Showing posts with label ஊடகம். Show all posts
Showing posts with label ஊடகம். Show all posts

27.12.15

உலோகங்களை விட அடர்த்தியான துரு





சாமி கும்பிடாததால் அரச இலையை வைத்து பிள்ளையார் உருவம் செய்த க்ராபிக்சை ரசிக்கமுடியாத மரபில் வளர்ந்தவன்.
ஆனால் இளையராஜாவைப்பிடிக்கும் என்பதற்காக ஏனைய இசையமைப் பாளர்களை கிள்ளுக்கீரையாகப்பார்க்கிற மேனாமினுக்கித்தனம் துளியும் கிடையாது. சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி பாடலை எங்கு கேட்டாலும் நெக்குருகிப்போகிற இசைக்கிறுக்கு.
 பிரம வதனம் வேண்டும் என்கிற மலையாளப்பாடலையும், கபி கபி இந்திப் பாடலையும் தரவிறக்கம் செய்வதற்காக இரண்டு இரவுகள் செலவழித்த பயித்தியம். இந்த வலையுலககத்திலும் கூட இளையராஜவை சிலாகிக்கிற யாரும் எம் எஸ் வியையோ, ரஹ்மானையோ விமர்சித்து எழுதியதாக ஞாபகமில்லை.

ஆனால் இங்கு பல பிரபல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். எம் எஸ் வியை பேசுகிற பொழுதெல்லாம் லைட்டா இளையராஜாவை ஒரு தட்டு தட்டாமல் கடந்து போக முடியாது அவர்களால். போனால் அன்று தூக்கம் வராது. இளையராஜாவுக்கு சளிப்பிடித்தாலும் போதும் அவரை வாங்கு வாங்கு என்று வாங்கிவிடுவார்கள்.அப்போழுதெல்லாம் மனுநீதிச்சோழனின் மறுபதிப் பைப்போல தங்களைத் தாங்களே தராசாக்கிக் கொள்வார்கள். கவுரவக் கொலைகள் குறித்தோ, இளவரசன் படுகொலை குறித்தோ, பாடகி சின்மயியின் இட ஒதுக்கீட்டு தேற்றம் குறித்தோ கருத்து ஏதும் சொல்லாத கந்தசாமிகள் அவர்கள். இந்த இரண்டு நாளில் ஞாயயம்டா, நீதிடா என்று பெருங்குரலெடுத்து சொம்பில்லாத நாட்டாமையாகிவிட்டார்கள்.

நீண்ட நாட்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில் ஒரு பிரச்சினை குறித்து திருமாவளவனிடம் கேள்விகேட்கிறார்கள். அதற்கு அவரும் சிரத்தையாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு காட்சியை திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறார்கள்.  வியர்வையையோ அழுக்கையோ  சொரிந்து அதை பார்த்துவிட்டு பின் உதறுகிறார். இதை ஒரு நான்கு தரம்  காட்டுகிற அருவருப்பை என்ன பெயர் சொல்லி அழைப்பது ஊடகதர்மம் என்றா.
ஒரு காமிரா எவ்வளவு உன்னதமானது. மூன்றாவது கண்ணில்லையா அது?.பேட்டியோடு தொடர்புடைய ஆயிரம் காட்சிகளில் எதவதொன்றை காண்பிக்கலாம். அல்லது அதற்கு எதிர்மறையான காட்சிகளைக்கூட வைக்கலாம். இந்த இரண்டையும் விட்டு விட்டு சொரிவதையும் அழுக் கெடுப்பதையும் காட்டுகிற அந்த ஊடகத்தின் மூளையில் எவ்வளவு அழுக்கு இருக்கும்?.

நீயா நானா நிகழ்சியில் ஒருத்தர் எங்க ஜாதிப்பிள்ளைகளை காதலித்தால் வெட்டுவம் குத்துவம் என்று கொக்கரிக்கிறார். திருவாளர் ஊடகம் அப்படி யெல்லாம் பேசப்படாது என்று செல்லமாய்க் கண்டிக்கிறார். அடடே எவ்வளவு காத்திரமாக தனது அறச்சீற்றத்தை முன்வைக்கிறார் என்று வியந்து முடிப் பதற்குள் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. விகழ்பமில்லாமல் கருத்துச் சொன்னதற் காக வெட்டுவோம் குத்துவோம் என்று சொன்ன பங்கேற்பாளருக்கு பரிசு கொடுத்து முடித்தார்.

நல்ல வேளை அருவாளைப் பரிசாகக்கொடுக்கவில்லை.

8.7.12

அமீர்கானின் நேர்மைக்கு ஒரு செவ்வணக்கம்.


எப்பொழுதாவது இப்படி நேர்ந்து விடுகிறது. மிகுந்த சோர்வில் இருக்கும் போது எங்கிருந்தாவது ஒரு கை வந்து தலை கோதிச்செல்வது போல, நாவறண்டு அலையும் பொட்டக்காட்டினிடியே கிடைத்த ஊத்து தண்ணி போல, எப்பொழு தாவது இப்படி நடந்து விடுகிறது.

இன்று 08.07.12 விஜய் தொலைக்காட்சியின் ’சத்யமேவ ஜயதே’
.
நேர்மையாகச் சொல்லப்போனால் இயக்குநர் ஸ்டாலின் k விஜயன் சொன்னது போல ஒரு தேசியத்  தொலைக் காட்சிமுதன்முதலாக தீண்டாமை பற்றிய முழுநீள நிகழ்சியை ஒருங்கிணைத்திருப்பது இதுவே முதல் முறை. அதைப்போலவே இந்த தேசத்தினைப் பற்றிய அக்கறையுள்ள மிகச்செறிவான ஆவணப்படம் india un touched வெகுவாக முன்னிலைப் படுத்தப்பட்டதும் இதுவே முதல் முறை. இன்னும் ஆயிரம் ஆயிரம் பெருமைகள் இந்தியாவுக்கு இருந்த போதிலும் அவைகளுக்கு அருகில் இழிவும் கண்ணீரும் வழிந்த படி வீற்றிருக்கும் தீண்டாமையைச் சரிசெய்யாமல் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.

ஒரு மிகப்பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் இனி கடவுள் கூட இந்தியாவில் பிறக்கும்போது தலித்தல்லாத சாதியில் பிறக்கவேண்டும் என்று தான் சிரத்தை எடுத்துக்கொள்வார் என்று சொன்னார். அதைச்சொல்லும்போது அவரின் முகம் ஒரு யுகாந்திரச் சோகத்தைச் சுமந்துகொண்டிருந்தது. இத்தனைக்கும் அவர் ஒரு கடவுள்  மறுப்பாளர். போதிக்கப்படும் நீதி பாதிக் கப்படும்போதுதான் தெரியும். இந்த தீண்டாமைக்கொடுமையின் சிறு துகளைக் கூட அறியாமல், இங்கிருந்து அது போய்விட்டது என்று சொல்லுபவரைப் பார்க்கும்போது கொலை வெறி தான் வருகிறது.

ஒரு பள்ளியில் படிக்கிற ஐநூறு குழந்தைகளில் மூன்று அருந்ததியக் குழந்தைகளைப்பொறுக்கி எடுத்து  கழிப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லுகிற ஆசிரியன் குறித்து நீங்கள் என்ன மதிப்பீடு வைத்திருக் கிறீகள். இந்தச் சமூகம் அந்தத்தா..யை எப்படி எதிர் கொள்கிறது.இந்த அரசு அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று யோசிக்கையில் வாழ்க்கை நரகமாக மாறிப்போகிறது.

இந்த சோகத்தை,இந்திய அவலத்தை அங்குலம் அங்குலமாக பேசியதால் அமீர் அமீர்கான் உண்மையில் மிகப்பெரும் இடத்துக்குப்போய் நிற்கிறார். அவரது சத்யமேவ ஜயதே எல்லா நிகழ்ச்சிகளையும் மிஞ்சி நிற்கிறது.
ஒரு லாகூன், கொடுக்கும்போதும், ஒரு தாரே ஜமீன் பர் கொடுக்கும் போதும் அவர் மீது கவிழ்ந்திருந்த நம்பிக்கைக்கு சின்ன பங்கம் கூட வைக்காத நேர்மையாளராக மிளிர்கிறார்.

வாழ்த்துக்கள் அமீர்கான்.

1.9.11

எனக்கு இல்லையா கல்வி -ஆவணப்படம்.


மேகம் இருண்டு சிலுசிலுவெனக் காற்று வருடி தட்டாம்பூச்சிகள் பறக்கிற போது அந்த மழையை ரசிப்பதைவிட அப்போது டமடமவென கேட்கும் இடியோசை வரும்.அப்போது நமறியாமலே 'அச்சுனம்பேர் பத்து' என்று நமது வாய் முனுமுனுக்கும். இடிவிழும் போது அப்படிச் சொல்லவேண்டுமென அம்மா சொன்னபோது எனக்கிருந்த கேள்விகள் எப்படி இருண்டுபோனதோ,அதைவிட அடர்த்தியாய் என் அம்மாவுக்கும் இருண்டு கிடந்திருக்கும்.

வழி வழியாய் கவிழ்ந்து கிடந்த இந்த இருட்டிலிருந்து வெளிவர எனக்கு கிழித்துப்போட்ட தீக்குச்சியாய் அந்த ரத்தினா ஆரம்பப் பாடசாலையும் அது துவக்கி வைத்த கல்வியும் இருந்தது. ஆனால் அந்தக் கிராமத்தில் முளைத்த ஏனையோருக்கும் இது கிடைத்ததா என்றால், இல்லை. தொண்ணூறுக்கும் மேற்பட்ட விழுக்காடு சனம் இதுதான்நமக்கு விதிக்கப்பட்டது என்று நினைத்துக் கொண்டு கூலி வேலைக்குச் சந்தோசமாய் கிளம்பி போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். இந்த உலகம் எல்லோருக்கும் சமமானது என்கிற அறிவின் சாவி கல்வி. அதைப் பறிகொடுத்து விட்டு பறிகொடுக்கப்பட்டதையும் அறியாது வாழ்ந்துகொண்டிருக்கும் சனங்கள் கோடிகோடியாய் கிடக்கிறார்கள். அவர்களைப் பற்றி விசனப்பட இந்த பரந்த உலகில் வெகு சிலரே முன்வருகிறார்கள். அப்படி முன்வருகிற வாதங்களின் தொகுப்புதான் எனக்கு இல்லையா கல்வி என்கிற ஆவணப்படம்.

இங்கிருக்கிற நூறுகோடி மக்களுக்கும் உணவு உடை உறைவிடம் கல்வி கொடுக்கவேண்டியது அரசின் கடமை. அப்படிக்கொடுக்கிற அடிப்படைத்தேவைகள் சரியான அளவிலும்  முறையிலும் கொடுக்கப்படுகிறதா என்கிற கவனிப்பும் அரசின் கடமையாகிறது.
இவையாவும் கேள்விக்குறியாகிப் போன தேசத்தின் கடைக்கோடி மனிதர்களைத் தேடி தேடிப்பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப்படக் குழு . சென்னை ஜெயின் பள்ளி பத்மாஷேசாத்ரி மதுரை வேலம்மாள் பள்ளிகளுக்கு முன்னாடி நிறுத்தப்பட்டிருக்கிற கார்களை மட்டுமே பார்த்துப் பூரித்துப்போன மனிதர்களுக்கு மேற்கூரையில்லாத கிராமத்து ஆரம்பப் பாடசாலைகள் கட்டாயம் அதிர்ச்சியூட்டும். பள்ளித் தளமனைத்தும் கோவில் செய்யக் கனவுகண்ட பாரதியின் தேசத்தின் பள்ளிக் கூடங்கள் இரவு நேரம் சட்டவிரோத செயல்களும் சட்டபூர்வ மதுவருந்தும் செயல்களும்தான்  நடக்கிறதென்கிற பதிவும் பார்வையாளர்களைக் கலங்கடிக்கும்.

அதே போல பத்துக் கிலோமீட்டர்கள் மலைப்பாதைவழியே நடந்துபோய் கல்வி கற்கத்துடிக்கிற சிறார்களின் பின்னாடி தொடர்கிற காமிராவுக்கு ஒரு சலாம் போடவேண்டும்.  தர்மபுரி பகுதியில் அம்மலை மக்களின் அன்றாட வாழ்க்கையே சவாலாக இருக்கிறது. அவர்களின் வாழ்வு, மொழி, தேவைகளெல்லாம் வேறு வேறாயிருக்கிறது. அவர்களுக்கு கல்வி என்பதே கேள்விக்குறியாக இருக்கும் போது சமச்சீர்கல்வி என்பது விவாதத்துக்கு வெளியே தள்ளப்படுகிறது. இதைக் கவனப்படுத்துகிற கல்வி அறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் வரிசையாய் நம்மோடு பேசுகிறார்கள்.

முன்னாள் துனைவேந்தர் வசந்திதேவி,பேரா.ச.மாடசாமி,திரு.ஹென்றிதிபேன்,வழக்கறிஞர் எழுத்தாளர்ச.பாலமுருகன், பவா,அழகிய பெரியவன்,சட்ட மன்ற உறுப்பினர்கள் ஜி.லதா,குணசேகரன்,தடாரஹீம், மாசானி, ஆர்.லட்சுமி, ரா.முனியம்மாள் என்று பலதரப்பு சிந்தனையாளர்களின் வாதங்களைத் திரட்டியிருக்கிறது இந்த ஆவணப்படம். அவர்கள் தரும் தகவல்களும் தரவுகளும் வெளியுலகில் கிடைக்காத அரியவை. பாடத்திட்டங்களின் கடினம் தான் மாணவர்களை விரட்டி அடித்து மீண்டும் அவர்களை உடல் உழைப்பாளர்களாக ரவுடிகளாக விளிம்புமனிதர்களாக மாற்றுகிறது என்கிற பேரா ச.மாடசாமியின் வாதத்தை பொதுசனம் வேறு எங்குசென்று கேட்கமுடியும் ?  

கல்விக்கான உள்கட்டமைப்பு வசதிகள்,பாடத்திட்டம்,இப்படி தமிழ்க்கல்விச்சூழலை பகுதி பகுதியாக ஆவணப்படுத்தியிருக்கிறது ’எனக்கு இல்லையா கல்வி’. அவையாவற்றையும் சொல்லவேண்டுமானால்.இந்தக்கவிதைமாதிரி ஆகிவிடும்

’படித்தவற்றில் பிடித்தவற்றை
அடிக்கோடிட்டேன்
முடித்துப்பார்க்கையில்
புத்தகம் முழுக்க அடிக்கோடு’.

ஆம்.நாம் கேள்விப்படாத ஹண்டர் கமிட்டி,எந்த வரலாற்றிலும் இடம்பெறாத அரசியல் உள்விவகாரங்கள் என இந்தப் படம் நெடுக தமிழகம் அறிந்துகொள்வதற்கான கல்விகுறித்த சேதிகள் அதிகம் இருக்கிறது. ஆனாலும் அந்த வகுப்பறை வன்முறை என்கிற பகுதி இந்த ஆவணப்படத்தின் செரிவூட்டப்பட்ட பகுதி. சிவகாசிக்குப் பக்கத்தில் இருக்கும் துரைச்சாமிபுரம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த ரா.முனியம்மாள் என்கிற பத்து வயதுச் சிறுமியின் வாக்குமூலம் இந்த தேசத்தின் மனசாட்சிமேல் அடிக்கிற ஓயாதசாட்டை அடி.
யாருக்காவது இன்னும் இருக்கிறதா சாதி என்கிற சந்தேகம் இருந்தால் அவள் கண்களில் இருக்கும் சோகம் பதிலாக இருக்கும்.

மாதா பிதா குரு என்று எழுத்தறிவிக்கிற ஆசிரியர்களை வழிபாட்டுக்கு உரியவர்களின் வரிசையில் மூன்றாவது நிறுத்தியிருக்கிறது முன்னோர் சொல். ஆனால் சாதி வெறி நீங்காத அந்த ஆசிரியர்களை, அதுவும் பெண் ஆசிரியர்களை எங்கே நிறுத்தி வைப்பதெனத் தெரியவில்லை. அதற்கு அழகிய பெரியவன் சொல்லுகிற அம்பேத்காரின் வார்த்தைகள் மட்டுமே சரியாக இருக்கும். பள்ளிப் பிள்ளைகளை குழுவாக பிரித்து விளையாட்டு,சாப்பாடு,கொடியேற்றுதல் என்று பொறுப்புக்கொடுக்கிற ஆசிரியர்கள் சுகாதாரப்பிரிவை மட்டும் ஆதிதிராவிடப் பிள்ளைகளுக்கு ஒதுக்கி வைப்பது என்கிற நடைமுறையை read அமைப்பின் ஆய்வு சொல்லுகிறது. இந்த சாட்சியங்கள் இளகிய மனதுள்ள எல்லோர் கண்ணிலும் நீர் தருவிக்கிற சாட்சியங்கள்.

அறிவும் உணர்வும் நெடுநாள் அலைக்கழிக்கும் சமூக சோகமுமாக எனக்கு இல்லையா கல்வி ஆவணப்படம் நமோடு கூடவரும்.
அதனோடே ப்ரபாகரின் இசையும், இரா. தனிக்கொடியின் பாடலும், அந்த சிறார்களின் குரலுமாக அந்தப்பாடலும் நம்மோடு கூடவரும்.
துடைத்துப்போடப்பட்ட கண்ணாடி வழித்தெரியும் பிம்பங்களாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் அலைந்து திரிந்திருக்கிற காமிரா
அதை ஒருங்கிணைத்த படக்கோர்வை. துள்ளியமான ஒலிச்சேர்க்கை என இந்த ஆவணப்படத்தில் தனது திறமையான செய்நேத்திய  நிரூபித்திருக்கிறார் எங்கள் தோழர் பாரதி கிருஷ்ணகுமார்.


20.6.11

சிறுநீரகத்தைப் பறிகொடுத்த ஆந்திரப் பெண்களும், வாழ்வைப் பறிகொடுத்த உபி பெண்களும்

                                             ( நன்றி: டெக்கான் கிரானிக்கல்)


இரண்டு நாட்களுக்கும் மேலாக ஏதும் யோசிக்கத் தோன்றாமலே இருண்டு கிடக்கிறது சிந்தனை.வடிவேலுவின் நகைச்சுவையின் ஊடாகக்கூட அவளைப்பற்றியதான விசனம் தொற்றிக் கொண்டுவிடுகிறது.இது என்ன தேசம் இது எதனாலாஅன தேசம் என்கிற சிந்தனை வந்து வந்து குழப்புகிறது.ஆந்திரமாநிலம்  பகுதியில் தங்கள் வறுமையையும் கடன் சுமையையும் விரட்ட சொந்த சிறுநீரகத்தைப் பிடுங்கிக்கொடுத்த பெண்களும். உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு தலித் பெண் முதல்வராக இருந்தும் கூட தங்களின் கற்பைக்காப்பாற்றிக் கொள்ள த்ராணியற்றுச் செத்துப்போன அந்த இரண்டுபேரும் வந்து வந்து அலைக்கழிக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியில் உள்ள பெண்கள் தங்களின் கடனைத் திருப்பிக் கொடுக்க சிறுநீரகத்தைப் பிடுங்கிக் கொடுத்தார்கள். இப்போது அவர்களுக்கு 9000 ரூபாய் தருவதாகச் சொல்லி நான்கு நாட்கள் ஆய்வுக்கூடத்தில் அடைத்துவைத்து திருப்பி அனுப்பியிருக்கிறது ஒரு ஆங்கில மருந்துக் கம்பெனி. ஆனால் இதே தேசத்தில் இதே காலத்தில் லஞ்சமாகப் பரிமாறப்பட்ட தொகையின் பூஜ்ஜியங்கள் எழுதுகிற தாளைவிட்டுத் தாண்டி வெளியே போகிறது.நாட்டை விட்டு வெளியில் கிடக்கும் கறுப்புப் பணத்தின் மதிப்பைக் கேட்டால் தலை சுற்றுகிறது.அந்தக் கறுப்புப் பணத்தை காப்பற்றச் சொல்லிப் போராடும் சன்னியாசியின் சொத்து மதிப்பைக் கேட்டால் பயமாக இருக்கிறது. சாய்பாபவின் அறைக்குள் கிடந்த ரொக்கப்பணமும் நகையும் சாமியார்கள் மேலிருக்கிற கொஞ்சநஞ்ச அனுதாபங்களையும் துடைத்தெறிகிறது. அதை அலுங்காமல் குலுங்காமல் எடுத்துக்கொண்டுபோய் சாய்பாபா அறக்கட்டளைக் கணக்கில் சேர்த்த அரசின் பரிவை நினைத்தால் குமட்டிக்கொண்டு வருகிறது. இந்த இரண்டு அவலங்களில் நமது தேசத்திற்கான அடையாளம் எது என்கிற கேள்வி வந்து பதிலற்றுத் திரும்புகிறது.

கடந்த ஒரு வாரத்தில் உத்திரப்பிரதேசத்தில் ஆறு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.அதில் இரண்டு பெண்கள் வெறும் பதினாறு பதினைந்தே வயதான தலித் சிறுமிகள்.கடைசியாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபெண் ( இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு மணிநேரத்து ஒரு வன்கொடுமையோடு பாலியல்பலாத்காரம் நடைபெறுவதாக அரசப்புள்ளிவிவரமே ஒத்துக் கொள்கிறது. எனவே அது கடைசியாக நடந்த கொடூரமாக இருக்காது ) ஐந்து பேர்களால் தூக்கிக்கொண்டுபோய் கொடுமைப் படுத்தப் பட்டிருக்கிறாள்.தான் கட்டிய மனைவியின் சம்மதமில்லாமல் கூடுவதையே குடும்ப வன்முறை என்று கணக்கிலெடுத்துக்கொள்கிற இந்த யுகத்தில் ஒரு பெண்ணை ஐந்துபேர் தூக்கிக்கொண்டு போக முடிந்தது எந்த தைர்யத்தில்.ஒரே ஒரு தைர்யம் ஆண், அதுவும் செருக்குத் திமிர்படைத்த சாதிய ஆதிக்கம் மண்டிக்கிடக்கும் ஆண் என்கிற தைர்யம்.

காதல் காமம் சிருங்காரம் ஆலிங்கணம் உறவு உடலுறவு இனவிருத்தி ஆசை இச்சை எனப்பட்டியலிட்டு அதைப்பேச பாட எழுத தீராது
காலங்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறது.அதைப்பற்றிப்பேசும் போதும் கேட்கும்போதும் நரம்புகளில் இனிப்பு ரத்தம் ஓடுகிறது. குருவிகள் இலைமறைவில் உட்கார்ந்து கொண்டு அலகுரசிக்கொள்ளும் போது பார்க்கிற நமக்கு கிலேசம் உண்டகிறது.அப்படிப்பட்ட ஒன்றை வல்லூட்டியமாக பறிக்கிற சிந்தனை எங்கிருந்து கிளம்பியிருக்க முடியும்.ஆதிக்கம்,ஆதிக்கமேதான்.

ஆநிறைகவர்தலோடு பெண்களையும் கவர்ந்து கொண்டு போவதே வீரம் என்றிருந்த கற்காலம் தொடங்கி இந்தக்கணினியுகம் வரையில் நலிந்த பெண்களுக்கு பாலியல் பாதுகாப்பு என்பதும் கூட கைக்கெட்டாத ஆடம்பரப் பொருளாகவே  இருக்கிறது. எனக்குத்தெரிந்த வரையில் மிருகங்கள் கூட கூட்டுக் கற்பழிப்பிலும் வன்புணர்ச்சியிலும் ஈடுபடுவதில்லை.தவிரவும் அவைகள் இன்னொரு உயிரை பசிக்குத்தவிர வேறு எதற்காகவும் கொல்லுவதில்லை.கயர்லாஞ்சி கூட்டுப் பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சுரேகா போட்மாங்கே அவளது மகள் ப்ரியங்கா போட்மாங்கே இந்த இரண்டு பெயர்கள் இந்தியாவின் கவனத்தைப்பெறாமல் போனது.மராட்டிய மாநிலத்திலும் உபியிலும் மட்டுமே அதற்கான போராட்டங்கள் நடத்தப்பட்டன.அது தவிர்த்த வேறெந்த மாநிலத்திலும் அப்படிச் சம்பவம் பற்றிச் சொல்லப்படவே இல்லை.அதற்கு முந்தைய நிதாரி தொடர் கொலைகளில் கொல்லப்பட்ட பதினைந்து பெண்குழந்தைகள் பற்றிய செய்தியும் பெரிதாக ஊடகங்களின் பரபரப்பை ஈர்க்கமுடியவில்லை. காரணம் ரொம்ப ரொம்பப் பழமையானது.பாதிக்கப்பட்ட உயிர்கள் எல்லாமே விளிம்பு நிலை மக்களின் உயிர்கள்.

நடந்தவைகளைக் குற்றம் என்று ஒப்புக்கொள்ளவே இந்த மேல்ஜாதி இந்தியாவுக்கு மனம் வரவில்லை.மாறாக நடந்த கொலைகளுக்கு புதிய விதிகள் எழுதப்படுகிறது அவை மநுவின் ஆங்காரம் அடங்கிய தடித்த பக்கங்களில் பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்படுகின்றன.
கயர்லாஞ்சி சம்பவத்தைக் கூட்டுப்பாலியல் பலாத்காரம், மற்றும் வன்கொடுமை எனச்சொல்லுவதற்குப் பதிலாக நடத்தை கெட்ட குடும்பத்துக்கு பஞ்சாயத்து கொடுத்த தண்டனை என்று ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டது.அதே போல உயர்சாதிப் பெண்ணைக்  கல்யாணம் செய்தவன் படுகொலை செய்யப்பட்டான் அது கருணைக்கொலை என்கிற சொல்லால் பூசிமெழுகப்பட்டது.

ஆக எதவதொரு வழியில் எங்காவது தவறு நடந்தால் அதற்குப் பின்னாடி ஆதிக்கம் தனது நாக்கைத் துருத்திக்கொண்டுதான் நியாயம் பேசுகிறது. ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஏதாவதுநேர்ந்தால் உடனே ஆகாயவிமானத்தில் ஏறி அங்குபோய் இறங்கத்தயாராய் இருக்கிறது வெளியுறவுத்துறை. பூஜா பேடியை தரக்குறைவாகப் பேசியதற்காக ஒட்டுமொத்த ஊடகமும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறது. இப்படியாகத் தராசின் ஒருபக்கம்தான் எப்போதும் இழுத்துக்கொண்டே இருக்கிறது.

மீதமுள்ள இன்னொரு தட்டில் கணம் சேர்க்கும் நியாயங்கள் கிடைக்கவே கிடைக்காதோ என்கிற சலிப்பும் இது யாருடைய தேசம் என்கிற கேள்வியும் துளிர்த்துக்கொண்டே இருக்கிறது. அவ்வப்போது எழும் சின்னசின்னக் கண்டனக் குரல்களில் இந்த கேள்விகள் கருகிப்போக மீண்டும் மீண்டும் எதாவது நிகழும் என்கிற ஒரு தேடல் ஒரு கனவு நீண்டு கொண்டே போகிறது.
ஒரு நிரந்தரமான நம்பிக்கை,எல்லோருக்கும் சமமான நீதி கிடைக்க நெடிய பயணம் தேவை.

அதுவரை அதுவரை கொண்டு வாருங்கள்  பாரதி கேட்ட எரிதழலையும் காந்திகேட்ட  பற்களும் நகங்களும், பாட்டாளிவர்க்கம் கேட்ட தெருவில் கிடக்கும் கற்களும்.எனதருமைத் தோழிகளே  இவையெல்லாம் எங்கே போயின ?


25.4.11

மாயாஜாலங்களை ஊதிப்பெருக்கும் ஊடகங்கள். சாய்பாபாமரணம்.


நேற்று பகுத்தறிவுப்பாசறையிலிருந்து கிளம்பும் கலைஞர் தொலைக்காட்சி நேரடி வர்ணனையில் நூறு தடவைக்குமேல் ராஜாங்கம்,தனி அரசாங்கம் என்று சொல்லிப்புழகாங்கிதம் அடைந்தார்.இந்தியா குடியரசாக அறிவிக்கப் பட்டு 53 ஆண்டுகள் கடந்த பின்னும் இப்படிப்பட்ட அரசாங்காங்கள் தொடர்வது தான் வேடிக்கை .ஆமாம் இந்தியாவில் பக்தி என்கிற படுதாவுக்குள் ஒழிந்து கொண்டு தொழில் செய்யும் இதே போன்ற அரசாங்கங்கள் கணக்கிலடங் காதவை  இருக்கின்றன.இவை தவிர்த்து நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வக்கணம் காட்டும் அரசாங்கங்கள் ஐம்பத்தாறுக்கும் மேல் தேறும். அவை அம்பானிகுழுமம் முதல் அழகிரிகுழுமம் வரை நீண்டுகொண்டே போகிறது.

அவரின் மறைவு பக்தர்களின் உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று திரும்புகிற திசைகளெல்லாம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 85 வயதில் இறப்பது ஈடு செய்யமுடியாத இழப்பென்பது கொஞ்சம் கூடுதலான மாயஜாலம் தான். ஐந்து முறை மரணத்தை வென்றவராம். அதுகூடப்பராவயில்லை.அவர் படுத்து தூங்கும் போது அவரோடு இருந்த ஆறுபேர் கத்தியால் தாக்க வந்தார்களாம்  கடவுள் கிருபையால் காவலாளி ஆறுபேரையும் கொன்று விட்டாராம்.இந்தச்செய்தி எதோ எம்ஜியார் ரஜினி சினிமா பார்த்தமாதிரி இருக்கிறதா.இருக்கத்தான் செய்யும். பிள்ளையார் பால்குடித்தார்,பசுமாடு பேசியது என்கின்ற கட்டுக்கதைகளை நம்புவது போல நம்பித்தான் ஆகவேண்டும்.

பிழிந்து பிழிந்து அழுகிற பக்தர் கூட்டத்தைப்பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. பெற்ற தாய்க்கு கஞ்சி ஊற்றாமல் காப்பகத்துக்கு அனுப்புகிறவர்கள்.வீட்டுவாசலில் பசியேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களுக்கு பொமரேனியனின் குறைப்புச்சத்ததை கொடுத்தவர்கள்,பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருக்கும் சகஊழியனுக்கு உதவாத பணத்தை உண்டியலில் கொட்டியவர்கள்,படுக்கைம் அறையிலும்,கழிப்பறையிலும் பதுக்கமுடியாத பணத்தை அவரின் காலடியில் கொட்டியவர்கள்,கடவுளே இறங்கி வந்து ஜாதி இல்லை என்று சொன்னாலும் மறுக்கிற கடவுள் மறுப்பாளர்கள், மேடு பள்ளங்கள் நீடிக்கவேண்டுமென்கிற நம்பிக்கை வாதிகளின்  கண்ணீர் உலகமெங்கும் சிந்திக்கொண்டிருக்கிறது.

இரண்டுவேளைச்சாப்பாடு சாப்பிட முடியாத ஜனங்கள் பாதிக்க்கு மேல் இருக் கிற இந்த தேசத்தில், உலகத்திலே அதிக ரத்தசோகை நிறைந்த கர்ப்பினிப் பெண்களை உருவாக்குகிற இந்த தேசத்தில் கல்வியறிவில்லாத வாக் காளர்கள்  பல்கிப்பெருகும் இந்த தேசத்தில் அடித்தட்டு மக்களின் கண்ணீர் கேட்பாரற்று ஓடுகிற இந்த தேசத்தில் இது போன்ற மாய்மால்ங்களும் மாயா ஜாலங்களும் செழித்து வளரச்செய்யும்.

ஊடகங்கள் வாழ்க.

21.2.11

பினாயக்சென் விவகாரம்:ஊடகம்,ஜனநாயகம்,வெகுமக்கள்


வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி முதல் தர மாணவர்.அதே மருத்துவ மனையின்  நிர்வாகத்துக்கும், ஏழை எளிய நோயாளிகளுக்கும் ஒருசேர பிடித்துப்போன மக்கள் மருத்துவர்.ஜவஹர்லால் நேரு பலகலைக் கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் பொறுப்பு. இவை யாவும் அவரின் தாகத்தை அடக்க முடியவில்லை.அங்கிருந்து சட்டீஸ்கர்  டல்லி ரஜ்ஹாரா இரும்புச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு மருத்துவம் செய்யப்புறப்பட்டுப் போனார். அவருடன் அவரது மனைவி இலினாவும் பயணமானார். இயல்பிலேயே ஏழைகள் மீதும் விடுபட்ட ஜனங்கள் மீதும் அளவுகடந்த அக்கறை கொண்ட அவருக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆதிவாசிகள் மேல் அக்கறை வந்ததில் வியப்பேதும் இல்லை.

ஒரு கால் நூற்றாண்டுகளுக்கு மேல் எளிய மக்களுக்கு மருத்துவம் செய்வதை மட்டுமே லட்சியமாகக் கொண்ட அவருக்கு சிஎம்சி மருத்துவமனை இம்மாதிரியான பணிகளுக்கு அளிக்கப்படும் ’பால்ஹாரிஸன்’ விருது தருகிறது. 1981 ல் சத்தீஸ்கரில் பிரபலாமான தொழிற்சங்கத் தலைவர் சங்கர்குஹா நியோகியுடன் நட்பு உண்டாகி இரும்புச் சுரங்கத் தொழிலாளத் தோழர்களுக்கென பிரத்யேக மருத்துவமனை ”ஷாகித்தை” உருவாக்குகிறார். பின்னர் சுரங்க நிர்வாகமும் அடியாட்களும் இணைந்து  சங்கர்குஹா நியோகி யைக் கொலை செய்கிறது. அதற்கு நீதி கேட்டுத் தெருவில் இறங்கிய அப்பாவி மக்களைத் துப்பாக்கிக் குண்டுக்கு இறையாக்குகிறது அரசு.அதில் இறந்து போன, அங்கஹீனமான ஏழைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உதவும் அமைப்பை நிறுவுவதிலும் சென் இணைந்துகொள்கிறார். இதன் தொடர்ச்சியாய் பியுசிஎல் அமைப்பின் மாநில பொறுப்பும்,அகில இந்திய பொறுப்பும் வருகிறது சென்னுக்கு.

உலகமயமாதலின் நேரடிக்கொடூரமாக இந்திய கனிமவளங்கள் அயல் முதலாளிகளுக்கும் உள்ளூர் முதலைகளுக்கும் தாரை வார்க்கப்படுகிறது. எந்தேசம் கொள்ளைபோகிறதே எனும் கோபம் ஆதிவாசிகளுக்கு வருகிறது.அதற்கு எதிராக எழும்பும் மக்கள் கிளர்ச்சியைத் தடுக்க சல்வாஜூடும் என்கிற எதிர்ப்புரட்சி அமைப்பு உருவாகிறது. சல்வாஜூடும் என்கிற கைக்கூலிகள் ஆதிவாசிகளல்லாத உயர் சமூகத்திலிருந்து தயாரிக்கபடுகிறார்கள்.வெறும் மூவாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்துக்கு பணியிலமர்த்தப்படும் அவர்கள் அரசாங்க உத்யோகஸ்தர்களாகிறார்கள்.
அது போக அவர்களுக்கு உள்ளூர் முதலாளிகள்,அவர்களின் எடுபிடிகளான காங்கிரஸ்,பாஜக,மற்றும் உள்ளூர் அரசியல் வாதிகளின் தார்மீக ஆதரவும் நிதி உதவியும் கிடைக்கிறது. அவுட்சோர்சிங் முறையில் ஜாதியப் பற்றை, முதலாளித்துவப் பற்றை உருவாக்கி அவர்களுக்கு வெறியூட்டுகிறது.

இப்படி அரசு மற்றும் ஆளும் எதிர்க்கட்சிகளின் செல்லப்பிள்ளைகளான அவர்கள் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் இந்த தேசத்தில் நடக்கும் வன்கொடுமைகள் மொத்தத்தையும் ஆதிவாசிகளின் மீது நிகழ்த்துகிறார்கள். குறிப்பாக ஆதிவாசிப் பெண்கள் மீது சொல்லக்கூசும் செயல்கள் நடந்தேறுகிறது. பியுசிஎல் அமைப்பின் மாநில பிரதிநிதி என்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கரம் நீட்டுகிறார் பினாயக்சென். இதன்மூலம் இந்திய அதிகார,ஜாதிய,முதாலாளிகளின் கோபத்துக்கு ஆளாகிறார் மருத்துவர் சென். தன்னை ஆதரிக்கவேண்டும் அல்லது அடிபணியவேண்டும். இல்லாவிட்டால் ஏதாவதொருவழியில் தீர்த்துக்கட்டப்படுவாய்.இது அதிகார மையங்களின் விதி.அது சென் மீதும் செலுத்தப்படுகிறது. குறி வைக்கப் படுகிறார். வழக்கு ஜோடிக்கப்படுகிறது.பிடிபட்ட மாவோயிஸ்டுகளோடும், ஆதரவாளர்களோடும் தொடர்புபடுத்தி கதைதிரித்து வழக்கு  நடக்கிறது. வளமை போல் வழக்கின் தீர்ப்பு நீதிமன்றத்துக்கு வெளியே தீர்மானிக்கப் படுகிறது.

2007 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு மூன்று வருடம் நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில், அதாவது  2008 ஆம் ஆண்டு உலகசுகாதார நிறுவனம் அவருக்கு மனித உரிமைகளுக்கான  ‘ஜோனதன்மான் ‘ விருது கொடுத்து கௌரவிக்கிறது. உலகம் முழுவதும் இருக்கிற அறிவியல் அறிஞர்கள்,நோபல் விருதுபெற்றவர்களடங்கிய 22 பேர் குழு சென்னுக்காக பிரத்யேக கடிதம் ஒன்றை இந்திய ஆட்சியாளர்களுக்கு அனுப்புகிறது. இருந்தும் சென்ற 2010 டிசம்பர் மாதத்தில் அவரோடு மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறது செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு குறுகிய பிரதேசத்தில் மருத்துவ பணியாளராகவும்,ஜனநாயக ஆர்வலராகவும் இருந்த சென் இந்த தீர்ப்பின் மூலம் ஒடுக்கப்பட்ட இளைஞர்கள்,ஜனநாயக அமைப்புக்கள்,உலக அறிஞர்கள் தூக்கிப்பிடிக்கும் பதாகையாக மறிக்கொண்டிருக்கிறார்.

(நன்றி காலச்சுவடு பிப் 2011,பினாயக்சென்: ஜனநாயகவாதிக்கு இழைக்கப்பட்ட அநீதி: க.திருநாவுக்கரசு)

எத்தனை காட்சி ஊடகங்கள் இதை பொருட்படுத்தியது.எத்தனை அச்சு ஊடகங்கள் விலாவாரியாக, பத்திபதியாய் எழுதியது.எத்தனை டீக்கடை பெஞ்சுகளில் பேசுபொருளானது.எத்தனைபேர் இதை எழுதி ஹிட் வாங்கினார்கள்.

இந்த தேசம் எதைப் பேசுவது எதைப் புறந்தள்ளுவது என்கிற நுண்ணரசியலில் கெட்டிக்காரத்தனமாக நடந்துகொள்கிறது. காங்கிரஸ்  அல்லது  பாஜக -, திமுக அல்லது அதிமுக இந்த இரண்டில் ஏதாவதொன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட அரசியலுக்கு நாம் ஜனநாயகம் என்றும் பேர் சூட்டிக்கொள்கிறோம்.உலகின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும்  அதைக்கண்டு பொங்குவாயானால் நீ என் தோழன் என்று சொன்னான் உலக புரட்சி நாயகன் சே.ஆனால் இங்கே கிடைக்கும் புரட்சிக் கருத்துக்கள் தன்வயப்பட்டவையாகவே இருக்கிறது. தீர்ப்பு வெளியாகி இரண்டு மாதங்களில் வெளியிலும் வலையிலும் சென்னைப்பற்றிய பிரமாதமான எந்தக்குறிப்பும் இல்லை. ஒருவருக்கு வழங்கப்பட்ட அநீதி ஒரு ஜாதிக்கு, ஒருகட்சிக்கு, ஒரு இயக்கத்துக்கு மட்டும் நடந்த அநீதியாக சுருக்கிப் பார்க்கிற வியாதி நீடிக்கிறது இங்கே.

இலங்கை இடர்பாடுகள்மேல் வைத்திருக்கிற உக்கிரப் பார்வை உள்ளூர் கொடுமைகளில் பிசகுகிறது, பின்வாங்குகிறது வாளா விருக்கிறது.மீனவர் படு கொலைநடந்த அதே காலக் கட்டத்தில்தான் உத்தப்புரம் கோயில் நுழைவும், தாமரைக் குளம் தலித் வீடுகள் சூறையாடப்பட்டதும் நடந்தது.ஆராசா தலித் என்பதால் குறிவைக்கப்படுகிறார் என்று முதல்வர் சொன்னதும் உலகம் முழுக்க எள்ளி நகையாடப்படுகிறது. மிகச்சரி. தவறு செய்தவர்களுக்கு என்ன ஒதுக்கீடு வேண்டிக்கிடக்கிறது மிக மிகச் சரி.ஆனால் ஒரே ஊருக்குள் இருக்கிற சகோதர தமிழனை கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறாயே தமிழா,தமிழக அரசே என்று ஒரு பலத்த குரல் எழும்பியிருக்கிறதா.2000 வருடங்களாக இப்படி ஒரு ஓங்காரக் குரல் ஒலிக்காதா என்று இந்திய தலித்துகளின் காதுகள் ஏக்கத்தில் இருக்கிற விஷயம் தெரியுமா ?

அது தெரிந்துகொள்கிற வரை புரட்சிக் கருத்துக்கள் தழல் வீரம் குன்றிப்போய் வெறும் சுயசொறிதல்களாக மட்டுமே நீடிக்கும்.பொங்குகிற கடல்மாதிரி,
பற்றி எரிகிற காடு மாதிரி, வானிடிந்து பேய்கிற பெருமழை மாதிரி புரட்சி எல்லோரையும்  ஏந்திக்கொள்ளவேண்டும். இதில் ஒதுக்கீடு கேட்பது நகைப்புக்குறியது. எனில்  ஒதுக்குவது ? அது புரட்சி என்கிற வார்த்தையைக் கொச்சைப்படுத்துவது.

26.10.10

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா

இன்றைய்ய முக்கியச்செய்திகள்.

நமீதாவை காரில் கடத்த முயன்ற வாலிபர் கைது.

ராதா ரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

14 வருடங்களுக்கு முன்னாள் தான் எழுதிய ஜூகிபா கதைத்திருட்டு தான் எந்திரன்.
கவிஞர், எழுத்தாளர் தமிழ்நாடன் போலீசில் புகார்.

இந்த மூன்று முக்கியச்செய்திகளும் பேப்பரில். ரஜினியின் அரசியல் பிரவேசம்-
இது எக்கச்சக்கமாக இண்ட்லியின் முன்னனியில்-

என்னென்ன செய்திகள் இந்த தமிழக மக்களைச் சென்று சேரவேண்டும் என்பதில் மிகக்கறாரான நடைமுறை
பின்பற்றப்பட்டு வருகிறது.ஊடகங்களும் தமிழ்சினிமா மாதிரியே பெருத்த மசாலாக்கலவையில் தான் செய்தி தயாரிக்கிறார்கள்.பேப்பர் இல்லாமல் கூட செய்திவரும் மசாலா இல்லாத செய்தித்தாள் கிடையவே கிடையாது.  நமீதா கடத்தப்பட்ட விவகாரம்.26 வயதான பெரியசமிக்கு இருந்த லட்சியத்துக்கு 50 க்கும் மேலாகிறது.1960 களிலேயே அஞ்சலிதேவி,பானுமதியம்மா போன்றவர்களின் மீது வெறிகொண்டலைந்த ரசிக மனோபாவம் இது.அதைக்குறையவிடாமல் பாதுகாப்பதில் இந்த ஊடகங்களுக்கு இருக்கும் தொழில் பக்தி அலாதியானது.கூட இருந்த நண்பர் சொன்னார் இந்தச்செய்தி பொய் என்று.நமீதாவை எப்படிக்காருக்குள் கடத்திக்கொண்டுபோயிருக்க முடியும் என்கிற நக்கலான கேள்விக்கென்ன பதில்.

எழுத்தாளர் தமிழ்நாடன் மேல் அனுதாபம் வருகிற செய்தி இது.என்னமோ தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகிற சினிமாக்கள் எல்லாம் காப்புரிமைச்சட்டத்தை மதித்து உத்தரவு வாங்கிய பின் தொடங்கப்படுகிற மாதிரி நினைப்பு. இது எந்திரனுக்கு கொடுக்கப்படும் கொசுறு விளம்பரம் என்பதுதான் நிஜம்.சங்கர் இந்தியன் படம் எடுத்தவுடன்
இருந்த பத்துரூபாய்க்கும் பலகாரம் வாங்கித்தின்றுவிட்டு தாலுகா ஆபிசுக்குள் போனாராம் ஒரு சினிமாப் பைத்தியம்.எதுக்காக...லஞ்சம் கொடுக்காம சர்ட்டிபிகேட் வாங்குவதற்கு.இந்தியன் பட வெற்றிக்குப்பிறகு கமல்  அரசியலுக்கு  வருவாரா மாட்டாரா என்று புரளியைக் கிளப்பவில்லை.அந்த அரசியல் தான் என்னன்னு புரியல.

ஆனால் ஒவ்வொரு முறை ரஜினி படம் வெளிவந்து அடுத்தபட வேலைகள் துவங்கும் போதும் திட்டமிட்ட புரளி
யைக்கிளப்பி விட்டுவிடுகிறார்கள். பிஸினஸ் டாக்டிஸ்.எம்ஜியார் ஆட்சிக் காலத்திலிருந்து இப்படிப் புரளியைக் கேட்டுக் கேட்டு காது புளியந் தோப்பாகிவிட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து குற்றாலம் போனால் சிவகிரிப்பக்கம் ஒரு மலையின் மேல் சங்கர் அளவுக்கு பிரம்மாண்டமாய் ஏசுவருகிறார் என்று எழுதியிருக்கும்.அதற்கும் ரஜினியின் அரசியல் பிரசவ செய்திக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

எங்க ஊரு டவுன் பஸ்ஸை விட அதிக ஷண்டிங் அடித்த பெருமை இந்த லட்சிய வீரனுக்கு மட்டும் தான்
பொருந்தும்.கலைத்துறையின் மூலமாக இந்த தமிழ் மக்களுக்கு மானமும் ரோஷமும் வரவேண்டும் என்று
பாடுபட்ட ஒரு மிகப்பெரிய ஆளுமையின் மகன்.அப்பம்பேரக் கெடுக்கவந்தவன் என்று சொல்லுவது இதுதானோ? 

17.6.10

எளியோரைப் பகடிசெய்யும் ஊடகமும்,இந்தியரைப் பகடிசெய்யும் ஆண்டர்சனும்.

அந்த அதிகாலை வேலையில் ஸ்டார் சிட்டி இருசக்கர வாகனத்தில் அவர் வந்து இறங்கினார். அந்த தேநீர்க்கடையின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு மேல் சட்டையைக் கழற்றி ஓரப்பெட்டியில் வைத்து மூடினார்.கைலிஒயை மடித்துக்கட்டிக்கொண்டு இடுப்பில் கொக்கியை சொருகிக்கொண்டு கிளம்பிப்போய் விட்டார்.அங்கே தேநீர் அருந்திக்கொண்டிருந்த சூட்டுப்போட்ட கனவான்களும், இன்னும்சிலரும் நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்கள்.அவர் கடந்துபோனதை உறுதி செய்துவிட்டு இப்போது விமர்சனங்கள் வெளியேரின.

'பைக் இல்லாத கொத்தனார் ஊர்ல கிடையவே கிடையாதுங்க,ரொம்பத்தான் முன்னேறிட்டாய்ங்க'
'இது கூடப்பரவால்ல சார், நேத்து கக்கூஸ் கழுவ வந்தவன் பசக்குனு செல்போன எடுத்து பேசுறான்'
டீக்கடை நீதிமன்றம் தனது தீர்ப்புகளைச் சொல்லத்தொடங்கியது.

இப்படித்தான் நமது பொதுப்புத்தியில் பல அழுக்குகளும், சாக்கடைகளும் திட்டமிட்டுத் திணிக்கப் பட்டிருக்கிறது. காலங்காலமாக, ஆடை அணிகலன்கள், படிப்பு,ஞானம்,சௌகர்யம்,சுத்தம் எல்லாமே ஒரு சாராருக்குமட்டும். அதாவது சமூகத்தின் மேல்தட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருத்தமானது எனவும்மப்படியல்லாதவர்கள் அதை உபயோகிக்கிறபோது அவர்கள் ஒரு கேலிப் பொருளாகச் சித்தரிக்கப்படுவதுதான் இங்கிருக்கிற கொடுமை.

முழுக்கால் சாராய் என்பது ஆங்கிலேயர்களின் ஆடைவகை.அதை அணிவதற்குத் தகுதியானவர்கள் முதலில் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் இன்னபிற மக்கள் என்பதை காலங்காலமாகச் சினிமாக்கள் நமது பொதுப்புத்தியில் ஏற்றிவைத்துவிட்டது அதனால்தான் ஞண்ணாச்சி பாரதிராஜா கூட  சப்பாணி சூட்டுப்போட்ட காட்சியை மிகப்பெரிய விகடக்காட்சியாகச் சித்தரிப்பார். பூ படத்தில் சசிக்குமார் ஒரு ஆட்டுக்காரச்சிறுவன் கைப்பேசி உபயோகிப்பதை உலகமகா சிரிப்பாணியாக்குவார். இதற்கு இவர்கள் டூயட்டில்,சண்டைக்காட்சியில்கூட சமரசம் ஆகிவிட்டுப்போயிருக்கலாம்.

கழிப்பறை சுத்தம்செய்ய வருகிற பெண்கள் குடைப்பிடித்துக்கொண்டு வருவது போலவும்,பிச்சைக்காரர்கள் வங்கிக்கணக்கு வைத்திருக்கிற மாதிரியும் சித்தரித்துக் கிச்சணங் காட்டுவதுதான் திரைத்துறையின் சிரிப்புக் கிட்டங்கியில் கிடக்கும் நாற்றம் பிடித்த சிந்தனைகள்.ராசாவீட்டு நாய் சிம்மாசனத்தில் ஏறலாம்,சலவைக்காரர்வீட்டு நாய் வெள்ளாவிப்பானையில் ஏறலாமா என்கிற பழமொழிகளை அப்படியே கணினி யுகத்துக்கு உருமாற்றம் செய்கிறதிந்த பிரபல திரைப்படங்கள்.

எளியவர்களை நசுக்கவும், வலியோருக்கு ரத்தினக்கம்பளம் விரிப்பதும்தான் காலங்காலமாக பிழைப்பு நடத்தும் தொழில் நுட்பமாகக் கருதப்படுகிறது.அல்லது தர்மமாக ஓதப்படுகிறது.அதைத்தான் கலை உலகம் தனக்கிட்டபணியாக தலைச்சுமையாய் விற்றுவருகிறது.

பெப்சி குளிர்பாணத்தில் நச்சுத்தனமியிருக்கிறதென்னும் விவாதம் சூடேறிக்கொண்டிருந்த காலத்தில் தான் சிந்தனைச் செல்வி ராதிகாவும்,விவேக்கும் பெப்சி,கோக் குளிர்பாணங்களின் சரிவுக்கு முட்டுக்கட்டையக தாங்கி நின்றார்கள்.ஐஎஸ்ஐ,ஐஎம்ஏ,போன்றவற்றோடு போட்டிபோட்டுக் கொண்டு அவர்களுக்குத் தரச்சான்றிதழ் வழங்கினார்கள்.
ஒருபாட்டில் தண்ணீர் பதினைந்து ரூபாய்க்கு விலைபோகிற அவலத்தைச்சொல்லுவதற்கும்,பத்துரூபாய்க்கு ஃபேர்அண்ட் லவ்லி களிம்பு வாங்கித்தடவினால் கருப்பு மாறிச் சிகப்பாகிவிடலாம் என்கிற பித்தலாட்டத்தை விமர்சனம் செய்வதற்கும் தில்லில்லாத சிங்கங்கள்
ஓங்கி ஒரு அடி அடிச்சா ஒன்னர டன் வெயிட்டுறா என்று ஊளை விடும்.

ஒரு ஆடை, ஒரு வாகனம், ஒரு அலைபேசி உபயோகப்படுத்துவதில் கூட ஒவ்வாமையை ஒளித்துவைத்திருக்கும் சமூகம் எப்படி நீதியை ஒரே தட்டில் வைத்து வழங்கும் ? 

பழனிக்குபாத யாத்திரை போகிறமாதிரி போபால் விஷவாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணூறு கிலோ மீட்டர் கத்திக்கொண்டே டெல்லிக்கு வருடா வருடம் போவது ஊடகங்களின் தப்பித்தவறிக் கூட காண்பிக்கப் படவேயில்லை. எண்பதுகளின் இறுதியில் துவங்கிய வழக்கு தீர்ப்பாக இரண்டு தலைமுறை தாண்டிவிட்டது.ஆனாலும் யூனியன் கார்பைடிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை இன்னும் படிந்துகிடக்கிறது. அதைவிடக் குரூரமாக ஆட்சியாளர்களின் பாரபட்சம் நீதித்துறையில் படிந்து கிடக்கிறது. அது குறித்த ஸ்மரணை இல்லாமல் 27 வருடங்கள் கழிந்துபோய்விட்டது.எங்காவது உரிமை கேட்டுப்போராட்டம் நடத்தினால்  அரசு பிருஷ்டத்தில் ஒளித்து வைத்திருக்கும் தனது இரும்புக்கரத்தை எடுத்து அப்பாவி மக்களை அடக்குகிறது.ஆண்டர்சன் விவகாரத்தில் அதே இரும்புகரம் உருகி சாக்கடையாய் ஓடுகிறது.

மும்பை தாஜ் ஒய்யார விடுதி தீவிரவாதத் தாக்குதல் நடந்து இரண்டுவருடங்கள் முடியவில்லை அதற்கான தீர்ப்பு சமீபித்து  விட்டது. உயிர்ச் சேதக் கணக்குப்படிப் பார்த்தால் போபாலில் நடந்தது மும்பைத் தாக்குதலைக் காட்டிலும் 200 மடங்கு தீவிரமானது. அது ஒரு இனப்படுகொலை. அந்த வீரமும் விவேகமும் எட்டாயிரம் உயிர்களை ஒரே இரவில் பலிகொண்ட போபால் விவகாரத்தில் ஏன் காட்டமுடியாமல் போனது ?. நீதித்துறையின் கைககளைக் கட்டிப் போட்டது எது ?. எனில் ஒரே வகையான நீதி வழங்க முடியாமல் போன அது, அழங்கரிக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து என்பதே தகும்.

ஆமாம் நண்பர்களே எதாவது ஒரு சினிமாப்படத்தில் ஒரு கணம் கடந்து போக்கும் காட்சியாக அல்லது ஒரு வரி வசனமாக இடம்பெற்றிருக்கிறதா எனத் தெரியவில்லை. அதனால் தான் இது வரை 23 ஆயிரம் உயிர்களைப் பலிகொண்ட ஆண்டர்சன் இந்தியர்களைப் பார்த்துக் கெக்கலிட்டுச் சிரிக்கிறான்.நரகாசுரக் குரலில் பகடி செய்கிறான். நாம் இன்னும் டீக்கடைப்பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு,'அங்கபார்றா அவன பேண்ட் போட்டுக்கிட்டு போறான்' என்றும் நமது கலாச்சார ஊடகம் 'அடடா நீங்களும் சங்கம் வச்சீட்டிங்களாடா' என்றும் கீழ்தட்டு மக்களைப்பகடி செய்வதிலேயே தனது சக்தியை விரயம் செய்துவிட்டு. நாங்க பிலிய சொலகால அடிச்சு வெரட்னோ஡மில்ல என்று பீத்திக் கொள்கிறவர்களாகிவிட்டோம்.

24.9.09

ரஜினிகாந்தும் ஒரு குவளைத் தேனீரும்

உலர்ந்த செடிகளில் கால்பதிப்பது தெரியாமல் பூனைபோல நடந்து, பின் சீறிப்பாய்ந்து, விரட்டி, சிதறியோடும் மான் கன்றுகளைத் தனிமைப்படுத்தி இறையாக்கும், நாட் ஜியோ. பட்டாம் பூச்சி பிடிப்பதுபோல விஷப் பாம்புகளை, மலைப் பாம்புகளைப் பிடிக்கும் வைல்டு அனிமல்ஸ் காட்சிகள் பார்க்க பிடிக்கும். அதுபோலவே விஜய் தொலைக் காட்சியில் குற்றம் நடந்தது என்ன பகுதியில் நேற்று காண்பித்த ரஜினி, இமயமலை, பாபாஜி - தொடர் பார்த்தோம்.


இமயமலையிலிருந்து கீழிறங்கும் கங்கை ஆவிபறக்கப் பொங்கிப் பிராவகமெடுக்கும் ஹரித்துவார். மனிதக் கைகள் தடம் போட்ட சாலைகள் தவிர்த்து ஒரு சிறு குண்டுமணி அளவுகூட இடைவிடாத பசுமை. நமது வாயிலிருந்து வெளியேறும் காற்றின் வெப்பம் கூடக் கண்ணுக்குத் தெரிகிற குளிர் சீதோஷ்ணம். அடைமழை பெய்தால் மட்டுமே ஓடையிலும், வைப்பாற்றிலும் தண்ணீர் வரும் கருசக்காட்டு மனிதர்களுக்கு இமயமலை, வியப்பும், வினோதமும் கலந்து நினைவூட்டுகிற இந்தியாவின் இயற்கைவளம். எட்டு நாளைக்கொரு தரம் கூட குழாயில் தண்ணீர் வருமா வராதா என்று காத்திருக்கிற எங்களுக்கு அந்த ஹரித்துவாரும் இந்தியா தானா என ஏங்கவைக்கும் நீர்வளம்.


அந்த இடம் நடிகர் ரஜினிகாந்தை கவர்ந்ததில் எந்த வியப்புமில்லை. பரபரப்பில்லாத, மாசுபடியாத இதுபோன்ற ரம்யமான சூழல் கிடைக்கிற யாரும் பரவசமாவார்கள். ஏகாந்தம் தொற்றிக்கொள்ள தங்களின் அன்றாடமெனும் மன அழுத்தம் குறைத்துக் கொள்ளும் வாய்ப்புதான் சுற்றுலா. இது மேலை நாடுகளில் கட்டாயமான ஒன்று. சாமான்யர்களை விடப் பிரபலங்களுக்கு அதிகப்படியான தேவை இந்த ஏகாந்தம். அதை அப்படியே நூறு சதவீதம் அனுபவிக்கிறவர் நடிகர் ரஜினிகாந்த் அவ்வளவுதான்.


" ரஜினிகாந்த் இந்த இடங்களில்தான் மக்களோடு மக்களாக உட்கார்ந்து தேனீர் அருந்தினார் " என்று பரவசமாகி, அருள் வந்து, உடல் குலுக்கிச் சொல்வது போலச் சொல்லுகிறார்கள். தேனீர்க் கடையில் மக்களோடு மக்களாகத் தேனீர் குடிப்பதென்ன அவ்வளவு பெரிய சாகசச்செயலா ?. இப்படித்தான் பிரபலங்களின் காலைத் தரையில் பாவ விடாமல் தொடர்ந்து இந்த ஊடகங்கள் தங்கள் கைகளில் தாங்கி அவர்களை தனிமைப்படுத்தி விடுகிறார்கள். அதோடு நில்லாமல் கிடைக்கிற வர்ணத்தை வைத்து அவர்களின் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் போட்டு விடுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் இந்த திரையுலகில் நுழைந்த போது அவர் பட்ட அவமானங்களையும் ஒதுக்குதலையும் ஒரு பத்திரிகையும் எழுதவில்லை.


சின்னச் சின்ன பாத்திரங்களில் நடித்து தனைத்தானே மெருகேற்றிக்கொண்ட போது எத்தனை நடிகைகள் ஜோடியாக நடிக்க மறுத்தார்கள். இதே ஊடகங்கள் என்னவெல்லாம் எழுதின. பிரபலமான பின்னர் அவர் எங்கோ போய்விட்டார், அவருக்கு பிறழ்வு ஏற்பட்டுவிட்டதென குசுகுசு எழுதவில்லையா?. இவ்வளவு ஏன் சமீபத்தில் கூட மேலை நாட்டில் கையில் சரக்கோடு ஓய்வெடுத்தாரே அதைச் சர்ச்சையாக்கியதும் இந்த ஊடகங்கள் தானே. இதையெல்லாம் இந்த உலகம் மறந்துவிட்டதென நினைத்துச் சரடு திரிக்க ஆரம்பிக்கிறார்கள். செய்திகளை விற்றுத் தீர்க்க பரபரப்புக்களை வைத்துப் பக்கம் நிறப்புவது மட்டும் தான் ஊடக தர்மம் என்று மாறிவிட்டது.


எனக்கு ஆரம்ப கால ரஜினியை ரொம்ப ரொம்ப பிடிக்கும். கதாநாயக பிம்பங்களை உடைத்தெறிந்து விட்டு ஒரு புது அத்தியாயம் எழுதியவர். கதாநாயகன் அப்பழுக்கற்றவனாகக் கட்டமைக்கப்படும் தூதன் இல்லை. எல்லா நன்மை தீமைகளும் நிறைந்த சாமான்யன் என்று நிலை நிறுத்தியவர். அவள் அப்படித்தான் படத்தில் ஸ்ரீபிரியாவிடம் அடிவாங்குவார். தப்புத்தாளங்களில் விபச்சாரியை மணந்துகொள்வார். மதுக்குடிப்பார், பீடா போடுவார், மூக்குப்பொடிகூட, கோபம் வந்தால் அடிப்பார். வேலைபறி போய்க் கையும் பறிபோய், கட்டியமனைவியும், சொந்தங்களும் சொல்கேளாமல் தன்னை விட்டுப்போக அநாதராவாக நிற்பார். அந்த ரஜினி எனக்கு மட்டுமல்ல அப்போது இந்த சினிமா கொஞ்சமாவது உருப்படுமா என்று ஏங்கிக் கிடந்த எல்லோருக்கும் பிடிக்கும்.


நானும் எனது சின்னவயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் " ஏசு வருகிறார், ஏசு வருகிறார்" என்று எழுதிப்போட்டுஏமற்றியது போலவே இந்த ரஜினிகாந்தையும் " இதோ அரசியலுக்கு வருகிறார், வருகிறார் " என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். வந்தால் இப்போதிருக்கும் ரசிகர்மன்றச் செயலாளர்கள் தலைவர்களுக்கு சட்டமன்றத்திற்குள் செல்லும் வாய்ப்புக்கிடைக்கும். அப்புறம் அயல்நாட்டுக்கார், அயல்நாட்டு மது, அயல்நாட்டு வங்கிக்கணக்கு எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும், இதுதானே நடக்கும்.


எதையோ தேடிப்போனார் எதையோ தேடிப்போனார் என்று பல்பொடிபோட ஆரம்பிக்கிறார். அடர்ந்த மலையில் தேடிப்போனால் மூலிகைகள் கிடைக்கும், அதையும் தாண்டிப்போனால் ஆதிவாசிகள் கிடைப்பார்கள், அதையும் தாண்டிப்போனால் மிருகங்கள் கிடைக்கும். இதைத்தான், டிஸ்கவெரி, நாட் ஜியோ, வைல்ட் அனிமல் சானல்கள் இதுவரை கண்டுபிடித்திருக்கின்றன. மிருகங்களோடு மிருகங்களாக வாழ்வுகடத்தும் மலை மனிதர்கள் காலமெல்லாம் அதே குகைக்காட்டுக்குள் தான் குடியிருக்கிறார்கள் அவர்களையெல்லாம் விட்டு விட்டு ரஜினிக்கும் மட்டும் தான் தெரிவேன் என்று சொன்னால் அந்த மஹா அவதாருக்கும் ஓரவஞ்சனை வண்டி வண்டியாய் இருப்பதுப்போல தெரிகிறது.