22.8.10

தொயரம் (குழந்தை அடம்)

Can You Hear Me Now

Can you hear me now, I need to know
I’m growing weak and moving slow
Do you even know that I exist
Or am I the lowest on your list

donna - zambia


வாகனத்தின் ஒலிப்பான் மூன்று முறைக்குமேல் ஒலித்து ஓய்ந்துபோனது.தன்னிப்பானையோடு வாகனத்தைக்கடந்து போன நாகம்மாள் ஓட்டுனரைப்பர்த்துச் சபித்துக்கொண்டு போனாள். 'பொம்பளயப்பாத்துட்டா பூல் பூல்னு ஆரனடிச்சிருவான்,ரெண்டு நிமிசம் லேட்டாப்போனா என்னவா, அங்க போயி ராக்கெட்டா உடப்போறாங்க'க்ளீனர்ப்பையன் வண்டியைச்சுற்றி வந்து பார்த்தான்.அப்போது தான் வந்தமர்ந்த செல்லக்கண்ணு, தலை ஊசியைக்கடித்துப்பிளந்து முடிக்குள் சொருகினாள்.பவுடர் திட்டுத்திட்டா இருக்கு என்று சொல்லி மாரீஸ்வரி அவள் முகத்தைத் துடைத்துவிட்டாள்.

ஏ என்னத்தா சட்டி சுடுது சுடுசோறா,
ஆமா ராத்திரி பொங்கல,
எதுக்கு,
எல்லா எங்கய்யாவாலதான்,குடிச்சிட்டு ஒரே சண்டெ

இதற்குள் சாத்தூருக்கு கேட்கிற மாதிரி ஒலிப்பனை அமுக்கினான் ஓட்டுநர்.
எலே எங்கடா கிரகலட்சுமி இன்னுமா வரல,ரெண்டாம் நட சடயம்பட்டில எடுக்கனும்,ஓனர் நாற வசவு வைவார்டா'.


தூரத்தில் கிரகலட்சுமி ஓட்டமும் நடையுமாய் வந்துகொண்டிருந்தாள்.கையில் வைத்திருந்த கணக்குச்சிட்டை கீழே விழுந்தது,குனிந்து எடுத்தாள்.நிமிர்வதற்குள் வந்து அழுதுகொண்டே அவள் காலைக்  கட்டிக்கொண்டான் செல்லமகன் ஜீவா.அழுதழுது கண்கள் வீங்கியிருந்தது.

'நா...ஹ்ஹ்ஹ்..னும்..ஹ்ஹ்ஹ்.. வாரேன்...'
'இல்லடா, இன்னைக்கி சனிக்கெழமெ சம்பளம் வாங்கிட்டு,அம்மெ ஒனக்கு குட்டிக்காரும்,பூந்தியு வாங்கியாருவேனாம்'.

இந்த வார்த்தையில் சமாதானம் ஆகாத அவன் மீண்டும் பெருங்குரலெடுத்து அழுதான். அவனை தர தரவென இழுத்துக் கொஞ்சதூரம் கொண்டுபோய்  விட்டு விட்டு ஓடி வந்தாள்.அவன் இன்னொரு சந்துவழியே ஓடிவந்து
தீப்பெட்டியாபீஸ் வேன் கதவருகே நின்று அழுதான். புருசனை கெட்ட வார்த்தையில் திட்டினாள்.

'வந்தெ செனந்தீர வெளுத்துருவன் வெளுத்து'

என்று சொல்லி கீழே கிடந்த பருத்திமாரைக் கையிலெடுத்தாள்.பொறுமையிழந்த ஓட்டுனர் டமாரென்று கதவை சாத்திவிட்டு 'என்ன லெச்சுமி ஒன்னோட தெனோம் இதே ரோதனையா இருக்கு'கத்திக்கொண்டே மறுபக்கம் வந்தான்.அதற்குள் ஜீவாவுக்கு சுளீரென்று ஒரு அடி விழுந்திருந்தது.புழுதியில் புரண்டு துடிதுடித்து அழுதான்.

 துயரங்களின் போது குவியும் வெற்றிடம்  அந்த இடத்தை நிறைத்துக் கொண்டது. அருகில் நின்றிருந்த செவலை நாய் கூட தனது இயக்கத்தை மௌனமாக்கிக்கொண்டது.கடவுளே அசைத்தாலும் அசையாத மௌனம். அதையும் அவளே உடைத்தாள்


'செரின்னே நீங்க வண்டியெடுங்க இவெ இப்டித்தா தொயரங்கெட்டுவான்,சம்பளம்போச்சு'

என்று கண்கள் கலங்கினாள்.அதைப்பார்த்த ஓட்டுனருக்கு மனசு கஸ்டமாகியது.முகத்தைத் திருப்பிக்கொண்டான்.படாரென்று குனிந்து கீழே கிடந்த பையனைத் தூக்கிக்கொண்டு போய் ஓட்டுனர் இருக்கைக்குப் பக்கத்தில் உட்காரவைத்துவிட்டு 'ஏ லச்சுமி ஏறு போலாம்,எலே முத்து கதவச்சாத்து' சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினான்.

ஊர் முக்கு திரும்புகிற வரை விஸ்க் விஸ்க் என்று ஒலியெழுப்பிவாறு கேவிக்கொண்டு வந்தான்.க்ளீனர்ப்பையன் துண்டெடுத்து அவன் மூக்கைத் துடைத்துவிட்டான்.பாட்டுப்போட்டான்.குழந்தையின் அழுகை நின்று போனது. கடைசி இருக்கையில் இருந்த கிரகலட்சுமி அழுதுகொண்டிருந்தாள்.

23 comments:

kashyapan said...

Dear! you are on the top of my list;
do you hear my sob just!
---kashyapan.

காமராஜ் said...

ரொம்ப நன்றி.எல்லாவற்றையும் அறிவுப்பூர்வமாக அனுகினாலும் உணர்வு பூர்வமான விழுமியங்களில் இந்த அன்பும்,நட்பும்,தாய்மையும்,தோழமையும் அடைத்துக்கொண்டு நிற்கிறது.
வார்த்தைகளில்லா நன்றி.

ராம்ஜி_யாஹூ said...

வெறும் எழுத்துக்களிலேயே காட்சியை கண் முன்னே வந்து விடும் லாவகம் தெரிந்து வைத்து உள்ளீர்கள் சாமி.

ஆயிரம் புகைப்படங்கள், வீடியோக்கள் சொல்லும் கருத்தை உங்களின் நாலு வரிகள் சொல்லி விடுகின்றன.

thiyaa said...

அருமை
வார்த்தைகள் சூப்பர்

காமராஜ் said...

thanks for your love on me ramji.

காமராஜ் said...

thanks thiya...

Unknown said...

இப்படித்தான் வாழவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ...
கோவம் வருது ... யார் மேல் காட்ட முடியும் ...

அன்புடன் அருணா said...

நகரங்களிலும் நிறைய கிரகலட்சுமிகள் இருக்கிறார்கள்!

ஹேமா said...

துயரங்கள் குவியுமிடம்...
வார்த்தைகள் சேர்த்து சம்பவங்களைக் கண்முன் கொண்டுவருகிறீர்கள்.
துயரத்தோடு எழுத்து அழகு.

லெமூரியன்... said...

ஆத்தி....நம்ம ஊரு சனத்தோட வாழ்க்கையாச்சே....
கண்முன்னே கொண்டு வந்துடறீங்க நிகழ்வுகளின் பிம்பத்தை...
ஏதோ பக்கத்தில இருந்து பாத்துற்றுக்ற மாதிரி ஒரு உணர்வு....

கண்முன்னே கடந்து போற விஷயம்தான் அந்த ஊரில் உள்ளவர்க்கு...
ஆனா அதில் உள்ள வலி...இந்த எழுத்துக்களில் குவிந்து கிடக்குது..

சீமான்கனி said...

//கடைசி இருக்கையில் இருந்த கிரகலட்சுமி அழுதுகொண்டிருந்தாள்//

அருமை அண்ணே...நம்மூரு தெருவுல கொஞ்சநேரம் நின்னு வேடிக்கை பார்க்க வச்சுடீங்க...மீண்டும் வாழ்த்துகள்...

செ.சரவணக்குமார் said...

உயிரோட்டமான எழுத்து காமு அண்ணா. அந்தக் காட்சி கண் முன் விரிகிறது. நம் மண்ணில் இந்தக் காட்சிகளை நிறைய பார்த்திருக்கிறேன்.

பா.ராஜாராம் said...

காஷ்யபன் said... Dear! you are on the top of my list;
do you hear my sob just!
---kashyapan.

join on u sir!

காமு டியர், முத்தம்!

காமராஜ் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

//இப்படித்தான் வாழவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ...
கோவம் வருது ... யார் மேல் காட்ட முடியும்//
0
அதான் ...செந்தில்.

காமராஜ் said...

அன்புடன் அருணா said...

//நகரங்களிலும் நிறைய கிரகலட்சுமிகள் இருக்கிறார்கள்!//

ஆமாம் அருணா அவர்களின் பிரச்சினை இன்னும் வித்தியாசமானது.ஆனா எனக்கு ஏ இல்ல நீளமான முடி ? என்கிற மாதிரி அவர்களை
வெளிப்படுத்துவதுதான் பெரும் சோகம்.

காமராஜ் said...

நன்றி ஹேமா..

காமராஜ் said...

வாங்க தம்பி புதிய அலைபேசி எண் தரவில்லை ?.

காமராஜ் said...

கனி காலை வணக்கம்.

காமராஜ் said...

சின்ன பாரா பெரிய சரவணன்
ரெண்டு பேருக்கும் நன்றி மக்கா.

vasu balaji said...

அட எஞ்சாமி! கடைசி இருக்கையில் கிரகலட்சுமியோடு கடைசி வரியில் படிப்பவர்களையும் கலங்கடிச்சிட்டீங்க. எத்தனை சொல்லாத சோகம் சொல்லுது.

vasan said...

அன்பு காம‌ராஜ்,
கூலி வேலைக்குப் போகும் இவ‌ர்க‌ளின்,ச‌ந்தோச‌ நேர‌ம்,நாள்,பொழுதுக‌ள்
எது? எத‌னால்?

சத்ரியன் said...

பத்தே வரிகளில் பலதரப்பட்ட பாத்திரப்படைப்புகளுடன் நெஞ்சின் மீது நீண்டு படுத்துப் புரளும் ... சம்பவம், கதையாக!

பத்மா said...

எங்கெல்லாம் ஈர மனசு இருக்குன்னு பாத்து பாத்து படம் பிடிக்கிறீங்க ......

நம்பிக்கை வருது காமராஜ் சார் உங்க எழுத்த படிக்கும் போது