9.8.09

உள்ஒடுங்கிப் போன மகோன்னத மனிதர்களின் கதைகள் - " காட்டாறு "








மனசிருந்தால் புளிய இலையில் இரண்டுபேர் படுத்து தூங்கலாம் என்னும் இணக்கம் குறித்த பழமொழியை அறிமுகப்படுத்திய அன்புருகும் மனிதர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்து வளர்ச்சிகளில் தன்னைக் கறைத்துக்கொண்ட எழுத்துப் போராளி. மதுரை டவுன்ஹாலில் இருக்கும் பிரிட்டிஷ் பேக்கரியின் பெயர்ப் பலகையில் உள்ள பிரிட்டிஷ் கொடியினை அகற்றச் சொல்லிப் போராடிய, பற்றுதல் மிக்க முக்கியமானவர், எழுத்தாளர் ஷாஜஹான்.


விழக் காத்திருக்கும் பூக்களை, அல்லது தேனடையை உலுப்பிவிட்டு விட்டு ஒதுங்கிக்கொள்ளும் எழுத்து எங்கள் அன்புத்தோழர் ஷாஜஹானுடையது. பிரிவுத்துயரை அதன் மெலிதான வலியை கிளப்பிவிடும் வல்லமை மிக்க வார்த்தைகளோடு ஒரு கதை. அவரது காட்டாறு தொகுப்பிலுள்ள சிகரக்கதை " ஈன்ற பொழுது " .



எண்பதுகளில் அதைப்படிக்கும் போது நேர்ந்த அதே அடக்கமுடியாத கண்ணீர் இப்போதும் கூட விழக்காத்திருக்கிறது.



அந்தக்கதையில் பிரதானப் பாத்திரங்களாக வரும் சுந்தரேசன்,அவனது சகோதரி, ஓடிப்போன அம்மா, அம்மாவுக்குப் பிறந்த சாரதா, இவர்களில் யார்பக்கம் நின்றாலும் கண்ணீர் நம்மைக் கவ்விக் கொள்ளும். தனது பதினேழாவது வயதில் பெற்ற தாயை இன்னொரு ஆணின் வீட்டில் பார்க்கப்போகும் மகனின் உணர்வுகளாகட்டும். பார்த்த மகனை அடையாளம் தெரியாமல் திணறி, அடையாளம் கண்டபின் குற்ற உணச்சியில் அழுகிற தாயாகட்டும், சுந்தரேசன் பெயரைக்கேட்ட மாத்திரத்தில் அவனை அண்ணனாக ஏற்றுக்கொள்ளும் தங்கையாகட்டும், நெகிழ்ச்சியின் தூதுவர்களாகவே இருக்கிறார்கள். தாயைப் பார்க்கப்போகிற அவனது அலைபாய்கிற மனது, வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் வந்ததாலும் இந்த சமூகம் ஓடிப்போனவர்களுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் இடம், அதானாலே ஏற்படுகிற குறு குறுப்பு எல்லாம் எழுத்துக்களின் அடியில் கிடந்து வெளியேறும். வீட்டுக்கு வெளியிலிருந்து சார் எனக்கூப்பிட்டு விட்டுக் காத்திருக்கிற தருணங்கள் வாசகன் மனதில் பின்னணி இசையில்லாமலே சோகத்தைக் கொண்டு வந்துசேர்க்கும்.



ஒரு வேளை அவளின் குடிகாரக் கணவனை மீளப் பார்த்திருந்தால் அகிலாவின் கம்பீரம் காட்சிப் படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், மகனைப் பார்த்ததும் நெகிழ்ந்து போய் தன்னை இந்த சமூக ஒதுக்கீட்டுக்குள் வலியக் குற்றவாளியாக்கிக் குறுகிப்போய் அழுகிறாள். அந்தப் புள்ளியில் தான், சில புள்ளிகளை இழந்து அகிலா நான்காவது இடத்துக்குத் தள்ளப்படுகிறாள். அடிக்கடி வந்துபோங்கண்ணே என்று சொல்லும் தங்கை பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பலகாரங்கள் கொடுப்பதும். வீட்டுக்கு வந்த சுந்தரேசன், சாரதாவிடம் '' அண்ணைக்கு பள்ளிக்கூடம் போகாமல் இருந்திருந்தால் அம்மா நம்மையும் கூட்டிக்கொண்டு போயிருப்பாங்க இல்லையா" என்று கேட்கிற கேள்வியில் ஷாஜஹான் அகிலாவின் மீறலுக்கு அடுத்த தலைமுறை வழியாக அங்கீகாரம் தருகிறார்.



கதை ஆரம்பித்த புள்ளியிலிருந்து ஒரு எழுத்துக்கூட விலகமால் ஒரு கழிவிரக்கத்தைச் சுமந்தபடியே செல்லும். அவ்வளவு பெரிய உலகில்,ஊரில்,தெருவில் இலக்கு மாறாமல் ஒரு ஏவுகனை மதிரித் தாக்கும் உத்திதான் ஷாஜஹானின் வலிமை.



இதே விதிப்படி இன்னொரு கதை அதுவும் எல்லோர் வாழ்விலும் கடக்கும் தருணம். தனது பழைய்ய கதலியை கணவனோடு சந்திக்கிற நிமிடங்கள் சிதறிச்சிதறி அடிக்கிற அலைகளாகும். அதுவும் ஒரு ரயில் பெட்டியில் எதிரெதிரே சந்திக்க நேர்வது உடைப்பைத்தடுக்க முடியாத கணங்களாகும். ஆம், அதைப் புரிந்துகொண்ட கணவன் எழுந்து தண்ணீர் பிடிக்கப்போவதுபோல பாவனையுடன் கீழிறங்கும் போது ஒரு மகோன்னத மனிதனாகிப்போகிறான் ' கடந்த காற்று ' சிறுகதையில்.



இப்படியான உள் ஒடுங்கிப்போன மகோன்னத மனிதர்களை தனது கதைகளெங்கும் அறிமுகப்படுத்தும் மிகச்சிறந்த சிறுகதைத் தொகுப்பு ஜே.ஷாஜஹானின் "காட்டாறு".



வெளியீடு: வம்சிபுக்ஸ்


19 டி.எம்.சாரோன்,


திருவண்ணாமலை.606601.



விலை:50 ரூ.



14 comments:

ஈரோடு கதிர் said...

சிறந்த அறிமுகத்திற்கு நன்றி..
வாங்கி படித்து விட்டு பகிர்ந்துகொள்கிறேன்

காமராஜ் said...

வணக்கம் கதிர். ஒரு சிறு தவறு நடந்துவிட்டது.
உங்கள் வலை முகவரி மாற்றப்பட்டது தெரிய
இவ்வளவு நாள் ஆகிவிட்டது.
ஈரோடு புத்தகச்சந்தை
மிக பிரபலமானது சிபி சரவணன்
வழியாக தெரிந்திருக்கிறேன்.
சிபியைத் தெரியுமல்லவா?.
சிபிக்கும், பாலமுருகனுக்கும்
எனது அன்பைசொல்லுங்கள்.

ஈரோடு கதிர் said...

ஈரோடு புத்தகத் திருவிழா மிகவும் வளர்ந்து வருகிறது
www.erodebookfestival.com

பாலமுருகனிடம் பகிர்ந்து கொள்கிறேன்
சிபியை எனக்கு அறிமுகம் இல்லை.

என்னுடைய பெயரை மட்டும் கதிர் என்பதிலிருந்து கதிர், ஈரோடு என மாற்றியிருக்கிறேன்.

புத்தகத் திருவிழா பற்றி இன்றொரு இடுகை எழுதியிருக்கிறேன்..

நன்றி...
தொடரும் தங்கள் தொடர்புக்கு

ஈரோடு கதிர் said...

அன்பின் காமராஜ்...
உங்கள் அலைபேசி எண்ணை என் kathir7@gmail.com
முவரிக்கு அனுப்ப முடியுமா?

மாசிலா said...

உங்களது இந்த ஷாஜஹானின் புத்தக அறிமுகமே "உள்ஒடுங்கிப் போன மகோன்னத மனிதர்களின் கதைகள்" முன்னுறை போல் அவ்வளவு பிரமாதமாக எழுதி கொடுத்திறிக்கிறீர்கள். வாங்கி படிப்பதற்கு வெறித்தன ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இப்போது நான் இருப்பதோ அந்நிய நாடொன்றில். காலம் வரும்போது பார்ப்போம்.

நன்றி.

காமராஜ் said...

வாருங்கள் மாசிலா, வணக்கம்.
கருத்துக்கு நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

//மதுரை டவுன்ஹாலில் இருக்கும் பிரிட்டிஷ் பேக்கரியின் பெயர்ப் பலகையில் உள்ள பிரிட்டிஷ் கொடியினை அகற்றச் சொல்லிப் போராடிய, பற்றுதல் மிக்க முக்கியமானவர், எழுத்தாளர் ஷாஜஹான்.//

ஓ அப்படியா.. பாராட்டகூடிய விடயம்

ஆ.ஞானசேகரன் said...

//தனது பதினேழாவது வயதில் பெற்ற தாயை இன்னொரு ஆணின் வீட்டில் பார்க்கப்போகும் மகனின் உணர்வுகளாகட்டும். பார்த்த மகனை அடையாளம் தெரியாமல் திணறி, அடையாளம் கண்டபின் குற்ற உணச்சியில் அழுகிற தாயாகட்டும், சுந்தரேசன் பெயரைக்கேட்ட மாத்திரத்தில் அவனை அண்ணனாக ஏற்றுக்கொள்ளும் தங்கையாகட்டும், நெகிழ்ச்சியின் தூதுவர்களாகவே இருக்கிறார்கள்.//

இப்படியொரு நிகழ்வை நான் சிங்கபூரில் பார்த்துள்ளேன்... நெகிழ்ச்சியான நிகழ்வு அது

காமராஜ் said...

அதில் வெற்றிபெற்று, சிலகாலம்
அந்தப்பெயர்ப் பலகை நீக்கப்படிருந்தது.
சிலகாலம் மட்டும்.

ஆ.ஞானசேகரன் said...

நல்லதொரு அறிமுகம் நண்பா... முடிந்தால் வாங்கி படிக்கின்றேன்

காமராஜ் said...

ஞானசேகரன், அப்படியா நன்றி நண்பா.

அன்புடன் அருணா said...

காட்டாறு மனதை அள்ளிச் செல்கிறது!

காமராஜ் said...

நன்றி,வணக்கம் அருணா மேடம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி