31.10.09

வலை மீது அலை பாயும் மனசு

வழிதவறிப்போன பசிநாட்களில்கிடைத்த கனிமராமாய்வலைத்தளம் ஏறினேன்.

எழுத்திலைகளுக்குள் மறைந்துகிடக்கும் சிநேகக்கனிகளில் கைபடாது

சுவைக்கநேர்ந்ததென் பசியாற.

பார்த்தமாத்திரத்தில் கிடைக்குமா பாத்திர விரிப்பில் மனசின் செழுமை

எழுத்தில் தெரியுமா கரங்களின் மென்மை.

ஒருவேளை தெரியாமல் போனாலும்.
இடைவெளியில், நிறுத்தக்குறிகளில், இழுத்துச்செல்லும் தொடர்கமாக்களில்தெரிந்துவிடும் அன்பும் சிநேகமும்.

அரண்மனை,அலுவலகம்,ஓலைக்குடிசை,தூக்கணாங்கூடு என்று நிறுவிக்கொள்ள இடம் கிடைத்தாலும் காற்றின் அசைவுகளை எதிர்மடக்கிச் சிறகடிக்கும் பறவையின் நிஜமே அதன் இருப்பிடம்.

தேர்த் திருவிழாவின் சமுத்திர அலைவில் ஒரு துளியாவதும். எண்ணவியலாப் பக்கங்களில் விரியும் ஓரெழுத்தாகவும் இருப்பதென்ன இழுக்கு.

எழுதுகோலின் அசைவில் எந்ததேரையும் திசை திருப்பும் வல்லமை ஒளிந்திருக்கிறதெனும்நெம்புகோல் மனதோடு எழுந்து வரவேண்டுகிறேன்.

30.10.09

எளிய மக்களின் கையிருப்பான நம்பிக்கையில் ஒன்று குறைகிறது.








நேர்மை,எளிமை, அர்ப்பணிப்பென்னும் ஆடம்பர அரசியலில் காணக்கிடைக்காத அரிய குணங்களோடு இரண்டு முறை மதுரை தொகுதியின் பாரளுமன்ற உறுப்பினராயிருந்த தோழர் பொ.மோகன் அவர்கள் இன்று சென்னை மருத்துவமனையில் காலமானார்.



கடந்த இருபது வருடங்களில் பலமுறை தொழிற்சங்க நிகழ்வுகளில் சந்திக்க நேர்ந்த தலைவர். பாராளுமன்ற உறுப்பினராவதற்குமுன்னாள் அவரிடம் இருந்த எளிமையில் ஒரு சிறு துரும்பளவுகூட மாற்றம் இல்லாமல் காணக்கிடைப்பது இன்றைய இந்திய அரசியலில் அரிதானது.



உழைக்கிற மக்களுக்காக, அடித்தட்டுமக்களுக்காக, போராடும் தொழிற்சங்கங்களுக்காக பேசுவதற்கும், செயல்படுவதற்கும் இருக்கும் குறைவான நம்பிக்கைகளில் ஒன்று மறைந்து போயிருக்கிறது. தோழர் மோகன் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி.

வினோத ஒலிகளின் வரைபடம்


தொலைக்காட்சியும்,அலைபேசியும்,

கணினிப் பெட்டியும் கைவராத காலத்து

மொட்டை மாடிகளின்

மின்காந்த அலைகளிடறா நாட்கள்.


எட்டாவது வீட்டின் மொட்டைமாடியிலும்

காக்கைகுருவிகள் விரட்டவந்தாள்

கண்காந்த அலைகள் ஊடறுத்தபோதுகாய்ந்திருந்த

தானியங்களில் மீளப் பாவிக்கொண்டிருந்தது.ஈரம்


தனை நோக்கி அழைக்க மொட்டை மாடியில்அநேக

காரணங்கள் காய்ந்து கொண்டிருந்தது

ஜெயகாந்தனின்ஆத்மாநாமும், திஜாவின் பாபுவும்

எலிப்புளுக்கையாய் கிடந்தார்கள்


இருப்பை அறுத்துப் புலம் பெயர்ந்த நாளின்

அங்கேதான் கண்ணீரையும் காயவிட்டாள்

பெயரறியாப் பறவையின் மொழியெல்லாம்

மொட்டை மாடிவரைபடமாகும் விநோத நினவாக.