11.1.11

அன்புக்குப் பாத்திரமாவது

காணாமல்போன இரண்டாவதுகாலை
பிரிவின் இழப்பை உணரச்செய்தது
அது உலோகத்தால் செய்யப்பட்ட வஸ்துதான்
அது உருளை வடிவமான சில்வர் குவளைதான்

அதை அவள் டம்ளர் என்று சொல்வாள்
அம்மாவோ போனி என்று சொல்லும்
அது மதுவோடிருக்கையி க்ளாஸ் ஆகும்
கண்ணதாசன்கவிதையில் கிண்ணமாகும்

என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்
அது  எட்டுவருடம் என்னோடே இருக்கிறது.
எல்லாக்காலை நேரத்திலும்  ஆவிபறக்க
அது என்னோடே இனிப்பாய் இருக்கிறது.

அளவும் சுவையும் மாறினாலும்
சரிக்கட்டும் ப்ரியமும் பந்தமும் மாறாது.
பாத்திரக்கடையில் குட்டச்சியின் பெயர்
எண்களிலும் நாணயத்திலுமிருந்தது.

அரிசிப் பைக்குபின்னாடி ஒளிந்து கிடந்த
இரண்டு நாட்கள் என் தவிப்பை எடைபோட்டது.
திரும்பக்கிடைத்த மார்கழிக்காலையில்
என்கையில் குளிர் அந்தக்குட்டச்சியுடம்பில் அனல்.

என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்
399 முறை வலைமக்களின் அன்பிற்குப் பாத்திரமாகி
கிடந்திருக்கிறேன்.கடந்த ரெண்டு வருடங்கள் எனை அன்பால்
சூழ்ந்துகொண்ட வலைச்சொந்தங்களுக்கு என்னால்
பிரதி செய்ய அன்பே கையிருப்பாக இருக்கிறது.

நன்றி.

8.1.11

சென்னை புத்தகச்சந்தையில் ‘கருப்புநிலாக்கதைகள்’ சிறுகதைத்தொகுப்பு

நேற்றே தோழர் பவா அலைபேசியில் கூப்பிட்டுச்சொன்னார்.அந்தக்குரல்வழியே வரும் வழக்கமான உற்சாகம் இன்னும் பத்து மடங்கு கூடுதலாய் கேட்டது.அப்போதிலிருந்து ஒவ்வொரு நொடியும் அதை நோக்கியே நகர்கிறது. உடனே சென்னையில் இருக்கும் மகன் அஷோக்கை  அழைத்து கேட்டு வாங்கி குரியரில் அனுப்பச்சொன்னதும், அப்படியே செய்தான்.

வாங்கிய புத்துச்சட்டை ரெங்குப்பெட்டிக்குள் மடிந்து கிடக்க மனசெல்லாம்  ரெங்குப் பெட்டியைச் சுற்றிக்கொண்டிருக்குமே அந்தப் பிள்ளை நாட்கள் இன்னும் கூடவே வருகிறது. இந்நேரம் குரியர் வேன் மதுரையை நெருங்கிக் கொண்டிருக்குமா என்கிற கணிப்பு வாலிபநாட்களின் நினைவுகள் போலப் புதுக்கருக்கு மாறாமல் இருக்கிறது.

முதல் பிரதியை தொடுகிற தருணத்திற்காக காத்திருக்கிற படபடப்பு அதிகரிக்கிறது.சாத்தூர் வந்து எமெம்எஸ் ஸ்டோரில் பாடப்புத்தகங்களும் நோட்டுகளும் கூடவே ஒரு நேவி பேனாவும் பென்சில் அழிரப்பர் வாங்கி வீட்டுக்குக் கொண்டு போன நாட்களாய் அலைக்கழிக்கிறது.

கருப்பு நிலாக்கதைகள்.(சிறுகதைகள்)

ரெண்டாவது தொகுப்பு.

சென்னை புத்தகச்சந்தையில்
வம்சி புக்ஸ் வெளியீட்டகத்தின்
157 மற்றும் 158 வது கடைகளில்
இன்று முதல் கிடைக்கும்.



7.1.11

இடைவெளியை, புத்தாண்டை சரிக்கட்டும் பதிவு.

கிட்டத்தட்ட பத்து நாட்கள் வலைப்பக்கம் வராமல் வனவாசம் போமாதிரி இருந்தது.நெட் துண்டிக்கப்பட்டு அதை மீளப்பெறுவதற்குள் வருடடத்தின் இறுதிநாளும் அடுத்த ஆண்டின் துவக்க நாளும் கடந்து போய்விட்டது.வலை நண்பர்கள் யாபேர்க்கும் முகமன் சொல்ல
இந்த நாளே கிடைத்திருக்கிறது.தாமதமானாலும் எல்லோர்க்கும் 2011க்கான  என்  வந்தனம்.

ஒவ்வொரு ஆண்டும் நான் என் தோழனோடே இருந்தது தவிர வேறெதுவும் நினைவில் வரவில்லை கடந்த இரண்டு ஆண்டுகள் அது தூரமாகிக்கொண்டு போகிறது.எனக்கு கல்யாணமான முதலாண்டு நான் அவள் வீட்டில் இருந்தேன். அந்த அடர்ந்த பனியில் புதுக் கனவு களோடு தூங்கிப்போயிருந்த்தேன்.அப்போது மணி பனிரெண்டைத் தாண்டி விட்டது. தேவாலயம் போய்விட்டு வந்த எனது மாமியார் வீடு தூங்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது அந்தக் குறுகிய தெருவில் சலசலப்புக் கேட்டது.அந்தத் தெருவுக்கு சம்பந்தமில்லாத மூன்று பேர் நெடு நெடுவென உள்ளே வந்தார்கள். தெரு அவர்களை ஊகிக்க முடியாமல் திணறியது.எங்கள் வீட்டுக்கதவைத்தட்டி எனை விசாரித்து எழுப்பச் சொல்லி வாந்ததும் ஆரத்தழுவிக்கொண்டு புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார்கள் பீகேயும்,மாதுவும்,பெருமாள்சாமியும்.
அப்படித்தான் அந்த1987 விடிந்தது.அந்தக்கதகப்பான புத்தாண்டு காலங்கடந்தும் நினைவில் நிலைக்கும். அந்தப்புத்தாண்டுப் பரிசை பொக்கிஷமாக்கி வைத்திருக்கிறேன்.

நினையாத நாளிலே தேவதூதனைப்போல வந்த அந்த மூன்றுபேரின் கைகளிலும் தங்கமும் வெள்ளைப்போழமும்,வாசனைத் திரவியமு
மாய் நட்பு இருந்தது. எல்லா புத்தாண்டும் மாதுவோடே பிறந்ததும்,அவனருகில் இல்லாத தருணங்களில் முதல் வாழ்த்தை அவனுக்கென அடைகாத்து வைத்திருந்ததும் சொல்லித் தீராத கணங்கள்.

தென்மேற்குப்பருவக்காற்று பார்க்க நேர்ந்தது.களவின் பெருமை சொல்லும் இன்னொரு படம் இது.வெகு நீளமாக சொல்லவேண்டிய ஒரு கதையை சிகப்புத்துண்டு போட்ட ஒரு பெரியவர் ரெண்டுவரியில் சொல்லிவிட்டுப்போகிறார்.கதைக்கென தனித்து நாயகனும் நாயகியும் இருந்தால்கூட அந்த இரண்டு பாத்திரங்களைச்சேர்த்து விழுங்கிக்கொண்டது சகோதரி சரண்யாதான்.அநியாயத்துக்கு அவரைக்கொன்று போடுவதை ஏற்கமுடியவில்லை. கதைகளிலும்சரி,நிஜத்திலும் சரி அவள் வாழவேண்டும்.

அதீத பிம்பங்களில் இருந்து விலகி இப்படி நிஜத்துக்கு அருகில் வரும் படங்கள் கலைப்படங்களாயிருந்தாலும் ரொம்ப ஸ்லோவாக ஓடினாலும் சரி அது ஒரு படைப்பாகும்.அல்லாதவை சரக்குகளே நல்லா மாசாலா ஏத்திப் போட்ட  சரக்குகள்.இதற்குவக்காளத்து வாங்கிய
இயக்குநர்களை நீயா நானாவில் பார்க்க நேரிட்டது.ஆனால் அதற்கு இணையான கூட்டம் எதிரில் உட்கார்ந்திருந்ததும் காரமான நிஜத்தை
எடுத்து வழக்குறைத்ததும் நம்பிக்கையை கொடுக்கிறது.தோழர்கள் ராம்,வசந்த்,மிஸ்கின் ஆகியோரின் குரல்கள் முக்கியமானவை.