4.9.09

பிச்சைக்குரலின் பின்னாலிருக்கும் அரசியல்.








விடுமுறை நாட்களிலோ அல்லது வேலைக்குப் போவதற்கு முன்னரோ இந்தக் குரல்களைச் சந்தித்தே தீரவேண்டியிருக்கிறது.நோட்டு வைத்துக்கொண்டு, ரசீது புத்தகம் வைத்துக்கொண்டு, தட்டேந்தி, மஞ்சள் துணி சுற்றிய சொம்பைத் தாங்கிக்கொண்டு, சில வேலைகளில் ஒரு வாலிபப்பெண்ணை அழைத்துக்கொண்டு அவர்கள் சுற்றுச்சுவர் வாசலில் நின்று குரல் கொடுப்பார்கள். நின்று அவர்களிடம் எதாவது பேசுவதற்கு முன்னர் ஒரு ரூபாய் நாணயத்தைத்தேடி எடுத்துவந்து அனுப்பிவைத்துவிட்டு என்னிடம் சில புத்திமதிகள் கூறுவார்கள் இல்லத்தோழி.



கடைவீதியில் எந்னைப்பார்த்ததும் நேரே வந்து அணிச்சையாக நாணயத்தை வாங்கிக்கொண்டு கிளம்புகிறவகள் நான்கைந்துபேர் உண்டு. அப்போதெல்லாம் நண்பர்கள் இப்படி ஆட்களுக்கு பிச்சையிட்டு ஊக்குவிக்காதே எனவும் அறிவுறுத்துவார்கள். அதோடு சேர்ந்து இந்த தேசம் வல்லரசாக இருந்ததை இவர்கள் கெடுத்துவிட்டது போலவும் தத்துவம் சொல்வார்கள்.



இவள் அப்படியில்லை கையில் குழந்தை வைத்திருந்தாள். குழந்தை சுருண்டு தோழில் கிடந்தது. உச்சி முதல் பதம் வரை வறுமையின் விளம்பரம் ஸ்பான்சரில்லாமல் காட்சியாகியிருந்தது. முகத்தில் ரோமக்கற்றைகள் அணிச்சையாகவே புரண்டிருந்தது. அதற்காக அவள் எந்த அழகு நிலையத்தையும் நாடிப்போகவில்லை. புரண்டுகொடிருந்த முடிகளை அவ்வப்போத ஒதுக்கிவிடவேண்டிய ஏற்பாடும் அவளுக்குத் தேவையில்லாமலிருந்தது. எவளாவது ஸ்ரேயா, த்ரிஷா எனும் நடிகைகளின் ஞாபகம் உங்களுக்கு வந்தால் அது என் தவறல்ல. எல்லாம் தொலைக்காட்சிக்கே அர்ப்பணம்.



எங்கோ தஞ்சாவூரிலிருந்து வேலைக்கு இங்கு வந்தார்களாம். வந்த இடத்தில் கொண்டு வந்த உடமைகள் களவு போனதால் ஊருக்குப்போக காசில்லை எனத் தன்வரலாறு கூறினாள். இது கிட்டத்தட்ட அறுபது சதமானமுள்ள இந்திய மக்களின் மொத்தமாகக் களவு போன வாழ்க்கை வரலாறு.



இப்போதெல்லாம் இதே மாதிரிக் கதைகள் அதிகமாக வாசலுக்கு வருகிறது. இப்போதிருக்கும் உலகளாவிய பொருளாதார மந்தம், முன்னதாக வந்து ஆழவேரூன்றிப்போன LPG இவைகளைக்காரணம் சொன்னால். பிணக்கு வரலாம், வரும்.விவசாயம் பொய்த்துப்போன நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் ஜனத்தொகை காமராஜர் மாவட்டத்தில் அதிகம். காரணம் தீப்பெட்டி, பட்டாசு, பாலித்தின்,மற்றும் அச்சு சார்ந்த தொழில்.



இங்கு கடந்த நான்கைந்து வருடங்களாக இயந்திரத்தினால் தீப்பெட்டி உற்பத்திசெய்யும் முறை புழக்கத்திற்கு வந்துவிட்டது. பதினைந்து நாட்களில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகள் பதினைந்து மணிநேரத்தில் தயாராகிவிடுகிறது. கணக்கில் வராதவேலை இழப்புகள் அதிகரித்து வருகிறது. அதன் பக்கவிளைவுகளாக வழிப்பறி, இரவுத்திருட்டு, ஏமற்றுவேலைகள் அதிகரித்துவருகிறது. அதுபோன்ற செயல்களுக்கு மனம் ஒவ்வாதவகளுக்கு மீதமிருக்கிற ஒரே வழி இதுதான்.கையேந்துவது.



Monopoly Restriction Trade Practice Act ( MRTP ACT), அன்னிய முதலீடுகளுக்கான வரம்பு, தனியாருக்கு பொதுப்பங்குகளை விற்பது போன்றவற்றில் கடைப்பிடிக்கப்பட்ட பொதுநல நோக்கு சிதறடிக்கப்பட்டு பொருளாதார பாதுகாப்புச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதால் இந்தியாவில் வேறுபல தடா பொடா வின் தம்பிகளாக புதிய சடங்கள் முளைக்கிறது. சொந்த மண்ணிலும் அயல்மண்ணிலும் கையேந்துகிறது.




அவள் கடந்துபோய் வெகு நேரமாகிவிட்டது. அவள் தோளில் முகம்திருப்பிக்கிடந்த அந்தக்குழந்தையின் எதிர்காலம் நினைத்து தூக்கம் கலைந்து போய்விட்டது.



வறுமையும், பஞ்சமும், இன்னபிற அரசியல் கொடுமைகளும் அதிகரிக்க அதிகரிக்க நாம் நிம்மதியாகத் தூங்க முடியாது.

3.9.09

ஆந்திர முதல்வர் YS.ராஜசேகரரெட்டி பயணம் செய்த விமானம் காணவில்லை.








ஆந்திர முதல்வர் YS.ராஜசேகரரெட்டி பயணம் செய்த விமானம் காணவில்லை.-------------------------------------------------------------------------------------------------------
இந்திய வரலாறு இது வரை சந்தித்திராத தேடுதல் வேட்டையோடு ஆந்திர முதல்வர் ys.ராஜசேகரரெட்டி காணாமல் போயிருக்கிறார். சித்தூரிலிருந்து அரசுக்கு சொந்தமான bhell ஹெலிகாப்டரில் பயணமானபோது இடையில் திடீரென விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல்கள் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
மிக மோசமான சீதோஷ்ணநிலையும், அதிக மழைப்பொழிவும் தேடுதல் வேட்டைக்குல் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ராணுவம், துணை ராணுவம், காவல்துறை என மத்திய மற்றும் மாநில படைகள் சுமார் 5000 பேருக்குமேல் நேரடியாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போதும் இந்த நிமிடம் வரை எந்த நல்ல சேதியும் கிடைக்கவில்லை. இது போக சாட்டிலைட், வயர்லெஸ், ஆகிய விஞ்ஞான உபகரணங்களாலும் கூட இன்னும் தடயங்களை காண முடியவில்லை.
இந்தியாவின் அடர்ந்த காட்டுப்பகுதியான நல்லமலா பிரதேசத்தை மையங்கொண்டு தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதற்கு முன்னதாக இதே போல நடந்த இரண்டு விமானத்தேடுதலில் அரசின் எந்த முயற்சியும் பலனளிக்காமல் கடைசியில் மலைவாசிகளால் மட்டுமே கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது என்பது, வளர்ந்து வரும் விஞ்ஞானத்துக்கு சவாலாக உள்ளது. மாநிலம் முழுக்க சிறப்பு ஆராதனைகளும் பூஜைகளும் ஒரு பக்கம் அணுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
சந்தேகங்கள், ஊகங்கள், பீதியனைத்தையும் பொய்யாக்கிவிட்டு அவர் நலமுடன் திரும்பவேண்டுமென இந்திய சமூகம் விரும்புகிறது.

1.9.09

கங்கை அமரனும்,கரிசல்குயில்களும்,தமுஎசவும்








மேடையும் ஒலிபெருக்கியும், குழல்விளக்கின் வெளிச்சமும், ஜனத்திரளும், பழைய விழாக்கால நாட்களை நினைவுபடுத்திக்கொண்டு அந்த நாள் வந்தது. குதூகலமாக மைதானமெங்கும் ஓடியாடி விளையாட, குச்சி ஐஸ் வாங்கித்தின்று பசியாற இளமைக்காலம் மட்டும் இப்போது இல்லை. மாறாக சிறப்பு அழைப்பாளர்கள் வரமாட்டார்களோ, இந்த முறை பயமுறுத்திக் கொண்டிருக்கும் மழை வந்துவிடுமோ என்கிற எதிர்மறைப்பயங்கள் அடியில் சுழன்றுகொண்டிருக்க அந்த இரவு வந்தது.
சுமார் ஏழேகால் மணிக்கு ஒரு கீபோர்டு மோர்சிங் உதவியோடு மேடையேறினார்கள் கரிசல் கருணாநிதியும்சங்கை திருவுடையானும்.


திருவுடயான் பாடல்களில் ஒரு சிறப்பு சொல்லியாக வேண்டும். அவர் தபேலா வாசித்துக்கொண்டே பாடுகிற கலைஞன். அதனால் அவர் பாடுகிற எந்தப்பாடலானாலும் அவரோடு தலையாட்டிக்கொண்டு கூடவேவரும். 'தமிழா நீ பேசுவது தமிழா' என்னும் காசி ஆனந்தன் பாடலை தமிழகம் எங்கும் பாடி தமிழர்களின் ஆங்கில மோகத்தின் மேல் கல்லெறிந்த பாடகன். அவரின் தேர்வுகளில் எம்மெஸ் அம்மாவின் காற்றினிலே வரும்கீதம், நாடோடி மன்னனில் வரும் லாவனிப்பாடல் ஆகியவை மனதை கிறக்கும். கருணாநிதி பாடும் பட்டுக் கோட்டையைப் பற்றிய பாடல் ராமநாதபுத்திலிருந்து வந்த செல்வி நான்சி சில்வியாவின் பரதி பாடலுமாக இரவு எட்டுமணி வரை இசையால் நகர்ந்தது. சற்று தாமதமாக வந்த கிருஷ்ணசாமி 'அந்திமலர் பூத்திருக்க' எனும் அவர் ப்ராண்ட் பாடலையும் ' குங்கிலிய மரத்துக்கொளுந்தே' என்கிற சுகந்தனின் பாடலையும் பாடிக் கிறக்கினார்.



அப்புறம் பேச்சு. தமுஎச பொதுச்செயலாளர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன்,லட்சுமிகாந்தன்,என திட்டமிட்ட பேச்சாளர்களோடு சாத்தூர் காவல்துறை உதவிக்கண்கானிப்பாளர் நானும் பேசுவேன் என மேடையேறினார். பூ படக்கலைஞர்கலைப் பாராட்டிப்பேசிய கவிஞர் தனிக்கொடி பழய்ய படல்களிலிருந்து இன்றைய பாடல்கள் வரை, ஒரு ஆறு திரைப் பாடல்களை ஓங்காரமாகப் பாடினார். எழுத்தாளர் லட்சுமணப்பெருமாள் மெடையேறியதும் கூடியிருந்த இரண்டாயிரம்பேரும் குலுங்கிக்குலுங்கிச்சிரித்தார்கள். விஷயம் இதுதான் பூ திரைப்படத்தில் நடித்த அவருக்கும், எங்கள் கிளைச்செயலாளர் ஜானகிக்கும் பாராட்டுவிழாவும் அந்த மேடையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஏற்புறை சொல்லவந்த எழுத்தாளர் லட்சுமணப்பெருமாள் ஒரு உள்ளூர் கதையைச்சொன்னார்.



அந்தக்காலத்தில் கிராமத்திலிருந்து சாத்தூருக்கு வருபவர்கள் எண்ணெய்க்கடை ராமரை பார்க்காமல் போகமாட்டார்களாம் ஏன்னா, ஊருக்கு திரும்பிப் போனவர்கள் அவரைப் பார்க்கவில்லையென்று சொன்னால் நீ சாத்தூருக்கே போகவில்லை எனச் சொல்லுவார்களாம். அப்படி ஒரு லேண்ட் மார்க்காக விளங்கிய எண்ணெய்க்கடை ராமர் செய்த சாதனை. ஒரு சினிமாப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்ததுதானாம். அந்தப்படம் திரையிடும் போது சுவரொட்டிகளில் உங்கள் அபிமான நடிகர் சாத்தூர் எண்ணெய்க்கடை ராமர்,... மற்றும் சிவாஜி,சவித்திரி நடித்த புத்தம் புதிய திரைப்படம் என்று விளம்பரப் படுத்துவார்களாம். அதுபோல ரெண்டே ரெண்டு காட்சியில் வந்த எனக்கு எதுக்குய்யா பாராட்டு என்று தனது பாணிப்பேச்சால் அசத்தினார்.



சுமார் பத்துமணிக்கு மேடையேறிய திரு கங்கை அமரன். ஒலிப்பேழையை மிகுந்த கரகோஷத்துக்கிடையே வெளியிட்டார்.பின்னர் சிறிது நேரம் பேசினார். அவரது வாழ்வனுபவங்கள், இசை அனுபவங்கள், திரை அனுபவங்களின் பகிர்வாக இருந்தது.பின்னர் அந்த மேடை இசையால் நிரம்பியது. ஒவ்வொரு சினிமாப் பாடலையும் படித்து விட்டு, அது குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். உற்சாக மிகுதியில் கீபோர்டுக்கும் தபெலாவுக்கும் இடையில் சம்மணமிட்டு உட்கார்ந்து ரசிகர்களின் விருப்பப்பாடல்களை யெல்லாம் கேட்டுக் கேட்டுப் படித்தார். அவர்படித்த 99 சதவீதப் பாடல்களின் வரிபிசகாமல் பாடியதும், சுருதி மாறாமல் சோர்வு நேராமல் பாடியதும் அவருக்கு கிடைத்த பயிற்சியை உறுதிப்படுத்தியது. சுமார் பதினொன்னேமுக்கால் மணிக்கு முடிவடைந்தும் ஜனத்திரள் கலைய மனதில்லாமல் மறுகிக்கிடந்தது.