31.10.11

ஏழாவது அறிவு கொண்ட இந்தியாவில்....


இந்தியா ஒரு துணைக்கண்டம்.இந்தியா ஒரு தீபகற்பம்.இந்தியாவில் கற்கால மனிதர் தொடங்கி கணினி யுக மனிதர் வரையான எல்லா (specimen)அடையாளங் களையும் எச்சங்களையும் நாம் காணலாம்.

நமக்கு 2500க்கும்மேற்பட்ட வருட வரலாறு இருக்கிறது.முப்பெரும்கடல் ஐம்பெரும் காப்பியம் கிடக்கிறது. 4546 ஜாதிகளுக்குமேல் பல்கிப்பெருகிக் கிடக்கிறது. முப்பத்துமுக்கோடி தேவர்கள் ( இது ஜாதியில்லை)  உருவாகி அருள்பாலித்துக் கிடக்கிறார்கள்.

ஆனால் ஆயிரம் ஆயிரம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் இந்தியாவுக்கென்ன பங்கு இருக்கிறது ?.

பேருந்தைப் பார்க்காமல்செத்துப் போனவர்கள் உண்டு, ரயிலில் ஏறாமல் வம்சம் தொலைத்தவர்கள் உண்டு,ரேடியோ வாங்காமல் ஏங்கிச் செத்த வர்கள், தொலைக்காட்சி வாங்கமுடியாதவர்கள் இங்குண்டு ஆனால் அவற்றை யெல்லாம் சரிக்கட்ட வந்ததுதான் இந்த செல்போன் என்கிற அலை பேசி.

அதன் சுருக் கவரலாறு பார்ப்போமா ?

1910 ஆம் ஆண்டு லார்ஸ் மாக்னஸ் எரிக்சன் தனது காரில் ஒரு தொலை பேசியை பொருத்துகிறார். போகிற வழியில் எங்காவது தந்திக் கம்பி தென் பட்டால் தனது காரில் இருக்கும் தொலைபேசியை கொக்கிபோட்டு இணைத் துக் கொண்டு தொடர்பு கொள்வாராம். நம்ம ஊர்கள்ல கலியானம் சடங்குக்கு கொக்கிபோட்டு கரண்டு சுடுவம்ல அத மாதிரித்தான். ஆனால் அவர் அதை முறைப்படி அரசாங்கத்தில் பதிவு செய்து முன் அனுமதி   வாங்கிக் கொண்டார்.

பெர்லின் முதல் ஹம்பர்க் வரை ஓடிய புகைவண்டியின் முதல்வகுப்புப் பெட்டியில் தந்தியில்லாத் தொலைபேசி வசதி உருவாக்கப்பட்டது. இது நிகழ்ந்தது 1926 ஆம் வருடம். அதற்கு ரேடியோ டெலிபோன் என்று பெயரி ட் டார்கள். அதே காலத்தில் பயணிகள் விமானத்திலும் இந்த வசதி செய்யத் தொடங்கினார்கள்.இதன் நீட்சியாக இரண்டாவது உலகப்போரில் ஜெர்மன் நாட்டு பீரங்கிகளிலும் இந்த ரேடியோ டெலபோனி முறை கையாளப் பட்டது. இதைக் கண்ட ஜெர்மன் காவல்துறை ரோந்து வாகனங்களிலும் இந்த தந்தியில்லாத் தொலைபேசியை உபயோகிக்கத்தொடங்கியது.

அதைத் தொடர்ந்து இருவழி தந்தியில்லாத் தொலைபேசியை முதன் முதலாக வாடகைக் கார்களிலும், பின்னர் காவலர் வாகனங்களிலும் பின்னர் பெரு முதலாளிகளின் இந்த இருவழி தொலைபேசியை உபயோகிக்கத் தொடங் கினார்கள். ஆனால் அதில் தொடர்பு எண்கள் இருக்காது.இதுதான் பின்னாட்களில் வாக்கி டாக்கியாக உருமாறியது.

1940 ஆண்டுவாக்கில் ப்ளாக்பெர்ரி நிறுவணம் அதை இராணுவத்துக்காகச் சந்தைப் படுத்தத் தொடங்கியது.

1946 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் இரண்டு தொழில்நுட்பவல்லுநர்கள் ஜி.ஷப்பிரோவும், சர்ஜென்கோவும் இணைந்து கார்களுக்குள் பொருத்தக்கூடிய தந்தியில்லாத் தொலைபேசியை வெற்றிகரமாகக் கண்டு பிடித்தார்கள். என்ன வெற்றியென்றால் இந்த தொலைபேசியை 20 கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்கும் சாதாரண தொலபேசியுடன் இணைக்கமுடியும்.

1947 ல் டக்ளஸ் ரிங் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து அலை பேசி களுக்கான கோபுரங்கள் அமைத்து அதன் மூலம் மின்காந்த அலை வரிசை களை உருவாக்கி அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார்கள்.

இந்தக் கண்டுபிடிப்புகளில் சினிமாத் துறையும் இணைந்து கொண்டது  1950 ஆம் ஆண்டு வெளிவந்த சப்ரினா என்கிற திரைப்படத்தில் பெருமுதலாளி உபயோகிக்கிற அலைபேசியின் மாதிரிகள் பின்னர் பயன்பாட்டுக்கும் வந்தன.

அப்புறம் 1957 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் இன்னொரு இளம் விஞ்ஞானி குப்ரியானோவிச் கையடக்கமான முதல் அலைபேசியக் கண்டு பிடித்தார். அபோதைய கையடத்தின் எடை என்ன தெரியுமா மூன்று கிலோ. அவரே அதை 500 கிராம் எடையுள்ளதாகக்குறைக்க ஒருவருடம் போராடி 1958ஆம் ஆண்டு வெற்றி கண்டார்.

எனினும் முறைப்படி இந்தக்கண்டுபிடிப்புகளை காப்புரிமையோடு சந்தைப் படுத்த முடிந்தது அமெரிக்காவால்தான்.1970 ஆண்டு பெல் ஆராய்ச்சி நிறுவணத்திற்கு அலைபேசியின் முதல் காப்புரிமை வழங்கப்பட்டது. அதே போல இதை முதன்முதலில் உபயோகப் படுத்தத் தொடங்கிய தனிமனிதன் பிரிட்டிஷ் இளவரசன் பிலிப் மட்டுமே.

ஊரைவிட்டுதனியே காரில்போகும் போது இளவரசியோடு காதல் மொழி பேசிக்கொள்ளத் தான் இதை உபயோகித்தானாம். இதற்கு இடைப்பட்ட காலத் தில் இந்தியா தவிர்த்த பல்வேறு நாடுகள் செல்போன் குறித்த கண்டு பிடிப்பு களில் தத்தமது முயற்சிகளை பங்களித்தன.

இறுதியில் 1973 ஆம் ஆண்டு மோட்டோரோலா நிறுவணத்தின் மார்ட்டீன் கூப்பர் தனது முதல் பொதுமக்கள் செல்போனை பயன் பாட்டுக்கு வெளி யிட்டார். அதன் பெயர் என்ன தெரியுமா ’ மோட்டோரோலா டைனா 8000+ ’

1981 ஆம் ஆண்டு டென்மார்க்,ஸ்வீடன்,பின்லாந்து ஆகியநாடுகள் அகில உலக இணைப்புவசதிகொண்ட ( Nordic Mobile Telephone (NMT) system ) 1G  அலைக்கற்றை அலைபேசியை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

1985 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் வோடோபோன் நிறுவணம் அதனது செல் போனை அறிமுகப்படுத்தியது.

1990 ஆம் ஆண்டு 2G அலைக்கற்றை வசதிகொண்ட செல்லுலார்போன்கள் உலகம் முழுவதும் சந்தைப்படுத்தப்பட்டன.

இந்தவரலாற்றுநெடுகிலும் இந்தியா பற்றிய ஒருவரி கூட கிடையாது. வரி வேண்டாம். ஒரு கமா, ஆச்சரியக்குறி, புல்ஸ்டாப்புக்கூடக் கிடையாது என்பதே நமது பெருமை.

1986 ஆம் ஆண்டுக்கும் 1990 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வர்த்தகம், வெளியுறவு,முதலீடு போன்றவற்றில் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்டிருந்த நாடுகளில் நுழைய தனக்கு ஏதுவான பாதைகளை சுலபாமாக உருவாக்கிக்கொண்டது அமெரிக்கா.

அநேகமாக இதே காலக்கட்டத்தில்தான் சோவியத் ருஷ்யா சுக்குநூறாக உடைக்கப்பட்டு ( 1986 ) அமெரிக்காவின் கட்டுப்பாடுகள்,பயம் எல்லாம் அழிக்கப்பட்டது. சதாம் உசேன் இரான் இராக் போரை அறிவித்தார் 1980.

உலகத்துக்கு புதிய பொருளாதாரக்கொளகைகள்போல எய்ட்ஸ் என்னும் இன்னொரு மிரட்டல் கண்டுபிடிக்கப்பட்டது (1981).

இதே காலக்கட்டத்தில் தான் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு (1984) அரியணை ஏறிய ராசீவ் காந்தி புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தி படுக்கையறைக் கதவு வரை திறந்துவிட்டார்,

போபாலில் விஷவாயு கசிந்தது.

உலகம் முழுக்க செங்கல் சைசில் செல்போனை அறிமுகப் படுத்திக் கொண்டிருந்த இதே காலக்கட்டத்தில் தான்  கன்னியா குமரியிலிருந்து காஷ்மீர் வரை செங்கல் திரட்டி அதன் மூலம் இந்துத்துவா வெறியையும் திரட்டிக்கொண்டிருந்தது இந்தியா.

இதே காலங்களில் தான் தமிழகமும் ஆந்திராவும் சட்டி சுடுகிறதென்று தப்பித்து அடுப்பிற்குள் விழுந்தது. எம்ஜியாரும்,என்டிஆரும் தங்களது நடிப்புத் திறமை களை அரசியலில் ஓட்டுக்களாக மாற்றமுடிந்ததும் இதே காலத்தில்தான்.

எனக்குத்தெரிந்து பழம்பெருமை கொண்ட இந்தியா விஞ்ஞான உலகுக்கும், பயன்பாட்டுக்கும் கண்டுபிடித்துக்கொடுத்த பெருமைகள் அவ்வளவாக இல்லை.

புரட்சி நடிகன் எம் ஆர் ராதா சொன்னதுபோல எல்லோரும் நீராவியில் கப்பலையும்,ரயிலையும் இயக்கிக்கொண்டிருந்த போது நாம் அதை வைத்து இட்லி அவித்துக்கொண்டிருந்தோம்.

அதே போல யாராலும் அழிக்கமுடியாத இனிஎவராலும் இதற்குமேல் கண்டுபிடிக்கமுடியாது என்று சரணாகதி அடையும் அளவுக்கு ஜாதியைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறோம்.

இல்லை நாம் ரொம்பக் கண்டுபிடித்திருக்கிறோம் என்று எவரேனும் சொல்ல வந்தால் மீண்டும் சிலேட்டுப் புத்தகத்தோடு படிக்கக் காத்திருக்கிறது உலகம்.

30.10.11

ஜன்னலும், கண்களும் சேர்த்துப்பிடித்த படங்கள்.


பேருந்துகளின் ஜன்னலோர இருக்கை வெறும் காற்றையும், கடந்துபோகும் இயற்கையையும் காண்பித்துச் செல்லுவதில்லை. கூடவே மனிதர்களையும் துரிதப்படம் பிடித்துக் காட்டுகிறது. புயலின் வருகை தமிழகத்தில் காற்றோடு மழையையும் கொண்டுவந்துகொட்டுகிறது.தீபாவளியைக் கொண்டாட விட வில்லை என்று மனம்வெதும்புகிற ஜனங்களுக்கு எப்படி மழையைக் கொண் டாட  மனம் லயிக்கும்.

சாலைகள் எல்லாம் கரும்பச்சை ஓவியத்தின் ஊடே  கழுவித்துடைத்த கருப்புக்கோடுபோல நீண்டுகிடக்கிறது. அதற்கருகிலேயே புத்தம்புது பழுப்புத்தண்ணீர் இன்னொரு கோடுகிழித்துக்கொண்டு ஓடுகிறது. எங்கிருந்தன இத்தனை பசும்புல்லும் இவ்வளவுகாலமாய் என்று அறிவைக் கிளறிவிடும் அதன் வசீகரச்சிரிப்பு அறுபது கிலோ மீட்டர்வேகத்தில் கடந்துபோகிறது.

முகத்திலடிக்கும் சாரல் மொத்தமாக குளிர் நினைவுகளை அள்ளித் தெளிக்கிறது.  இருக்கட்டும் இன்னொரு பயணத்துக்கென நினைவை மட்டுப்படுத்த ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட வேண்டியிருக்கிறது. முன்னிருக்கையில் இருக்கும் மூதாட்டியின் குளிர்போக்க போர்வையில்லை. கையே நீண்டு இன்னொரு கண்ணாடியை இறக்குகிறது. விருதுநகரில் ஏறும்போது இடம்மாறி உட்கார்ந்து இருக்கை தரவில்லையென்று பழித்த பழம் திரும்பிச்சிரித்து ஸ்நேகம் வளர்க்கிறது.

போகவழியில்லாததால் முளைவிட்ட பயிர்களை மூழ்கடித்துக்கொண்டு ஆக்ரமிக்கும் தண்ணீரைத் திருப்பிவிட கையிலிருக்கிறது நனைந்த மண் வெட்டி. முழுவதும் நனைந்து விட்ட உலகத்தார்க்கு அச்சாணிக்கிழவனின் முதுகில் கிடக்கிறது நவீனக்குடைகளின் முன்னோடி.யூரியாச்சாக்கு கொங்காணி. சண்டைக்காரனின்  அடுத்த வயலிலும் தேங்கிக்கிடக்கும் தண்ணீரை வெட்டிவிட்டு நிமிர்கிறவனின் முகத்தில் விழுகிற மழைத்துளிகள் சொல்லும் நன்றி போதும் எப்போதும்.

நிறுத்தமில்லா இடத்தில் நனைந்த கையுயர்த்தி இடம்கேட்கும் பயணிக்காக பிரேக்கை அழுத்துகிறது  அந்த ஓட்டுனரின் ஈரக்கால்கள். நாற்கரச்சாலையின் வளைவில் எங்கிருந்தோ கொண்டுவந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு தூங்கும் காவலரின் கனவிலும் வந்து தொலைக்கிறது அடுத்து வரப்போகும் இன்னொரு காவல். காட்டுப்பாதையில் காத்துக்கிடக்கும் காக்கிச்சட்டைக்கு தூக்குவாளியில் தேநீரும் சட்டைப்பைக்குள் சிகரெட்டுப்பெட்டியும் கொண்டு வரும் சிறுவனுக்கு பின்னாட்களில் தெரியலாம் இரும்புவாசமடிக்கும் அரசு எந்திரத்தின் இதயங்கள்.

26.10.11

அழுக்கில் குளிக்கப்போகும் மாற்றங்கள்


தமிழகத்து புரட்சியை அடுத்து வரும்
தலைத் தீபாவளி இது.
இருட்டிக்கொண்டுவருகிற
மேகத்தைப் பார்த்துச் சபிக்கிறது
மினரல்வாட்டர் வண்டிகாரனிடம்
குழையும் வீரத்தமிழகம்.
அவசர அவசரமாக மூட்டைகளில்
வெடிப்பார்சலைச் சுமந்துகொண்டு
அரசு அலுவலர் குடியிருப்புகள்
நோக்கிவிரைகிறது
அன்னா ஹசாரேயின்
இளைஞர்படை இருசக்கரவாகனங்கள்.
விடிகாலையிலே எழுந்து
ஒரு சுற்று மாற்றங்களைப்
பார்த்து வரக்கிளம்பினால்
வழியெங்கும் சிதறிக்கிடக்கிறது
வெடிகளடைத்த தமிழ்பாடநூல்  குப்பைகளும்,
வெறிகளடைத்த தமிழ் கலச்சாரக் குப்பிகளும்.
லக்கான் கோழிக்கடையில் நேற்றுவரை கிலோ 120
இன்னைக்குமட்டும் 150 ரூபாய்.
அரசியலும் சமயமுமாகச்சேர்ந்து
ஆயிரம் ஆயிரம் அழுக்கு
படிந்த சாக்கடைக்குள்
முழுகப்போகிறது எண்ணெய்தேய்த்தபடி.