5.4.12

மௌனத்தை உடைக்கும் முன்கை

பரமக்குடி பேருந்து நிலையத்துக்குள் நுழைந்ததும் திபு திபுவெனக்கூட்டம் முண்டி யடித்துக்கொண்டு  ஏறியது. அதோடு கூடவே பனங்கிழங்கு விற்கிற சிறுவனும்,சுண்டல் விற்கிற நடுத்தர வயதுக்காரரும் ஏறினார்கள்.பத்து ரூபாய்க்கு ஆறு அவிச்ச பனங்கிழங்கு கிடைக்கும்,ஒரு பொட்டலம் சுண்டல் ஐந்து ரூபாய்க்கும் கிடைக்கிறது என்பதே ஆறுதலான விஷயம். ஆனாலும் அந்த சிறுவனிடம் கிழங்கு வாங்க மனம் ஒவ்வவில்லை.அந்த ஒரு நிமிட தாமதிப்பில் குழந்தை உழைப்புக்கு எதிராக செய்கிற கையாலாலாத நடுத்தர வர்க்கத்தின் கைங்கர்யம் அதுமட்டுமே. நடு இருக்கை மட்டுமே காலியாக இருந்தது அதில் உட்காருவதற்காகக் குறிவைத்து வந்த இரண்டு கிராமத் தார்கள் அழிச்சாட்டியம் செய்தார்கள்.பனங்கிழங்கு விற்கிற சிறுவனை கழுத் தைப்பிடித்து தள்ளினார்கள் இருக்கையின் முகப்பில்  உட்கார்ந்திருந்த பீகாரி இளைஞனை விலகச்சொல்லிக் கெட்ட வார்த்தையில் வைதார்கள். அது வரை இயல்பாக வேடிக்கைபார்த்த பேருந்துப்பயணிகள் ஒவ்வொருத்தராய் தங்களை தாங்களே உள்ளிழுக்கும் ஆமைகளானோம். அப்போதிலிருந்து சுமார் ஒருமணிநேரம் ஓயாத கெட்டவார்த்தை ஒவ்வொன்றும் டாஸ்மாக் வீச்சத்தோடு பேருந்து முழுக்க வழிந்து கிடந்தது.

’எம்மருமயென் ஆறுகெடா வெட்டுனாண்டா,ஒரு சுமோப்பிடிச்சியாந்து கேஸ் கேஸா எறக்கி  பெருமப்படுத்திட் டாண்லொய்’ என்று சொல்ல எதிராளி

 ‘சும்மா கெட வகுத்தெரிச்சலக் கெளப்பாத பெறகு குத்திப்புடுவே எனக்கும் வாச்சானே மருமயென் பேத்தியாளுக்கு சடங்கே வைக்கமாட்டேனுட் டாண்டா, சாதிகெட்டபெய. க்காலி,அதாம் போச்சுண்டா பத்ராவிசுல வேல பாத்துக்கிட்டு ஒத்தப் பைசா வரும்டியில்லாம எம்மவள மூளியா வச்சிறுக் கான் சிருக்கியுள்ள.., 

வயித்தெரிச்சலக் கெளப்பாதடா என்று பேசிக்கொண்டே வந்தார்கள்.காற்று வரவில்லை இறுக்கமாக இருந்தது. ஜன்னல் கண்ணாடி கொக்கியை மடக்கி நிறுத்த தெரியவில்லை இரண்டு மூன்று முறை மடேர் மடேரென்று கண்ணாடி கீழிறங்கியது. தெறக்கத்தெர்லன்னா உடவேண்டிய தானே  கண்ணாடியப் போட்டு ஒடச்சிராதங்கப்பு என்ற பொறுமிய கண்டக் டருக்கும் ரெண்டு வசவு காத்திருந்தது. இனிமையான  பாடல் களாக ஓடிக் கொண்டிருந்தாலும் அதையும் தாண்டிய பேச்சுச் சத்தமும்,வசவுகளும்  ஆக்ரமித்துக்  கொண்டே யிருந்தது.

பின்னாடியிருந்த நடு வயதுப்பெண் எழுந்து ’

என்ன பஸ்ஸா இல்ல சாராயக் கடையா,பொம்பளைங்க  வர்றாங்கண்ணு தெரியல’ என்று குரல் கொடுத்தார்.

’பொட்டமுண்டைக்கி திமிரப்பாரு என்று மீண்டும் கெட்டவார்த்தையில் ஆரம்பித்தான்.

’இனிமே ஒனக்கு மர்யாதயில்ல பேச்ச நிப்பாட்டு’ என்றார்.’நா யார்ன்னு தெர்யுமா’ என்றான்.

அதான் ஒருமணிநேரமாப் பாத்துட்டு வர்ர்றோ மில்ல, நீ மனுஷனே இல்ல என்றார்.

இரண்டு பேரும் வரிந்து  கட்டிக் கொண்டு அவரோடு மல்லுக்கு நின்றார்கள். சன்னம் சன்னமாய் பேருந்துப் பயணிகள் எல்லோரும்  அந்தப் பெண்ணின் பக்கம் வந்தார்கள். பேருந்தும் திருப்புவனத்துக்கு வந்தது. பயணிகள் ஒருமித்த குரலோடு பஸ்ஸ ஸ்டேசனுக்கு விடுங்க ட்ரைவர் சார் என்று கத்தினார்கள். மள மளவென்று ரெண்டுபேரும் இறங்கி இருவரும் கூட்டத்துக்குள் மறைந்து போனார்கள்.

மீண்டும் ஓடத்துவங்கிய பேருந்து தனது இயல்புக்குத் திரும்பியது. எல்லோரும் அவரவர்  ஆலோசனைகளைச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். மீண்டும் பாடல் தெளிவாக ஒலிக்க ஆரம்பித்தது. அந்தப்பெண் பக்கத்திலிருந்த குழந்தையிடம் வெளியே காட்டி எதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

2 comments:

vimalanperali said...

மௌனங்கள் உடைபட்ட நிமிடங்களை விட பனங்கிழங்கு சிறுவனை எண்ணியே மனது வட்டமிடுகிறது.நல்ல பதிவு,
வாழ்த்துக்கள்.

hariharan said...

முன் கையைத்தான் நாம் எதிர்பார்த்துகொண்டேயிருக்கிறோம்.

அந்தப் பெண் பாரதி கண்ட புதுமைப்பெண் என்பதில் ஐயமில்லை.