Showing posts with label தமிழ்நதி. Show all posts
Showing posts with label தமிழ்நதி. Show all posts

1.7.09

திண்ணைப் பேச்சை தெருச் சண்டையாக்கவேண்டாம் - தோழர் தமிழ்நதிக்கு வேண்டுகோள்


எங்கள் அன்புத்தோழர் தமிழ் நதிக்கு வணக்கம்.

கடவு தமிழ்சங்கம் நடத்திய உயர்மட்ட எழுத்தாளர்களின் கூடல் குறித்த இரண்டு பதிவுகளைப் படிக்கும் முன்னாள் உங்கள் நேர்காணல் படிக்க நேர்ந்தது. ஆங்காங்கே உங்கள் கவிதைகளும் கூட வாசக மனதில் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியவை. அப்புறம் சென்னை எழுத்தாளர்களும் எங்கள் மதிப்பிற்குறிய அய்யா சுபவீ கலந்துகொண்ட இலங்கைப் பிரச்சினைக்கு எதிரான கூட்டம் பற்றிய பதிவு படிக்க நேர்ந்தது. சென்னையில் வைத்து தோழர் மாதவராஜ் சிபாரிசின் பேரில் வீடு விட்டு பிரிந்து வந்தபின்னும் வீடே ஆக்ரமிக்கும் ஒரு பெண்ணின் புழுக்கமான ஒரு பதிவை படித்தேன். சமத்துவ சிந்தனையாளர் எவரும் தங்களின் பிம்பத்தை சத்தியமாக மேலேற்றிகொள்ள நேரும் அறிவார்ந்த பதிவு அது. மிகக் குறுகிய காலத்தில் தமிழ் வாசகப்பரப்பில் ஒரு தீர்க்கமான பெண்ணியச்சிந்தனை கொண்ட தமிழ் நதி கவனம் பெறக்கூடியவர் என்பதை நிராகரிக்க முடியாது.


கிடத்தட்ட பதினோரு மாதங்களாக நான் இந்த வலை எழுத்துகளை ஓரளவு கவனித்து வருகிறேன். இங்கே ஜாதியால் அல்ல கருத்தாலும் அல்ல வேறு எதோ ஒருவகையிலான குழு மனப்பாண்மை அதிகரித்து வருவதை எவரும் எளிதில் அவதானிக்க முடியும். அதை நீங்கள் இந்த பதிவின் மூலம் ஆதவன் தீட்சண்யாவுக்கெதிரான குழுவாகத் திருப்பிவிட்ட மாதிரி எனது சிற்றறிவுக்கு படுகிறது. இன்னொன்று மிக மிக மேல்தட்டு, அதாவது ஆளுமை எழுத்தாளர்கள் மட்டும் எழுதினாலேஈழப்பிரச்சினை தீர்ந்து விடும் என்கிற மூட நம்பிக்கை கொண்ட சிந்தனைகொண்டது உங்கள் கேள்விகள்.
வெளியிலும் வலையிலும் ஈழப்பிரச்சினை தொடர்பான மிக அடர்த்தியான மனித நேய பதிவுகள் ஆயிரமாயிரம் வந்து கொண்டிருக்கிறது. அதை மேற்கோள் கூட காட்ட முடியாத ஒரு புறக்கணிப்பை பட்டவர்த்தனமாக்கி விட்டீர்கள் இந்த பதிவின் மூலம். குடித்துவிட்டு சண்டைபோடுவது, நீயா நானா, ஈகோக்களை உரசிக்கொள்வது, தனிமனித ஒழுக்கக்கேட்டை பொதுவாக்குவது எப்படி ஒரு பெண்ணிய வாதியின் காத்திரமான பதிவாக முடியும். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.நீங்கள் ஆதரிப்பதானாலும், ஆதவண் நிராகரிப்பதாக பிம்பத்தை உண்டாக்குவதாம் மட்டுமே ஈழப்பிரச்சினையை தீர்த்துவிடுமா ?


நேற்றுக் கூட புகை வண்டியில் ஒரு நவீன உடையணிந்த பெண்ணொருவர் கரைவேட்டி கட்டிய குடிபோதை அரசியல்வாதிகளால் கேலி பண்ணப்பட்ட சம்பவம் நேர்ந்தது. அது அந்த கனவான்களின் முன்பதிவு இருக்கையின் ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகளைச் சிறிது கூடச் சலனப்படுத்தவில்லை. தங்களின் நிறுவனத்தின் போர்டு மீட்டிங்குக்குசெல்லுவதற்கான விமான சீட்டுக்குறித்த தகவல் நுணுக்கங்களை மடிப்புக்குலையாமல் பகிர்ந்து கொண்டிருந்தனர்.எனக்கு குலை பதறியது நான் பெண்ணல்ல. எந்தாய், என்மனைவி என் தோழி எல்லாம் பெண்.


பெற்ற தாயை, உடன்பிறந்த தங்கையை வல்லுறவு கொள்ளச்செய்த கொடூரம் இந்த தேசத்தில் நடந்தது. அதை நமது வசதிக்கு ஏற்ப ஒதுக்கிவிடலாம் கனவானகள் போல. அது ஒரு தலித் பிரச்சினையாக வேண்டாம் தலித்துகளின் தலித்துகளான பெண்ணிய நோக்கில் பார்த்தால் உலகம் முழுக்க தேடினாலும் கேள்விப்படாத பெண்னிய குரூரம் அது. எத்தனை பெண்ணிய எழுத்தாளர்களைச் அது சலனப்படுத்தியது சொல்லுங்கள். அது ஒரு 20 சதமான ஒதுக்கப்பட்ட இந்தியர்களில் அதுவும் மராட்டிய தலித்துகளின் பிரசினையாக மட்டுமே அனுகப்பட்டது. ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்து வெள்ளைக்காரன் இந்த தேசத்து மூலைமுடுக்கு இண்டு இடுக்கெல்லாம் ஆக்ரமித்தான். மானமுள்ள இந்தியன் ஆறு நூறு வருடம் அனுமதித்தான். ஆயிரமாயிரம் ஆண்டு பக்கத்து தெருவில் வசித்த தலித்துகளை தெருப்பக்கம் திரும்ப விடாமல் அடக்கிவைத்தான் அதே மானமுள்ள இந்தியன்.


இதை யார் எழுதுவது, எப்பொழுது சொல்லுவது, எப்பொழுது எழுதுவது ? சொல்லுங்கள் தமிழ்நதி.எழுதி விட்டால், அந்த எழுத்துக்களில் இருந்து அப்படியே ஒரு அரைவட்டம் அடித்து ஒதுங்குவதை உணராத அறிவீனரல்ல நாங்கள்.


ஆனால் பட்டியல் வைத்துக்கொண்டு நீ ஏன் எழுதவில்லை என்று கேட்பதோ, இல்லை வீட்டுப்பாடம் எழுதினாயா என்பதுபோல சரிபார்ப்பதோ நல்லதல்ல. இன்னொன்று, இதுபோன்ற கேள்விகளை மூளைகளில் இருந்து அகற்றச் சொல்வதும் அதை மிகச்சிறந்த திறனாய்வாளர்கள் மறைந்திருந்து ஆதரிப்பதும் எதையோ கூர்தீட்டுவது போல இருக்கிறது. யாராவது ஒருவர் பெண்ணிய எழுத்தாளரை கேவலப்படுத்திப் பேசினால் மனது வலிக்கிற உதிரம் துடிக்கிற அதே வருத்தம் மேலிடுகிறது தோழரே. ஆதவன் கேட்ட கேள்விகளை விமர்சிக்கிற சாக்கில் தலித் எழுத்துக்களை எல்லாம் சகட்டுமேனிக்கு கெட்ட வார்த்தையில் திட்டுகிற பின்னூட்டங்களை உங்கள் பதிவு கொண்டாடுகிறது. தயவு செய்து வேண்டாம் தமிழ் நதி. உலகத்து ஒடுக்கப்பட்டவரெல்லாம் எனது என்னும் தோழமை தான் எழுத்து. அதில் ஆண், பெண், ஜாதி பேதம் வேண்டாம்.


உங்களுக்கு வந்த பின்னூட்டங்களில் உள்ள இடைவெளிகள், அதிலிருக்கிற கோபம் தவறானது அதை ஆதரிக்கவோ அணுமதிக்கவோ வேண்டாம் ப்ளீஸ். ஆதவனை கேவலப்படுத்துவதால் மாண்டுபோன எம் தமிழ்சமூக ஆன்மாக்கள் சாந்தியடைந்து விடுவதுபோன்ற பின்னூட்டங்கள். தலித்தியத்தைகேலி செய்வதால் தனி ஈழம் அடைந்துவிட்ட திருப்தி வந்துவிட்ட எழுத்துக்கள், ரொம்பக் கஷ்டமாயிக்கிறது தோழி. சரிசெய்யுங்கள், இல்லாவிட்டாலும் கூட உங்கள் பேரில் உள்ள பெண்ணியவாதிக்குறிய மதிப்பு. உங்கள் எழுத்தின் மீதுள்ள மரியாதை எள் முனையளவும் குறையாது.


அப்படிக் குறைவதற்கு எழுதென்ன டென்னிஸ், கிரிக்கெட், ஷேர் மார்க்கெட் தரவரிசையா சரிவதற்கு ?. இல்லை பண்ணையார் வீட்டு சேவகப்பொருளா புறந் தள்ளுவதற்கு.