17.4.11

எரி நட்சத்திரமும், பச்சை மரமும்.


நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்புகையில் நெல்லை துரித வண்டி வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தை ஒட்டிய வேலிச் செடிகளின் மறைவில் இருந்து சில பெண்கள் எழுந்து ரயிலுக்கு முதுகைக் காண்பித்துக் கொண்டு நின்றார்கள். இன்னும் கொஞ்சம் தள்ளி ஆண்கள் எழுந்து சலிப்புடன் ரயிலைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.மெல்லக்கடந்து போகிற முன்பதிவு செய்யாத பெட்டிகளின் வாசலில் இளைஞர்கள் நின்றுகொண்டு காலைக் காற்றை முகத்தில் ஏந்திக்கொண்டு சிலிர்ப்படைந்தார்கள்.பொதுப்பெட்டிகள் இறைச்சலுடனும்,முன்பதிவு செய்யப்பட்டவை மெலிதான ஓசையுடனும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் கள்ள மௌனத்தோடும் கடந்து போயின.

 இனி வீடு,ஒரு குவளைத் தேநீர்,கொஞ்சம் தீக்கதிர்,இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புகள்,அடுப்படியில் இருந்து அன்றாட பற்றாக்குறை அலுப்புகள் என் இந்தக்காலை கடந்து போகும்.மணிஅடித்தது  அந்த கைப் பேசியில்  வைத்திருக்கிற மாலையில் யாரோ மனதோடு பேச பாடல் சில நேரம்  இனிமையாகவும் பல நேரம் எரிச்சலாகவும் கேட்கும்.மாலை ஏழுமணிக்கு வருகிற அழைப்பில் கடைசி மூன்று எண்கள் இரண்டாக இருந்தால் பயமாக இருக்கும்.ஆமாம் அவர் இரண்டாவது குவளையைக்காலி செய்து ஒரு சிகரெட்டை குடித்து முடித்தவுடன் எனக்கோ அல்லது மணி அண்ணனுக்கோ பேசுவார்.வார்த்தைகள் இடறி இடறி விழும். அதிலிருந்து மூன்று வருடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இன்க்ரீமெண்டை சரிசெய்ய வேண்டுமென்கிற செய்தியை தெரிந்து கொள்ளச்சிரமம் இருக்காது.என்ன சிரமம் என்றால் அதே செய்தியைக்கிட்டத்தட்ட நான்காவது முறை சொல்லும்ப்போதும் முதல் தரம் சொல்கிற ஆர்வத்தில்லேயே சொல்லுவார்.

ஆனால் அண்ணன் சோலைமாணிக்கம் அழைப்பர் ஒரு ஐந்து நிமிடம் பேசுகிற பொருளை ஆரம்பிப்பார்.சரி போனக்கட் பண்ணு அப்புறம் கூப்பிடுகிறேன் என்பார்.ராகவனும்,பத்மாவும் அப்படியில்லை பாடச்சொல்லுவார்கள், கிடைக்காமலவர்களே பாடுவார்கள் அல்லது நல்லபாட்டைப் பற்றிப் பேசுவார்கள்.சில நேரம் நடுராத்திரி அழைப்புவரும் நல்ல கனவோ கெட்ட கனவோ தடைப்பட்டுப் போகும். கண் எரிச்சலோடும் நிறைய்யத் திகிலோடும் எடுக்கிற தருணங்கள் கொடியது. வயதான அம்மா,அப்பா நோய்வாய்ப்பட்டிருக்கும் நெருங்கின சொந்தம், இப்படி பல முகங்கள் நிழலாட எடுத்தால் ‘ என்ன இன்னும் செங்கல் லோடு வர்ல’ என்று குரல் வரும். தவறான அழைப்பபின் மீது ஏற்படுகிற கோபத்தைக் காட்டிலும் துர்செய்திகள் வரவில்லை என்கிற சந்தோஷம் தான் அதிகமாகும். ’அண்ணாச்சி ராங் நம்பர் அண்ணாச்சி’ என்று சொல்லிவிட்டு வைக்கும்போது தூக்கம் போயிருக்கும். அந்த பயம் கவ்விய ராத்திரியைச் சரிசெய்ய எனக்கு தெரிந்த ரெண்டு உபாயங்களில் ஒன்று வடிவேலுவின் காமெடியைப் பார்ப்பது.

அப்புறம் வீட்டுத் தொலைபேசியில் அடிக்கடி வந்த அந்த தவறான அழைப்பைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.இப்படித்தான் இரவு பதினோரு மணிக்குமேல் டெலிபோன் மணிபோல அலறும்.எடுத்தால் மறு முனையில் வெறகு லோடு அனுப்பச்சொல்லி ஆறு நாளாச்சு இன்னும் அனுப்பல என்று ஆறுநாளும் பேசினான்.முதல் நாள் இது நீங்க கேட்கிற நம்பர் 8இல்லை என்றும் மறுநாள் ஏரியா கோடை சரியாக அடிக்கச்சொல்லியும்,பேசாமல் திருப்பிவைத்தும் பார்த்தாகிவிட்டடது. கடைசியில் ஒருநாள் கோபப்பட்டு ”என்னய்யா தெனம் ராத்திரி பனிரெண்டு மணிக்குமேல ரொம்பாச்சரியா ராங் நம்பருக்கு அடிக்கியே நல்லாவா இருக்கு ”

15.4.11

அக்கம் பக்கம் அரசியல் பராக்கு பார்த்தல் 5


வெகுதூரம் நிற்காமல் ஓடிய ஓட்டைப்பேருந்து போல. நிற்கப்போகும் போது நெடு நேரம் உருமி விட்டு ஓய்வெடுத்துக்கொண்டது தேர்தல்.திரும்ப  இயக்குவதற்கு  இன்னும் ஒரு மாதம் காத்திருக்கவேண்டும்.அதுவரை அது மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு இருக்கும்.அதுவரை திருவாளர் தேர்தல் ஆணையம்தான் ஒரு மாத முதல்வர்.அப்புறம் நம்ம அம்மா ஜெயித்து விட்டால் தமிழகத்தில் சமூக பொருளாதார அரசியல் மாற்றம் வந்தே தீரும். ஆதலால் ஜப்பான்,சீனா,மாதிரி இங்கு நில நடுக்கமும் சுனாமியும் ஒருக்காலும் வராது. மாறி மாறி இந்த அதிமுகவும் திமுகவும் வந்து போனாலே போதாதா?.நித்தம் நித்தம் பத்துச்செருப்படி வாங்கிக் கொண்டிருப்பவனுக்கு சவுக்கடி வலிக்காது. சரி இது எப்போ மாறும் என்று அப்பாவியாகக் கேட்கிற ஜனங்களுக்கு பதில் சொல்ல வரிசையாக விஜயகாந்த், ரஜினிகாந்த், விஜய், தனுஷ்காந்த் என்று ஒரு பெரும் பட்டாளம் வரிசையில் நிற்கிறது.( தகுதியு திறமையும் பொங்கி வழிகிற எதிர்கால முதல்வர்கள் எவெரேனும் விட்டுப்போயிருந்தால் தயை கூர்ந்து தழிச்சமூகம் என்னை மன்னிக்கட்டும்).

பிடிக்கும், பிடிக்காது கொள்கை அரசியல் கூட்டணி அரசியல் எல்லாவற்றையும் தள்ளிவைத்து விட்டு நான் வருந்துகிற ஒரே விஷயம் அய்யா வைகோ அவர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்துத்தான்.திமுக வை விட்டு வெளியேறி தனியே ஒரு கட்சி ஆரம்பித்தவுடன் 2011 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக வருவார் என்று என்னைப்போல நினைத்த எண்ணிக்கையிலடங்கா தமிழர்களின் கணிப்பை தவிடு பொடியாக்கி விட்டது சமகால அரசியல்.தான் பேசவேண்டியதை மண்டபத்தில் எழுதி வாங்கி வாசிக்காத பேச்சாளன். நிறைய்ய இலக்கியம் படிக்கிறவர்,நிறைய்ய உலக அரசியல் படிக்கிற வாசகர். பாவம் இந்தச்சதுரங்கக் காய்நகர்த்தலில் கட்டங்களுக்கு வெளியே நிற்கிறார்.அந்தப் பாவத்துக்கு பரிகாரம் இன்னும் எத்தனை வருடங்கள் இந்த தமிழகம் அனுபவிக்கப்போகிறதோ தெரியவில்லை.

அதுகிடக்கட்டும் அரசியல். எனக்கு ஜெயலலிதா அவர்களை நிறைய்யப் பிடிக்கும் நடிகர் திலகத்தோடு இணைந்து நடித்த அத்தணை படங்களையும் குறைந்த பட்சம் நாலு தரமாவது பார்த்திருப்பேன். குறிப்பாக தெய்வமகனும், கலாட்டாக்கல்யாணமும்,இன்ன பிறவும்.புற்கள் நிறைந்திருக்கும் அந்த மலை முகடுகளில் எஸ்பிபி குரலை தன்குரலாக்கிப் ’போட்டுவைத்த முகமோ’ என்று பாடும் போது எற்படுகிற பரவசம் சொல்லில் அடங்காது.

நடிகை என்று சொன்னவுடன் பழய்ய நடிகைகளில் ஒருவர் நடிப்பு அலாதியாக இருக்கும் அவர் பேர் சட்டென நினைவுக்கு வரவில்லை.அவரது தனிச்சிறப்பு வாய்ந்த நடிப்பும் அதைவிடப்பிடிக்கும்.தோசைக்கரண்டியை முகத்து நேரே நீட்டிக்கொண்டு பேசுகிற மாதிரி சோத்தாங்கையை வைத்துக்கொண்டு வசனம் பேசுவார்.கோபம் சந்தோசம்,பரிதாபம்,திகைப்பு என எல்லாவற்றிற்கும் தோசைக்கரண்டியையே நீட்டுவார்.

தோசை என்று சொன்னவுடன் இப்போது படாரென்று நினைவுக்கு வருவது மதுரை. மதுரைக்குள் சமீபமாக நுழைகிற எல்லோருக்கும் கொடுக்கப்படுவது கையில் ஒரு அருவாளும் வாயில் அண்ணன் அஞ்சா நெஞ்சன் என்கிற வார்த்தையும் தான்.தன்னை துதிபாடாத எதையும் மதுரைக்குள் நுழைய விடுவதில்லை என்பதில் வெற்றிபெற்ற அவர் ஆட்சியர் சகாயத்தின் வரவால் கதிகலங்கிப்போனார்.காலம் தோசையத் திருப்பிப் போட்ட மாதிரி போட்டுவிட்டது.

கடைசியாக ஒன்று கிட்டத்தட்ட சாத்தூர் முழுவதும் இருப்பவர்கள் 200ம் வரப்போகிறவர்கள் 50ம் விநியோகித்துவிட, விட்டுப்போனது எங்கள் ஏரியா தான்.என் ஜி ஓ காலனி, குயில்தோப்பு எல்லாம் நடுத்தரவர்க்கம் இருக்கிற கான்க்ரீட் வீடுகள்.எனவே இரண்டு பேரும் கொடுக்கவில்லையாம். ஆனால் ஆத்திரம் அடைந்த ஒரு அம்மா கொடுப்பதற்கு நியமிக்கப்பட்டவரை இப்பொழுதுவரை அவளே இவளே என திட்டித்தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

8.4.11

மே பதினான்காம் தேதிக்குப்பிறகு என்னென்ன நடக்கும்


எங்கு திரும்பினாலும் நம்ப முடியாத செய்திகளாகவே இருக்கின்றன.எதை நம்ப எதை நம்பாமல் இருக்க நீங்களே சொல்லுங்கள்.

ஜெயலலிதா நடத்திய கோவை பிரச்சாரக் கூட்டத்திற்கு திரண்டிருந்த மக்களைப் பார்த்தால் கலைஞரின் குடும்பத்தைத் தவிர ஒட்டுமொத்த தமிழகமே வந்திருந்தது போலத் தோன்றுகிறது.மதுரையில் நடந்த திமுக கூட்டணி பிரச்சாரத்திற்கு வந்திருந்தவர்கள் வரிசை நீண்டு கொண்டே போய் வாஹா எல்லையைத் தொட்டுவிடும் போலிருக்கிறது. சன்குழுமங்களும் ஜெயா பரிவாரங்களுமாக தொலைக்காட்சி சேனல்கள் எதிரெதிராகக் களமிறங்கி படம் காட்டுகிற தேர்தல் செய்திகளால் மக்களுக்கு கிறுக்குத்தான் பிடித்துப்போகும். இதுக்கு பேசாமால் அந்த சீரியல் நாடகங்களுக் குள்ளேயே புதைந்தும், விளம்பரங்களுக்குள் நனைந்து ஊறி முளைத்தும் போகலாம்.

அச்சு ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். தன் ஆயுளில் பாதி நாளை உண்ணாவிரத்ததில் கழித்துக்கொண்டிருக்கும் மணிப்பூரின் இரும்புப்பெண் ஐரோம் ஷர்மிளாவைப்பற்றி செய்தி போடத்துணியாத பத்திரிககள். மத்தியில் விபி சிங் அரசு கவிழ்ந்ததும்.முதல் பக்கத்தில் முக்கால்வாசியை விபி சிங் அரசு கவிழ்ந்தது என்கிற தலைப்பைப்போட்டு சந்தோஷம் கொண்டாடிய பத்திரிகைகள்.கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் வயிற்று உபாதையால் குசுப்போட்டாலும் இந்தியாவை மாசு படுத்திவிட்டார்கள் என்று செய்தி போடுகிற ஊடகங்கள். இந்தியா மாற்றத்தை தேடுகிறது என்று பிதற்றுகிறார்கள். மாற்றம் என்கிற சொல்லைத் தவிர மற்றவையெல்லாம் மாறும் என்று சொன்ன அந்த தாடிக்கார மனுஷன் ஏளனச்சிரிப்புச் சிரிக்கிறார்.

எங்கள் தீக்கதிர் பத்திரிகையில் அம்மா சிரித்தபடி போஸ்கொடுக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒற்றையாய் உலக உருண்டையைத் தூக்கினாலும் ஒரு வரிச்செய்தி கூடப்போடாத தினமணியும் தினமலரும் தோழர் பிரகாஷ் காரத்,தோழர் என்.வரதராஜன் பேச்சுக்களை முதல்பக்கத்தில் போடுகிறார்கள். விலைவாசிக் கெதிராக டெல்லியில் நடைபெற்ற இடதுசாரிக்கட்சிகளின் கூட்டத்தையும் அந்த ஆர்ப்பரிப்பையும் இருட்டடிப்பு செய்த கொயங்கா குழுமங்கள் எப்போது சிவப்புக்கு மாறியது ? இயேசுவின் வருகை சமீபித்துவிட்டது என்கிற மாதிரி புரட்சி சமீபித்துவிட்டதா?  என்ன நடக்கிறதென்றே விளங்கவில்லை.

அங்கே அஞ்சு கோடியைப் பிடித்தார்கள் இங்கே பத்துக்கோடியைப் பிடித் தார்கள் என்கிற செய்திகள் ஒருபக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் வரிசையில் நிற்கவைத்து டோக்கன் கொடுக்கிற பணத்திமிரையும், அதற்காக மக்கள் அடிச்சுப்பிடிச்சி வரிசையில் நிற்கிற அவலங்களை நேரில்பார்க்கும் போது மனம் பதறுகிறது. பக்கம் பக்கமாக ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றிப் பேசுகிற எழுதுகிற பத்திரிகைகள் அதில் பங்கெடுத்துள்ள பௌஅனடைந்துள்ள நிறுவணங்கள் பற்றிய செய்தியைக் கசியவிடாமல் பாதுக்காத்துக் கொள்வது ஏனென்றே விளங்கவில்லை.

இருப்பிடச் சான்றிதழுக்காக கையெழுத்துப் போட்டுவிட்டு இருநூறு ரூபாய் வாங்கிய அந்த கிராம நிர்வாக அலுவலர் சொன்னார் காலங்கெட்டுப்போச்சி சார் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி.அதுக்கு எத்தன சைபர் போடுவதென்றே விளங்கவில்லையென்று. கையெழுத்து வாங்க வந்தவர் அப்பாட தப்பித்தோம் இந்த இருநூறு ரூபாயோடு போச்சே என்று உள்ளுக்குள்  சந்தோசப் பட்டுக் கொண்டு வெளியில் சிவாஜி போலச் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டார்.

ஊருக்குப்போயிருந்தேன் அந்த அதிமுக கட்சிக்காரர் எங்க சித்தப்பாதான் சில சந்தேகங்கள் கேட்டார். ஏம்பா கலைஞர் கட்சிக்காரங்க போடுற சினிமாப் பாட்டெல்லாம் எம்ஜியார் பாட்டா இருக்கே,திமுக கூட்டணிவேட்பாளர் வாறாராம் ஆனா திருமாவளவன் கொள்கை விளக்கப்பேச்சைப்போட்டு முழக்குறாங்க. ஊருக்குள்ள வர்ற எல்லா வேன்கள்ளயும் பதினாலு கலர்ல கொடிப்பறக்கே அவிங்க போஸ்டர்லேயும் பெரியார், அண்ணா, காமராசர், தேவர், அம்பேத்கர், ஒரு முஸ்லீம் தலைவர் இருக்காங்க இவிங்க அடிக்கிற போஸ்டர்லேயும் இதே தலைவர்கள் இருக்கங்களே என்று காம்ப்ளான் குடிக்காத குழந்தை மாதிரி கேள்விகள் கேட்கிறார்.

நான் என்ன சொல்லட்டும் ?.

மே பதினான்காம் தேதியும் இதே போலத்தான் மின்சாரவெட்டு நீடிக்கும். புரட்சித்தலைவி முதல்வரானாலும், தானைத்தலைவர் முதல்வரானாலும் ஒரு லிட்டர் அக்வா பீனாத் தண்ணீர் பணிரெண்டு ரூபாய்க்குத்தான் விற்கும். மே பதினான்காம் தேதிக்குப்பிறகு அவர் அங்கே தாவினார்,இவர் இங்கே குதித்தார் என்கிற விளையாட்டுச்செய்திகள் வரும். மே பதினான்காம் தேதிக்குப்பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு பணிரெண்டாகக் குறையப் போவதுமில்லை, அரிசி விலை அஞ்சு ரூபாய்க்கு இறங்கப் போவதுமில்லை. மே பதினான்காம் தேதிக்குப்பிறகும் தனியார் வெட்டிய வாய்க்கால் மூலமாகவோ அரசு பதித்த குழாய்கள் மூலமாகவோ சீமைச்சாராயம் கட்டாயம் ஆறாக ஓடத்தான் போகிறது.

அதன்பிறகு பாருங்கள் எல்லாக் கலர் கொடியும் இறங்கி இளைப்பாறப் போய்விடும்,ஒரே ஒரு கலர்க்கொடி மட்டும் பிரச்சினைகளைப் பேசியபடி இறங்காமல் பறந்துகொண்டிருக்கும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.