங்கி ஒரு கோல்டு பில்டரும் ஒரு வில்ஸ்பில்டரும் வாங்கிக் கொண்டு,  ரெண்டு டீ கொண்டுவரச் சொல்லிவிட்டு மேலேறும்போது. என்ன ஒரு நானூறு ரூவா கவர்மெண்டுக்கு நட்டமாயிருச்சா,என்னமா டயர்ட்டா  வாரப்பா, வேல பாத்தவன் மாதிரியே இருக்கியே என்பான். நாப்பது ஜுவல் போட்டுருக்கு,துட்ட எண்ணி எண்ணி இங்கரு ரேகை அழிஞ்சி போச்சி,இதுல இன்னைக்கு ஐநூறுரூவா ஷாட் வேற. ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டு ”பேத்த பேத்த,ஜோக்கடிச்சா சீரியஸ்சாகிறதப்பாரு,எங்க எனக்கு சிகரெட் என்று பைக்குள் விட்டு சிகரெட்டை  எடுத்துக் கொண்டு வாங்க சார் வெளியே என்று தோளில் கைபோட்டு பால்கணிக்கு இழுத்துக்கொண்டு போவான். அவன் அருகாமை சிகரெட் நெடியும்,நிஜாம் பாக்கு நெடியும் கலந்து மணக்கும்.

விடுமுறை நாட்களென்றால் அவனிடமிருந்து போன் வரும். ஏ சோம்பேறி என்ன தூக்கமா மூஞ்சக்கழுவிட்டு ஒடனே  இங்க  வரணும். அவன் இருக் கானா? ரொம்ப பிகு பண்ணுவான்,வந்தாக்கூப்பிட்டு வாங்க இல்ல உட்ருங்க, ஏம்பா இந்தக்காம்ரேட்ஸ் எல்லாமே இப்படித்தானா? என்பான். ரூமுக்குப் போனால் கிரிக்கெட்டைப்பற்றிப்,  பேசு வான்,குஷ்வந்த்சிங் ஜோக் சொல்லு வான், மெக்சிகோ ஜோக்கும் சொல்லுவான். ஏப்பா ஒங்க தலைவர் என்ன இப்படி லூஸ் மாதிரி ஸ்டேட்மெண்ட் விட்ருக்கார். வால்மார்ட் வந்தா எல்லாஞ் செத்தா போவாய்ங்க  என்பான். விவாதமாகும் சூடுபிடிக்கும்.அவன் வந்ததும் இன் னமும் காட்டமாகும்.அவன் சண்டை போட்டுவிட்டு எழுந்து போய்விடுவான்.

சுருளியும் குட்டியும் பத்துமணி வரைக்கும் சண்டை போடுவார்கள். மனத் தாங்கலோடு  பிரிந்து போவார்கள். ஒரு நாள்தான்  சுருளி அங்கு போக மாட்டான். மறுநாளே அவனிடமிருந்து போன் வரும்  பிச்சிப் பிடுவேன் பிச்சி ஒழுங்கா ஸ்டுடியோவுக்கு வா என்று அன்போடு கடிந்து கொள்வான். சுருளி யால் தட்ட முடியாது. போனதும் ’இந்த இப்படி சீரியஸ்ஸா முகத்த வைக்கா தண்ணே, ஒனக்கு ஒத்து வராது’ என்று கன்னத்தைப்பிடித்து  இணுங்குவான். அவனக்கூப்பிடு, இன்னைக்கு உள் சொட்டர் என்னோடது என்று உசுப்பி விடு வான். அன்று பின்னிரவுவரை பாட்டும், கதையும், விகடமும்ஆகக் கழியும். பனிரெண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு வீடுவரை வந்து விடைபெற்றுக்கொண்டு போவான்.போகும் போது அந்த தெற்றுப்பல் பளீரென்று வசீகரிக்கும்.

மூன்று வருடத்தில் நண்பனாய்,குகனோடு ஐவராய்,பின்னர் தோழனாயும் மாறிப்போனவன், ஒரு  அதிகாலை விபத்தில் பெருங் குரலெடுத்து கதறக்கதற உற்றார் உறவுகளை உலுக்கி எடுத்து விட்டுப்போனான். அதற்கப்புறம் வாசல் வழிக்கடந்து போகும் எல்லா டீவிஎஸ் விக்டர் பைக்கும் அவனது நினைவு களைக் கிளறிக்கொண்டே கடந்து போனது. இதோ ஐந்து வருடங்கள் ஓடிப் போனது. அந்த எண் உபயோகத்திலிருக்கிறதா இல்லையா என்கிற அறிவுப் பூர்வமான கேள்விகளும் சிந்தனையும் இல்லாமல்  மூன்று கைப்பேசிகளுக்கு இடம் பெயர்ந்து இன்னும் சுருளியின் நட்புப் பட்டியலில் இருக்கிறது. அந்த எண்ணுக்கான அழைப்பு பாடலாக சிச்சூர் படத்தில் ஜேசுதாஸின் கொரித்தெரா ஹாவுமேராவை ஏற்றி வைத்திருந்தான்.அது குட்டி அடிக்கடி படிக்கும்   ஹிந்திப்  பாடல். இந்த மூன்று வருடத்தில் மட்டுமல்ல இனி மீதமுள்ள நாட்களிலும் அது  ஒலிக்காது. ஆனாலும்  கிட்டத் தட்ட மூடநம்பிக்கை போன்ற இந்த பாதுகாத்தல் சுருளிக்கு சந்தோசமானதாக இருந்தது.  

25.9.11

வாணியின் பாடலைக் காதலித்தவன்


காலையில் வசந்த் தொலைக் காட்சியில் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்தப்பாடல்கேட்டதும் வெளியே பல்துலக்கிக் கொண்டிருந்தவன்  திடுதிடு வென உள்ளே ஓடிவந்தால்.வீட்டுக்காரி என்ன சொல்லுவாள். நெனப்பு வந்துருச்  சாக்கும். என்னமும் சொல்லிவிட்டுப்போகட்டும். இந்தப்பாட்டைக் கேட்கிறபோதெல்லாம் என்னிலிருந்து விலகி மிதந்து அமிழ்ந்து உள்ளே போய்விடுவேன்.

நீண்ட வெயில் சைக்கிள் பயணத்தில் திடீரென மேகம் கவிழ்ந்துகொண்டு நிழல் கூடவரும் சுகம் அலாதியானது. அப்படித்தான் எங்கிருந்தாவது இழைந்தோடும் வானிஜெயராமின் திரைப்பாடல்.எனது பதினான்மூன்றாவது வயதில் நான் காதலித்த பலவற்றில் அந்தக்குரலும் ஒன்று. எவளோ ஒருத்தியி டமிரு ந்தெனக்கொரு காதல் கடிதம் கிடைத்தது போல இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திலிருந்து எனக்கென இசைக்கப்பட்டது போல வாணி ஜெயராமின் குரல் வரும். மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா என்கிற பாடல் என்னைக் கிறக்கியபோது மல்லிகை பற்றியும் நானறியேன். மன்னனெப்படி மயங்குவானென்பதையும் நானறியேன்.அதற்கு வாயசைக்கும் கே ஆர்.விஜயாவுக்கு  என்  அம்மா வயசிருக்கும். பாடிய வாணிஜெயரமைப் பார்த்ததில்லை. எனவே எனது கனவும் கற்பனையும் கலந்து அந்தக் குரலுக்கொரு உருவம் கொடுத்திருந்தேன்.அந்த ஓவியம், ஆம் அந்த ஓவியம் இன்னும் அலுங்காமல் குலுங்காமல் அப்படியே இருக்கிறது என்னிடம்.

அப்புறம் இன்ரீகோ இசைத்தட்டுக்களின் உறையில் பாடகர்களை பதிவு செய்யும் வழக்கம் வந்தது.அப்போது ஒத்தையால் ஜானகிராம் சவுண்டு சர்வீசின் கண்ணன்ணனை நான் பழகிவைத்திருந்தேன். எங்கள் ஊரில் கல்யாணம் சடங்கு பொங்கல் கிறிஸ்துமஸ் வரும் போதெல்லாம் நான் அவரோடுதான் இருப்பேன்.ஒரு இசைத்தட்டு சுழன்றுமுடிக்கிற தருவாயில் அடுத்த இசைத்தட்டை எடுத்து ஒரு துணியால் துடைத்துக் கொடுக்கிற இசைச்சேவை செய்வேன்.அப்போதெல்லாம் ஊர் என் தெரிவுகளையே இசைத் தெரிவாக ஏற்றுக்கொள்ளும்.எவனாவது எம்ஜியார் சிவாஜி என்று வம்பி ழுத்தால் அவனுக்கிருக்கும் அன்றைய இரவில் கொடமானம்.சிவாஜியும் எம்ஜியாரும் கொடிகட்டப் போட்டிபோட்டுப் பறந்த காலமது.அப்போது, அவர்களுக்கு இணையான புகழுடன் இருந்த டி எம் எஸ் சுசீலாம்மாதான் அவர்களுக்கு பாடவேண்டும் என்கிற ஒரு மேட்டிமைத்தனம் இருந்தது. அப்போதெல்லாம் வாணியம்மா சிவகுமார், ஜெய்சங்கர், முத்துராமன், கமலஹாசன் போன்ற சில்லண்டி நடிகர்களின் ஜோடிகளுக்குத்தான் குரல்கொடுத்துக் கொண்டிருந்தார்.அந்தக் குரல்தான் எனக்கு கனவுக் கன்னியாக இருந்தது.

அந்தகுரலுக்கு நான் வரைந்த ஓவியத்தைப்போல யாரும் தென்படவில்லை.அதன் அருகில் வந்தவளை சின்னமணி உயிருக்கு உயிராக காதலித்துக் கொண்டிருந்தான்.சின்னமணி என் நண்பணாக இருந்ததால் நான் அந்தக்காதலுக்கு தூதும் போனேன். நான் காதலித்ததாக நினைத்துக் கொண்டிருந்த  கலைச்செல்வியை என் நன்பணும் அண்ணனுமான அன்பரசன் நிஜமாகவே காதலித்தான் என்பதை அறிந்து தோற்றுப்போன காலமது. அந்த தோல்விகளை சரிக்கட்டும் விதமாக மர்பிரேடியோ பாடும் எல்லா இடங் களுக்கும் போவேன் எப்படியும் ஒன்றிரண்டு வாணியம்மாவின் பாடலை கே எஸ் ராஜா கொழும்பிலிருந்து சுழல விட நான் நடுச்சூரங்குடியிலிருந்து அதை வாங்கிக் கொள்வேன். உலகம் எல்லாம் காதலித்துக்கொண்டிருக்கும் போது நான் தனித்து விடப்பட்டதைப் போலொரு கழிவிறக்கம் வரும். அதனாலே உலகமெல்லாம் சுசீலாவையும் டி எம் எஸ்சையும் விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்த அந்த காலத்தில் ஒதுங்கி வாணிஜெயராமின் பாடல்கள் போதுமென ஒதுங்கிக்கொண்டேன்.

அப்போது இளையராஜா மெல்ல மெல்ல தமிழ் திரையிசைத்தளத்தில் தன்னை நிறுவிக்கொண்டிருந்தார். என்னடா சினிமாப்பாட்டு ஒரே ’ரண்டணக்காவா’ இருக்கு என்கிற விமர்சனங்கள் சொல்லுவது பேசனாக இருந்தது.அப்படியான விமர்சகர்களுக்கு சாஸ்திரிய இசைபற்றியும் தெரியாது திரை இசை பற்றியும் தெரியாது.ஆனால்  அவர்கள் எப்படியோ சிரமப்பட்டு இளையராஜாவின் ஜாதியைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள். அந்த தகுதியே அவரை விமர்சனம் செய்ய போதுமானதென்று கருதியகாலம் அது. அன்னக்கிளியின் மச்சானப்பாத்தீங்களா பட்டிதொட்டிகளின் விருப்பகீதமாக மாறிப்போன மாற்றத்தைச்ச்கைக்கமுடியாத இந்த விமர்சனம் வரும் முன்னதாகவே அவர் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் தஞ்சாவூரு நாந்தாவி வந்த என்கிற பாடலில் தனது திறமையைச்சொன்னவர். ஆனாலும் பாருங்கள் அந்த அன்னகிளி படத்தில் சுசீலாம்மா ஜானகியம்மா,சுசீலாம்மா பாடியபாடல்கள் அனுபவித்துப்பாடினமாதிரி இருக்கும் டிஎம் எஸ் பாடியது மட்டும் ஊரா பிள்ளைக்கு கால்கழுவி விட்ட மாதிரி இருக்கும். இருந்துவிட்டுப்போகட்டும் அது இசையரசியல்.

அப்போதெல்லாம் தமிழ்ச்சனம் தங்கள் சுகதுக்கங்களை சினிமாவோடும் சினிமா இசையோடும் குழைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். தெரு ஊர்,ஜாதி,மதம்,கோவில்,கல்யாணம்,அவன் இவர் எனப்பிரிந்து கிடக்கிற அவர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் குவிய வைக்கிற மகத்தான பணியைச்செய்தது சினிமா.அதற்குப் பிரதியுபகாரமாக நகுமோகு இசைத்து சில துதிப்பாடல்களோடு தங்கள் சுபகாரியங்களைத் துவங்கினார்கள். மணமகளே மணமகளே வா வா என்று இசைத்தட்டு முழங்காத கல்யாணம் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்யாணம் இல்லையென ஆகிப்போனது. அப்போது களையெடுக்கும் பெண்கள் ஆஆங் ஸ்ரீரெங்கபுரத்து சன்னாசி மகன் அழகாபுரிக்காரிக்கு தாலிகட்டிட்டாண்டி என்று கணித்துக்கொள்வார்கள்.

இப்படிப் பாடலோடும், இன்னும் சில பாடல்களோடும் தனக்கும் கல்யாணம் விடியும் எனக் கனவுகண்ட சின்னமணியின் காதல் குடும்பச் சண்டையில் முடிந்தது. கிழக்கே போகும் ரயில் சுதாகரைப்போல அவன் ஊரைவிட்டுப் போய்விட்டான்.ஆதலால் அவளுக்கும் வாணியம்மாவின் பாடல்கள் பிடித்துப் போயிருந்தது. எனக்குகிக்கிடைத்த அந்த ஏகாந்தத்தைப்பறித்துக் கொள்ள வந்தவள் போல வந்தாள். ஒருவருக்கொருவர்  சோகங்களைப் பகிர்ந்து கொள்கிற பாவனையில் ரசனைகளை,விருப்பங்களை பேசிப் பகிர்ந்து கொண்டோம். சீனிக் கிழங்கவித்து சொலகில்வைத்து பனியில் நனைய விட்டுக் காலையில் எடுத்துத் திண்ண நான் பேயாய் அலைவேன் என்பதை தெரிந்து கொண்டாள். அதைப் போலவே செய்து கொண்டுவந்து தரும்போது அதில் அடிப்பிடித்த கிழங்கை தனக்கென ஒதுக்கிக்கொண்டாள். அது இன்னமும் வாசமாக இருக்கும் என்பதை இருவரும் பகிர்ந்துகொண்டோம்.

ஒருவருடம் கழித்து ஒரு வெயிநாளில் பூவரசம்பூக்கள் பூக்க வந்த சின்னமணி அவளிடமும் பேசவில்லை என்னிடமும் பேசவில்லை. அவன் ஊராரிடம் அதிகம் பேசியிருந்தான். ஊர் எங்களைப்பற்றிப் பேசியிருந்தது அப்போதுதான் தெரிய வந்தது. அப்போது ஒரு சின்ன விலகல் இருந்தது வேண்டாம் இந்த வீண் பழி என இருவரும் ஒதுங்கிப்போயிருந்தோம். ஒருமாத இடைவெளி தான் பௌதிக மாற்றங்களொடு மிக நெருக்கமானது. இரண்டுநாள் சோர்வாய் இருந்தவளிடம் துளசிபிடுங்கிக்கொடுத்தேன்.மறுப்பின்றி வாங்கிக்கொண்டாள் அந்த துளசி வாடிப்போய் மறுநாள் குப்பையில் கிடந்தது கண்டு சோர்ந்து போனேன்.சொன்னேன். காரணம் சொன்னபோது நான் நாக்கைக் கடித்துக் கொண்டேன். இது கூடத்தெரியாத மக்கு என என்தலையில் ஒரு கொட்டுக் கொட்டினாள். அந்த செல்லக் குட்டுக்கு பதிலாக நான் ஏப்ரல் ஒண்ணாம் தேதி ஒரு வெற்று இன்லாண்ட் லட்டரை அவளுக்கு அனுப்பியிருந்தேன். ஊர் அதை நான் அவளுக்கு எழுதிய காதல் கடிதம் என திரித்து எழுதியது.  இல்லை இல்லை எனச்சொல்லிக்கொண்டே எதோ புள்ளியில் திரித்து எழுதியது நிஜமாவே மாறியது.

அப்புறமான எனது பொழுதுகளை நகர்த்தும் கடிகார முட்கள் அவளைச்சுற்றியே வட்டமடித்தது. நாங்கள் வாணியம்மாவின் எல்லாப் பாடலிலும் துள்ளல் இசையோடு காலம் கடத்தினோம். அந்த வருடம் ஸ்ரீதரின் இயக்கத்தில் வந்த அந்தப்படத்தில் கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களும் வாணியம்மாவே பாடியிருந்தார். ஒரு முன் நிலவுநாளில் கனிநாடாரின் சோளப்பிஞ்சைக்குள் சந்தித்துக் கொண்ட நாங்கள் எதையெதையோ பேசி னோம்.  மூச்சுக்காற்றும்,மனசும்,உடம்பும் வெப்பத்தோடு கனன்று கொண்டிருக்க  நாங்கள் நல்லவர்களாக நடித்துக்கொண்டிருந்தோம். அம்மா தேடும் என்று எழுந்தவளின் கையைப் பிடித்தேன் இரண்டு கையும் வெப்ப மாகவே இருந்தது.  உதறிவிட்டு ஓடியவளிடம் மறுநாள் நேருக்கு நேர் முழிக்க முடியவில்லை. ரெண்டுபேரும் கையில் கிடைத்ததை தவறவிட்ட ஏக்கத்தில் இருந்தோம்.அதன் பிறகு அப்படியொரு நிலவு திரும்பவரவேஇல்லை. சித்திரை வெயில்தான் வந்தது. அம்மாவிடம் சண்டைபிடித்துக்கொண்டு ஊருக்கு மேற்கே இருக்கும் காந்திநாயக்கர் தோட்டத்து பம்புசெட்டு தாவரத்தில் படுத்துக்கிடந்தேன்.

திடீரென மழைபெய்தது போலக் கனவுகண்டு விழித்தேன் ஈரத் தலையிலிருந்து சொட்டும் நீரை முகத்தில் விசிரியபடி அவள் சிரித்திருந்தாள். அந்த வெயில் நாளிலிருந்து மூன்றாம் நாள் எஸ்ஜிஜே பேருந்தில் ஸ்ரீவில்லிப்புத்தூருக்குப் போனேன். மல்லியை நெருங்கியதும் சிலுசிலுவெனக் காற்றடித்தது. கோடை மழை. மல்லியிலிருந்து கிளம்பும்போது கிடைத்த ஜன்னலோர இருக்கை. மழை நின்ற மண்வாசனை.முகத்தில் அடிக்கும் காற்று அவள் நினவு இப்போது என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் என்கிற வாணியம்மாவின் பாடல்.

 இப்போது சொல்லுங்கள் கேட்கிற நேரம் எல்லாம் கிறங்கவைப்பதற்கு இந்தக் காரணங்கள் போதாதா?

என்ன அவள் பெயரையே சொல்லவில்லையா ? நான் யாரென்று சொல்லவில்லையா ?.

நினைவுகளில் மிதக்கிற எல்லோருடைய பெயரும் என் பெயர். அலைக்கழிக்கிற எல்லாப்பெயரும் அவள்பெயர்.

3.7.11

மிஷினாஸ்பத்திரியும் துட்டுவாங்கும் மிஷினும்.வெள்ளந்திக்கதைகள்



விடிந்தும் விடியாத கருக்கலில் அடுப்புச்சட்டிகள் உருள்வதும் தண்ணீர் சிதறுவதுமான ஓசைகள்,ஊதுவத்தி,பச்சை விறகுப்புகை மணப்பதுமான வாசனைகள் .அந்த கிராமத்து தேநீர்க்கடை ஊருக்கு சுறுசுறுப்புடன் கூடிய இதமான இனிப்பு வழங்கத் தயாராகிக்கொண்டிருப்பதை அறிவிக்கும்.காப்பிப்பொடிய எங்க வச்ச ஒழுங்கா ஒரு எடத்துல வய்க்கத் தெரியுதா பொம்பளக்கி நல்லா வாயில வருது இந்தா ஓம்பீச்சாங்கயிப்பக்கத்துல கெடக்குற பாக்கெட் என்னது,ஆட்டுக் குட்டியெக் கழுத்துல போட்டுக்கிட்டு ரோட்டுல தேட்ற கதகெனட்டா.ம்க்கும் இந்த குண்டுபல்பு வெளிச்சத்துல என்ன தெரியிது.பேதியில போற பெயக நம்மூருக்கு மட்டும் இத்தினிக்கூண்டு கரண்ட அனுப்புறான்.சொல்லச் சொல்லக் கேக்காம கண்ண மூடிக்கிட்டு போயி ஓட்டக்குத்துனா இப்பிடித்தான்.

சொந்தச் சண்டையில்  ஆரம்பித்து அரசியலில் நிலைக்கொள்ளும் பேச்சு. இப்படி ஆரம்பிக்கிற பேச்சு ராத்திரிப் படுக்கிற வரை கூட வரும்.அதுவும் மெத்தப்படிச்ச சித்திரவேலு வந்தாப்போதும் கடையில் கூடப்பத்து டீக்கணக்கு சிட்டையில் ஏறும். ஊர்முச்சூடும் கைநாட்டுப்போட வண்டிமைதேடிக்கிட்டு அலஞ்சப்போ சாத்தூர் ஜப்பான் பள்ளிக்கூடத்தில் ஆறு வரைக்கும் படிச்ச மேதாவி சித்திரவேலு.அவன் வீட்டு ரெங்குப்பெட்டியில் ஒரு மைப்பேனா கெடக்கும்.அதை பெத்த பிள்ளைகளக் கூடத்தொடவிடமாட்டான். பிறந்தபிள்ளைகளுக்கு சேனை ஊத்த பேனாக்கேட்பார்கள் அப்போது பெரிய்ய அழிச்சாட்டியம் பண்ணுவான். என்னமோ ஊருக்குள்ள தங்கத்தேரை ஓசிக்கு ஓடவிட்ட ரஜபரம்பரை மாதிரி பேனாவைக் கொடுத்துவிட்டு அதை திருப்பி வாங்க வாசப்படியில உட்கார்ந்துவிடுவான். அது மட்டுமா ஊருக்கு வரும் தினத்தந்திப் பேப்பரையும்தான்.

எலே சம்மட்டியும்,மம்பட்டியும் தூக்குற ஒங்களுக்கு பேப்பரப்பத்தி என்னடா தெரியும் ஒருபானக்கஞ்சிய ஒரே தடவையில குடிச்சதத்தவர என்ன சாதிச்சிட்டீங்க என்று சொல்லுவான். அவனிடம் வாக்குவாதம் செய்ய யாரும் வரமாட்டார்கள்.அப்படி வாக்குவாதம் பண்ணி சண்டையாகிப்போனா நாளப்பின்ன ஒரு தபாலுகிபாலுவந்தா வாசிக்க சித்திரவேலுதான் கதி. ஒரே ஒராளுக்கிட்ட மட்டும் அவன் பருப்பு வேகாது அந்த சரோஜாச்சித்தி வந்துவிட்டாப்போதும் கம்முனு கெடப்பான்.அவள் பத்துப்படித்த விவரகாரி.அதுக்கு ஒரு காரணம் இருக்கு.ஊர் மடத்தில் அன்னைக்கு ஒரே கசமுசா சீட்டாட்டம் கூட நின்னு போச்சு.வேறு ஒன்றும் இல்லை மகாத்மாக் காந்தியின் பேத்தியா தான் இந்திராக்காந்தி என்று நட்டுக்க நிக்கிறான்.மடம் ரெண்டாகப்பிளந்து அங்கிட்டு பத்து இங்கிட்டு பத்துபேரா கோஷ்டியானது. ஊர்த் தலைவரிடம் போய் பிராது சொல்லலாம் என்றால். கீரமுண்டைகா வீட்டுக்கு போங்கடா போக்கத்த பெயகளா என்று விரட்டி விடுவார். களவு, சுவரேறிக்குதிச்சது, கையப்பிடிச்சு இழுத்தது, கடவுக்குள் பேண்டு வச்சது,புருசம்பொண்டாட்டி சண்டை,பொழித்தகராறு தீத்துவுட்றதில தான் ஊர்த்தலைவர் கில்லாடி.ஆனால் முனியாண்டி என்று எழுதிமுடிக்க மூன்றுநாள் ஆகும்.

அந்தப்பக்கமா வந்த சரோஜச்சித்தியிடம் பிராதைக் கொண்டுபோனார்கள்.அவள் அங்குவந்தவுடனே அவர் பாதிபேதி போய்விட்டது. கிட்டத்தட்ட தோத்துப்போனார்.அவளை ஆறாம் வகுப்புக்கு ஹாஸ்டலில் சேர்க்க மெத்தப்படிச்ச சித்திரவேலுதான் கூட்டிக்கொண்டு போனார்.மதுரை போகவேண்டிய அவர்கள் ரயிலேறிக்கொவில்பட்டிபோய் இறங்கியகதை ஊருக்குள் பிரபலம்.திருநெல்வேலி மதுரை என்று போர்டு போட்டு இரண்டு அம்புக்குறி எதிரும் புதிருமாக இருக்குமல்லவா? அவர் மதுரை அம்புக்குறி காட்டிய பக்கத்துப்பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்டு சவடால் பேசினார். கோயில்பட்டியில் இறங்கிப்பின்னர் அங்கிருந்து மதுரைக்கு பஸ்பிடித்துப்போய்ச்சேர இருட்டிவிட்டது.மறுநாள் ஊரே கெக்கெக்கேனு சிரிச்சுக்கிடந்தது.  அதிலிருந்து சரோஜாச்சித்தி அந்தப்பக்கம் வந்தாப்போதும் சவுண்டைக்குறைத்துக்கொள்வார்.

இப்போது வராலாற்றுப்பாடத்தில் படித்ததைச் சொன்னதும். ஊர்மடத்து விவகாரம் சப்பென்று போனது.அன்னைக்கு அப்படித்தான் கோயிலானுக்கு வயித்துவலியென்று வந்து கடையில் ஜிஞ்சர் பீர் வாங்கிக்குடித்துக்கொண்டிருந்தான்.யாரோ வெத்திலையும் மிளகும் வைத்து மென்னுதின்னு என்று சொன்னார்கள்.காலங்காத்தால ஒரு செம்பு புளிச்சதண்ணி குடி என்று மாடத்தி சின்னம்மை சொன்னாள். அங்கு வந்த சித்திரவேலு ஞானதுரை ஆஸ்பத்திரிக்குப்போ ஒரே ஒரு ஊசியில சொன்னங்கமாக்கேக்கும் என்று சொன்னார். கடிச்சிக்கிடக்கு கருவாடு வாங்கத்துட்டில்லன்னு வீட்டுல சண்ட போட்டுட்டு வந்துருக்கேன் துட்டாஸ்பத்திரிக்கு போகச்சொல்றயே சின்னையா என்று கடுப்பாகினான் கோயிலான்.

அப்புறம் கதை வேலுஅண்ணனுக்கு வகுத்தாப்பரேசன் செஞ்சது,திருமேனிச்சித்திக்கு காட்டாஸ்பத்திரியில கொழந்த பெறந்தது இப்படி ஒன்றிலிருந்து ஒன்றுக்குத்தாவிக்கொண்டே போனது.அப்போது தான் அங்கு வந்த பேச்சி முத்து கேட்டான் ”ஏ மாமா இந்த மிஷின் ஆஸ்பத்திரி மிஷின் ஆஸ்பத்திரின்னு சொல்றாய்ங்களே அப்படின்னா என்னா மாமா” என்று கேட்டான். இந்தச்சவால்கேள்விக்கு பதில் சொல்ல தனது கேள்விஞானத்தையெல்லாம் ஒன்று திரட்டி ஆரம்பித்தான்.மாப்பிள அங்க பூராம் மிஷினுதான்,நாடிபாக்க, ஊசிபோட, ஆப்பரேசன் பண்ண, மருந்துகட்ட இப்பிடி எல்லாவேலைக்கும் மிஷினுதே வச்சிருப்பாய்ங்க அது வெளிநாட்டுல சர்வச்சாதாரணம் பூராம் வெள்ளக்காரங்கண்டுபிடிச்சது என்று அளந்து விட்டுக்கொண்டிருந்தான்.அப்ப துட்டுவாங்குறது ஆளா இல்ல மிஷினா மாமா என்றான். எலே ஒங்க வலசல சும்மாவால சொன்னாய்ங்க சூத்துக்கொழுப்பு பிடிச்ச சுருளியன் வலசல் அப்படீன்னு என்று சொல்லிவிட்டுதுண்டை உதறித்தோளில் போட்டுக்கொண்டு கிளம்பிப்போனார் மெத்தப்படிச்ச சித்திர வேலு.  

21.6.11

இருளுக்கும் ஒளிக்கும் ஊடே ஒரு அந்திக்கருக்கல்


ரிங்க் ரோடு வந்து இறங்கும் போது அந்தி சாய்ந்துகொண்டிருந்தது.ஒரே கூட்டமாக இருந்தது.இவர்கள் எல்லோரும் கோவில்பட்டி போகிறவர்களாக இருக்ககூடாது என்று கருவிக்கொண்டேன்.போனசனிக்கிழமை மாதிரியே இறங்கியதும் ஏதாவது பேருந்துகிடைத்து விட்டால் சரியாக ஒன்பது மணிக்கு வீட்டுக்கு போய்விடலாம். பலசரக்கு கடையைக் கடக்கும் போது நைனா ரண்ட சார் இப்புடுதான் ஒச்சவா என்றுகேட்பார்.அவரைத் தொடர்ந்து அவரது பேத்தி கடகடவெனப் பேசும் தெலுங்குக்கு ஈடு கொடுக்க முடியாமல் அங்கிருந்து நடையைக் கட்டலாம்.கன்னங் கரேலென்று நேர்த்தியாய்க் குடை விரித்திருக்கும் நிலவேம்பு மரத்தின் நுனியை எட்டி இழுத்துக்கொண்டே எஸ்.ஆர் நாயுடு காலனியைக்கடந்து போகலாம்.எதிர்ப்படும் பெண்களின் ஈர்ப்பு இனிய பாடல்களை  ஞாபகப்படுத்த இன்னும் இரண்டு நிமிடத்தில் வீட்டுக் கதவைத்திறக்கலாம். இப்படி ஒரு வாரத் தனிமை வீட்டையும் தெருவையும் தெரு மனிதர்களையும் வசீகரமாக்கியது.

எய்யா திருசெந்தூர் தூத்துக்குடி வண்டிவந்தா சொல்லுங்க, இந்தக்கெழவிய ஏத்தி வுட்ருப்பா என்று சொல்லிக்கொண்டே ஒரு கட்டைப் பையை  கீழே வைத்துவிட்டு எனது முகத்தைப்பார்த்தார் அந்தப்பாட்டி.கட்டைப்பையில் வெளியே தெரியும்படிக்கு இருந்த கிளிமூக்கு மாம்பழமும் பாக்கெட் மிக்சரும் பேரக்குழந்தைகளின் ஆர்ப்பரிப்பையும் சந்தோசத்தையும் சுருட்டி வைத்திருந்தன.கோவில்பட்டி வண்டி காலியாய் வந்தது புது வண்டி இளையராஜா பாட்டு வேறு.தம்பி இது எந்தூர் வண்டி கோயில்பட்டி.இப்படியே எனக்கான மூன்று வண்டிகள் போய்விட்டது. பாட்டிக்காகக் காத்திருந்தேன்.அப்போது கூட்டம் கிட்டத்தட்ட குறைவாக இருந்தது.நான் பாட்டி,சின்னப் பையனோடு ஒருவர் கொஞ்சம் கொத்தனார்கள் மட்டும் இருந்தோம். கொத்தனார்களோடுஅவரும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கடைசியாய் வந்த கோவில்பட்டி வண்டியில் ஏறினார் என்னைத் திரும்பிப் பார்த்து சார் வரலியா என்று கேட்டார்.பாட்டி என்னைப்பார்த்து நீ கோயில்பட்டி போனுமா மகராசன் கெழவிக்காக நிக்கியா.தூத்துக்குடி பேருந்து வந்ததும் ஏறினாள் வண்டி புறப்பட்டது பின்னர் நின்று ஒரு பெண்ணையும் ஒரு பெண்குழந்தையையும் இறக்கிவிட்டு விட்டு எதோ சத்தம் போட்டுக்கொண்டே விசிலடித்தார் நடத்துநர்.

அதன் பிறகு வந்த மூன்று வண்டிகளும் பைபாஸ்ரைடர்.ரிங்ரோட்டில் நிற்கவே இல்லை. இருட்டி விட்டது . வாகனங்கள் மஞ்சள் கண்களுடன் பாலமேறி வரத்தொடங்கின.வானம் மஞ்சளுக்கும் கறுப்புக்கும் நடுவில் ஒரு புதுநிறத்தை கரைத்துக்கொண்டிருந்தது. ஒற்றை வெள்ளைக்கொக்கு மட்டும் பறந்து போனது. அதன் இறக்கை அசைவில் நெடிய பாரமும் சோகமும் தெரிந்தது.ராமேஸ்வரம் திருப்பத்தில் இருந்த பெட்டிக்கடைக்காரர் பால் சட்டியைக்கழுவி ஊற்றி விட்டு ரோட்டுக்கும் கடைக்கும் நடுவே சூடம் ஏற்றி  வைத்து விட்டுக் காத்திருந்தார். கம்மங்கூழ் விற்றுக் கொண்டிருந்த வரும்  தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு கடைசியாய்க் கடந்துபோனார். பரப்புக்குறைந்து நியான் விளக்குகளின் மஞ்சள் நிற மௌனம் அந்த இடத்தில் குவிந்து கிடந்தது.நான் அந்தப்பெண்,அந்தக்குழந்தை அவ்வப்போது கடந்து போகும் வாகன இறைச்சல்.

சற்றைக்கெல்லாம் அந்தக்குழந்தை கால்வலிக்கிறதென்று பேருந்து நிறுத்தத்தின் படியில் படுத்துவிட்டது.இப்போது இருவருக்குமான பிரதானப்பிரச்சினை தனிமை. என் ஆராய்ச்சி மனது அவள் யார்,எங்குபோகிறாள்,ஏன் அவளது கணவன் வரவில்லை என்று  கணித்துக் கொண்டிருந்தது.அவள் கட்டியிருந்த பட்டுச்சேலை எங்கோ விஷேசத்துக்குப் போய் வருவதாக முடிவுக்கு வரவைத்தது. பெருஞ் சஞ்சலத்துக்குப் பிறகு முகம் பார்த்தேன். வெடுக்கெனத் திருப்பிக் கொண்டாள்.இது  அவமானமாக இருந்தது. பாட்டியைச்சபித்துக் கொண்டேன்.ஒரு நிமிடம் தாமதித்தால் ஓராயிரம் அடிகள் பிந்தங்கிவிடுவோம் என்கிற சோலைம்மாணிக்க அண்ணன் வார்த்தைகள் காரணமில்லாமல் நினைவுக்கு வந்தது. அவள் அப்படித்திரும்பியது அந்த சூழலின் இயல்பற்ற நிலைமையை இன்னும் அதிகரித்தது.  எதிர்திசையில் போய் நிற்கநினைத்த போது லாரிகள் அதிகமாக வராஅரம்பித்தது.  அதைத் துடைத்து என்னை நல்லவனாகக் காட்டிக் கொள்ளச் சற்றுத் தள்ளிப்போய் நின்றுகொண்டேன். எனது செல்போனை எடுத்து அதிலிருந்த குறுஞ் செய்திகளைப் படித்துக்கொள்வதாகப் பாவனை பண்ணினேன்.

வேகமாய் வந்த நேசனல் பெர்மிட் லாரி அவள் பக்கத்தில் வந்து நின்றது.ஓட்டுநர் கழுத்தை நீட்டி அவளிடம் ஏதோகேட்டான். அவள் பதறிப்போய் என்னருகில் நெருங்கி வந்து நின்றாள். மறுபடியும் ஒரு தூத்துக்குடி வண்டி வந்தது. வண்டியைப்பர்த்து விட்டு என்னைப் பார்த்துக்கேட்டாள் ‘அண்ணே தூத்துக்குடி வண்டிக கோயிலுப்பட்டி போகாதா”. இல்லீங்க அருப்புக்கோட்டை,எட்டயபுரம் வழியா நேராப் போயிரும். இன்னொரு திருநெல்வேலி வண்டி வந்தது ஓடிப்போய் மகளை எழுப்பித் தூக்கிக்கொண்டு நடக்குமுன் நின்றவண்டி கிளம்பி விட்டது.பாப்பா அது புதுப் பஸ்ஸ்டாண்டுதான் போகும் நீ அங்கிருந்து பத்துமணிக்குமேல் திருப்பியும் ஒத்தீல ஊருக்குள்ள வரணும். பயப்படாதே நானும் கோயில்பட்டி வண்டிலதான் போனும் என்றேன்.சரிண்ணே என்றாள்.அதற்குப்பிறகுப் வந்த எல்லாவண்டிகளும் நிற்காமல் போகவே இன்னும் பரபரப்பானாள்.  ஆமா உங்க வீட்டுக்கரரெ பஸ்ஸ்டாப்புக்கு வரச்சொல்ல வேண்டியதுதானே என்று கேட்டேன். மஞ்சள் நியான் விளக்கில் அவள் முகம் இறுகுவதை உணரமுடிந்தது.

அதன் பின்னாடி அவள் என்னோடு பேசுவதைத் தவிர்த்துக்கொண்டாள். அது பாதுகாப்புக்காகவா இல்லை வேறெதுவுமா எனக்கணிக்க முடியவில்லை.கோவில்பட்டி பேருந்து வந்ததும் குழந்தையைத்தூக்கப்போனேன். அவள் முந்திக்கொண்டு குழந்தையை கூடுதல் வாஞ்சையோடு அள்ளிக்கொண்டாள். சூட்கேசை நான் எடுத்துக்கொண்டேன். காலியிருக்கையில் அவளைஇருத்திவிட்டு என்னிடம் சூட்கேசை வாங்கிக்கொண்டாள். நான் கடைசி இருக்கைக்கு போய்விட்டேன்.பேருந்து நகர்ந்து ஓடியது முகம் வருடிய காற்றில் தூங்கிப்போயிருந்தேன்.ஒரு மணிநேரத்துக்குப்பின் கண்விழித்துப்பார்த்தேன் விருதுநகரை நெருங்கிக்கொண்டிருந்தது.பேருந்து பயணிகள் எல்லோரும் கிட்டத்தட்ட அரைத்துக்கத்தில் இருந்தார்கள். அவள் மட்டும் பிள்ளையை மடியில் கிடத்தி அவளை அணைத்துக்கொண்டு கடந்து போன இருளை வெறித்தபடி உட்கார்ந்திருந்தாள். கண்ணில் கணகணவென்று வீசும் ஒரு ஒளியின் தீர்க்கம் இருந்தது.

17.4.11

எரி நட்சத்திரமும், பச்சை மரமும்.


நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்புகையில் நெல்லை துரித வண்டி வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தை ஒட்டிய வேலிச் செடிகளின் மறைவில் இருந்து சில பெண்கள் எழுந்து ரயிலுக்கு முதுகைக் காண்பித்துக் கொண்டு நின்றார்கள். இன்னும் கொஞ்சம் தள்ளி ஆண்கள் எழுந்து சலிப்புடன் ரயிலைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.மெல்லக்கடந்து போகிற முன்பதிவு செய்யாத பெட்டிகளின் வாசலில் இளைஞர்கள் நின்றுகொண்டு காலைக் காற்றை முகத்தில் ஏந்திக்கொண்டு சிலிர்ப்படைந்தார்கள்.பொதுப்பெட்டிகள் இறைச்சலுடனும்,முன்பதிவு செய்யப்பட்டவை மெலிதான ஓசையுடனும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் கள்ள மௌனத்தோடும் கடந்து போயின.

 இனி வீடு,ஒரு குவளைத் தேநீர்,கொஞ்சம் தீக்கதிர்,இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புகள்,அடுப்படியில் இருந்து அன்றாட பற்றாக்குறை அலுப்புகள் என் இந்தக்காலை கடந்து போகும்.மணிஅடித்தது  அந்த கைப் பேசியில்  வைத்திருக்கிற மாலையில் யாரோ மனதோடு பேச பாடல் சில நேரம்  இனிமையாகவும் பல நேரம் எரிச்சலாகவும் கேட்கும்.மாலை ஏழுமணிக்கு வருகிற அழைப்பில் கடைசி மூன்று எண்கள் இரண்டாக இருந்தால் பயமாக இருக்கும்.ஆமாம் அவர் இரண்டாவது குவளையைக்காலி செய்து ஒரு சிகரெட்டை குடித்து முடித்தவுடன் எனக்கோ அல்லது மணி அண்ணனுக்கோ பேசுவார்.வார்த்தைகள் இடறி இடறி விழும். அதிலிருந்து மூன்று வருடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இன்க்ரீமெண்டை சரிசெய்ய வேண்டுமென்கிற செய்தியை தெரிந்து கொள்ளச்சிரமம் இருக்காது.என்ன சிரமம் என்றால் அதே செய்தியைக்கிட்டத்தட்ட நான்காவது முறை சொல்லும்ப்போதும் முதல் தரம் சொல்கிற ஆர்வத்தில்லேயே சொல்லுவார்.

ஆனால் அண்ணன் சோலைமாணிக்கம் அழைப்பர் ஒரு ஐந்து நிமிடம் பேசுகிற பொருளை ஆரம்பிப்பார்.சரி போனக்கட் பண்ணு அப்புறம் கூப்பிடுகிறேன் என்பார்.ராகவனும்,பத்மாவும் அப்படியில்லை பாடச்சொல்லுவார்கள், கிடைக்காமலவர்களே பாடுவார்கள் அல்லது நல்லபாட்டைப் பற்றிப் பேசுவார்கள்.சில நேரம் நடுராத்திரி அழைப்புவரும் நல்ல கனவோ கெட்ட கனவோ தடைப்பட்டுப் போகும். கண் எரிச்சலோடும் நிறைய்யத் திகிலோடும் எடுக்கிற தருணங்கள் கொடியது. வயதான அம்மா,அப்பா நோய்வாய்ப்பட்டிருக்கும் நெருங்கின சொந்தம், இப்படி பல முகங்கள் நிழலாட எடுத்தால் ‘ என்ன இன்னும் செங்கல் லோடு வர்ல’ என்று குரல் வரும். தவறான அழைப்பபின் மீது ஏற்படுகிற கோபத்தைக் காட்டிலும் துர்செய்திகள் வரவில்லை என்கிற சந்தோஷம் தான் அதிகமாகும். ’அண்ணாச்சி ராங் நம்பர் அண்ணாச்சி’ என்று சொல்லிவிட்டு வைக்கும்போது தூக்கம் போயிருக்கும். அந்த பயம் கவ்விய ராத்திரியைச் சரிசெய்ய எனக்கு தெரிந்த ரெண்டு உபாயங்களில் ஒன்று வடிவேலுவின் காமெடியைப் பார்ப்பது.

அப்புறம் வீட்டுத் தொலைபேசியில் அடிக்கடி வந்த அந்த தவறான அழைப்பைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.இப்படித்தான் இரவு பதினோரு மணிக்குமேல் டெலிபோன் மணிபோல அலறும்.எடுத்தால் மறு முனையில் வெறகு லோடு அனுப்பச்சொல்லி ஆறு நாளாச்சு இன்னும் அனுப்பல என்று ஆறுநாளும் பேசினான்.முதல் நாள் இது நீங்க கேட்கிற நம்பர் 8இல்லை என்றும் மறுநாள் ஏரியா கோடை சரியாக அடிக்கச்சொல்லியும்,பேசாமல் திருப்பிவைத்தும் பார்த்தாகிவிட்டடது. கடைசியில் ஒருநாள் கோபப்பட்டு ”என்னய்யா தெனம் ராத்திரி பனிரெண்டு மணிக்குமேல ரொம்பாச்சரியா ராங் நம்பருக்கு அடிக்கியே நல்லாவா இருக்கு ”

19.3.11

குலசாமியும் தீராத பூசுபொடியின் வாசமும்.



இத்தோடு மூன்றாவது இது அழைப்பு. பேரப்பிள்ளைகளை விசாரித்துவிட்டு,ஒரு கழிப்பறை வேண்டுமென்கிற கோரிக்கையையும் கோடிட்டுக்காட்டிவிட்டு கடைசியில் அம்மா சொன்னாள்.’எப்பிடியாச்சும் லீவு போட்டுட்டு வந்துருப்பா,பங்காளிகள்லாம் ஒன்னத்தான் கெட்டாக’. சொல்லும் போது அதே உரத்த குரல்கேட்டது. செல்போனில் மெல்லப் பேசினால் கூடப்போதுமென்கிற நுனுக்கம் அவளுக்கு இன்னும்  கைவரவில்லை.பேசி முடித்த கையோடு சுற்றியிருப்பவர்களைப் பெருமிதமாக ஒரு பார்வை பார்த்திருப்பாள். கனகமணிப்பெரியம்மையும் ,கூல்பானை பொண்டாட்டியும் எதாச்சும் கேலி பேசியிருப்பார்கள். கண்மலரும் பூசுபொடியும் மறக்காம வாங்கியாரச் சொல்லுக்கா என்று ஆரிட்டாச்சித்தி சொல்லியிருப்பாள்.அவள் தான் அந்த மத்தியான வெயிலில் தங்கு தங்குன்னு குதிப்பாள் நாக்கை த்துருத்திக்கொண்டு எனக்கு முட்டை வேணும்,சாராயம் வேணும்,ஒரு கைப்பிடி வச்ச அருவா வேணும் என்று அருவாக்குச்சொல்லச் சாமியாடுவாள்.

ஒரு பத்துப்பதினைந்து வருடங்கள் ஓடிப்போனது,ஊரோடு உட்கார்ந்து நரிக்கொறத்தி ஆட்டம் பார்த்தது.ரெட்டைஅர்த்த வசனங்களைக் கேட்டுக் கொண்டே முறைப்பெண்களைப்பார்க்கிற குறுகுறுப்பு.கிழவன் கோவிலில் சாமிகும்பிடும்போது யாருக்காவது அருள்வந்து உடலை உலுக்கி நாக்கைத் துருத்துவது. தெருச்சண்டையில் ஆம்பளையைப் பொம்பளை மல்லுக்கட்டி ஜெயிப்பது.ஊர்ப்பஞ்சாயத்தில் நல்ல நாயம் பேசுனீக நாயம் வேண்டான்னு சொன்னா தீத்து உட்ருங்க,மனசுக்கு பிடிச்சவனோட காலந்தள்ளட்டும் என்கிற குரல்கேட்டு பத்துப்பதினைந்து வருடங்கள் ஓடிப்போனது. எலே, செம்பட்டையா,  இப்படி பேர்களோடும் இன்னும் சில கெட்ட வார்த்தைகளோடும் அறியப்பட்ட காலங்கள் மாறி “தம்பி எப்ப வந்துச்சி,வாங்க வாத்தியாரய்யா என்கிற மரியாதைகளில் கொஞ்சம் தூரம் அதிகமானது.

முன்னமெல்லாம் மாசி மாதம் ஒண்ணாந்தேதி குலசாமி கும்பிட பங்காளிகள் கூப்பிடுவார்கள். அப்போது ‘ஆமா பெரிய்ய ராஜராஜ சோழன் பரம்பரை’ ஒங்க சல்வார்பட்டியான் வளசலில் பெரிய்ய பணக்காரன் வள்ளிமுத்து பெரியப்பன் மட்டுந்தான். அவனுக்குத்தான் ஓடு போட்ட வீடு இருக்கு. மத்தபடி எல்லாருக்கும் கூர வீடு. அதும் பிரிஞ்ச.கூரைய சரிசெய்ய வக்கில்லாதவங்க வளசல். இதுல என்ன என்ன கொளம் குத்துக்கல்லு சாமின்னு இப்படி எதாச்சும் சொல்லிவிட வந்தவர்கள் அதிகப் பிடிச்சவன் என்று  முனகிக்கொண்டே அங்கிருந்து வெறுப்போடு போய்விடுவார்கள்.ஆனால் ஒரு அரைமுடித் தேங்காயும்,நெய் ஊத்தாத சக்கரைப் பொங்கலும் கட்டாயம் தழுகையாக வீடு வந்துசேரும்.

பங்காளி முருகேசன் அந்தோணி கூட சண்டைபோட்டு மண்டைய ஒடச்சி போலீஸ் ஸ்டேசனுக்கு அலைந்தார்கள்.அந்தோணி உயிர்ச்சிநேகிதன், அந்தோணிக்கு சப்போட்டா அலைஞ்சதும் பங்காளிகளின் கோபம் கருப்பசாமி பக்கம் திரும்பியது.ஊனு கம்பைத்தூக்கிக்கொண்டு அடிக்கஓடி வந்தான் முருகேசன். அப்போது ஆரிட்டாச்சித்திதான் மக்காடச்சேந்து அவனப்பிடிச்சி கம்பைப்புடுங்கி விட்டு வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனாள். ரோஷம் வந்து திருப்பி அடிக்க எத்தனித்த கருப்பாமியின் கண்ணுக்குள் பார்த்த ஆரிட்டாச்சித்தியின் பார்வை ஆத்திரத்தை தளரவைத்தது.

இருசக்கரவாகனத்தை நிறுத்தியவுடன் எல்லோரும் திரும்பிப்பார்த்தார்கள். நெடுநாள் பேசாமல் இருந்த நண்பனின் வீட்டுக்குள் போவதைப்போல கூச்சத்தோடு நடந்து போனான் கருப்பசாமி. காடுமுழுக்க விரவிக்கிடந்த வெயில் இனித்தது. குழந்தைகள் ஓடிப்போய் வண்டிமேல் ஏறி உட்கார்ந்து விளையாட ஆரம்பித்ததுகள்.அந்தக்கூட்டத்துக்குள்ளேதான் கருப்பசாமியின் பழய்ய நாட்கள் கிடந்தது. முருகேசச்சித்தப்பன் வந்து பையை வாங்கிக் கொண்டார்.பீடத்தைச்சுற்றி சாணி தெளிக்கப்பட்டிருந்தது.இலையில் தேங்காபழங்களை அடுக்கிவைத்துக் கொண்டிருந்த சாமிகொண்டாடி மோகன் ’பந்தல்ல ஒக்காருண்ணே, மயினி நீங்களும் போங்க’ என்றான். பொங்கல் சட்டியில் உலை கொதித்துக்கொண்டிருந்தது. ஆரிட்டாச்சித்திதான் பச்சரிசியை அரித்துக்கொண்டிருந்தாள். சட்டியை ஒருக்களித்து வைத்துக்கொண்டு அரைசி அரிப்பது அந்த லாவகத்தோடு பேசும் ஆரிட்டாச்சித்தி ஏ அரிசி வேணுமா என்று கேட்டாள்.நனைஞ்ச அரிசி திங்க எச்சிலூறியது.அரிசி,தேங்காச்சில்,வெல்லக்கட்டி சேத்து திங்கக்கொடுத்து வைக்கணும்.

பொங்கிய பொங்கலோடு குலவைச்சத்தம் காடெங்கும் ஒலித்தது.மோகன் தேங்காயை உடைத்தான்.சாம்பிராணி பத்தி சூடம்  கணத்தது. ஆளாளுக்கு அருள்வந்து சாமியாடினார்கள்.ஆரிட்டாச்சித்தி காடே அதிரும்படி கனைத்துக் கொண்டு திடீரெனக்கீழே விழுந்தாள்.எழுந்து சங்கு சங்கெனக்குதித்தாள். எல்லோருக்கும் திண்ணீறு போட்டாள். கூப்பிடு அவனை என்றாள்.கருப்பசாமி அருகே போனான் அவளுக்கு உடல் கூடுதலாய்க்குலுங்கியது.மார்புக்கு குறுக்கே இருந்த கருப்பாசாமியின் கையைப் பிடித்துக்கொண்டாள். நான் சொன்னதெல்லாம் செஞ்சயா எங்கடா பூசுபொடியென்றாள். கோதைநாச்சியார் புரத்தில் பாவாடை சட்டையோடு அலைந்த போதும் கருப்பசாமியிடம் பூசு பொடிதான் கேட்பாள். கருப்பசாமியின் கண்கள் திரண்டது. அவன் ஆத்திகனாகிக்கொண்டிருந்தான்.

19.2.11

வசியக்காரனும், அடுத்தவீட்டு செல்லப்பிராணிகளும்


செல்லப்பனுக்கு நாய்கள் என்றால்  ரொம்பப்பிடிக்கும் ஆனால் அவன் ஒரு போதும் நாய்கள் வளர்த்ததில்லை.அதற்கு ரெண்டுகாரணங்கள் இருக்கிறது.ஒன்று ரெண்டுவேளைக்கஞ்சி குடித்தாலே அது கடவுள் கொடுத்த கொடுப்பினையாகிற சொத்து சுகம். இருக்கிற கூரை வீட்டில் ஆள் படுக்கவே இடம் பத்தாமல் மடத்துக்கும் வேதக்கோயிலுக்கும் அலையவேண்டியிருக்கிறது. இதில் நாயை வைத்துக்கொண்டு காபந்து பண்ண எப்படி முடியும். ரெண்டு இந்த நாய் பூனை,ஆடு,கோழிகளுக்கு வீட்டு அடங்கல்,பட்டா, விஸ்தீரணம் தெரியாது.தவிரவும் பங்காளி வீட்டுக்கார செல்லையக்கொத்தன் ஒட்டி ஒறவாட்றானா, இல்ல ஏதாச்சும் குத்தங்கண்டு பிடிக்க காத்திருக்கிறானா என்பது கண்டு பிடிக்கமுடியாது. இருக்கிற பிரச்சினையில் சாயங்காலமும் ராத்திரியும் சண்டைபோட்டுக்கொண்டு அலைய முடியாது என்கிற தீர்மானத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில்லை.

ஆனால் செல்லப்பன் தெருவில் நடந்தால் ஊர்க்காட்டு நாய்கள் குதியாட்டம் போட்டுக்கொண்டு பின்னால் ஓடியாரும்.கையில் இருக்கிற சீனிக்கிழங்கு,சேவு,வட்டரொட்டி எதுவனாலும் பாதி பிச்சு போட்டுவிடுவான்.திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பக்கத்தில் ஒண்ணு எட்டத்தில் ஒண்ணு தூரத்தில் ஒண்ணு இப்படி எல்லை வகுத்துக்கொண்டு நிக்கும். ”‘சேடு ஓடுங்க சோத்து மணம் பிடிச்சுக்கிட்டு சொம்ம சேந்து வந்திருவீகளே பிள்ளைய ஒருவா திங்கவுடாம” என்று வெளக்கமாத்தக் கொண்டு அம்மா விராட்டுவாள். ஆனாலும் அப்படியே ஒரு எவ்வு எவ்வி  போக்குக் காட்டிவிட்டு நொடியில் திரும்பிவந்துவிடும் அத்தணை நாய்களும். ”ஆக்குனது காப்பிடி அதுல நாய்க்கு பங்குவச்சிட்டு அரவகுத்தோடு போயிருவான்,கிறுக்குப்பிள்ள” என்று சொல்லிக்கொண்டே தந்து பங்கில் கொஞ்சத்தை எடுத்து கொண்டு வந்து வட்டிலில் தட்டிவிட்டுப்போவாள்.

வாங்கி கொண்டு வந்து வீட்டில் கட்டி கொஞ்சநாள் கஞ்சி ஊத்திவளர்த்துவிட்டு பின்னாடி தெருவில் அலையவிடுவதுதான் ஊர்வழக்க
ம்.அந்த நன்றிக்கு நாய்கள் வீட்டுவாசலில் படுத்துக்கிடக்கும்.இப்படித்தான் கட்டத்தொரை வீட்டு  செவல நாய் செல்லப்பன் பினாடியே அலஞ்சது. நம்ம வீட்டு நாய் ஊராம்பின்னாடி சுத்துதேன்னு அவனுக்கு வெலம்முண்ணா வெலம்.அவங்கம்மாவோ ஊசிப்போன சோத்தக்கூட நாய்க்கு வைக்க மாட்டா,அதையும் கொண்டு போய் ஆட்டுக்கு வச்சிருவா.ஆட்ட வளத்தா துட்டுவரும் நாய வளத்தா ஊர்ச்சண்ட தான் வரும் என்கிற தத்துவக்காரி அவள்.அது செல்லப்பன் பின்னாடியே சுத்துவதற்கு செல்லப்பன் போடும் சோறுமட்டுமல்ல,அவன் கூட அலையும் போராப்போட்ட பொட்ட நாயும் காரணம்.ஊரெல்லையில் நின்றுகொண்டு விசில் அடித்தானென்றால் ஒட்டுமொத்த நாயும் கூடிவிடும்.கூட்டிக்கொண்டு காட்டுவழியே ஓடுவான்.தூரத்த்லிருந்து பார்த்தால் செல்லப்பன் நாய்போலாவான்.அவைகளெல்லாம் மனிதர்களாகும்.விசித்திரம் நிறைந்த கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். கையில் கிடைக்கிற பொருட்களைத்தூக்கி வீசுவான் அதை எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க அதுகளுக்குள் போட்டி வரும். ஆனாச்சண்டை வராதபடி பழக்கப்படுத்தியிருந்தான்.

நாய்களுக்குள்ளசண்டை வந்தாலே பிடிக்காத செல்லப்பன் மனுசங்களுக்குள் சண்டைவந்தா சும்மாருப்பானா. சீரங்காபுரத்துக்கும், இவிங்களுக்கும் சண்ட நெரு நெருன்னு வந்தது.காரணம் ரொம்பப்பெருசில்ல  ரேசங்கடை வரிசையில் ஊர்க்காரன் முந்திப் போயிட்டானாம் பின்னாடி வந்த சீரஙபபுரத்துக்காரன் களவாண்டு கஞ்சி குடிக்கிறவனெல்லாம் துட்டுக்குடுத்து ரேசன் அரிசி வாங்க வந்தா இப்பிடித்தான் என்று சொன்னானாம்.அது வாய்த்தகறாராகி,அடிபுடியாகி தீப்பத்திக்கொண்டது.அன்று சாயங்காலம் ஊரெல்லையில் அருவா, கம்பு,கோபம் துருத்திக்கொண்டு நிற்க சிந்திக்கிற மூளை செயலற்றுபோனது. செல்லப்பனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சமாதானம் சொன்னான்.”போடாப் பொண்டுகப் பெயலே, இனியும் சும்மா கெடந்தா நாமெல்லா சேல கெட்டிக்கிட்டு அலைய வேண்டியதுதா” என்று சாமியாடினான் சண்டியர் சல்வார்பட்டியான்.

பேசிக்கொண்டிருந்த செல்லப்பன் படாரென்று தரையில் விழுந்து கையைக்காலை வெட்டினான்,வாயைக்கோணலாக வைத்துக்கொண்டு எச்சிலை வெளியே தள்ளினான். ”ஏ சனங்கா செல்லப்பனுக்கு காக்கா வலிப்பு வந்திருச்சி” என்று யாரோ குரல் கொடுக்கவும்.கூட்டம் எதிர்த்திசைக்குத் திரும்பி செல்லப்பனை தூக்கிக்கொண்டு ஊருக்குள் ஓடியது.ரெண்டு பேர் அருவாளைகையில் கொடுத்தார்கள்.ஒருத்தன் ஓடிப்போய் சண்டு வத்தல் எடுத்துக்கொண்டு வந்து அடுப்புக்கங்கில் போட்டு புகைவரவைத்தான். ஒருத்தன் மாரியம்மன் கோயில் திண்ணீரெடுத்துவந்து போட்டுவிட்டான். அம்மக்காரி அழுது புலம்பினாள்.இப்படியே ஒரு ஒரு மணிநேரம் ஆனது. கூட்டத்தின் கோபம் குறைந்திருந்தது.”செரி பெரியாளுகள உட்டு நாயங்கேப்பொம்” என்று முடிவுக்கு வந்தார்கள்.”ராத்திரி இதென்னப்பா நம்ம வம்முசத்தில யாருக்குமில்லாத நோயி” ஒனக்கு என்று அம்மை கேட்டாள். சும்மா கெட எனக்கு வலிப்பு வரலன்னா ஊர்க்காரம் பூராம்ப் போயி போலீஸ்டேசன்ல காத்துக்கெடக்கனும்” என்றான்.கிறுக்குப்பெய புள்ள என்று சொல்லிக்கொண்டே கையில் இருந்த கொழம்புச் சட்டியைக் கொண்டு மண்டையில் இடித்து விட்டு அடுப்பைப்பார்க்கப்போனாள்.

கம்மாய்க்கு குளிக்கப்போகும் போது கூடவரும் நாய்களையும் தூக்கி தண்ணிக்குள் போடுவான்.முள்குத்தி கால்தாங்கும் நாய்களுக்கு மண்ணெண்னெய் ,ஊத்தியோ,மஞ்சப்பத்துப்போட்டோ வைத்தியம் பார்ப்பான்.பக்கத்தில் வந்ததும் அது உரசும் இவன் தலை தடவிக் கொடுப்பான் அப்படியே உடலை சுருக்கி அவனுக்கு மரியாதை செய்யும். நாய்களென்ன பேய்கள் கூட அண்டாத கட்டத்தொர,வீட்ல கோபம் வந்தாக்கூட நாயைக்கம்பெடுத்து விளாசுவான்.ஒருநாள் மிச்சம் வச்ச சோத்துத் தட்டில் வாய் வச்சு திண்ணதுன்னு அருவாளெடுத்து வீசி விட்டான்.நடு முதுகில் காயத்தோடு அலைந்தது.செல்லப்பன் தான் டீத்தூளும்,மஞ்சத்தூளும் கொழைச்சு முதுகில் போட்டுவுட்டான். பின்ன என்ன மயித்துக்கு கட்டத்தொர பின்னால அந்த நாய் அலையும்.

”எப்பா செல்லப்பா நாப்பிராணி மேல இம்புட்டு ஆச வச்சிக்கிட்டு ஏ ஒரு குட்டிகூட வாங்கி வளக்கமாட்டிங்ற” என்று கேட்கும் மரியண்ணக் கிழவனுக்குச் சொல்ல அவனுக்கு ஒரு சேதி உண்டும்.ஏ தாத்தா மனுசப்பெய தான் வீடு,காடு,பணம் சாதின்னு பிரிச்சுப் பாக்கான் இந்த வாயில்லாப் பிராணிகளுக்கு அதுகெடயாது. அதுகளுக்குங்கொண்டு போய் நம்ம சாக்கடைய ஊட்டி வளக்கவா. ”இங்க பார்றா எங்கூருல கூல் குடிச்சி வளந்த பிள்ளைக்கு இருக்குற புத்தியெ” என்று சொல்லிக்கொண்டே மம்பட்டியை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு பெருமித்தத்தோடு கிளம்புவான் மரியண்ண கிழவன்.

25.1.11

கீழே கிடந்த உளியின் சிற்பி.


ஷாஜஹான் மாமாவின் ’கருவேல மரங்கள்’ சிறுகதையை நினைவுபடுத்தியபடி அவர் வந்தார்.வசல் வரை வந்து கொஞ்சம் தயங்கி நின்றார் யாரோ ஊர்லருந்து வந்துருருக்காங்க சொல்லி எழுப்பிவிட்டாள். அவர்தான் பாக்கியத்தாத்தா.முப்பதுவருடமாகப்பார்த்த அதே தலைப்பாகை.குளிக்கும்போது கூட கழற்றமாட்டார்.சாப்பிடும்போது தலைத்துண்டை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு மரியாதை செய்வது பொதுவாக கிராமத்து வழக்கம். ஆனால் பாக்கியத்தாத்தா அப்போதும் கழற்ற மாட்டார்.
கவசகுண்டலம் போல கூடவே இருக்கும் ஒரு மஞ்சப்பை.இரண்டு உளி.
ஒரு சுத்தியல்.சாப்டுறீகளா என்றதும் தலைகவிழ்த்து மௌனம் காத்தார்.சாப்பாட்டு மேஜையில் வைத்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அந்த இடத்தில் மஞ்சப்பையை வைத்துவிட்டு கீழே உட்கார்ந்தார்.மிச்சமிருந்த மூன்று ஆப்பமும் கொஞ்சம் தேங்கய்ப்பாலும் வைத்தாள் கூட்டிப்பிடித்தால் ஒரு கவளத்துக்கு வராது.ஆனாலும் அவருக்கு பதவிசாய் நுனிக்குச்சாப்பிட வராது.மதியத்துக்கு ஆக்கி இறக்கிய சுடுச்சோத்தில் கொஞ்சம் வைத்தாள். பின்னும் வைத்தாள்.அவருக்கு வயிறு நிறைந்திருக்காது.ஆனாலும் மனசு நிறைந்திருந்தது.

விடு விடுவென்று க்ரைண்டரில் இருக்கிற கல்லை எடுத்துக்கொண்டு வாசலுக்குப்போய் வேப்பமரத்தடியில் உட்கார்ந்துகொண்டார். உளிச்சத்ததுக்கு பயந்து காகங்கள் மிரண்டு பறந்து ஓடியது.தெருவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த குழந்தைகள் ஓடிவந்து அருகிருந்து வேடிக்கை பார்த்தார்கள்.தாத்தா அவர்களோடு பழக்கம் பேசினார்.ஒரே சிரிப்புச் சத்தமாகக்கேட்டது. ’தாத்தா அது எள்ளுக்ஞ்சியில்ல எல் கே ஜீ.’ தென்னம்பட்டையில் நாலு இதழ் உருவி ஆளுக்கொரு பீப்பியும் பொம்மையும்
செய்துகொடுத்தார்.கடைக்கு வந்த எஞ்சீனியரின் மனைவி

’இந்தாப்பா க்ரைண்டர் கொத்த எவ்வளவு’

என்று கேட்டார். தாத்தா அவர் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் குழந்தைகளோடு பழமை பேச ஆரம்பித்தார்.

‘இந்தாப்பா ஒன்னியத்தான காதுல விழல கூலி எவ்வளவு’
’இல்ல தாயி கூலிக்கு கொத்துறதில்ல’
’பின்ன’
அதற்குள் வீட்டுக்குள்ளிருந்து பிரேமாவதி ஓடிவந்து
’ரமேஷம்மா அது எங்க வீட்டுக்காரரோட தாத்தா’
என்று சொன்னதும்
‘சாரி பெரியவரே’

என்று சொல்லிவிட்டு அவளை ஒரு முறை உற்றுப்பார்த்துவிட்டு நகர்ந்தார்.குழந்தைகளுக்கு இந்த சம்பாஷனையில் எந்த நாட்டமுமில்லை. அவர் கையில் படிந்திருந்த கருங்கல் தூசியைப் பார்த்தார்கள். குழவிக்கல்லில் மீது உதடு குவித்து தாத்தா ஊதியதும்  ஒரு பெரிய்ய பெருமூச்சின் சத்தம் கேட்டது. அதிலிருந்து கிளம்பிப் பறந்த துகள்களோடு சிறுவர்கள் காற்றில் பயணமானார்கள். தாத்தா எழுந்து கொல்லைப்பக்கம் போய் ஒரு பீடி பற்றவைத்துக் கொண்டு நின்றார். ரமேசு அந்த நேரம் கீழே கிடந்த உளியெடுத்து குழவிக்கல்லில் வைத்து அடித்துக்கொண்டிருந்தான். ’தம்பி சின்னவரே கீழ போடுங்க கையிலபட்டுச்சி ரத்த வந்துரும்’ கூட இருந்த குழந்தைகள் நான் நீயெனப்போட்டி போட்டுக்கொண்டு சுத்தியல் கேட்டன.இன்னொருவன் வெறும் உளியெடுத்து குழவிக்கல்லில் அடித்துக்கொண்டிருந்தான். பாதிப்பீடியை கீழே போட மனசில்லாமல் தூக்கியெறிந்துவிட்டு ஓடிவந்து குடுங்க சின்னவரே குடுங்க என்று கேட்டுக்கொண்டிருந்தார் பாக்கியத்தாத்தா.

திரும்பவந்த ரமேசம்மா  ’டாய் ரமேஷ்  இண்ட்டிசண்ட் ராஸ்கல் கிவ் த ஹாம்மர்’ என்று அரட்டிக்கொண்டே வந்தாள். கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போனாள். கையிலிருந்த பொம்மையும் பீப்பியும் கீழே விழுந்தது குனிந்து எடுக்கப்போனான். குனிய விடாத படிக்கு லாவகமாக கூட்டிக்கொண்டு போனாள். ரமேசு திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே போனான். பொம்மை பீப்பியும் அழுதுகொண்டே கீழேகிடந்தது.தாத்தா இன்னொரு பீடி பற்றவைத்து ஆழமாகப்புகை விட்டார்.

திங்கள் கிழமை காலையில் பள்ளி வாகனங்களும் ரிக்‌ஷாக்களும் ஆட்டோக்களுமாக குதூகலத்தை அடைத்துக்கொண்டு அந்த வீதி பரபரப்பாகிக் கொண்டிருந்தது.அந்த மஞ்சள் நிற பள்ளிவாகனம் நின்றது ரமேசு கீழே இறங்கினான்.கீழேகிடந்த பொம்மையையும் பீப்பியையும் எடுத்துக்கொண்டு அங்கிள் போகலாமென்றான். ப்பீப்பி சிரித்தது பொமை குதித்துக் குதித்து ஆடியது.

9.12.10

சண்டக் கோழி, ஜல்லிக்கட்டுக் காளை


'மஹாராஜா தூங்கப்போறார் சட்டுப்புட்டுனு வாத்தியத்த எடுத்துட்டு வந்து வாசிங்கோ'என்று வைத்தி சொல்லுவார்.உடனே வித்வான் சன்முகசுந்தரத்தின் முகத்தில் கோபம் நாதஸ்வரம் வாசிக்கும்.ஒரு கலைஞனின் அறச்சீற்றத்தை ஒரு பாப்புலர் புனைவின் மூலம் அழகாகச் சித்தரித்திருப்பார் இயக்குனர் ஏ.பி.நாகராஜன். கலையும், இலக்கியமும்,வீர விளையாட்டுக்களும் அரச சபைகளின் போதைக்கான ஊறுகாயாய் இருந்த காலத்தினை நாம் வரலாறுகளின் மூலம் மட்டுமே தெரிந்திருந்தோம்.இப்போது இந்த உலகமயமாக்களின் அதியற்புத விநோதமாக அவையெல்லாம் அன்றாடம் கண்முன்னே நடக்கிற காட்சியாகிறது.மீண்டும் கலையிலக்கிய விளையாட்டுக்கள்  பெருமுதலைகளின் சொத்துக்களில் ஒன்றாகமாறிவருகிறது.

இந்த கிரிக்கெட் இருக்கிறதே அது பிறப்பிலேயே ராஜாக்களின்,காலனிஆதிக்கவாதிகளின் முதுகு சொறிகிற விளையாட்டாக மட்டுமே இருந்தது.தொலைக் காட்சிகளின் அபரிமிதமான வளர்ச்சியின் மூலம் அது பட்டி தொட்டிகளிலும் புழங்கும் விளையாட்டாக மாறியது.இருந்தாலும் நான் எப்போதும் அரசமாடங்களின் சொத்து என்பதை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டேதான் வந்திருக்கிறது. வீரர்கள் தங்களின் சட்டை,மட்டைகளில் பொறித்துக்கொண்ட கம்பெனிகளின் இலச்சினை இப்போது அவர்களின் தன்மானத்தின் மேல் குத்தப்பட்டுவிட்டது.விளையாட்டைபெருமுதலைகளிடம் மொத்தமாக குத்தகைக்கு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.இதற்கு....... பெயர்கள் வேறு.

வியாபாரம்,போட்டி,பதவி,உத்தியோகம் போன்றவற்றின் அழுத்தங்களில் இருந்து மனசு தளர்த்த கிடைக்கிற விளையாட்டையும் வியாபாரமாக்கியது கொடுமை, கொடுமையிலும் கொடுமை.திருவிழாக் கூட்டங்களில் பலூன் விற்கலாம்,ஐஸ் விற்கலாம் திருவிழாவையே விற்கமுடியுமா ?. விற்பனை நடக்கிறது.ஓடியா ஓடியா போனா வராது பொழுது போனாக்கிடைக்காது என்று அணிகளைக்கூவி விற்கிற கொடுமையை மடிப்புக் குழையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.என்னசெய்ய ?,ஒரே ஒரு வேண்டுகோள்.தயவு செய்து இந்த சூதாட்ட வியாபாரச் சூத்திரத்தை மக்கள் விளையாட்டுக்களின் பக்கம் திருப்பிவிடவேண்டாம்.பாவம் நூற்றிப்பத்துக்கோடி மக்களுக்கும் அவர்தம் சந்தததிகளுக்கும் அவையாவது மிஞ்சியிருக்கட்டும்.நட்சத்திர வீரர்களே உங்களை நீங்கள் பூஸ்ட், காண்டோம்,உப்புப் போடாத ஊறுகாய்களுக்கு விளம்பரமாக மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.எங்கள் லட்சியங்களின் விளம்பரத்தை நாங்கள் சாதாரண ஜனங்களிடமிருந்து எடுத்துக்கொள்வோம்.

30.5.10

பீரோ'க்ரேசி இன் இண்டியா.

அவர் ஆபீசராகப்பதவி உயர்வு வாங்குவதற்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே ஜகதலப்ரதாபன்,மேனேஜர் என்கிற ரப்பர் ஸ்டாம்பை செய்து பத்திரப்படுத்தியவர்.சொல்லியடிச்ச மாதிரி ஒன்னரை வருடத்தில் பதவி உயர்வை வாங்கிவிட்டார்.ஆங்கில வருடப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு,தெலுங்கு வருடப்பிறப்புகளுக்கு எம்.டி வீட்டுக்குப்போவது. வீட்டில் ஆளில்லாவிட்டாலும் போட்டோ வின் காலில் விழுவது.காதலர் தினம் தவிர எல்லா தினங்களுக்கும்  எம்.டிக்கு வாழ்த்து அட்டை அனுப்புவது.காரைக்குடியி வசிக்கிற அவர் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருக்கும் நண்பருக்கு போன் பண்ணி பால்கோவா வாங்கி அதை கிப்ட் பார்சல் கட்டி எம்.டிக்கு  மீண்டும் அனுப்புவார்.ஸ்ட்ரைக் நடந்தால் போதும் அவருக்கு அப்படி ஒரு கொண்டாட்டம் முதல் நாளே ஓடிப்போய்
ஆபீஸில் படுத்துக்கொள்வார் அந்த நிமிஷத்திலிருந்து தலைமை அலுவலகத்துக்கு குறிப்பாக எம்.டி கேபினுக்கு நேரடி ரிப்போர்ட் கொடுப்பார். எம்.டியோடு போனில் பேசுகிற கறாராக எழுந்து நின்றுகொண்டே தான் பேசுவார்.அவ்வளவு மரியாதை.

ஒருநாள் சுவாரஸ்யமாக யாருடனோ போனில் கதைபேசிக்கொண்டிருந்தார் பிரதாபன்.அது பகல் பதினொன்னே முக்கால் மணி.கால்மணிநேரம் பெசிக்கொண்டிருந்த பின் சரியாப் பண்ணிரெண்டு மணிக்கு மின்சாரம் மாற்றி விடுவார்கள்.அப்போது ஒரு அரை நிமிஷம் மின்தடை வரும். வந்தது. நம்ம ஜெகதலப்ரதாபன் படீரென்று கடுங்கோபத்தோடு அந்த லேண்ட் லைன் போனை வைத்துவிட்டு 'ச்சேய்,.. இந்த ஈபிக் காரெய்ங்கெ, எப்பப்பாத்தாலு இப்டித்தான் பொசுக்கு பொசுக்குன்னு நிப்பாட்டிப்புடுவாய்ங்கெ, ஒழுங்கா போனக்கூட பேசவிட மாட்டாய்ங்கெ' என்று அங்கலாய்த்தார்.உடன் வேலை பார்த்த க்ளார்க் 'கரண்டில்லாட்டாலும் போன் ஒர்க் பண்ணுமே சார்' என்று சொன்னதற்கு.'அது எனக்குத் தெரியும், இங்க நா மேனேஜரா நீ மேனேஜாரா' எனச்சொல்லி அடக்கிவிட்டார்.அதன்பிறகு 'தண்ணிக் குழாயில தண்ணீ நின்னுபோனாக் கூட போன் கட்டாயிரும் சார்' என்று கோரஸ் பாடினார்கள்.

எம்.டி யின் ஒண்ணுவிட்ட பெரியப்பா இறந்து போனதுக்கு எம்.டி மொட்டை போடவில்லை,அட ஏங்க இறந்தவரின் மகன் கூட மொட்டை போடவில்லை. ஆனால் நம்ப ஜெகதலப்ரதாபன் மொட்டை போட்டுவிட்டார் என்றால் பாருங்களேன்.ஜெககதலப்ரதாபன் ஒரு முறை  தலைமை அலுவலகத்துக்கு மாறுதல் விண்ணப்பம் அனுப்பினார்.As I am the only 'gent' member in my family,I have to look after my age old parents' என்று எழுதி அனுப்பினார்.அதற்குப்பிறகு அவரது விண்ணப்பம் உலகப் புகழ்பெற்றதாகிவிட்டது.அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா.'ஆங்கிலம் என்பது வெள்ளைக்காரெய்ங்க பாஷை, நான் ஒரு  சுதந்திர இந்தியன்' என்று வசனம் பேசினார்.

தமிழில் அவரது பாண்டித்தியமும் பெயர் போனது.வராக் கடன்களுக்கு நினைவூட்டல் கடிதம் எழுத வேண்டும். கையால் தான் எழுத வேண்டும்.அப்பெல்லாம் கம்ப்யூட்டர் உள்ள வல்ல.அவர் அன்புள்ள ஐயா என்று எழுதுவதற்குப் பதிலாக அன்புள்ள 'ஜயா' எழுதுகிற பாண்டிதியம் கொண்டவர்.ஒருதரம் கோபக்கார சந்திரசேகரன் சண்டைக்கு வந்துவிட்டார்.'நான் லோன் வாங்கினா எனக்கு லட்டர் போடலாம் என் பொண்டாட்டிக்கு எப்படி நீ லட்டர்  போடலாம்' என்று அடிக்க அடிக்கப் போனார்.கூட வேலை பார்த்தவர்கள் பழைய்ய கோப்புகளை எடுத்து வந்து எல்லாக்'கடிதங்களையும் காண்பித்த பின் கடன்கார சந்திரசேகரன் விருட்டென்று திரும்பிப் போய்விட்டார். போனவர் அதே வேகத்தில் திரும்பிவந்து ஒரு ரெட்டைக்கோடு நோட்டை கொடுத்து தினம் உங்க மேனஜரை எழுதிப் பழகச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்,அவர் தமிழ் வாத்தியாராம்.