30.6.10

உள்ளே, வெளியே.

நெல்லை வண்ணாரப்பேட்டை முகப்பிலேயே இருந்தது அந்தக்கட்டிடம்.எல்லா மருத்துவமனைகளைப்போலவே
தான் அதன் வடிவமைப்பும் இருந்தது.வரவேற்பறையில் ஒரு இளம்பெண்ணும், ஒரு தொலைபேசியும், ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் தனியார் மருத்துவமனைகளின் ஆகம விதிப்படியே இருந்தது.

பாபுவா 117 ஆம் நம்பர் ரூம். ஏ பாபு இங்கே வா ஒங்க மாமா வந்த்ருக்கார்
பாபு நல்லபையன் சார், பீடிதான் ஒரு நாளைக்கு ஒரு கட்டு காலியாகுது.

வந்தான். கொஞ்சம் தெளிவாக இருந்தான்.கொண்டு வந்திருந்த கோணிப்பையை உற்றுப்பார்த்தான் நல்ல பசி போலிருக்கிறது.அவனது அக்காளும் தம்பியும் அறைக்குப்போனார்கள்.சற்று நேரத்தில் கோழிக்குழம்பின் வாசம் வரவேற்பறைக்கு வந்தது.117 ஆம் எண் அறை வாசலில் இருந்து அவள் என்னை சைகை காட்டிக்கூப்பிட்டாள்.
போனதும் அவளது அம்மா கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தது. 'இந்த வயசுபோன காலத்ல என்னைய ஆஸ்பத்திரி கூப்பிட்டுட்டு போகனும்,ஏம்பொழப்பு அவனக்கூட்டிக்கிட்டு ஊர் ஊரா அலையிரன்'.உட்கார்ந்து
சப்பிடச் சொன்னார்கள் மருத்துவனைச் சூழலில் சாப்பிடுகிற மனநிலையும் பசியும் இல்லை அப்றம் சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

மருத்துவமனை வராண்டாவுக்கு வெளியே மரங்கள் இருந்தன.ஒரு பன்னீர் மரமும் இருந்தது பக்கத்தில் போய் நின்று உலுக்கி சொரிகின்ற பூக்களில் நனைந்தேன்.போய்க்கொண்டிருப்பவள் கதை ஞாபகத்துக்கு வந்து போனது.பிரதானச்சாலையில் போகும் வாகன இரைச்சலைத் தாண்டி குருவிகள் பேசிக்கொண்டிருந்தன.சற்றே தள்ளி ஒரு கொய்யா மரத்தில் கொத்து கொத்தாய்ப் பழங்கள் தொங்கிக்கொண்டிருந்தது.வாசனை இழுக்க மரத்தடிக்குப்போனேன் கீழே கிடந்த கனிந்த பழம் எடுத்து துடைக்காமல் கடித்தேன்.வரவேற்பரைப்பெண் ஓடி வந்தாள்

'சார் அந்தப்பக்கம் யாரும் போகக்கூடாது,டாக்டர் எங்களத்திட்டுவாரு சார் ப்ளீஸ் வாங்க சார்'.

வரவேர்பறையில் உட்கார்ந்தேன் தொலைக்காட்சியில் அஜித் 'எலே கலெக்டரு' என்று கூட மீன்பிடிக்கிறவரிடம் பேசுவதுபோலப் பேசிக்கொண்டிருந்தார்.

'மிஸ் ரஜினி படம் வைங்க மிஸ் 'என்று எனக்கெதிரே உட்கார்ந்திருந்த பெண் கேட்டாள்.
'எந்த சானல்லயும் ரஜினி படம் இல்லக்கா',
'சரி பரவால்ல,என்ன அக்கான்னு கூப்டாதேன்னு எத்ன தரஞ்சொல்றது'.
'சரி சர்மிளா',சொல்லிவிட்டு சிரித்தாள்

எதிரே உட்கார்ந்திருந்த பெண்ணைப் பார்த்தேன்.அவளும் என்னைப் பார்த்தாள்.கொஞ்சம் கனத்த உடம்பு,இருபத்தி ஏழு வயசிருக்கும்.தாலி இருந்தது.

'சார் பாபுவ பாக்க வந்தீங்களா,என்ன சார் இந்தச் சின்னவயசில இப்டி உட்டுட்டீங்க,
'எங்க வர்க் பண்றீங்க,
'மேனஜரா,
'ஏன்சார் ப்ரமோசன் டெஸ்ட் எழுதலாம்லா

இடைவிடாது பேசிக்கொண்டிருந்தாள் முதலில் ஒரு அறிமுகமில்லாத அந்நியப்பெண்ணோடு பேசுவது லாஞ்சனையாக இருந்தது.ஜொள் பார்ட்டி என்று நினைத்துவிடக்கூடும் என்கிற ஜாக்கிரதை உணர்வு இருந்தது.கொஞம் கொஞ்சமாக இயல்பாகிப் பேசிக்கொண்டிருந்தேன். என்னால் அவளின் முகம் பார்த்துப்பேச இயலவில்லை.நான் பார்க்கிற நேரம் மிகத் துல்லியமாக எனது கருவிழியை ஊடுருவிப் பார்த்துக்கொண்டு பேசினாள்.வரவேற்பறைப்பெண் இடைமறித்து சாப்பிடலயா என்று கேட்டாள்.பின்னர் தனது அறையில் இருந்து என்னைப்பார்த்தாள்.பிறகு மாடிக்குப்போய்விட்டு இறங்கிவந்தாள்.அப்போது சர்மிளா என் குடும்பத்தைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

'பசங்க ஹைஸ்கூல் படிக்கிறாங்களா பொய்சொல்லாதீங்க சார்'

மாடிப்படியில் இருந்து ஒரு வயதான தாய் இறங்கி வந்தார்கள்.

'வாம்மா சப்டலாம்,சாரும் சாப்டணுமில்ல'
'ஆமா சாப்டு சாப்டுத்தான் இப்டி குண்டாயிட்டேன்,நீ போ சார்ட்ட பேசிட்ருக்கேன்ல'  
'சொன்னாக்கேளு சார் கிட்ட எவ்ளோ நேரம்தான் பேசுவ'

விருட்டென்று எழுந்தாள்.அவள் அம்மாவைக் கெட்ட வார்த்தையில் திட்டினாள்.

'நா என்னா தப்புசெஞ்சேன் ஆம்பளயோட பொம்பள பேசக்கூடாதா,ஏ'
'அந்தாளு எங்கூடப்பேசுனான்லா,அவன ஏ யாரும் கூபடல'
'நா அவம்முகத்தப் பாத்துப் பேசினே அவந்தா எம்முகத்தப்பாத்துப் பேசல,எல்லாப்பயளுகளும் அப்டித்தான்'
'அத்தன ஆம்பளப்பெயகளுக்கும் கண்ண நோண்டனும்'

படியேற படியேற ஆவேசமகப் பேசிக்கொண்டே போனாள். அதற்குள் கையைக் கழுவாமல்  ஓடிவந்தாள்.

'சார் ஒங்கள மொதல்லயே ரூமுக்குப்போகச்சொல்லி சைகை காமிச்சன் நீங்க கவனிக்கல'
'இவங்க பேஷண்டா'
'ஆமா சார்'
'நல்லாத்தான பேசுறாங்க'
'டாக்டரயே உண்டு இல்லன்னு ஆக்கிருவாங்க'.

அன்று முழுக்க சர்மிளாவே என்னை ஆக்ரமித்திருந்தாள்.அவள் பேசியதும்,கோபப்பட்டதும்,கேள்விகேட்டதும் எல்லாமே சரிதானே? அவளை ஏன் சமூகம் மனநல மருத்துவமனைக்குக் கொண்டுவந்தது. இப்படித்தான் அந்த மனநலக்காப்பகத்தில் இருக்கிற ஒவ்வொரு நோயாளி மீதும் பதிலற்ற சராசரிக் கேள்விகள் புதைந்துகிடக்கிறது.

23 comments:

உயிரோடை said...

ப‌த‌ப‌தைக்கும் ப‌திவு. ம்ம்ம்ம்

Unknown said...

அந்த பெண்ணின் கேள்விகள் என் மனநலத்தை சோதித்து கொண்டிருக்கின்றன..

லெமூரியன்... said...

படித்து முடிக்கும் போது சில அதிர்வுகளை உணர முடிந்தது...

vasu balaji said...

மிகவும் தெளிவான கேள்விகள் அவர்களிடமிருந்துதான் வரும். :(

AkashSankar said...

பெரிய பெரிய மன வியாதி பிடிச்சவங்க எல்லாம் வெளிய தாராளம சுத்துறாங்க( அரசியல்வாதி,சமுக விரோதி,என்னைக்குமே திருந்தாத காவல்துறையினர்)

Ahamed irshad said...

மனதை உலுக்கிய பதிவு...ம்ம்

ராம்ஜி_யாஹூ said...

உங்களின் பதிவும் அருமை, இராசராச சோழனின் பின்னூட்டமும் மிக அருமை.

எத்தனை மன வியதிகளும், அழுக்குகளும் (பொறாமை, வெறுப்பு, வன்மம்) கொண்டு உள்ள நாம் எல்லாம் வெளியே இருக்கிறோம் சுதந்திரமாய்.

தாரணி பிரியா said...

எல்லாருக்குமே ஏதோ ஒரு மனவியாதி இருக்குது அளவுதான் வித்தியாசப்பட்டு கொஞ்சம் பேர் ஹாஸ்பிட்டல இருக்காங்க :(

சுந்தர்ஜி said...

மிக இயல்பான இன்றைய ஒரு மருத்துவனமனை விவரணைகளுடன் பொருத்தமான தலைப்புடன் ஒரு நெகிழ்ச்சியான பதிவு காமராஜ்.உள்ளேயும் வெளியேயும்தான் எத்தனை மாற்றங்கள்?

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...இன்னும் எத்தனையோ பதிலற்ற சராசரிக் கேள்விகள்...

நேசமித்ரன் said...

இதைப் பற்றிதான் எழுதிக் கொண்டிருக்கிறேன் காமு சார்
தலைப்பு : பிச்சி

:(

க ரா said...

:(.

hariharan said...

உரையாடல்களில் மனநலம் பாதிக்கப்பட்டது மாதிரி தெரியவில்லையே...

ஆ.ஞானசேகரன் said...

//இப்படித்தான் அந்த மனநலக்காப்பகத்தில் இருக்கிற ஒவ்வொரு நோயாளி மீதும் பதிலற்ற சராசரிக் கேள்விகள் புதைந்துகிடக்கிறது.//


ம்ம்ம் அப்படிதானோ...

காமராஜ் said...

லாவண்யா,
செந்தில்,
ரமேஷ்,
பாலாண்ணா,
ராசராச சோழன்,
இர்ஷாத்,
ராமசாமிக்கண்ணன்,
ராம்ஜி,
சுந்தர்ஜி,
தாரணி,
அருணா,
நேசன்,
ஹரிகரன்,
ஞானசேகரன்.

எல்லோருக்கும் அன்பின் வணக்கம்.
கருத்துக்கு நன்றி.

//ஹரிஹரன் said...
உரையாடல்களில் மனநலம் பாதிக்கப்பட்டது மாதிரி தெரியவில்லையே...//

ஆமாம்,பதிவே அதைப்பற்றித்தான் தோழர்.

சீமான்கனி said...

//'அத்தன ஆம்பளப்பெயகளுக்கும் கண்ண நோண்டனும்'//

அப்படி ஒரு பதிப்பா !! அவரிடம்...அப்போகூட தெளிவாதேன் இருந்திருக்காங்க...உள்ளே....
பகிர்வுக்கு நன்றி அண்ணே...

பா.ராஜாராம் said...

குலுக்கியது காமு.

ஈரோடு கதிர் said...

இன்னும் கொஞ்ச நாட்களுக்கும் சர்மிளாவே மனதை ஆக்கிரமிக்கும்

ஈரோடு கதிர் said...

|| வானம்பாடிகள் said...
மிகவும் தெளிவான கேள்விகள் அவர்களிடமிருந்துதான் வரும்.||

பாலாண்ணா...
இப்பப் புரியுதா... நான் ஏன் தெளிவா கேள்வி கேக்குறதில்லன்னு...

காமராஜ் said...

வாங்க தம்பி கனி.
நல்லாருக்கீங்களா.

காமராஜ் said...

பாரா...

காமராஜ் said...

கதிர்.

முட்டுச்சந்தில்,மேல்மாடிப் பால்கனியில்
கிரிக்கெட் விளையாடுகிற ரெட்டைச் சிறுவர்களைப் போல
நினைத்த மாத்திரத்தில் அதகளப்படுத்த முடிகிற சிலாக்கியமய்யா
ரெண்டுபேருக்கும்.
பாலாண்ணா- காதிர், சுத்திப்போட்டுக்குங்க.

சுந்தரா said...

:( அதிரவைத்த பதிவு.